வெள்ளி, 13 ஜூலை, 2018

புதிய தமிழ்ப் பாடத்திட்டம்: கற்றல் கற்பித்தல் சார்ந்த எதிர்பார்ப்புகள் :- மகாராசன்

புதியதாக வடிவமைக்கப்பட்ட 11 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக முதுகலை ஆசிரியர்களுக்கான கருத்து வளப்பயிற்சி முகாம் மூன்று நாட்களாகத் தேனியில் நடைபெற்று வந்தது. இந்த மூன்று நாட்களும் கருத்தாளராகப் பங்கேற்று, புதிய பாடத்திட்டத்தின் நோக்கம் உள்ளடக்கம் குறித்து மிக விரிவாக ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று நாட்களும் ஊக்கத்தோடும் தேடலோடும் பல பொருண்மைகள் குறித்துப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

புதிய பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் அதன் தரத்தையும் நோக்கத்தையும் உணர்ந்தும் புரிந்தும் முழுமையாகவே ஏற்றுக் கொண்டு வரவேற்கிறார்கள். அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும் தயாராகவே இருக்கிறார்கள். அதே வேளையில், புதிய பாடத்திட்டத்தைக் கற்றல் கற்பித்தல் நிலையில் இருக்கக் கூடிய இடர்ப்பாடுகளையும் அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளையும் குறித்து நிறையப் பேசினார்கள். தங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினார்கள். அவை வருமாறு:

1. பாடப்பொருண்மை 10 இல் இருந்து 7 அல் 8 ஆகக் குறைத்தல்.
2. தமிழ்ப் பாடத்திற்கும் வாரத்திற்கு 7 பாடவேளைகள் வழங்குதல்.
3. கற்றல் திறனில் பின்தங்கிய மாணவர்களுக்கும் அடைவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் வினாத்தாள் வினாப் பகுப்பு முறையை மீண்டும் கொண்டு வருதல்.
4. திருக்குறள் பாக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
5. கற்றலுக்கு உகந்த வகுப்பறை மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
6. தேர்ச்சி விழுக்காடு தொடர்பான நெருக்கடிகளைக் கைவிடுதல்.
7. பருவ முறைத் தேர்வுகளைக் கொண்டு வருதல்.
8. ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்தல்.
9. கற்றல் கற்பித்தல் தவிர, இதரப் பணிகளுக்கு ஆசிரியர்களைப் பணிப்பதைக் கைவிடுதல்.
10. 11 ஆம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வைக் கைவிடுதல்.
11. தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் பொருண்மை அளவுகளைக் குறைத்தல்.
12. தாள் ஒன்று, தாள் இரண்டு என்கிற பழைய முறைகளையே கொண்டு வருதல் - தமிழில் கற்றல் அடைவுகளை இலகுவாக்கவும் மொழியாளுமைத் திறன்கள் வளரவும் வாய்ப்பு ஏற்படும். ஆகவே, தாள் ஒன்று என்கிற நிலை மாற்றி, தாள் ஒன்று இரண்டு எனக் கொண்டு வருதல்.
13. 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி மதிப்பெண் குறைவிருந்தாலும், மாணவர் கட்டாயத் தேர்ச்சியாகி 12 ஆம் வகுப்பிற்கு அனுமதிக்கும் போக்கைக் கைவிடுதல்.
14. அரையாண்டுத் தேர்வுக்கே முழுப் பாடப்பகுதிகளையும் வைக்காமல், முழு ஆண்டுத் தேர்வுக்கே முழுமையான பாடப் பகுதிகள் என வரையறுக்க வேண்டும்.
15. உயர் கல்வியையும் தமிழில் படிக்கின்ற வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.
16. தமிழ் வழியில் பயின்றோருக்கே அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
17. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறை திணிக்கப்படுவதைக் கைவிட வேண்டும்.
18. மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைக் கைவிட வேண்டும்.
19. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயில்வோருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் தனிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
20. புதிய பாடத்திட்டம் தொடர்பாக மாணவர் ஆசிரியர் பெற்றோர் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

மேற்குறித்த கோரிக்கைகளைப் பள்ளிக்கல்வித் துறை கவனத்துடன் நிறைவேற்ற ஆவன செய்திட வேண்டும். இக்கோரிக்கைகள் ஆசிரியர் தொடர்பானது மட்டுமல்ல; இளம் தலைமுறை தொடர்பானது.

தமிழில் மரபும் நவீனமும் : புதிய தமிழ்ப் பாடத்தை முன்வைத்து :- மகாராசன்

தமிழ்ப் பாடத்திட்ட உருவாக்கத்திற்குப் பின்னுள்ள உயரிய நோக்கும் இலக்கும் ஒவ்வொரு பாடப்பகுதியிலும் பொதிந்து கிடக்கின்றன. தமிழின் மரபை நவீன காலத்திற்கும், நவீனத்தின் பன்முகத்தை மரபோடும் இணைத்திருக்கும் பாங்கு மிகப் பொருத்தமாய் வடிவமைந்திருக்கிறது.

இதுவரையிலும் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த அல்லது படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இனி மொழிப் பாடத்தைத் தமிழில் கற்பிக்கக் கூடிய அல்லது தமிழில் படிக்கக் கூடிய புதிய கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது புதிய பாடத்திட்டம்.

தமிழை இயல், இசை, நாடகம் என முத்தமிழாக மட்டுமே சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இன்னும் கூடுதலாக அறிவியல் தமிழாகவும் ஊடகத் தமிழாகவும் விரிவுபடுத்தி, தமிழை அய்ந் தமிழாகச் செழுமைப்படுத்தி வளப்படுத்தியிருக்கிறது புதிய பாடத்திட்டம்.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, ஊடகம், பண்பாடு, கல்வி என விரிவு பெறுகிற உயர் கல்வியின் அறிவெல்லாம் தமிழின் மரபிலும் காணக் கிடைக்கிறது என்பதை உரத்துச் சொல்கின்ற பாடப் பகுதிகள் நிறைய உள்ளன. அது மட்டுமல்லாமல் மரபிலிருந்து இன்று வரைக்குமான தமிழின் கவிதை மற்றும் புனைவுகளின் வழியாகத் தமிழை நவீனத்திலும் மரபிலும் இரு வேறு தன்மைகளிலும் உயிர்ப்புடன் காண முடிகின்றது.

தமிழால் முடியுமா? என்பதற்கு, தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர் பாடத்திட்டக் குழுவினர். தமிழ்ப் பாடப்பகுதிகளின் பொருண்மைகள் யாவும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற எல்லைகளைக் கொண்டிருப்பது சிறப்பாக இருகிறது.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாடப்பகுதிகளைப் படிக்கப் போகிற இளம் தலைமுறையால் தமிழும் தமிழ் இனமும் தமிழ்நாடும் தலை நிமிரும் என்கிற நம்பிக்கையைப் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கியுள்ளன.

தமிழ்ப் பாடப் பகுதிகள் ஈழத்தின் வலி மிகுந்த பக்கங்களையும் அதனதன் குரல் வழியாகவும் பதிவு செய்துள்ளன. ஈழப் படைப்பாளிகள் பலரின் படைப்புகள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களைக் குறித்த பதிவுகள் கவிதைகள் வழியாகவும் கட்டுரைகள், கதைகள் வழியாகவும் பதிவாகியுள்ளன.

தமிழின் இருப்பையும் அதன் அடையாளத்தையும் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாக உயர்வான இடத்திற்குக் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்கு உரியது.

தமிழ்ப் பாடத்திட்டம் தொடர்பாக சிற்சில விமர்சனங்கள் இருந்தாலும், வரவேற்க வேண்டிய மற்றும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெருமுயற்சியை நாம் கொண்டாடத்தான் வேண்டும். ஆம், கல்வியாய்ப் பரிணமித்திருக்கும் தமிழைக் கொண்டாடத்தான் வேண்டும். பாடத்திட்டக் குழுவினருக்கும் இதனை ஒருங்கிணைத்த திருமிகு உதயச்சந்திரன் அவர்களுக்கும் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் அனைவருக்கும்.

வியாழன், 12 ஜூலை, 2018

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை : த. சத்தியராசு

“எந்த ஒரு படைப்பாளியும், ஒருபடைப்பில் அடைய வேண்டிய உச்சநிலையை நோக்கிய தேடலில்ஈடுபடாமல் இருக்க இயலாது.அத்தகைய அவர்களின் தேடல்கள்,பிற படைப்பாளியைப் பற்றிக்கூறுகிற கூற்றுக்கள், இலக்கியம்பற்றிய ஆழமான கணிப்புக்களாகஅமைந்து கிடக்கின்றன” என்றுக.பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார். அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறது. இருப்பினும் சிற்சில முரண்களும், பிழைகளும் இல்லாமல் இல்லை. இது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறது. தொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும். அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.

சொல் நிலம் – உருவாக்கம்

பண்டித, எளிய நடைகளில் இருப்பது, உவமை மிகுதியாக இடம்பெறுவது, இருண்மை நிலையில் இருப்பது, தொன்மம், புராணத்தொடர்பு, சமகாலம் – அரசியல் முறை, சமூகம், வாழ்க்கைமுறை எனப் பல்வேறு முகங்களைக் காட்டுவதுதான் கவிதை எனப் பெரும்பான்மையானோர் கருதுவர். அப்படிப்பட்ட ஓர் இலக்கியப் பிரதியாகத்தான் சொல் நிலமும் அமைந்திருக்கிறது.

     இப்பிரதி தொல்காப்பியம், சங்கப்பனுவல்கள் போன்ற வாசிப்புத் தளத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் உருவாகியிருக்கலாம். இதனை இக்கவிதைப் பிரதியும், கவிஞருடனான உரையாடலும் உணர்த்தின.

மதிப்பீட்டு முகங்கள்

ஒரு பனுவலின் மதிப்பீடானது அதனை வாசிக்கும் வாசகனின் வாசிப்புக்கு ஏற்ப மாறுபடும். ஒரு கவிதையின் தன்மை நுகர்வோருக்கு, அவர்தம் புலன்வழிக் கிடைக்கும் காட்சிகள் படிமங்களாக விரியும். “கவிதைகளில் அறிவுப்பூர்வமானஎண்ணங்களைச் சிந்தனைஅலைகளாக வெளிப்படுத்துதல்ஒரு முறை. இதற்கு மாறாக,கண்ணால் கண்டும், காதால்கேட்டும், நாவால் சுவைத்தும்,மூக்கால் முகர்ந்தும், உடலால்தீண்டியும் அனுபவிக்கப்படும்ஐம்புல உணர்வுகளை உள்ளத்தேஎழுப்புதல் அல்லது உணரச்செய்தல் மற்றொரு முறை.புலனுணர்வுகளுக்குவிருந்தளிக்கும் முறையில்கவிதையைப் படைக்கும்இத்தன்மையையே புலனுகர்வுத்தன்மை (Sensuousness) என்கிறோம்”(பா.ஆனந்தகுமார்,2003:33). இப்படிப்பட்ட அடையாளம் சொல் நிலம் தொகுப்பில் காணப்படுகிறது.   

குணம் என்பதை ‘நற்கருத்து, சொற்சுருக்கம், வடிவமைப்பு, எடுத்துரைப்பியல், நடையழகு’ போன்ற கவித்திறன்களை உள்ளடக்கியவை என்பதாகப் புரிந்துகொள்ளலாம். குற்றம் ‘சொற்பிழை, கருத்துப்பிழை, மொழிப்பிழை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், குணம் மிகுதியாக அமைந்திருப்பதையே சிறந்த கவிதை என்பர்.

     “நல்ல கவிதை என்பதுகுற்றங்கள் (Dosha) இல்லாதது,குணங்கள் (Guna) நிறைந்தது;அணிகள் அமைந்தது (Alankara) என்று வாமனர் கருதுகிறார்.குணங்களைச் சேர்த்து குற்றங்கள்இல்லாமல் செய்யுளையாப்பதற்காக, கவிஞன்இரண்டையும் நன்றாகஅறிந்திருக்க வேண்டும் என்கிறார்வாமனர். இவை தவிர வெளிப்படப்புலப்படாது மறைந்திருக்கும்குற்றங்கள் (சூட்சும தோஷங்கள்)பற்றிய அறிவும் கவிஞனுக்குவேண்டும் என்று வற்புறுத்துகிறார்வாமனர்” (கி.இராசா, 2016:99). இக்கருத்தின் அடிப்படையில் இக்கவிதைத் தொகுப்பை அணுகிப் பார்க்கும்பொழுது குணம் – குற்றம் ஆகிய இரண்டு தன்மைகளையும் இனங்காண முடிகின்றது. இவ்வகையில் இந்தத் தொகுப்பை, கவித்திறம் (குணம்), போலி(குற்றம்) என்ற இருவகைகளில் மதிப்பிடலாம்.

கவித்திறம் (குணம்)

மேலே சுட்டிக்காட்டிய குணத்தின் வரையறைகள் இங்கு மதிப்பீட்டுத் தன்மைகளாக அமையவில்லை. மாறாக, கவித்திறம் சார்ந்து கவிஞனின் படைப்பாளுமையை, சமுதாயச் சிக்கலை எடுத்துரைக்கும் முறை, நடை, மனிதம், கவிதை – விளக்கம், மொழித்தூய்மை காத்தல், தலைப்பிடல், பாலுணர்வுக் கருத்தாக்கம், ஒரு சொல் பலபொருள், வரலாற்றுணர்வு எனும் வகைகளில் இங்கு இனம் காணப்படுகின்றன.

சமுதாயச் சிக்கலை எடுத்துரைக்கும் முறை

இக்கவிதைகள் முழுமையும் மனிதன், மனிதப்பண்பு, அடக்குமுறை, உலகத்தின் சுருக்கம் என அமைந்துள்ளன. இப்பார்வை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைச் சிந்தனை உள்ளோரிடத்து மட்டுமே கூடுதலாக அமைந்திருக்கும். அதனை, கெடுநகர் எனும் தலைப்பில் எழுதப்பெற்ற கவிதையின் சில வரிகள் சுட்டிக்காட்டும். அவ்வரிகள் வருமாறு:

           கொளுத்தவர் வலுக்கவும்

இளைத்தவர் இறக்கவுமான

நிகழ்வெளியாய்ச்

சுருங்கிப் போனது

உலகம்

     இவ்வரிகள் உலகத்தில் பொருளாதாரம் ஒரு பகுதியினருக்கு மட்டுமே சேருகிறது என்கின்றன. இதனால் உலகம் நிகழ்வெளியாய்ச் சுருங்கிப் போய்விட்டது என்கிறார் கவிஞர். பல்லாயிரம் ஆண்டு வரலாறு தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்டு. இச்சமுதாயத்திற்காக எழுதப்பெற்ற இலக்கியங்கள் இக்கவிஞரின் பார்வையோடு ஒத்தன. இது இக்கவிஞரையும் அவ்வரிசையிலே சிந்திக்க வைத்திருக்கிறது. அவ்வாறெனில் இன்னும் சமுதாயத்தில் சிக்கல் தீரவில்லை எனலாம். தீர்வை நோக்கிய நகர்வு கவிதைகளில் அமைந்திருக்கலாம்.

நடை

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு நடையைக் கையாள்வர். அது அக்கவிஞரை அடையாளப்படுத்தும். அழகிய நடை, சாதாரண நடை, கடின நடை என நடைகள் இருப்பதாக கி.இராசா (2016:98) குறிப்பிடுகிறார். இந்த மூன்று நடைகளையும் இக்கவிஞர் ஆண்டிருக்கிறார் என்பதை அறியமுடிகின்றது. வட்டார வழக்குகளை மிகுதியாக யாரும் பயன்படுத்துவது கிடையாது. ஆனால், இக்கவிதைக்குள் சில இடங்களில் வட்டார வழக்கை அறிய முடிகின்றது. சான்றாக,



ஒனக்காகத் தானப்பா

உசுர வச்சுருக்கேன்னு

சொல்லும் போதெல்லாம்,

ஓயாம

இதயே சொல்லாதவென

ஓங்கி நான் கத்தும் போது,

பொசுக்கென அழுது

பொலபொலன்னு

சிந்தும் கண்ணீரெல்லாம்

பொய்யென நினைத்தது

விடலை மனம்       (அம்மா)

எனும் வரிகளைக் காட்டலாம். இவ்வரிகள் அனைத்தும் சிவகங்கை வட்டார மொழியை எடுத்துக்காட்டுவன. இதில்தான் கவிஞரின் முகமும் புதைந்திருக்கிறது. இதுதான் யார்? எங்கிருந்து? கவிதைகள் எழுதுகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டிவிடும் தன்மையுடையது. இது நீரோட்டமான நடையையும் வெளிக்காட்டுகிறது. இவ்வழக்காற்று மொழிகளில்தான் ஒரு மொழிக்கான அடையாளத்தைக் காணமுடிகின்றது. அத்தகு நிலையில் அக்கவிதைத் தொகுப்புக்கான சிறப்பும் கூடுகிறது. ஆங்காங்கு முரண் நடையையும் கவிதைக்குள் காணமுடிகின்றது.

     மனித

     நிழல் போர்த்திய

     நாடுதான்

     வெயிலில்

     வெந்து சாகிறது.



     எட்டிய

     காட்டுக்குள்ளிருக்கும்

     மரங்களும்

     பூக்களும்

     இப்போது

     சிரித்துக் கொண்டிருக்கின்றன       (நிழல் வானம்)

இக்விதை வரிகளில் காணலாகும் நிழல் = வெயில், சிரிப்பு = சிரிப்பின்மை; காடு = நாடு, மரம், பூ= மனிதர் ஆகியன முரண் கருத்துக்களைத் தாங்கியவை. அதாவது,

     நிழல் + சிரிப்பு = காடு è மரம், பூ

வெயில் + சிரிப்பின்மை = நாடு è மனிதர்

எனும் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதைக் கூறலாம். இவ்வாறு அணுகிப் பார்க்கக் கூடிய தன்மைகள் மிகுதி.

மனிதம்

மனிதனின் நற்பண்பைக் குறிப்பது மனிதம். இதை மனிதர்களிடத்தில் தேடிப் பார்க்கின்ற கவிதைகளையும் காணமுடிகின்றது. தமிழகச் சூழல்கள் மட்டுமின்றி உலகச் சூழல்களே மனிதம் இன்றிக் காணப்படுகின்றன என்பதைப் பல கவிதைகள் வெளிப்படுத்தியுள்ளன.  சான்றாக,

     சுள்ளி அடுக்குகளாய்

பெருங்குழிக்குள்

     மனிதங்களை அடுக்கிச்

     சாவை மூட்டிச் சென்றது

கடல்.                 (அலை நிலத்துஅழுகை)

விழுந்திருக்கும் துணியில்

விழுந்த காசுகள்

சிதறிய கோலங்களாய்க்

கிடந்ததில் தெரிந்தன

மனித முகங்கள்

குழல் தடவிய விரல்கள்

காசு முகங்களைத்

தடவுகையில் தெரிந்தன

மனிதர்களின் நிறங்கள்      (அகக்கண்ணர்கள்)

அதிகாரம்

இந்த முறையும்

மனிதத்தைத்

தின்று விட்டது           (இதுவும் ஓர்ஆணவப் படுகொலை)

     இக்கவிதை வரிகள் பல்வேறு சூழல்களில் மனிதத்தைத் தேடும் தன்மையை வெளிக்காட்டுகின்றன. இப்படிப்பட்ட முரண்சிந்தையோடு மனிதன் வாழ்வதற்கு, அவன் போர்த்திக் கொண்ட சமயம், சாதி, இனம் தன்மைகளைக் காரணம் காட்டலாமா? காட்டலாம். இவை மூன்றும் மனித சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு நடத்தேறி வருகின்றன. இதனை வரலாற்றுப் படிப்பினைகள் நமக்குக் காட்டிக் கொண்டேதான் இருக்கின்றன. அத்தகு நீ்ட்சியில் இக்கவிஞரும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கவிதை – விளக்கம்

கவிதையின் வடிவம் என்ன? எளிமை, கடினம், இருண்மை, உவமை எனப் பல வடிவங்களைக் காட்டுவர். கவிதைக்கான பண்பு என்ன என்றால் விளங்கக் கூடாத தன்மையில் அமைந்திருத்தல், எளிதில் புரிதலைத் தருவது, வட்டார வழக்கில் அமைந்திருப்பது எனக் காட்டுவர். இப்படிப் பல்வேறு கருத்தியல்கள் இன்று நிலவுகின்றன. இக்கவிதைத் தொகுப்புக்குள் கவிதைக்கான விளக்கங்கள் சில முன்வைக்கப் பெற்றுள்ளன. அவை வருமாறு:

           நனவிலும் கனவிலும்

           பாடாய்ப் படுத்தும்

           நினைவுகள்

           இப்படியான

           கவிதைகளில் தானே

           செழித்து நிற்கின்றன. (கூதிர்காலம்)

            கவித்தனம் காட்டவே

           எழுதி எழுதித் தீர்கின்றன

           சொற்கள்                 (மனங்கொத்தி)

மொழித்தூய்மை காத்தல்

இலக்கியப் புலவனாக இருந்தாலும், இலக்கணப் புலவனாக இருந்தாலும் காலந்தோறும் மொழித்திருத்தத்தையும் மொழித்தூய்மை காத்தலையும் செய்து வந்திருக்கின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. அதனால்தான் நமக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில்,

     “வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ

     யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”  (தொல்.சொல்.401)

     “சிதைந்தன வரினு மியைந்தனவரையார்”  (தொல்.சொல்.402)

     “கடிசொல் இல்லை காலத்துப்படினே”   (தொல்.சொல்.452)

என்ற கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் இக்கவிதைத் தொகுப்பும் அமைந்துள்ளது. குருதி என்பது தூய சொல். அது ரத்தம் எனது வழங்கப்பட்டது. அதனை இக்கவிஞர் ‘அரத்தம்’ (ப.51) என்ற சொல்லாடலால் தூய்மைப்படுத்துகிறார். தேவநேயப் பாவாணர் கூறுவார் பிற மொழியாளர்களின் பெயர்களைக்கூட தமிழ் படுத்துங்கள் என்று. அவரே சேக்ஸ்பியர் என்பதைச் சேக்சுபியர், செகப்பியர் என்றெல்லாம் மாற்றி அழைத்திருக்கிறார். இது ஒரு மொழியைக் கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கான வழிமுறையாகும். அதனை இக்கவிஞரும் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை,

     “ஆனந்த ராசுக்கு

     என் அழுகைத் தமிழ்

அஞ்சலி ஆகட்டும்” (அழுகைத்தமிழ்)

எனும் கவிதைவரிகள் அறிவுறுத்தும். இதன் முதல்வரியில்‘ஆனந்த ராசு’ எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ‘ஆனந்த ராஜ்’ என்று அமைதல் வேண்டும். இப்பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது ராசுவாக மாறுகிறது. தமிழ் தவிர்த்த பிற இந்திய மொழிகளில் ‘ச’ ஒலிப்போடு தொடர்புடைய ச2, ஜ1, ஜ2, ஸ, ஸ1, ஷ, க்ஷ ஆகிய எழுத்துக்கள் உண்டு. அவ்வெழுத்துக்களின் வரிவடிவமும் தனித்தனி. ஆனால், தமிழ்மொழியைக் கட்டமைத்த இலக்கண அறிஞர்கள் நேர்த்தியுடன்தான் செயல்பட்டனர் எனக் கருத இடம் தருகின்றது. இதனை,

     பச்சை   – pacchai – c

     மஞ்சள் – manjal – j

     வம்சம்  – vamsam – s

     சட்டம்  – cattam – ca

     சக்கரம்  – chakkaram – ch

எனவரும் சான்றுகள் காட்டும். இதில் ‘ச’ ஒலிப்பு அதனுடன் தொடர்புடைய பிற ஒலிப்புடன்தான் ஒலிக்கப்படுகிறது. இது கற்றலுக்கான எளியமுறை. இதை ஒப்புக்கொண்டு பிறமொழி ஒலிப்பு வடிவத்தை நீக்கி, தூய்மையைக் காத்துள்ளது எனலாம். அவ்வகையில் இக்கவிஞரும் மொழித்தூய்மை காப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் எனலாம்.

தலைப்பிடல்

இத்தொகுப்புநூல் ‘சொல் நிலம்’ எனும் பெயரைத் தாங்கி, 52 உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. கவிதை நூலின் தலைப்பைத் தெரிவு செய்வதிலும், உட்தலைப்பிடலிலும் மெனக்கெட்டுள்ளார் என்பதை முதல்கவிதையின் தலைப்பான‘கருச்சொல்’ காட்டும். இது கவிதையின் முழுச்சாரத்தையும் உள்வாங்கித் தரப்பெற்றுள்ளது என்பது அக்கவிதையை வாசிப்போருக்குப் புலப்படும். இப்படி, ‘கெடுநகர், ஆயுட்காலம், நிழல் வனம், உறவுக் கூடு, துயர்ப் படலம், ஆழி முகம், செந்நெல் மனிதர்கள், பாழ் மனம்’ போன்ற உட்தலைப்புகளை அமைத்துள்ளார். இவரின் உட்தலைப்பிடல் முறையைப் பின்வரும் கருத்துக்கள் தெளிவுபடுத்தும்.

கருத்தைக் கொண்டு தலைப்பிடல்(கருச்சொல், கெடுநகர் போல்வன).அடிச்சொற்கள் தலைப்பாதல்(கருச்சொல், கெடுநகர், பாழ்நிலம் போல்வன).கவிதைவரிச் சொல்லைத் தலைப்பாகத் தருதல்(உறவுக்கூடு, செந்நெல் மனிதர்கள் போல்வன).முதல் கருத்தின் முடிவுச் சொல்லும், இறுதிக் கருத்தின் முதற்சொல்லும் தலைப்பாகுதல்(பாழ்மனம், வலித்தடம் போல்வன).ஒருவரிச் சொற்கள் தலைப்பாதல்(அகக் கண்ணர்கள், கார்காலச் சொற்கள் போல்வன).கவிதைவரிச் சொல்லும் கருத்தும் தலைப்பாதல் (செல்லாக் காசுகளின் ஒப்பாரி, உயிர்க்கூடு போல்வன).வெளிப்பாட்டுத் திறன் தலைப்பாதல் (முரண் செய்யுள்).

பாலுணர்வுக் கருத்தாக்கம்

பிராய்டு கூறுவார் ஒருவரின் ஆழ்மனப் பதிவுகள் ஏதாவதொரு சூழலில் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்பட்ட வரிகள் நிரம்ப உண்டு. அவற்றுள்,

           ஈசல் வயிற்றுப்

           பால் கவுச்சியில்

           கசிந்து கிடந்தது

           நிலத்தாளின் முலைப்பால்    (ஈசப்பால்)

எனும் கவிதை வரிகள் கவிஞரின் உள்ளத்து ஆழ்மனப் பதிவை வெளிக்காட்டுகின்றன. ஓர் ஆணுக்குப் பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு அமையும். அந்த ஈர்ப்பு காமம் சார்ந்து அமையும். அதனையே மேற்கண்ட வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வரிகளில் காணப்படும் ‘பால் கவுச்சியில், முலைப்பால்’ என்ற சொல்லாடல்கள் ஓர் ஆணிடத்துப் புதைந்திருக்கும் காம உணர்ச்சி சொல்லாடல்களின் மூலம் வெளியேறும் தன்மையைக் காட்டுகின்றன. “மனித உள்ளத்தின்வாழ்க்கைமுறையைப்பகுத்துக்கூறும் ஓர் அறிவியலேஉளவியல். ஒருவனது உள்ளம்அவனுடைய செயல்களின் மூலம்உணர்ச்சிகளைவெளிப்படுத்துகிறது. எனவேசெயலை அறிந்து ஆராய்வதன்வழிஉள்ளத்தை நேரடியாக அறியமுடியும். மேலும் உள்ளத்தைநேரடியாக அறிவதற்குஉபகரணங்கள் மூலம் கணிக்கமுடியும். இங்ஙனமே இலக்கியங்கள்கவிஞனின் உள்ளத்துள் சென்றுஉணர்வாக்கப்பட்டுப் பின்னர்உணர்ச்சியாக மாற்றம்செய்யப்படுகிறது” (பா. கவிதா, ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கம் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து), 2017:11) இதனைக் காலந்தோறும் எழுதப்பெற்ற இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டும். அதிலும் குறிப்பாக ஆண் கவிஞர்களின் பாடல்களில் இதனை மிகுதியாகக் காணமுடியும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களை வாசிப்போர் இதனை நன்கு உணர்வர்.

ஒருசொல் பலபொருள்

கவிதை, வாசிக்கும் வாசகனுக்கு ஏற்பப் புதியப் புதிய விளக்கங்களைத் தரவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கவிதை காலம் கடந்தும் பேசப்படும். அப்படியொரு தன்மை இத்தொகுப்புநூலுக்கு உண்டு.

     வடுக்களோடும் வலிகளோடும்

     வயிற்றுப் பாட்டோடும்

     நெருப்பையும் சுமந்து

     சாம்பலாகிப் போனார்கள்

     வெண்மணி வயலின்

     செந்நெல் மனிதர்கள் (செந்நெல்மனிதர்கள்)

எனும் வரிகள் உழவரின் வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுகின்றன. இக்கவிதை வரிகளின் இறுதிவரி கவனிக்கத்தக்கது. அவ்வரியின்‘செந்நெல்’ எனும் சொல் ‘சிறந்த, நல்ல, முற்றிய’ எனும் பொருண்மைகளைத் தந்தாலும், உழைக்கும் வர்க்கத்தினருக்குக் குரல் கொடுத்து வரும் கம்யூனிசத்தை முக்கியமாகப் பதிவுசெய்கிறது. ஆக, ஒருபுறம் உழவரின் வாழ்க்கையையும் மறுபுறம் கம்யூனிசக் கொள்கையாளரின் வாழ்க்கையையும் அவ்வரிகள் வெளிக்காட்டுகின்றன. இக்கவிதையில் இடம்பெற்ற ‘வெண்மணி’ எனும் சொல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி ஊரின் வரலாற்று நிகழ்வையும் நிறுத்திச் செல்கின்றது. அதனைப் பின்வரும் கருத்து தெளிவுறுத்தும்.

தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. (தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் முன்னர் இருந்தது.)  தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி. இப்பூமியில் எங்கு சுற்றினும் பச்சை பசேலேன பசுமை போர்த்திய நெற்பயிர்கள். சில்லென்று வீசும் காற்று, தென்னந்தோப்பு, கரும்புத் தோட்டம் என மனம் வருடிச் செல்லும் இயற்கை சூழல். இங்கு பலதரப்பட்ட நிலமில்லா மக்களும், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்கள் நல்ல வாழ்க்கை முறையை அடைய முயற்சி செய்தும் அதை நிலக்கிழார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வேருன்றி மரமாக வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற கூலித் தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கினார்கள். ஐயா, ஆண்டை என்றுதான் அழைக்க வேண்டும். குறைந்த கூலி, அதுவும் அணாவாக கிடையாது (ஒரு படி நெல்லும் கேப்பை கூழும்தான்) சம்பளம்.

பண்னையார்கள் தொழிலாளர்களிடம் இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். வயலில் நடவு நடும் பெண், ஒருமாதம் முன் பிறந்த தன் பச்சைக் குழந்தையை அங்குள்ள மரத்தில்,  சேலையை கட்டி கிடத்திவிட்டு வேலைசெய்வார். அந்த குழந்தை பசியில் அழுதால் கூட வேலையை முடிக்காமல் பால் கொடுக்கச் செல்லக் கூடாது. மீறினால் வேலை கிடையாது அன்று. சில நேரங்களில் பால் கொடுக்கும் தாயின் மார்பில் எட்டி உதைவிட்டுவிட்டு செல்வர். அங்குள்ள பெண்களை தவறாக அணுகிய சம்பவங்களும் நடந்ததுண்டு.

எதிர்த்தால் கட்டி வைத்து அடித்து உதைதான். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். ஒரு பண்ணையாரிடம் முறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் செல்ல முடியாதபடி பண்ணையார்கள் தங்களுக்குள் நல்ல பிணைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். சாணிப்பால், சவுக்கடி இவையெல்லாம் சர்வசாதாரணமான தண்டனைகள் அங்கே.

இந்த நிலையில்தான் 1960களில் இந்திய – சீனப் போரால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது கீழவெண்மணி கிராமத்தையும் விட்டுவிடவில்லை. பஞ்சத்தால் குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். ஆனாலும் பயனில்லை. இவர்களுக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ். இதில் இணைந்து தங்களுக்கு கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். இவர்களுக்கு போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் நிலக்கிழார்கள்.

தொழிலாளர்கள் கூடுதலாக கேட்கும் அரை படி நெல்லை தருவதற்கு மனமில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. ஆனாலும் நேற்று வரை நமக்கு கீழ் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தவர்கள்,  நமக்கு எதிரே அமர்ந்து நம்மிடமே பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற பெருங்கோபம் சம்பந்தப்பட்ட பண்ணையார்களிடம் கனன்று வந்தது. ‘எங்களுக்கு எதிராக சங்கம் ஆரம்பிக்கிறீங்களா..?’ என்று கீழவெண்மணியை சேர்ந்த முத்துகுமார், கணபதி இருவரை கட்டிவைத்து அடித்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கீழவெண்மணியில் கலவரம் மூண்டது.

1968 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க, கீழவெண்மணி மக்களுக்கோ அன்று இருண்ட நாளாக அமைந்தது.

‘தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?’ என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. ‘ஐயோ, அம்மா ஆ…ஆ….எரியுதே!’ என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள் என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

மறுநாள் தினசரிகளில் கிழவெண்மனி படுகொலை சம்பவம்தான் தலைப்புச்செய்தி. நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவானது. தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். சீன வானொலிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன இச்செய்தி. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. முதல் வழக்கில் தொழிலாளர்கள் 120 பேரின் மீதும் இரண்டாவது வழக்கில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு சரியான தண்டனை கிடைத்ததா…? இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருடைய ஆதரவாளர்கள் 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை

மேற்முறையீட்டுக்காக வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அப்பாவி தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இது மட்டும்தானா…? இல்லை, இன்னும் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொழிலாளர்களுக்கு.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்கள் அனைவரும் பணக்காரர்கள். கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” -இதுதான் தீர்ப்பு. ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களை, அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொண்றவர்களுக்கு தீர்ப்பு விடுதலை. இதுதான் அன்றைக்கு தொழிலாளர்களின் நிலை (விகடன், 25.12.2015).

இக்கருத்தியல் அடிப்படையில் நோக்கும்பொழுது அக்கவிதை ஒருசொல் பலபொருளில் கம்யூனிசக் கொள்கையை வெளிப்படுத்தி நிற்பதாகக் கொண்டாலும் நாகை மாவட்டம் கீழவெண்மணியில் விவசாயிகளை (தேவேந்திரகுல வேளாளர்களை) நெருப்புக்கு இரையாக்கிப் படுகொலை செய்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தைத் தோலுரித்துக் காட்டும் வரலாற்றுக் கவிதையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).

வரலாற்றுணர்வு

கவிதை வெறுமனே சமகாலப் பிரச்சினையை மட்டும் பேசிவிட்டுச் செல்லக் கூடாது. அதில் வரலாறு சார்ந்த கருத்துக்கும் இடம் வேண்டும். அதிலும் அந்தக் கருத்துப் பொருத்தப்பாட்டோடு அமைதல் வேண்டும். அப்படிப்பட்ட தன்மையையும் இதனுள் காணமுடிகின்றது. சான்றாக ‘செந்நெல் மனிதர்கள்’ எனும் தலைப்பில் எழுதப்பெற்ற கவிதையில்,

     அரைப்படி நெல்மணி

     கூடக் கேட்டாரென

     நெருப்பின் ஒரு துளி விதையைக்

குடிசைக்குள்

எரிந்துவிட்டுப் போனர்கள்(செந்நெல் மனிதர்கள்)

எனும் வரிகள் ஒரு காலக்கட்டத்தில் உழைக்கும் வர்க்கம் எங்களின் உழைப்பிற்கு இவ்வூதியம் போதாது எனக் கேட்டதற்காக அவர்கள் பட்ட துயரங்களை இன்றும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இக்காட்சிப் படிமங்கள் காலந்தோறும் உழைக்கும் வர்க்கத்தினரைச் சுரண்டித் தின்பதைக் காட்டுகின்றன. இதனை மேற்காண் கருத்தியல் தெளிவுறுத்தும்.

     இவ்வளவு சிறப்புகளைக் கவிஞர் கொண்டிருந்தாலும், சிலவிடங்களில் மொழியமைப்பில் சறுக்கலைக் கண்டுள்ளார்.

போலி

இரண்டு பிழைவாதங்கள் தென்பட்டன. ஒன்று: போலி வலியுறுதல். மற்றொன்று: சொற்றொடர் அமைப்புக் கருத்துப்பிழையும் மொழிப்பிழையும்.

போலி வலியுறுதல்

தமிழ் மொழியமைப்பில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துக்கள் இன்றும் சிக்கலுக்குள்ளாகின்றன. ஏனென்றால் இவ்விரு எழுத்துக்களும் அ+இ, அ+ய்=ஐ; அ+உ, அ+வ்=ஔ எனத் தோன்றியதாக ஆய்வாளர்களும் இலக்கணப் புலவர்களும் கருதுவர். தொல்காப்பியரும் அதற்கு உட்பட்டவர்தான் என்பதை,

     அகர இகர மைகார மாகும்(தொல்.எழுத்.54)

     அகர உகர மௌகார மாகும்(தொல்.எழுத்.55)

என்ற இரண்டு நூற்பாக்கள் சுட்டிக்காட்டும். அப்படியென்றால் அவ்விரு எழுத்துக்களும் போலி எழுத்துக்கள்தானே. இவ்வெண்ணம் இந்தக் கவிஞருக்கும் இருக்கும் போலும். அதனால்தான் ‘அய்ம்பூத, அய்ம்புலன்கள் (ப.11), அய்க்கியமாகி (ப.40)’ ஆகிய சொல்லாடல்களைக் கையாண்டிருக்கிறார். இங்குத் தொல்காப்பியரின் கருத்தை இவர் உணராதிருந்திருக்கிறார் என்றே தோன்றுகின்றது.

     எழுத்துச் சீர்திருத்தத்தைக் காலந்தோறும் அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வெழுத்துச் சீர்திருத்ததில் ஐ, ஔ ஆகியனவும் அடங்கும். அவ்வடிப்படையில் நோக்கும்பொழுது போலி எழுத்தாக எண்ணி அவர் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தில் கவிஞர்க்கு உடன்பாடாய் இருத்தல் வேண்டும். ஐ, ஔ தேவையில்லை என்றார் பெரியார் (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).அதனால் கவிஞர் ஐ, ஔ ஆகிய எழுத்துக்களை அய், அவ் என எழுத முனைந்திருக்கிறார்.

இருப்பினும் அவ்விரு எழுத்துக்களும் அவ்வொலியமைப்பில் ஒலிக்கப்பட்டாலும், அவை, தனித்த எழுத்துக்களாக உணரத்தக்கன என்பதைத் தொல்காப்பியர்,

     “எழுத்தெனப்படுப

     அகரமுத

     னகர விறுவாய் முப்பஃ தென்ப

     சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே”  (தொல்.எழுத்.1)

“ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னு மப்பா லேழு

மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப” (தொல்.எழுத்.4)

“ஔகார விறுவாய்ப்

பன்னீ ரெழுத்து முயிரெனமொழிப” (தொல்.எழுத்.8)

எனும் நூற்பாக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது இவ்வெழுத்து வடிவங்களை நான் கொண்டு வரவில்லை, எனக்கு முன்பு வாழ்ந்த இலக்கணப் புலவர்கள் கொண்டு வந்தது என்பதை ‘மொழிப, என்ப’ என்ற சொல்லாட்சிகளில் விளக்கியுள்ளமையாகும். இதன் வடிவ வளர்ச்சியை ஏற்றுக்கொள்வது சாலச் சிறந்தது. அப்படியிருக்க, இன்றைய ‘ஜ, ஷ, ஸ, க்ஷ’ ஆகிய எழுத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்ற எண்ணம் மேலுறும். அவ்விரு எழுத்துக்களை இவ்வெழுத்துக்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது. ஏனெனில், தமிழ்மொழி இயல்பான, எளிமையான மொழி. அதனால் பண்டைய இலக்கணப்புலவர்கள் க, ச, ட, த, ப எழுத்துக்களை வருக்கங்களாக அமைக்காமல், அதற்குள் அவ்வருக்கங்களை அடைத்துவிட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே அவ்வாறு பயன்படுத்தும் முறையை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

சொற்றொடர் அமைப்புக் கருத்துப்பிழையும் மொழிப்பிழையும்

     இன்றைய வழக்கில் “தான்” என்ற ஒட்டைப் பயன்படுத்துவதைப் பெரும்பான்மையான எழுத்துரையாளர்களிடம் காணமுடிகின்றது. இச்சொல் தனித்து நிற்கும் போதும், ஒட்டி நிற்கும் போதும் வெவ்வேறு பொருட்களைத் தரும். சான்றாக, அன்று தான், அன்றுதான் என்ற சொற்றொடரை நோக்குவோம்.

நான் அவனை அன்று தான் பார்த்தேன்.நான் அவனை அன்றுதான் பார்த்தேன்.

இவ்விரு தொடரில், முதல் தொடரை, ‘நான் அவனை அன்று நான் (தான்) பார்த்தேன்’ என்ற பொருளைத் தருகிறது. இத்தொடரில் உள்ள ‘தான்’ – யான் அல்லது நான் எனும் தொனியைத் தருகின்றது. ஆனால் இரண்டாவது தொடரில் உள்ள ‘அன்றுதான்’ என்பது ‘அன்று’ எனும் பொருண்மைத் தொனியை மட்டுமே தருகிறது. இவ்விரு உணர்தலைப் பெறுவோர் இங்குப் பிழையென்று நம்புவர்.

     இப்பிழையை ‘அன்று தான், அது தான் (ப.20); ஆகியிருக்கலாம் தான்(ப.26); கவிதைகளில் தானே (ப.30), படுகொலை தான் (ப.37), மாட்டீர்கள் தான் (ப.41), ஆறுகள் தான் (ப.44); மானமும் தான் (ப.48); தொலைக்கத் தானா (ப.53); கொடியது தான் (ப.54), குறுணி தான், ஊமத்தையும் தான் (ப.63), சொற்கள் தான் (ப.68) ஆகிய சொற்றொடர்களில் காணமுடிகின்றது. அப்படியொன்றும் கருத்துப்பிழை வரவில்லையே என வினவத் தோன்றும் சிலருக்கு. அவர்களின் புரிதலுக்காக, ‘கற்கள் – கற் கள், பற்கள் – பற் கள், சொற்கள் – சொற் கள்’ இச்சொற்றொடர்களைப் பொருண்மையியல் நோக்கில் வாசித்துப் பார்க்கவும்.

     சிலவிடங்களில் சரியான தொனியுடனும் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். அவ்விடங்கள் வருமாறு: நாடுதான்(ப.17), சீவகன்களும்தான் (ப.32), நாடுதானே (ப.38), அதுதான் (ப.45), என்னதான் (ப.46), எச்சம்தான்(ப.50), வாழ்க்கைதான் (ப.52), தவித்தேதான் (ப.63), குண்டர்கள்தான் (ப.83).

மொழிப்பிழைகள் குறைவு. இருப்பினும் கவனக்குறைவால் ப.76இல் ‘மு(ண்)டியடித்து’ என்பதற்குப் பதிலாக‘மு(ன்)டியடித்து’ என வந்துள்ளது. மொழிப்பிழையில் மற்றொரு பிழை புணர்ச்சிப் பிழை. அது கவனக்குறைவால் வந்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் ப.55, 79களில் ‘தொப்பூள்க் கொடி’ என்ற பிழை வந்துள்ளமையாம். தொப்புள் என்பது பேச்சுவழக்கு; கொப்பூழ் தூய வழக்கு. தொப்பூள் எனும் வழக்குத் தவறு (மு.முனீஸ்மூர்த்தி:மதிப்பீட்டுரையில் தெரிவித்த கருத்து).இப்பிழைகள் தவிர்க்கப்பெற்றிருந்தால் இந்நூல் இன்னும் கூடுதல் சிறப்பைப் பெற்றிருக்கும்.

கவிதைத்தொகுப்பு : சொல்நிலம், ஆசிரியர் : மகாராசன், பதிப்பாண்டு : 2007 (முதல் பதிப்பு), வெளியீடு : ஏர், 28, காந்தி நகர், செயமங்களம், பெரியகுளம். பக்கங்கள் : 88, விலை: உரூபாய் 100.

துணைநின்றவை :

ஆனந்தகுமார் பா., 2005, இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட், சென்னை.இராசா கி., 2016, ஒப்பிலக்கியம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி.) லிட், சென்னை.கவிதா பா., 2017, “ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும்,” தமிழ்ச்செவ்விலக்கிய மேன்மை(மகளிர் உடலியல் – பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து, காவ்யா, சென்னை.கழகப் புலவர் குழு, 2003, நன்னூல் காண்டிகையுரை எழுத்ததிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.சுப்பிரமணியன் ச.வே. (உரை.), 2006, தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.சுப்புரெட்டியார் நா., 1982, குயில்பாட்டு ஒரு மதிப்பீடு, பாரிநிலையம், சென்னை.ஞானசம்பந்தன் அ.ச., 1916, இலக்கியக் கலை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை.பஞ்சாங்கம் க., 2011, தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, அன்னம், தஞ்சாவூர்.பொன்னையா நா. (பதி.), 1937, தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகார மூலமூம் சேனாவரையருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.…, 1937, தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமூம் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.மகாராசன், 2007, சொல்நிலம், ஏர், பெரியகுளம்.ரகுநாதன், 1980, இலக்கிய விமர்சனம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.https://www.google.co.in/amp/s/www.vikatan.com/amp/news/tamilnadu/56826-kilvenmani-massacre.htmlhttp://vaettoli.blogspot.in/2016/10/blog-post_15.html?m=1https://www.vinavu.com/2014/12/24/december-25th-venmani-martyr-day/



த.சத்தியராஜ்

தமிழ் உதவிப் பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்துர் – 28

neyakkoo27@gmail.com

நன்றி: இனம் இணைய இதழ்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

கலகத்தை முன்னிறுத்தும் அரவாணிகளின் குரல்: மகாராசன்

பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Frams) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது.

அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.

அரவாணிகள் உலகம் என்பது இங்குள்ள பெண் மற்றும் ஆண் உலகத்திலிருந்து தனித்து அமைந்திருக்கிறது. அரவாணிகளாகச் சேர்ந்து கொள்கிற அவர்கள் ஒரு தனிச் சமூகக் குழுவாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘அரவாணிகள் கம்யூனிட்டி’ என்ற அடிப்படையில் ‘ஜமாத்’ என்று வழங்கப்படுகிறது.

ஆணின் உடல்-உணர்வுகள் பெண்ணின் உடல்-உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்/ஆண் உடல் - உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள்.

எல்லோராலும் நினைக்கிற மாதிரி ஓர் ஆணோ அல்லது பெண்ணோ ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென்று ஞானம் வந்து அரவாணியாக மாறிவிடுவதில்லை. (பெரும்பாலான அரவாணிகள் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் என்பதாலும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுதல் என்பது மிகக் குறைவு என்பதாலும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய அரவாணிகளின் மாற்றங்கள் குறித்துப் பேசப்படுகின்றன.) ஆணாகப் பிறந்த அரவாணிகள் குழந்தைப் பருவத்திலேயே பெண் சார்ந்த அடையாளங்களையே விரும்புகின்றனர். பெண்களின் விளையாட்டுக்கள் எனச் சொல்லப் படுகிறவற்றின் மீதே ஈர்ப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வருகிற கதாநாயகி போல ஆடுவதும், வீட்டில் உள்ள பெண்களில் உடைகளான பாவாடை, தாவணி உடுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் அழகு பார்த்துக் கொள்வதிலும், துண்டை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு சடை மாதிரி முடியை முடிந்து போட்டுக் கொள்வதைப் போல துண்டை எடுத்துக் கட்டிக் கொள்வதும் கண்களுக்கு மைதீட்டிக் கொள்வதும், வளையல் மாட்டிக் கொள்வதுமாகச் சின்ன வயதிலேயே இவற்றின் மீதெல்லாம் ஈர்ப்பு கொள்கிறார்கள். இம்மாதிரியான செய்கைகளின் போது வீட்டில் உள்ளவர்களோ பக்கத்து வீட்டாரோ உறவினர்களோ கண்டிக்கிறபோது அவர்களுக்குத் தெரியாமல் செய்து கொள்வதில் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பொதுவாகவே இவர்களுக்கு குழந்தைப் பருவ காலத்தில் பசங்களோடு சேருதல் என்பது பிடிக்காது, குழந்தைப் பருவத்தைத் தாண்டத் தாண்ட பெண்போல இருக்க விரும்புதல் அதிகமாகிப் போகிறது என்கிறார்கள். பெண்போல ஆடுவதும், உடை உடுத்திக் கொள்வதும், பேசுவதும் மற்றவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றினாலும், பெண்மையை உணர்கிற மாதிரியும் - தான் பெண் என்பதை யாருக்கோ உணர்த்துகிற மாதிரியும் எதிர்த்தாற் போல இருக்கும் மனம் உணர்த்திக் கொண்டே இருக்குமாம். அந்தப் பருவத்தில் இதுபோன்று இருப்பது வெட்கத்துக் குரிய விசயம் என்று நல்ல பிரஞ்ஞை இருந்ததினால் வெளியில் இதைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.

பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில் - பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும், வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும், என்னமோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப் பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். அந்தப் பருவத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை உணரத் தொடங்கி விடுகிறார்கள். இதைவிட முக்கியமானது ஒவ்வொரு அரவாணியும் தனக்கு முன்பாக - முன்மாதிரியாக இருக்கும் அரவாணியைப் பார்த்த பிறகுதான், அதாவது அரவாணியும் வெளியே வந்து நடமாட முடியும்; உயிர்வாழ முடியும்; பெண்ணாகவும் ஆகிக் கொள்ள முடியும்; புடவை கட்டிக் கொள்ள முடியும் என்கிற அறிவும் முழுமையான பிரஞ்ஞையும் எற்பட்ட பிறகுதான் தன்னையும் ஓர் அரவாணியாக உணரத் தொடங்குகிறார்கள். அரவாணிகளைப் பார்க்கும்போது தொடக்கத்தில் பயமும் வியப்பும் வியப்பும் ஏற்பட்டு நாளாக நாளாக அவர்களோடு பழகும் வாய்ப்புகள் கிடைத்தபிறகு - அவர்களிடம் நிறையப் பேசப் பேச சில விசயங்களை உணர்வதாகச் சொல்கிறார்கள். வெளியில் வந்துவிட்ட அரவாணிகளோடு நெருக்கத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வது தேவையெனக் கருதுகிறார்கள். இத்தகைய சூழல் அதிகமாக வாய்க்கிறபோது, ஒருவிதமான வெறி தொற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தான் ‘ஆம்பிளை’/ ‘ஆண்” என்கிற அடையாளத்தோடு வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடுகிற போதுதான் அரவாணியாக உணரக் கூடியவர்கள் தங்கள் ‘இருப்பு’ குறித்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. தங்களின் அடையாளத்தை எப்படித் தொடர்வது என்று தவிப்பதாக ஆகிவிடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதெனில், இந்தப் பருவத்தில் அவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் ஆகிக் கொள்கிறார்கள். இப்படியாகத் தனக்குள்ளே நிகழக்கூடிய மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்த பிறகு ஆண் தன்மையிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்புகின்றனர். தான் அரவாணி என்பதைத் தெரிந்து கொண்ட ஒருவர் தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திச் சொல்லிக் கொள்ள முன் வருவதில்லை. அப்படியே முன்வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.

படித்தவர் - நல்ல வசதியான குடும்பப் பின்னணி சார்ந்தவர் உயர்த்திக் கொண்ட சாதியில் பிறந்து தன்னை அரவாணியாக உணர்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே தான் அரவாணி என்பதைச் சொல்லிக் கொள்ள முன்வருதில்லை. தான் அரவாணி என்பது பிறருக்குத் தெரிந்து விட்டால் குடும்பத்துக்கும் சாதிக்கும் கவுரவக் குறைச்சலாக இருக்கும் என்பதால் மிகச் சிறுபான்மை அளவில்தான் அரவாணியாக வெளியே வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரவாணியாக உணரக் கூடியவர்களில் பெரும்பாலோர் வெளியே வந்து விடுகிறார்கள். இந்நிலையில் பெண்போல இருக்க விரும்பும் ஆணின் செயல்கள்யாவும் பெண்ணாக உணர்வதாக அமைகிற போதும், ஆண் உடலுக்குள் பெண்ணாகச் சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறபோதும் ஒரு முடிவெடுக்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டிற்கு தான் அரவாணி என்பதைச் சொல்வதற்குப் பயந்து போனவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். சில சமயங்கள் அரவாணியாக உணர்ந்தவர்களை வீட்டார்களே அடித்து உதைத்து வீட்டை விட்டே துரத்தி விடுகிறார்கள். ஆக அரவாணியாக மாறிப்போனவர்களைக் குடும்பமும் கை கழுவி விடுகிறது.

ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அக்குடும்பத்தாரோடு வாழ முடியாமல் போகிற அவலங்கள் எல்லா அரவாணிகளுக்குமே நேர்ந்து வருகிற கொடுமைகள். வெளி உலகத்திற்கு ஆணாகவும் - தன்னளவில் பெண்ணாகவும் இருப்பது என்பது இரட்டை வேடம் போடுதல் என்பதை உள்ளுக்குள் உணர்ந்தவர்கள் அரவாணியாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் களோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். உடல் தோற்றத்தாலும் பெண்ணாக மாற விரும்புகிறவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெண்ணாக உணரக்கூடிய பெரும்பாலான அரவாணிகள் ஆண் அடையாளத்தை விரும்புவதே கிடையாது. அறுவை சிகிச்சை செய்தோ அல்லது சில சடங்கு முறைகளின் மூலமோ ஆணுறுப்பை வெட்டி எறிகிறார்கள். இதன் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் தன்மை அழிந்து போனதாக உணர்கிறார்கள்.

தன் குடும்பத்தில் பிறந்த ஒருவர் - தனக்குத் தெரிந்த ஒருவர் அரவாணியாக மாறிடக் கூடாது என்று கருதுகிறார்கள். இது அவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படக்கூடியது என்று நடுநிலைத் தன்மையோடு பார்க்க முடியாமல் கலாச்சார அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஓர் அரவாணி இருந்து கொண்டிருப்பது குடும்பத்திற்கு அவமானமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் அரவாணிப் பிள்ளைகளை அங்கீகரிப்பதில்லை.

குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழல் அரவாணிகளுக்கு ஏற்படுவதால், ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழு வட்டத்தோடு தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வாழ்க்கைக்குள் உறவு முறைகளை வகுத்துக் கொள்கிறார்கள். அந்தக் குழு வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஒவ்வொரு அரவாணியும் இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை மீறுகிற அரவாணிகளுக்குத் தண்டனை நிரம்ப உண்டு. பெரும்பாலான குழுக்கள் அரவாணிகளை ஒரு முதலீடாகவே பயன்படுத்தி வருகின்றன.

தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்துக் கொள்வதற்கும், பிச்சை எடுத்தல் - பாலியல் தொழில் போன்றவைகளை அரவாணிகள் மேற்கொள்கின்றனர். பாலியல் தொழில் என்பது இவர்களின் விருப்பம் சார்ந்த தொழில் என்பதை விடவும், அவர்களுக்கு அம்மாதிரியான தொழில் மட்டும்தான் செய்ய முடியும் என்கிற நிலைமைகiள் இருக்கின்றபோது சமூகத்தின் பொதுப்புத்தி என்பது அரவாணிகளை பாலியல் தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்பார்வையானது, அறியாமையில் வருவதல்ல; ஏற்கெனவே நிலவுகிற கருத்தியல் மதிப்பீடுகளின் தொடர்ச்சியாக வருவது. இம்மாதிரியான மதிப்பீடுகள் தோன்றுவதற்கு அரவாணிகள் நடத்தை முறைகள் காரணமாகச் சொல்லப் படுகின்றன பொது இடங்களில் உலாவுகிற அரவாணிகள் பெண்போல பாவித்துக் கொண்டு - தன்னிடம் இல்லாத பெண் நளினத்தை வலிந்து வருவித்துக் கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தன்னை பெண் என்று சொல்கிறாரோ இல்லையோ - ஆனால், தன்னை ஆண் என்று சொல்லிவிடக் கூடாது என உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னை ஒரு ‘ஒம்போது’ என்று சொல்வதை கூட சோகத்திலும் சந்தோசமாய் எடுத்துக் கொள்கிறார்கள். தான் பெண் இல்லைதான்; ஆனாலும் ஆண் என்று பிறர் சொல்லவில்லையே எனச் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். பெண் தன்மைக்கான அங்கீகாரமாக அதை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த மாதிரி நடந்து கொள்வதால்; ஆண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஊடகமாகப் பார்க்கிறார்கள். இம்மாதிரி அணுகுவதை அரவாணிகளும் விரும்புகிறார்கள். ஏனெனில் ஒருவன் தன் கையைப் பிடிக்கிறான்; மார்பகங்களைப் பார்க்கிறான்; தன்னோடு உறவு கொள்ள விரும்புகிறான் எனில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதினால்தானே அவ்வாறு நடந்து கொள்கிறான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள். ஆக, அரவாணிகளின் இம்மாதிரியான செயல் பாடுகளை ஆண் தன்மையினைத் தூக்கி எறிவதற்கான முயற்சிகளாகக் கருத முடிகிறது.

மனிதப் பிறவியாகவே பிறந்த அரவாணிகளைக் கேவலமான பண்பாட்டுக் குரியவர்கள் எனச் சொல்வதற்குப் பின்னால் இந்தியச் சூழலில் இந்து மதம் சார்ந்த ஆண் ஆதிக்கம் பேசுகிற தொன்மங்கள் வினையாற்றுகின்றன. இந்து மதம் சிலவற்றைப் புனிதமெனவும் அப்புனிதத்திற்கு மாறாக இருக்கக்கூடிய / விலகி நிற்கக் கூடிய / எதிராக இருக்கக் கூடிய யாவும் தீட்டு என இழிவு படுத்தி வைத்திருக்கிறது. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் சமூகத்தின் பொதுக் கருத்தியல்களாகப் பரப்பப்பட்டிருக் கின்றன. இந்து மதம் சார்ந்த கருத்தியல்கள் ஒன்றுதான் ‘லிங்க மய்ய வாதம்’. தந்தை வழிச் சமூகத்தின் எச்சங்களை இக்கருத்தியல்கள் தாங்கி நிற்பதைப் பார்க்கலாம். ஆண் மேலானவன்; உயர்வானவன்; வலிமையானவன்; ஆளக் கூடியவன்; புனிதமானவன் என்பதாக லிங்க மய்ய வாதம் ஆண் தலைமையை முன்வைக்கும். அதே போல பெண்ணின் யோனி வழிப் புணர்ச்சிதான் இயற்கையானது; அதுதான் புனிதமானது என்ற கருத்தியலும் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. இக்கருத்தியல்கள் அரவாணிகளை எப்படிப் பார்க்கிறது? அரவாணிகள் ஆண்குறியோடு பிறந்திருந்தாலும் ஆண்குறி தனக்கு இருப்பதை விரும்பாதவர்கள். ஏதாவது ஒரு வகையில் ஆண் குறியை அறுத்து எறிந்து புதைத்து விடுகிறார்கள். இதுவே லிங்க மய்ய வாதத்தைத் தகர்க்கும் தன்மை கொண்டது. லிங்க மய்ய வாதத்திற்கு நேர் எதிரான கலகத்தன்மை கொண்டது. இன்னொன்று அரவாணிகளுடனான பாலியல் புணர்ச்சி என்பது யோனி வழிபட்டதல்ல. ஆக, லிங்க மய்ய வாதத்திற்குள் பெண் கீழாக வைக்கப்படுகிறாள். லிங்க மய்ய வாதத்திற்குள் வராத / எதிராக இருக்கும் அரவாணிகள் இழிவானவர்களாகக் கருத்தாக்கம் செய்கிறது. அவ்வாதம், இதன் நீட்சியாகத்தான் அரவாணிகளைக் கேவலமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்காமல் இருப்பதுமான நிகழ்வுகள் அமைகின்றன.

அரவாணிகளுக்கான இடம் மறுக்கப்பட்டே வருகின்றன. பெரும்பாலான அரவாணிகள் கல்வியைத் தொடர முடியாமலே போகின்றனர். வேலை தேடிச் செல்கிறபோது அவ்வேலைக்கு லாயக்கற்றவர்கள் என ஒதுக்கப் படுகின்றனர். சான்றிதழ்களில் பாலினம் எனக் குறிக்கப்பெறும் இடத்தினில் பெண் என்றோ ஆண் என்றோ பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரவாணி எனும் மூன்றாம் பாலினத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான அனுமதியும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. இந்நாட்டில் பிறந்த குடிமக்கள் என்ற நிலையில் கூட அரவாணிகள் நடத்தப்படுவதில்லை. குடும்ப அட்டைகள் வாக்காளர் பதிவுகள் வங்கிக் கணக்குகள் போன்றவற்றில் அரவாணிகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டே வருகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற மருத்துவச் சான்றிதழ் கொடுத்தல் மிகவும் அரிதாக இருக்கிறது. ஆகவே அரவாணிகளுக்குச் சட்ட அங்கீகாரம் மிக முக்கியமானதாகப் படுகிறது.

இங்கே பெண்களுமே அரவாணிகளைக் கேவலமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதுகாப்பும் பகிர்தலும் குறைந்தளவேனும் கிடைக்கப் பெறும். ஆனால், அரவாணிகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் அமைவதில்லை. ஏனெனில், திருமணம் என்கிற ஒன்று இவர்களுக்கு அமைவதில்லை. பெரும்பாலான ஆண்கள் பாலியல் ஊடகமாகத்தான் அரவாணிகளைப் பார்க்கிறார்களே தவிர, அரவாணியை மனைவியாக / துணைவியாக / வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் பங்காளராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவேளை, அரவாணிகள் திருமண உறவை விரும்பினால் கூட அவர்களை மணந்து கொள்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதற்குக் காரணம், அரவாணிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. சராசரிப் பெண்ணைப் போல தாய்மைப் பேறு அடைய முடியாது. ஏனெனில் அரவாணிகளுக்குக் கர்ப்பப்பையே கிடையாது. இந்தக் கர்ப்பப்பை தான் பெண்ணை அடிமைச் சிறையில் வைத்திருக்க உதவுகிறது.

அரவாணிகளோ கர்ப்பப்பை இல்லாமல் இருந்தும் கூட அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மனித இன மறுஉற்பத்தியை அரவாணிகள் செய்ய முடியாது என்பதனாலே அவர்கள் ஒதுக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. பெண்கள் தங்களின் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் கர்ப்பப் பைகளை அறுத்தெறியுங்கள் என்றார் பெரியார். இதைச் சமூகம் ஓரளவேணும் உணரத் தொடங்கினாலும் கூட, கர்ப்பப்பைகளே இல்லாத அரவாணிகளைப் பற்றிப் புரிந்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், அவர்களின் பிறப்பே கலகமாக அமைந்திருப்பதுதான். ஒரு பெண் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்ந்தால் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணை பெண்ணாக வளர்க்காமல் ஆணுக்குரிய சுதந்திரத்தோடு வளர்த்தால் தன்னுடைய இருபது வயதில் எப்படி இருப்பாளோ அப்படித்தான் அரவாணிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரவாணிகளின் அடிப்படையையே புரிந்து கொள்ள மறுக்கிறது சமூகம், அரவாணிகளுக்கு உழைப்பே மறுக்கப்படுகிறது; இருத்தலே கேள்விக்குள்ளாகிறது; பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அரவாணிகளைக் குறித்து தவறான கற்பிதங்களைச் சமூகம் உருவாக்கி வைத்திருந்தாலும், அதை மாற்றிட சமூக மாற்றத்திற்கான இயக்கங்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அரவாணிகளும் மனிதர்களே என்ற பார்வை மாற்று அமைப்புகள் / இயக்கங்கள் போன்றவற்றில் வந்திருந்தாலும் அரவாணிகள் குறித்த செயல்பாடுகளைப் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களே கையாண்டு வருகின்றன. இத்தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கணக்கு காட்டுவதைத்தான் மேற்கொள்கின்றன என்ற விமர்சனங்கள் பரவலாக உண்டு. அரவாணிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் எய்ட்சு தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களையும் - ஆணுறை விநியோகம் தொடர்பான காரியங்களையும் செய்து வருகின்றன. இவ்வேலைகளில் அரவாணிகளே பெரும்பாலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். இம்மாதிரியான வேலைகளும் அரவாணிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளாகி விட்டன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை / மாற்று வேலைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்படும்போதுதான் அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும். அரவாணிகளுக்குச் சொத்துரிமை வழங்குதலும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவதும் கூட அவர்களுக்கான அங்கீகாரமாக அமையும். அரவாணிகள் தனித்த பிறவிகள் அல்ல; மனிதப் பிறவிகள்தான் என்பதை உரத்துச் சொல்லும் காலம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் மனிதர்களைச் சமூகம் புரிந்து கொண்டதாகக் கருத முடியும்.

நன்றி: புதிய காற்று இதழ், ஏப் 2006.
கீற்று இணையத்தளம்

புதன், 13 ஜூன், 2018

கவிதை மொழியின் அழகியலும் அறமும் அரசியலும். :- மகாராசன்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகளோடும் கவிதைகள் குறித்தும் நிறையப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன் . ஆனாலும், ஆற்று மணலில் சின்னதாய் வீடு செய்து மகிழ்ந்து பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்போதுதான் சின்னதாய் ஒரு கவிதைத் தொகுப்பைச் சொல் நிலம் வழியாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது . 

தமிழ்ச் சமுகம் , பண்பாடு , அரசியல் , மொழி , இலக்கியம் , வரலாறு போன்றவை குறித்தெல்லாம் மிக காத்திரமான எழுத்துகளையே புலப்படுத்திக் கொண்டிருந்த நான் , இளைப்பாறிக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும் சொற்களோடு பயணிக்கவும், கவிதை மொழிதான் எனக்கு வசமாய் வந்து நிற்கிறது . 

வாழ்க்கையின் இயங்கு தளத்தின் ஊடாகக் கடந்து செல்லும் போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதை விட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்தும் வெளிவந்தும் மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது தான் கவிதைத்தளம். சுருக்கமாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள் உணர்வுகளைக்
கிளர்த்துவதுதான் கவிதை .

தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள் , உள்ளக்கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணைசேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாய்ப் பிறக்கிறது . இத்தகையக் கவிதைகள் தமக்கான வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை . மரபுக் கவிதை , புதுக்கவிதை , நவீனக் கவிதை என்றெல்லாம் கவிதையின் வடிவங்கள் பலவாறாக இருந்தாலும் , எல்லாக் காலத்தியக் கவிதைக்குள்ளும் அந்தந்த காலத்திய மனித சமூக வாழ்வியலின் பாடுகளையும் அழகியலையும் அரசியலையும் ஏதோ ஒரு வகையில் புலப்படுத்துவதாகத்தான் திகழ்கின்றன . 

மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல, இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும் , அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழும்பும் கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து , அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தத்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன . அதுமட்டும் இல்லாமல், புதிய உணர்வு ஓட்டங்களையும் , நிகழ்காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன. 

ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் என்னும் வாசனையைத் தாண்டி, ஒரு கவிதைப் பனுவலுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது இன்றைய கவிதை மொழி. 

ஒரு கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது. கவிதை என்பது மனித மொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டடோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல்காப்பியம் . ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் அரசியல் மறைந்து கிடக்கிறது என்கிறது மார்க்சியம் . ஆக, எத்தகையக் கவிதை மொழியாக இருந்தாலும், யாருடைய கவிதை மொழியாக இருந்தாலும், அவை வெறும் அழகியல் மொழி என்பதாக மட்டுமல்ல; தெரிந்தோ தெரியாமலோ அரசியலையும் உள்ளீடாக அவை கொண்டிருக்கக் கூடும். இந்நிலையில், யாருக்கான அரசியலை அழகியலோடு வெளிப்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. எதன் பக்கம் நிற்கிறோம்; யாரின் பக்கம் நிற்கிறோம் என்பதும் முக்கியமானது. ஏனெனில், கவிதை மொழி என்பது மனித இருப்பின் சாட்சிக் கிடங்காய்க் காலம் காலமாக நிலைத்திருக்கக்கூடியது. ஆகவே, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்தச் சமூகத்தை மொழிவழி சாட்சியங்களாய்ப் பதிவு செய்ய வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் இருக்கின்றன. அந்தப் பொறுப்பும் கடமையும் எனக்கும் இருக்கிறது என்பதன் சாட்சி மொழியாய் வெளிவந்திருப்பதுதான் சொல் நிலம் .

புளுதித் தூசுகள் தோய்ந்த எனது பாடுகளையும் , உருமாறிக் கிடக்கும் எனது நிலத்தின் பாடுகளையும் , வாழ்வு இழந்து தவிக்கும் சம்சாரிகளின் துயரப் படலங்களையும், ஒடுக்குண்டு உரிமைகள் இழந்து தவிக்கும் இனத்தின் அழுகுரலையும்தான் எனது கவிதைகளின் பாடுபொருளாய் ஆக்கி இருக்கிறேன்.

நிலத்தைப் பாடுதல் என்னும் பெரு மரபு தமிழில் நிறைய உண்டு . நிலத்தைப் பாடுவதே தமிழின் முதன்மைப் பொருள் எனக் குறிக்கிறது தமிழ் இலக்கண மரபு . நிலம் என்னும் முதன்மைப் பொருளே கருப்பொருள் வளர்ச்சிக்கும் உரிப்பொருள் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது . பச்சையம் போர்த்திக்கிடந்த இந்த மரபு மீட்சி பெறாமல் ஒரு கட்டத்தில் தேக்கப்பட்டது. இந்நிலையில்தான், மரபிற்கும் நவீனத்திற்குமான சொல் முடிச்சுகளை மொழி நிலத்தில் விதைக்கும் முயற்சியாகச் சொல் நிலத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். 

சிறு சிறு சுள்ளிகளைக் கவ்விக்கொண்டு கூட்டைக் கட்டும் ஒரு காக்கையைப் போல, நானும் கவிதைகள் செய்திருக்கிறேன் . 

வாழும் காலத்தின் பாடுகளையும், நினைவுகளையும் சொற்களின் வழியாக மொழியில் பதியும் எனது கவிதைகளின் ஆத்மா என்பதெல்லாம், நிலத்தின் தவிப்பை , நிலத்தின் வலியை , சிதைந்து கொண்டிருக்கும் அதன் கோலங்களைப் பேசுவது தான் . கவிதையின் இத்தகைய தொனி, பிரச்சாரத் தொனியாகக் கூட சுருக்கிப் பார்ப்பது கூட நிகழ வாய்ப்புண்டு . 

வாழும் காலத்தின் சாட்சியாய் விரியும் மொழி என்பதெல்லாம் பிரச்சாரம்தான். அந்த வகையில், எனது கவிதைகள் முழுக்க முழுக்க கவித்துவ அழகியல் நிரம்பியது எனப் பொய் உரைக்க மாட்டேன். ஏனெனில், பிரச்சாரம் செய்வதற்கென்றே எனது கவிதை மொழியை எனக்குத் தோதான தொனியில் புலப்படுத்திருக்கிறேன். ஆனால், சொல் நிலத்தைக் குறித்து வெளியான தோழர்களின் விமர்சனங்கள், சொல் நிலத்தின் அழகியலையும் அறத்தையும் அரசியலையும் இணையாகவே அடையாளப்படுத்தி வருகின்றன. நிலத்தின் தவிப்பை வாசகருக்கும் முடிந்தளவு கொண்டு சேர்த்திருக்கிறேன் . ஆனாலும், கவிதைகள் குறித்து இன்னும் பக்குவப்பட வேண்டும்; அவற்றின் நுட்பங்கள் குறித்துப் பயணிக்க வேண்டும் என்கிற தேடல் மன நிலையோடுதான் கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன். 

தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால்தான், எனது மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.

சொல் நிலத்தைப் பரவலாக்கும் முயற்சியில், நூல் அறிமுக மதிப்பாய்வுக் கூட்டத்தை நிகழ்த்திய கும்பகோணம் தாழ்வாரம் நிகழ்வில் நான் ஆற்றிய ஏற்புரை.

நன்றி:   தோழர்கள் பாரதிமோகன், இலக்கியன், செருகுடி செந்தில் ஆகியோருக்கும், மகள் அங்கவை யாழிசை அவர்களுக்கும்.

மகாராசன்.


சொல் நிலத்தில் விழுந்த வீரிய விதைகள் : கோ. பாரதிமோகன்.

மலை எது - நதி எது?
கடல் எது - உடல் எது? - எனும் பேதமற்று எல்லாவற்றையும்
கட்புலனாகாது உள்துளைத்து ஊடுருவி
பிரபஞ்சப் பெருவெளியினை கடந்துகொண்டேயிருக்கும் பிசாசுத்துகள்களைப் பிடிக்கப் பித்து கொண்டலையும் அந்நியப் பேய்களுக்கு அதிகார வர்க்கத்தால் ஏலம்விடப்பட்ட  நிலத்திலிருந்து தம் சீர்மைமிகு 'சொல் நில'த்தோடு வந்திக்கிருகிறார், கவிஞர் மகாராசன்.

ஆனால், 'தமிழ்ப் பாட்டன்' கம்பன் காட்டிய
'மண்மகள் அருந்தினள்' எனும் சுவடுகள் காணா சொர்க்கபுரிச் சொற்களையல்ல...

வெற்றுக்கால்கள் கழனி பாவிய நிஜத்தில், காற்குருதி சுவைத்தக் களிப்பில் இதயங்கனிந்து செந்நெல் பூத்த பூமியை, 'சொல் நிலம்' கவிதைத் தொகுப்பாய் மலர்த்தியிருக்கிறார் கவிஞர் மகாராசன்.

பழுத்துக் கனிந்த சொற்தெரிவில் உழுது
பண்படுத்தியிருக்கிற சொல்நிலம் முழுக்க உயிர்வரிகள் பூத்துக் கனிந்திருக்கின்றன.
*
பூமி எப்போதும் தாய்மனம் தரித்தது.
தன்னில் விதையென விழுந்தவைகளை  காலங்கடந்தும்  விளைவிக்கும் ஈரங்கொண்டது.
அதன் பொருட்டே, விழுகிற விதைகள் வீணாவதில்லை.

'விளைந்தால் வரம்; விளையேல் உரம்' என பண்படு நிலத்தைச் சுட்டி

      "எப்போதோ விழுந்திருந்தாலும்
        மேகத்தின்
        உயிர்த்துளி குடித்து
        மீண்டெழுகின்றன
        புதைத்திருந்த விதைகள்" என்கிறார்.

கவிஞனைப் பொருத்தவரை
விதையும் சொல்லும் வேறு வேறு அல்ல.
அதனால்தான் சொல்லை விதைத்து அவன் கவிதையை அருவடை செய்கிறான்.
*
'நீ ஒரு பூவைப் பறித்தால்
வானத்தில் நட்சத்திரம் ஒன்று
உதிர்ந்து போகிறது' என்கிறது ஜென் கவிதை.

பிரபஞ்சம் முழுக்க கட்புலனாகா கண்ணிகளால் ஆனது.
பூதங்கள் ஐந்தும் ஒன்றோடொன்று உறவுடையவை.

இதை வேறொரு வார்த்தைகளாலும் இப்படிச் சொல்கிறது ஜென்:

'சிலந்தி வலையின்
ஓர் இழையை தொட்டால்
மொத்த பிரபஞ்சமும் நடுங்குகிறது'.

அஃகுதொப்பவே கவிஞரும் நிலத்தை, பொருளை, உயிரைப் பிணைத்து
கவிதையில் படிமம், குறியீடு என விவரிக்கையில் அச்சொல்லோடு பிறப்பொக்கிய எல்லா உயிரும் இசைந்திருப்பதை இதயம் வரித்துக் கொள்கிறது:

     "கிளை பரப்பி
      நிழல் விரித்த நெடுமரம்
      சாய்ந்து போனதில்
      கூடுகள் நாசம்'
எனவும் அதைத் தொடர்ந்து -
     "பறவைகளின் ஒப்பாரி
      ஒலித்துக் கொண்டே இருக்கிறது
      கூடு தேடி' எனவும் சொல்கிறார்.

இங்கே மரமும் பறவைகளும் படிமமும் குறியீடுமாகி ஓர் அரசியலை உளவியலை உள்வாங்கச் செய்வதை உணரமுடிகிறது.

கூடு வீடாவதையும் மரம் நாடாவதையும்
நாடு உலகாவதையும் விரித்து நோக்கவேண்டியிருக்கிறது.

மரம் வெட்டியக் கோடரி யார் கையில் எதன் பொருட்டு என்பதே கவிதை பேசும் அரசியல்.
*

எல்லாவற்றையும் கழுவிக் களையும் நீர்,
மனித மூளையில் படிந்த அழுக்கை மட்டும் கழுவாமல் போகுமா?

இங்கே அலைகழுவிய சொல்லில்
கடற்கர்ப்பத்துக் கோபமாய் கவிஞர் வழி பொங்குகின்றன, பேரலைகள்..

    " ஒதுங்கிக் கிடந்த இடுகாட்டையும்
       அகலப் பரப்பிச்
       சேரிக்குள் இழுத்து வந்தன"
என்கிற சொல்லில் பேரலை புரிந்தது மட்டுமல்ல, புறந்தள்ளபட்ட நாமும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இயற்செயல் வழி சுட்டுகிறார் கவிஞர்.


ஒடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வாழ்வும் மனமும் ஆற்றாமையில் வெம்முவதை
பயனறுத்து ஒதுக்கப்பட்ட உழவுக்கருவி வழி,

     "பாழ் நிலம் நினைத்து
      தவித்துக் கிடக்கும்
      கலப்பை போல்
      தனித்துப் போனது யாவும்"
என துயர் பேசும் வரிகள் சொல்ல விழைவது இதுதான்..
நிலம் பாழ் பட்டதா? பாழாக்கப் பட்டதா?

அரசியல் புரிந்தோர்க்கு பொருள் பாதகமில்லை.

இதயவறல் பாலை வெளியில் ஒற்றைத்துளி ஈரமாய் மனித மனங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன.
அத்தகையோரின் முகம் பார்க்க முடியாவிடினும் அந்த இதயங்களின் ஈரச் செவிகளில் இசை வார்க்கும் காட்சியற்ற கண்களின் வேய்ங்குழல் வழி கசிகிற நன்றி,

     "விரித்திருக்கும் துணியில்
      விழுந்த காசுகள்
      சிதறிய கோலங்களா"கையில்,

     "குழல் தடவிய விரல்கள்
      காசு முகங்களைத்
      தடவுகையில் தெரிந்தன
      மனிதர்களின் நிறங்கள்" என்கிறபோது
வேரற்ற குழல் கனிந்த வாழ்வு இதயத்தில் இனிப்பதை தவிற்பதற்கில்லை.
*
ஒரே ஒரு சொல், கல்லை கனி'த்துவிடும்.
ஒரே ஒரு சொல் கடலை சுண்டி'த்துவிடும்.
மகிழ்விக்கவோ துயர்விக்கவோ சொல்லொன்று போதும்.
கவிஞரும் கண்ட காட்சியொன்றைக்
சொற்களாக்குகிறார்
அவ்வளவுதான்..
செஞ்சு பதறி உயிர்க் கூடு நழுவ நடுங்குகிறது.

காட்சி இதுதான்..

     "நாகமெனப் படமெடுத்த
      வனப்பின் அடியில்
      முளைத்த கிளையில்
      சருகுகள் வேய்ந்திருந்தது
       கூடு" என்கிறார்.
கூடுதானே..?
அது கிளையிருப்பதில் என்ன அச்சமிருக்கிறது?

நியாயம்தான்... ஆனால், இந்த சுட்டிக்காட்டுதலில்தான்'வலி மிகு'வாகிறது, மொழி.

ஏனேனில் இது நிகழ் காட்சியன்று, கடந்த காட்சி.
வேய்ந்திருந்தது என்பதை வேய்ந்திருக்கிறது என வாசித்தால், பொய்த்த இந்தியத்தின் கீழிருக்கும் தமிழ்நிலக்காட்சியைக் கண்ணுறக்கூடும்.

மேலும் 'உயிர்க்கூடு' கவிதையை இப்படி முடிக்கிறார், கவிஞர்:

     "இப்போதும்
      கூடு அதேதான்
      அடைகாக்கும் பறவை மட்டும் வேறு"

'கூடு அதேதான்' என்பதில் பெரும்பாதகம் ஒன்றுமில்லை. ஆனால், 'பறவை வேறு' என்பதில்தான் கவிதை கனம் பொருந்துகிறது.

வேறு பறவை யார் - எது அல்லது,
யார் யார் - எது எது என்பதை மொழிவிரிப்போர் பொருள்படுவர்.

எழுதி மேற்செல்லும் பணிமட்டுமே தம்முடயது என வலியுணர்தலை சொற்களில் கசியவிடுகிறார் கவிஞர். ஆனால்,  அச்சொற்களோ உறங்கவிடாமல் உள்ளம் உறுத்துவதை, வேறு வேறு வடிவெடுத்து வதைப்பதை, உண்மையின் நிழலாகி இதயம் சுடுவதை புறக்கணிப்பதற்கில்லை.

'மனங்கொத்தி' வரிகளில் கவிஞர் ஒன்று சொல்ல , சொற்களில் தற்கால அனலடிப்பதைத் தவிற்பதக்கும் இல்லை.

   "வண்ணங்களைத் தொலைத்த
    கனவுகளாய் கரைகின்றன இரவுகள்"
உண்மை தான் இரவெனில் வண்ணம் தொலையத்தான் வேண்டும். ஆனால் விடியல், ஓராயிரம் வண்ணங்களை ஒளிர்த்தவேண்டும் அல்லவா?

நம்பிக்கைகளை மடித்து தலையணைத்து உறங்கி எழுகையில் கண்களையும் குருடாக்கி விடும் ஓர் ஊமை விடியல் ஊர்வலம் வந்தால் என்ன செய்வது?

     "கண்களைக் கேட்காமலும்
      கால்களைத் தேடாமலும்
      ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு
      தலை கவிழத் திரும்புகிறது மனம்"
என்கிற போது ஓர் அரசியல் ஏமாற்றத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது மனம்.

வேறு என்னதான் செய்வது இக்கையறு நிலையில்..?

     "கவித்தனம் காட்டவே
      எழுதி  எழுதித் தீர்க்கின்றன சொற்கள்" -
எழுதிய சொற்களில் ஏமாற்றத் தீ ஆத்திரங்கொள்கிறது.

இங்கே எல்லாம் நிகழ்கிறது; எவருக்கும் நிகழ்கிறது. சாமானியத் தன்மை இருந்தால் சற்றென்ன..முற்றுமே மோசமாய் நிகழ்ந்துவிடுகிறது. கொலைப் பாதகத்திற்கும் தீ வல்லமை அஞ்சுவதில்லை. அப்போக்கை விளிக்கும்
கவிஞர் எச்சரிக்கைத் தொனியில்,

     "ஆணவப் படுகொலைகளுக்கு
      காரணங்கள் தேவையில்லை.
      சாமானியராய் இருத்தலே போதுமானது

     "அந்தப் படுகளத்திற்கு
      நாளை நாமும் அழைத்துவரப் படலாம்"
என்கிறபோது நம் 'இருத்தல்' நிமித்தம் பல ஐய வினாக்களை எழுப்புகிறது. மேலும்,
      "செத்ததற்குப் பிறகு
        நீதி வழங்கப்படலாம்
        அது
       அநீதியைக் காட்டிலும்
       கோரமாய்க்கூட இருக்கலாம்" என்கையில்
இந்தச் சீழ்ப்பிடித்த அரசியல் அமைப்பின் கீழ்
ஒரு சாமானிய வாழ்வின் கதியின் விதியை
நெஞ்சு நடுங்க வரித்துச் செல்கிறார், கவிஞர்.

மொழியும் நிலமும் உயிர் போன்றது.
இவைதான் உயிர்த்திருத்தலின் தணல் தகிக்கும் அடையாளம்.
இவ்வடையாளம் அற்றிருப்பதென்பது நீர்த்துப்போன உயிர்த்திரவத்தில் நெளியும் செத்தப் புழுக்களுக்கு ஒப்பானது.

இந்த உயிர்த்திருத்தலின் அடையாளத்தை மெய்ப்பித்திருக்க எத்தனை எத்தனை ஈகைகள் இங்கே அரங்கேறியிருக்கின்றன!

ஆனால் அந்த 'தியாக வேளைகளில்' நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்?:

     "உசுப்பேத்தி உணர்வேத்தி
      தட்டேத்தி பாடையிலேற்றியதாய்
      சொற்புணற்சிப் பகர்வோரெல்லாம்
      வாய்ப்பொத்தி நிற்காமல்
      பெருங்களம் கண்டிருந்தால்
      நீங்கள் செத்திருக்க மாட்டீர்கள்தான்" -
     
கவிஞரின் இந்தக் கூற்று அனைவருக்குமான, அனைத்துக்குமான ஒரு குறியீடு.

கவிஞர் இப்படிக் கூறிமுடித்ததும்  வாய்ச்சவடாலிகளான நம்மை ஒரு குற்ற உணர்வு வந்து  குறுக்கிச் செல்வதை அத்தனை எளிதில் கடந்துவிட இயலவில்லை.

நாளை நம்மவர் சாக வேடிக்கை பார்த்து நிற்போம் நாம் என்பதும் நிஜம்தானே..


ஒரு மொழி கருவாகி உருவானபோதே
அறத்தை தன் இதயத்துடிப்பானதாகவும் இயல்பானதாகவும் வைத்திருக்கிற நிலம் நாசமாய்ப் போனதன் வரலாறு ஒன்று உண்டு.

இருக்கும் எல்லாவற்றையும் ஈந்துவிட்டபின்
சுரண்டப்பட வலியை நெஞ்சில் நிறுத்திய வரலாறு விளிக்கும் இனத்தை அடையாளப் படுத்தும் கவிஞர், இப்படிச் சொல்கிறார்.

     "ஆற்றின் அளவறிந்து
      ஈக மறந்து
      ஆறுகளையெல்லாம் ஈந்து
      கையேந்தி வாய்ப்பொத்தி நிற்கிறது
      தென்கோடியில் தொங்கிக் கிடக்கும்
      ஓர் இனம்"
அந்த இனம் எந்த இனம்...
சொல்லவும் வேண்டுமோ...?


சொல்லித் தீருமோ செம்மொழிச் சொல்லும்
சொல் ஊறும் நிலமும்..?!

கவிஞன் முக்காலமறிந்த தீர்க்கதரிசி.
அவன் குரல் ஓர் அறிவிப்புப் பலகை.
அலட்சியம் செய்தல் பின்விளைவில் மாளா வலி மிகும்

உயிர் வார்த்த நிலம் காக்க
ஆக்கிரமிப்பை வெளியேறச் சொல்லிச் சொல் விதைத்த நெஞ்சுக்கு தோட்டாக்களை பரிசளிக்கும் இவ்வதிகாரப் பொழுதில்
கவிஞர் மகாராசனின் 'சொல் நிலம்' பற்றிச் சொல்வதற்கு நிறைய உண்டு.

ஆனால் மனம் அழுகிற கண்ணீரை முற்றாய் சொல்லாய்த் திரித்துவிடுகிற திராணிச்சொற்கள் எட்டுத்திக்கு எங்கினும் இல்லை.

ஆனால் சொல்வதற்கு சொல் ஒன்று உண்டு;

கவிஞர் மகாராசனின்
'சொல் நிலம்' இதய வரி!
*
'சொல் நிலம்'
(கவிதைகள்)
ஆசிரியர்: மகாராசன்
தொடர்புக்கு: 94436 76082
maharasan1978@gmail.com
பக்கம்: 88
வெளியீடு: ஏர்
28, காந்தி நகர்,
செயமங்களம், பெரியகுளம்.
தேனி மாவட்டம் - 625603
பேச: 94436 76082

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஏறு தழுவுதல்: தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் :- இரா.முத்துநாகு.

ஏறு தழுவுதல், மாடுதழுவுதல், மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு திராவிட மரபில் உள்ள தமிழ் குடிகளிடம் எப்படி ஊடுருவி இருந்தது என்பதற்குத் தமிழ் இலக்கியங்களில் பல நூறு சான்றுகள் இருந்தாலும், மஞ்சுவிரட்டைப் பன்னாட்டு முதலாளித்துவ முகம் கொண்ட பானுமதி என்ற நீதிபதி தடை போட்ட பின்பே இது குறித்துத் தமிழ் அறிஞர்களிடம் தனிக்கவனம் போனது. அதுவரை மஞ்சுவிரட்டு என்ற வேளாண்குடிகளின் தொன்மம் சிறுகதைகளில், புதினங்களில், பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாகவே இருந்தவை தனித்த நூலுக்கான அடித்தளத்தை இட்டது.

(மஞ்சுவிரட்டு வழக்கில் ப்பிரேம் ஆப் பேஸ் இல்லை என்று தெரிந்தும் வழக்கை நீதி மன்றம் ஏற்றதிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் இயங்கும் நீதி மன்றங்களுக்குப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் தாக்கம் நீதிமன்ற முதலாளிகளாகவே நீதிபதிகள் மூளைக்குள் முளைத்திருப்பதை பாண்பாட்டு அசைவுத் தளத்தில் இயங்குப்வர்களுக்கு புரிந்தது.)

மஞ்சுவிரட்டு தொடர்பாக வந்த தனிநூல்களில் ஏறுதழுவுதல் என்ற தலைப்பில் வந்த முனைவர் ஏர் மகாராசனின் நூல் சிறந்த நூலுக்கான இடத்தைப் பிடிக்கிறது. (ஏர் மகாராசன், வேர்ச் சொல்லகராதி கண்ட பெரும் தமிழ்ப் புலமான அறிஞர் அருளியின் வார்ப்பு).

மானுட சமூகம் உணவுத் தேடுதலுக்காக வனத்திற்குள் செல்லும் போது விலங்குகளை எளிதில் வேட்டையாட கூட்டு தேவைப்படுகிறது. இங்கிருந்து தான் கூட்டு வாழ்க்கை துவங்குகிறது. இது தான் மனிதனை வேளாண்மை உற்பத்திச் சமூகமாக மாற்றியது . குறிஞ்சி நிலத்தின் விலங்கான மாடு எப்படி மருத, முல்லை நிலத்திற்குரியதானது எனத் துவங்கும் ஆய்வு, பல நூறு தரவுகளை அடுக்கடுக்காகக் கொடுத்துப் படிப்பவர்கள் மூளை வேறு சிந்தனைக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

மருத நிலத்தில் மாடுகள் வேளாண்மைக்குப் பயன்பட்டாலும், கடந்த தலைமுறைவரை குறிஞ்சி நில மக்கள் மாடுகளை வளர்த்து அதை மருத,குறிஞ்சி நில மக்களுக்கு வழங்கினார்கள். தமிழ்ச் சமூகத்தில் திணைகளாகப் பிரிந்து இருந்தாலும், எப்படி ஒருவருக்கொருவர் தொடர்புடைதாக இருந்தது? முதல் தொடர்பே மாடுதான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளை நெருக்கமாகக் கொடுத்துப் பிரமிக்க வைத்துள்ளார் நூலாசிரியர்.

16ம் நூற்றாண்டின் இறுதியில் வந்த பள்ளு இலக்கியத்தில் மாடுகளின் வகைகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
மஞ்சுவிரட்டு மனிதனை விட வலிய விலங்கான மாட்டை அடக்குவது அல்லது கேளிக்கை அல்ல. மானுட சமூகத்தின் தனி மனிதங்கள் குழுக்கள் சேர்த்து வைத்துள்ள நினைவுகளைத் தனது சந்ததிக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுகளே விழாக்கள். அந்த விழாக்களில் மய்யமானது மஞ்சுவிரட்டு.இதன் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என அறிஞர்களின் வாதத்தை எடுத்து வைத்து நூலினைச் செழுமைப்படுத்தியுள்ளார்.

 மருத, முல்லை நிலமே அரசர்களுக்கான கருவூல கேந்திரமாக இருந்தது. இந்தக் கேந்திரத்தின் நிலமும் மாடுகள் மட்டுமே உற்பத்தி செய்திடும் எந்திரம். இந்த எந்திரத்தை எப்படியெல்லாம் ஆண்ட அரசுகள் வேளாண்மை செய்தால் பாவம் என்று தங்களது மநு நூலினைத் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களுக்கும், வேளாண்மை உற்பத்தியை வியாபாரம் செய்திடும் வணிகர்களும் உழு குடி மக்களிடமிருந்து பிடிங்கிக் கொடுத்தனர். வேளாண்மைக் குடிகள் மீது ஏவப்பட்ட வன்முறையால் இவர்கள் வெகுண்டு எழாமல் இருக்க, மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் திசைதிருப்பவே அரசர்கள் பெருங்கோயில்களை உருவாக்கினார்கள். அகரம் மருத நிலத்தின் ஊரின் பெயர். இது எப்படி பார்ப்பனர்களின் அக்ராகாரமானது என்ற நுண்ணிய பார்வையைச் சான்றுகளோடு நிறுவியுள்ளார்.   
         
  தமிழகத்தில் துல்லிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் மஞ்சுவிரட்டு நடத்திய தமிழ்க் குடிகளின் நிலம் எப்படிப் பறிபோனது என்பதைப் போகிற போக்கில் சுட்டிக்காட்டும் இந்த நூலில், நாயக்கர் ஆட்சியில் வந்து குடியேறிய வடுக கன்னடம் பேசும் குலத்தினரிடம் மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு,  சலகெருது என்ற பெயரில்  கொண்டாடப்படுகிறது. இவைகளுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதேபோல் தமிழ் நிலத்தில் விலங்குகள் குறிப்புப் பண்டுவம் (மருத்துவம்) அறிய 'வாகடம்' நூல் இருப்பது போல், தெலுங்கு மக்களிடம் காடமராசா, ஆவுலராசா கதைகள் வாகட நூலுக்கு ஒப்பாக உள்ளது. இந்த நூலைக் காமராசர் பல்கலைக் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அது குறித்த குறிப்புகள் கொடுத்திருக்கலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உழுகுடிகள் கையிலிருந்த மஞ்சுவிரட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதைச் சான்று உரைக்கும் நூல்.

 மஞ்சுவிரட்டுக்கு நீதிமன்றம் தடையைத் தற்காலியமாக நீக்கினாலும் மேலாதிக்கத்தை அரசு எந்திரம் மூலம் ஆழமாகச் செழுத்தி வருவதைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்குப் புரியும்.

''எதிர்க் குரலும் கலகமும் புரட்சியும் உழுகுடிகளிலிருந்தே துவங்கும். அதனால் தான் தமிழகத்தை ஆண்ட தமிழ அரசர்கள் நிலங்களைக் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி உழு குடிகளை அடிப்படை நம்பிக்கையில் வீழ்த்தியது.

இந்த உழுகுடிகள் மஞ்சுவிரட்டில் மாட்டுடன் நேருக்கு நேராக மோதும் திறன் படைத்தவர்கள். தமது உயிரை மாய்த்துகொள்ள தமக்குத்தானே துறவறம் கொண்டவர்கள். இவர்கள் அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டால்,காவல் துறையும் ராணுவத்தையும் தமது துறவறத்தால் உயிர்த்தியாகம் செய்து புரட்சியைக் கொண்டு செழுத்துவார்கள். இதை ஆழமாகப் புரிந்து வைத்துள்ள முதலாளிகள் நீதிமன்றங்கள் மூலமாக மஞ்சுவிரட்டுக்குத் தடை, நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். அதிகாரத்திற்கு ஆகம விதிகள் அடங்கி, பெருமாள் கோயிலும் சிவனும், சிவ ஆலயத்தில் பெருமாளும் இருப்பார். ஆனால் உழுகுடிகளை அதிகாரம் அடக்கியே வைத்திட முடியாது? என மானுடவியலர் ஆய்வில் சொல்லி வருவதை அறுபது பக்கங்களே கொண்ட இச்சிறுநூல், ஏங்கல்ஸின் பொதுவுடமைப் பண்பாட்டு  நூலான குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல் அளவுக்குத் தரவுகளாகக் குவித்து வைத்துள்ளது. தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் என்று அறுதியிட்டு நான் சொல்லுகிறேன்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குடியானச்சி காவியம்.



எப்போதாவது வந்து போகும் அயலான் எனத் தெரிந்திருந்த
ஊர் நாய்கள்
நாலைந்து கூடிக்கொண்டு
ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்ததில்,
நெடுந்தூக்கத்திலிருந்த இரவு குலைந்து போயிருந்தது.

ஊரடங்கிய யாமத்தில் வழிந்தோடிய
குடுகுடுப்பையின் மிடுக்கொலி,
வெள்ளாமை நினைப்பில்
தூங்கிப் போனவளின்
காதுகளில் நுழைந்து
உசுப்பி விட்டுக் கரைந்து போனது.

சீ நாயே தூரப் போவென
அதட்டிக் கொண்டே
வந்தவனை விட்டு
நாய்களும் விலகிப் போவதாய்த் தெரியவில்லை.
தெரு முகனைக்கு வந்துவிட்ட
யாமத்துக் குறிகாரன்
குடுகுடுப்பையை ஊரதிர
உலுக்கி உலுக்கி அடித்தான்.

திறந்தே கிடந்த கதவை
மெதுவாய்ச் சாத்தி வைத்து
கதவிடுக்கின் ஓரத்தில்
தலை சாய்த்துக் காது கொடுத்து
குறிகாரன் மொழி கேட்க
செவக்கி உட்கார்ந்திருந்தாள் குடியானச்சி.

காடு வெளஞ்சிருக்கு;
வீடு நெறஞ்சிருக்கு.
மக்களப் பெத்த மகராசிக்கு
மனசுல கொறயில்ல.
சாமி காக்காட்டியும்
பூமி காப்பாத்தும்.
செத்துப் போன பெண்புள்ள
சாமியாட்டம் துணையிருக்கா;
மவராசனா ஓம்புள்ள இருந்தாலும்
ஒன்னோட மருவாதய
விட்டுத் தர மாட்ட.
ஆக்கித்தான் போடுவ
அடுத்த வசுறு பசியாத்த.
ஒன்னோட கை நனைக்க
ஒரு வாசலும் மிதிக்க மாட்ட.
ஒக்காந்து சோறு திங்க
ஓம்புள்ள அழைச்சாலும்
ஒரு போதும் போக மாட்ட.

காடு கழனி வெள்ளாமைன்னு
ஆடு மாடு கோழியின்னு
மனுச மக்க புள்ளைகன்னு
ஒன்னோட சீவனெல்லாம்
ஒழச்சுத்தான் வாழுமம்மா.
மழ தண்ணி கொறஞ்சாலும்
மனச மட்டும் விட்றாத;
நெலத்த சும்மா போட்றாத.

சொன்னதுல்ல பொய்யிருந்தா
நாளைக்கி வருகையில
நாலு சொல்லு நீ கேளு.
குறியளந்து சொன்னதெல்லாம்
மனச நெறச்சிருந்தா
மறக்காம நெல்லளந்து போடுதாயி.

வாசல் தெளிக்கும்
சாணித் தண்ணியைப் போல,
வாசலெங்கும்
ஈரம் கோதிக் கிடந்தன
குடுகுடுப்பைக்காரனின்
யாமத்துச் சொற்கள்.

குடியானச்சியின் மனக்குறியை அச்சு பிசகாமல் இந்த முறையும்
அப்படியே
சொல்லிப் போனான்.

மறுநாள் காலையில்
வீடு வீடாய்க்
குறிக்கூலி வாங்கியாந்தவன்
தோள் பை கனக்காது
கிடந்ததைப் பார்த்துப் பதைபதைத்தவள்,
மரக்கால் நிறைய நிறைய
நெல்லளந்து போட்டாள்.

சுருக்குப் பைக்குள்ளிருந்து
எருச் சாம்பல் துண்ணூறை
வெறும் மரக்காலில்
கை நிறைய அள்ளிப் போட்டவன்,
ஒனக்கு மட்டும்
எப்புடி தாயி இந்த மனசு என்று
கண்களில் நீர் கசியக்
கேட்டே விட்டான்.

சொல்லளந்து போட்டவனுக்கும் நெல்லளந்து போடுறது தானப்பா
சம்சாரிக வாழ்க்க.
குடியானச்சியின் சொற்கள்
குடுகுடுப்பைக்குள்
தாயொலியாய்
இசைத்துக் கிடந்தன.

நெல்லுக்குள்ளும் சொல்லுக்குள்ளும் நிறைந்திருந்து
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
குடியானச்சி,
தரிசாய்க் கிடக்கும்
நிலத்தை நினைத்தழுது
மனதை விட்டிருப்பாள்.

ஏர் மகாராசன்

சனி, 14 ஏப்ரல், 2018

சொல் நிலம்: முற்போக்கும் நவீனத்துவத்தில் தன்னியல்பான நில மொழியழகும் :- பாரதி நிவேதன்(பா.செல்வ குமார்).

'வெயில் பொழியும்
ஒரு முகத்தைச்
சிதைக்க நினைத்துத்
தனித் தனியாகவே விழுகிறது
மழை முகம்' (ப.78)

 மகாராசன் - களமும் தர்க்கமும் நிரம்பக்கூடியவர். அரசியல் ஆய்வுகளில் அதிக அக்கறைச்  செலுத்தியவர். கவிதை ஆய்வினில் நுழைந்தபின்னர் அவரின் இலக்கிய முகமும் அவருக்கு தெரிந்தது. இதை அவரின் அருகில்  இருந்து கவனித்தவன் நான். ஆனால் அதனை எழுத்தாக முன் வைக்காமல் பேசிக்கொண்டே இருந்த மகாராசன் எழுத்தாக சிச்சிறிதாக எழுதியதும் உண்டு. தொகுப்பாகக் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. அனுபவங்கள் - அனுபவத்தையொட்டி எதிர்பார்க்கப்படும் கனவுகள் என்னும் யதார்த்த வாழ்வியலை எழுதுபவரிடம்  கச்சிதமான புனைவின் தந்திரங்களையும் இத்தொகுப்பில் அடையாளம் காணுகின்றேன்.

 தமிழிய  மார்க்சியம் என்பது இவ்வெழுத்தின் மணம். வானம்பாடியின் தொடர்ச்சியை நா.காமராசனுடனும் தேனரசனுடனும் தன் எழுத்தோட்டத்தில் எண்ணச் செய்பவர் மகாராசன். 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்' ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டாலே - பெயர்ச்சொற்கள் மூலமாகவே கவிதை என்பதை உணர்வு லயங்களின் குறியீடாக நா.காமராசனை இனம் காணமுடியும். காதலும் சமூகமும் மார்கிசியமும் காந்தியமும் கூட அதனொழுங்கில் வந்து விழும். தேனரசனோ பாறையில் பனி வழுக்கிப்போகும் உணர்வுகளைத் தரக்கூடியவர். இதற்கு எடுத்துக்காட்டு 'வெள்ளைரோஜா'.

 மகாராசன், உழைப்பாளிகளின் குரலாக யதார்த்தப் பிரச்சினைகளிலிருந்து அன்றாடம் தப்பிக்க முடியாத அபலைத்தனத்தைக் காட்சிகளில் விரித்தும் அதற்காக மொழியை வரித்தும் எழுதுகிறார். மனிதத் துயருக்கான இயற்கையின் மொழியும் கனம் பெற்றிருக்கிறது. தன் சின்னஞ்சிறிய கிராமத்தின் பாதையை உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதற்குப் படிப்பினைகளை அவரின் பயணங்களும் களங்களும் வாசிப்புகளும் சொல்லக்கூடியது எழுத்தாகியிருக்கிறது. அடர்த்தியான மொழியில் கூக்குரலை தனியழகுப்படுத்துகிறார். இந்த அடர்த்தி என்பதற்கு கவிதைகளைக் குறித்த அவரது ஆய்வும் வாசிப்பும் உதவியிருக்கிறது. தனது ஆக்கங்களுக்குள் சுற்றுச்சூழல் கவனத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறார். நிலம் வெடித்துப்போய் வெப்பத்தைக் கொள்கலனாக்கிவிட்ட இருப்பிலும் வாழ்வின் மீதான பற்றே அவரை முற்போக்கு எழுத்தாளராக அழைத்துச் செல்கிறது. நிலத்தைச் சார்ந்தே காமத்தையும் காதலையும் சொல்ல முடிகிறது. மொழியின் வனப்பு இங்கு இன்றைய கவிதையின் இயங்கு தளத்தின் மீதான சந்தேகம் கொண்ட தன்னியல்பான மொழி ஒன்றைக் கட்டமைக்கிறது. வானம்பாடிகளை மீறுவதும் நவீனத்துவத்தை உரசிச் செல்வதும் இதனால் ஆகிறது. நாட்டுப் புற வாழ்வியலின் மொழியை இயல்பு மொழிக்குள் பூட்டப்படுவதும் நடக்கிறது.

'நீங்கள்

சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளொடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம்' (39)

 யதார்த்தச் சிக்கல்களை நேரடியாகச் சொற்களை அடுக்கி, கவிதையின் குணாதிசயத்தில் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவமளிக்கும் பட்டவர்த்தனத் தன்மையிலிருந்து விலக முயற்சிச் செய்வது கவிதைத் தனத்திற்கு ஒப்புவிக்கக் கூடிய பயணம் என்று எடுத்துக் கொள்ளலாம். சொற்களால் ஆவது என்? என்ற கவனக் குவிப்பிற்கும் 'சொல் நிலம்' தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தமிழ் நில வாழ்வியலை அதன் மையத்திலிருந்து வரித்துக் கொள்வதையும் முதன்மையாக்குகிறது. நிலமிங்கு எழுந்து காலத்தைக் காட்டும் கண்ணாடியாகிறது. சொற்கள் போகும் திசைக்குத் தன்னைக் கரையவிடாமல் தன் அனுபவம் கொண்ட உழல்வையே வரித்துக் கொள்கிறது இத்தொகுப்பு. இது தொழில் முறை மற்றும் பயில் முறைக் கனவுகளைத் தவிர்த்து மனப் பிராந்தியங்களின் ஊடுருவல்களைக் கண்காணித்து  நிலம், மொழி, வாழ்வியல் என்பது பிரக்ஞைக்குரியதாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்துகிறது. இதனால் முற்போக்குக் கலைப்படைப்பின்  முத்திரையாக இருப்பதில் நம்பிக்கையும் அது அப்படித்தானா என்ற சந்தேகத்தையும் உடைக்கும் விதமாக நவீனத்துவ பாய்ச்சலையும் உள்ள கவிதைகளின் சாட்சியமாக இத்தொகுப்பு இருக்கின்றது.

 கண்கள் வாசித்து மனதில் உழன்று அசைபோட வைக்கும் நவீனத்துவமும் , உதடுகள் வழி காதுகள் வழி மனதிற்குள் சென்று சட்டென உணர்ச்சியைத் தூக்கலாக்கும் அரங்குத் தன்மை வாய்ந்த கவிதைகளுமாக இத்தொகுப்பு முதன்மையாக அடையாளப்படுகிறது. இதை இன்னும் விளக்கினால் அகக் கவிதைகள் நவீனத்துவ சாயலையும் புறக் கவிதைகள் வானம்பாடிகளின் மொழியை இன்னும் மேலதிகமாக சமைத்த ஒன்றாகவும் பார்க்கலாம்.

'கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு' (77)

 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்' என்னும் சங்க மரபை 'செம்புலம்' கவிதையில் நிறைந்து கிடக்கிறது. அசலான தமிழ் வாசிப்பை மிகக் கச்சிதமாகக் கொடுத்துவிடும் இக்கவிதையில்தான் மகாராசன் தனக்கான அடையாளத்தை நுழைந்து தேடி வந்தடைய முடியும் என நம்புகிறேன். காதலை - காமத்தை - ஈன்றலை முதல்,கரு,உரிப்பொருளென நவீன கவிதையில் இனம் பிரிக்க முடியாமல் இழைத்துத் தந்து விடுகிறது இக்கவிதை.

 துளிகள், பயணங்கள், ஆலங்கள், வன்மங்கள், உடல்கள், கண்கள், முகங்கள், விதைகள், செடிகள், கொடிகள், புற்கள், வண்டுகள், பறவைகள், வேர்கள், விரிசல்கள், கூடுகள், சொற்கள், அலைகள், மகரந்தங்கள், சீவன்கள், மனிதர்கள் என்று இக்கள் விகுதிகள் நவீனத்துவத்தின் ஒவ்வாமை வானம்பாடிகளின் தவிர்க்க முடியாமை என்பதை இத்தொகுப்பை வைத்துச் சொல்லக்கூடியதும் ஆகிறது. உடனடி வினைகளுக்கப்பால் இக்கள் விகுதிகள் கடும்பாறையாகச் சமைந்துவிடுவது இன்றைய இழப்பு  நேற்றைய விருப்பு என்பதை மகா அறிந்தவர் என்றாலும் அதனிலிருந்து அவர் விலகுவது கவிதைக்குத் தேவையானது.

 கவிதையில் சொல்லவரும் ஓர் ஓர்மைப்புள்ளியை மீண்டும் மீண்டும் விளக்கிச் செல்லும் மரபான பாண்டியத்தத்தை தாண்டுவதும் தேவையானது. இத்தொகுப்பில் மகாராசனின் தன் தந்தை தாய் உறவுகளை அதனதன் வலியுடன் மகரந்த நினைவுகளுடன் பதிவாக்கியுள்ளார். இங்கு நிறைந்திருக்கும் ஈரம் ஈழமாக இன்றைய அரசியல் பிரச்சினையாக, சமூகப்பார்வைகளாக மாறும்பொழுது அதற்கே உரிய எரிமலையாக வெடித்தெழுகிறது. அன்றாட பிரச்சினைகள், இயற்கையின் வஞ்சனை, இழப்புகள் என அவரின் சமகாலப் பார்வையை அதே உரத்த குரலாய் நாம் கடந்து போய்விடுவது நல்லது. காரணம் அது களம். அவரின் மெல்லிய மனதில் உள்ள கவிதை குணங்களைக் கடந்து போகாமல் அதோடு விடாமல் அசை போடலாம்.

'ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்' (76)

 மழைநேரத்து வ.உ.சி விடுதியின் வாசலில் மகாராசன் உட்கார்ந்தால்,   ஈசலைப் பற்றிய அருமையான பேச்சின் அடவுக்கு யாரும் சொக்கிப்போகலாம். நம்மால் இன்னொருவருக்கு அதை விளக்க முடியாது. சில அனுபவங்கள் அடவுகளின் சுவையிலேயே மினுங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறுவழியில்லை. 'ஈசப்பால்' எழுத்தின் அடவு.

'காற்றில் கரைந்து போகும்
அணுத் திரள்கள்
குழல்களில் வழிந்தோடிக்
கசிந்து கசிந்து
உயிர் மூச்சென
உள் நுழைந்து கொள்கின்றன' (28)

 எங்கோ சிக்க வைத்திடும் கவிதைகளைக் குறித்து அச்சப்படுதல் இக்கண மட்டிலோ இன்று மட்டிலோ கழிந்துவிட வேண்டும். நாளை யாரையாவது கொண்டாடும் முகமாக அல்லது தாண்டும் முகமாக அல்லது பாய்ந்து சென்று விடும் முகமாக அமைந்து விட வேண்டும். தாளாத சுமைக்கும் தஞ்சமடைந்து தூங்கிப்போவதற்கும் சிலர் இருக்கிறார்கள். இது ரகசியமில்லை..அவை புத்திசாலித்தனமில்லாதவை. வாழ்வை ஊடறுப்பதை உணர்த்துபவை. இதையெல்லாம் அமிழ்ந்ததால் எழுத வாய்த்தது. எதையும் தூக்கி நிறுத்தல்ல..வலியின் கொண்டாட்டங்களாக. உண்மையில் அதுவே ஆகக்கூடியது. இத்தகைய என்னுடைய போக்கில் இக்கவிதைகளும் உடனிருப்பதில் மகிழ்ச்சி.

புதன், 4 ஏப்ரல், 2018

நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி - நூல் மதிப்புரை :- இரா.முத்துநாகு, இதழியலாளர்.



         தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம் வளர்ந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் சுத்தமாக 'இல்லை' என்ற சொல்லை நீக்கியதே பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் மன்னனை பாடவில்லை. மக்களுக்கு உணவு கொடுத்த உழுகுடி வேளாண் பெருமக்களை கதை மாந்தர்களாக்கி பாடியுள்ளது.

             பள்ளு இலக்கியத்தை ஆய்வு செய்து பேரா.கேசவன் உள்பட பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் பேராசிரியர் அல்லாத சமூக ஆசிரியரான பொதுவுடமை சித்தாந்ததை தமிழ் மண்ணில் இலக்கிய வடிவமாக கொடுத்த வானமாமலை அவர்கள் ''சரஸ்வதி'' என்ற சிற்றிதழில் பள்ளுப்பாடலை பத்துக்கும் மேல் பட்ட தலைப்புகளில் நுண்மான் நுலைபுலமாக ஆய்வு செய்து வடித்துள்ளார். இந்த கட்டுரைகள் இதழிலே முடங்கிக் கிடந்ததை நூல் வடிவமாக்கி வானமாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை விட தமிழுக்கும் அதன் நிலத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பள்ளிப் பள்ளி ஆசிரியர் முனைவர் ஏர். மகாராசன். இவர் பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்குடன், பத்துக்கு மேல்பட்ட நூல்களை எழுதி நம் போன்ற 'சமூக' மாணவர்களை உருவாக்கி வலம் வருகிறார்.

             ''சங்க இலக்கியமான புறாநானூறு, சிலப்பதிகாரம், சமற்கிருத தழுவல் இலக்கியமான அறியப்படும் கம்பன் எழுதிய ராமாயாணம் தவிரத்து உழவனை பாடிய தமிழ் இலக்கியம் முக்கூடல் பள்ளு மட்டுமே. பள்ளுப் பாடல் முழுக்க முழுக்க உழு குடிகளான வேளாண்மை சமூகத்தை மையமாக வைத்து பாடப்பட்ட இலக்கியம். பாண்டிய மண்டலமாக அறியப்படும் மதுரை நாயக்கர் எல்லையில் உள்ள திருநெல்வேலி சீமையே இதன் களம். வேளாண்குடிகளான உழைக்கும் குலமாக இன்றுவரை அறியப்படும் பள்ளர் குலத்தினரே இந்த பள்ளு இலக்கியத்தின் கதாநாயகர்கள்.''                         'பள்ளு இலக்கியம் உருவாக காரணம், 'நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் ஆட்சியில் பார்ப்பன ஆதிகம் அதிகமானதாலும் மன்னனை பாடிய புலவர்கள் மக்களை தேடிப் பாடினார்கள். அதிலும் பண்ணை முதலாளியை பாடவில்லை பண்ணையில் வேலை பார்த்த பள்ளனையும், பள்ளியும் பெருமையாக பாடியுள்ளது இலக்கியம். இந்த இலக்கியம் கூத்து வடிவமாக மக்களிடம் செல்வாக்கு அடைந்தது. அதனை எதிர்த்துள்ளது நாயக்கர் அரசு. ஆனாலும் மக்களிடம் இந்த கூத்து வடித்தின் செல்வக்கை குறைக்க முடியாமல் போனதால் இதை வைணவ தளங்களான சீரங்கம், திருகோட்டியூர், சீவிலிபுத்தூரில் பாடி ஆடிட ஆட்சியாளர் மனம்   போன போக்கில் கம்பன் எழுதிய ராமாயாணம் போல் பள்ளுப் பாடலை தழுவி குருகூர் பள்ளு கோயில் ஒழுகு என மாற்றி எழுதியுள்ளனர்' என வானமாமலை குறிப்பிடுவத அச்சுப் பிசுகாமல் தந்துள்ளார் ஏர். மகாராசான்.

                'பள்ளுப்பாட்டின் வளர்ச்சி என்ற கட்டுரையில் பட்டியல் குலத்தினர் கோயில் நுழைவுக்கான கருவே இந்த பள்ளுப்பாடல் தான். சீரங்கத்தில் பள்ளுப்பாடலுக்கு எதிர்பு கிளம்ப சீரங்க பெருமானே அரயர் (நடன மாதர்) என்பவதை பள்ளனிடமும் பள்ளியிடமும் பாடல் கற்றுவரச் சொன்னதாகவும் அதை கற்று வந்த அரயர் சீரங்க பெருமாள் முன் ஆடியதாகவும் கோயில் ஒழுகு சொல்லுகிறது. இதை தனது ஆய்வில் கோயில் நுழைவு போராட்டம் என்பது பிரிட்டீஷ் இந்தியாவுக்கு முன்பே நடந்திருக்கிறது அது தான் பள்ளுப்பாடல்' என விவரிக்கிறார்.

              சோழர் ஆட்சி திராவிட நாடுகள் தாண்டி வளர்ந்த போது இடங்கலை வலங்கலை பிரச்சனை நீடித்தது. இதன் நீட்சியாக விஜயநகர ஆட்சியில் தொடர்ந்தது. இது இருக்க வைணவ சைவ மார்க்க சண்டையும் சோழர் கால ஆட்சியில் போல் நடந்தது. வைணவ சைவ சண்டைகளில் உழு குடிகள் எப்படியெல்லாம் சீப்பாட்டார்கள் என்பதை நூல் விவரிக்கிறது.

                 'பள்ளு இலக்கியத்தில் அரசின் பண்ணையாள் (முதலாளி) ஏச்சு பேச்சாக ஏளமாக உள்ளதை அருமையாக சுட்டிக்காட்டி படிப்பவர்களை பொதுவுடமை சித்தாந்த சிந்தனையை நம் மூளைக்குள் முனைப்பு காட்டுக்கிறார் ஆசிரியர் . முதலாளிகளை நகையாடுவதை   கிராமங்களில் இன்றும் கோயில் விழாக்களில் போடப்படும் ராசா ராணி ஆட்டத்தில் 'ராசா வேடமிட்டவர் தோட்ட முதலாளியாகவும், உழவனாக கோமாளி வேசமிட்டவரும் சிறுகதையாடல் வைத்து பாடலோடு வசனம் இருக்கும் அதில் முதலாளியைப்பார்த்து ''ஏ மாப்பிள்ளை, ஏலே தோட்டகார வெண்ணை உனக்கென்ன பிறங்கையை கட்டிக்கிட்டு வரப்பில போவ ... குனிஞ்சு வேலை செய்தாத்தாண்டா விளையும்' என்றும் நாட்டாமையை 'ஏ மாப்பிள நாட்டாமை லூசு நாட்டாமை செவுட்டு பயலே' இப்படியான வசனங்களை கோமாளி பேசுவார். இந்த வசனங்கள் பள்ளுப்பாட்டின் நீட்சியாகவே கிராமிய கலைகளை ஆய்வு செய்த மறைந்த நாட்டுப்புறவியல் பாடகர் பேரா.குணசேகரன் குறிப்பிடுவார்.

                     அறுபத்தி ஐந்து பக்கத்தில் சமூகத்தின் தேவையை அறிந்து பள்ளுப் பாடலின் ஆழத்தை வழங்கி தமிழை தமிழ் சமூகத்தை செழுமைப் படுத்தியுள்ளது இந்த நூல். நல் பணியை செய்த திரு. ஏர். மகாராசனை எனது ஆசான் தமிழ்குடிமகன் சொல்லில் வாழ்த்துவதென்றால் பெரும்பேராசியர் வாழ்க எம்மான் வையகத்தே என வாழ்த்துவோம்.   

பதிப்பகம் ; ஆதி , 9994880005, விலை உரூபா - 60

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீர்முலைத் தாய்ச்சி.

மணல் உடுத்திய பாதைகள்
வெறும் ஆறுகள் மட்டுமல்ல;
கருந்தோல் மேனிகளில்
உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்
அரத்த நாளங்களைப் போல,
நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்
நீர் நாளங்கள்.

கடைமடை நிலத்தாளின்
மானம் போர்த்திய
நீர்ச் சேலைத் துணிகள்.

மழையாள் வகுந்தெடுத்த
உச்சந்தலை நீர்க்கோடுகள்.

பசுந்தாள்
வேர் நாவுகளை நனைக்கும்
உமிழ் நீர்ச் சுரப்பிகள்.

தொடை விரித்து ஈனும்
தாயவள் போல்,
உழவும் குடியும்
நெல்லும் சொல்லும் ஈன்ற
நீர்முலைத் தாய்ச்சிகள்.

பச்சிளம் பிள்ளையைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளைப்
புணரத் துடிக்கும்
இனப் பகைக் குறிகளின்
விதைகளை அறுத்தெறிந்து
அரற்றுகிறாள் காவிரித் தாய்ச்சி.

நீதி மறைத்த அதிகாரத்தை
ஒற்றைச் சிலம்பால் எறிந்து
ஒரு முலை திருகி எரிந்தாள்
திருமாவுண்ணி.

அதிகாரம் மறுத்த நீதியை
நீர்ச் சிலம்பால்
உடைத்தெறிந்தாள்
நிலத் தாய்ச்சி.

காவிரி!
நீர்முலைத் தாய்ச்சியவள்
தீயும் மூட்டுவாள்.

சனி, 17 மார்ச், 2018

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள் :- ஜமாலன்.

இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.

ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களது
Related image
”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100