புதன், 29 மார்ச், 2017

வடு

மனமும் உடலும்
வலிக்கிறது தான்.

இந்தக் காயத்தையும்
இந்த அதிகாரம்
தருமென்று தெரிந்துதானே
அதிகாரத்தை
எதிர்த்து நின்றோம்.

நாம் போராடியது
நமது உரிமைக்காக.
காயங்கள் இன்றிக்
கிடைக்கும் யாவும்
பிச்சை தான்.

களத்தில் நின்றோம்.
சொல்லடியும் கல்லடியும்
தடியடியும் பெற்றோம்.
அதனாலே
நிறைய பாடங்கள் கற்றோம்.
கொஞ்சமேனும்
உரிமையை மீட்டெடுத்தோம்.

கொம்புகள் தரும்
காயங்களுக்காகத்தானே
கம்புகள் தந்த
காயங்கள் சுமந்தோம்.

இந்த உரிமை
நம்மால் தான் வந்தது.
இதுவே தான்
தொடக்கம்.
கண்ணீரும் செந்நீருமாய்
சிந்திய துளிகள் யாவும்
விதையெனப் புதைந்து
விடுதலைப் பயிராய்
முளை கட்டும்.

தமிழுக்காக
நிலத்துக்காக
இனத்துக்காக
சாதிய ஒழிப்புக்காக
பாலின சமத்துவத்துக்காகப்
பேசுவதும் எழுதுவதும்
கைகள் கோர்ப்பதும்
களத்தில் நிற்பதும்
தீவிரவாதம் என்றால்,
நானும் தீவிரவாதி தான்.
நானும் தோழர் தான்.

இதே குரல்
உனதென்றால்,
நீயும் தோழரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக