வெள்ளி, 12 நவம்பர், 2021

வேளாண் மரபையும், நீர் மேலாண்மைச் சமூகம் பற்றியும் விரிவாகப் பேசும் நூல் : ப.அ.ஈ.ஈ.அய்யனார், பொறியாளர்.




வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் எனும் இந்நூல், இருநூற்றிருபத்து நான்கு பக்கங்களைக் கொண்டது. நூலை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மகாராசன். 

சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டியும், அய்வகை நிலங்களும் நிலஞ்சார்ந்த தொழில் பற்றியும் இந்நூலைத் தழுவியிருக்கிறார்.

வேளாண் தொழிலைப் பற்றியும், வேளாளர்களின் நீர் மேலாண்மை பற்றியும், நீர்வழித் தெய்வங்கள் வழிபாடு மற்றும் நீர் சுழற்சி,  வேளாண் தொழில் பற்றி தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் உண்டான பகையும் முரணும், உழவர்களின் கால்நடை வளர்ப்பு, அறுவடைத் திருநாள், நீர் அறுவடை பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். 

தொழில்நுட்பம் உருவாகாத முந்தைய காலத்தில் வேளாளர்களின் நீர்ப் பாதுகாப்பும், அதன் மேலாண்மையும், தொன்மையும் பற்றி விவரித்திருக்கிறார். 

முக்கூடற்பள்ளு, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பல சங்க இலக்கிய நூல்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர, வேளாளர்களின் கும்மிப்பாடல்களும் வாழ்வியல் பாடல்களும் நூலுக்கு இசை ஊட்டுகிறது. 

இந்திரனை வழிபடும் ஆரியர்களுக்கும், வேளாண் மரபினர்களுக்குமான வழிபாடு பற்றிய வேறுபாட்டு நெறிமுறைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 

"நெல்லின வகையும் பள்ளின வகையும்" தெளிவுபட விவரிக்கும் விதம் அமைந்துள்ளது இந்நூலில். 

ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், மதகுகள், ஊரணிகள், கலிங்குகள், நீர்த்தேக்கங்கள் போன்று விளங்கும் நீராதாரத்தினை முறையாகப் பராமரித்தும் அதனைப் பங்கீட்டு கொண்டு வாழ்ந்தும், தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மடையர்கள், நீர்ப்பாய்ச்சிகள், மடைக்குடும்பர்கள் இன்றும் தொன்று தொட்டு வருகின்றனர். 

குளங்களைக் குழந்தைகளாகப் பாவித்த சமூகம், இன்று வறுமையில் வாடிக்கொண்டும், தங்கள் குலத் தொழிலை விட்டுவிட்டு வேறுதொழிலுக்குச் சென்று விட்டனர் என்கிற வரலாறு உள்ளத்தை உலுக்குகிறது. 


ப.அ.ஈ.ஈ.அய்யனார், பி.டெக்.,

பொறியாளர்,

தானத்தவம்,

மாடக்குளம் அஞ்சல்,

மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக