வியாழன், 28 அக்டோபர், 2021

சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்ட சின்னம் புலிதானா? : மகாராசன்


பரந்து விரிந்து வேய்ந்திருக்கும் மருத நில வயல்வெளிகளைக் கண்ணுற்று நோக்குவதால்தான், மழைத் தெய்வமானது மழையாகப் பொழிந்து மண்ணுயிர் காக்கின்றது. வேய்ந்திருக்கும் வயல்வெளியை மழை பொழிந்து நோக்குவதால் மழையை வேய்ந்தன் - வேந்தன் எனக் குறிக்கப்படுகிறது.


இதைப்போல, வேய்ந்திருக்கும் வயல்வெளிகளை ஒருமித்துப் பரந்து நோக்குவதற்கும் இரு கண்கள் போதாது என்பதால், ஆயிரம் ஆயிரம் கண்கள் கொண்டு மழைத் தெய்வம் நோக்குவதாகக் கருதியதால்தான், மழைத் தெய்வமான இந்திரனுக்கு ஆயிரம் கண்ணுடையான் எனும் பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவத்தைத்தான் சோழர்கள் தமது கொடியில் வரைந்திருக்கிறார்கள்.

மருத நிலத்தில் அரசு புரிந்த சோழர்கள் கொடியில் கண்களாகவே வரைந்திருந்த ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவமானது, புலியின் தோற்றத்தைப்போலவும் காட்சி அளித்திருக்கிறது. சோழர்களின் கொடியில் உள்ள புலிச் சின்னமானது, ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான்.

இந்த நுட்பமான செய்தியை, இராசராச சோழன் உலா நூலில் பதிவு செய்யும்போது,

....தாவி

வரப்பு மலை சூழ்வர ஆயிரம் கண்

பரப்பும் ஒரு வேங்கை பாரீர்

என, சோழனின் கொடிச் சிறப்பைக் கூறுகிறார் ஒட்டக்கூத்தர். இந்திரனாகிய புலிக்கொடியை; அதாவது, புலியெனக் கொடியில் இந்திரனை வைத்தவர்கள் சோழர்கள் என அப்பாடலில் சுட்டுகிறார் ஒட்டக்கூத்தர்.

இந்திரனைத்தான் புலிக்கொடியாகச் சோழர்கள் அடையாளப்படுத்தினர் எனும் செய்தியைக் கலிங்கத்துப்பரணி இலக்கியமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. சித்திரன் எனும் சோழ மன்னன், தன்னுடைய கொடியில் புலி என்பதாக இந்திரனைத்தான் அடையாளப்படுத்தி வைத்ததாகக் கூறும் வகையில்,

புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும் 

என்கிறது கலிங்கத்துப்பரணி.

இந்திரனைக் கொடியில் வைத்தவர்கள் என்பதால்தான், இந்திரனுக்கு விழா எடுத்திருக்கிறார்கள் சோழர்கள். இந்திரனுக்குச் சோழர்கள் விழா எடுத்திருப்பதன் பின்புலமும் இதுவாக இருந்திருத்தல் கூடும். அவ்வகையில், உழவுத் தொழில் மரபின் வழிபாட்டு அடையாளமாகக் கருதப்பட்ட இந்திர அடையாளத்தையே, வேளாண்மை உழவுத் தொழில் பண்பாட்டு அடையாளமாக - வேளாண் மரபினர் என்பதன் குறியீட்டு அடையாளமாகச் சோழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக