செவ்வாய், 26 அக்டோபர், 2021

வேளாண் மரபை வரலாற்று இயங்கியல் பார்வையோடு அணுகியிருக்கும் நூல் : இராஜா, பொறியாளர்.



இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியல் - பொருளாதாரம் - பண்பாட்டு ஆதிக்கமும், அதன் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாள்தோறும் வேளாண் மற்றும் பிற பாட்டாளி வர்க்கத்தினர் போராடியே வந்துள்ளனர்; வருகின்றனர். 

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே வாளோடு தோன்றிய மூத்தக்குடி" என்று பெருமை பேசும் தமிழர் தேசிய இனத்திலும்கூட ஒவ்வொரு குடிகளின் மீதும் திட்டமிட்டோ அல்லது புகுத்திய பொதுப்புத்தியின் தாக்கத்திலோ நாள்தோறும் பண்பாட்டுத் தாக்குதல் தொடுக்கப்படுவதும்; அதை எதிர்த்துப் போராடியே தங்களுடைய பெரும்பொழுதைச் செலவிடுவதுமான போராட்ட வாழ்க்கையே தமிழர்களுக்கு இதுவரை இருந்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக, தமிழக வேளாண் உற்பத்தியாளர்களில் பெரும்பங்காற்றும் பள்ளர் சமுகத்தின் மீது கடந்த நானூறு வருடங்களாக நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல் என்பதெல்லாம், மனிதநேயத் தன்மையற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதுகுறித்து நீண்ட ஆய்வுகளையோ அல்லது அதற்கான தீர்வையோ முன்னெடுக்கப்படாமல் தொடர்வதைக் காண்கையில், இவை அனைத்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது...! 

அரசும் ஆய்வாளர்களும் தீர்வை முன்னெடுக்கும் வரையில், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளிகள் தங்களுக்கான தீர்வை முன்னெடுக்கமால் விட்டு விடுவார்களா என்ன...? 

அவ்வகையில், சமுகப் பண்பாட்டியல் ஆய்வாளர் முனைவர் ஏர் மகாராசன்  அவர்கள் எழுதி, யாப்பு பதிப்பகம் வெளியிட்டுள்ள "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" எனும் நூல், நடுநிலையோடு 'வேளாளர் யார் ...?' என்று மற்ற வேளாண் குழுக்களையும் இணைத்துப் பல்வேறு இலக்கியத் தரவுகளோடும், தமிழ் இனக்குழுக்களுக்கு இடையே இருக்கும் முரண்களைக் களைந்து ஒன்றுபட அழைப்பு விடுத்திருப்பது பாராட்டத்தக்க ஒன்று. 

வாழ்த்துரையில் எழுத்தாளர் சோ.தர்மன்  அவர்கள் "வேளாண் மரபினர் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்" என்று அணிந்துரை செய்திருப்பது போல், நூலாசிரியரும் தான் சொல்ல வரும் கருத்தை ஆழமாகவும் தெளிவாகவும், அதேசமயத்தில் மற்றவர்களை எவ்விடத்திலும் புண்படுத்தாத வண்ணம் எழுதியிருப்பது வேளாண் மரபின் மாண்பைக் காட்டுகிறது. 

பல எழுத்தாளர்களும் பேசத் தயங்கும் அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கும் தலைப்பில், மிக அற்புதமான படைப்பைப் படைத்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! 

பள்ளர் மற்றும் இன்றைய வெள்ளாளர், கவுண்டர், படையாச்சி, உடையார் ஏனைய வேளாண் தொழிற்மக்களுக்குள் இருக்கும் தொழிற்வழித் தொடர்புகளைக் குறித்து, வரலாற்று இயங்கியல் பார்வையோடு அணுகியிருப்பது வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. 

அதேவேளையில், தென்மாவட்டங்களில் முட்டிமோதிக்கொண்டிருக்கும் பள்ளர் மற்றும் மறவர் இருவருமே தங்களை இந்திர குலத்தார் என்று அடையாளப்படுத்திக் கொள்வது போன்ற பல விடயங்களை நூல் பேசியிருப்பதும் கவனிக்கத் தக்கது. 

இறுதியாக, நம்மை மற்றவர்கள் எப்படி மாண்போடு நடத்த வேண்டும்..? எப்படி அடையாளப்படுத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே நாமும் மற்றவர்களை நடத்துவோமேயானால், தமிழ்ச் சமுகத்தில் இடை புகுந்திருக்கும் முரண் களைந்து, தமிழும் தமிழரும் உயர்வார்கள் என்பதில் ஐயமில்லை...! 

வேளாண் சமுக ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களில், இந்நூலும் ஒன்று என்பது என் கருத்து. 

தமிழ்க் குடிகளுக்கு இடையே இருக்கும் உறவுகள் மற்றும் முரண்கள் குறித்து, இதுவரையில் பெரிதாக எந்தவொரு நூலும் வெளிவரவில்லை. இந்நூல் அதற்குத் தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், சமுகப் பண்பாட்டு உறவுகளைப் பேசும் நூட்கள் வெளிவர வேண்டும் என்பதே என்போன்றோரின் விருப்பமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..! 

நூலை ஆழ்ந்து படித்துப் பார்த்த பிறகே என் கருத்தைப் பதிவு செய்கிறேன். மற்றவரை அடையாளம் காட்டுகிறேன் என்ற பெயரில் விசமத்தனமாக நூட்களை எழுதி, அதன் மூலம் சமூகப் பதட்டம் உருவாக்கி, கூட்டம் சேர்த்துக் கட்சி ஆரம்பித்து, இறுதியில் சமூக அரசியல் முகத்தில் கல்லெறிந்து பணம் ஈட்டும் நரிகளும் உள்ளனவே...? அதிலிருந்து நூலின் ஆசிரியர் தனித்து நின்று வெற்றி பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான ஒன்றாகவே நான் காண்கிறேன். 

கட்டுரையாளர்: 

இராஜா, நுண்கலைப் பொறியாளர், நாகர்கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக