திங்கள், 29 நவம்பர், 2021

தவிர்க்க முடியாத தமிழர் வரலாற்றுப் புத்தகம் : முத்து மல்லல்


இலக்கியமாக இருக்கட்டும் அல்லது இலக்கியம் சார்ந்த திறனாய்வாக இருக்கட்டும், அவைகள் எல்லாமே   பிராமணியச் சாதியக் கட்டமைப்பில்தான்  இந்தியச் சமுதாயம் இயங்குகிறது என்பதை  எதிர்ப்பதாகக் கூறப்படும் திராவிட மற்றும் தலித்தியம் சார்ந்த இலக்கியப் படைப்புகளே புரட்சிகரமான இலக்கியம் அல்லது இலக்கியத் திறனாய்வு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.  

அதையே ஒரு  குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றித் திறனாய்வு செய்து நூலை வெளியிட்டால், ஒரு சாதிக்கான இலக்கியமாகக் கருதப்பட்டு, அந்தத் திறனாய்வையே ஏதோ ஒரு வகையில் ஒடுக்குதல் அல்லது ஒதுக்குதல் வேலையைக் கன கச்சிதமாகச் செய்கின்றன இந்தப் போலி புரட்சிகளான திராவிடம், தலித்தியம், இடதுசாரி அணிகள். இது இலக்கியத் துறையில் மட்டுமல்ல, அரசியல், சமூகம், பண்பாடு, கலாச்சார விடயங்களிலும்கூட தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை  ஒடுக்கியும் ஒதுக்கியும் சிதைக்கும் திட்டத்தை மிக நுடபமான வேலைகளைச் செய்து வருகின்றன திராவிடம், தலித்தியம், கம்யூனிச முகாம்கள். 

தமிழரின் சமுதாய அமைப்பே நிலத்தின் அடிப்படையிலும், தொழில் சார்ந்த அடிப்படையிலும்தான் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.  அதாவது, நிலம் மற்றும் தொழில் சார்ந்த தமிழரின் ஒவ்வொரு  இனக்குழுக்களின் இலக்கியங்களின் கூட்டமைப்பாகத்தான் சங்க இலக்கியங்கள் உள்ளன. இப்படிப்பட்ட இனக்குழு சார்ந்த இலக்கியங்களே உண்மையான புரட்சிகரமான இலக்கியங்களே ஆகும்.

ஆனால், இன்றும் அப்படிப்பட்ட ஒவ்வொரு இனக்குழுவும் சாதிகளாக உருமாறி இருக்கின்றன என்பதைப் போலியான புரட்சிக் கோட்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.   

அந்த வகையில், வேளாண் மரபினரான தேவேந்திரகுல வேளாளரின் வரலாறு, தமிழரின் தவிர்க்க முடியாத ஒரு வரலாறாகவே இருக்கின்றது. இன்னும் தெளிவாகக்  கூற வேண்டும் என்றால், உழவர் குடியான தேவேந்திரகுல வேளாளரின் வரலாறே தமிழர் வரலாறு என்றுதான் இலக்கிய, தொல் பொருள்கள், பாண்பாடு, கலாச்சாரம்  வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய பெருமை மிக்க வரலாற்று இலக்கியங்களைத் திராவிடக் கருத்தியல் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட இலக்கியப் படைப்புகள், இலக்கியத் திறனாய்வு தற்போது படைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், திராவிடம் மற்றும் தலித்தியக் கருத்தாக்கங்களை  உதறித்தள்ளி, ஒரு சமூகத்தின் வரலாறு அல்லது இலக்கியம்தான் தமிழரின் கூட்டுக் கலவையாக நிமிர்ந்து, தமிழர்களின் தனித்துவமும் அறிவும் புகழ் மிக்கதாய் ஒளிர்கிறது. 

அந்த வகையில் சிற்சில படைப்புகளே வெளிவருகின்றன. அந்தச் சிற்சில ப் படைப்புகளில் ஏர் மகாராசன் எழுதிய "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" என்ற புத்தகம்,  துவக்கத்தில்  மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் மனித இனம் வேட்டையாடிச் சமூகமாக இருந்து, வேளாண் சமூகம் எப்படி உருவெடுத்தது என்பதையும், அந்த வேளாண் உற்பத்தி உபரியாக வேளாண் தொழிலை ஒட்டிய துணைத் தொழில்களாகப் பிரிந்து, அது மனித வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்பதையும், மேலும், நாடு, நகரம் உருவாக்கப்பட்டதையும், அரசு உருவாகி வந்ததையும் படம் பிடித்துத் தன்னுடைய எழுத்தில் காண்பித்துள்ளார். 

இப்படி நாடு, நகரம், அரசு இவை யாவுமே ஒரு சமூகத்தின்  கூறுகளாகக் காணப்படுகின்றன. குடும்பர்,  மள்ளர், பள்ளர் மற்றும் தேவேந்திரகுல வேளாளரின்  உழைப்பாலும் ஆற்றலாலும்  நற்பண்புகளாலும் கட்டமைக்கப்பட்டதைத் தெளிவாக ஆசிரியர் விளக்குகிறார். 

அதே போன்று, மருத நில உழவர் குடியானவர்களின் பல பெயர்ச் சொற்களுக்குப் பல ஆதரங்களின் மூலம் நிறுவியுள்ளார். இந்த உழவர்குடி பெருமக்களின் ஒவ்வொரு  பண்பாட்டுக் கூறுகளும் அறிவுப்பூர்வமான, பொதுநலன் மிக்கவும் உடையவை என்பதையும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். 

வேளாண் தொழில் என்பது, அரசின் அச்சாணியாக இருந்த  குடும்பர்களின் ஊர்க்  குடும்பு முறை என்பதும் ஆதராங்களோடு நிரூபித்ததோடு, நிலத்தையும் நீரையும் எவ்வாறு மேலாண்மை செய்து நிர்வாக அமைப்பைக் கட்டமைத்தனர் என்பதையும் கல்வெட்டு மற்றும் வழக்காற்றுக் கதைகளின் மூலம் விளங்கக் கூறியுள்ளார். 

வேளாண் உற்பத்தியான நெல் நாகரிகம் உலகின்  பல நாடுகளிலும், பண்டைய நாகரீகங்களுக்கும்   அச்சாணியாக இருந்ததை எச்சங்களாகக் காண்பித்துள்ளார். பொதுவாக, இங்கு இருக்கின்ற  கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் உழவர் குடி மக்களின் சமூகக் கட்டமைப்பிலிருந்து  உருவானதுதான் என்பதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறார். 

ஆனால், உழவர் குடியான குடும்பர்கள் எப்படி எந்த நுற்றாண்டில் வீழ்ச்சியைச் சந்தித்தனர் என்பதை ஆரியக் கோட்பாட்டை முன் வைத்தாலும், உண்மையிலேயே  வடுகரின் படையெடுப்பால்தான் வீழ்ந்தனர் என்பதை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதும், ஏற்கனவே, தோல்வியான தமிழ்த் தேசியக் கருத்தியலோடு உடன்பட்டுள்ளார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

இதைத் தவிர்த்து, இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் எச்சமூகத்தின் கட்டமைப்பில் உருவானது என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

தமிழர் வரலாற்றைப் படிக்க விரும்பும் எவரும் இப்புத்தகத்தைத் தவிர்த்துத் தமிழர் வரலாற்றை விளங்கிக் கொள்ள முடியாது எனலாம். 

*

கட்டுரையாளர்:
முத்து மல்லல்,
சமூகச் செயல்பாட்டாளர்.

1 கருத்து:

  1. தமிழ்த்தேசியஅரசியல் தோல்விக்கு சாதியமேட்டிமை தான் காரணி.
    ஆசிரியர் படைப்பில் அகமுரண்களை சரி செய்வதற்கான வழிமுறையை வாழ்வியலுடன் ஒப்பீடு செய்துள்ளார்.தமிழினம் முற்றிலும் கொற்றம் இழந்தற்கு தன்பகை,அயல் படையெடுப்பு.தோராயமாக கூறுவது என்றால் பொது ஆண்டு 12நூற்றாண்டு இறுதியில்.13நூற்றாண்டின்தொடக்கத்தில்சாதிஎன்ற சமூக படிநிலை தோற்றம் பெற்றிருக்கலாம்.இற்றைய ஆய்வாளர்களில் பெரும்பாலும் சாதிய மனநிலையில் தான் ஆய்வை துவங்குகின்றனர்.அவர்களில் இருந்து மாறுபட்டு நிற்பவர் தான் ஆசிரியர் ஏர்.மகாராசன்.

    பதிலளிநீக்கு