வெள்ளி, 29 அக்டோபர், 2021

பாண்டியர்களும் உழவுத்தொழில் அடையாள மரபும் : மகாராசன்


சோழநாடு சோறுடைத்தது எனும்படியாக வேளாண்மைத் தொழிலை வளப்படுத்திய சோழர்கள், உழவுத் தொழில் மரபை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எனினும், சோழர்களுக்கு முன்பாகவே உழவுத் தொழில் மரபினராகவே அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் பாண்டியர்களே ஆவர் என்கிறார் பாவாணர்.

இதைக் குறித்து அவர் கூறும்போது, முதல் பாண்டியன் அவன் காலத்தில் பண்டையனாய் இருந்திருக்க முடியாது. ஆதலால், பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் வேந்தன் குடிப்பெயரைத் திரித்து, பழமையானவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது எனும் பாவாணர், பள் - பண்டு - பண்டி - பாண்டி - பாண்டியன் என்பதாயிற்று என்கிறார்.

மேலும், பாண்டி - பாண்டில் - பாண்டியம் = எருது; எருது கொண்டு உழும் உழவு அல்லது பயிர்த்தொழில். தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத் துணையாகத் தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும். ஏர்த் தொழிலுக்கு உதவுவதனால் காளை எருது எனப்பட்டது. ஏர் - ஏர்து - எருது. காட்டு மாட்டைப் பிடித்துப் பழக்கி, வீட்டு விலங்காக்கி ஏர்த் தொழிலுக்குப் பயன்படுத்தினர். உழவுத் தொழிலும் பாண்டியம் எனப்பட்டது என்கிறார் பாவாணர்.

பழங்காலத்தில் உழவுத் தொழிலைப் பாண்டியம் எனும் சொல்வழக்காலும் தமிழர் குறித்துள்ளனர். அவ்வகையில், வேளாண்மை உழவுத் தொழில் மேற்கொண்ட பழந்தமிழர்களும், அவர்வழி வந்த வேந்தர்களும் உழவுத் தொழில் மரபினராக அடையாளப்படுத்தும் வகையில் பாண்டியம் - பாண்டியர் எனக் குறித்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும். உழவுத் தொழிலைப் பாண்டியம் எனக் குறிக்கும் வகையில்,

பாண்டியம் செய்வான் பொருளினும்

என்கிற கலித்தொகைப் பாடல் குறிப்பும் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

ஆக, பாண்டிய வேந்தர்களின் அடையாளமும், சோழ வேந்தர்களின் அடையாளமும் வேளாண்மை உழவுத் தொழில் மரபையே அடையாளப்படுத்துகின்றன. அதாவது, வேந்தர்களின் அடையாளம் என்பது, வேளாண்மை உழவுத் தொழிலாகவே இருந்திருக்கிறது. வேளாண்மை உழவுத் தொழில் மரபினரே வேந்தர்களாக இருந்திருக்கின்றனர்.

இத்தகைய வேந்தர்களே வேளாண்மை உழவுத் தொழிலுக்கும் உழவுத் தொழில் மரபினருக்கும் பெருந்துணையாய் இருந்திருக்கின்றனர். அதனால்தான், வேந்தன் எனவும், இந்திரன் எனவும் மருத நிலத்தின் தெய்வமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

மண்ணுலகின் வேளாண்மை உழவுத் தொழிலுக்கு மழை நீரே முதன்மையானதும் அடிப்படையானதுமாக இருப்பதால், மழை நீரே வேந்தனுக்கு ஒப்பானதாகவும், விண்ணுலகின் வேந்தராகவும் கருதப்பட்டிருக்கிறது. அதனால்தான், இந்திரன் எனும் மழை நீரை மருத நிலத்தின் தெய்வமாகவும், வேளாண்மை உழவுத் தொழிலின் அடையாளமாகவும் உழவுத் தொழில் மரபில் கருதப்பட்டிருக்கிறது. அவ்வகையில், வேந்தன், இந்திரன், தேவேந்திரன் எனக் குறிக்கப்படுவன யாவும், வேளாண்மை உழவுத் தொழிலின் அடையாளமாகவே எல்லாக் காலத்திலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன எனக் கருதலாம்.

வேளாண்மை உழவுத் தொழிலின் அடையாளமாகவும் குறியீடாகவும் கருதப்படுகிற இந்திரன் - தேவேந்திரன் பற்றிய தரவுகள் பல்வேறு தொன்மக் கதைகளிலும், வேளாண் வளமைச் சடங்குகளிலும், பண்பாட்டு வழக்காறுகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும், கல்வெட்டு, செப்பேடு போன்ற வரலாற்றுக் குறிப்புகளிலும், இலக்கண இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


2 கருத்துகள்: