வியாழன், 14 செப்டம்பர், 2023

பெருத்த வலி தந்திருக்கும் நூல் - எழுத்தாளர் அய்யனார் ஈடாடி



முனைவர் ஏர் மகாராசன்  அவர்கள் தற்போது எழுதி வெளிவந்த நூலான 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல் கிடைத்தது.

மாணவர்கள் நலனில் அக்கறையும் பெரும் பண்பும் பேரன்பும் கொண்ட இவரது மனம் நொறுங்கியிருக்கிறது; பெருத்த  வலி கொடுத்திருக்கிறது;

உலுக்கியிருக்கிறது; உறக்கமில்லாத இரவுகளின் மடியிலே வெடித்திருக்கிறது. இதன் வெளிப்பாடே இந்நூல்.


புதிய பாடத்திட்டத்தால் மாணவர்கள் உள்ளாகும் சிக்கலையும் தடுமாற்றத்தையும் உளவியலையும் அடர்த்தியாக உயர்த்திப் பிடித்திருக்கிறார். தமிழக அரசும் கல்வித்துறையும் ஆட்சியாளர்களும் மாணவர்கள் நலனில் தடுமாறுகிறது என்பதை ஆங்காங்கே காண்பித்திருக்கிறார்.


வாக்கு வங்கி அரசியலுக்காக ஆதிக்கவாதிகளின்/ஆதிக்க சாதிகளின் அநீதிக்குத் துணைபோகாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி, உடைமை, உரிமை பாதுகாப்பதில் அரசு துணை நிற்க வேண்டும் என்கிறார்.


நாங்குநேரியில் நடந்த சாதி ஆணவத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனத்தைவிட மோசமானது. சாதிய அடாவடி அட்டூழியத்தை ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் துணிச்சலாகக் கண்டிக்கவில்லை. 

சாதியப் பேராபத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அரசும் பொதுச்சமூகம் கடந்து போகிறது என்கிறார்.


கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருளை ஒழிப்பதாக அரசு நாடகமாடுவதையும், அதற்குப் பின்னால் மதுவை மிகப்பெரிய வணிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


ஆதிக்கவாதிகள் எப்போதுமே அட்டவணைப் பிரிவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களையே காலங்காலமாகக் கொடுமைப்படுத்தியும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியும் வருவது வேங்கைவயல், நாங்குநேரி போன்ற சம்பவங்களே உதாரணம் என்கிறார்.


சாதியக் கண்ணோட்டம், சாதிய ஏற்றத் தாழ்வு மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினரிடையே பரவலாகப் புரையோடியும் அழுக்குகளாகவும் படிந்து கிடப்பதை உள்ளம் நொந்தும் வெந்தும் எழுதியிருக்கிறார்.


அறம் சார்ந்த மொழிவாரிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


ஒரு சமூகத்தை மாற்றுவதில் பெரும்பங்காற்றுவது கல்வி ஒன்றே.

கல்வி நிலையங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குப் பொதுச்சமூகத்திற்கும் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடமையுண்டு என்பதனை அன்பு வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.


மாணவர்கள் சமூக உதிரிகளாக உருவாவதற்கு அரசும் ஆட்சியாளர்களும் கல்வித்துறையும்தான் காரணம் என்பதனைத தாண்டி, பெற்றோர்களும் முக்கியக் காரணம் என்கிறார்.


வாய்ப்புள்ளோர் வாங்கி வாசியுங்கள்.


கட்டுரையாளர்:

அய்யனார் ஈடாடி,

எழுத்தாளர் மற்றும் பொறியாளர்,

எனதூர் சரித்திரம், ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி ஆகிய நூல்களின் ஆசிரியர்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,

ஆசிரியர்: மகாராசன்,

முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,

பக்கங்கள்: 72

விலை: உரூ 90/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 

ஆதி பதிப்பகம்

99948 80005.


அஞ்சலில் நூலைப் பெற:

செந்தில் வரதவேல்

90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக