செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - நூல் மதிப்புரை : குருசாமி மயில்வாகனன்

இந்த உலகில் அறியப்பட்டுள்ள சிந்தனைப் போக்குகளை எத்தனை பிரிவுகளாக பிரித்தாலும், அவைகளின் அடிப்படையான தத்துவக் கண்ணோட்டத்தினை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். அவை, 1. கருத்து முதல் வாதம், 2. பொருள் முதல் வாதம். வெறும் சடங்குத்தனமாகவும், ஒப்புவிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் இவ்விரு சொற்களும், உண்மையில் மிக விரிந்த, பரந்த தளப்பரப்பினைக் கொண்டவை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை; ஒன்றொடொன்று உடன்படவே முடியதாவை; சமரசமாகாதவை; எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவை. 

இன்றை உலகில் பெரும்பாலான மக்களின் அடிப்படைக் கண்ணோட்டமாக இருப்பது கருத்து முதல் வாதம் (idealism) தான். இதற்குக் காரணம் இன்றைய ஆளும் வர்க்கங்களின் தத்துவமாகக் கருத்து முதல் வாதமே இருக்கிறது என்பதுதான். 

பிற மனிதர்களுடைய உழைப்பைச் சுரண்டி, தன்னுடைய நலன்களை, வசதியை, மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு வாழக்கூடிய  சுரண்டும் வர்க்கங்கள்தான் இன்றைய  ஆளும் வர்க்கங்களாக இருக்கின்றன. மனிதர்களுடைய உழைப்பைச் சுரண்டினால் மட்டுமே இந்த வாக்கங்கள் உயிரோடிருக்க முடியும். இதனால் இந்த சுரண்டும் முறைக்கு எதிராக உள்ள, அல்லது இந்தச் சுரண்டலைத் தடுக்கக் கூடிய  எதையும் இந்த வர்க்கங்கள் முடக்கும்; தடை செய்யும்; முற்றாக அழிக்க நினைக்கும். இந்தச் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், பின்புலமாகவும், பாதுகாப்பாகவும், அடிப்படையாகவும் இருப்பது 'கருத்து முதல் வாதம்' எனும் அதனுடைய தத்துவம்தான். 

நெருக்கடிகள் வரும்போது இது தன்னை மாற்றிக் கொள்ளும்; புதியன போலத் தோற்றம் கொள்ளும்; பல வேடங்களில் வெளிப்படுத்திக் கொள்ளும்; தேவைப்படும் சமயங்களில் தனக்கு நேரெதிரியான 'பொருள் முதல்' வாதத்தைக் கூட போர்வையாக அணிந்து கொள்ளும். 

பொருள் முதல் வாதமும், இதனை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலுக்கு எதிரான வர்க்கங்களும், கருத்து முதல் வாதத்தை அடியோடு நிராகரிக்கின்றது. மனிதனைச் சுரண்டுவதற்கும் எதிராகப் போரிடுகிறது. மனித சமத்துவத்தை வலியுறுத்துகிறது. அதோடு கருத்து முதல் வாதத்தின் எல்லா வேடங்களையும் அம்பலப்படுத்துகிறது. அது மூடிக் கொண்டுள்ள முகத் திரைகளைக் கிழித்தெறிகிறது. ஆயினும், கருத்து முதல் வாதமானது புதிய முக மூடிகளை அணிந்து கொள்கிறது. 'இப்படியான' புதிய கருத்துக்களை ஆராவாரத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த ஆராவாரத்தை, பொருள் முதல் வாதத்தை வீழ்த்துவதற்கான  ஆராவாரமாக அது கொண்டாடுகிறது. ஆளக்கூடிய சுரண்டும் வர்க்கங்கள் இவைகளை வரவேற்று, தலையில் தூக்கிவைத்து ஆடி, மக்களிடையே பரப்புகிறது. 

அப்படி ஒரு ஆராவாரமான, ஆர்ப்பாட்டமான சிந்தனையாக, தமிழில் அறிமுகமாகியது ‘பெண்ணியம்’. பல ஆண்டுகளுக்கு முன்னால் முதலாளித்துவ நாடுகளால் முதலில் கொண்டாடப்பட்ட பின்னர், குப்பைக்குப் போன பழைய துணிகளெல்லாம் முற்றிலும் புதிய ஆடை என்று இங்கு ஒரு கும்பல் கடை விரித்தது. அன்றே மலர்ந்த அரும்புச் சிந்தனை என்று எல்லோரையும் கடைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தது. ஒரு துருவ நட்சத்திரமாய் விளங்கும் அறிவியக்கம் என்று குதித்துக் கும்மாளம் போட்ட அந்தக் கும்பல், தனது வர்க்கக் குணத்திற்கேற்ப, பொருள் முதல்வாதத்தைச் சாடியது. 

            மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தியது. 'எங்கெல்ஸ்க்கு ஒண்ணுமே தெரியாது; இதைப்பற்றி மார்க்சியத்திடம் பதிலே இல்லை; இது மார்க்சியத்தின் போதாமை' என்று கதையளந்தது. 

பொருள் முதல் வாதத்தையும், மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களையும் உப்புக்குச் சப்பாணிகளாய் வரட்டி தட்டிக்கொண்டிருந்த இன்னொரு கூட்டமானது, இந்தக் கதையளப்பில் கவிழ்ந்தது. கவிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கன்னா பின்னாவென உளரியது. ஏற்கனவே கல் குடித்த வியாபாரக் கும்பல், இந்தக் கட்டத்தின் உளரல்களை உத்தரவுகளாக மாற்றிக் கொண்டு, பொருள் முதல்வாதத்தின் மீதும், மார்க்சியத்தின் மீதும் மேலும் சேறடித்தது; அவதூறு செய்தது. 

இந்தச் சேற்றடிப்பிற்கும், பகடிக்கும், மறுப்பாக, எதிராக இதோ, பொருள் முதல்வாதம், மார்க்சியம் தன் வாளைச் சுழற்றுகிறது. மார்க்சியத்தின் போதாமையைக் குறித்துப் பேசிய பேமானிகளெல்லாம் மார்க்சியம் சுழற்றும் இந்த வாளுக்குப் பதில் கூறட்டும். ஆனாலும், இந்த வாளைச் சுழற்றுபவர்களாக, தோழர் கிளாரா ஜெட்கினும், தோழர் லெனினுமாக அமைந்திருப்பது, இந்தக் கத்துக்குட்டிகளின் அதிர்ஸ்டம்தான். 

இன்றைய பெண்ணிய நவீனக் கருத்துக்களுக்கும், பெண்ணிய பின் நவீனத்துவக் கருத்துகளுக்கும், (பெண்ணிய பின் பின் நவீனத்துவக் கருத்துகளுக்கும்) தோழர் லெனின் மறுப்புரைக்கிறார். மறுப்புகளோடு மற்றுமின்றி, அவர்கள் எழுப்பும் கேள்விகள் உருவாகின்ற ரிசிமூலத்தின் பிடரியையும் பிடித்து உலுப்புகிறார். 

தோழர் இனெஸ்ஸா அர்மாண்டுக்கு எழுதுகிற பதிலில் 'சுதந்திரமான காதல்' எனும் புகழ்பெற்ற பெண்ணுரிமை முழக்கத்தின் அற்பத்தனத்தைத் தோலுரிக்கிறார் லெனின். திருமண ரத்து, கர்பத்தடை, விபச்சாரம், போன்றவைகள் குறித்த லெனினது சாட்டையடியான விமர்சனங்கள், இதுவரை மேற்சொன்னவைகள் குறித்த முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ அறிவாளிகளின் உளரல்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 

பெண்களைத்  தனித்த  ஒன்றாகக்  காணுவதை  ஏற்றுக் கொள்கிற லெனின், 'தனித்த' என்பதற்கான அர்த்தத்தைத் தனக்கே உரிய முறையில் எடுத்துரைக்கும் போது, இங்கே தமிழ்ச் சூழலில் 'பெண்ணியம்' என்று பிராண்டி எடுத்தவர்களின் நிலை ஆகப் பரிதாபகரமானதாக ஆகிவிடுகிறது. 

லெனின், ‘கர்பத்தடை’ குறித்த கருத்துக்களையும், பெரியாரின் ‘கர்பப்பை’ குறித்த கருத்துக்களையும் ஒப்புநோக்குவது மார்க்சியம், பெரியாரியம் குறித்த அலசல் புரிதல்களை வாசகர்களுக்குத் தர உதவும் . 

ரசியப் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து கிளாரா ஜெட்கின் குறிப்பிடும் விசயங்களும், பெண்களின் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது என லெனின் கூறுகிற பதிலுரைகளும் குறிப்பிடத்தக்கவை. 

சிக்மண்ட் ஃப்ராய்ட்சத்தையும், அதன் ஆதரவாளர்களைப் பற்றி லெனின் குறிப்பிட்டிருப்பதாவது, 'முதலாலித்துவ சமுதாயத்தின் குப்பை மேட்டில் முழுச் செழிப்புடன் மண்டிக் கிடக்கிற அந்த தனிமாதியான இலக்கியத்தில் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தவம் புரியும் இந்திய ஆண்டியைப் போல, எந்நேரமும் பாலுணர்வுப் பிரச்சினையிலேயே முழு நாட்டம் கொண்டுள்ள இவர்களை நாம் நம்புவதில்லை'. 

சிந்திக்கக் கூடிய பெண்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஆணின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. ஆடைகளிலும், வாடைகளிலும் பெண்ணியம் கண்டவர்கள் இப்புத்தகத்தின் கேள்விக்குப் பதில் சொல்லட்டும். 

'ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்' இந்நூல் தலைப்பு, வாசகர்கள் எவருக்கேனும் சலனத்தை ஏற்படுத்துமென்றால், நூலைத் தொடர்ந்து உள்ளே போவாரென்றால், அந்தச் சலனமே, அவர்களுக்கு ஒரு அறிவுப்பூர்வமான விழிப்புணர்வை நிச்சயம் கொடுக்கும். 

பெரும் பரபரப்பாக, பரவிக் கிடக்கும் மார்க்சிய சமூக, அரசியல், பொருளாதாரக் கருத்துக்களுக்கு உள்ளே பின்னிக் கிடக்கும் சிந்தனைகள் தொகுக்கப்பட்டு சொல் வடிவம் செய்யப்பட்டுள்ளன. 

பெண்ணியம் குறித்த தீவிர ஆய்வாளர் தோழர் மகாராசன்  மிகச்சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். பெண்ணியம் குறித்த மிக முக்கியமான ஆவணமாக விளக்கப் போகும் இந்நூலை மிகவும் அழகுடன் பதிப்பித்துள்ளது தோழமை பதிப்பகம். 

பெண்களில்லாமல் புரட்சி இல்லை;
புரட்சி இல்லாமல் பெண் விடுதலை இல்லை. 
*

கட்டுரையாளர்:
குருசாமி மயில்வாகனன்,
ஆய்வாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்,
ஒப்பனைக் கூத்து, கப்பலோட்டிய கதை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
சிவகங்கை.

*
ஒரு கோப்பை 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும்: 

பெண் விடுதலை குறித்த 
மார்க்சிய உரையாடல்கள். 

லெனின் - கிளாரா ஜெட்கின். 

தொகுப்பாசிரியர்:
மகாராசன். 

யாப்பு வெளியீடு, சென்னை.
மறுபதிப்பு, சனவரி 2022.
விலை: உரூ 150/-
10% கழிவு விலையில்: 135/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
+919080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக