ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இந்திர அடையாளம் - ஆரியத்திற்கு எதிரான தமிழர் அடையாளம்: மகாராசன்.


தமிழர் மரபில் பன்னெடுங்காலமாக நிலவியிருக்கும் பல்வேறு பண்பாட்டு மரபுகளை அழித்தொழித்து, ஆரியத்தின் பண்பாட்டு அடையாளங்கள் திணிக்கப்பட்டு வந்தாலும், ஆரிய வைதீக அடையாளங்களிலிருந்து விலகியும் வேறுபட்டும் முரண்பட்டும் காணப்படுகிற பண்பாட்டு அடையாளங்கள் தமிழர் மரபில் இன்னும் நிரம்ப இருக்கின்றன. தமிழர் மரபின் அத்தகைய அடையாளங்களுள் ஒன்றுதான் இந்திர அடையாளமும்.


வேளாண்மை உழவுத் தொழிலின் பன்னெடுங்கால வரலாற்றுத் தொடர்ச்சியிலும், வேளாண்மை உற்பத்தி சார்ந்த பண்பாட்டு மரபிலும், உழவுத் தொழில் மரபினரின் வாழ்வியல் நடத்தைகளிலும், மழைத் தெய்வத் தொன்மங்களிலும், வளமை சார்ந்த சடங்குகளிலும், வழிபாட்டு வழக்கங்களிலும், பாடல், பழமொழி உள்ளிட்ட வாய்மொழி வழக்காற்று மரபிலும், வேளாண்மைக் கருவிகள் - வேளாண்மைத் தொழில் நுட்பங்கள் - சூழலியல் சார்ந்த அறிவு மரபிலும் இந்திரன் எனும் அடையாளமே தொடர்ந்து வந்திருக்கிறது.

வேளாண் மரபில் காணலாகும் இத்தகைய இந்திர அடையாளமானது, ஆரிய வைதீகத்தின் மரபுகளுக்கும் அதன் மேலாதிக்கத்திற்கும் எதிரானதும் பகையானதும் ஆகும்.

ஆரிய வைதீகத்தின் பண்பாட்டு மரபுகளுக்கு எதிரான பண்பாட்டு மரபுகளைக் கொண்டவர்கள்தான், தமிழ் உழவுத் தொழில் மரபினரான வேளாளர்கள் ஆவர். அதனால்தான், மழைத் தெய்வம் என்பதன் குறியீட்டு அடையாளமான இந்திரனை வேளாண்மைத் தொழிலின் அடையாளமாகக் கொண்டனர். அதோடு, உழவுத்தொழில் புரிந்த அம்மக்கள், இந்திர மரபின் நீட்சியாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

உழவுத் தொழில் மரபினரின் - வேளாளர்களின் இந்திர அடையாளத்தைத் தாழ்த்தியும் இழிவுபடுத்தியதுமான ஆரிய வைதீக மரபுக்கு எதிராகத்தான், இந்திர அடையாளத்தை உழவுத் தொழில் மரபின் அடையாளமாக - மருத நிலத்தின் அடையாளமாக - மேன்மைமிகு அடையாளமாக - தமிழர் அடையாளமாக - பெருமைமிகு அடையாளமாகக் கருதியிருக்கின்றனர் உழவுத் தொழில் வேளாளர்கள். அதனால்தான், உழவுத் தொழில் மரபின் வேளாளர்கள் தம்மை இந்திரகுலம் - தேவேந்திரகுலம் என்பதாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அதாவது, வேளாண்மை உழவுத் தொழில் மரபில் வேளாளர்களாகக் குறிக்கப்பட்டும் அடையாளப்பட்டும் வந்த உழவுத் தொழில் மரபினர், வரலாற்றுத் தொடர்ச்சியிலும் பண்பாட்டு நீட்சியிலும் தமக்கிருக்கும் வேர்த் தடங்கள் அறுந்து போகாத வகையில் அடையாளப்படுத்தி வந்திருக்கின்றனர்.

அதனால்தான், வேளாண்மைத் தொழில் மரபின் அடையாளமாய்ப் பரிணமித்த இந்திரன் - தேவேந்திரன் எனும் பெயர்களால் இந்திரகுல விவசாயம் - தேவேந்திரகுல வேளாளர் என அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய அடையாளப்படுத்தலானது, வேளாண் மரபை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில், ஆரிய வைதீக மரபுகளை எதிர்ப்பதையும் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக