வெள்ளி, 12 நவம்பர், 2021

நீர் மேலாண்மை : காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதை வலியுறுத்தும் நூல் :- செ.தமிழ்நேயன்



கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு இயற்கை வழங்கும் வாய்ப்பு தான் நிகழ்காலம்.
சென்னையில் பெருவெள்ளம் வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்பதை ஊடகங்கள் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் அறிவிக்கை செய்கின்றன.

உலக வெப்பமயமாதல் விளைவின் காரணமாக இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் எழுவது இயல்புதான் என்கிறது சூழலியல் அமைப்பு.
தனிமனிதத் தவறுகளோடு சமூகத்தின் தவறுகளாலும்தான் ஒரு பெரும் சூழலியல் மாற்றத்தை நிகழ்த்தும் காரணியாக உள்ளன.

பண்டையத் தமிழரின் நீர் மேலாண்மை நுட்பங்களை மறந்து, வளர்ச்சி என்ற பெயரில் சுருங்கிப் போனதால்தான் இந்த விளைவா?
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இது போன்ற நிகழ்வுகளை நேர் கொள்வது?

சமூகம் அடிப்படைக் காரணத்தைத் தேடமால் வழிப்போக்குகளை மட்டுமே கையாளுவதால் இது போன்ற சிக்கல்கள் தோன்றுகின்றன.
உணவு, பண்பாடு போன்றவற்றில் பழமையைப் போற்றும் சமூகம், ஏன் நீர் மேலாண்மை, நகரக் கட்டமைப்புகளில் கவனம் கொள்வதில்லை?

அண்மையில், கீழடி அகழாய்வுச் செய்தியில் பண்டையச் சமூகம் முறையான நகரக் கட்டமைப்பு செய்துள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளனர் தொல்லியல் துறை சார்ந்தவர்கள்.

நகரக் கட்டமைப்புப் பணிகளில் ஆள்வினைஞர்கள் சுணங்குகின்றனரா?

ஒவ்வொரு விளைவும் ஒன்றை மட்டும் நினைவுப்படுத்தவதில்லை. அந்த விளைவுகளில் மறைந்துள்ள செய்திகளை ஏன் யாரும் பேசுவதில்லை?

நகரக் கட்டமைப்பின் அடிப்படை நீர்மேலாண்மை கொண்டுதான் நிறுவ வேண்டும். நீர் மேலாண்மைச் சமூகங்கள் ஒடுங்கியதன் - ஒடுக்கியதன் விளைவுகளால்தான் பெருவெள்ளம் போன்ற நேரங்களில் கையுறு நிலையில் கேட்பாரற்று ஏதிலியாக மாறி உள்ளோம்.

தமிழகத்தின்  சிற்றூர்  நீர்த்தேக்க ஓரங்களில் காவல் தலைவர்களைத் குல தெய்வமாக வழிபடும் முறை உள்ளது. நீர் மேலாண்மை காரணமாக அந்த மரபு தோன்றி இருக்கலாம் என்ற வகையில் பார்வையும் எழுகிறது.

பெரு வெள்ளத்துயரம் தந்த பாடங்களை கொண்டு, நீர் மேலாண்மை என்ற பண்டைய முறைமைகளை மீட்டுருவாக்கம் செய்யப் புறப்படுவோம்.

நீர் மேலாண்மைதான் நிறைவான தீர்வு என்பதை, பொது சமூகம் உணரும் வேளையில்தான் இது போன்ற துயரங்களுக்கு முடிவுரை எழுத முடியும்.
நீர் மேலாண்மை காலத்தின் தேவை மட்டுமல்ல; காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதைத்தான் மகாராசனின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல் உணர்த்துகிறது.

நீர் மேலாண்மை: வேளாண் மரபினரின் நீர் அறுவடைப் பண்பாடு எனும் அத்தியாயமானது, நீர் மேலாண்மைப் பண்பாட்டின் கடந்தகால வரலாற்றையும், நிகழ்கால இருப்பையும் அதன் வேர்த் தடங்களையும் மிக நுட்பமாகவும் விரிவாகவும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நீர் மேலாண்மை குறித்துப் பேசுவோரும் யோசிப்போரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

செ. தமிழ்நேயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக