புதன், 8 டிசம்பர், 2021

செம்மூதாய் : மகாராசன்

 


ஆழிப் பெருக்கின் 
ஊழி அலைகள்
வாரிச் சுருட்டிய பின்னாலும்
மிச்சமெனப் பிழைத்த மூதாதைகளின்
விதைப் பேச்சுகள் யாவும்
கால மழையின் 
ஈரத்தில் நனைந்து
ஒலியும் வரியுமாய்
முளை விட்டிருந்தன. 

மெல்ல மெல்லப் 
பரவிய வேர்களால்
மண்ணுள் நுழைந்து இறுகப்பற்றி
திக்குகளின் முகம் பார்த்தபடி
தனித்திருந்தன 
திணை மரங்கள். 

கிளைகளெனச் சிலிர்த்திருக்கும்
வழக்குச் சொல்லிலை 
இணுகி இணுகிக்
கூடொன்றை வேய்ந்திருந்தது
இனப் பறவையொன்று. 

கூட்டடையில் பொறித்த குஞ்சுகள் யாவும்
சிறகுகளைத் தட்டிக்கொண்டு
இரை தேடிப் பறந்தன. 

ஐநிலத்தின் வனமெங்கும்
பறவையின் எச்சங்கள். 

பேரினத்தின் விழுதுகள்
எச்சங்களின் விதைகளில்
துளிர்விட்டுக் கிடந்தன. 

பச்சைய வனப்பேறி
செந்நிறத்தில் பூத்துக் காய்த்திருக்கிறது
தமிழ்.

ஏர் மகாராசன்

5 கருத்துகள்: