வெள்ளி, 24 டிசம்பர், 2021

தமிழ் வேளாண் சமூகம் பற்றிய புதிய ஆய்வுத் தடத்திலான நூல் : இளஞ்சென்னியன்.


தமிழ் மரபின் வழித் தடத்தில் வேளாண் சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியல் சித்திரத்தை உருப்படுத்திக் காட்டுகிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.

வேளாண் சமூகம் எனும் பெருங்குழுமத்தில் முதன்மைச் சமூகமாகவும், இன்று வரை தமிழ் வேளாண் மரபின் தொழில் நுட்பங்களையும் பண்பாட்டையும் நினைவில் கொண்டுள்ள ஓர் சமூகமாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை முதன்மைப்படுத்திய ஆய்வு நூல் என்ற போதும், மொத்த வேளாண் சமூக மரபு குறித்த உள்ளடக்கத்தைக் கொண்டதே. ஏனெனில், தமிழ் மரபில் தங்கள் அடையாளத்தைத் தேடும் எந்த முயற்சியும் தனித்த ஒன்றாக அமைய முடியாது.

தேவேந்திரகுல வேளாளர்கள் நடத்தும் இன்றைய அரசியல் அடையாளப் போராட்டத்தினைப் பண்பாட்டு மேலாதிக்கத்தால் அமுக்கப்பட்டே வருகிற நெடிய தமிழ்ச் சமூகத்தின் வேளாண் மரபின் மீட்சிக்கான ஒன்றாகவே காண வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

பல்வேறு சான்றுகளின்வழி இந்திர அடையாளத்தை ஆரிய இந்திரன் - தமிழ் இந்திரன் என வேறுபடுத்திக் காண வேண்டும் என்கிற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகவே எனக்குப் படுகிறது.

வேளாண் சமூகத்தின் உற்பத்திச் சடங்குகளின்வழி வேளாண் சமூகத்தைப் புரிந்து கொளளவும், பல்வேறு சமய மரபில் வேளாண் சமூகத்தின் தடத்தினைக்  கண்டடையவும் வேண்டும் என்கிற முயற்சி மேலும் மேலும் ஆய்வு செய்வதற்கு உரியது. 

மொத்தத்தில், வேளாண் சமூகம் குறித்து இதுவரை ஆய்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர் பெருமக்களின் வழித்தடத்தில் புதிய கருதுகோளை முன்வைத்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.

தேவேந்திரகுல வேளாளர்கள் நடத்தும் போராட்டம் வெறும் அடையாளப் போராட்டமாக நின்று போதலில் பொருளில்லை. அது, மொத்தச் சமூகமும் அடுத்தகட்ட சமூகமாக மாறும் போராட்டத் தொடர்ச்சியைக் கொண்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தி முடிகிறது.

நூலின் இறுதிப் பகுதி தமிழர்களின் நீர்மேலாண்மை அறிவையும், இன்றைக்கு ஏற்பட்டுள்ள தமிழக நீர்மேலாண்மை அவலத்தையும் அதற்கான காரணிகளையும் பதிவு செய்கிறது.

தமிழ் இனத்தின் பல்வேறு குடிவழிச் சாதிகளின் வரலாறும் சமூக அரசியல் பொருளியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இனவரைவியல் ஆய்வு முறைமை, சமூகத்தின் புனைவைகளையும் மேட்டிமையையும் புறந்தள்ளிய ஓர் ஆய்வு வெளியாக உள்ளது. அது சமூகத்தின் மெய் இருப்பை வெளிப்படுத்துவதோடு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அரசியல் வெளியையும் அடையாளம் காட்டும். அது போன்றதொரு நூலே இந்த வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூல்.

என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய - மாறுபடக்கூடிய பல்வேறு கருத்துக்களையும் கருதுகோளையும் முன்வைத்துள்ள தோழர் ஏர் மகாராசன் அவர்களின் பேருழைப்பிலும் வேட்கையிலும் அறிவுத்தேடலிலும் உருப்பெற்றுள்ள தமிழ் வேளாண் மரபினர் குறித்த இந்நூல், தமிழர்கள் குறிப்பாக வேளாண் சமூகம் குறித்துச் சிந்திப்போர் கற்க வேண்டியதொரு நூல் ஆகும்.

*

கட்டுரையாளர்:
இளஞ்சென்னியன்
மருதுபாண்டியர்கள்:
பேரறிக்கையும் அதன் அரசியலும் எனும் நூலின் தொகுப்பாசிரியர்.

சமூகச் செயல்பாட்டாளர்,
தமிழ்த் தேசிய உணர்வாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழியச் சிந்தனைக் களத்தின் ஒருங்கிணைப்பாளர்.
சிவகங்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக