ஞாயிறு, 22 அக்டோபர், 2017

வாழ்க்கைப் பாடு.


மாடுகள் இழுத்து
சக்கரங்கள் உருளும்
கட்டை வண்டிகளின் பின்னே கால்கள் உராயப்
பாரம் தொங்கிப் பயணிக்கையில்
வாழ்வின் பாரம்
இறங்கிக் கொண்டது.

கோடையில் வற்றிய கண்மாய்க் களிமண் பிசைந்து
காளைகள் வனைந்து
குண்டு மணிகளால்
கண்கள் ஒட்டுகையில்
உயிர் பெற்ற காளைகள் தழுவிக் கொண்டன.

கருவேல முள்ளில்
பனையோலை துளைத்து
ஓடிச் சுழற்றி
கன்னங்களை வருடும் காற்று
மூச்சில் நுழைந்து
வெக்கை தணித்தது.

ஈக்கிகள் சொறுகப்
பனைகள் ஏறி
குழை நொங்குக் கண்களை நோண்டித் தின்று,
நொங்கு வண்டியை
கவ்வையில் உருட்டியதில்
பாதைகள் தெரிந்தன நிறைய.

ஈச்ச மர இலைகள் கிள்ளி
உள்ளங் கைகளில்
சுருட்டி ஊதிய பீப்பிகள்
இசை கற்றுத் தந்து போயின.

அலைந்து திரிந்த வெய்யிலில்
நிழல் அள்ளிப் பருகியபோது
இனித்துக் கிடந்தது
வாழ்க்கை.

மண்ணோடு மண்ணாய்
புழுதி படிந்த காலமே
வாழ்வெனத் தெரிகிறது இப்போது.

அதுவே வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக