சனி, 23 செப்டம்பர், 2023

மாணவர்கள் பிம்பச் சிறையிலிருந்து விடுபட உதவும் திறவுகோல் நூல்: அறிவழகன்


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸைவிட அதிவேகமாகவே தொற்றிப் பரவிவருகிறது சாதியம். குறியீடுகளின் ஊடே, வன்மத்தில் ஊடாடி வரும் வன்முறையின் கோரமுகங்கள் எங்கிருந்து ஊற்றுக்கண்ணாகச் சுரக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கள ஆய்வு செய்தும், தமது ஆசிரியர் பணியில் கிடைத்த மாணவர்களின் உளவியல் சிக்கல்களையும் ஆய்வு செய்தும், சமூகத்தில் மாணவர்களின் விட்டேத்தி நிலைகளையும் பல விடயங்களையும் நம்மிடம் தந்து விசனப்படுத்தி விடுகிறது மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல்.

தக்க நேரத்தில் தக்க ஆதாரங்களையும், பள்ளிகளின் வகுப்பறைகளில் படிந்தபடி கிடக்கும் சாதியவெறியில், அறமற்றவர்களால் விரையம் செய்யபட்ட அப்பாவி மாணவர்களின் ரத்தம் படிந்த புத்தகங்களையும் நம்மிடம் நிழலாடச் செய்கிறார் ஆசிரியர்.

நாங்குநேரியில் வாழ்ந்த தலித் மக்களின் விவசாய நிலங்கள் தரிசாக்கப்பட்டு இதர சமூகத்திடம் கைமாற்றப்பட்ட தாட்டிய அரசியலைத் துல்லியமாகவும் ஆதாரத்துடனும் காட்டிச் செல்கிறார்.

சாலைகள் தோறும் சாதியக் குறியீடுகள், திரைபடங்களின் பஞ்ச் டயலாக் பேனர்கள், மாணவர்கள் கையில் கயிறு அரசியல் என்று பல நோக்கில் மாணவர்களைக் களிமண் பொம்மைகளாக வனையப்படும் ஒவ்வொன்றையும் எவ்விதமான சமரசமும் அற்று இந்நூல் பேசுகிறது. சமூக அக்கறையோடு, அதைகாட்டிலும் காலத்தையறிந்து வெளிவந்தது என்பதற்காகவும் கூடுதல் பாராட்டுகள்.

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். இந்நூல் பள்ளிகள் தோறும் மாணவர்கள் வாசித்தால் பிம்பச் சிறையில் இருந்து விடுபடவும் இது திறவுகோலாகும் என்பது உண்மை.

வாழ்க ஆசிரியர் ஏர் மகாராசன்.

நன்றியும் பேரன்பும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அறிவழகன்,
கவிஞர் மற்றும் சிறுகதை ஆசிரியர்.

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக