ஞாயிறு, 5 டிசம்பர், 2021

உழவாண்மை இயங்கியலை மிகச் சிறப்பாகப் பேசும் நூல் : மா.ஜெயச்சந்திரன்


மானுட சமூகம் உணவுதேடும் நிலையிலிருந்துஉற்பத்தி நிலைக்கு மாறியது, தொல்காப்பியனார் கூறும் தீம்புனல் உலகமெனும் மருத நிலத்தில்தான். அந்த மருதநில மக்களின் உழைப்பு, உற்பத்தி என்பதெல்லாம் உழவு உற்பத்திதான்.
அந்த உற்பத்தியாளர்களான 'தேவேந்திரர்' எனும் மள்ளர்/பள்ளர்/'பள்ளி' மக்களின் வாழ்வியலை, வரலாற்றை,
அவ் உழுகுடி மக்களின் பண்பாட்டு விழுமியங்களைத் தமிழிய வேர்களின் தடம் (வடம்) பிடித்து "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" எனும் நூலில், அதன் நூலாசிரியர் திரு ஏர் மகாராசன் சிந்தையில் பொதுமையுணர்வோடும்,
தக்க வரலாற்றுச் சான்றுகளோடும், இலக்கியத் தரவுகளோடும்
மிக நேர்த்தியாக  எழுதியுள்ளார்.

ஏர்க்களம் / போர்க்களமாய் வாழ்ந்த இத்தமிழ்த் தொல்குடிமக்களின் வாழ்வியலை மிக வலிமையாகவும் எளிமையாகவும் பேசுகிற இந்நூல், 
மருதநில வேளாண் குடிகளான மள்ளர் / பள்ளர் / பள்ளி எனும்
உழுகுடிகளின் வரலாற்று எழுத்தாவணம்  என்றால் அது மிகையல்ல.

'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' என்னும் இந்நூலில், பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் உழவர்கள் பெற்ற இடம், அவர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, பயிர்த் தொழிலில் உயர்வு, பண்பாட்டு மேன்மை, வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக விரிவாகப் பேசும் ஏர் மகாராசன், பசியை ஒழிக்க  உழவர்கள், உழவுப் புரட்சியை  மேற்கொண்டதால்தான் மொழி வளம் பெற்றது; முத்தமிழ் சிறந்தது; பண்பாடு தோற்றம் பெற்றது; ஏற்றம் பெற்றது. உழவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி, நாகரீக வளர்ச்சி என்கிறார்.

அப்படிப்பட்ட வேளாண் உற்பத்திக்கு அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது வித்து. ஒற்றை விதைக்குள் அரூபமாய் ஒளிந்திருக்கும்  பல விதைகளை வெளிக்கொணரும் வித்தையைக் கற்றவர்கள் உழவுத் தொழில் மரபை, வாழ்வியல் மரபாகக் கொண்டிருப்பவர்கள் 'பள்ளர்கள்'தான் என்றும், 12,000 சாதி நெல் வகைகளை இந்த மள்ளர் எனும்  பள்ளர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்களை காராளர், கருங்களமர் என்றெல்லாம் பழனி செப்புப் பட்டயத்தின் வழியும் பள்ளு இலக்கியங்களின் வழியாகவும் சான்று பகர்கிறார்.

காராளர்களின் 'ஏர் பூட்டல்' தொழிலான 'ஏர் நடத்தல்' சிறப்பானால்  எல்லாம் தானே நடக்கும், பசிப்பிணி ஒன்று மட்டுமே நடக்க மாட்டாது! என்கிறார்.

ஆற்றுநீர், ஊற்று நீர், மறைநீர் (Virtual Water), மழைநீர், வெள்ளமெனப் பெருகி, மருதநிலத்தை வளமாக்கியது. மண்ணும் நீரும் சேர்ந்தே உணவாகியது. அதுவே உயிர்களுக்குப் பசிப்பிணியைப் போக்கும் மருந்தாகியது! 'உழவுதான்' உணவைப் படைத்தது! 'உபரிதான்' வணிகத்தைத் தோற்றுவித்தது!

வழிபாட்டுச் சடங்காகவும்,
வாழ்த்துச் சடங்காகவும் இருக்கும் வேளாண் வளமைச் சடங்குகள்தான் தமிழர் பண்பாட்டின் தோற்றுவாய் எனவும், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களின் சேர்க்கைதான் வேளாண்மை.
மண்ணும் நீரும் பிசைந்து உருவானதே  உணவு,
'உழவாண்மை' என்றெல்லாம், வான் -மண் - உழவு இயங்கியலை  மிகச்சிறப்பாக இந்நூலில் பேசியுள்ளார் திரு ஏர் மகாராசன் அவர்கள்.

"பழுதுண்டு வேறோர் தொழிலுக்கு,
பழுதில்லா ஒரே தொழில் உழவு தான்!உழவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல்.

உழவுப் பண்பாட்டு மரபு என்பது, நிலத்தோடும், நெல்லோடும், உழவோடும், மாடுகளோடும் பிணைந்த பன்னெடுங்கால அறிவும், உறவும், உணர்வும், உழைப்பும்தான் என்று கூறுகிறார் ஏர் மகாராசன்!

உழவின் மேன்மையை, உழவர்களின் சிறப்பை, உழுகுடி மக்களின் வரலாற்றை, பண்பாட்டு விழுமியங்களை  இந்நூல் முழுவதிலும் மிகச்சிறப்பாகப் போற்றியுள்ளார்! வாழ்த்துக்கள்.

கட்டுரையாளர்:
மா.ஜெயச்சந்திரன்,
கவிஞர் - அரசியல் செயல்பாட்டாளர்,
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு.
*
நூல் தலைப்பு:
வேளாண் மரபின்
தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும்
வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்:
ஏர் மகாராசன்

வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு:
முதல் பதிப்பு, அக்டோபர் 2021.

பக்கங்கள்: 224
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ: 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
9080514506.

சனி, 4 டிசம்பர், 2021

வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : சாதிய நூல் அல்ல; தமிழர்களின் சரித்திர நூல் - இரா.அ.கரிகால மல்லன்


சங்க இலக்கியச் சான்றுகளும், அறிஞர்களுடைய கூற்றுகளும்,  மறுக்க முடியாத தரவுகளும், தமிழர் வாழ்வியலும் பின்னிப்பிணைந்த வரலாற்று நூலாகவும் சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது பெருமதிப்பிற்குரிய அண்ணன்  ஏர் மகாராசன் அவர்கள் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூல். 

வேட்டைச் சமூகத்தில் தொடங்கி, குறிஞ்சி வாழ்வையும் மருதநில வரலாறும் விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் இது.

உழவனே கிழவன்; கிழவனே அரசத் தொடக்கம்.. அவனே வேந்தன். 

தமிழுக்கே இலக்கணம் படைத்த தொல்காப்பியனைத் தொடர்ந்து, தமிழ் இலக்கிய இலக்கணங்களைச் சான்றுகளாக எடுத்துரைத்து, அறிஞர் பெருமக்களைச் சாட்சிகளாகப் பதிவுசெய்து,  கும்மிப் பாடல்கள் உட்பட பல தரவுகள் இந்நூலுக்கு மெருகூட்டுகின்றன. 

நீருக்கும் நிலத்திற்குமான தொடர்பும், பொன்னேர் பூட்டும் வாழ்வியலும், நாற்று நடவும், விழாக்களும், அறுவடைப் பெரு விழாக்களிலும் இறைவனான சிவனும் பார்வதியும் முருகனும் நெல்லின் மக்களான பள்ளர்களாக எடுத்துரைத்தது, உழவுக்கு மறுக்க முடியாத அசைக்க முடியாத சான்றுகளாகும். 

நீர் மேலாண்மையைக் கட்டியெழுப்பிய குளத்துப்பள்ளனும் குமிழிப்பள்ளனும் மடைக்குடும்பனும் மறுக்க முடியாத சான்றுகளாக உள்ளனர். இந்நூலை, சாதிய நூலாகப் பார்க்க முடியாது. தமிழர்களின் சரித்திர நூல் என்பதே உண்மை. வேளாண் மரபின் தமிழ் அடையாளம்  வெற்று நூல் அல்ல; வெற்றி நூல். 

*

கட்டுரையாளர்:
இரா.அ.கரிகாலமல்லன்
தமிழர் மீட்புக்களம்,
தமிழர் நாடு.


வெள்ளி, 3 டிசம்பர், 2021

நவீனக் கவிதை மொழி - புரிதலுக்கான சில குறிப்புகள்: மகாராசன்.

தமிழில் தற்கால இலக்கியங்கள் எனும் வகையில் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் போன்றவை பெருமளவில் வந்து கொண்டிருப்பினும், அவை மிகக் குறைவான அளவில்தான் மக்களை எட்டுகின்றன. இலக்கியம் எனும் நீரோடைக்குள் நீந்தித் திரிகின்ற மீன்களைப் போல நிறைய இலக்கிய வகைககள் வந்து கொண்டு இருப்பினும், கவிதை என்கிற ஒன்று மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.


பல்வகைச் சூழல்களின் பிரதிபலிப்பாகவும் விளைவுகளாகவும் வெளிவருகிற கவிதைப் பனுவல்கள் இளைய தலைமுறையினருக்குக் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி உள்வாங்கிக் கொள்ளும் போதிய புரிதல்நிலை அவர்கள் வசம் வாய்க்கப் பெறுவதில்லை. இதற்குக் காரணமாக, படைப்பாளியின் மனவெளியை உட்கிரகித்துக் கொள்ளுதலின் போதாமைகள், கவிதை என்றால் என்ன? என்கிற கேள்விகளுக்கான பதிலிருப்புகளின் வலைகளுமே முன் நிற்கின்றன.


வாழ்க்கையின் இயங்கு தளத்தினூடாகக் கடந்து செல்லும் போது, ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதைவிட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து - மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மனவெளியைக் கொண்டிருப்பது கவிதைத் தளம். இன்னும் கூடுதலாகச் சொல்வதானால், மனித அழகியலின் உள்ளுணர்வுகளைக் கிளர்த்துவது கவிதை.


தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள், உள்ளக் கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணை சேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாகப் பிறக்கிறது. இத்தகையக் கவிதைகள் தனக்கான ஒரு வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை.


தமிழின் சங்க காலத் திணை நிலைக் கவிதைகள்கூட ஒரே மாதிரியான வடிவத்தில் இருப்பது கிடையாது. சங்கம் மறுவிய காலத்தில் தோற்றம் கொண்ட அறநிலை பேசுகிற கவிதைகள் சுருக்கமான வடிவத்தைப் கையாண்டன. இப்படியாகத் தமிழ்க்கவிதையைக் குறிப்பிட்ட வடிவத்துக்குள் நிலை நிறுத்தம் செய்ய முடியவில்லை. அப்படி நிலைநிறுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. தமிழின் கவிதைப் போக்குகள் பல்வகை வடிவங்களைச் சோதித்துப் பார்த்திருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது ‘புதுக்கவிதை' தோற்றம். மரபுக்கவிதை வடிவத்திலிருந்து விலகிப் ‘புதுக்கவிதை வடிவத்தைக் கையாண்டபோது எதிர்ப்புகள் கிளம்பின. கவிதைத் தன்மையைச் சிதைவுக்கு உட்படுத்தக்கூடிய வடிவம் என்று புதுக்கவிதை வடிவத்தைச் சாடினார்கள். அம்மாதிரியான விமர்சனங்களுக்கிடையே புதுக்கவிதை தனக்கான இடத்தை நிரப்பிக் கொண்டது மட்டுமல்லாமல், மரபுக் கவிதைகளின் தன்மைகளைக் காட்டிலும் கூடுதலான செறிவைத் தர முடிந்திருக்கிறது. மரபுக் கவிதைகளில் காணலாகாத பல்வகைத் தன்மைகளை நிகழ் காலத்தியக் கவிதைகளில் பார்க்க முடிகிறது.


பழைய மரபுகளைக் கடந்து புதியன வருகிறபோது அது நவீனமாகிப் போகிறது. அந்தந்தக் காலகட்டத்தில் தோன்றக்கூடிய இலக்கியங்கள் அந்தந்தக் காலத்தின் நவீன இலக்கியமாகிக் கொள்கின்றன. இப்படி, ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான கவிதைகள் அதற்கான மொழி அடையாளங்களோடு அமைந்திருக்கின்றன. ஆக, கவிதைக்கான மொழி என்பது பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் வெளிவருகிற கவிதைகள் புதுமாதிரியான மொழியைக் கொண்டிருக்கின்றன. இதுவரையிலும் காணலாகாத மொழியின் சொல்லாடல்கள் தற்காலக் கவிதைகளில் தென்படுகின்றன. இம்மாதிரியான கவிதைகளைத்தான் நவீனக் கவிதை என்கிறார்கள். தற்காலத்தியக் கவிதைகள் யாவும் புதுக்கவிதை என்கிற வடிவத்தோற்றத்தில் இருந்தாலும், அதனுள் பொதிந்திருக்கும் மொழிப் புழங்கல் நவீனமாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கவிதை மரபு சொல்லாமல் விட்டுப்போன - சொல்லாத பல வெளிகளை - உணர்வுகளை - அனுபவங்களைத் தற்காலக் கவிதைகள் பதிவு செய்கின்றன. இதைத்தான் எழுத வேண்டும் என்கிற எந்த வரையறுப்புகளும் இல்லாமல், எதைப் பற்றியும் எழுத்தில் வெளிக்கொணரும் சுதந்திரப் போக்கு நவீனக் கவிதைகளில் தென்படுகின்றன. ஆக, தற்காலத்திய வாழ்க்கை நவீனமயமாகிக்கொண்டிருக்கும் சூழலில், நவீன வாழ்வின் பிரதிபலிப்பாக இன்றைய கவிதைகள் இருப்பதனால் அதை நவீனக் கவிதைகள் எனச்சுட்டலாம். 


மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும், அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழுந்த கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து, அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தந்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன. அதுமட்டுமல்லாமல், புதிய உணர்வோட்டங்களையும் - நிகழ் காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன. நவீன வாழ்க்கையின் நடப்பியல் பின் புலங்களைத் தோள் பிடித்துக் கொண்டு அகத்தில் ஏற்படுகிற உணர்வோட்டங்களைப் புனைவுகளாக்கித் தருகின்றன இன்றைய கவிதைகள்.


ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் எனும் வாசனையைத் தாண்டி ஒரு கவிதைப் பனுவனுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது இன்றைய கவிதைமொழி. அது மட்டுமல்லாமல், படைப்பாளியின் மனவெளிக்குக் கவிதையின் ஊடாக வாசகனை அவ் வெளிக்கே அழைத்துச் செல்வதற்கும் தன் பயணத்தை நீட்டித்திருக்கிறது.


ஒரு பனுவலுக்குள் இயங்கும் பல்வேறு பனுவல்களின் வெளிகளுக்குள் அரசியல், ஆன்மீகம், பொருளியல், சமூகம், உற்பத்தி உறவு, பண்பாடு, மொழி என எல்லாமும் விரவிக் கிடக்கின்றன. இவற்றின் பக்கங்களில் எல்லாம் அலுப்படையாமல் மிக இலகுவாகக் கைகோர்த்துக் கொண்டு திரிவதற்கு இன்றைய நவீனக் கவிதைமொழி இடம் கொடுத்திருக்கிறது. சொற்களைக் கொண்டு கொலுவாக்கும் படிமங்களின் சலனங்கள் சொற்களற்ற மவுனங்களிலிருந்தும் எழும்பும்படிச் செய்து, ஒவ்வொரு கவிதையின் வெளியிலிருந்தும் சட்டெனத் தரையிறங்க முடியாத நிலையினையும், நெருங்க முடியாத தளத்தின் பக்கம் ஒட்டி நின்று பார்க்கும்படியாகவும் நவீனக் கவிதைகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன.


வாழ்வின் சகலத்திலும் அரும்புகளாய்ப் பழக்கிக் கொண்டு அதை அதனதன் இயல்பென்று விட்டுவிடுகிற உயிரியல்ல மனிதர். மனித வாழ்வின் மாற்றத்திலிருக்கும் பல தளங்கள் அணுகமுடியாத புகைச் சுருள்களாக மாறுகின்றன. எல்லாத் தளங்களும் மனிதமயமாகிப் பேசிக் கொண்டிருக்கின்றன; மவுனத்தோடு உணர்வுகளை எழுப்பும் உறவுகளைத் துலக்கிக் கொண்டிருக்கின்றன. நம்மோடு தொடர்புகொள்ளப்பட்டவைகளோடுதான் நாம் நமக்கான பொருள் கோடலைக் கொண்டிருக்கிறோம் என்பதும், பல தளங்களை மறுத்துவிட்டு ஒரு தளத்தோடு நின்று போவதில் செழுமையான வாழ்வின் நாலாவிதத்திலும் பாய்ந்து விடக்கூடிய கற்றைகள் இல்லை என்பதுவுமாக அவிழ்கின்றன நவீனக் கவிதைப் புலப்பாடுகள்.'


ஒவ்வொரு மனிதரையும் குறைந்த அளவு இகழ்ச்சியோடும் அதே அளவு புகழ்ச்சியோடும் சந்திக்கவோ பழக நேரவோ தயாரிக்கப்பட்டுவிடும் மன அமைப்பில் மனதை அதன் தன்மையுடன் புரிந்துகொள்வதற்கு நவீனக் கவிதைகள் உதவக் கூடும். மனித வாழ்வின் இருத்தல் குறித்த கேள்விகளையும் பதில்களையும் தருவித்துப் பார்க்கிறபோது, தொலைந்துபோகும் அடையாளத்தைத் தொன்மம் வந்து தொட்டுத் துலக்குவதைப் போல உளறிக் கொட்டுகிறது நவீனக் கவிதைகளின் மொழி.


அறிவை மறந்துவிடக் கூடிய பாவனையில் உணர்வை ஆளக்கூடிய இன்றைய நவீனக் கவிதைகளைக் குறித்துச் சொல்லிக் கொள்வதற்கு நிறைய இருந்தாலும், நவீனக் கவிதை குறித்து மவுனங்களும் புறக்கணிப்புகளும் வந்து கொண்டே இருக்கின்றன. நவீனக் கவிதை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிற ஒன்றாகவும் ஆகிப்போயிருக்கிறது. நவீனக் கவிதைகள் குறித்த மவுனங்களுக்கான காரணம் என்ன? தனி உலகின் கண்களாக நிற்கக் கூடிய படைப்பாளியின் மனவெளியை வாசக மனதின் அறிவின் வழியாகவும் உணர்வின் வழியாகவும் அறிந்து கொள்ள முயல்கிற சூசகம் எல்லோருக்கும் ஒரே கனப் பொழுதில் வெவ்வேறு மனித மனங்களுக்குள் வேறுவேறான சிந்தனை ஓட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரே மாதிரியான அனுபவங்களோ உணர்வுகளோ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எல்லோருமே வேறுவேறான மனநிலைகளைக் கொண்டிருக்கும் ஒரு கவிதைப் பனுவல் சட்டென எல்லோருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தைத் தருவதில்லைதான். இருப்பினும், கவிதையைப் பற்றிக்கொள்வதற்கான தும்புக் கயிற்றையாவது பிடித்துக் கொண்டால் கவிதையின் பின்னே செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு கவிதையைச் சட்டெனப் படித்துவிட்டு விலகிப்போக நினைக்கிற போதுதான் பிரச்சினைகளே ஏற்படுகின்றன. கவிதைக்குள் பயணிக்கும் போதுதான் கவிதையை உணர்ந்துகொள்ள முடியுமே தவிர, கவிதைக்கென உரைகளை வழங்க முடியாது. இங்கே, படைப்பாளியை உச்சானிக் கொம்பில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. படைப்பாளியைத் தோற்கடிக்க வேண்டும் என்றோ, அல்லது வாசகர் தோற்றுப் போக வேண்டும் என்றோ கங்கனம் கட்டிக் கொள்ளாமல், தோற்பது போன்றும் மீறுவது போன்றும் காட்டக்கூடிய பாவனை மனம் வாய்க்கப் பெறும் போதுதான் கவிதையோடு நெருங்க முடியும்.


படைப்பாளியிடம் அறிவெல்லையில் தோற்கக் கூடியதான பாவனை வாசகரிடம் வினையாற்றும்போதுதான், படைப்பாளியைத் தாண்டி படைப்பாளர் வரையறுக்காத பல வெளிகளில் வாசகரால் அனுபவங்களைப் பெற்று கேள்விகளையும் கேட்க முடியும். இங்கே, வாசகரிடம் கவிதைப் பனுவல் பெண்ணும் ஆணுமான ஓர் உடல் உயிரியாய் மாறிப்போகிறது. இதனால்தான் கவிஞரின் மனவெளியை வாசகர் தன்வயப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போகிறார். இதன் விளைவாக, தன் பாதையிலான தன்வயப்படுத்துதலில் புதிய திசைகளில் பயணிக்க முடிகிறது. இச்சூழலில் வாசகர் இன்னொரு படைப்பாளியாய் ஆகிக்கொள்கிறார். கவிஞர் படைத்திருக்கக்கூடிய வெளியில் வாசகர் தனக்கான உலகத்தை அனுபவிக்கிறார். இங்கே, கவிஞர் வாசகர் என்ற உறவுநிலையில் உலகங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான நிகழ்வுகளை எல்லாம் கவிதைகளே சாத்தியப்படுத்துகின்றன.


சூனியத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது. அதுபோல, ஒரு கவிதை என்பதும் அந்தரத்திலிருந்து விழுவதல்ல. சமூக நிகழ்வுகளின் கற்றைகளில் இருந்துதான் தனக்கான பச்சையங்களைத் தயாரித்துக் கொள்கிறது கவிதை. எப்போதுமே கவிதை ஒரு குறிப்பிட்ட சுவையைக் கொண்டிருப்பதில்லை; கொண்டிருக்கவும் முடியாது. சட்டகப்படுத்தப்படுகிற மலட்டுக் கனிகளை இன்றைய கவிதை தர முடியாது; தரப்போவதுமில்லை. இதைத்தான் பயன்படுத்தவேண்டும் என்கிற அதிகாரத் தொனிக்கு இன்றைய கவிதை பணியப் போவதுமில்லை.


கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும், எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். ஆக, உயிரை - உணர்வை - உடலைக் கொண்டிருக்கக்கூடிய வாழ்க்கைத் தளத்தில் தான் பிணமாவதைத் தவிர்த்துக்கொள்ள பரிமாணம் அடைந்து கொண்டிருக்கிறது கவிதை. ஏனெனில், கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது; கவிதை என்பது மனிதமொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன. இத்தகைய நவீனக் கவிதைகளினால் சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் நிரம்ப இருக்கின்றன. இருப்பினும், நவீனக் கவிதைத் தளம் கண்டுகொள்ளப்படாத / புறக்கணிக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட புள்ளிகளையும் கவனப்படுத்திச் செல்கின்றது. இத்தகைய நவீனக் கவிதைகள் குறித்துப் பேசியவர்கள் -பேசிக்கொண்டிருப்பவர்கள் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுக் காண்பித்திருக்கிறார்கள். ஆனாலும், ஒவ்வொருவரின் கருத்தாடல்களும் வேறுவேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்றாலும், நவீனக் கவிதைகள் குறித்துப் புரிதலுக்கு வழிவகுக்கக் கூடியவை. 


நவீனக் கவிதைத் தளத்தில் பலர் இயங்கிக் கொண்டிருந்தாலும், கவிஞர் அபி மிக முக்கியமானவர். அவரின் உரையாடல் நவீனக் கவிதைமொழி குறித்து மேலும் சில புரிதல்களுக்குப் பாதை அமைக்கும்.


"நான் கவிஞனாக ஆனதற்குக் காரணம் என் வளர்ப்புச் சூழல். எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருந்த காரணத்தால், எனது சிறுபருவ விளையாட்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக வெளியில் நண்பர்களைத் தேடிச் செல்ல வேண்டியதாயிற்று. நான் பழகிய நண்பர்கள் மிகவும் முரட்டுக் குணம் வாய்ந்தவர்களாக இருந்தபடியால், தொடர்ந்து அவர்களிடம் பழகிட என் பெற்றோர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இதனால், எனக்குள்ளேயே ஒரு நண்பனை உருவாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. வயதில் முதிர்ச்சி அடைந்த பிறகும் எனக்குள் முதிர்ச்சி ஆகாமல் இருந்த சிறுவனின் அனுபவம்தான் என்னுடைய கவிதை.


எனது சொந்த ஊரான போடி நாயக்கனூரில் அமைந்திருந்த இயற்கைக் காட்சிகளானது என்னை அவைகளோடு பேசத் தூண்டிவிட்டன. தனிமையின் மூலமாக இயற்கையோடு கொண்டிருந்த உறவும் உரையாடலும்தான் என்னுடைய கவிதையாக இருக்கின்றது.


எனது கவிப்படைப்பின் துவக்கத்திற்கு யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்றே கூறலாம். எனினும், ஒரு ஆறு ஏழு வயதுச் சிறுவன் பெரும் உதவியாக இருந்ததை நான் மறுத்துவிட முடியாது. அவன் யாரெனில், அவன் என் ஊரைச் சார்ந்தவன் - என் வீட்டைச் சார்ந்தவன் - சரியாகச் சொல்லப் போனால் அவன் நானேதான். என் கவிதைகளில் கையாளப்பெறும் மொழி நடையானது பெரிய அளவில் புரிதல்களுக்கு வழி செய்வதில்லை என்றதொரு குற்றச்சாட்டு தொடர்ந்து என்னிடம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


நம் வாழ்வின் அன்றாடப் புழக்கத்தில் உள்ள மொழி நமது உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உள்ளவாறே புலப்படுத்துவதற்கு இயலாத வகையில் அமைந்திருக்கிறது. மொழியானது ஏற்கனவே இருப்பதுதானே தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்படுவது இல்லை. இருக்கின்ற மொழியைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள நாம் முயலுவதில்லை. தற்காலத்தில் நடப்பில் இருக்கின்ற மொழிப் பயன்பாடானது நவீனப் பிரஞ்ஞையைப் பிரதிபலிக்கவோ, சொல்லவந்த விசயத்தை நேரடியாக மனதினுள் பாய்ச்சவோ போதுமானதாக இல்லை. பரவலாகக் கையாளப்பெறும் மொழியானது வார்த்தைகளின் வீச்சை முழுவதுமாக வெளிப்படுத்தும் தன்மை குறைந்தனவாக இருப்பதால்தான், மொழியை வளைத்து அர்த்தச் செறிவு மிக்க நவீன மொழியை நான் தேடித் தருகிறேன்.


என்னிடம் எழுப்பப்படும் மற்றொரு வகைக் கேள்வி, என் கவிதைகள் இருண்மைத் தன்மையாக இருக்கிறதே என்பது.


கவிதைகளைப் புரிந்துகொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும்; அத்துடன் அதற்கான உழைப்பும் வேண்டும். முயற்சி இன்றிக் கிடைக்கும் பொருட்களுக்குச் சமூகத்தில் மதிப்பு குறைவுதானே. இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்தலாம். அமெரிக்கப் படைப்பாளியான வுர்ஜினியா வுல்ப் என்பவரிடம் ஒரு வாசகர், "உங்கள் படைப்புகளை மூன்றுமுறை வாசித்தும் புரியவில்லையே' என்றாராம். அதற்கு வூல்ப், நான்காவது முறை வாசியுங்கள் என்றாராம்.


புரிந்து கொள்ள முடியாதது என் கவிதைகள் மட்டும்தானா? இருண்மை என்பது கவிதையில் மட்டுமல்லாமல், இன்றைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய ஓர் அம்சம்தான். நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சிறுசிறு நிகழ்வுகளின் அர்த்தங்களைக்கூட நம்மால் எட்ட முடிவதில்லையே? நாம் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோமோ, அதைப் போலவே ஒரு கவிதையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


வாசகனுக்குப் பரிச்சயமில்லாத அனுபவங்கள், ஒரு பொருள் குறித்த படைப்பாளியின் முற்றிலும் வேறுபட்ட நோக்குநிலை, அதனை அவன் வெளிப்படுத்தும் விதங்கள் போன்றவை படைப்பை அணுகுபவனுக்குத் தடைகளாக அமைவதுண்டு. எனவே, புரிதல்களுக்கான முயற்சியும் முறையான பயிற்சியும் இங்கு அவசியமான ஒன்றாக அமைகின்றது.


என் கவிதைகள் சொற்பமான அளவுள்ள, கல்வி அறிவு மிக்க அறிவு ஜீவிகளை மட்டுமே சென்றடைகிறது என்ற விமர்சனமும் உண்டு. இவ்விடத்தில், கலை கலைக்காகவா? மக்களுக்காகவா? என்றதொரு கேள்வியைப் பலரும் எழுப்பிக்கொண்டிருக்கும் சூழலில், கலை மக்களுக்கானதே என்று நான் கூறுவேன். ஆனால், அது பெரும்பான்மையான அல்லது எல்லா மக்களுக்குமானது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.


தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அறிவுத் துறைகள் பல மக்கள் வளர்ச்சிக்கு உரியவை என்றாலும், அவை எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதில் சாத்தியம் குறைவு. அதைப்போலவே எல்லாக் கவிதைகளும் எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.


நல்ல கவிதை எதுவெனில், பன்முக வாசிப்புக்கு உட்படுவதாக - காலம் கடந்து நிற்பதாக - பலவித அர்த்த நுட்பங்களைத் தம்முள் அடக்கியதாக கால ஓட்டத்தில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையதாக இருக்கும் கவிதை எதுவோ, அதுவே நல்ல கவிதை எனலாம்."


கவிஞர் அபியின் இந்த உரையாடலில், இருண்மை - புரியாத மொழிநடை குறித்த விளக்கங்கள் நவீனக் கவிதை மொழி குறித்தானவை.


கவிதையில் புதைந்திருக்கும் இருன்மைத் தன்மை - புரியாத நடை என்பவை கவிஞர் அபியின் கவிதைகளில் மட்டுமல்ல. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிற நவீனக் கவிதைகள் பெரும்பாலானவை இப்படியான இருன்மைத் தன்மையோடும், புரித்துகொள்ள முடியாத மொழிநடையுடனும்தான் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.



ஒரு படைப்பாளி பிறருக்குப் புரியக்கூடாது என்பதற்காகத்தான் எழுதுகிறாரா? நிச்சயமாக அப்படி இருக்க முடியாது எனில், பிறகு ஏன் நவீனக் கவிதைகள் புரிவதில்லை? இப்படியான கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளை இது. சங்ககாலத் திணை நிலைக் கவிதைகளில் காணலாகும் 'அகக் கவிதைகள்' முழுவதுமான அகவெளியைக் கொண்டு பின்னப்பட்டவை. ஒவ்வொரு அகக் கவிதையும் படைப்பாளியின் அகவெளியைக் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் வெளிவந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும்கூட, அக்கவிதையின் அகவெளிக்குள் போக முடியாத நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆக, புரியக்கூடாது என்று யாரும் எழுதுவதில்லை. நவீன வாழ்க்கையின் எந்திர ஓட்டங்களோடு பழகிப் போனதன் விளைவாக, ஒரு கவிதை எப்போதுமே நேரிடையான பொருளைத்தான் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். யாருமே கவிதையைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்யாமல் கவிதையையும் படைப்பாளியையும் குற்றம் சாட்டுகிறார்கள்.


ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்ய வேண்டும்? ஒரு கவிதைக்குள் இருப்பது சொற்கள் மட்டுமல்ல; சொற்கள் விவரித்துச் செல்லும் அனுபவங்களும் உள்ளே புதையுண்டு கிடக்கின்றன. ஒருவருக்கு வாய்க்காத அனுபவம் கவிதையின் வழியாகவும் பெற்றுக்கொள்ளக் கூடும்.


ஒருவருக்கு வாய்க்கிற தனிமைச் சூழல் அதனுள் முளைத்திருக்கும் மவுனத்தின் கனங்கள் - அதிலிருந்து வெளிக் கிளம்பும் ஆழமான பார்வை போன்றன எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இந்த வாய்ப்புகளைக் கவிதை வாசிப்பு தருவதற்கு முயற்சி செய்யும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான - வேறுபட்ட அனுபவங்கள் புதையுண்டு கிடக்கின்றன. கவிஞர் தனக்குள் புதைந்திருக்கும் அனுபவத்தைக் கவிதையாக்கி விடுகிறார். அக்கவிதையினுள் நுழைந்து வெளியேறும் திறனுள்ளவர்கள் கவிதையை இரசிக்கிறார்கள்; திறன் குன்றியவர்கள் அதனை மறுதலிக்கிறார்கள் - இருளுக்குள் நுழைந்ததாக உணர்கிறார்கள். உணராத அனுபவத்தை உணர முடியாத அனுபவத்தை எவ்வித முயற்சியும் இன்றிப் படிக்கிற போது புரியாத மொழியாகிப் போகிறது.


ஒரு கவிதை புரிந்தேதான் ஆக வேண்டும், அல்லது புரியும்படிதான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க முடியாது. ஏனெனில், கவிதைப் படைப்பு என்பது படைப்பாளியின் சுதந்திரத் தன்மையோடு தொடர்புடையது. ஒரு கவிதை எப்பொழுது புரிதலை ஏற்படுத்துமோ அப்போது அதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காகப் புரியாத கவிதைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.


இங்கே, இன்னொன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். நவீனக் கவிதை என்பது எல்லா நுண் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. நவீனக் கவிதைமொழியைப் பொறுத்தவரையில் எப்படி எழுதுவது என்பது குறித்துப் பிரச்சினை இல்லை. எதை எழுதுவது? எதற்காக எழுதுவது? என்ன விளைவுகளை உண்டாக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் வருகிற போதுதான், நவீனக் கவிதைகளின் சமூகப் பயன்பாடு குறித்துப் பேசமுடியும்.


நவீனக் கவிதைமொழியின் சமூகத் தேவையைச் சமூகமே தீர்மானித்துக் கொள்ளும். எது சமூகத்திற்குப் பயன்படுமோ அதுவே சமூகத்தின் மதிப்பைப் பெறமுடியும். நவீனக் கவிதைகளைப் பொறுத்தவரையிலும் அவற்றின் பயன்பாடு என்பது காலத்தால் தீர்மானிக்கப்படுவதுதான். ஏனெனில் எதுவொன்றும் நிலையானதாக இருக்க முடியாது. எல்லாமே மாற்றத்திற்குட்பட்டதுதான். இது நவீனக் கவிதைகளுக்கும் பொருந்தும்.


உலகம் இயக்கத்தால் ஆனது, உலகில் உள்ள யாவையும் இயங்குகின்றன. இயற்கைக்குள் செயற்கையுமாக மனிதரின் மனமும் உடலும் இயங்கி இயங்கி வரலாற்றின் மிகச்சிறு நுகர்வுப் புள்ளிகளை உண்டாக்குகின்றன. வரலாற்றின் சந்ததிகள் அதே இயக்கத்தில் மாற்றத்தைக் கோரும்போது இயக்கம் சூடு பிடிக்கிறது. இயக்கத்திற்கு அவசியம் மாற்றம்; இயக்கத்தை விழிப்படையச் செய்வது மாற்றம் இத்தகைய மாற்றத்தைக் காலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.


இம்மாற்றத்தை உடனடியாகவும் சமூகம் ஏற்றுக் கொண்டதில்லை. புதியனவற்றின் வருகை பழையவற்றின் மீது கேள்விகளைக் கேட்கிறபோது, புதியவற்றைப் பிழையென்றே மரபுகள் முடிந்தளவு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. நவீனக் கவிதைகளுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான். இருப்பினும், நவீனக் கவிதைகளின் வருகையினையும், அவற்றின் நன்மைகளையும் முடக்கிப் போட முடியாது.


நவீனக் கவிதை மொழியை குறித்துப் பேசிக்கொண்டே போகலாம். இதுதான் - இப்படித்தான் நவீனக் கவிதைமொழி இருக்க வேண்டும் என்ற வரையறுப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.


நவீனக் கவிதை மொழி குறித்துச் சுருக்கமாகச் சொல்வதெனில், ஒரு படைப்பாளி தம் அனுபவத்தைப் படைப்பாக ஆக்கித் தரும்போது, அதைப் படிக்கிற வாசகர் படைப்பாளியின் அனுபவத் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. அக்கவிதைப் பனுவலைத் தனக்கானதாக எடுத்துக்கொண்டு அப்பனுவல் வாசிப்பில் தானும் படைப்பாளியாய் ஆகிக் கொள்கிறார். தனிப்பட்ட அனுபவம் என்று தனித்து இல்லாமல் தன் அனுபவத்துடன் பனுவலை வாசிக்கும் வாசகரும் படைப்பாளியாய் உருமாற்றம் கொள்கிறார். இம்மாற்ற நிகழ்வைக் கவிதைகளே சாத்தியப்படுத்தும். சுருங்கச் சொன்னால், எல்லாத் திசை வெளிகளின் வலிகளையும், மகிழ்ச்சிகளையும், கனவுகளையும், : மறுக்கப்பட்டவை / ஒடுக்கப்பட்டவைகளின் உணர்வுகள் - அனுபவங்கள் - அழியாக் காலத்தின் உறவுகளும் நவீனக் கவிதைமொழியாய் வடிவம் கொண்டு தமிழைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.

*

(குறிப்பு: கட்டுரையில் இடம்பெறும் கவிஞர் அபியின் உரையாடல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புல இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலந்துரையாடியபோது பதிவு செய்யப்பட்டது. 2002 இல் முதுகலை பயில்கிற போது எடுக்கப்பட்ட குறிப்புகள்.

*

இக்கட்டுரை, கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.


கீழிருந்து எழுகின்ற வரலாறு, மகாராசன், முதல் பதிப்பு, 2006, பரிசல் வெளியீடு, சென்னை.)


திங்கள், 29 நவம்பர், 2021

தவிர்க்க முடியாத தமிழர் வரலாற்றுப் புத்தகம் : முத்து மல்லல்


இலக்கியமாக இருக்கட்டும் அல்லது இலக்கியம் சார்ந்த திறனாய்வாக இருக்கட்டும், அவைகள் எல்லாமே   பிராமணியச் சாதியக் கட்டமைப்பில்தான்  இந்தியச் சமுதாயம் இயங்குகிறது என்பதை  எதிர்ப்பதாகக் கூறப்படும் திராவிட மற்றும் தலித்தியம் சார்ந்த இலக்கியப் படைப்புகளே புரட்சிகரமான இலக்கியம் அல்லது இலக்கியத் திறனாய்வு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.  

அதையே ஒரு  குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றித் திறனாய்வு செய்து நூலை வெளியிட்டால், ஒரு சாதிக்கான இலக்கியமாகக் கருதப்பட்டு, அந்தத் திறனாய்வையே ஏதோ ஒரு வகையில் ஒடுக்குதல் அல்லது ஒதுக்குதல் வேலையைக் கன கச்சிதமாகச் செய்கின்றன இந்தப் போலி புரட்சிகளான திராவிடம், தலித்தியம், இடதுசாரி அணிகள். இது இலக்கியத் துறையில் மட்டுமல்ல, அரசியல், சமூகம், பண்பாடு, கலாச்சார விடயங்களிலும்கூட தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை  ஒடுக்கியும் ஒதுக்கியும் சிதைக்கும் திட்டத்தை மிக நுடபமான வேலைகளைச் செய்து வருகின்றன திராவிடம், தலித்தியம், கம்யூனிச முகாம்கள். 

தமிழரின் சமுதாய அமைப்பே நிலத்தின் அடிப்படையிலும், தொழில் சார்ந்த அடிப்படையிலும்தான் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.  அதாவது, நிலம் மற்றும் தொழில் சார்ந்த தமிழரின் ஒவ்வொரு  இனக்குழுக்களின் இலக்கியங்களின் கூட்டமைப்பாகத்தான் சங்க இலக்கியங்கள் உள்ளன. இப்படிப்பட்ட இனக்குழு சார்ந்த இலக்கியங்களே உண்மையான புரட்சிகரமான இலக்கியங்களே ஆகும்.

ஆனால், இன்றும் அப்படிப்பட்ட ஒவ்வொரு இனக்குழுவும் சாதிகளாக உருமாறி இருக்கின்றன என்பதைப் போலியான புரட்சிக் கோட்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.   

அந்த வகையில், வேளாண் மரபினரான தேவேந்திரகுல வேளாளரின் வரலாறு, தமிழரின் தவிர்க்க முடியாத ஒரு வரலாறாகவே இருக்கின்றது. இன்னும் தெளிவாகக்  கூற வேண்டும் என்றால், உழவர் குடியான தேவேந்திரகுல வேளாளரின் வரலாறே தமிழர் வரலாறு என்றுதான் இலக்கிய, தொல் பொருள்கள், பாண்பாடு, கலாச்சாரம்  வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய பெருமை மிக்க வரலாற்று இலக்கியங்களைத் திராவிடக் கருத்தியல் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட இலக்கியப் படைப்புகள், இலக்கியத் திறனாய்வு தற்போது படைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், திராவிடம் மற்றும் தலித்தியக் கருத்தாக்கங்களை  உதறித்தள்ளி, ஒரு சமூகத்தின் வரலாறு அல்லது இலக்கியம்தான் தமிழரின் கூட்டுக் கலவையாக நிமிர்ந்து, தமிழர்களின் தனித்துவமும் அறிவும் புகழ் மிக்கதாய் ஒளிர்கிறது. 

அந்த வகையில் சிற்சில படைப்புகளே வெளிவருகின்றன. அந்தச் சிற்சில ப் படைப்புகளில் ஏர் மகாராசன் எழுதிய "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" என்ற புத்தகம்,  துவக்கத்தில்  மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் மனித இனம் வேட்டையாடிச் சமூகமாக இருந்து, வேளாண் சமூகம் எப்படி உருவெடுத்தது என்பதையும், அந்த வேளாண் உற்பத்தி உபரியாக வேளாண் தொழிலை ஒட்டிய துணைத் தொழில்களாகப் பிரிந்து, அது மனித வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்பதையும், மேலும், நாடு, நகரம் உருவாக்கப்பட்டதையும், அரசு உருவாகி வந்ததையும் படம் பிடித்துத் தன்னுடைய எழுத்தில் காண்பித்துள்ளார். 

இப்படி நாடு, நகரம், அரசு இவை யாவுமே ஒரு சமூகத்தின்  கூறுகளாகக் காணப்படுகின்றன. குடும்பர்,  மள்ளர், பள்ளர் மற்றும் தேவேந்திரகுல வேளாளரின்  உழைப்பாலும் ஆற்றலாலும்  நற்பண்புகளாலும் கட்டமைக்கப்பட்டதைத் தெளிவாக ஆசிரியர் விளக்குகிறார். 

அதே போன்று, மருத நில உழவர் குடியானவர்களின் பல பெயர்ச் சொற்களுக்குப் பல ஆதரங்களின் மூலம் நிறுவியுள்ளார். இந்த உழவர்குடி பெருமக்களின் ஒவ்வொரு  பண்பாட்டுக் கூறுகளும் அறிவுப்பூர்வமான, பொதுநலன் மிக்கவும் உடையவை என்பதையும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். 

வேளாண் தொழில் என்பது, அரசின் அச்சாணியாக இருந்த  குடும்பர்களின் ஊர்க்  குடும்பு முறை என்பதும் ஆதராங்களோடு நிரூபித்ததோடு, நிலத்தையும் நீரையும் எவ்வாறு மேலாண்மை செய்து நிர்வாக அமைப்பைக் கட்டமைத்தனர் என்பதையும் கல்வெட்டு மற்றும் வழக்காற்றுக் கதைகளின் மூலம் விளங்கக் கூறியுள்ளார். 

வேளாண் உற்பத்தியான நெல் நாகரிகம் உலகின்  பல நாடுகளிலும், பண்டைய நாகரீகங்களுக்கும்   அச்சாணியாக இருந்ததை எச்சங்களாகக் காண்பித்துள்ளார். பொதுவாக, இங்கு இருக்கின்ற  கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் உழவர் குடி மக்களின் சமூகக் கட்டமைப்பிலிருந்து  உருவானதுதான் என்பதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறார். 

ஆனால், உழவர் குடியான குடும்பர்கள் எப்படி எந்த நுற்றாண்டில் வீழ்ச்சியைச் சந்தித்தனர் என்பதை ஆரியக் கோட்பாட்டை முன் வைத்தாலும், உண்மையிலேயே  வடுகரின் படையெடுப்பால்தான் வீழ்ந்தனர் என்பதை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதும், ஏற்கனவே, தோல்வியான தமிழ்த் தேசியக் கருத்தியலோடு உடன்பட்டுள்ளார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

இதைத் தவிர்த்து, இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் எச்சமூகத்தின் கட்டமைப்பில் உருவானது என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

தமிழர் வரலாற்றைப் படிக்க விரும்பும் எவரும் இப்புத்தகத்தைத் தவிர்த்துத் தமிழர் வரலாற்றை விளங்கிக் கொள்ள முடியாது எனலாம். 

*

கட்டுரையாளர்:
முத்து மல்லல்,
சமூகச் செயல்பாட்டாளர்.

கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி : மகாராசன்







கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டார்.  

*

துயர்மிகு வாழ்விலும், கவிதாசரண் என்னும் இதழை ஓர் எழுத்தியக்கமாகவே முன்னெடுத்து நடத்தி வந்தவர் அய்யா கவிதாசரண்.

நான் நடத்திக்கொண்டிருந்த ஏர் இதழ்களைப் பார்த்தபிறகு, கவிதாசரண் இதழுக்குக் கட்டுரைகளை எழுதுங்கள் என்று உரிமையோடும் அன்போடும் கேட்பார். அதன்படி எனது கட்டுரைகள் சிலவற்றையும் கவிதாசரண் இதழில் வெளியிட்டிருக்கிறார். 

பேராசிரியர்கள் அரச முருகுபாண்டியன், அரங்க மல்லிகா ஆகியோர் மூலமாக நேரிடையாகப் பழகும் வாய்ப்பும் சூழல்களும் அமைந்திருந்தன. 

பெண்மொழி குறித்த எனது ஆய்வுநூலை முழுவதுமாகப் படித்துவிட்டு, பல நாட்களில் பல மணிநேரங்கள் தொலைபேசியிலேயே பேசிடுவார். அந்தப் புத்தகம் அவ்வளவு பிடித்துப் போயிருந்தது. அந்த நூலுக்கு மிக விரிவான அணிந்துரையும் எழுதி அனுப்பியிருந்தார்.

என் எழுத்துலகை உள்ளன்போடு நேசித்து ஊக்கப்படுத்திய மிகச் சிலருள், அய்யா கவிதாசரணும் மிக முக்கியமாக இருந்திருக்கிறார்.

சென்னையில் இருந்த தமது வீட்டை விற்றுவிட்டு, தென்பகுதிக்கு வந்து மீதி வாழ்வைக் கழிக்க வேண்டும் என்றே பெருவிருப்பம் கொண்டிருந்தார். அன்னாரது துணைவியார் நோய்வாய்ப்பட்டு இருந்த காலங்களில் அடிக்கடி எம்மோடு பேசுவார்; எம்மையும் அடிக்கடிப் பேசச் சொல்வார். நின்றுபோயிருந்த கவிதாசரண் இதழை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்றும், கவிதாசரண் பதிப்பகம் தொடங்கி பல்வேறு நூல்களைப் பதிப்பித்துக் கொண்டுவர வேண்டும் எனத் திட்டங்கள் பல குறித்தும் நிறையப் பேசியிருக்கிறோம்.

திருமதி கவிதாசரண் அம்மையார் அவர்களது மறைவும் இழப்பும்தான் அய்யா கவிதாசரண் அவர்களை மிக அதிகளவு பாதித்திருக்கிறது. ஏற்கெனவே, தமது மகனை இழந்து தவித்த உணர்வும், பிறகு துணைவியாரை இழந்து தவித்த உணர்வும் அய்யாவை வெகுவாகப் பாதித்திருக்கிறது. 

தமது இறுதிக் கால வாழ்வில் மேற்கொண்ட ஒரு சில தனிப்பட்ட முடிவுகளால் சென்னையிலிருந்து வெளியேறி, திருச்சிக்குக் குடிபெயர்ந்து மீத வாழ்வை அமைத்துக்கொண்டார். திருச்சிக்கு வந்தபிறகு, அவருடைய கவிதாசரண் இதழ் வட்டத்தொடர்பிலும் எழுத்து வட்டத் தொடர்பிலும் இருந்தவர்களோடு உறவை நீட்டித்துக்கொள்ள விரும்பாமல், அனைத்து வட்டத் தொடர்புகளையும் தவிர்த்தேதான் வந்தார். பலரது உறவுகள் அவரோடு தொடர்புகொள்ள முடியாமல் தவித்தன. எனினும், எல்லாவற்றையும் அவர் தவிர்த்தேதான் வந்திருக்கிறார்.

எமது நிமிர்வகம் - செம்பச்சை நூலகத் திறப்பு விழாவிற்கு அவரை வரவழைக்க அழைத்துப் பேசியபோதுகூட, இப்போதெல்லாம் பொதுவெளியில் வருவதற்கு விருப்பமில்லை மகராசன் என்றே சொன்னார். திருச்சியில எங்க இருக்கீங்க? வந்து பார்க்கிறேன் என்று சொன்னபோதுகூட அதைத் தவிர்க்கவே செய்தார். ஏதோ ஒன்றுக்காகச் சங்கடப்பட்டுக்கொண்டுதான் எல்லோரையும் தவிர்க்கிறாரோ என்று பல முறை யோசித்ததுண்டு. எனினும், அவரது முடிவில் யாரும் தலையிட முடியாதுதானே.

அன்னார் வாழ்ந்த காலத்தில் ஓர் இதழை எழுத்தியக்கமாய்க் கொண்டு வருவதற்கான மிகச்சிறந்த முன் மாதிரியாய் இருந்துவிட்டுப் போயிருக்கிறார். நானெல்லாம், கவிதாசரண் இதழைப் பார்த்துத்தான் ஏர் இதழையும் அப்படிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏர் இதழின் உள்ளடக்கச் சாயல்கள் கவிதாசரண் இதழைப் போலத்தான் வெளிவந்தன. 

இன்று, கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். ஆயினும், அவரது இதழியல் பங்களிப்பும் எழுத்துப் பங்களிப்பும் தமிழில் நிலைத்திருக்கும்.

போய் வாருங்கள் அய்யா.

அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.


ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

28.11.2021

வியாழன், 25 நவம்பர், 2021

வேளாண் குடிகளின் வரலாற்றுப் பச்சையம் : மகிழன்

பண்பாடு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாராத குழுக்கள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த  தலைமுறைக்கு மாற்றியமைக்கப்பட்ட சூழல் எனப்படுகிறது.

பண்பாட்டு முன்னேற்றம் என்பது வரலாற்றுச் செயல்முறை ஆகும். நமது முன்னோர்கள் பலவற்றை அவர்களின்  முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். பின்னர் நாளடைவில் சொந்த அனுபவத்தில்  இருந்து சிலவற்றைச் சேர்த்தும் விலக்கியும் கொண்டனர்.   

இவ்வாறாக, பண்பாடு இடம் மாறி ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதும், எடுத்துக்கொள்ளப்படுவதும் பண்பாட்டு மரபு எனப்படுகிறது. இந்தப் பண்பாட்டு மரபுத் தொடர்ச்சி ஓர் இனத்தின் வரலாறாகவும் பரிணமிக்கிறது.

பண்பாட்டு மரபோடு சேர்த்து இலக்கியங்கள், தொல்பொருட்கள், கல்வெட்டுக்கள், இன்ன பிறவும் ஓர் இனத்தின் வரலாறாக உருக்கொள்கிறது.

இவ்வகையில் தமிழ் நிலத்தின் ஆதிக்குடிகளில் ஒன்றான, உழவுப் பண்பாட்டைத் தங்களின் பண்பாட்டு மரபாக இன்றைய தலைமுறைவரை கைமாற்றிக் கொண்டுவந்திருக்கும் உழுகுடிகள், நெல்லின் மக்கள், இலக்கிய வழக்கில் மள்ளர் எனவும் பள்ளர் எனவும், உலக வழக்கில் தேவேந்திர குல வேளாளர் எனவும் அழைக்கப்பெறும் இம்மக்களைப் பற்றிய மேற்சொன்ன   வரலாற்றின் அனைத்து உறுப்புகளோடும் பொருந்த வெளிவந்திருக்கும் இன வரைவியல் ஆய்வு நூல்தான் மகாராசன் அவர்களின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்.

இம்மக்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் பல வெளி வந்திருக்கின்றன. இவை அனைத்தும் தன்னளவில் தான் சொல்ல வந்ததை நிறைவாகச் சொல்லியிருக்கின்றன எனலாம். மகாராசனின்  இந்த நூலானது, எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நூலின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ள பார்வை நூல்கள் பட்டியலைக் கொண்டு அறிய முடிகிறது.

ஐவகைத் திணை வாழ்வியல் முதல், நீர்த் தெய்வங்கள் ஈறாக வேளாண் மரபின் அத்தனைப் பண்பாடுகளையும் இம்மக்களின் நிகழ்காலச் சடங்குகளோடும் பழக்க வழக்கங்களோடும் தொடர்புபடுத்திக் கூறியிருப்பது இந்நூலுக்கு இன்னும் வலுச்சேர்க்கிறது.

ஐவகை நிலங்களிலும் தொழில் சார்ந்த குழுக்கள் எவ்வாறு உருவாகியது எனவும், இத்திணை  மக்களின் வேறு வேறு பெயர்களையும் சங்க இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளது.

உழவர், களமர், குடியானவர், கருங்களமர், வெண்களமர் போன்ற வேளாண் குடிகளின் பெயர்க்காரணங்களைப் பாவாணர் வழியில் சொல்லியிருப்பதோடு, வேளாண்மைத் தொழில் சார்ந்த உழைப்புதான் இருவேறு வேளாளர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது என்கிறார்.

வேளாண்மை செய்தோரில் ஒரு சிலர் வணிகர்களாக மாறினர். இச்சூழலில், உழுதுண்ணும் குடும்பர்கள், உழுவித்துண்ணும் கிழார்கள் எனப் பிரிந்து வேளாளர் சமூகம் பிரிந்து, பெரும் வணிகர்களாகக் கருதப்பட்டவர்கள் கிழார்களாகவே இருந்தனர் என்ற கருத்தும் நோக்குதற்குரியதாகும்.

உழவு நாள் குறித்தல் தொடங்கி, ஏர்பூட்டல், ஏர் நடத்தல் என விரிந்து, பொலி அளத்தல், விதைக்கோட்டை செய்தல் வரை, நெல் வேளாண்மையின் அத்தனை படிநிலைகளையும் ஏர் எழுபது நூலில் இருந்து எடுத்துக் கூறியிருக்கிறார் ஆசிரியர். இதன் மூலம் வேளாண் குடிகளின் வரலாற்றுச் சான்றாகக் கம்பரின் ஏர் எழுபது என்ற நூலைப் பற்றிய  ஆய்வின் தேவையையும் இந்த நூல் தொடங்கி வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்

மருத நிலத்தில்தான் அரசு தோன்றியது என்ற கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக ம.சோ விக்டர் அவர்களும் ஊர்க்குடும்பனே மன்னராட்சியின் தொடக்கமும் அடிப்படையுமாக இருந்தான் என்று கூறியுள்ளதன் மூலம் அறிய முடிகிறது.

ஆரிய இந்திரன் வேறு; மருதநில மழைக் கடவுள் இந்திரன் வேறு என்பதை பாவாணர், ந.சி.கந்தையா பிள்ளை போன்றவர்களின் வழி நின்றும், சங்க இலக்கியங்களின் ஆதாரங்களின் வழியும் நிறுவி, மருதநில வேந்தன் -  இந்திரன் மழைப் பொருண்மையின் அடையாளம் என்பதையும் கூறியிருக்கிறார்.

ஆரிய இந்திரன் போர்க் கடவுள் எனவும், வெற்றி வேண்டி வணங்கப்படுபவனாகவும்  இருக்கிறான். மருதநில இந்திரன் மழை வேண்டி மட்டுமே வணங்கப்படுபவன் எனவும் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பல   குழப்பங்களுக்குத் தீர்வாக அமைந்திருக்கிறது.

போலவே, இந்திர வழிபாடு  மருதநிலத்தைத் தவிர வேறு எந்தத் திணையிலும் நடைபெறவில்லை என்று கூறுவதன் மூலம், மருதநில மக்களாகிய தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இந்திரனுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பு நிச்சயப்படுகிறது.

இந்திரனின் வேறு பெயர் ஆயிரம் கண்ணுடையான் என்னும் புதிய வரலாற்றுச் செய்தியை அறியத் தருகிறார் ஆசிரியர்.

இந்திரனுக்கு ஆயிரம் கண்ணுடையான் எனும் பெயரும் வழங்கப்பப்பட்டிருக்கிறது. ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவத்தைத்தான் சோழர்கள் தமது கொடியில் வரைந்திருக்கிறார்கள். சோழர்களின் கொடியில் உள்ள புலிச் சின்னமானது, ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான் என்ற செய்தியை உறுதி செய்யும் விதமாக அவரே இதற்கான தரவுகளை இராசராச சோழன் உலாவில் இருந்து
“.......தாவி
வரப்பு மலாய் சூல்வர ஆயிரம் கண்
பரப்பும் ஒரு வேங்கை பாரீர்” எனவும்,
கலிங்கத்துப் பரணியில் இருந்து
“புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும்”
என எடுத்தாண்டிருப்பது தீவிர ஆய்வுக்கு உரியதாகும். இதன் மூலம் இந்திரனுக்கு விழா எடுத்தவர்கள் சோழர்கள்தான் என்ற வரலாற்றுச் செய்தியின் பின்புலமாக இதைக் கொள்ளலாம்.

வேந்தன் வழிபாடு, நாற்று நடவுத் திருவிழா, பொன்னர் பூட்டும் திருவிழா, நெல் வகைகள், பள்ளு வகைகள், அருவடைத் திருவிழா, நீர் மேலாண்மையில் வேளாளர்களின் இருப்பான மடைக்குடும்பன், நீராணிக்கன் போன்ற தகவல்கள் கூறியது கூறலாக இருப்பதையும் காண முடிகிறது. அதே நேரத்தில், இவற்றைச் சொல்லாமல் வேளாளர்களின் வாழ்வியலை முழுமைப்படுத்த முடியாது என்பதையும்  ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

பண்பாட்டுத் தடங்களை அழிப்பதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம், ஓர் இனத்தின் வரைவியலை எவ்வாறு வரலாற்றின் பக்கங்களில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என்பதைச் சொல்லியிருப்பதோடு, தமிழ் நாட்டு வரலாற்றில் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்குடிகளின் பண்பாட்டு மீதான தாக்கங்கள் பற்றிய அறிதலில் நமது போதாமை குறித்தும் பேசியிருப்பதில் இந்நூல் முக்கிய இடம் பெறுகிறது.

இந்த நூலின் மற்றுமொரு சிறந்த விடயமாகப் பார்ப்பது, இதன் உள்ளடக்க அத்தியாயங்கள்.

வேளாண் மரபின் குலங்களும் கூட்டங்களும், வேளாண் உற்பத்தியும் போலச் செய்தல் சடங்குகளும், உற்பத்தி வடிவம் - தெய்வங்களும் சமூக மரபுகளும், வேந்தன் - இந்திரன் மழைப் பொருண்மையின் அடையாளங்கள், தமிழர் மரபில் இந்திர அடையாளம், இந்திரன் - தெய்வேந்திரன் வேளாண் தொன்மங்களும் வரலாறும், அறுவடைச் சடங்கு: வேளாண் உற்பத்தியின் நிறைபேறும் போலச் செய்தலும், வேளாண் மரபின் ஆசீவகத்  தடங்கள், வேளாண் மரபின் பண்பாட்டு அடையாளப் போராட்டம் போன்ற இந்நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் நீண்ட ஆய்வையும் வாசிப்பையும் கோருவதாக இருக்கிறது. மேலும், இந்த அத்தியாயங்களை இன்னும் விரிவாக தனித்தனி ஆய்வு நூலாக எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் தேவையையும் இந்த நூல் முடுக்கி விட்டிருக்கிறது என்று அறுதியாகச் சொல்லலாம்.

வேளாளர் குறித்த  கருத்து முரண்பாடுகள் உருவாகியிருக்கும் இன்றைய சூழலில், தொல்தமிழ்க் குடிகள் இந்நூலினைப் பாரபட்சமின்றி அணுகினால், தங்களின் நிலைப்பாட்டின் மீதான நியாயத்தை மறுபரிசீலனை செய்து கொள்ள இந்நூல் ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

வரும் காலங்களில் வேளாண் மரபினரைப் பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு, மகாராசனின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் என்ற இந்த நூலானது நிச்சயமாக ஒரு கைகாட்டி மரமாக நிற்கும்.


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2021. பக்கம் 224, விலை ரூ 250/-

கட்டுரையாளர்:
மகிழன்,
பதியம் இணைய ஆசிரியர்.

நன்றி:
https://www.pathiyam.com/view.php?id=2



வேளாண் மரபை அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு விவரித்திருக்கும் முக்கியமான நூல். : செட்டி.வெ.அசோக் பண்ணாடி



வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனத் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர், தமிழினத்தின் மொத்த அடையாளமே வேளாளர் குடியின் வாழ்வியலும் வரலாறும்தான் எனத் தீர்க்கமான தரவுகளோடு தீர்ப்பளித்து  முடித்துள்ளார். இவைகளுக்கு ஆதாரமாகத் தொல்காப்பியர், கம்பர், வடமொழி வால்மீகி, ஔவையார் போன்ற தெய்வப் புலவர்களை இந்நூலில் பேச வைத்துள்ளார். 

சமகால அறிஞர் பெருமக்களான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், சீர்மிகு சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் என, அமரர் பிரபஞ்சன், வாழும் வரலாறு ம.சோ.விக்டர் ஐயா, சாகித்ய அகாடமி விருதாளர் சோ. தர்மன் ஐயா போன்ற ஆளுமைகள் அனைவரும் சாட்சியம் அளித்துள்ளனர். 

ஆக, சங்ககாலத்தில் கோன் உயர அடிப்படை ஆதாரமாக இருந்த மண் விரும்பும் மழையின் மக்கள், சேற்றுக்கால் செல்வர்கள், நெல் வேளாண்குடிக்கு இருந்த பண்பாட்டு விழுமியங்கள், கால ஓட்டத்தில் மிச்சம் இல்லாமல் கரைந்து போக வேண்டுமெனத் திட்டமிட்டு ஆடிவந்த அரசியல் ஆடு களத்தில், குடத்திலிட்ட விளக்காய்  மங்கிக் கொண்டிருந்த வேளாண் குடியின் மாண்புகளைத் தக்க தருணத்தில் இந் நூலின் மூலம் ஆதவன் ஔி போல் குன்றில் ஏற்றி வெளிச்சப்படுத்தியுள்ளார். 

திணை சார்ந்த மக்களின் இயல்பு, குண நலன்கள் அமைதல் மற்றும் தெய்வ உருவ வடிவமைப்புகள் பற்றிய பதிவினூடே, பொதுவுடைமையை மானுடம் உணர்வதற்கு முன்பே ஈகம், இரக்கம், கூட்டுறவு, ஊர்க்குடும்பு என்ற குணங்களை இயல்பாகக் கருவிலேயே  பெற்றுப் பிறப்பெடுத்தவர்களே வேளாண்குடி மக்கள் என அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். 

ஐந்தவித்து மானுட நிலையிலிருந்து இறைநிலை பெற்ற இந்திரன் அருளால், இன்றைக்கு நம் கையில் இருக்கும் கவளச் சோற்றின் ஒரு பருக்கை, கடந்து வந்த பல ஆயிரம் ஆண்டு கால வரலாற்றின் வழித் தடத்தில் நம்மையும் பின்னோக்கிக் கூட்டிச் சென்றிருக்கிறார். 

இவ்வழியிலான பரிணாம ஓட்டத்தில் மானுடம் ஏற்றுக் கொண்டவைகளையும், விலக்கிக் கொண்டவைகளையும் தற்குறிப்பேற்றல் இல்லாமல் நம் சிந்தனைப் புலனில் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். 

எள்ளு நட்டேன் விற்கல, கொள்ளு நட்டேன் விற்கல, நெல்லு நட்டேன் விற்கல, கல்லு நட்டேன் வித்துடுச்சு.

இது புளி ஏப்பக்காரர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், இன்றைய வேளாண் தொழிலின் மிகக் கசப்பான இருப்பு நிலை இதுதான் என்ற அக்கறையையும் பதிவு செய்திருக்கிறார். 

உலகமயமாதல் போக்கில் உணவு சார்ந்து எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தை உணராமல் வேகமாகக் கடந்து போய் கொண்டிருக்கும் இவ்வேளையில், சரியான காலத்தில் வேளாண்மை குறித்த நிதர்சனத்தை நிதானித்துச் சிந்திக்கத் தூண்டும் நூலாக இந்நூல்  கிடைக்கப்பெற்றிருக்கிறது. 

கோன் உயர அடிப்படை ஆதாரமாகப் போற்றி வளர்த்த வேளாண் தொழிலின் சிறப்புகள், சங்க காலத்திற்குப் பிறகு - நெடுங்கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அழுத்தமான வரலாற்றுத் தரவுகளோடு  இந்நூல் மூலம் நமக்குக் கிடைத்திருப்பதென்பது, வேளாண் தொழிலில் ஏற்பட்டிருக்கும்  காணாமையையும், சலிப்பையும், தொய்வையும் போக்கும் அருமருந்தாக இந்நூல் கிடைக்கப் பெற்று மிகப் பெரிய குறையைத் தீர்த்து வைத்துள்ளது என்று சொன்னாலும் மிகையாகா. 

ஆதிக்கும் அந்தத்திற்கும் இடையில் பல சமயங்கள் தோன்றி இருந்தாலும், இன்றைக்கு நிலவி வருகிற சமய பேதங்கள் இந்திர சமயத்திற்கும், ஆரிய சமயத்திற்குமான போரே அமுக்கமாக ஊடாடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை, வைதீகச் சமய வேள்வி வழிபாட்டையும், தமிழர்கள் வழிபாடான இயற்கை வழிபாட்டையும் நேரெதிராகப் பொருதி வகைப்படுத்தி ஆசிரியர் பதிவு செய்யத் தவறவில்லை. 

ஆக, சங்க காலந்தொட்டு சமகாலம் வரை மானுடம் பரிணமித்த அத்தனை பரிணாமக் கோணங்களும் வேளாண்மையும் அதன் உற்பத்தியும் உபரியுமே தீர்மானித்து வந்துள்ளது என்ற எதார்த்தத்தைத் தீர்க்கமாகப் பதிவு செய்துள்ளார். 

இந்திய அரசியலில் நடந்து முடிந்த அதிரடி மாற்ற நடவடிக்கையிலும், பெருந்தொற்றால் உலகமே தோற்றுக் கொண்டிருந்த காலத்தில், உணவும் வேளாண்மையுமே உயிரென்ற மதிப்பீட்டை உணர்த்தியுள்ளது. 

ஆக, இந்நூலில் தான் சொல்ல வந்ததை விளங்கச் சொல்லி இருப்பது என்பது மிக எளிதாக, ஏதுவாக, எளிமையான நடையில்  இருந்தாலும், வலிமையான தரவுகளோடு, பொருத்தமான சான்றாதரங்களோடு கருத்தியலைத் தெளிவாகச் சொல்லி, வேளாண் மக்களின் வேந்தனான இந்திரனை  அரியணை ஏற்றி ஆட்சி செய்ய இந்நூல் மூலம் மீண்டும் அழைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

இந்நூல் போல் சிறந்த படைப்புகள் பல படைத்து தமிழுக்கும், இனத்திற்கும், வரலாற்றிற்கும் பெருமை சேர்க்கும் ஆய்வாளர் மகாராசனின் எழுத்துப் பணி தொய்வின்றி வளர எம் மனமார்ந்த வாழ்த்துகள். 

*

கட்டுரையாளர்:
செட்டி.வெ.அசோக் பண்ணாடி,
சமூகச் செயல்பாட்டாளர்,
கோயம்புத்தூர்.

திங்கள், 15 நவம்பர், 2021

வேளாண் மரபினரின் வாழ்வியல் பண்பாட்டு வரலாற்றைப் பொதுச் சமூகம் உள்வாங்கிக்கொள்ளும் அறநோக்கில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்: அழகர்சாமி பாண்டியன்


வேளாண்மையை வாழ்வியலாக கொண்டவர்கள் திருட மாட்டார்கள். மானிடர்க்கும் மற்ற பிற உயிரினங்களுக்கும் இரையை ஈகை செய்பவர், பிறரின் உடமையைக் கவர்வது அரிது எனும் அறத் தத்துவ விளக்கத்தோடு  தொடங்குகின்றது மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல். 

உயிரிகளுக்கு உணவு முக்கியம். உணவுக்கான தேடுதல், சேகரித்தல், பூர்த்தி செய்தல் போன்றவை எங்ஙனம் நடந்தேறுகிறது?

வெள்ளாமை அல்லது வேளாண்மை என்றால், பொதுவாக நெல் உற்பத்தியையே குறிக்கும். ஆதிமனிதன் அரிசியிலிருந்து அதிகாரத்தைப் பற்றிச் சிந்தித்தான். 

வேளாண் உற்பத்திக்கும் அரசு உருவாக்கத்திற்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பு, விரிவாகச் சொல்வதென்றால், குடும்பத்தை நிர்வகித்ததால் குடும்பத் தலைவன் குடும்பன் என்றழைக்கப்பட்டன். பல குடும்பங்கள் கூடி வாழ்ந்த பகுதி ஊர் என்றும், குடிமக்களின் தலைவன் ஊர்க் குடும்பன் என்றும் அழைக்கப்பட்டான். கூடி வாழ்ந்த மக்களின் ஊர்க் குடும்பு முறையே அரசு உருவாக்கத்தின் முதலும் மூலமும் ஆகும். 

பன்னெடுங்காலமாக மனிதர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் ஒப்பற்ற பெருங்குடியான வேளாண் மரபினரைக் குறித்தான விரிவான ஆய்வுகளோ, படைப்புகளோ, பக்கச்சார்பற்ற பொது உரையாடல்களோ திறந்த மனதோடு இதுநாள்வரை நடைபெறவில்லை என்கிற‌ குறைபாட்டினை அறச்சீற்றமாய் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். 

வைகை எனும் பொய்யா குலக்கொடியாளின் கரையோரத்தில் வாழ்வையும் வசிப்பிடத்தையும்  கொண்ட நூலாசிரியர், மருதை மண்ணின் மைந்தன் என்பதால் மாந்த நாகரிகத்தின் தொட்டிலான ஆற்றங்கரையோர மனிதர்கள் உருவாக்கிய நாகரீகம், நகரியம், அம்மக்கள் ‌நீருக்கும் நிலத்திற்கும்  அளிக்கும் முக்கியத்துவம் குறித்து‌ எவ்விதமான இட்டுக் கட்டுகளின்றி இயல்பாக விளக்கியுள்ளார். 

வேளாண் குடிமக்களின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் வலிகளை ஏனைய பிற சமூகங்கள் உள்வாங்கிக் கொள்வதிலும், உள்வாங்கிக் கொண்டதிலும் உள்ள போதாமைகளை விரிவாக அலசுவதோடு, ஒவ்வொரு சமூகமும் பிற சமூகங்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினாலே  போதும், சமூகங்களுக்கு இடையே ஏற்படும் சஞ்சலங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வை எளிதாக எட்டிவிடலாம் என்கிறார். 

குறிஞ்சி நிலப்பரப்பில் இரையின் தேவையின் பொருட்டும், வாழ்க்கை நிமித்தமும் தம்மைத் தற்காக்க, எதிராளியைத் தாக்க வேட்டை வாழ்முறைக்குப் பழக்கப்பட்டிருந்தது மாந்தர் இனம். 

மலை மாந்தர்களின் ஒரு குழு மலையடிவாரப் பகுதிக்குத் தேடலின் நிமித்தம் வருகின்ற காலகட்டத்தில் சீரற்ற காடும் மேடுமான  அடிவார நிலப்பரப்பைக் கண்ட பின்பு, மலைவாழ்க்கையில் தாங்கள் பழக்கப்படுத்திய விலங்குகளான ஆடு மாடு முதலான சில விலங்குகளை மேய்ச்சலுக்குப் பழக்கியதோடு தம்முடைய உணவு மற்றும் உற்பத்தி சார்ந்த தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழக்கப்படுத்தப்பட்ட  விலங்குகளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்த வேண்டும் என்கின்ற நுட்பத்தைக் கண்டறிகிறார்கள். அதன் நீட்சியாக மாட்டோடு மனிதர்கள்  ஏற்படுத்திக்கொண்ட பிணைப்பும் இணைப்புமே மரபார்ந்த வேளாண்மை துவக்கத்திற்கான அச்சாரம்  என்பதை அறியலாம். 

ஆடு மாடுகளோடு அலைகுடி வாழ்க்கைக்கு ஆட்பட்டிருந்த  குழுவினரில் ஒரு சாரார், மெல்ல கீழ்நோக்கி நகர்ந்து ஆறுகளையும் ஆற்றங்கரையோரச் சமவெளி நிலங்களையும் அறிந்திடும் காலகட்டத்தில்தான் அலைகுடி நிலையிலிருந்து முன்னேறி, நிலைத்த குடி வாழ்க்கைக்கு மானுடம் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. 

நிலைத்த குடியிருப்பு வாழ்முறைக்கு மனிதர் மாறிய அக்காலகட்டத்தில்தான் உலோகங்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, இரும்பைக் கண்டறிந்ததுதான் மாந்த நாகரிகத்தின் வளர்ச்சிக்கும், வாழ்வியல் மாற்றத்திற்கும் வழிகோலியது எனத் தீர்க்கமாகச் சொல்லலாம். இரும்பின் வருகையே உழவைச் செழுமைப்படுத்தியதோடு, சிறப்பான வாழ்வுக்கும் வழிவகுத்தது.

உழவு என்றால் உழுகின்ற மனிதன், மாடு, கலப்பை, நிலம்  யாவையையும் சேர்த்து பொதுவாய் உழவு என்பதாக அடையாளம் காட்டப்படுகிறது. இக்காலகட்டத்தில்‌ ஆற்றங்கரையோரச் சமவெளிகளைப் பண்படுத்தி வேளாண்மை செய்யும் பொருட்டு நிலங்கள் குழுக்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. 

பின்பு, உழைப்பின் அடிப்படையில் நிலம் தனி நபர்களின் சொத்தாக மாற்றம் பெறுகின்றது. புதிதாக உருவாகிய நிலவுடைமைச் சமூகம்‌ தோன்றுகிறது. காலவோட்டத்தில் நிலம் வேளாண் குடியினரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்தது. இக்காலகட்டத்தில் பிற‌பகுதியிலிருந்து வந்த‌ பிராமணர்களின் இருப்பு கேள்விக்குறியாகிப் போனதைக் கண்டு அச்சமடைந்து ஆத்திரம் கொள்கின்றார்கள். 

காரணம், பிராமணர்கள் ஆடு மாடு மேய்ப்பதற்குப் பயன்படுத்திய தரிசு நிலங்களை தேவேந்திரர்கள் பண்படுத்தி கழனிகள் ஆக்கியதால், கால்நடைகளின் மேய்ச்சல் பாதிக்கப்பட்டதோடு, வேளாண்மையின் உற்பத்தி, உழைப்புப் பங்குதாரராக அறியப்பட்ட மாடுகளை, பிராமணர்கள் உணவுக்காகவும் யாகத்திற்க்காகவும்  கொல்வதை தேவேந்திரர் எதிர்த்தனர்.

இதனால், தேவேந்திரர்களுக்கும்  பிராமணர்களுக்குமான மோதல் என்பது கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடமைச் சமூகத்திற்குமான மோதலாக மாற்றம் பெறுகின்றது. 

கால்நடை வளர்ப்புச் சமூகப் பிரதிநிதிகளாகப் பிராமணர்களும், நிலவுடமைச் சமூகப் பிரதிநிதிகளாகர் தேவேந்திரர்களும் நின்று போராடினார்கள். 

சுருங்கக்கூறின், பழமைக்கும் புதுமைக்கும் இடையே நடந்த பெருத்த மோதலில் தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்றார்கள் என்பதோடு, வென்றார்கள் என்பதே வரலாறு என அறிந்து கொள்ளலாம். 

வேளாண்மை முதன்மைத் தொழிலாய் மாறிப்போனதால் ஏற்பட்ட அச்சம் மற்றும் பகையுணர்வின் காரணமாகவே வேளாண்மை என்பது இழிதொழில்; நிலத்தை உழுவது பாவச்செயல் என்பதான பரப்புரையில் பிராமணர்கள் ஈடுபட்டதைச் சுட்டிக் காட்டுவதோடு, உழவை ஒரு தொழிலாக எண்ணாமல், பசிப்பிணி போக்குதல் பாரம்பரியமாய்ச் செய்து வரும் கடமையாகவும், பண்பாட்டு நீட்சியாகவும் மள்ளர் பள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்கள் செய்துவருவதைப் பள்ளு இலக்கிய நூல்களான முக்கூடற்பள்ளு, பொய்கைப் பள்ளு, பேரூர்ப்பள்ளு, நெல்விடு தூது, ஏரெழுபது, மகிபன் பள்ளு, திருவேட்டை நல்லூர் பள்ளு உள்ளிட்ட நூல்கள் வாயிலாகவும், 

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோன் உயரும் எனும் அவ்வையாரின் வரிகளினூடகவும், உழவர்களின் பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்கள் குறித்துத் தொல்காப்பியம், திவாகர சூடாமணி நிகண்டுகள், ஏரெழுபது, திருக்குறள், பதிற்றுப்பத்து, புறநானூறு, கம்பராமாயணம், பேரூர்ப் புராணம், ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, கலித்தொகை உள்ளிட்ட பல இலக்கியத் தரவுகளோடு, தரிசாய்க் கிடக்கும் நிலத்தை முச்சாலடித்து  நாற்று பாவுவதில் தொடங்கி, அறுப்பு முடிந்ததும் விதை நெல்லு சேகரம் செய்வதோடு, வேளாண்மைக்கு துணையாய் இருந்த 18 குடிமக்களுக்கும் களத்தில் படி அளத்தல் எனப் பாரம்பரிய நடைமுறைகளைச்  சுட்டிக் காட்டுவதோடு, வயலிலும் வரப்பிலும் காட்டிலும் கழனியிலும் வெள்ளந்தியாய் உலாவித்திரிகின்ற நெல்லின் மக்களினுடைய மகிழ்ச்சி கோபம், வலி, வறுமை, காதல், கொண்டாட்டம்  என சங்க இலக்கியம் கொண்டு வண்ணம் தீட்டியுள்ளதோடு, நாற்று நடும் குடும்பமார் குல மங்கையரின் குலவை ஒலி முதல் தினவெடுத்த காளைகளை அடக்கும் குடும்பர்களின் செருக்கு வரை பண்டையக்  காலத்தைய மனிதர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நம்மைத் தூண்டுவதோடு, தற்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்ற வேளாண்மையையும் மக்களின் பாடுகளையும், வேளான் மரபினரைச் சாகடிக்க முயலும் - சாவுக்குத் தூண்டும்  பெருநிறுவனங்களின் கோர முகத்தை அடையாளம் காட்டுவதோடு, நம் பாட்டன் பூட்டன் காலம் தொட்டு பாரம்பரியமாய்ச் செய்துவரும் மரபுவழி வேளாண்மையை மீண்டும் தொடர வேண்டும் என்கின்ற எச்சரிக்கை மணியையும் அடித்து இருக்கிறார். 

வயல் வரப்பில் மண்வெட்டியோடு நிற்கும் குடும்பனிலிருந்து, வழிந்தோடும் வாய்க்கால் நீரில் சீறிப் பாயும் கெண்டை மீன்கள் வரை மருதநிலத்தின் பண்பாட்டு அடையாளங்களை மிகக் கச்சிதமாய் அடையாளப்படுத்தி இருப்பதோடு, சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். மேழியைச் சித்திர ஓவியமாய் வரைந்து, அதைத் தங்களுடைய அடையாளமாய்க் கொண்டிருப்பவர்களால் உருவாக்கப்பட்டதுதான் சித்திரை மேழி பெரிய நாட்டார் சபை என்பதை அறியத் தருகிறார். 

தந்தை தாய் குரு தெய்வமும் செந்தமிழ்ப்பூசுரர் இன்றி சதிராய்ப் பின்னுள்ளவர்களை மதியாதவன் ...இந்திரன் குலத் தோன்றியே வந்த நாள் முதலாகவே இலகும் ஏழூர் குடும்பன் நானே .... எனும் பாடல் மூலம்  தமிழ் மூவேந்தர்களைத் தவிர அரசு அதிகாரம் சார்ந்த வேறு எவரையும் வழிபடுவது, தொழுவது  உழவுக் குடியின் வழக்கத்தில் இருந்ததில்லை என்பதோடு, குடும்பத்திலோ, குடியிலோ வாழ்ந்து மடிந்தவர்கள் நினைவாக நடத்தப்பட்ட நீத்தார் வழிபாடு, நடுகல் வழிபாடு போன்றவை ஏதோ ஒரு வகையில் மக்களுக்காகப் பாடுபட்டு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் ஒரு சடங்காகவும் மரபாகவும் நாம் பின்பற்றி வருகிறோம். 

அவ்வகையிலேயே மக்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தியவர்களைத் தொழுததும் வாழ்த்துவதும் மட்டுமல்லாது, அவர்கள் வழியில் தங்கள் வாழ்வியலை வரையறுத்துக் கொண்ட அவர்களுடைய சந்ததியினர் உயிர் நீத்த முன்னவர்களைத் தெய்வமென தொழுது வழிபடத் தொடங்கினர். 

தமிழ் மண்ணிலே தோன்றிய வேந்தன் வணக்கமானது, முதல் பாண்டிய வேந்தனையே குறிக்கும். அவனுடைய இறப்பிற்குப்பின் தெய்வ வேந்தனாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

வேந்தன் தெய்வ நிலை அடைந்த பிற்பாடு தெய்வ வேந்தன் ஆகிறான். தெய்வ வேந்தனே பிற்காலத்தில் மருவி தேவேந்திரன் என்று சொல் உருவாகின்றது. இந்திரன் என்கின்ற சொல்லிற்கு இனத்தின் தலைவன் அல்லது கூட்டத்தின் தலைவன் என்பதாகத்தான் பொருள் சொல்லப்பட்டிருக்கின்றது. 

ஆரியர்கள் வழிபடக்கூடிய ரிக் வேதம் சுட்டிக்காட்டும் இந்திரனுக்கும், தமிழர்கள் போற்றி வணங்கக்கூடிய இந்திரனுக்கும் உள்ள வேறுபாடுகளை பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுத் தகவல்களோடு சான்று பகர்ந்திருப்பதோடு, நீர் மேலாண்மை, வேளாண்மையைப் பாரம்பரியமாகச் செய்துவரும் வேளாண் மரபினரான தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட உள்ளார்ந்த விசயங்களைத் தயக்கம் தவிர்த்துப்  பரந்துபட்ட பார்வையோடு பொதுச் சமூகம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை, இந்நூல் காத்திரமான  தரவுகள் வாயிலாக அறத்தின் வழிநின்று திறம்பட நிறுவியிருக்கிறது. நூலாசிரியருக்கு வானமும் வசப்பட எனது‌ வாழ்த்துகள். 

மனமாச்சர்யங்களை விடுத்து வாருங்கள்  தமிழ்ச் சொந்தங்களே ..!கரம் கோர்ப்போம்; களம் காண்போம். வீழ்ந்து கிடக்கும் தமிழரின் பண்பாட்டு  அடையாளங்களோடு, அதிகாரத்தையும் மீட்டெடுப்போம் ..!

நன்றி.

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச : 9080514506.
*
கட்டுரையாளர்:
அழகர்சாமி பாண்டியன்,
சமூகச் செயல்பாட்டாளர்.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆரிய வைதீகத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : வருசக்கனி, நாட்டுப்புறவியல் ஆய்வாளர்


எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூல், வேளாண்மை: உழவுப்பண்பாடும் வேளாளர் வரைவியலும், நீர் மேலாண்மை: வேளாண் மரபினரின் நீர் அறுவடைப் பண்பாடு எனும் இரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரைக் கூற்றுகள் மூலம், தமிழகத்தில் நீர்நிலைகள் பராமரிக்கப்பட்ட விதத்தையும் நீரைச் சார்ந்தே ஒழுக்கம் உருவாவது பற்றியும் அறியலாம்.

மகாராசன் அவர்கள், இந்நூலில் தமிழின் ஐவகைத் திணைகளையும் -  திணை சார்ந்த உற்பத்தி முறைகளையும் உழவுப் பண்பாட்டின் வழியாக விளக்குகிறார். இரும்பின் கண்டுபிடிப்பானது மேய்ச்சல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், முல்லையில் வளர்ந்த வேளாண்மை மருதநிலத்தில் செம்மை பெற்று உபரி அதிகரித்த விதத்தையும், உபரியின் மூலம் மருத நிலத்தில் அரசு நிலைபெறத் தொடங்கியதையும் முதல் கட்டுரையில் விளக்குகிறார்.   உணவு உற்பத்தி எவ்வாறு  அதிகார உருவாக்கத்திற்கான காரணமாக அமைகிறது என்பதை மிக விரிவாகவே விளக்கியுள்ளார். மேலும், உணவு உற்பத்தியில் உபரியானது சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கிய விதம், மருத நிலத்தில் நிலங்களின் அளவைப் பொறுத்து உழுவித்துண்போர், உழுதுண்போர் என இரு பிரிவாக மாறியதையும் விளக்குகிறார்.
ஐவகைத் திணைகளால் பிரிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாக மாறிய விதம் முக்கியமானது எனக் கருதுகிறேன். சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இன்றைய சூழலில், சாதிய ஏற்றத்தாழ்வுகள் அற்ற 'தமிழர்' என்ற பொது அடையாளத்தின்கீழ் அணிதிரட்டுவதற்கான உத்தியைத் தேடுவது அவசியமாகிறது.
மருத நில மக்களின் மழைத் தெய்வமான இந்திரனைப் பற்றியும், இந்திர விழா பற்றியுமான தகவல்களைச் சங்க இலக்கியங்களில் இருந்தும், சமகாலத்தில் பா. அரிபாபு, தே.ஞானசேகரன் போன்ற ஆய்வாளர்களின் நாட்டுப்புறச் சடங்குகள், வாய்மொழித்தரவுகள் மூலமாகவும், மறைமலையடிகள், மா.சோ. விக்டர், பாவாணர் போன்ற அறிஞர்களின் எழுத்துகளிலிருந்தும் தொகுத்துள்ளார்.
ஒரு மக்கள் கூட்டம் என்ன வகையான உற்பத்தி முறையைச் சார்ந்திருக்கிறதோ, அதைப்பொறுத்தே அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும் எனக் கூறும் ஆய்வாளர் தொ.ப வின் கருத்துகளிலிருந்து மருத நில மக்களின் மழைத்தெய்வமான இந்திரனைப் புரிந்துகொள்ளலாம்.

ஆரியச் சடங்கியல் மரபுகள்  நெருப்போடும்  வானத்தோடுமே நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன. ஆரியப் பண்பாட்டில் நிலத்தை உழுது உழைப்பது பாவத்திற்குரிய செயல் என உழவுத்தொழிலை வைதீகம் விலக்கி வைக்கிறது.  ஆனால், தமிழ்ச் சடங்கியல் மரபுகள் நீரோடும் நிலத்தோடும் தொடர்புடையதாக இருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டில் உழவுத்தொழில் உயர்வாகப் போற்றப்படுகிறது. இதன் வழியே தமிழ் உழவுக்குடிகளின் மழைத்தெய்வமான இந்திரன் எனும் வழிபாட்டு அடையாளமானது, ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளையே பெற்றிருக்கிறது என்பதும், தமிழ் இந்திர வழிபாட்டிற்கும் ஆரிய வழிபாட்டிற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதையும் நூலாசிரியர் நிறுவுகிறார்.

மேலும், இந்திரன் - வெள்ளை யானை - வெண்மை ஆகிய அடையாளங்கள் ஆசீவகத்தோடு தொடர்புடையவை. தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகள் சார்ந்த இடங்களில் ஐயனார் கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் ஆய்வு செய்து, இந்திர அடையாளம் என்பது  ஆசீவக அடையாளம்தான் என அறிஞர் க. நெடுஞ்செழியனின் ஆய்வுகள் கூறுகின்றன.
அயோத்திதாசர் இந்திரனை புத்தர் என நிறுவுகிறார். ஐம்புலன்களையும் அடக்கியதால் ஐந்திரன் என அழைக்கப்பட்ட புத்தர் ஐந்திரன் - இந்திரன் என அழைக்கப்பட்டார். இந்திரனைப் பின்பற்றியவர்கள் இந்திரர்கள் எனவும், அவர்கள் வாழ்ந்த நாடு இந்திர தேசம் எனவும் அழைக்கப்பட்டது என அயோத்திதாசர் தம் ஆய்வுகள் வழியே நிரூபிக்கிறார். அதற்கான ஆதாரங்களைத் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, வீரசோழியம், பிங்கல நிகண்டு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்தாள்கிறார். மேலும், வேளாண்குடிகள் இன்றளவும் பின்பற்றி வரும் வளமைச்சடங்கான பொன்னேர் பூட்டுதல் நிகழ்வானது பௌத்தக் கூறுகளைக் கொண்டுள்ளதையும் விளக்குகிறார்.
இந்திர வழிபாடான இந்திர விழாவைச் சோழ மன்னன் நிறுத்தி வைத்ததால், மணிமேகலா தெய்வம் கோபம் கொண்டு நகரை அழித்தது என்ற மணிமேகலைக் காப்பியத்தின் துணைகொண்டு, இந்திரன் பௌத்த  கடவுள் என மயிலை சீனி வேங்கடசாமி பதிவு செய்துள்ளார்.
பேரா டி.தருமராஜன் அவர்களின் கட்டுரையில் கால்நடை மேய்ப்புச் சமூகமாக இருந்த பிராமணர்களுக்கும், உழவுத்தொழில் செய்யும் வேளாண் சமூக மக்களுக்கும் இடையேயான மோதலின் வழியாக ஒரு மாற்று வரலாறைப் பதிவு செய்கிறார். பிராமணர்களின் யாகங்களில் கால்நடைகளைப் பலியிடுதலை எதிர்த்த வேளாண்குடிகளுக்கும் பிராமணர்களுக்குமான மோதல், நிலங்களைப் பங்கிட்டுக் கொள்வது, நீர் ஆதாரங்களைப் பங்கிட்டுக் கொள்வது, பிற வளங்களைப் பங்கிடுதல் தொடங்கி, அதிகாரங்களைப் பங்கிட்டுகொள்வது வரை மோதல் நீடித்தது.

அரசர்கள் வளமான விவசாய நிலங்களைப் பிரமதேயங்களாகப் பிராமணர்களுக்குக் கொடுத்தபோது, அதை எதிர்த்து வேளாண்குடிகள் வணிகக் குழுக்களோடு இணைந்து அரசிற்கு வரி செலுத்த மறுத்துத் தங்களுக்கென தனிக்கொடி, தனி இலட்சினை ஆகியவற்றை 'சித்திர மேழி பெரிய நாட்டார் சபை' என்ற பெயரில் பிராமண ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண்மையில் ஈடுபடும் மக்களின் உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப் பண்பு போன்ற குணங்கள் பௌத்த மதத்தின் வித்தை, புத்தி, ஈகை  என்ற பௌத்த கூறுகளை ஒத்திருக்கின்றன. வேளாண்குடிகள் - பௌத்தம் இடையேயான ஊடாட்டத்தின் மூலமே இவை நிகழ்ந்திருக்க முடியும். ஏனெனில், உணவிடுதல் எனும் கருத்தைப் பற்றி மற்ற மதங்களை விட பௌத்தமே அதிகமாகப் பேசியிருக்கிறது.
இந்திரனைப் பற்றிய பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகளைத் தொகுத்து, இந்திரன் ஆரிய அடையாளமில்லை; இந்திரன் தமிழ் அடையாளமே என்பதை நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு, வைதீகத்திற்கு எதிரான இந்திர அடையாளத்தை வைத்து மாற்றுப் பண்பாட்டு மரபுகளை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம், வைதீகத்திற்கு எதிரான பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பிராமணீயச் சிந்தனை  என்ற ஒற்றைத்தன்மைக்கு எதிரான சமண, பௌத்த, ஆசீவகம் போன்ற பன்மைத்துவப் பண்பாட்டு ஆய்வுகள் வழியே புரிந்து கொள்ள முயற்சி செய்ய இந்நூல் முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது.
சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவும் சூழலில், அதற்கு எதிரான ஆதிக்க எதிர்ப்புப் பண்பாடுகளும் இருந்துகொண்டேதான் உள்ளன. கெடுவாய்ப்பாக,  சாதிய மேலாதிக்க நடவடிக்கைகளையும், சாதிய மேலாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளும் போக்கே தமிழ்ச் சூழலில் நிலவுகின்றது. இதன் விளைவாகத்தான், சாதிய மேலாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைக்கூட 'மேட்டிமை வாதம்' எனவும் 'சமஸ்கிருதமயமாக்கல்' எனவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
வேளாண் மக்களின் தமிழ்ப் பண்பாட்டு கூறான இந்திர அடையாளம் சமண, பௌத்த, ஆசீவக சமயங்களில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆரியப் பண்பாட்டில் வைதீக மதமானது தமிழ் அடையாளமான இந்திர அடையாளத்தை மிகுந்த வன்மத்தோடு இழிவுபடுத்தியும் -  இந்திர வழிபாட்டு அடையாளங்களை அழித்தும் சிறுமைப்படுத்தியும் புராணக்கதைகளைக் கட்டமைத்துள்ளது.
தற்போது, வேளாண்குடிகள்  'தேவேந்திரர்கள்' என்ற பழைய பெயராலேயே தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என வேட்கை கொண்டிருக்கின்றனர். இதனுள் வைதீக எதிர்ப்புத் தன்மை பொதிந்திருக்கும் பண்பாட்டு வரலாற்றை அறியவோ அடையாளப்படுத்தவோ பலரும் தவறிவிடுகின்றனர்.

ஆரியச் சிந்தனை மரபின் எச்சங்களைத் தமது சிந்தனையாக கொண்ட சில பல திராவிட இயக்க அறிவுஜீவிகள், இடதுசாரிகள் போன்றோரும் பௌத்த, சமண, ஆசீவகப் பண்பாட்டு அடையாளமான இந்திர அடையாளத்தை ஆரிய அடையாளமாகத்தான் கட்டமைக்கின்றனர். அதற்குச் சான்றாக, ஆரியப் பிராமணீயத்தால் கட்டமைக்கப்பட்ட இழிவான புராணப் புரட்டுகளைத்தான் காண்பிக்கின்றனர்.

பெயரில் திராவிட, இடதுசாரிக் கொள்கையையும், மூளையில் பிராமணீய மையச் சிந்தனையையே கொண்டிருக்கும் சில அறிவுஜீவிகள், தொடக்கம் முதலே வைதீகத்தை எதிர்த்துப் பெரும் கலகம் செய்து வந்த வேளாண்குடி மக்களின் 'தேவேந்திரர்' எனும் வைதீக எதிர்ப்புப் பெயரை  ஆரியப் பெயர் என்றுதான் இழிவுபடுத்தி எள்ளி நகையாடுகின்றனர். அதாவது, திராவிட இயக்க - இடதுசாரிச் சிந்தனைப் போக்குகளைக்கூட இன்றும் பிராமணீயமே தீர்மானிக்கிறது.

இந்நிலையில், தமிழர் பண்பாட்டுத் தளத்தில்  வைதீக மரபிற்கு  எதிரான தமிழ்ப் பண்பாட்டு கூறுகள் அடையாளம் காணப்பட்டு ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் -  வேளாண் மக்களைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியதன் சமூகத் தேவையை - வேளாண் மக்கள் குறித்த சமூக உரையாடல்களை மிக விரிவாக முன்வைத்திருக்கிறது மகாராசனின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல்.

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச : 9080514506.
*
கட்டுரையாளர்:
வருசக்கனி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.

சனி, 13 நவம்பர், 2021

நீர் மேலாண்மைச் சமூகத்தின் வேர்த் தடங்கள்: மகாராசன்

இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவான - உருவாக்கப்பட்ட நீர் ஆதார அமைப்புகளைப் பயன்படுத்தவும் பராமரிக்கவுமான பணிகளை, நீர் மேலாண்மைச் சமூகத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். அவ்வகையில், வேளாண்மைத் தொழிலோடு பிணைந்திருந்த வேளாண் உழவுத்தொழில் மரபினரின் ஒரு பகுதியினரே நீர் மேலாண்மையை இணைத் தொழிலாகவும் செய்து வந்திருக்கின்றனர்.

அதாவது, வேளாண்மை உழவுத் தொழிலின் மிக முக்கியமான அங்கமாகவும் ஆதாரமாகவும்தான் நீர் மேலாண்மையும் இருந்திருக்கிறது. வேளாண்மையோடும் அதன் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்த நீர்ச் சமூகமும் ஒன்று இருந்திருக்கிறது. இந்த நீர்ச் சமூகம்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்திருக்கிறது.

மழை பொழிந்து ஓடும் நீரை நீர் ஆதார அமைப்புகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, அதைச் சேமித்து வைத்து, விளை நிலங்கள்வரை கொண்டு சேர்ப்பதுதான் நீர்ச் சமூகத்தின் பணியாக இருந்திருக்கிறது. இது, மிகச் சாதாரண பணியும் அல்ல. அதற்கு நிறைய நீரியல் தொழில் நுட்ப அறிவும் உழைப்பும் தேவை. அவையெல்லாம் அந்த நீர்ச் சமூகத்திடம்தான் நிரம்பிக் கிடந்திருக்கின்றன.

தமிழ் நாட்டின் நீர் மேலாண்மைச் சமூகம் குறித்து விவரிக்கும் க.நெடுஞ்செழியன், தமிழினம் உலகுக்கு வழங்கிய அறிவுக் கொடைகளுள் தலையாயது வேளாண்மையும் நீர் மேலாண்மையும். பெரிய ஆறுகள் தமிழகத்தில் இல்லாததால் வான்மழையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் பண்டைக்காலத் தமிழர்கள் பெரிதும் கவனம் செலுத்தினர். அதனால் பாசனத்தைப் பெருக்கும் வகையில் ஏரி, குளங்களை வெட்டினர். ஒவ்வொரு ஏரியின் உபரிநீர் மற்ற ஏரிகளுக்கு நீர் ஆதாரமானது. அதனால், பெய்யும் மழைநீர் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

ஏரி நீரை ஒழுங்குபடுத்தி அதன் பாசனப் பரப்பின் அளவு, நீரின் தேவை, ஏரியில் உள்ள நீரின் அளவு இவற்றையெல்லாம் நன்கு அளந்து அறிந்து, நீர்ப் பகிர்மானத்தை முறைப்படுத்துபவர்கள் ‘நீர்க்கட்டிகள்’ என அழைக்கப்பட்டனர். ஏரி நீரும் வாய்க்கால்களும் ஏரி வாரியத்தால் கண்காணிக்கப்பட்டன. ஏரி வாரியம், ஊரவையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டன. ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டன. இவற்றிலிருந்து வரும் ஏலத்தொகை ஏரிப் பராமரிப்புக்கான வருவாய் ஆயிற்று என்பார்.

இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்பட மேற்கொண்டிருந்த நீர்ச் சமூகம், பல பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆற்று நீரை அடுத்ததடுத்த ஏரி எனும் நீர்நிலைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, பங்கிட்டுக்கொடுக்கும் பொறுப்பை ஆண்ட நீர் மேலாண்மைத் தொழில் பிரிவினர் ‘நீராணிக்கர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்த்து, அந்த நீரைக் கட்டிவைத்துக் காத்ததால் அவர்களுக்கு ‘நீர்க்கட்டியார்’ என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பும் கொண்டவர்கள். ஆற்றிலிருந்து கால்வாய்களை உருவாக்கியும் மேலாண்மையும் செய்து வந்தவர்கள் ‘ஆற்றுக் காலாடியார்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள கோடைக் காலங்களில் ஏரி நிலத்தில் தற்காலிகமாகப் பயிர் செய்வது என, ஏரி நிலைக்குள் நடந்த எந்தவொரு நிகழ்வும் நீர்க்கட்டியார் அனுமதி இருந்தாக வேண்டும்.

ஏரி நீரின் பாதுகாப்பு அதன் கரையில்தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, ஏரிப் பாசனம் பெறும் வயல்வெளிகளையும் மக்கள் வாழிடங்களையும் அழித்துவிடும். ஆகையால்தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அத்தகைய ஏரியின் கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நீர் ஆதார அமைப்புகளின் கரை வேலைகளைப் பார்த்ததால் ‘கரையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் ஏரிக்கரைக்கு முழுப்பொறுப்பும் ஆவர். கார் எனில், மழை எனும் பொருளையும் குறிக்கும். மழை நீரைத் தேக்கி நிர்வகிக்கும் ஆளுமை கொண்டதால், கார் + ஆளர் = காராளர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சமூகத்தின் பொருளாதார வளம் வேளாண்மையோடு தொடர்புடையது. ஏரிகள் வேளாண் பாசனத்திற்காகவே உருவாக்கப்பட்டவை. எதிரிகளால் வேளாண் பொருளாதாரச் சீர்குலைவுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. எதிரிகளிடமிருந்து ஏரிகளையும் இதர நீர்நிலைகளையும் காத்த காரணத்தால் ‘குளத்துக் காப்பாளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

நீர் நிலைகளுக்குள் தேவையின்றி வளர்ந்த செடிகொடிகள், பாசிகள் போன்றவற்றை அழித்துத் தூய்மைப்படுத்தி, வயல் பள்ளங்களில் வேளாண்மைக்கு நீர் திறந்துவிட்டதனால் ‘குளத்துப் பள்ளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் வெட்டிக் கொண்டு வந்தமையால் ‘நீர் வெட்டியார்’ எனவும், நீரை வயல்கள்வரை கொண்டு வந்து பாய்ச்சியதால் ‘நீர்ப் பாய்ச்சியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வயல்களுக்கான நீரைக் கண்காணித்தவர்கள்.

நீர் ஆதார அமைப்புகளிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்காக அவற்றில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். வேளாண் பாசனத்திற்காக இந்த மடைகளைத் திறந்து விடுவதால் ‘மடையர்கள்’ எனவும் ‘மடைக் குடும்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மதகுகள் வழியாக வேண்டிய அளவு நீரை வெளியேற்ற முடியும்; நீரைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், மடை என்பது அப்படியல்ல. மடையைத் திறந்து விட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மடைகள் அமைக்கப்பட்ட நீர்நிலைகளில் மடைகளைக் கையாண்டதால்தான் ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்டுள்ளனர்.

ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வருகின்ற மழை நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறும் சகதிகளையும் சேர்த்தே கொண்டு வரும். இவை அதிகம் சேர்ந்தால் நீர்நிலைகள் தூர்ந்து போகும் வாய்ப்புண்டு. இதனால் மடைகளும் மதகுகளும் அடைத்துக் கொள்ளும். இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ‘குமிழி’ எனும் ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். ஏரி நீரை வெளியேற்றும் ஓர் அமைப்புதான் அது.

குமிழியானது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து சற்றேறக் குறைய 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைக்கப்பட்டிருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போதுதான் இந்தக் குமிழியைத் திறந்து விடுவர். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். இதனால் ஏரியின் தளத்தில் சேர்ந்த வண்டல் மண் வெளியேற்றப்படுவதால் அதன் பாசனப் பயிர்களுக்கும் நல்ல உரம் கிடைத்து விடுகிறது. நீர்நிலைகளில் பயன்படுத்திய தூர்வாரும் தொழிநுட்பம்தான் இது. நீர் நிலைகளில் குமிழிகள் அமைத்துத் தூர்வாரி, வயல் பள்ளங்களில் நீர் பகிர்ந்ததால் ‘குமிழிப் பள்ளர்கள்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

குமிழிப் பள்ளர்களின் இன்னொரு நீர் மேலாண்மை நுட்பம் குறித்து பழ.கோமதிநாயகம் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர்ப் பங்கீடு செய்வதற்கு ‘முறைப்பானை’ என்ற வழக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததாக அவ்வூரார் சொல்கின்றனர். இந்த வழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இல்லை.

10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு செம்புப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறிய துளை இடப்படும். இது போன்ற துளை இடுவதற்கான ஊசியின் அளவுகள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் உள்ளன. மூன்று கற்களைப் பரப்பி, அதன் மேல் இந்தச் செம்புப் பானையை வைப்பார்கள். பானையில் முழுவதும் நீர் நிரப்பப்படும். துளையிலிருந்து நீர் வடியும். செம்புத் தண்ணீர் முழுவதும் காலியானால், ஒரு ஏக்கர் நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ந்து விடும். இதுவே ‘முறைப்பானை’ எனப்பட்டது.

இதனைக் கண்காணிக்கவும், நீர்ப் பாய்ச்சவும் ‘குமிழிப் பள்ளன்’ என்ற பணியாள் இருந்திருக்கிறார். காலை முதல் மாலை வரை இம்முறையில் நீர் பகிரும் காலம் கணக்கிடப்பட்டது. இதே போன்ற முறைகள் ஆப்பிரிக்காவில் ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது என்கிறார்.

மேற்குறித்த நீர்ச் சமூகத்திடம் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் நுட்பமும் அறிவும் மட்டுமல்ல; அத்தகைய நீர் ஆதாரங்களைப் புதியதாக உருவாக்கும் அறிவும் நுட்பமும் உழைப்பும் கூடவே இருந்திருக்கிறது.

மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம், பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மழைநீர் வரத்து போன்றவற்றைக் கணக்கில் கொண்டே நீர்நிலைகளின் கொள்ளளவை நிர்ணயித்திருக்கிறார்கள். விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கும், மக்களின் இதரத் தேவைகளுக்கும் நீர் திறந்துவிட வேண்டியதின் அளவு, அதற்கேற்ப மதகுகளையும் மடைகளையும் அமைத்தல், அவற்றிலிருந்து நீர் வெளிவருவது எவ்வளவு? எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும்? போன்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுத்தான் நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படியாக, நீர் நிலைகளை உருவாக்கியதிலும், நீர் நிலைகளை மேலாண்மை செய்ததிலும் நீர்ச் சமூகத்தின் அறிவும் உழைப்பும் மட்டும் இருந்திருக்கவில்லை. கூடவே, நீர்ச் சமூகத்தின் தியாகமும் உள்ளடங்கி இருக்கின்றது.

மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போதும், நீர்நிலைகளில் நீர் நிறைந்திருக்கும் போதும், கரைகள் உடையக்கூடிய அபாயங்கள் இருக்கும்போதும், நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும்போதும், மதகுகள் - மடைகள் வழியாக நீரைத் திறந்துவிடும்போதும் உயிரைப் பணையம் வைத்து அவற்றைச் செய்திடவும் வேண்டும்.

நீர் நிரம்பி இருக்கும் நீர்நிலைக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையைத் திறக்கும்போது உயிர்போகவும் கூடும். அந்தத் தியாகத்தையும் நீர்ச் சமூகமே செய்திருக்கின்றது. அவ்வாறு உயிர்நீத்த நீர்ச் சமூகத்தவரின் உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நீர்நிலைக் கரைகளில் நடுகல் நட்டு வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம் செய்த நீர்ச் சமூகத்தவரின் குடும்பங்களுக்கு நிலக்கொடைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


வெள்ளி, 12 நவம்பர், 2021

நீர் மேலாண்மை : காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதை வலியுறுத்தும் நூல் :- செ.தமிழ்நேயன்



கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு இயற்கை வழங்கும் வாய்ப்பு தான் நிகழ்காலம்.
சென்னையில் பெருவெள்ளம் வழக்கத்திற்கு மாறாக உள்ளது என்பதை ஊடகங்கள் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் அறிவிக்கை செய்கின்றன.

உலக வெப்பமயமாதல் விளைவின் காரணமாக இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் எழுவது இயல்புதான் என்கிறது சூழலியல் அமைப்பு.
தனிமனிதத் தவறுகளோடு சமூகத்தின் தவறுகளாலும்தான் ஒரு பெரும் சூழலியல் மாற்றத்தை நிகழ்த்தும் காரணியாக உள்ளன.

பண்டையத் தமிழரின் நீர் மேலாண்மை நுட்பங்களை மறந்து, வளர்ச்சி என்ற பெயரில் சுருங்கிப் போனதால்தான் இந்த விளைவா?
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இது போன்ற நிகழ்வுகளை நேர் கொள்வது?

சமூகம் அடிப்படைக் காரணத்தைத் தேடமால் வழிப்போக்குகளை மட்டுமே கையாளுவதால் இது போன்ற சிக்கல்கள் தோன்றுகின்றன.
உணவு, பண்பாடு போன்றவற்றில் பழமையைப் போற்றும் சமூகம், ஏன் நீர் மேலாண்மை, நகரக் கட்டமைப்புகளில் கவனம் கொள்வதில்லை?

அண்மையில், கீழடி அகழாய்வுச் செய்தியில் பண்டையச் சமூகம் முறையான நகரக் கட்டமைப்பு செய்துள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளனர் தொல்லியல் துறை சார்ந்தவர்கள்.

நகரக் கட்டமைப்புப் பணிகளில் ஆள்வினைஞர்கள் சுணங்குகின்றனரா?

ஒவ்வொரு விளைவும் ஒன்றை மட்டும் நினைவுப்படுத்தவதில்லை. அந்த விளைவுகளில் மறைந்துள்ள செய்திகளை ஏன் யாரும் பேசுவதில்லை?

நகரக் கட்டமைப்பின் அடிப்படை நீர்மேலாண்மை கொண்டுதான் நிறுவ வேண்டும். நீர் மேலாண்மைச் சமூகங்கள் ஒடுங்கியதன் - ஒடுக்கியதன் விளைவுகளால்தான் பெருவெள்ளம் போன்ற நேரங்களில் கையுறு நிலையில் கேட்பாரற்று ஏதிலியாக மாறி உள்ளோம்.

தமிழகத்தின்  சிற்றூர்  நீர்த்தேக்க ஓரங்களில் காவல் தலைவர்களைத் குல தெய்வமாக வழிபடும் முறை உள்ளது. நீர் மேலாண்மை காரணமாக அந்த மரபு தோன்றி இருக்கலாம் என்ற வகையில் பார்வையும் எழுகிறது.

பெரு வெள்ளத்துயரம் தந்த பாடங்களை கொண்டு, நீர் மேலாண்மை என்ற பண்டைய முறைமைகளை மீட்டுருவாக்கம் செய்யப் புறப்படுவோம்.

நீர் மேலாண்மைதான் நிறைவான தீர்வு என்பதை, பொது சமூகம் உணரும் வேளையில்தான் இது போன்ற துயரங்களுக்கு முடிவுரை எழுத முடியும்.
நீர் மேலாண்மை காலத்தின் தேவை மட்டுமல்ல; காலத்தின் ஓட்டத்தைச் சீர்செய்யும் சூழ் என்பதைத்தான் மகாராசனின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல் உணர்த்துகிறது.

நீர் மேலாண்மை: வேளாண் மரபினரின் நீர் அறுவடைப் பண்பாடு எனும் அத்தியாயமானது, நீர் மேலாண்மைப் பண்பாட்டின் கடந்தகால வரலாற்றையும், நிகழ்கால இருப்பையும் அதன் வேர்த் தடங்களையும் மிக நுட்பமாகவும் விரிவாகவும் ஆவணப்படுத்தியிருக்கிறது. நீர் மேலாண்மை குறித்துப் பேசுவோரும் யோசிப்போரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

செ. தமிழ்நேயன்

வேளாண் மரபையும், நீர் மேலாண்மைச் சமூகம் பற்றியும் விரிவாகப் பேசும் நூல் : ப.அ.ஈ.ஈ.அய்யனார், பொறியாளர்.




வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் எனும் இந்நூல், இருநூற்றிருபத்து நான்கு பக்கங்களைக் கொண்டது. நூலை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மகாராசன். 

சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டியும், அய்வகை நிலங்களும் நிலஞ்சார்ந்த தொழில் பற்றியும் இந்நூலைத் தழுவியிருக்கிறார்.

வேளாண் தொழிலைப் பற்றியும், வேளாளர்களின் நீர் மேலாண்மை பற்றியும், நீர்வழித் தெய்வங்கள் வழிபாடு மற்றும் நீர் சுழற்சி,  வேளாண் தொழில் பற்றி தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் உண்டான பகையும் முரணும், உழவர்களின் கால்நடை வளர்ப்பு, அறுவடைத் திருநாள், நீர் அறுவடை பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். 

தொழில்நுட்பம் உருவாகாத முந்தைய காலத்தில் வேளாளர்களின் நீர்ப் பாதுகாப்பும், அதன் மேலாண்மையும், தொன்மையும் பற்றி விவரித்திருக்கிறார். 

முக்கூடற்பள்ளு, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பல சங்க இலக்கிய நூல்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர, வேளாளர்களின் கும்மிப்பாடல்களும் வாழ்வியல் பாடல்களும் நூலுக்கு இசை ஊட்டுகிறது. 

இந்திரனை வழிபடும் ஆரியர்களுக்கும், வேளாண் மரபினர்களுக்குமான வழிபாடு பற்றிய வேறுபாட்டு நெறிமுறைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 

"நெல்லின வகையும் பள்ளின வகையும்" தெளிவுபட விவரிக்கும் விதம் அமைந்துள்ளது இந்நூலில். 

ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், மதகுகள், ஊரணிகள், கலிங்குகள், நீர்த்தேக்கங்கள் போன்று விளங்கும் நீராதாரத்தினை முறையாகப் பராமரித்தும் அதனைப் பங்கீட்டு கொண்டு வாழ்ந்தும், தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மடையர்கள், நீர்ப்பாய்ச்சிகள், மடைக்குடும்பர்கள் இன்றும் தொன்று தொட்டு வருகின்றனர். 

குளங்களைக் குழந்தைகளாகப் பாவித்த சமூகம், இன்று வறுமையில் வாடிக்கொண்டும், தங்கள் குலத் தொழிலை விட்டுவிட்டு வேறுதொழிலுக்குச் சென்று விட்டனர் என்கிற வரலாறு உள்ளத்தை உலுக்குகிறது. 


ப.அ.ஈ.ஈ.அய்யனார், பி.டெக்.,

பொறியாளர்,

தானத்தவம்,

மாடக்குளம் அஞ்சல்,

மதுரை.

வியாழன், 11 நவம்பர், 2021

நீர் மேலாண்மையும் நீர்ச் சமூகமும் :வேர் அறுந்த வேதனை வரலாறு - மகாராசன்





நீர் நிலைகளின் சீரழிவுப் போக்கின் வரலாற்றை, ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு எனும் நூலில் டி.எல்.சஞ்சீவிக்குமார் விரிவுபடக் கூறியுள்ளார். அப்பகுதி வருமாறு: 

தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு எனத் தனிச் சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலைப் பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு, முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள். 

பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுச் சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாச ஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்து குறைந்து போனது.

ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோலத் துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாகப் பாவித்த சமூகம், பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலைச் சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான். 

வருவாய்த்துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில் நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள். 

நிலைமையைச் சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். 

இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும், அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட்களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 

நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணைகளைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக்கப்பட்டன. எரிபொருள் தேவைக்காகக் கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்துக் குடிநீர் எடுத்தார்கள். 

ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை; நீர் நிலைகளும்தான் என, நீர் மேலாண்மையும் - நீர் மேலாண்மைச் சமூகமும் வீழ்த்தப்பட்டதன் பின்புலத்தை விவரிக்கிறார் டி.எல்.சஞ்சீவிக் குமார். 

இந்நிலையில், நீர் மேலாண்மைச் சமூகத்திடமிருந்த நீரியல் அறிவு நுட்பத்தையும், நீரியல் - நிலம் சார்ந்த பல்லுயிர் வளங்களையும், நீரியல் - நிலம் சார்ந்த தொழில் மரபுகளையும், நீரியல் - நிலம்சார் பண்பாட்டு மரபுகளையும் வாழ்வியலையும் அதன் மனிதர்களையும், இணக்கமாக இருந்த சமூக உறவுகளையும், நீரியலால் செழித்திருந்த நிலத்தையும் மிக விரிவாகக் கதை வடிவில் ஆவணப்படுத்தியிருக்கும் கதையாசிரியர் சோ.தர்மன், கடந்த அய்ம்பதாண்டு காலங்களில் சிதைக்கப்பட்டும் சீரழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் கிடக்கின்ற நீரியல் கட்டமைப்பின் வலிகளை - நிறைசூலியின் வலிகளாகச் ‘சூல்’ எனும் புதினத்தில் புலப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

நீர் மேலாண்மையின் வீழ்ச்சியாலும் - நீர் மேலாண்மைச் சமூகத்தின் வீழ்ச்சியாலும்தான், வேளாண்மைத் தொழிலும் தற்போது வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வேளாண்மைத் தொழிலின் வீழ்ச்சியானது, வேளாண் மரபினரை மட்டுமல்ல; உணவு தேடும் யாவரையும் வீழ்த்தவே செய்யும் பேராபத்தைக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், வேளாண் மரபினர் உள்ளிட்ட யாவருக்குமான மீட்சிகளுள், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டும் - சுரண்டப்பட்டும் வருகின்ற நீர் நிலைகளை மீட்பதும் ஒன்றாகும். நீர் இன்று அமையாது உலகு என்கிறது குறள். இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்கிறது பிங்கல நிகண்டு. அவ்வகையில், நீர் மீட்பானது தமிழ் மீட்புமாகும்… 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506