சனி, 28 ஆகஸ்ட், 2021

பாடத்திட்டக் குழுக்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையும் - மகாராசன்

ஒரு படைப்பை, கல்வி நிறுவனங்களில் பாடமாக வைப்பதற்கும் நீக்குவதற்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் வழிகாட்டல் குழுவுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது எனில், அந்தக் குழுவின் அதிகாரத்தோடு சாதியமும் துணை அதிகாரமாக மறைவில் இயங்கக்கூடியது. 

பாடத்திட்டம் வைப்பதற்கும் நீக்குவதற்கும் பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் இருப்பதைப்போல, சாதிய மதவாதக் காரணங்களும் - சாதிய மதவாதக் கண்ணோட்டங்களும் மறைவில் இருக்கவே செய்கின்றன. 

பாடத்திட்டக் குழுவிலும், வழிகாட்டுக் குழுவிலும் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார்? அந்தக் குழுக்களில் எல்லாப் பட்டியல்களிலிருந்தும் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? வழங்கப்படவில்லை; வழங்கப்படுவதுமில்லை. 

பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் இடம்பெறும் வல்லுநர்களைச் சமூகப் பிரிவு வாரியாகப் பங்களிப்பு செய்வதற்குச் சட்டக் குறிப்புகள் திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்பதால், அந்தக் குழுவில் மேட்டிமை / உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆக்கிரமிப்புதான் நிகழும்; அப்படித்தான் நிகழ்ந்தும் வருகிறது. 

பெரும்பாலான கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்கள் மற்றும் வழிகாட்டும் குழுக்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதில்லை. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? இருப்பதில்லை. 

அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள வல்லுநர்களின் பட்டியலை ஆராய்ந்தால், அதில் எஸ்.சி தரப்பினர் எத்தனை பேர்? பி.சி தரப்பு எத்தனை பேர்? எம்.பி.சி தரப்பு எத்தனை பேர்? மதச்சிறுபான்மையினர் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர்? என்பது தெரியவரும். 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது, எஸ்.சி/எஸ்.டி தரப்புக்கு மட்டுமல்ல; எல்லாத் தரப்பினரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருவதே சமூகநீதி. 

உள் ஆளாக இருந்தாலும், புறவெளி ஆளாக இருந்தாலும் வகுப்புவாரி சமூகநீதியைப் பேசுவதில் தவறேதும் இல்லை. 

வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பதுதான் சமூகநீதியின் குரலாகும்; அது குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான குரலாகாது. 

சமூக அடுக்கு நிலையில் பின்தங்கியவர்களின் படைப்பு மட்டுமல்ல; அவர்களைப் பாடத்திட்டக் குழுக்களிலும் பிரதிநிதித்துவ அடிப்படையில் வல்லுநர்களாக இடம்பெறச் செய்திடக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே நேர்மையான சமூகநீதிக் குரலாகும். 

முனைவர் ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

28.08.2021.


சனி, 21 ஆகஸ்ட், 2021

தமிழ்ப் பெரியார் வ.உ.சி: தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் வடிவம் :- கதிர்நம்பியின் சிதம்பர வேங்கை நூலுக்கான அணிந்துரை - மகாராசன்


பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த உலகம் இன்னும் வாழ்கிறது எனில், தனக்கென வாழாமலும், தன் வாழ்வுக்கென முயலாமலும், பிறருக்காகவும் பிறரது வாழ்வுக்காகவும் தமது வாழ்வைக் கொடையளித்து ஈகம் செய்த மிகச்சில நல்ல மனிதர்கள்தான் காரணம் என்பதைப் புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. 

உண்டால் அம்ம, இவ்வுலகம்; 
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; 
பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்; 
அன்னமாட்சி அனையராகித் 
தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி. 

இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும், அதனை, இனிது என்றென எண்ணிக்கொண்டு தான்மட்டும் உண்ணாதவர்களும்; உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளாதவர்களும்; பொதுத்தொண்டு செய்வதற்குப் பிறர் அஞ்சி ஒதுங்குவதுபோல ஒதுங்காமல், நற்பணிகளைச் செய்யும்போது தயங்காதவர்களும்; பொதுத் தொண்டால் புகழ் வரும் எனில், அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுத்து, பழி வருமெனில் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மறுப்பவர்களும்; அயராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களும் வாழ்ந்ததாலும் வாழ்வதாலும்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

தமக்குக் கிடைத்த வாழ்வை, தமிழ்ச் சமூகத்தின் இயங்குதலுக்கு ஒப்பளித்த  வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈகத்தாலும்தான் தமிழ்ச் சமூகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொல்வதில் பிழையேதும் இல்லை. ஆம், தமிழ்ச் சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் வ.உ.சி ஆவார். 

வாழும் காலத்தில் துரோகமும் தண்டனையும் வறுமையும் தம்மைச் சூழ்ந்து துரத்தித் துரத்திப் பின்தொடர்ந்து வந்தாலும், அறிவையும் ஆளுமையையும் தன்மானத்தையும் இழந்திடாத பெருந்தமிழ் அறிஞராகத் திகழ்ந்தவர் வ.உ.சிதம்பரனார். 

சாதியப் பெருமிதம் பேசும் பலரும், சாதிய மேட்டிமையின் அடையாளமாகத்தான் வ.உ.சிதம்பரனாரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

உண்மையில், மேட்டிமைச் சாதியத்தின் அடையாளமாக வ.உ.சிதம்பரனார் ஒருபோதும் இருந்ததில்லை; இருந்ததாகவும் சான்றுகள் இல்லை. சுயசாதியைக் கடந்தும்; சுயசாதியின் எதிர்ப்பைச் சுமந்தவராகவும்தான் இருந்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். அதனால்தான், அவரது சாதியினர் மட்டுமல்லாமல், எல்லாச் சாதியினராலும் மதிக்கப்பட்டிருக்கிறார். 

'மேம்படு  பள்ளனை ஏதமில்லாமலே எண்ணிலா வழக்கில் அமிழ்த்தினர் போலிஸார்; அனைத்தினும் திருப்பினேன்' என்றொரு குறிப்பைத் தமது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். 

1900 காலகட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கி, இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்திப் பல தடவை அலைக்கழிக்க வைத்திருக்கின்றனர். 

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன், தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த விவசாயி, ஒரு நாள்  உலகம்மன் கோயில் அருகே மயக்கமடைந்து சரிந்து விழுந்திருக்கிறார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த சமயத்தில், தற்செயலாக உதவ முன் வந்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி, தனது மனக் குமுறலையும்  தனக்கு நேர்ந்த பிரச்னைகளையும் விலாவாரியாக வ.உ.சிதம்பரனாரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்திவிட்டு, அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு விவரங்களைக் கேட்டுக்கொண்ட வ.உ.சிதம்பரனார், இனி மேல் தாங்கள் நீதிமன்றப் படி ஏற வேண்டியது வராது; நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப்படாமல் வீடு போய்ச் சேருங்கள்  என்று கூறிவிட்டுப் போயிருக்கிறார்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயியின் வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி கிடைத்திருக்கிறது. அந்தக் செய்தி ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்ததும், அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடியிருக்கிறார். 

அந்த சமயத்தில், அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறியிருக்கிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே உலகநாதப் பிள்ளையின் வாரிசான அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால், இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம் எனும் வாய்மொழித் தரவை, எழுத்தாளர் சோ.தர்மன் பகிர்ந்ததாக ஆய்வாளர் இரெங்கையா முருகன் கூறுவார்.

அதேபோல, சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்து உணவளித்து வந்த நிகழ்வையும் ஆய்வாளர் இரெங்கையா முருகன் பதிவு செய்திருப்பார்.   தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் இராமையா தேசிகரைப் பாதுகாத்து வந்த இந்தச் செய்தியானது தெரியவர, அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது. 

'சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென் தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.

ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால் தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்.

குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென் தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்.

கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால் ‘அவளிடத்’துரைத்திட அடுக்களை சென்றேன்.

‘எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும் உருவம் முதலிய ஒன்றினும் பேதம் மருவுதலிலாமை மலை போல் கண்டும், கற்பனை யாகக் காணும் குலத்தின் சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய! துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண் இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம் ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின் பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர் என, வ.உ.சி.யின் சுயசரிதை இதைப் பதிவு செய்திருக்கிறது.  

பார்வை இழந்த அன்னாருக்கு இதுவரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்குச் சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டியும் விட்டிருக்கிறார் வ.உ.சி.யின்  மனைவி. இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிடப் பயந்திருக்கிறார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள். 

அதேபோல, வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரைத் தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றிப் பாதுகாத்திருக்கிறார் வ.உ.சி. தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வாராம். அச்சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்குப் பயந்து, அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்களாம். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின்படியே நானோ துறவி; துறவிக்கு ஏது சாதி என்று கூறியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. 

இவ்வாறாக, தனிமனித வாழ்விலும் பொதுவாழ்விலும் சாதி பேதங்களைக் கடந்தவராகவும், சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவராகவும்தான் வ.உ.சிதம்பரனார் இருந்திருக்கிறார். அதெல்லாவற்றையும்விட, தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியலின் முன்னத்தி ஏராகவும் வ.உ.சிதம்பரனார் முன்நின்றிருக்கிறார். 

ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வ.உ.சிதம்பரனாரின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பானது, புறநிலையில் இந்திய விடுதலையையும், அகநிலையில் தமிழ்த்தேசக் கட்டுமானத்திற்கான கருத்தியல்களையுமே உள்ளீடாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது, வ.உ.சிதம்பரனாரின் போராட்ட வாழ்வும், செயல்பாடுகளும், சிந்தனைகளும், கனவுகள், வேட்கை என அனைத்துமே தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் நோக்கிலும் பாங்கிலும் அமைந்திருக்கக் கூடியவை. 

வ.உ.சிதம்பரனாரின் கடந்த காலத்திய வாழ்வைப் பேசுவதும் எழுதுவதும் அவருக்கு மதிப்பளிப்பன என்றாலும், அவரது அகநிலையில் உறைந்து கிடந்த தமிழ் அடையாளச் சிந்தனை மரபை நிகழ்காலத் தமிழ்ச் சமூக இயங்குதலுக்குப் பொருத்திக் காண்பதுதான் வ.உ.சிதம்பரனாருக்கு இன்னும் கூடுதலாக மதிப்பளிக்கும். 

தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் முன்னோடிகளுள் வ.உ.சிதம்பரனாரும் ஒருவர். தமிழ்த்தேசிய அரசியலை, மரபும் நவீனமும் கலந்த தற்சார்பு அரசியலாக வடிவமைக்க உதவும் கருத்தியல்களை வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைகள் உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. 

வ.உ.சிதம்பரனாரின் செயல்பாடுகளும் எழுத்துகளும் பேச்சுகளுமான சிந்தனைப் புலப்பாடுகளில் காணலாகும் தமிழ்த்தேசிய அரசியலுக்கான கருத்தியல் உள்ளீடுகளை, பேசுபொருளாக்கி முன்னெடுக்க வேண்டிய தேவை நிறையவே இருக்கின்றது. அந்தத் தேவையை உணர்ந்து உருவாக்கி இருக்கும் நூல்தான், பொறியாளர் கதிர் நம்பி எழுதியிருக்கும் 'சிதம்பர வேங்கை' எனும் இந்நூல். 

வ.உ.சிதம்பரனார் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசவில்லை. ஆனால், அவரது சிந்தனைப் புலங்கள் யாவும் தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல்களே உள்ளடங்கி இருப்பதை இந்நூல் தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கிறது. 

மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, வேளாண்மை உற்பத்தி, இதர உற்பத்திகள், வணிகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட யாவற்றிலும் தற்சார்புப் பொருளியல் கண்ணோட்டத்தையும் அதற்கான கட்டமைப்பையும் பெருங்கனவோடு நிகழ்த்திக் காட்டிய வ.உ.சிதம்பரனாரை, தமிழ்த் தேசிய அரசியலுக்கான அடையாளமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் பெருவேட்கையாய் இருக்கின்றது. 

வ.உ.சிதம்பரனார் வேட்கை கொண்டிருந்த ஒரு தேசிய இனத்திற்கான தற்சார்புப் பொருளியல் கட்டுமானத்தை, தமிழீழத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆவார். அதனால்தான், வ.உ.சி குறித்துத் தேவநேயப் பாவாணர் பாடிய பாடல் வரியிலிருந்து 'சிதம்பர வேங்கை' எனும் சொல்லாடலை நூல் தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். 

புலிக்கு வேங்கை எனும் பெயரும் உண்டு. வ.உ.சிதம்பரனாரின் தற்சார்புப் பொருளியல் கட்டமைப்பை - அதன் கருத்தியலைத் தமிழீழத்தில் வடிவம் கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகள் ஆவர். தமிழீழத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்சார்புப் பொருளியல் கட்டமைப்புக்கான  நகர்வு, தமிழ் நாட்டிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் சிதம்பர வேங்கை நூலாக வெளிவருகின்றது. 

சிதம்பரம் பிள்ளை, மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில், இரு வர்க்கத்தாரிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப் பின் ராஜ துவேஷத்தை ஊட்டும் என்று தீர்ப்பினை எழுதியது ஆங்கிலேய வல்லாதிக்கம். 

எம் சிதம்பர வேங்கையோ, தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் மூலவர்களுள் ஒருவர்; தமிழ்த்தேசியத் தற்சார்பைச் சிதைக்கும் உலகமயச் சுரண்டலுக்கு எதிரான கருத்தியல் ஆயுதம் என்பதைத் தமிழ்கூறும் நல் உலகத்திற்கு அடையாளப்படுத்துகிறார் பொறியாளர் கதிர்நம்பி. அவ்வகையில், சாதியவாதிகளின் கண்ணோட்டத்திலிருந்து வ.உ.சிதம்பரனாரை மீட்டெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் முன்னோடியாக முன்னிறுத்தும் பெருங்கடமையைச் செய்திருக்கும் பொறியாளர் கதிர்நம்பி  அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது. 

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் இந்நூல், அன்னாருக்குப் புகழ் மாலை சூட்டுவதோடு, அன்னாரின் கருத்தியலைப் பரவலாக்கத் துணை புரியும் நூலாயுதமாகவும் திகழ்கிறது. 

தமிழ்த்தேசிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து வ.உ.சிதம்பரனாரை அணுகுவதற்கு உதவும் மிகச்சிறந்த வழிகாட்டியாக, பொறியாளர் கதிர்நம்பி அவர்களின் இந்த நூல் பெருந்துணை புரியும். 

அறிஞர் தொ.பரமசிவன் ஆய்வு வட்டம் சார்பாக தமிழ்த்தேசிய அரசியலுக்கான அறிவுசார் உரையாடல்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிற பொறியாளர் கதிர்நம்பி அவர்கள், இதுபோன்ற நூல்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும்; எழுதுவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. 

வ.உ.சிதம்பரனாரின் மீது பெருமதிப்பையும் பேரன்பையும் எமக்குள் பாவியவர்கள் ஆய்வாளர்கள் குருசாமி மயில்வாகனன், இரெங்கையா முருகன் ஆகியோர்தான். அந்த வரிசையில், பொறியாளர் கதிர்நம்பி அவர்களும் வ.உ.சிதம்பரனாரைக் குறித்து இந்நூல் வாயிலாக எமக்குள் நிறையப் பாவியிருக்கிறார். 

தமிழரின் அறிவு மரபை வளப்படுத்திக் கொண்டிருக்கும் பொறியாளர் கதிர் நம்பி அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துகள். உள்ளன்போடு அணிந்துரை வழங்க வாய்ப்பளித்தமைக்கு அன்பு கலந்த நன்றி. யாப்பு வெளியீடாக இந்நூலைப் பதிப்பித்திருக்கும் தோழர் செந்தில் வரதவேல் அவர்களுக்கும் தோழமை நன்றி.

சிதம்பர வேங்கை சீறிப் பாயட்டும். 

தோழமையுடன் 

முனைவர் ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

21.08.2021.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீர்முலைத் தாய்ச்சிகள்: மகாராசன்

மணல் உடுத்திய பாதைகள்          வெறும் ஆறுகள் மட்டுமல்ல; கருந்தோல் மேனிகளில்உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்          அரத்த நாளங்களைப் போல,  நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்நீர் நாளங்கள்.     

கடைமடை நிலத்தாளின்                  மானம் போர்த்திய                                  நீர்ச் சேலைத் துணிகள்.             

மழையாள் வகுந்தெடுத்த      உச்சந்தலை நீர்க்கோடுகள்.      

பசுந்தாள் வேர் நாவுகளை நனைக்கும்உமிழ் நீர்ச் சுரப்பிகள். 

தொடை விரித்து ஈனும்                தாயவள் போல்,                                  உழவும் குடியும்                                நெல்லும் சொல்லும் ஈன்ற      நீர்முலைத் தாய்ச்சிகள்.

ஏர் மகாராசன்.


நன்றி:

ஓவியம்: இரவி பேலட்

வியாழன், 15 ஜூலை, 2021

என் எழுத்துகளின் நிறம்: மகாராசன்


மானுடத்தின் பாடுகளையும் நிலத்தின் பாடுகளையும் பண்பாட்டு நோக்கில் எடுத்துரைப்பதே எனது எழுத்துகளின் ஆத்மா என்று உணர்கிறேன். அந்த வகையில் மானுட விடுதலைக்கான அரசியல் தத்துவத்தின் நிறமான சிவப்பும், நிலம் உள்ளிட்ட சூழலியல் காப்புக்கான நிறமாகப் பச்சையும் சேர்ந்த செம்பச்சை நிறம் தான் எனது எழுத்துகளுக்கான நிறம். 

குறிப்பாக, தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் மரபில் காணலாகும் அறத்தையும் அழகியலையும் அரசியலையும் தனித்துவமாக அடையாளப்படுத்துவதே எனது எழுத்துகளின் தனித்துவமாகக் கருதுகிறேன்.

ஏர் மகாராசன்

**

ஒளிப்படம்: நித்யன்

திங்கள், 5 ஜூலை, 2021

விதைத்திருக்கிறேன்; முளைத்திருக்கிறது : மகாராசன்


விதைத்துக் கொண்டே இருங்கள். முளைத்தால் மரமாகட்டும்; இல்லையேல், மண்ணுக்கு உரமாகட்டும் என்பார் அய்யா நம்மாழ்வார். எமது கற்பித்தல் பணியில் தொடர்ந்தும் விடாமலும் விதைத்துக்கொண்டேதான் இருக்கிறேன். தேனி மாவட்டத்தில் தனியார் பதின்மப் (மெட்ரிக்) பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைத் தமிழாசிரியர்களுக்குப் புதிய தமிழ்ப்பாடநூல் தொடர்பாகப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர்களிடமும் எப்போதும்போல விதைத்துவிட்டு வந்தேன். அவர்களிடமும் அது முளைத்துக் கொண்டிருப்பது அறிந்து நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்.

அந்த ஆசிரிய நண்பர்களின் பதிவு வருமாறு: 

தேனியில் ஒரு பள்ளியில் புதிய பாடப் புத்தகத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. எமக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்குக்குத் தாங்கள் வழங்கிய வழிகாட்டுதல் வழியில் பயணித்துக் கொண்டிருப்போருக்கு, உங்கள் ஒவ்வொரு சொல்லின் பயன் எவ்வளவு என்று உணர்ந்து கொள்ளமுடியும். நான் உணர்கிறேன்; பயணிக்கிறேன். அதன் பயனை ஓராண்டில் என்னால் உணர முடிந்தது. 

என்னிடம் பெரும்பாலான நண்பர்கள் கேட்கும் கேள்வி இதுதான். நீங்கள் எப்படி தூய தமிழில் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்று. (குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள்) அவர்களிடம் நான் சொல்லும் பதில், மரியாதைக்குரிய மகாராசன் ஐயா நீங்கள்தான் என்பதை மார்தட்டிச் சொல்வேன். உங்களின் அன்றைய ஒருநாள் வகுப்பு நிறைய மாற்றங்களை உருவாக்கின. 

புத்தக வாசிப்பு ஆர்வம், நூல்கள் சேகரிப்பு, தேர்வுகளுக்குத் தயாராகும் முறை, மூலநூல் வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது. இதுவரை தங்களுடைய இல்லத்தில் நான்கு, ஐந்து முறை சந்தித்திருக்கிறேன். அப்பொழுது செம்பச்சை நூலகத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுதும் தாங்கள் கடந்து வந்த பாதைகள், விடாமுயற்சிகள், வெற்றிக்கான வழிகாட்டுதல் அனைத்தும் கல்வெட்டுப் போல் மனதில் இன்றும் அழிக்க முடியாதவை. 

முன்பெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாமா என ஐயம் தொற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை ஐயா. நூறு விழுக்காடு வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கை உள்ளது. பெரும் மகிழ்ச்சி ஐயா, நன்றி.

திரு.பிரபு,

முதுகலைத் தமிழாசிரியர்,

வல்லி வரதராஜ் பதின்மப் பள்ளி, தேனி.

*

அந்த வகுப்பில் நானும் கலந்துகொண்டேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படியொரு பதிவு அந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது மட்டுமின்றி, என்னைப்போன்ற அனைவருக்கும் மறக்கமுடியாத மறுக்கவும் முடியாத அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரபு ஐயா அவர்களுக்கும், தூங்கும் புலியைப் பறை கொண்டு எழுப்புவோம்; தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்புவோம் என்ற வரிகளுக்கு இணங்க, தமிழோடு இரண்டறக் கலந்துள்ள மகாராசன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து வழிகாட்டுங்கள் என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

திருமதி தனலட்சுமி,

துணை முதல்வர்,

பத்மா ராமசாமி பதின்மப் பள்ளி, தேனி.

சனி, 3 ஜூலை, 2021

ஏறு தழுவுதல்: எனது நூலும் தமிழ்ப்பாட நூல் எடுத்துரைப்பும் - மகாராசன்








தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பிற்கான புதிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் ஏறு தழுவுதல் குறித்த கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஒன்பதாம் வகுப்பு பயிலும் எனது மகள், அக்கட்டுரையைப் படித்து விட்டு, 'அப்பா, இது நீங்க எழுதின ஏறு தழுவுதல் புத்தகத்துல எழுதியிருக்கிற செய்திகளா இருக்கு. நீங்களா இந்தக் கட்டுரைய எழுதினீங்க? என்று கேட்டார். நானும் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். 

நான் எழுதிய 'ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' என்ற நூலில் விவரிக்கப்பட்ட செய்திகளே அந்தக் கட்டுரையில் நான்கு பக்க அளவில் சுருக்கிச் சொல்லப்பட்டுள்ளன. எனது நூலில் உள்ள சில பல பத்திகளும் கூட அப்படியே இடம்பெற்றுள்ளன. இளந்தலைமுறை ஏறு தழுவுதல் பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பொது நோக்கில் இந்தக் கட்டுரை பாடப்புத்தகத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது தான். ஆயினும், அந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் கூட எனது நூலின் பெயரோ அல்லது எனது பெயரோ இடம் பெற்றிருக்கவில்லை. எனது நூல் என்றில்லாவிட்டாலும், அந்தக் கட்டுரைக்கான தரவுகள் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்கிற குறிப்புகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். 

பாடத்திட்ட உள்ளடக்கம், வடிவமைப்பு போன்றவை மேம்பட்ட நோக்குகளோடு அமைந்திருக்கிற நிலையில், ஒரு கட்டுரைத் தரவுக்கான பார்வை நூல்கள் எவையெனக் குறிப்பிடாமல் இருப்பது ஆய்வு முறையியலைக் கேள்விக்கு உள்ளாக்கக் கூடும். இந்தக் குறைபாட்டை மறுபதிப்பு செய்கிற போது சரி செய்திட வேண்டியது பாடத்திட்ட வல்லுநர்களின் கடமையாகும். குறைந்தளவு, பார்வை நூலாகக் கூடக் குறிப்பிடலாம்.

ஏறு தழுவுதல் பண்பாடு பன்னெடுங்காலமாய் நிகழ்த்தப்பட்டு வந்து கொண்டிருந்தாலும், அந் நிகழ்த்துப் பண்பாட்டைக் குறித்துச் சொல்லிக் கொள்ளும்படியாகத் தமிழில் நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. இந்தச் சூழலில் தான், தோழர் பாவெல் பாரதி அவர்கள் தொகுத்தளித்த ஏறு தழுவுதல் - சல்லிக்கட்டு : தொன்மை பண்பாடு அரசியல் எனும் தொகுப்பு நூல் கருத்துப் பட்டறைப் பதிப்பக முயற்சியால் வெளிவந்தது. 

அதே வேளையில், ஏறு தழுவுதல் பண்பாட்டைக் குறித்து வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் நூல் தமிழில் வெளிவந்திராத சூழலில், அத்தகையக் கண்ணோட்டத்தில் நான் எழுதிய நூலே ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூலாகும். 

ஏறு தழுவுதல் பண்பாட்டுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், அப்பண்பாட்டைக் குறித்து மிகையாகவும் எதிர்மறையாகவும் கருத்து வாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், அப் பண்பாட்டின் தோற்றம் குறித்தும், மனித சமூக உற்பத்தியில் அப்பண்பாட்டின் வகிபாகம் குறித்தும், நிலத்தோடு அப் பண்பாட்டிற்கு உள்ள தொடர்பு குறித்தும், குறிஞ்சி முல்லை மருதம் பாலை என்கிற நானிலம் சார்ந்த மக்களோடு அப் பண்பாட்டின் உறவு நிலைகள் குறித்தும் விளக்கப்படுத்தி வெளிவந்த நூலே அதுவாகும். 

2017 சனவரியில் நடைபெற்ற ஏறு தழுவுதல் பண்பாட்டு மீட்சிக்கான போராட்டத்தில் இந்நூலின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் தீவிர வாசிப்புக்கு உதவியாக அமைந்தன. இந்நூல் அதே காலகட்டத்தில் அடவி பதிப்பகத்தால் அச்சு நூலாகவும் வெளிக்கொண்டு வரப்பட்டது. 

ஏறு தழுவுதல் குறித்து வெளிவந்திருக்கும் நூல்களுள் நான் எழுதியதும், பாவெல் பாரதி தொகுத்த நூலும் மிக முக்கியமானவை.

ஆகவே, பாடத்திட்ட வல்லுநர்களும், பாடப்பகுதி எழுதக்கூடியவர்களும் கட்டுரைக்கான தரவுகளுக்கு உதவிய நூல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது, அக்கட்டுரைக்கான உரிமை கோரலோ, பாடத் திட்டக் குழு மீதான விமர்சனமோ அல்ல. ஏறு தழுவுதல் பண்பாட்டைக் குறித்து இளந்தலைமுறை மாணவர்களின் அதிகப்படியான தேடலுக்கு உதவுக் கூடும் என்பதாலேயே.

பிற்குறிப்பு:

தமிழ்ப்பாட நூலுக்கு ஏறு தழுவுதல் பற்றிய கட்டுரையை எழுதிக் கொடுத்த ஆய்வறிஞர் இரெங்கையா முருகன் அவர்கள், நான் எழுதிய ஏறுதழுவுதல் நூலை அடிப்படையாக வைத்தே அந்தக் கட்டுரை எழுதியதாகவும், அந்தக் கட்டுரையில் எனது நூலைத்தான் பார்வை நூலாகக் குறிப்பிட்டதாகவும் தகவலைப் பகிர்ந்திருந்தார். கடைசியில், கட்டுரை எழுதிய அவரது பெயரும் இல்லை; நூலாசிரியர் எமது பெயரும் இல்லை. பாடநூல் வல்லுநர்களிடம் இதுபற்றிய முறையீட்டை முன்வைத்தாலும், எந்த மாற்றங்களும் நடைபெறவில்லை.

ஏர் மகாராசன்

திங்கள், 28 ஜூன், 2021

செத்தும் கொடை கொடுத்த வள்ளல் ஆய்வறிஞர் குமரி மைந்தன் : மகாராசன்


செத்தும் கொடை கொடுத்த வள்ளல்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். எம் வாழ்வில் முதன்முதலாக நேற்றுதான் அதை அனுபவித்திருக்கிறேன். 

*

வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலேயே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத, இயலாத, கூடாத மனிதர்கள் பேரளவுக்கு நிரம்பிய இந்தச் சமூக அமைப்பில், தமது இறப்புக்குப் பிறகும், தாம் கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமெனப் பிள்ளைகளிடம் சொல்லி வைத்துச் சென்றிருக்கிற ஒரு மகத்தான மனிதரை நினைக்க நினைக்க, அன்னாரைக் குறித்த பெருமித உணர்வுப் பெருக்கு மேலிட்டுக்கொண்டே வருகின்றது. 

வாழ்கின்ற காலம் முழுமையும் தமிழ்ச் சமூகம் குறித்த அக்கறைப்பாடுகளுடன் ஆய்வுப் பணிகளையும் சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வந்த ஆய்வறிஞர் குமரி மைந்தன் அவர்கள், கடந்த 3.6.2021இல் மறைந்துவிட்டார். ஆனாலும், தமது மறைவுக்குப் பின்பாகவும் தாம் சேர்த்து வைத்திருந்த அறிவுச் செல்வம் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்றே நினைத்திருந்தார். அதற்குண்டான ஏற்பாடுகளையும் செய்துவிட்டே போயிருக்கிறார். 

முகநூலில் நிறைய புதிய கருத்துகள், விவாதங்கள், தரவுகள், செய்திகள் என அவரது கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். அவரது கருத்துகளில் சிற்சில விவாதத்திற்கு உரியவை என்றாலும், தமிழ்ச் சமூக அக்கறையோடு வெளிப்படும் அக்கருத்துகள் தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் ஒரு திறப்பை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருந்து வந்தன. எமது ஆய்வுக் கட்டுரைகளுக்கான தரவுகள் பல அன்னாரது பதிவுகளிலிருந்தும் எடுத்தாண்டிருக்கிறேன். பல்வேறு இதழ்கள், நூல்கள், தோழர்கள் மூலமாக அய்யாவைக் குறித்த அறிமுகம் இருந்தாலும், முகநூல் வழியாகவே அய்யாவுக்கும் எமக்குமான அறிமுகமும் நட்புறவும் கிடைத்தன. எமது எழுத்துச் செயல்பாடுகளையும் எம்மையும் குறித்து முகநூல் வாயிலாகவே அய்யாவும் அறிந்து வைத்திருந்தார். 

கடந்த சனவரி மாதத்தில், உலகத் தமிழ்க் கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்ட நிகழ்வானது எமது நிமிர்வகத்தில் உள்ள செம்பச்சை நூலக அரங்கில் நடைபெற வேண்டுமென உலகத் தமிழ்க் கழகத் தலைவர் அய்யா நிலவழகன் அவர்கள் வழிகோலியிருந்தார். செம்பச்சை நூலகத்திற்கு வருகை தந்திருந்த அய்யா நிலவழகன் அவர்கள், நூலக அமைப்பாக்க முயற்சிகளைப் பார்த்துவிட்டு உளமகிழ்ந்து ஒரு சேதியைப் பகிர்ந்தார். 

குடும்பமே இணைந்து செய்திடும் உங்களது நூலகப் பணியும் நோக்கமும் வியக்க வைக்கிறது. எம்மிடமிருந்தும், எமக்குத் தெரிந்த நண்பர்களிடமிருந்தும் செம்பச்சை நூலகத்திற்கான உதவிகள் கண்டிப்பாகக் கிடைக்கும் தம்பி என்றார். அதன்படியே, ஒருநாள் இராசபாளையத்திலிருந்து குமரி மைந்தன் அய்யா அவர்களோடு உடன் இருந்து கொண்டு அழைத்தார் நிலவழகன் அய்யா அவர்கள். 

தம்பி, உங்ககிட்ட குமரி மைந்தன் அய்யா பேசணும்னு சொல்லுதாக என்றபடியே அவரிடம் செல்பேசியைக் கொடுத்தார். 

வணக்கம் தம்பி. உங்களப் பத்தி நிலவழகன் நிறைய சொன்னார். நீங்க வைத்திருக்கிற நூலகம் பத்தியும் சொன்னார். எம்மகிட்ட இருக்கிற புத்தகங்கள உங்க நூலகத்துக்குத் தாரேன். கூடிய விரைவா வந்து எடுத்துட்டுப் போங்கள் என்று மிக நிதானமாகப் பேசி வைத்துவிட்டார்.

இரண்டொரு வாரம் கழித்து குமரி மைந்தன் அய்யாவே அழைத்தார். வாரமுண்டு சொன்னீங்க தம்பி, எப்ப வருவீங்க என்று கேட்டார். தேர்தல் பணி ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்தல் முடிந்தவுடனே வருகிறேன் அய்யா என்று சொல்லி வைத்திருந்தேன். தேர்தல் முடிந்திருந்த தருவாயில், ஒருநாள் கிளம்பி வருகிறேன் அய்யா என்று சொன்னபோது, நேற்றுதான் மகன் வீட்டுக்கு வந்தேன் தம்பி. இராசபாளையம் வந்தவுடன் அழைக்கிறேன் என்றார். அதேபோல, ஓரிரு வாரம் கழித்து வந்தவுடன் அழைத்தார். ஊரடங்கு காரணமாய் சரக்கு வாகனத்தில் போய்வர முடியாத சூழலில் இருந்தேன். அன்னாரும் தாம் உயிருடன் இருக்கும்போதே தமது நூல்களை எல்லாம் செம்பச்சை நூலகத்திற்குக் கொடுத்துவிட வேண்டும் என்றிருந்தார். அதை நிறைவேற்றாமலே, காலம் அவரை அழைத்துக்கொண்டது. அன்னாரது மறைவு எமக்குப் பெருந்துயரைத் தந்தது. அவர் அழைக்கும் போதெல்லாம் நாம் போய் வர முடியாமல் போயிற்றே என்ற குற்றவுணர்வும் ஏமாற்றமும் கவ்விக் கொண்டிருந்தன. 

நேற்று, இராசபாளையத்திலிருந்து நிலவழகன் அய்யா பேசினார். தம்பி, குமரி மைந்தன் அய்யாவோட புத்தகங்கள வண்டியில ஏத்திக்கிட்டு, அவரோட பையன் வாராரு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஒங்க ஊருக்கு வந்து சேர்ந்துருவாங்க என்ற செய்தியைச் சொன்னவுடன், எம்மால் என்ன செய்வதென்றும் சொல்வதென்றும் தெரியவில்லை. 

சொன்னவாறே, ஒரு குட்டியானை சரக்கு வாகனம் 20க்கும் மேற்பட்ட பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளுடன் வீடு வந்து சேர்ந்தது. கூடவே, குமரி மைந்தன் அய்யாவின் மகனும் வந்திருந்தார். 

அய்யாவின் மகனார் திரு செல்வம் அவர்களுடன் நானும் குடும்பத்தாரும் அறிமுகமாகிக் கொண்டோம். அய்யாவின் மறைவு குறித்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அவரது கடைசி ஆச இதுவாத்தான் இருக்கும். தங்கிட்ட இருக்கிற புத்தகங்கள தேனில இருக்கிற தம்பிகிட்ட கொண்டுபோய் சேக்கணும். வாரமுண்டு சொல்லி இருக்கார். அதுக்குள்ள, தனக்கு ஏதாவது ஆச்சென்றால், அந்தப் புத்தகங்கள நீ கொண்டுபோய் சேத்திடுனு சாகப் போறதுக்கு முன்னால சொல்லி இருந்தார். அப்பாவோட கடைசி ஆசய நிறைவேத்திட்டேன் என்று கண்கள் கசியச் சொன்னபோது, எமது கண்களும் கசிந்துவிட்டன. 

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகத் தாம் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரக் கணக்கிலான தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், பல்வேறு இதழ்கள், அவரது காலம் முழுவதற்கும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், நாட்குறிப்பேடுகள், ஆய்வுக் குறிப்புகள், பலருக்கும் எழுதிய கடிதங்கள், அய்யாவுக்கு வந்திருந்த கடிதங்கள், தமிழ்ச் சமூகம், அரசியல், பண்பாடு, பொருளியல் பற்றிய ஆவணங்கள், அய்யாவே மொழிபெயர்த்த கட்டுரைகள், கலைச்சொல்லாக்கங்கள், அய்யா எழுதிய நூல்கள் என, அய்யாவிடம் இருந்த அறிவுக் களஞ்சியம் யாவற்றையும் செம்பச்சை நூலகத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டார் திரு செல்வம் அவர்கள். 

அய்யாவோட ஆத்மாவக் கொண்டுவந்து கொடுத்திருக்கீங்க. எமது காலத்திற்குப் பிறகும் எமது பிள்ளைகள் அதைப் பாதுகாப்பாங்க. அய்யாவோட மறைவுக்குப் பிறகும், அய்யாவின் புகழை இந்த நூல்கள் காலங்காலமாய்ப் பல தலைமுறைக்கும் பேசும் என்று அவரது கைகளைப் பற்றியவாறு சொன்னபோது, அவரது கண்களில் இருந்து வந்த அந்த நம்பிக்கை ஒளியை எம்மால் உணர முடிந்தது. அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றியதாய் மனநிறைவோடு விடைபெற்றுச் சென்றிருக்கும் திரு செல்வம் அவர்களது இந்த உதவியும் கொடையும் எம் வாழ்வில் மறக்க முடியாதவை. 

ஒரு மனிதர், வாக்குக் கொடுத்ததை இறப்புக்குப் பின்பும் நிறைவேற்றி இருப்பதையும், ஒரு தகப்பனின் கடைசி ஆசையை அவரது மகனார் நிறைவேற்றி இருப்பதும், செத்தும் கொடை கொடுத்த வள்ளல்கள் பட்டியலில் குமரி மைந்தன் அய்யா அவர்களையும் சேர்த்திட வைத்திருக்கின்றன. அவ்வகையில், செம்பச்சை நூலகத்திற்கு நூல்கள் கொடை அளித்த குமரி மைந்தன் அய்யாவின் புகழ் நீடு வாழும். 

குமரி மைந்தன் அய்யாவின் கொடை நூல்களால் செம்பச்சை நூலகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. மிக மிகப் பழமையான முக்கியமான பல நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள் என மறுபதிப்பு செய்ய வேண்டிய நூல்கள் நிறைய இருக்கின்றன. கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்களுக்குரிய பல்வேறு ஆய்வுப் பொருண்மைகளுக்கான தரவுகள் அய்யாவின் நூல் சேகரிப்பில் இருக்கின்றன. பதிப்பாளர்கள், ஆய்வு மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குமரி மைந்தன் அய்யா அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பலவும் அச்சு நூலாக்கம் செய்யாமல் கையெழுத்துப் படிகளாகவும் ஒளியச்சுப் படிகளாகவும் நிறைய இருக்கின்றன. அய்யாவின் ஆய்வுகளை நூல் பதிப்பு செய்து வெளியிட வேண்டியவை நிறைய இருக்கின்றன. பதிப்பாளர்கள் முன்வந்தால், செம்பச்சை நூலகம் உதவிடக் காத்திருக்கிறது. 

செம்பச்சை நூலகத்திற்கு நூல்களைக் கொடையளித்த குமரி மைந்தன் அய்யாவின் பேருள்ளத்தை நன்றியுடன் எப்போதும் நினைவுகூறும் செம்பச்சை நூலகம்.

அய்யாவின் கொடை நூல்களைக் கொண்டுவந்து சேர்த்து அறம் செய்திருக்கும் திரு செல்வம் அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது செம்பச்சை நூலகம். இவற்றை ஆற்றுப்படுத்திய நிலவழகன் அய்யாவின் பங்களிப்புக்கும் மிகுந்த நன்றியுடைத்தவர் ஆவோம்.

*

தமிழகப் பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணி செய்து, விருப்ப ஓய்வு பெற்றவர். தமது வாழ்நாளின் பெரும்பகுதியை வரலாற்று ஆய்வு மற்றும் எழுத்துப்பணியில் செலவு செய்தவர் அய்யா குமரி மைந்தன். 

கிட்டத்தட்ட அய்ம்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த அவரது ஆய்வு மற்றும் எழுத்துப் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் சில மொழிப்பெயர்ப்புகளையும் நூல்களாக வெளியிட்டுள்ளார். 

தமது இறுதிக்காலம் வரை ஆராய்ச்சி, எழுத்து, முகநூல் விவாதங்கள் என மிக உயிர்ப்போடு செயல்பட்டு வந்தார். 

தொடக்கத்தில் திராவிடக் கருத்தியலிலும், பின்னர் தமிழ்த் தேசியச் சிந்தனைத் தளத்திலும் செயல்பட்டு வந்தார். சில அமைப்புகளையும் நடத்திய அன்னாரின் குறிக்கோள்களுள் முதன்மையானவை, தமிழக மக்களின் பொருளியல் உரிமைகளை மீட்பது, சாதியம் உள்ளிட்ட காலத்துக்கு ஒவ்வாத மாந்தத் தன்மையற்ற பண்பாட்டுக் கூறுகளை உடைத்தெறிந்து, உண்மையான மக்களாட்சிப் பண்புகளை நிலைநிறுத்துவது, குமரிக் கண்டம் தொடங்கி தமிழக மக்களிடம் மறைந்து கிடக்கும் பண்டைய வரலாறுகளை மீட்பது போன்ற கருத்தியல் தளங்களில் தீவிரமாக இயங்கியவர். 

மொழி ஞாயிறு பாவாணரின் குமரிக்கண்டக் கொள்கைகளை மெய்ப்பிக்கும் தரவுகளைத் தந்தவராகவும், மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளராகவும் திகழ்ந்தவர். பஃறுளி முதல் வையை வரை, விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும், தமிழகச் சமூக வரலாறு, நலிந்துவரும் நாட்டுப்புறம், சாதிகள் ஒழிய..., குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள், மார்க்சியம் ஒரு பட்டறிவுப் பார்வை, இந்திய வரலாற்றில் புராணங்கள்-இலக்கியங்கள்-வானியல், தமிழகத் தேசிய அரசியல், தேசியம் வெல்லும், சோசலிச நடப்பியமும் இன்றைய இலக்கிய நிகழ்முறையும், பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை, இராமர் பாலப் பூச்சாண்டி போன்ற நூல்களை எழுதி தமிழக மக்கள் பொருளியல் கழகம் மூலம் வெளியிட்டவர். 

தமிழ் மொழி-இனம்-பண்பாடு மீட்சிக்கான விழிப்புணர்வையும், வெளிச்சத்தையும் காட்டியவர் அய்யா குமரி மைந்தன் ஆவார். அவரது மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, செம்பச்சை நூலகத்திற்குப் பல்லாயிரக் கணக்கில் நூல்களைக் கொடையளித்துள்ள அறப்பண்புக்கும் புகழ் வணக்கத்தையும் நன்றிப் பெருக்கையும் தளுகையாகப் படைக்கிறோம். 

நன்றியுடன்..

முனைவர் ஏர் மகாராசன்,

அம்சம்,

அங்கவை யாழிசை, 

அகரன் தமிழீழன்

#செம்பச்சை_நூலகம்

#நிமிர்வகம்

28.06.2021

*

#குமரிமைந்தன் அய்யா புகழ் 

நீடு வாழ்க.

வெள்ளி, 25 ஜூன், 2021

சொல்லேர் உழவின் முன்னத்தி ஏர்



சிறு வயதுக் காலங்களில், வயக்காட்டில் அப்பா உழும்போதெல்லாம் உழவுச் சாலுக்குப் பின்னாலே ததக்குப் பொதக்கென போய்க்கொண்டே இருப்பேன். அந்த மேழியைப் பிடித்து ஒரு சாலடித்து வரவேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்போது.

மூனு நாலு சால் சுத்தி வந்ததுக்கப்புறமா, மேழி மேல கைய வைக்கச் சொல்லி அழுத்திப் பிடித்துக் கொண்டு கூடவே வருவார் அப்பா.

காலம் பூரா இப்படியே ஏரப் பிடிச்சி உழுதுக்கிட்டுத் திரியனும்னு நெனைக்காத தம்பி. நிலமே கதினு வம்படியா கெடக்கிறது எங்க காலத்தோட போகட்டும். மழ தண்ணி இல்ல; நாம வெள்ளாம செஞ்சத வரவு செலவு பாத்து விக்க முடியல; நம்மகிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போயி விக்கிறவன் காசு பணம்னு சம்பாதிக்கிறான். நாமதான் ஒழச்சு ஒழச்சு ஒன்னுமில்லாமக் கெடக்கொம். ஊருக்குச் சோறு போடுறம்னு நாமதான் பெருமையா நெனைக்கிறோம். ஒரு பயலும் நம்மள மதிக்கவும் மாட்டான். உழுகனும்னு ஆச இருந்தா, போயி படிச்சி ஆளாகி, நாலு பேரு படிக்கிற மாதிரி நீயும் எதாவது எழுது. ஒன்னோட எழுத்த இந்த ஒலகம் படிக்கிற மாதிரி எழுது. அதுவும் உழவுதான் தம்பி என்று அப்பா சொல்லிக்கொண்டே வந்த அந்தச் சொற்கள்தான் என் சொல்லேர் எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்.

வில்லேர் உழவு மரபின் மேழி பிடித்த கைகளால், சொல்லேர் உழவு மரபில் பயணிக்கிறேன். நிலம் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் சொல்லேர் எழுத்துழவாய் உழுது போகும் என் ஆய்வுகள், நிலம் பற்றியும் நிலத்தில் தவித்த-தவிக்கும் மக்களைப் பற்றியும் கிளரிக்கொண்டேதான் இருக்கும்.

ஏர் மகாராசன்

25.06.2021

வெள்ளி, 11 ஜூன், 2021

சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியல் - அம்பலமாகும் உள்ளடி வேலைகள் : மகாராசன்.




இந்த நிலத்தில் வந்து குடியேறிய வேற்றினத்தவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற பூர்வக்குடித் தமிழர்களை, அதிகாரத்தின் பலத்தால் குல நீக்கம் - குல விலக்கம் செய்து, கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்து, அவர்களிடமிருந்த பெருவாரியான உழவு நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்ட வரலாற்று நிகழ்வுப் போக்கும்கூட பாசிசம்தான்; காலனியம்தான்; நவ பிரம்மதேயம்தான். இந்தப் பின்புலத்தைக் குறித்து யாரேனும் பேச முனைந்தால், அது இனவாதம்; பாசிசம் என்று முத்திரை குத்தி ஒதுக்குவதும் தனிமைப்படுத்துவதும் காயடிப்பதுமாக இருந்து வந்த நுண் அரசியல், இப்போது வெளிப்படையான பகிரங்க அரசியலாகவும் மிகத் தீவிரமாக முன்னெழுந்து வருகின்றது. இந்தச் சூழ்நிலையில், இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்கள்; நிலங்களை எவ்வாறு இழந்தார்கள்; அதிகாரத்தை எப்படி இழந்தார்கள்; தற்சார்பான வாழ்வை எவ்வாறு கட்டமைத்திருந்தார்கள்; பூர்வ அடையாள மரபுகளையும் அறிவையும் எப்படி இழந்தார்கள்; வந்து குடியேறியவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எப்படிப் போராடினார்கள்; வந்து குடியேறியவர்கள் யார் யார்; அவர்களின் ஆக்கிரமிப்பும் அதிகாரமும் என்ன சாதக பாதகங்களை உருவாக்கின. அவர்களின் நவ பிரம்மதேயங்களின் கட்டமைப்பு என்ன என்பதைக் குறித்தெல்லாம் புனைவின் வழியான வரலாற்றை மிக விரிவாக ஆழமாக நேர்மையாகப் பேசிய ஒரே நூல் இரா.முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் மட்டுமே. 

ஒரு பெரிய நூல் மக்கள் இலக்கியமாக வாசிக்கப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் கொண்டாடப்பட்ட நூல் சுளுந்தீயாக மட்டுமே இருக்க முடியும். மிகக் குறுகிய காலத்திற்குள் 5 பதிப்புகளைக் கண்டிருக்கும் இந்த நூல், பெருவாரி வாசகர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் பாராட்டையும் பெற்றிருக்கிறது. பெருவாரி மக்கள் வாசிப்புக்கு உள்ளான பேரிலக்கியமாகக் கொண்டாடப்பட்டிருப்பதே சுளுந்தீ நூலுக்கான மிகப்பெரிய அங்கீகாரம்; விருதும்கூட.

சுளுந்தீ நூலின் முக்கியத்துவத்தைப் படித்தறிந்த பலரும் உயரிய விருதுக்குரிய நூலாகப் பரிந்துரைக்கவும் செய்திருக்கின்றனர். அண்மையில், இலக்கியத்திற்கான இந்திய அரசின் உயரிய விருதுக்கான தெரிவுக் குழுவில் இருந்த பலரும், அவர்கள் பரிந்துரைத்த இறுதிப்பட்டியலில் சுளுந்தீ நூலையும் தெரிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில், சுளுந்தீ நூலானது பூர்வக் குடித் தமிழர்களின் அரசியலைப் பேசுகிறது என்றும், வந்து குடியேறிய வேற்றினத்தவர்களின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது எனவும், பிராமணர்களைக் கொச்சைப்படுத்துகிறது எனவும் கூறி, வேற்றினத்தவர்களும் பிராமணர்களும் ஒன்றுகூடி சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியலை மிகக் கமுக்கமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். சுளுந்தீ நூலை விருதுக்கான இறுதிப் பட்டியலுக்குப் பரிந்துரைத்திருந்த சூழலில், ஒரு வேளை, சுளுந்தீ நூல் விருதுக்குரிய நூலாகத் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டுவிட்டால், சுளுந்தீ முன்வைத்திருக்கும் அரசியல் இன்னும் அதிகமாகப் பேசவும் விவாதிக்கப்படவும் கூடும்; அது, வந்து குடியேறியவர்களின் அதிகாரச் சூழ்ச்சி அம்பலப்பட்டுப்போகும் என்பதறிந்து பதைபதைத்துப்போன வேற்றின- பிராமணக் கூட்டத்தின் அறிவுசீவிகள் பலரும் சுளுந்தீக்கான நுண் எதிர்ப்பை அரங்கேற்றி இருக்கிறார்கள். தெரிவுக் குழுவினரால் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட பின்னரும்கூட, சுளுந்தீ நூலை விருதுக்கு மட்டுமல்ல; இறுதிப்பட்டியலில்கூட இடம்பெறாத வகையில் மறு பட்டியல் தயாரிக்க வைத்திருக்கிறார்கள். பூர்வக்குடித் தமிழர்கள் மீது மட்டுமல்ல; பூர்வக்குடித் தமிழர்களின் வரலாற்றின் மீதும் வெறுப்பையும் காழ்ப்பையும் பகையும் கொண்ட வேற்றின பிராமண அறிவுசீவிகளால் உள்ளடி வேலைகள் பார்க்கப்பட்டு சுளுந்தீ நூலை ஒதுக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். சுளுந்தீ நூலுக்கு விருது கொடுக்காததைப் பற்றியோ அல்லது வேறு வேறு நூல்களுக்கு விருதுகள் கொடுப்பதை/கொடுத்ததைப் பற்றியோ எவ்வித வருத்தமும் காழ்ப்பும் இல்லை. ஏதாவது ஒரு நூலுக்கே விருதும் வழங்கப்பட முடியும். விருதுக்குரிய தகுதியான நூலுக்குத்தான் வழங்கி இருக்க முடியும் அல்லது ஒரு நூலின் பேரைச்சொல்லி அந்தப் படைப்பாளியைக் கவுரவிக்க விருது அளித்திருக்க முடியும். பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் கவிதைத்திறனுக்காகப் பாராட்டப் பெற்ற பாரதிதாசனுக்கு, கவிதை நூலுக்காக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்படவில்லை. அவர் எழுதிய பிசிராந்தையார் எனும் நாடக நூலுக்கே விருது கொடுத்தார்கள். இப்படி நிறைய சான்றுகள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு படைப்பாளிக்கே விருதளிக்க இயலும் என்பதால், யாராவது ஒருவர் அந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சிதான். அதேவேளையில், சுளுந்தீ நூலை விருதுக்கான இறுதிச்சுற்றுக்குப் பரிந்துரைத்து அனுப்பப்பட்ட பட்டியலை நிராகரிக்கச் செய்து, வேறு ஒரு பட்டியலை தெரிவுக் குழுவினருக்கு அப்பாற்பட்ட இன்னொரு குழுவினர் தயாரிக்கச் செய்து, அதில் சுளுந்தீ இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள் எனில், அவர்களது தமிழர் விரோத அரசியலின் வன்மம் மிகக்கொடூரமாகவேதான் இருக்கும். தமிழர் விரோத அரசியலை உள்ளீடாகக் கொண்டிருக்கும் வேற்றின-பிராமணக் கூட்டின் சதிவேலைகள் சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியலைச் செய்திருக்கிறது. தமிழர் விரோத சக்திகள் சுளுந்தீ நூலை எதிர்க்கிறது எனில், சுளுந்தீ நூல் தமிழர் அரசியலையே உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்றே பொருள். அந்தவகையில், சுளுந்தீ நூலை தமிழர் விரோத சக்திகள் எதிர்த்தாலும், தமிழர்கள் ஆதரிக்கவே செய்வார்கள்; கொண்டாடவே செய்வார்கள். இதை காலமும் களமும் வரலாற்றில் நிகழ்த்திக் காட்டும். 

ஏர் மகாராசன்

செவ்வாய், 30 மார்ச், 2021

பெருந்திணை


கற்கள் உரசக் கசியும் 
சிறு தீப்பொறி 
பொசுக்கென அணைந்து போகும் பஞ்சுப்பொதி காணாத தவிப்பில். 

கண்கள் மசியக் கசிந்த 
பெருங்காமத்தீ 
பற்றிப் படர்ந்துகொண்டே இருக்கிறது 
நல்லுடல் நினையும் திளைப்பில். 

கண்டும் கேட்டும் 
உண்டும் உயிர்த்தும் 
உற்று அறிந்தும் பொங்கிவழியும் காமத்தின் கொள்கலம் 
பெருந்தீ எரியக் 
காத்துக் கிடக்கிறது அடுப்பங்கரையில். 

கொழுமுனை பதியாத கரடுகளும் உழவுச் சால் ஏங்கிக் கிடக்கின்றன காய்ந்துபோன ஒட்டுப் புற்களோடு. 

ஏர் மகாராசன் 
29.03.2021

வியாழன், 17 டிசம்பர், 2020

வேளாண் மரபினரின் பெயர் மாற்றம் & பட்டியல் மாற்றம்: பொது சமூக மனசாட்சியின் கேள்விகளுக்கான பதில்கள். :- மகாராசன்.

 


அண்மையில் உழவர் போராட்ட ஆதரவும் இரட்டைவேட நிலைப்பாடும் எனும் கட்டுரையை எழுதி இருந்தேன்.

பார்க்க: 

https://maharasan.blogspot.com/2020/12/blog-post.html

வேளாண் தொழில் மரபினர், தங்களை வேளாளர் என்று அரசாணையால் அங்கீகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை சமூக சனநாயக சக்திகள் எவ்வாறு அணுக வேண்டும்; பார்க்க வேண்டும் என்ற புரிதலையும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அந்தக் கட்டுரை இந்தது. 

ஆயினும், அந்தக் கட்டுரை பேசுயிருக்கும் பேசு பொருளுக்குள்ளேயே வராமல், பொத்தாம் பொதுவாக எதிர்ப்பதும் சாடுவதுமாகத் தோழர் அரங்க குணசேகரன் மற்றும் அவரது தோழமை வட்டத்தினர் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். 

இன்னொரு தோழர் திருநாவுக்கரசு நாடிமுத்து என்பார், இதைக் குறித்து விளங்கிக்கொள்வதற்காக எம்மிடம் 18 கேள்விகளை முகநூலில் முன்வைத்துப் பகிர்ந்திருந்தார். 

அவரது கேள்விகளும் எமது பதில்களும் வருமாறு:

கேள்வி 1.

நீங்கள் இந்து சமூக அமைப்பை ஒப்புக் கொள்கிறீர்கள், இல்லையா?

பதில்:

வைதீக பிராமணிய இந்துமதம் வேறு; தமிழர் சமய மரபு வேறு. சைவ, வைணவ, நாட்டுப்புற வழிபாட்டு முறைகள் என இந்துமதத்திற்கு அப்பாற்பட்ட சமய வழிபாட்டு மரபு ஒன்று இருக்கிறது. எனினும், அவை இந்து சமய மரபாக அரசியல் சட்ட வடிவம் பெற்றதாக ஆக்கப்பட்டு விட்டது. இதை ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்து என்கிற சமூகமாகத்தான் சட்டப்படியாகவும் சமூகப்படியாகவும் பார்க்கப்படுகிறது.

கேள்வி 2.

அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இப்போது உள்ள பள்ளர் முதலான ஏழு சாதிகளின் சாதிப் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டன? யார் சூட்டியது?'

பதில்:

பள்ளர் முதலான ஏழு சாதிகளும் பண்டைக் காலத்தில் இருந்து வழங்கிவரும் காரணப்பெயர்கள். சமூக வாழ்வியல் போக்கில் சமூகம் வழங்கிய பெயர்கள்.

1. குடும்பர்- குடும்பம்-குடும்பு நிர்வாகத்தைத் தோற்றுவித்தமையால் அமைந்த பெயர்.

2. பள்ளர்- பள்ளமான வயல் பகுதி உழவு செய்தமையால் அமைந்த பெயர்.

3. காலாடி- காலாட்படைப் போர்ப் பிரிவால் அமைந்த பெயர்.

4. வாரியான்- நீர் வாரியான்/ஏரி வாரியான் என நீர் வாரியம் மேலாண்மையால் அமைந்த பெயர்.

5. மூப்பர்- குடிகளில் மூப்பானது என்பதால் அமைந்த பெயர்.

6. தேவேந்திரகுலத்தான்- வேளாண்மைக்கு உகந்த மழைக் கடவுளான இந்திரரை வழிபடும் குலத்தைச் சார்ந்ததால் அமைந்த பெயர்.

7. பண்ணாடி- பண்ணையம் உருவாக்கி வேளாண்மை செய்தமையால் அமைந்த பெயர்.

மேற்குறித்த பெயர்கள் யாவும் சமூகப் பங்கேற்பு, தொழில், குலம் தொடர்பான காரணப்பெயர்கள். 

(இவை தொடர்பான வரலாற்றுச் செய்திகளும் பண்பாட்டுத் தரவுகளும் நிறைய நூல்களில் பரவிக் கிடக்கின்றன).

கேள்வி 3. 

இப்போதுள்ள சாதிப் பெயர்கள், அந்த 7 சாதிகளுக்கும் உள்ளவை எவ்வகையில் இழிவான பெயர்கள் என்று கருதுகிறீர்கள்?

பதில்:

அந்த ஏழு சாதிப் பெயர்களும் இழிவான பெயர்கள் கிடையாது. மிகச்சிறப்பான காரணப்பெயர்கள்.

கேள்வி 4. 

பெருந்திரள் மக்கள் இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளீர்கள். அப்படியெனில், நீங்கள் உயர்ந்த சாதி! அதில் ஒன்றும் உங்களுக்கு அய்யப்பாடு இல்லையே?அப்படியெனில் தம்மை மஹர் என்றும், தீண்டப்படாதன் என்றும் அறிவித்துக் கொண்ட அம்பேட்கரின் இயக்கங்கள் உங்களை ஆதரிக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:

ஒருவரைப் பலரும் நாயே என்று அழைக்கிறார்கள்; அவ்வாறே பாவிக்கிறார்கள் எனும் சூழலில், தான் நாய் இல்லை; நான் மனிதர் என்று அவர் அறிவித்துக்கொள்வதும், அதன்படியாக அவர் மனிதராகப் பாவித்துக் கொள்வதும் எப்படிச் சரியானதோ, அதே போல, ஒரு மக்கள் திரளை இழி சாதி; கீழ்ச்சாதி என மற்றவர் பாவிக்கிறபோது, தான் கீழ்ச்சாதி-இழிசாதி இல்லை என்று சொல்வது எப்படிப் பிழையாகும்? 

கீழ்ச்சாதி இல்லை என்று சொல்வது மேல்சாதி எனும் உணர்வால் அல்ல; தம்மை எந்தவொரு தரப்பும் சாதியால் கீழ்மைப்படுத்தக்கூடாது எனும் எதிர்ப்புணர்வில் இருந்து வருவதுதான். கீழ்ச் சாதி என ஒத்துக்கொண்டால், கீழ்ச்சாதியாகவே இருக்க வேண்டும் எனும் சமூக உளவியலை இன்னும் வலுப்படுத்தவே செய்யும்.

சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எல்லா இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியல் மாற்றம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறி உள்ளார். அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொண்ட இயக்கங்கள் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் இதை ஆதரிப்பதுதான் நியாயமும் கூட.

கேள்வி 5. 

சாதியின் பெயரை மாற்றிவிட்டால், சாதி இழிவு நீங்கிவிடும் என்பதற்கு அடிப்படை ஏதேனும் உள்ளதா?

பதில்:

மதம் மாறிவிட்டால் சமூக இழிவு நீங்கும் என்று அம்பேத்கரே கூறி இருக்கிறார்.

குருடர், செவிடர், முடவர், ஊமை என்றெல்லாம் ஒருகாலத்தில் அழைக்கப்பட்டவர்கள் உடல் ஊனமுற்றோர் எனப்பட்டனர், அதுவும்கூட சரியில்லை என்று மாற்றுத் திறனாளி என்று அழைக்கப்பட்டனர்.

அலி, ஒம்போது, அரவாணி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் திருநங்கை என்று மதிப்புமிக்க மனிதர்களாக அடையாளப்பட்டுள்ளனர்.

சூத்திரர், நீசர் என்ற பெயரில் குறிக்கப்பட்டதற்கு எதிராகத்தானே சுயமரியாதை இயக்கம் திராவிட அரசியலை முன்னெடுத்தது.

அரிசன், பஞ்சமன் என்று குறிக்கப்பட்டவர்கள் ஆதி திராவிடர்கள், தலித்துகள் என்று குறிக்கவும் அடையாளப்படுத்தப்படுகிறார்களே. 

மாதாரி சக்கிலி, பகடை என்று குறிக்கப்பட்டவர்கள் அருந்ததியர் என்று குறிக்கப்படுகிறார்கள்.

சின்னமேளம், பெரியமேளம் என இருந்த சாதிகள் இசை வேளாளர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெயர் மாற்றம் செய்த உடனே திடீர்மாற்றங்கள் எதிலும் ஏற்படப்போவதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு அதுவும் ஒரு அடிப்படை.

கேள்வி 6.

ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் உள்ள உட்சாதிப் பிரிவுகளில், ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருடன் உறவுமுறைக் கொள்வதில்லை. நீங்கள் எப்படி?அந்த ஏழு சாதிகளுக்குள்ளுமாவது உறவு கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகிவிடுமா?

பதில்:

அந்த ஏழு சாதிகளுக்குள் திருமண உறவு உண்டு. அகமணமுறையும் உண்டு. புறமண முறையும் உண்டு. அந்த ஏழு சாதிகளும் ஒரே சாதியாகத்தான் அவர்களுக்குள் பாவித்துக்கொள்கிறார்கள். அந்த ஏழு சாதிகளும் கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகக் காலப்போக்கில் மாறும்.

கேள்வி 7.

நீங்கள் உயர்ந்த சாதியாகி விட்டால், உங்களுக்கு கீழ்ச்சாதிகள் யார் யார்? உங்களுக்கும் உயர்வான சாதிகள் எவை?

பதில்:

கீழ்ச்சாதி இல்லை எனும் எதிர்ப்பும் குரலும் நகர்வுமானது உயர்சாதி எனும் இலக்கைக் கொண்டதல்ல; சாதி சமத்துவத்துக்கான - சமூக சமத்துவத்துக்கான நகர்வே அது. தமக்கு மேல் என்று எந்தச் சாதியுமில்லை; தமக்குக் கீழ் என்று எந்தச் சாதியுமில்லை.

கேள்வி 8.

சரி, அட்டவணைச் சாதியிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா இல்லையா?

பதில்:

எஸ்.சி எனும் அட்டவணைப் பிரிவிலிருந்து விடுவித்து/ வேறு அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. 

கேள்வி 9.

அவ்வாறு விரும்பினால், எந்த இனப் பட்டியலில் சேரப் போகிறீர்கள்? அல்லது என்ன இனப் பெயரில் உங்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்:

இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (OBC). அது பிசியாகவோ எம்பிசியாகவோ இருக்கலாம்.

கேள்வி 10.

சலுகைகள், குறிப்பாக இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று சொல்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இட ஒதுக்கீடு கேட்டால் எந்த இனத்தின் இட ஒதுக்கீட்டில் பங்கு கேட்பீர்கள்?

பதில்:

எஸ்.சி எனும் பட்டியலில் இருந்துதான் விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். எஸ்.சி பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கு மாற்றம் கோருவது இடஒதுக்கீடு வேண்டும் எனும் பொருள் கொண்டது. எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேறுவதால் இடஒதுக்கீடே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டாம்; ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

கேள்வி 11. 

அட்டவணைச் சாதியில் இடம் பெற்று இவ்வளவு நாள் சலுகைகளைப் பெற்றுள்ளதால், அந்த இனத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டின் விழுக்காட்டில் பெறுவதுதான் நியாயம். அவ்வாறு பெற்றால் அது உள் ஒதுக்கீடு ஆகும்.உங்கள் மாணவர்களை அதன் பின் ஆதிக்க சாதி மாணவர்கள் 'சுக்கு'என்று அழைக்கமாட்டார்களா?

பதில்:

எஸ்.சி பிரிவில் இதுவரைகாலம் வைத்திருந்தமையால் எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒருவேளை, ஓபிசியில் வைத்திருந்தால் அந்தப் பிரிவில் இடஒதுக்கீடு பெற்று இருப்பர். இடஒதுக்கீட்டுச் சலுகைகள் எல்லாப் பிரிவினருக்கும் இருக்கிறது. எஸ்.சி பிரிவினர் மட்டும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறுவது இல்லை. ஓபிசியினரும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறவே செய்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்கும்போது யாரும் எவரும் சுக்கு என்று கூறிட முடியாது. எல்லோருமே சுக்குதான்.

கேள்வி 12. 

இட ஒதுக்கீடே தேவையில்லை என்றால், கால் சட்டை இல்லாமல் அம்மணமாக நிற்கும் பள்ளர் சாதிக் குழந்தைகளை நீங்கள் பார்த்ததுண்டா?அவர்கள் எவ்வாறு கல்வி பெறுவது?

பதில்:

இடஒதுக்கீடு தேவை இல்லை என்று யாரும் கூறவில்லை.

கால்சட்டை இல்லாத பள்ளர் குழந்தைகள் மட்டுமல்ல, ஓபிசி பிரிவில் இருக்கும் அத்தனை சாதியிலும் உள்ள வறுமையில் உள்ள குழந்தைகளும் அம்மணமாக இருப்பதை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ நான் நாள்தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

எல்லாச் சாதியினருக்கும்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்போது, எல்லாச் சாதியிலும் அம்மணமாகக் குழந்தைகள் திரிவது ஏன்? இடஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்புக்கான பிரதிநிதித்துவமே தவிர, அது வறுமையை ஏழ்மையை பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணும் ஒரே தீர்வாகக் கருத இயலாது.

எந்தச் சாதிக் குழந்தையானாலும் கல்விக்கு இடஒதுக்கீடு உண்டு.

கேள்வி 13. 

சாதிப் பெயர் மாறியதும் அதே கிராமங்களில் வசிக்கப் போகிறீர்களா? அல்லது வேறு பகுதிக்குக் குடிபெயரப் போகிறீர்களா? அதே பகுதியில் வசித்தால் உங்கள் மீதான இழிசாதிப் பார்வையை எவ்வாறு ஆதிக்கச் சாதியினர் மாற்றிக் கொள்வர்?

பதில்:

அரிசனர், பஞ்சமர் என்போர் ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றிக்கொண்டு வேறுவேறு ஊர்களுக்குக் குடிபெயரவில்லையே. சூத்திரர் என்று குறிக்கப்பட்டவர்கள் திராவிடர் என்று கூறிக்கொண்டு அயலகம் போய்விடவில்லை. நாடார் சமூகத்தினரும் வேறு புலம் நோக்கிப்போய்விடவில்லை.

பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றும் கிடைக்கும் தருவாயில் அதே பூர்வீக ஊரில்தான் வாழ முடியும். கல்வி வேலை தொழில் சார்ந்து இடம்பெயரவோ குடிபெயரவோ என்பது தேவையின் பொருட்டு அமைவது. பெயர் மற்றும் பட்டியல் மாற்றத்திற்காக ஊர் விட்டுப் புலம்பெயவர்வது தேவையில்லாத ஒன்று. அப்படிப் புலம்பெயர மாட்டார்கள். உயர்த்திக்கொண்ட சாதியினர் உடனடியாக இல்லாவிட்டாலும், படிப்படியாக மெல்லமெல்ல தங்களது பார்வையை அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நடக்கும். அதற்கு நிறைய சமூக உதாரணங்கள் இருக்கின்றன.

கேள்வி 13.

டாக்டர் கிருஷ்ணசாமி தான் பட்டியல் சாதி வெளியேற்றத்தை முன் வைக்கிறார்! நீங்கள் குறிப்பிட்ட இயக்கங்களுக்கு அவர் ஆதரவானவரில்லை. அவர் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் ஆதரவானவர். அவர்களிடம் தானே நீங்கள் ஆதரவு கோர முடியும்? மற்ற இயக்கங்கள் ஆதரவளிக்கவில்லை என்றால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! அதற்கு காரணம் கிருஷ்ணசாமியா இல்லையா?

பதில்:

1923லிருந்து பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றக் கோரிக்கை அந்தச் சமூகத்தால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேக்கம்பட்டி பாலசுந்தராசு, தேவ ஆசீர்வாதம், குருசாமி சித்தர் உள்ளிட்டவர்களின் இது சார்ந்த கருத்தாடல்கள் அந்தச் சமூகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நிலவி வருகின்றன. அந்தச் சமூகத்தின் பெரும்பான்மைக் கோரிக்கையாக அந்தச் சமூகத்திடம் நிலவுகிறபோது, அந்தக் கோரிக்கையை மரு.கிருசுணசாமியும் இதரத் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அவ்வளவே.

இந்தக் கோரிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகவே பாசகவும் அதிமுகவும் இதரக் கட்சிகளும் அணுகுகின்றன. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மற்ற இயக்கங்கள் அந்த மக்களின் இந்தக் கோரிக்கையை ஆதரித்து இருந்தால், மதவாத சக்திகள் அந்த மக்களின் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே ஆதரிக்காத பட்சத்தில் இதைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் அந்த மக்களிடம் ஊடுறுவி உள்ளனர். அதன் வெளிப்பாடே அந்தச் சமூகத்தின் ஒரு சில தலைமைகள் மதவாத சக்திகளுடன் கூட்டு வைத்திருப்பதாகும்.

அந்த மக்களின் கோரிக்கையை மதவாத சக்திகள் ஆதரிப்பதைக் காட்டிலும், சமூக சனநாயக சக்திகள் ஆதரிப்பதே அந்த மக்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

கேள்வி 14. 

இப்படித் தெருவில் வந்து எங்கள் சாதிப் பெயரை வைத்துக் கொண்டுள்ள நாய்கள் குரைக்கின்றன.இது நியாயமா என்று ஆளும் பாஜக,அதிமுக விடம்,"ஏன் அந்த பொது சமூக மனசாட்சியைக் கொன்று போட்டு விட்டீர்கள்?" என்று நீங்கள் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்கூட கேட்கலாம்; கேட்க வேண்டும். சமூக பொது மனசாட்சியைக் கொல்வதும் தூண்டுவதும்கூட நீங்கள் குறிப்பிட்ட அவர்களாகக் கூட இருக்கலாம்தானே. நான் கேட்பது, பொதுமனசாட்சியான நீங்கள் கேட்டீர்களா? ஏன் ஒரு சமூகத்திற்கு வேளாளர் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? அவர்களது கோரிக்கை நியாயம்தானே என்று சாதியவாதிகளைப் பார்த்து அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சேர்ந்து கேளுங்கள்.

கேள்வி 15.

கடந்தப் பாராளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி என்னடா ஆயிற்று? என்று மோடியின் சட்டை முன் பகுதியை இழுத்து ஏன் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அப்படிக் கேட்க வேண்டும் என்றுதான் சமூக சனநாயக சக்திகளையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

கேள்வி16.

நீங்களும் இந்துக்கள் என்பதாலா அவ்வாறு கேள்வி கேட்க முடியவில்லை?

பதில் :

அப்படிக் கேள்வி கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன்.

கேள்வி 17.

மதத்தையும், சாதியையும் உதறித் தள்ளவில்லை என்றாலும், மதம் மற்றும் சாதியை ஏற்கவில்லை என்று கொள்கையளவில் உள்ள கட்சிகள் ஒரு சாதியை உருவாக்கத் துணைபுரியும் என்று எதிர்பார்பது வேடிக்கை இல்லையா?

பதில்:

தலித் அரசியல் என்பது குறிப்பிட்ட சாதிகளை மய்யப்படுத்திய சாதி அரசியல் உருவாக்கம்தானே. அண்மையில் அருந்ததியர் பெயர் மாற்றம் என்பது சாதியை உருவாக்கும் ஒன்றாக யாரும் பார்க்கவில்லை. இதை மட்டும் சாதியை உருவாக்கத் துணைபுரிவதாகக் கருதுவதுதான் வேடிக்கை.

கேள்வி 18.

அட்டவணை சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் இனி கிருஷ்ணசாமியோ அல்லது அந்த ஏழு சாதியினரோ தேர்தலில் நிற்கப் போவதில்லை என முடிவு செய்துவிட்டீர்களா?

பதில்:

ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும்போது, அந்த வீடு பிடிக்காமலோ அல்லது வீட்டு உரிமையாளர் வெளியேறச் சொன்னாலோ உடனே நடுத்தெருவுக்கு வந்துவிட முடியாது. வேறு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கும்போதுதான் அந்தப் பழைய வீட்டிலிருந்து காலி செய்ய முடியும். 

எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றிவிட்டால், விரும்பினால்கூட தனித் தொகுதியில் நிற்க முடியாதுதானே. அதுவரை, தனித் தொகுதியிலோ பொதுத் தொகுதியிலோ நிற்பதுதானே சரியானது. 

ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால், வேறு வேலை கிடைக்கின்ற வரையில் ஏற்கனவே இருக்கும் அந்த வேலையில் நீடிப்பதுதான் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல; சரியான முறையும் கூட. புதிய வேலை கிடைத்த பிறகு பழைய வேலையை உதறிப்போவதில் இழப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.


ஏர் மகாராசன்

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

17.12.2020

புதன், 16 டிசம்பர், 2020

பண்பாட்டு அழகியலும் அரசியலும்: மிகுந்த ஆழமான தேடுதலோடும் எளிதாகப் புரியும் வண்ணமும் விளக்குகிற நூல்:- கவிஞர் கண்மணிராசா



ஓர் அருமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது தோழர் ஏர் மகாராசன் அவர்களின் 'பண்பாட்டு அழகியலும் அரசியலும்' என்கிற நூல். அதுவும் விவசாயிகளின் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கும் இத்தருணத்தில் இந்நூலை வாசிக்க வாசிக்கப் பிரமிப்பாக இருந்தது. 

மூன்று கட்டுரைகள் தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னிட்டு எழுதியவை.  ஏன் சல்லிக்கட்டு வேண்டும்...? என்பதற்கான விரிவான பதிலாக மட்டுமல்லாது, சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் தமிழரின் குறிப்பாக, நிலத்தோடு நெருங்கிய தொடர்புடைய விவசாயிகளின் பண்பாட்டு உரிமையும்கூட என்பதைப் பல்வேறு தொல்தரவுகள் மூலமும் சங்க இலக்கியங்களின் ஆதாரங்கள் மூலமாகவும், சல்லிக்கட்டுத் தடை என்பதற்குப் பின்னுள்ள பார்ப்பனிய அரசியல் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளது சிறப்பு. 

ஆய்வாக மட்டுமல்லாது நேரடியாக மதுரையில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற பட்டறிவையும், போராட்ட வழியெங்கும் நிறைந்து ததும்பிய உழைக்கும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.

பேராசான் நா. வானமாமலையின் உழவுக்குடிகள் தொடர்பான ஆய்வுகள் பற்றிய கட்டுரையொன்றும், கீழடி ஆய்வுக்கட்டுரையும், கார்த்திகை எனப்படும் மா ஒளித் திருநாள் பற்றிய ஆழமான கட்டுரையும் உள்ளன.

ஏனைய கட்டுரைகள் சாதி... காட்சிமொழி... கவிதையின் அழகியல் அரசியல்... புதிய கல்விக் கொள்கை.. பெண் அரசியல் எனப் பேசுகின்றன. 

எடுத்துக்கொண்ட விசயத்தை மிகுந்த ஆழமான தேடுதலோடு.. ஆனால், எளிதாகப் புரியும் வண்ணம் விளக்குகிற ஆசிரியரின் எழுத்து அபாரம். 

எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்விலும் உழைக்கும் மக்களின் மீதும்,  தமிழ் மண்ணின் மீதும்

தீராத காதல் கொண்ட 

ஏர் மகாராசன் தோழருக்கு அன்பும் நன்றியும். 

அவரின் பிறநூல்கள்:

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு... 

நா. வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி... 

ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும்... காதலற்ற முத்தங்களும்... 

(பெண்விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்கள்) 

சொல்நிலம்... கவிதை நூல் 

உட்பட பல நூல்களின் ஆசிரியர். 


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கண்மணி ராசா அவர்களது அறிமுக மதிப்புரை.

*

பண்பாட்டு அழகியலும் அரசியலும்... 

ஆதி பதிப்பகம். 

ரூ. 120.


நூல் வேண்டுவோர் 

தொடர்புக்கு:

அடவி முரளி

9994880005

திங்கள், 14 டிசம்பர், 2020

உழவர் போராட்ட ஆதரவும் இரட்டை வேட நிலைப்பாடும்: மகாராசன்

அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், உழவர்களின் வேளாண் உற்பத்தி வாழ்வியலைப் பாதுகாக்கும் நோக்கிலும், சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வேளாண் துறையைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்தியாவின் வடபகுதி உழவர்கள் பெருந்திரளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. போராடிக் கொண்டிருக்கும் உழவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், உழவர்களின் வாழ்வியலுக்கு எதிராகச் சட்டங்களை இயற்றிக் கொண்டும், உழவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலும் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் பல்வேறு தரப்பினர் தமது உழவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பகுதித் தரப்பினரின் ஆதரவைப் பெற்றதாக வடக்கத்தி உழவர்களின் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கிறது.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தெரியப்படுத்தி வருகின்றனர். வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்ச் சமூகத்தின் பொது மனசாட்சி தமது ஆதரவைத் தார்மீகமாகத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. உழவர் இயக்கங்கள், சமூக சனநாயக சக்திகள், பல்வேறு அரசியல் கட்சிகள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தமிழ்தேசிய இயக்கங்கள் போன்றவை வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை தார்மீகமாக ஆதரித்தும், பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நடத்தியும் வருகின்றன.

சுவரொட்டி, துண்டறிக்கை, தெருமுனைக்கூட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பரப்புரை போன்ற பல்வேறு வகையில் வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தத்தமது அரசியல் களங்களில் செயலாற்றி வருவதோடு, சமூக ஊடகங்கள் பலவற்றிலும் தீவிரப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்திலும் பரப்புரையிலும் செயலாற்றும் தமிழகத்தின் அனைத்துச் சனநாயக சக்திகள், உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை. போராடுகிற உழவர்களின் பக்கம் அனைவரும் நிற்பதே நியாயமும் கூட.

உழவர்களின் பக்கம் நிற்பதாகக் கருதும் அல்லது சொல்லிக்கொள்ளும் அல்லது களம் காணும் அனைத்துத் தரப்பினரும் வடக்கத்தி உழவர்களின் நியாயத்தைத்தான் உணர்ந்திருக்கிறார்களே ஒழிய, தெக்கத்தி உழவர்களின், குறிப்பாகத் தமிழகத்துப் பெருந்திரள் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து கொள்ளவுமில்லை; புரிந்துகொள்ளவுமில்லை. 

பெருந்திரள் உழவர்களின் அடையாளப் போராட்டங்களையும் தன்மானப் போராட்டங்களையும் கண்டும் காணாமல் இருப்பதும், அவர்களது கோரிக்கையில் இருக்கும் உண்மைத் தன்மைகளையோ அல்லது நியாயத்தையோகூட காதுகொடுத்துக் கேட்கவும் பொது சமூக மனசாட்சி மறுத்துக்கொண்டேதான் இருக்கிறது. வடக்கத்தி உழவர்களின் நியாயத்தை உணர்ந்த பொது சமூக மனசாட்சியானது, தமிழக உழவர்களின் பெருந்திரள் கோரிக்கையின் நியாயத்தை உணர மறுக்கிறது; கள்ள மவுனம் காக்கிறது. கூடவே, உள்ளுக்குள் இருக்கும் சாதியாதிக்க உணர்வுக்கும், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியாதிக்கக் கருத்தியலுக்கும் அதன் பிழைப்புவாத சக்திகளுக்கும் ஏதோ ஒருவகையில் பலியாகிக் கிடக்கிறது; அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது; ஒத்தூதிக் கிடக்கிறது.
ஆனால், வடக்கில் போராடும் உழவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக வேடம் கட்டிக்கொள்கிறது.

வடக்கில் போராடும் உழவர்கள் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் தங்களை உழவர்களாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளனர். பல்வேறு மொழி பேசக்கூடியவர்களாக இருந்தாலும், பல்வேறு தேசிய இனங்களாக இருந்தாலும், பல்வேறு வட்டாரத்தினராக இருந்தாலும், பல்வேறு சாதி மதத்தினராக இருந்தாலும், வேளாண்மை செய்கிற அவர்கள் தங்களை உழவர்கள் என்றும், வேளாண்மை செய்கின்ற அவர்களை உழவர்கள் என்றே இந்தியாவின் வடபகுதி உழவர்கள் அடையாளப்படுகின்றனர். 

புரிதலுக்காகச் சொல்வதெனில், இந்தியாவின் வட பகுதியில் வேளாண்மை செய்கிற அவர்கள் வடக்கத்தி வேளாளர்கள்/ உழவர்கள். தாங்கள் செய்து வருகிற வேளாண் தொழில்சார்ந்த அடையாளப் பெயரோடுதான் அவர்கள் அடையாளப்படுகின்றனர். வேளாண் தொழில்சார்ந்த அடையாளத்தைப் பெற்றிருப்பதிலோ அல்லது பெறுவதிலோ வடக்கத்தி உழவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதனால்தான், அவர்கள் நேரிடையாகவே வேளாண் சட்டங்களை எதிர்த்துக் குறிப்பான பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தமிழகத்து உழவர்களின் பிரச்சினைப்பாடுகள் வேறு மாதிரியானவை. ஆதி காலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண் தொழிலைச் செய்து வருகிற பல்வேறு வேளாண் தொழில் மரபினர் தமிழகத்துப் பூர்வக்குடிகளாக இருக்கின்றனர். வேளாண்மை செய்கிற தொழில் மரபினரைத் தொழிற்பெயரால் பல்வேறு வகையில் அடையாளப்படுத்துகிற வழக்கம் தமிழகத்தில் இன்றுவரையிலும் இருக்கின்றது. உழவுத்தொழில் செய்வதால் உழவர் என்றும், வேளாண்மை செய்வதால் வேளாளர் என்றும் குறிப்பதே தமிழரின் பெருவழக்காக இருந்திருக்கிறது. இத்தகைய வேளாண் தொழிலைப் பல்வேறு குலங்களும் குடிகளும் குழுக்களும் செய்து வந்திருக்கின்றன. இதில் பல்வேறு மறைந்துபோயின; வேறு தொழிலுக்கு மாறிக்கொண்டன; புதியதாகவும் வந்துசேர்ந்தன. ஆனாலும், ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் பிண்ணிப் பிணைந்து வருகின்றவை மிகச்சில குலங்களும் குடிகளும் மட்டுமே.

அதிலும் குறிப்பாக, இன்றளவிலும் வேளாண் தொழில் மரபினராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொல்லியல் அகழாய்வு, கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, பிற நாட்டார் குறிப்புகள் போன்ற வரலாற்று ஆவணங்களிலும், இலக்கணம், இலக்கியம் போன்ற தமிழ்மொழிசார் பதிவுகளிலும், நாட்டுப்புற வழக்காறுகள், வழிபாடு, சடங்கு உள்ளிட்ட பண்பாட்டு நடத்தைகளிலும் வேளாண் மரபினராகவே அடையாளப் படுத்தப்பட்டிருப்பவர்கள் மிகச்சில குலங்கள் மட்டுமே. குலத்தாலும் குடியாலும் வட்டாரத்தாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் வேளாண் தொழில் செய்துவந்த தொழில் மரபினரை வேளாளர் என்ற தொழிற்பெயர் அடையாளத்தால்தான் குறிக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நுழைந்துவிட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள்/படையெடுப்புகள்/வன் குடியேற்றங்கள் போன்றவற்றால், தமிழகப் பூர்வீக வேளாண்மைக் குடிகளின் பெரும்பகுதி வேளாண் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன; பூர்வீக நிலங்களிலிருந்து பெரும்பகுதி வேளாண் குலங்கள் துரத்தப்பட்டுள்ளன. பூர்வீக வேளாண் தொழில் மரபினரோடு இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. பூர்வீக வேளாண் குலங்களிடம் இருந்து வந்த குடும்பு ஆட்சிமுறை எனும் நிர்வாக முறைகள்கூட மாற்றியமைக்கப்பட்டன. பூர்வீகக் குடிகளின் ஆட்சி, அதிகார, உற்பத்தி முறையோடு அவர்களுக்கிருந்த உறவு முற்றாக அழித்தொழிக்கப்பட்டன. கூடவே, பன்னெடும் காலமாக வேளாளராகவும், வேளாண் குலங்களாகவும் திகழ்ந்துவந்த பெருந்திரள் சமூகத்தை இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிப்பு செய்து, வேளாளர் எனும் அவர்களது தொழிற்பெயர் அடையாளங்களை வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாத பிற குலங்களுக்கும் குடிகளுக்கும் வழங்பட்டுவிட்டன அல்லது அபகரித்துக்கொண்டன. 

பெயரளவில் வேளாளர் என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டிருக்கும் எந்தவொரு குலமும் குடியும்கூட வேளாண் தொழில் மரபினருக்கான வரலாற்றுத் தொடர்ச்சியும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்டவை கிடையாது.

அதேவேளையில், வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் தம்மை அடையாளப்படுத்தி வருகின்ற பெருந்திரள் சமூகமானது, வரலாற்றுத் தொடர்ச்சியையும் பண்பாட்டுத் தொடர்பையும் முன்வைத்து, வேளாளர் எனும் தொழிற்பெயருக்கும் தங்களுக்கும் இருக்கிற தொன்மைச் சான்றாதாரங்களை அகச்சான்றுகளாகவும் புறச்சான்றுகளாகவும் முன்வைத்துத் தம்மை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழில் பெயரால் அடையாளப்படுத்த வேண்டும் எனவும், வேளாண்மை செய்கிற தொழில் மரபினரான தங்களை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழிற்பெயரால் அரசும் பொது சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி வருகிறது உழவர் சமூகத்தின் ஒரு பகுதி.

ஆனால், வேளாண் தொழில் மரபினரின் தொழிற்பெயர் அடையாளக் கோரிக்கையான வேளாளர் எனும் பின்னொட்டுப் பெயர் அடையாளத்தை, குறிப்பிட்ட சில பல சாதியினருக்கான அடையாளம் போலவும், சாதிப் பட்டம் போலவும் கருதிக் கொண்டு, வேளாளர் எனும் தொழிற்பெயர் அடையாளத்தை வேளாண் தொழில் மரபினராகத் தொடரும் பெருந்திரள் சமூகத்திற்கு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வேளாளர் என்பது சாதிப்பெயரோ குலப்பட்டமோ அல்ல. வேளாளர் என்னும் சொல்லானது, வேளாண்மைத் தொழில் செய்வதால் உருவான தொழிற்பெயர்ச் சொல். வேளாண்மை செய்கிற தொழில் மரபினர் யாவருக்கும் பொதுவான தொழிற்பெயர் அடையாளச் சொல். வேளாண்மை செய்கிற எந்தக் குலமும் குடியும் அடையாளப்படுத்திக் கொள்கிற தொழிற்பெயர் அடையாளமே வேளாளர் எனும் சொல்லாகும். இந்தத் தொழிற்பெயர் அடையாளச் சொல்லைப் பல குலங்களும் குடிகளும் தங்களது அடையாளப் பெயர்களோடு முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் இணைத்துக் கொண்டுள்ளன.

முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வேளாளர் எனும் சொல்லைக் கொண்டிருக்கிற பல குலங்களும் உண்மையில் வேளாண்மையோடு தொடர்பு கொண்டவை கிடையாது. அவ்வாறு, வேளாளர் எனும் பெயரை ஒட்டாகக் கொண்ட பல குலங்களும் ஒரே சாதியினரும் கிடையாது. பல சாதியினரும் வேளாளர் எனும் ஒட்டுச் சொல்லால் குறிக்கப்படுகின்றனர். வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாதவர்களே தங்களை ஏதோ ஒருவகையில் வேளாளர் என அழைத்துக்கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிற வேளாளச் சாதியினர், உண்மையாகவே காலங்காலமாக வேளாண்மையோடு தொடர்பு கொண்டிருக்கிற வேளாண் தொழில் மரபினர் தங்களையும் வேளாளர் என்று அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என்று கேட்கும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வேளாண்மையோடு தொடர்பில்லாத போலி வேளாளர்கள்தான், வேளாண்மையோடு உண்மையாகவே தொடர்பு கொண்ட பெருந்திரள் சமூகத்தை வேளாளர் என அடையாளப்படுத்துவதை மறுக்கிறது; எதிர்க்கிறது; போராடுகிறது.

உண்மையாகவே வேளாளர் என்ற தகுதிக்கும் அடையாளத்திற்கும் உரியவர்களான பெருந்திரள் வேளாண் சமூத்தினரின் பெயர் மாற்றக் கோரிக்கையானது பண்பாட்டு அடையாள மீட்பும் தன்மதிப்புக்கான போராட்டமும் நிறைந்த ஒன்றாகும்.

வேளாண் தொழில் பெயர் அடையாளத்திற்காகப் போராடும் வேளாண் தொழில் மரபினரின் கோரிக்கையையும் பொது சமூக மனசாட்சி தார்மீகமாக ஆதரிப்பதுதானே நியாயம். இதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் இருப்பதும்கூட ஒரு பக்கம் இருக்கட்டும்.

வேளாண்மையே செய்யத் தெரியாத, ஆணும் பெண்ணுமாய்ச் சேறு சகதியில் இறங்காத, வேளாண் தொழில்திறமும் நுட்பமும் இல்லாத, வேளாண்மையோடு பண்பாட்டு ஒட்டுறவு இல்லாத பல சாதியினர் தங்களை வேளாளர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி அவர்கள் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் யாவரும் போலியான வேளாளர்கள்தான்.

வேளாண் தொழில் மரபோடு தொடர்பில்லாத பல சாதியினரும் தங்களை வேளாளர் என அழைத்துக்கொண்டும் அடையாளப்படுத்திக் கொண்டும் இருப்பதோடு மட்டுமல்லாமல், வேளாண் தொழிலை உண்மையாகச் செய்து வருகிற தொழில் மரபினரை வேளாளர் என அடையாளப்படுத்தக் கூடாது எனப் போலி வேளாளர்கள் எதிர்ப்புக் காட்டுவதும், மறுப்புக் காட்டுவதும், போராட்டம் செய்வதுமாகத் தீவிரம் காட்டுகின்றனர்.

யார் யாருக்கோ, எந்தெந்தக் குலங்களுக்கோ சாதியினருக்கோ வேளாளர் எனும் அடையாளப் பெயர் இருக்கும்போதும் வழங்கும்போதும் எதிர்ப்பும் மறுப்பும் போராட்டமும் செய்திடாத போலி வேளாளர்கள், உண்மையான வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் அடையாளப் பெயரை வழங்குவதற்கு எதிர்ப்பும் மறுப்பும் காட்டுகிறார்கள். அண்மைக்காலமாகப் பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். போலி வேளாளர்களின் இத்தகையப் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான சாதியாதிக்க வெறியும் காழ்ப்பும் வன்மமும் அன்றி வேறில்லைதான்.

உண்மையான வேளாண் மரபினரின் அடையாளமான வேளாளர் என்னும் தொழிற்பெயரை அவர்களுக்கானதாக ஏற்கவும் அல்லது அவர்களுக்கு வழங்கவும் அங்கீகரிக்கவும் செய்வதுதான் நியாயம்.

அதேபோல, வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் பெயர் கொண்டு அடையாளப்படுத்துவதற்கு எதிர்ப்புக் காட்டுகிற
போலி வேளாளர்களின் சாதிய வெறியை, சாதியக் காழ்ப்பை, சாதிய வன்மத்தை எதிர்ப்பதும்தானே நியாயமானது.

ஆனால், போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியை, சாதிய வன்மத்தை, சாதியக் காழ்ப்பைப் பொது சமூக மனசாட்சி மட்டுமல்ல, சாதியொழிப்பு பேசுகிற - தீண்டாமை ஒழிப்பு பேசுகிற - பாட்டாளி வர்க்க விடுதலை பேசுகிற - ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசுகிற - தமிழ்த் தேச விடுதலை பேசுகிற - சமூக சனநாயகம் பேசுகிற - சமூகநீதி பேசுகிற எந்தவோர் சமூக இயக்கங்களும் எதிர்க்கவோ கண்டிக்கவோகூட முன்வரவில்லை.

போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியோடும், சாதியக் காழ்ப்போடும், சாதிய வன்மத்தோடும் நடைபெற்று வருகிற சிற்சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைக்கூட ஊதிப் பெரிதாக்கிக் காட்டும் வேலைகளைத்தான் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் செய்து வருகின்றன.

வடக்கத்தி வேளாளர்கள் தங்கள் வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் பெரிதும் போராடி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தெக்கத்தி வேளாளர்களோ தங்களை வேளாளர் என்று அடையாளப்படுத்துங்கள்; அங்கீகரியுங்கள் என்று பெயர் அடையாளத்திற்கே போராடும் சூழலில்தான் இருந்து கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம், வேளாளர் என்று போலியாகச் சொல்லிக்கொள்ளும் போலி வேளாளர்களோ, உண்மையான வேளாளர்களுக்கு வேளாளர் என்று அடையாளம் வந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தில்லியிலும் வடக்கிலும் நடக்கின்ற உழவர்களின் போராட்டத்தின் பக்கம் நிற்பது உண்மையென்றால், வடக்கத்தி வேளாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பது உண்மையென்றால், தமிழ்நாட்டின் தெக்கத்தி உழவர்களின் பெயர் அடையாளப் போராட்டத்தின் பக்கமும் நில்லுங்கள்; தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையின் நியாயத்தை ஆதரியுங்கள். போலி வேளாளர்களின் சாதியவெறி, சாதியக்காழ்ப்பு, சாதிய வன்மத்தைக் கண்டியுங்கள்.

உழவர்களின் பக்கம் நிற்பது உண்மையானால், வடக்கத்தி வேளாளர்களின் பக்கம் நிற்பதைப்போல, தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். வடக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையை ஆதரிப்பதுபோல, தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையையும் ஆதரியுங்கள்.

உழவர்களின் பக்கம் நின்று, வடக்கத்தி உழவர்களுக்கு/வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி சனநாயக அரசை அம்பலப்படுத்துவதுபோல, தெக்கத்தி உழவர்களுக்கு / வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி வேளாளர்களின் சாதி விரோதத்தையும் அம்பலப்படுத்துங்கள். இதுவும்தான் உழவர் பக்கம் நிற்பதன் உண்மையான நிலைப்பாடு.

மாறாக, வடக்கத்தி வேளாளர்களை மட்டுமே ஆதரிப்பதும்; வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தெக்கத்தி வேளாளர்களின் அடையாளப் போராட்டத்தை ஆதரிக்காமலும், போலி வேளாளர்களின் சாதியாதிக்கத் திமிர்த்தனத்தை எதிர்க்காமல் இருப்பதும் நேர்மையான நிலைப்பாடாகக் கருதமுடியாது. இரட்டை வேடம் போடும் இத்தகைய நிலைப்பாடு என்பது சாதி ஆதிக்கத்தின் பக்கமே நிற்பதாகும்.

இதைக் குறித்து, திராவிட இயக்கங்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் மட்டுமல்ல, புரட்சிகர மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கூட இன்னும் விளங்கிக்கொள்ளவும் இல்லை; அறிந்து கொள்ளக்கூட முன்வரவுமில்லை. அதனால்தான், அந்த மக்களிடமிருந்து மெல்லமெல்ல அவை அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு மத பயங்கரவாத சக்திகள் ஊடுறுவிக் கொண்டிருக்கின்றன.

பாவம் அவர்கள். எவரது துணையுமின்றி ஒண்டியாய் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். உழவர்களின் பக்கம் நிற்பது உண்மை எனில், பெயர் அடையாளத்துக்காகவும் வேளாண்மைத் தொழிலுக்காகவும் போராடுகிற உண்மையான வேளாளர் பக்கம் நில்லுங்கள்; அவர்களுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுங்கள். இதுவே சமூக நீதியும் சமத்துவ நீதியும்கூட.

ஏர் மகாராசன்
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
14.12.2020.
*
ஒளிப்படம் உதவி:
ஊடகவியலாளர் 
இரா.சிவக்குமார், மதுரை.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தமிழீழ மாவீரர் நாள்: உணர்வும் வரலாறும்.

 


தமிழீழ மாவீரர் நாள் வாரம்.

அதிகாரப்பூர்வ பெயர்: 

மாவீரர் நாள்.

மாவீரர் நாள் அடையாளம்: காந்தள்.

கடைபிடிப்போர்: தமிழர்.

நாள்: நவம்பர் 27.

காலம்: 1 நாள் நிகழ்வு.

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, 

தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் 

அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

வரலாறு:

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

கடைப்பிடிப்பு:

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

கொடியேற்றுதல்:

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற 

ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உறுதிமொழி:

உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.

"மொழியாகி,

எங்கள் மூச்சாகி - நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை

உருவாக்கும் தலைவன்

வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடு இங்கு

துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்

தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!"

ஈகைச்சுடரேற்றுதல்:

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.

மாவீரர் நாள் பாடல்:

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.

 இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

மாவீரர் குடும்ப கௌரவிப்பு:

மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.

அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாவீரர் நாள் உரை:

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.

கார்த்திகைப் பூ:

தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மேற்கோள்கள்:

மயானங்கள் புனிதமாகும் மாவீரர்நாள்.தமிழீழ மாவீரர் நாள் அனுபவம் ஒன்று - த. அகிலன்.

நன்றி:

தமிழ் விக்கிப்பீடியா.

தமிழீழ மாவீரர்களுக்கு

வீரவணக்கம்.

ஏர் மகாராசன்

20.11.2020