திங்கள், 18 அக்டோபர், 2021

உற்பத்தி வடிவம் : தெய்வங்களும் சமூக மரபுகளும் - மகாராசன்

 



தமிழ் இலக்கண மரபில், ஒவ்வொரு திணை சார்ந்த நிலத்திற்குமுரிய கருப்பொருட்களுள், தெய்வம் என்பது முதலாவது கருப்பொருளாகச் சுட்டப்படுகிறது. தமிழ் மரபின் தெய்வங்களாகக் குறிக்கப்படுகின்ற யாவையும் பொருட்களாக இருந்து பயன் அளித்த - அளிக்கின்ற ஆற்றல் வளங்களாய் இருந்திருக்கின்றன. அதனால்தான், தெய்வம் என்பதைக் கருப்பொருளாகவே சுட்டுகிறது தமிழ் இலக்கண மரபு. இத்தகைய தெய்வம் என்பதான கருத்தாக்கமும் வழிபாட்டு வழக்கங்களும்கூட, அந்தந்தக் காலத்தியச் சமூக உருவாக்கம்தான். 

தெய்வங்களும் சமூக மரபுகளும் குறித்து தொ.பரமசிவன் கூறியிருக்கும் கருத்து இவ்விடத்தில் நோக்கத்தக்கது. மனித சமூகத்தின் வளர்ச்சி அதனுடைய கூட்டுச் சிந்தனையின் விளைவு ஆகும். இரும்புக்காலம், செம்புக்காலம் என்று மனிதன் உலோகங்களைக் கண்டுபிடித்து நாகரிகம் பெற்றதும்; சக்கரம், உழுகலப்பை போன்ற அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததும் கூடிக்கூடித் தொழில்செய்து பெற்ற அனுபவத்தினால்தான். தெய்வங்களும் அப்படிப் பிறந்தவைதான். 

மிகப் பழங்காலத்தில் சிந்தனை அளவில் இளம் குழந்தைகளாக வாழ்ந்த மனிதர்கள், தெய்வம் என்பதை ஒரு ஆற்றலாகத்தான் கருதினர். கை கால்களுடன் கூடிய ஒரு உருவமாகவோ அல்லது மனிதனைப் போன்ற உருவமாகவோ கருதவில்லை. தமிழ்நாட்டில்கூட முருகு எனப்பட்ட ஒரு ஆற்றலையே முதலில் வணங்கினர். பின்னர் தனி மனிதச் சிந்தனை வளர்ந்தபோதுதான், முருகு முருகன் ஆக்கப்பட்டான். இவ்வகையான குறிகளும், குணங்களும், குலங்களும் கொண்ட கடவுள்களும் அந்தந்தச் சமூகத்தின் தேவைக்கேற்ப அமைந்தவையே. 

தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமூகத்தின் தேவைகளையொட்டி அமைந்தவைதான். கால்நடை வளர்ப்போரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன்தான் இருக்க முடியும். உழவர்களின் தெய்வம் மழை தருகின்ற இந்திரனாகவோ அல்லது கையிலே கலப்பை ஏந்திய பலராமனாகவோதான் இருக்க முடியும். 

சுருக்கமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட  இனக்குழு - மக்கள் கூட்டம் என்ன வகையான உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ, அதைப்பொறுத்து அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும் என, தெய்வம் பற்றிய சமூகக் கருத்தாக்கம் பற்றிய விவரிப்பைத் தருகிறார் தொ.பரமசிவன். அதாவது, ஒரு நிலப்பரப்பு சார்ந்து வாழும் தொழில் மரபினர், தத்தமது தொழில் சார்ந்தே தெய்வம் பற்றிய கருத்தாக்கத்தையும் உருவாக்கி வந்திருப்பர். மருத நிலத்தின் தெய்வம் பற்றிய கருத்தாக்கமும் வழிபாட்டு வழக்கமும்கூட இத்தகையப் பின்புலத்திலிருந்துதான் - உற்பத்தி வடிவத்திலிருந்துதான் உருவாகி இருக்க முடியும் எனலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக