புதன், 29 மார்ச், 2017

துயர் மொழிப் படலத்து வாழ்த்து.


பஞ்சம் வரினும்
வஞ்சகம் சூழினும்
நிமிர்ந்தெழுவோம் எனும்
நம்பிக்கை மட்டும்
இன்னும்
பொய்த்துப் போகவில்லை.

அழுதுக்கிட்டு இருந்தாலும்
உழுதுக்கிட்டு இருப்போம்.
உண்மையான மகிழ்ச்சி என்பது
போராட்டத்தில் தான்.

எமது போராட்டம்
இனி
நிலத்தோடு மட்டுமல்ல.
எம்மை வஞ்சிக்கும் அத்தனையையும்
தொளி உரமாய் ஆக்கும் செங்களத்தில்
ஏர் பூட்டி உழுவோம்.

இன்றல்ல நேற்றல்ல. இதைவிடக்
கொடும் பஞ்சமும் வஞ்சகமும் சூழ்ந்த போதும்
சோர்ந்து விடவில்லைதான்.
விளைந்தால் தான்
உழவுக்கும் நிலத்துக்கும்
வாழ்த்துச் சொல்வதென்பது தன்னலம் .
விளையாவிட்டாலும்
நிலத்தில் வடித்த உழைப்புக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்வதே எம் தமிழ் மரபு.
பொங்கி வழியும் துயரங்கள் நிரம்பி வழிந்தாலும், உழவர்களின்
துயரில் கசியும்
ஈர மொழியாய்
பொங்கல் வாழ்த்துக்கள்.
நிலமே போற்றி
நீரே போற்றி.
கதிரே போற்றி
உழைப்பே போற்றி.
உழவரே போற்றி
நெல்லே போற்றி.
எம் சொல்லே போற்றி.
வாழ்வை நிமிர்த்தும் நிலத்தையும்
அறத்தைப் பொழியும் பண்பாட்டையும்
மீட்டெடுத்தே தீருவோம்.
சனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு .
சித்திரை 1 சமக்கிருதப் புத்தாண்டு .
தையல் சுறவம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக