சனி, 23 செப்டம்பர், 2023

ஆசிரியச் சமூகம் வாசிக்க வேண்டிய நூல்: திலகர்


நீண்ட நெடிய நாள்களுக்குப் பின் ஒரே அமர்வில் உட்கார்ந்து வாசித்தது, அண்ணன் ஏர் மகாராசன் படைத்த "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூலாகும்.

சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும், குறிப்பாகச் சமூகத்தை வழிநடத்தும் ஆசிரியர் சமூகம் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு. 

எங்கே தவறுகிறோம்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ் மண்ணில் சாதீயப் படிநிலை ஏன்? 

கல்வியை எப்படி எல்லாம் வணிகமயமாக்கியுள்ளோம்? அரசுகள் வீதி வீதிக்கு மதுக் கடைகளைத் திறந்து வைத்து விற்றுக் கொண்டு, யாரை ஏமாற்ற போதைப் பொருளை ஒழிக்கிறோம் என வெற்று விளம்பரம் செய்கிறது? 

மாணவர் - ஆசிரியர்கள் என்ற மரியாதையை, பயத்தைப் போக்கியது யார்? 

தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் கற்பதன் மூலம் அறம் சார்ந்த வாழ்வு கற்றுக் கொள்வர் என அதனை நீக்கியது யார்? 

மாணவர்கள் கல்வி கற்று முடித்த உடன், கண்டிப்பாகப் பணம் சம்பாத்தித்துக் கொடுக்கும் ஏடிஎம் ஆக வேண்டும் என வாஞ்சிக்கும் பெற்றோர், அறம் சார்ந்த கல்வி முறை இல்லாமல் எப்படிச் சாதியை, தான்தோன்றித் தனமான வாழ்வை (சுயநலமான) வாழ இயலும்? 

அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் அதிகரிக்க யாரைக் குற்றம் சொல்லுவீர்கள்? 

மாணவர்களை நல் வழிப்படுத்துவதில் பொது சமூகத்தின் பங்கு என்ன? 

அனைவருக்குமான தலைவர் அம்பேத்கரை ஒரு சாரார்க்கு என ஒதுக்கியது ஏன்? அது யார்?

ஆசிரியர் மாணவர்களிடம் கெஞ்சும் நிலையை ஏற்படுத்தியது யார்? என எண்ணற்ற கேள்விகளையும் நம்முள்ளே கடத்தி, இவற்றிற்கான விடையை எப்படி? எப்போது பேசு பொருளாக மாற்றி விடை காண இருக்கிறோம்? 

நாங்குநேரி சம்பவத்தைக் கடந்து செல்லாமல், எதிர் வரும் - கல்வி கற்க வரும் சமூகத்தை எப்படிப் பாதுகாக்க இருக்கிறோம்? என்ற கேள்வியோடு, இறுதியாக, சாதீயக் கண்ணோட்டத்தை ஒழிக்க சமூகம் முன் வராமல், வெறும் சட்டங்களை இயற்றுவதோ - ஏழை / ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனிக் கல்வி நிலையங்கள் என்பதோ மட்டும் தீர்வு ஆகாது. மக்களின் பொது நிலையை மாற்ற, மதுக் கடைகளை மூடுவோம். புதிய சமூகம் படைப்போம்.

கட்டுரையாளர்:
முனைவர் செ.இரா.திலகர்,
இணைப் பேராசிரியர்,
கற்பகம் பொறியல் கல்லூரி,
சென்னை.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக