வியாழன், 25 நவம்பர், 2021

வேளாண் மரபை அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு விவரித்திருக்கும் முக்கியமான நூல். : செட்டி.வெ.அசோக் பண்ணாடி



வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனத் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர், தமிழினத்தின் மொத்த அடையாளமே வேளாளர் குடியின் வாழ்வியலும் வரலாறும்தான் எனத் தீர்க்கமான தரவுகளோடு தீர்ப்பளித்து  முடித்துள்ளார். இவைகளுக்கு ஆதாரமாகத் தொல்காப்பியர், கம்பர், வடமொழி வால்மீகி, ஔவையார் போன்ற தெய்வப் புலவர்களை இந்நூலில் பேச வைத்துள்ளார். 

சமகால அறிஞர் பெருமக்களான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், சீர்மிகு சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் என, அமரர் பிரபஞ்சன், வாழும் வரலாறு ம.சோ.விக்டர் ஐயா, சாகித்ய அகாடமி விருதாளர் சோ. தர்மன் ஐயா போன்ற ஆளுமைகள் அனைவரும் சாட்சியம் அளித்துள்ளனர். 

ஆக, சங்ககாலத்தில் கோன் உயர அடிப்படை ஆதாரமாக இருந்த மண் விரும்பும் மழையின் மக்கள், சேற்றுக்கால் செல்வர்கள், நெல் வேளாண்குடிக்கு இருந்த பண்பாட்டு விழுமியங்கள், கால ஓட்டத்தில் மிச்சம் இல்லாமல் கரைந்து போக வேண்டுமெனத் திட்டமிட்டு ஆடிவந்த அரசியல் ஆடு களத்தில், குடத்திலிட்ட விளக்காய்  மங்கிக் கொண்டிருந்த வேளாண் குடியின் மாண்புகளைத் தக்க தருணத்தில் இந் நூலின் மூலம் ஆதவன் ஔி போல் குன்றில் ஏற்றி வெளிச்சப்படுத்தியுள்ளார். 

திணை சார்ந்த மக்களின் இயல்பு, குண நலன்கள் அமைதல் மற்றும் தெய்வ உருவ வடிவமைப்புகள் பற்றிய பதிவினூடே, பொதுவுடைமையை மானுடம் உணர்வதற்கு முன்பே ஈகம், இரக்கம், கூட்டுறவு, ஊர்க்குடும்பு என்ற குணங்களை இயல்பாகக் கருவிலேயே  பெற்றுப் பிறப்பெடுத்தவர்களே வேளாண்குடி மக்கள் என அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். 

ஐந்தவித்து மானுட நிலையிலிருந்து இறைநிலை பெற்ற இந்திரன் அருளால், இன்றைக்கு நம் கையில் இருக்கும் கவளச் சோற்றின் ஒரு பருக்கை, கடந்து வந்த பல ஆயிரம் ஆண்டு கால வரலாற்றின் வழித் தடத்தில் நம்மையும் பின்னோக்கிக் கூட்டிச் சென்றிருக்கிறார். 

இவ்வழியிலான பரிணாம ஓட்டத்தில் மானுடம் ஏற்றுக் கொண்டவைகளையும், விலக்கிக் கொண்டவைகளையும் தற்குறிப்பேற்றல் இல்லாமல் நம் சிந்தனைப் புலனில் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். 

எள்ளு நட்டேன் விற்கல, கொள்ளு நட்டேன் விற்கல, நெல்லு நட்டேன் விற்கல, கல்லு நட்டேன் வித்துடுச்சு.

இது புளி ஏப்பக்காரர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய வேளாண் தொழிலின் மிகக் கசப்பான இருப்பு நிலை இதுதான் என்ற அக்கறையையும் பதிவு செய்திருக்கிறார். 

உலகமயமாதல் போக்கில் உணவு சார்ந்து எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தை உணராமல் வேகமாகக் கடந்து போய் கொண்டிருக்கும் இவ்வேளையில், சரியான காலத்தில் வேளாண்மை குறித்த நிதர்சனத்தை நிதானித்துச் சிந்திக்கத் தூண்டும் நூலாக இந்நூல்  கிடைக்கப்பெற்றிருக்கிறது. 

கோன் உயர அடிப்படை ஆதாரமாகப் போற்றி வளர்த்த வேளாண் தொழிலின் சிறப்புகள், சங்க காலத்திற்குப் பிறகு - நெடுங்கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு  இந்நூல் மூலம் நமக்குக் கிடைத்திருப்பதென்பது, வேளாண் தொழிலில் ஏற்பட்டிருக்கும்  காணாமையையும், சலிப்பையும், தொய்வையும் போக்கும் அருமருந்தாக இந்நூல் கிடைக்கப் பெற்று மிகப் பெரிய குறையைத் தீர்த்து வைத்துள்ளது என்று சொன்னாலும் மிகையாகா. 

ஆதிக்கும் அந்தத்திற்கும் இடையில் பல சமயங்கள் தோன்றி இருந்தாலும், இன்றைக்கு நிலவி வருகிற சமய பேதங்கள் இந்திர சமயத்திற்கும், ஆரிய சமயத்திற்குமான போரே அமுக்கமாக ஊடாடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை, வைதீகச் சமய வேள்வி வழிபாட்டையும், தமிழர்கள் வழிபாடான இயற்கை வழிபாட்டையும் நேரெதிராகப் பொருதி வகைப்படுத்தி ஆசிரியர் பதிவு செய்யத் தவறவில்லை. 

ஆக, சங்க காலந்தொட்டு சமகாலம் வரை மானுடம் பரிணமித்த அத்தனை பரிணாமக் கோணங்களும் வேளாண்மையும் அதன் உற்பத்தியும் உபரியுமே தீர்மானித்து வந்துள்ளது என்ற எதார்த்தத்தைத் தீர்க்கமாகப் பதிவு செய்துள்ளார். 

இந்திய அரசியலில் நடந்து முடிந்த அதிரடி மாற்ற நடவடிக்கையிலும், பெருந்தொற்றால் உலகமே தோற்றுக் கொண்டிருந்த காலத்தில், உணவும் வேளாண்மையுமே உயிரென்ற மதிப்பீட்டை உணர்த்தியுள்ளது. 

ஆக, இந்நூலில் தான் சொல்ல வந்ததை விளங்கச் சொல்லி இருப்பது என்பது மிக எளிதாக, ஏதுவாக, எளிமையான நடையில்  இருந்தாலும், வலிமையான தரவுகளோடு, பொருத்தமான சான்றாதரங்களோடு கருத்தியலைத் தெளிவாகச் சொல்லி, வேளாண் மக்களின் வேந்தனான இந்திரனை  அரியணை ஏற்றி ஆட்சி செய்ய இந்நூல் மூலம் மீண்டும் அழைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

இந்நூல் போல் சிறந்த படைப்புகள் பல படைத்து தமிழுக்கும், இனத்திற்கும், வரலாற்றிற்கும் பெருமை சேர்க்கும் ஆய்வாளர் மகாராசனின் எழுத்துப் பணி தொய்வின்றி வளர எம் மனமார்ந்த வாழ்த்துகள். 

*

கட்டுரையாளர்:
செட்டி.வெ.அசோக் பண்ணாடி,
சமூகச் செயல்பாட்டாளர்,
கோயம்புத்தூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக