செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எழுத்துச் செயல்பாட்டுக்கான ஆற்றல் ஆசிரியர் விருதும் ஏற்புரையும் - மகாராசன்



கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என, கல்விப் புலம் சார்ந்த ஆசிரியப் பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செய்துகொண்டிருக்கும் எண்ணற்ற ஆசிரியர்கள் நம் சமூகத்தில் நிரம்ப இருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவர் அவ்வளவுதான்.

எமது ஆசிரியப் பணிக்கு மாணவர்களின் பேரன்புதான் மிகப்பெரும் பரிசு. அவர்கள் கண்களில் வழியும் ஒளியும் உள்ளத்தில் வைத்திருக்கும் பெருமதிப்பும்தான் உயரிய விருதுகள். 

ஓர் ஆசிரியராய் கல்லூரிச் சூழலிலும், பல்கலைக் கழகச் சூழலிலும், பள்ளிச் சூழலிலும் எமது கற்பித்தல் செயல்பாட்டை மன நிறைவோடுதான் செய்துகொண்டிருக்கிறேன். கற்பித்தல் செயல்பாட்டோடு, சமூகம், பண்பாடு, மொழி, படைப்பு சார்ந்த எழுத்துச் செயல்பாடுகளையும் மேற்கொண்டுதான் வருகிறேன். 

எனக்குச் சரியென்றும் அறமென்றும் பட்டிருப்பதைத்தான் என் போக்கில் எனது பாணியில் செய்துகொண்டிருக்கிறேன். இவற்றில் எந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் எமக்கு இதுவரை இருந்ததில்லை; இனிமேலும் வரப்போவதில்லை. 

எமது செயல்பாடுகளுக்காக எந்த விருதுகளையும் விளம்பரங்களையும் விரும்புவதோ, ஆட்படுவதோ, விண்ணப்பம் செய்வதோ கிடையாது. ஏனெனில், நான் எனது சமூகக் கடமையை மட்டுமே செய்வதாக உணர்கிறேன். 

ஆயினும், எனது கல்விச் செயல்பாடுகளையும் எழுத்துச் செயல்பாடுகளையும் எங்கோ ஒரு மூலையிலிருந்தும் கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர்களும் அமைப்புகளும் அவர்களாக முன்வந்தும் முன்மொழிந்தும், எம்மை ஊக்குவித்துப் பாராட்டும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம், இன்னும் கூடுதலான பொறுப்பும் கடமையும் வந்து சேர்வதாகவே உணர்ந்து கொள்வேன். எம்மிடமிருந்து இன்னும் கூடுதலாக இந்தச் சமூகம் எதிர்பார்ப்பதாகவே அறிந்து கொள்வேன். 

அந்தவகையில், பைந்தமிழ் வலையொளி அமைப்பும், சென்னை கூத்துப் பட்டறை அமைப்பும் எமது கல்வி மற்றும் எழுத்துச் செயல்பாடுகளைப் பாராட்டி, ஆற்றல் ஆசிரியர் விருதளித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் முன்பாகப் பெறப்பட்ட இவ்விருது எம்மை மகிழ்வித்திருக்கிறது; நெகிழ்வித்திருக்கிறது.

பேரன்பும் பெருமதிப்பும் நிறைந்த ஆசிரியப் பெருமக்களான திரு மகேந்திர பாபு, திரு முனியாண்டி, திரு புலவர் சன்னாசி அய்யா, திரு கவிஞர் மூரா, காரை கிருஷ்ணா, திரு மீனாட்சி சுந்தரம், திரு நாகேந்திரன், திரு முத்துராஜா உள்ளிட்ட பல ஆசிரியப் பெருமக்களும், மதுரை ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் நிகழ்வை உயிர்ப்புடையதாக ஆக்கியிருந்தனர்.

ஆற்றல் ஆசிரியர் விருதளித்து மகிழ்ந்த பைந்தமிழ் வலையொளி மற்றும் சென்னை கூத்துப் பட்டறை அமைப்புகளுக்கும், எமக்கு மட்டுமல்லாது இன்னும் பல ஆசிரியப் பெருமக்களும் விருதளித்துச் சிறப்பித்த நிகழ்வை ஒருங்கிணைத்த மதுரை மாவட்டம், இளமனூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு மகேந்திர பாபு அவர்களுக்கும், மதுரை மாவட்டம், ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு முனியாண்டி அவர்களுக்கும் பேரன்பும் நன்றியும்.

எமது கல்விப் பணியும், எமது எழுத்துகளும் சமூகப் பொறுப்புடையதாகவே இன்னும் இருக்கும். 

சமூகப் பொறுப்பு மிக்கவர்களோடு பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். இன்று நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவிலும் அதை நிரம்பப் பெற்றிருக்கிறேன். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

ஏர் மகாராசன் 

01.09.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக