ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஆழி முகம் : மகாராசன்


அன்று வரை
அழகாய்த்தான் இருந்தது 
கடல். 

உயிர்களைத் தின்று முடிக்கக் கரையேறித் துடித்தன அலைகள். 

கடல் நீர் கரிக்குமென்றே 
கரை தாண்டி ஊரைக் குடித்து 
உள்ளே போனது ஓலம். 

பிணவாடைக் காற்றில் 
நிலத்தில் பரவின 
ஒப்பாரி மகரந்தங்கள். 

கதறலாய்
எழும்பிய உயிர்கள் 
மணலுக்குள் புதைந்தே போயின. 

உயிர்களைத் தின்று முடித்த 
ஏப்பச் சிவப்பு 
விழிகளில் தெரிந்தது
நீலத்திடம். 

ஆழி சூழ் உலகு 
ஆழிகொல் உலகாய் 
ஆகிப் போனதும் அன்றுதான். 

மடி விரித்துக் கிடக்கும் 
தாய் முகத்துக் கோபமும் அதுதான்.
*
ஏர் மகாராசன்
#சொல்நிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக