வியாழன், 18 மே, 2023

இனம் அழுத நிலம் : மகாராசன்


ஒரு நிலத்தில்
வாழ்ந்த இனத்தின்
இலைகளும் தளிர்களும் 
கிளைகளும் வேர்களும்கூட கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்டபோது 
கதறித்துடித்தன 
அழுகைக்கூக்குரல்கள்.
கையேந்திக் கிடந்த கண்ணீர்த்துளிகளும் உயிர்கொப்பளித்த அரத்தமும்
கசிந்து நசிந்து
மண்ணெல்லாம் சேர்ந்தழுதன.
அந்த நிலமும் இனமும் 
நீட்டிய கைகள்
எட்டாமல் போயிருக்கலாம்.
கடல் தாண்ட முடியாமல்
கால்கள் தவித்திருக்கலாம்.
புத்தன் பெயரால்
பெருங்கொலையில் துடித்திட்ட 
ஓர் இனத்தின் அழுகுரல்
உலகின் காதில் விழுந்தாலும் 
புரியாமல் போயிருக்கலாம்.
ஆனாலும்,
நம் காதில் விழுந்தது;
நமக்குப் புரிந்தது.
அதன் அழுகைமொழி புரிந்த
எட்டுக் கோடிப் பேர்களும்
உயிர் சாட்சிகளாய் நின்றது
அதனிலும் பெருந்துயரம்.

ஏர் மகாராசன்

ஈழப்பனையும் குருவிகளும் : மகாராசன்


கண்ணீர் சுமக்கும் 
தொன்மங்கள் பரவிய
தொல் நிலத்தில்
சிதறிக் கிடக்கின்றன
விதைகள்.
கொத்துக் குண்டுகள் 
புத்தன் பெயரால் ஏவியதில்
காயம்பட்டு நிற்கிறது
நெடிய பனை.
குலைகள் பூத்து
உதிர்ந்த விதைகள்
வரலாறு படித்தன
தாய்ப்பனையின் 
எச்சம் உறிஞ்சி.
பாட்டன் பாட்டிமார்
அரத்தம் தோய்ந்த
காலடித் தடங்கள்
காயும் முன்னே
வேர்கள் பிடுங்குவதைப்
பார்த்துக் கொண்டிருக்குமா
விதைகள்.
ஓங்கிய உயரமும் 
அடர் கருப்புமென
அடையாளம்.
அரத்த வெள்ளம்
வடிந்த ஈரத்தில்
முளை கட்டுகின்றன
விதைகள்.
வடுக்களே
விதைகளாகும் காலம் முளைக்கிறது.
பனைகளும் முளைத்தன
நாடு முழுதும்.
கொஞ்ச காலத்தில்
பொடிப் பனைகள்
ஈனும் பருவத்தில்
குலையாய்க் தொங்கும்
ஈழம்.
கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு
மீண்டும் வரும்.

ஏர் மகாராசன்

புதன், 10 மே, 2023

ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கம் செய்திருக்கும் மலக்குழிக் கதையாடல் : மகாராசன்.


ஒரு காலகட்டத்தியச் சமூக அமைப்பில் கட்டமைக்கப்படுகிற ஒரு பெருங்கதையாடல், அச்சமூக அமைப்பில் உள்ள எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை; எல்லோருக்கும் உகந்ததாக அல்லது சமமாகப் பாவிப்பதும் இல்லை.

பன்மைத்துவம் நிரம்பிய ஒரு சமூக அமைப்பில் ஏதோ ஒரு தரப்பையோ அல்லது ஒரு சில தரப்பினரையோ தான் அடையாளப்படுத்தும்; கண்டுகொள்ளப்படாத தரப்புகள் ஏராளமாகவும் இருக்கும். ஆயினும், அந்தப் பெருங்கதையாடல் சமூகத்தில் எப்பொழுதெல்லாம் புழங்கப்படுகிறதோ அல்லது முன்னெடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பெருங்கதையாடலுக்கு நிகரான/இணையான/எதிரான/மாற்றான கதையாடல்கள் எழுப்பப்படுவதும்; கட்டமைக்கப்படுவதும் நேர்வதுண்டு.

அதாவது, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் கதையாடல்களும், எதிர்க் கதையாடல்களும், மாற்றுக் கதையாடல்களும் பன்மைத்துவச் சமூக அமைப்பில் எல்லாக் காலங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இராமாயணப் பெருங்கதையாடலுக்கு நிகரான/எதிரான/மாற்றான/ தலைகீழ்க் கதையாடல்களும் இந்திய நிலப்பரப்பெங்கும் பல்வேறு வடிவங்களில் இன்னும்கூட வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. அதேபோலத்தான், மகாபாரதக் கதையாடல்களும், சிலப்பதிகாரக் கதையாடல்களும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன.

பன்மைத்துவச் சமூக அமைப்பில் இவ்வாறுதான் பல பெருங்கதையாடல்கள் பல்வேறு வடிவங்களில் உருவாகி வந்திருக்கின்றன. 

விடுதலை சிகப்பியின் மலக்குழிக் கவிதைகூட, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் இன்னோர் எதிர்க் கதையாடலின் நீட்சிதான். பகடியால் ஒரு பெருங்கதையாடலைக் கவிதையால் எதிர்க் கதையாடலை முன்வைத்திருக்கிறார் அவர். 

ஒரு பெருங்கதையாடலை வெளிப்படுத்துவதற்கு உள்ள அத்தனை உரிமைகளும், எதிர்/மாற்றுக் கதையாடல்களை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அந்தவகையில், ஒரு கதையாடலை வெளிப்படுத்துவதற்கு யாவருக்கும் உரிமை உண்டு. சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அடிப்படை உரிமையும்கூட. அதேபோல, ஒரு கதையாடலை சட்டரீதியாக எதிர்ப்பதும்கூட சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும்  உரிமையும்கூட. அதாவது, கருத்துச் சுதந்திரம் இருப்பதைப்போல, அந்தக் கருத்தை எதிர்ப்பதற்கும் சட்ட வாய்ப்புகளே அதற்கான உரிமைகளை வழங்கி இருக்கின்றன. 

விடுதலை சிகப்பியின் மலக்குழி பற்றிய கதையாடல் ஓர் எதிர்க்கதையாடலாக இருப்பதைப் போலவே, கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பதியப்பட்டிருக்கும் அவதூறு வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். 

மேட்டிமையும் அதிகாரமும் சாதிய ஏற்றத்தாழ்வும் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலை எதிர்க்கத் துணிந்திருக்கும் மலக்குழிக் கதையாடல், உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலாகும். உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலை வெளியிடுவதற்கான குறைந்தபட்ச கருத்து சுதந்திரத்தைக்கூடப் பறிப்பது சனநாயக விரோதமானதுமாகும்; கண்டிக்கத்தக்கதுமாகும்.

இந்நிலையில், அதிகாரம் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலைப் பகடியாக்கம் செய்து தலைகீழாக்கம் செய்திருக்கும் விடுதலை சிகப்பியின் கதையாடலை ஆதரிக்கிறோமோ இல்லையோ அல்லது உடன்படுகிறோமோ இல்லையோ, விடுதலை சிகப்பி போன்றோரின் அனைவரின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாக நிற்பதே சனநாயக அறமாகும். 

விடுதலை சிகப்பிக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசிய இனத்தின் - உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட தரப்பின் அனைவரது கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாகவே நாம் நிற்போம்.

ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
10.05.2023.

செவ்வாய், 9 மே, 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகக் குறுக்கிப் பார்த்தல் கூடாது :மகாராசன்



தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 


தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.


தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 


இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும்.  இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.


ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.


தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.


தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 


ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

09.05.2023

வியாழன், 4 மே, 2023

யாத்திசை - திரைப்புனைவும் வரலாற்று நுண் உணர்வும் : மகாராசன்


தமிழர் வரலாற்றைக் கலைப் படைப்பாக்கும் பெருமுயற்சியில் யாத்திசை திரைப்படமானது முன்களத்திற்கு வந்திருக்கிறது.

யா எனில் தெற்கு என்பது பொருள். யாத்திசை எனில், தென்திசை என்பது பொருள். தமிழ் நிலத்தின் தென்திசையில் நிகழ்ந்த அதிகார முரண்களைப் பேச வந்திருக்கிறது யாத்திசை எனும் திரைப்படம். 

அதிகாரத்தை நுகரத் துடிக்கும் ஒரு தரப்புக்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் இன்னொரு தரப்புக்குமான பகையும் போரும் வெற்றியும் தோல்வியும்தான் யாத்திசை படத்தின் திரைகதைக்கருவும் களமும் ஆகும்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் நிகழ்வதாகக் காட்சி மொழியில் விரியும் கதையானது, பாண்டிய மரபின் இரணதீர பாண்டியருக்கும், சோழ நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதான எயினக் குடிக்குமான அதிகாரச் சண்டையை வரலாற்றுப் புனைவாக விவரித்திருக்கிறது.

பாண்டியர்கள் சோழநாட்டைக் கைப்பற்றியபோது, சோழ நிலத்திலிருந்த எயினக் குடிகள் பாலைநிலத்திற்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். பாலை நிலத்தில் வேட்டைச் சமூக வாழ்வியல் நெருக்கடிக்குள் உழன்று தவிக்கும் எயினர்கள், மீளவும் தங்கள் நிலத்தையும் அதிகாரத்தையும் அடையத் துடிக்கிறார்கள். தமது வருங்காலத் தலைமுறை இந்த வாழ்வை அனுபவிக்கக் கூடாது எனக் கருதும் எயினக் குடியின் கொதி என்பான், தமது குடிகளை இரணதீரப் பாண்டியனுக்கு எதிராகப் போர் செய்திடத் தயார்படுத்துகிறான். அந்தவாறே, சோழ நிலத்திலிருக்கும் பாண்டியரின் கோட்டையைக் கைப்பற்றுகின்றன எயினப் படைகள். இந்நிலையில், பதுங்கியிருக்கும் சோழர்களின் படை உதவியைப் பெறமுடியாத நிலையில், பெரும்பள்ளிகளின் பெருந் துணையோடு பாண்டியப் படைகளின் சுற்றிவளைப்பில் சிக்குண்டு போகிறது கொதியும் எயினப் படைகளும். 

இரு தரப்பும் போர்க்கள உயிர்ப்பலியை விரும்பாத நிலையில், இரணதீரப் பாண்டியனும் கொதியும் தனியர்களாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். தனியர்களாகச் சண்டையிடுவோரில் எவர் வெல்கிறார் என்பதே திரைப்படத்தின் உச்சமும் முடிவும். களத்தில் எயினக் குடியின் கொதியைத் தோற்கடித்துக் கொன்று விடுகிறான்; பாண்டிய அதிகாரத்தை நிலைநிறுத்துகிறான் இரணதீரப் பாண்டியன் என்பதாகப் படம் நிறைவடைகிறது.

படத்தில் வரும் கதைமாந்தர்கள், நடிப்புப் புலப்பாடுகள், போர்க்களக் காட்சிகள், களப்பலிகள், போர்ச் சடங்குகள், அதிகாரக் கட்டுமானங்கள், காட்சிப்படுத்திய விதங்கள், பின்னணி இசை, நடனங்கள், கதைக் களங்கள், கதைத் தொடர்ச்சி, உரையாடல்கள் யாவும் திரைமொழியில் ஒருவகையான புதிய புதிய அனுபவங்களைத் தந்திருக்கின்றன. வழக்கமான வணிகத் திரைப்படப் பாணியிலிருந்து விலகிய ஒரு புதிய திரைப்பாணியை யாத்திசை காட்டியிருக்கிறது. இதுபோன்ற கலைப்படைப்பாக்க முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை; பாராட்டப்படவேண்டியவை.

வரலாற்று நிகழ்வைப் பேசியிருப்பதில் நிறைய திரிபுகளும் விடுபடல்களும் குறைகளும் இருப்பினும், பாண்டிய நிலப்பரப்பையும், பாண்டியர்களின் வரலாற்றையும், சிறு சிறு குடிகளின் வரலாற்று இருப்பையும் திரைக்கலைக்குள் கொண்டுவந்திருக்கும் யாத்திசை திரைப்படத்தைத் தமிழர்கள் வரவேற்றுப் போற்றிட வேண்டும்; துணை நிற்க வேண்டும். 

ஏனெனில், தமிழர் மரபின் பாண்டிய வரலாற்றை உள்ளபடித் தேடிப்பார்க்கும் தூண்டலை இப்படம் தந்திருக்கிறது என்பது மட்டுமல்ல; தமிழர் வரலாற்று நுண் உணர்வுகளையும் இப்படம் தந்திருக்கிறது. ஆகையாலே, யாத்திசை தமிழர் மரபின் ஆகச் சிறந்த கலைப் படைப்பாகவே மிளிர்கிறது. அதேவேளை, இந்தப் படத்தை முன்வைத்த வரலாற்றுத் தரவுகள் குறித்த விமர்சனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

வரலாற்று நிகழ்வுகளைப் புனைவாக்கும்போது, குறிப்பாகக் காட்சி மொழியில் புனைவாக்கும்போது வரலாற்றுத் திரிபுகள் நேர்ந்திடக்கூடாது. மொழி, நாகரிகம், வாழ்வியல், கலையறிவு, நாகரிகம், போர்நிகழ்வுகள், பண்பாடு போன்ற தனித்துவங்களைத் தரவிறக்கம் செய்திடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது கலைப்படைப்பாளர்கள் கவனிக்க வேண்டிய கூறுகள்.

கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தமிழர் வாழ்வியலும், உடல், உடைத் தோற்றப் புலப்பாடுகளும், போர்நெறிகளும் மிக வளர்ச்சி அடைந்த நாகரிக அடையாளங்களைக் கொண்டிருப்பவை. கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகான காலத்திலேயே நாகரிக வாழ்வியலும் தமிழர் அடையாளத் தோற்றப்பாடுகளும் பண்பட்ட நாகரிகத் தோற்றத்தைக் கொண்டிருந்தவை என இலக்கிய இலக்கணச் சான்றுகள் நிறையக் காட்டுகின்றன. ஆகையால், தமிழரின் உடலியல், உடை, முகத் தோற்றப்பாடுகள் குறித்து இனிவரும் கலைப்படைப்புகளில் கவனம் கொள்ள வேண்டும்.

படத்தில் வரும் பழந்தமிழ் வழக்குகள் திரைமொழியில் தனித்துவ முயற்சி. பழந்தமிழ் வழக்குகளைத் திரை உரையாடலுக்குள் கொண்டுவந்தமைக்குப் பாராட்டுகள். அதேவேளை, இது வலிந்து புனைந்ததாகவே படுகிறது. தமிழரின் மொழி வழக்கு இரண்டு தன்மைகளைக் கொண்டிருப்பதாகும். அன்றாட வாழ்வியலின் பேச்சு வழக்கு ஒன்று. பேச்சு மொழிவழக்கு என்பதும் மொழியின் ஒரு தனித்த அடையாளம். அதேபோல, எழுத்து வழக்கு என்பதும் இன்னொரு வகை. 

பேச்சின் கூறுகளை எழுத்தாக்கும்போது அது எழுத்து வழக்கு எனும் தனித்த வழக்கைப் பெற்று விடுகிறது. பேசும்போது எழுத்து வழக்காகவோ, எழுதும்போது பேச்சு வழக்காகவோ புழங்குவது தமிழர் வழக்கல்ல. இதைத்தான் நாடக வழக்கு(எழுத்து மரபு) எனவும், உலகியல் வழக்கு(பேச்சு மரபு) எனவும் இலக்கண நூல்கள் வேறுபடுத்திச் சுட்டுகின்றன. அதாவது, பேச்சு வழக்கை இயல்பு வழக்கு எனவும், எழுத்து வழக்கைச் செய்யுள் வழக்கு எனவும் சுட்டுவர். 

படத்தில் இயல்பு வழக்கான பேச்சு வழக்கையே பயன்படுத்தியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டுக் காலத்திலேயே புழங்கிய திருந்திய பேச்சு வழக்குகள் இப்போதும்கூட புரியக்கூடியவைதான். படத்தில் வரும் பழங்காலப் பேச்சுகளுக்கு சங்ககாலத்தில் நிலவிய எழுத்து வழக்குகளைப் பயன்படுத்தியிருப்பதில் நிறையக் கால இடைவெளியும், புரிந்துகொள்வதில் இடைவெளியும் ஏற்படுகின்றன.

படத்தில், பாலைநிலக் குடியாக எயினர்கள் காட்டப்படுகிறார்கள். பெரும்பள்ளிகள் பாண்டியர்களின் துணைப்படையினராகக் காட்டப்படுகிறார்கள். பாண்டிய மரபின் இரணதீரப் பாண்டியனுக்கு மட்டும் குடி அடையாளம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும், பாண்டியர்கள், பெரும்பள்ளிகள், எயினர்கள் போன்றோரின் அடையாள நுண் அரசியலை உள்பொதிந்தே வைத்திருக்கிறது யாத்திசை. அதாவது, தமிழரின் மூன்று பெரும் சமூகங்களைக் குறியீடுகளாக அடையாளப்படுத்தியிருக்கிறது.

தமிழர் வரலாற்றைக் குறித்தும், யாத்திசை குறித்தும் நிறைப் பேச இருக்கிறது. அதேவேளை, நிறையவும் பேசவைத்திருக்கிறது யாத்திசை.

பழங்கால வரலாற்று நிகழ்வுக்குள் திரைப் புனைவின் வழியாக அழைத்துச் சென்றிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது யாத்திசை. யாத்திசைப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அன்பு நண்பர் இயக்குநர் தரணி ராசேந்திரன் அவர்களுக்கும், படக் குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்.

ஏர் மகாராசன், 
மக்கள் தமிழ் ஆய்வரண்.
04.05.2023


 

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

உழைப்பும் ஓய்வும் உறக்கமும் - மகாராசன்


உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் 8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் தேவைப்படுகிறது. இதில், ஓய்வு என்பதும், உறக்கம் என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வேறுவேறானது.

8 மணிநேரம் உழைப்பில் ஈடுபடும் ஒரு மனிதருக்கு 8 மணிநேர ஓய்வும், 8 மணிநேர உறக்கமும் இருந்தால் மட்டுமே, உற்பத்தியிலும் உழைப்பிலும் நிறைவாகவும் நீடித்தும் ஈடுபட முடியும்.

12 மணிநேர வேலை என்பது, உழைப்புச் சுரண்டல் மட்டுமல்ல; உழைப்பில் ஈடுபடும் மனிதர்களின் ஓய்வையும் உறக்கத்தையும் பறிக்கின்ற கொத்தடிமை முறைக்கு வழிவகுக்கும். அந்தக் கொத்தடிமை உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்ததுதான் மேநாள் புரட்சி.

உலகப் பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்றுத்தந்த 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் படுபாதகச் செயலை மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்தச் சட்ட மசோதாவை, தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

அறிஞர் அண்ணாவின் ஓய்வு எனும் கட்டுரையை, அண்ணாவின் வாரிசுகள் படித்திருந்தால், 12 மணிநேர வேலைக்கான சட்ட மசோதாவை இயற்றியிருக்க மாட்டார்கள்.

ஏர் மகாராசன்
21.04.2023.
*
பிற்சேர்க்கை:

அறிஞர் அண்ணா எழுதிய 'ஓய்வு' எனும் கட்டுரை.

"ஓய்வு நேரம்' கிடைத்தால்தான் உழைத்து அலுத்தவன், தனது அலுப்பைப் போக்கிக் கொள்ள முடியும்; மறுபடியும் பாடுபட, அலுப்புப் போக வேண்டும்.

வேலையே இல்லை, நாளெல்லாம் வாளாயிருக்கிறான், ஓய்வு அல்ல அது - பயன்படுத்தப்படவில்லை; கொடுமை! வேலை இருக்கிறது - வேலை செய்யாமல் வாளாயிருக்கிறான் - ஓய்வு அல்ல - சோம்பல்!

வேலை இருக்கிறது - வேலை செய்த அலுப்பினால் வேலை நேரம் முடிந்ததும், கட்டை போலக் கீழே விழுகிறான் - தூங்கி விடுகிறான் - ஓய்வு அல்ல இதுவும்: சோர்வு.

ஒரு வேலையும் செய்ய வேண்டிய நிலையில் இல்லை, எப்போதும் சும்மா இருக்கிறான்; இதுவும் ஓய்வு அல்ல, இது ஒய்யாரம்!

ஓய்வு என்பது ஒரு உரிமை; வேலை செய்தவன், தன் அலுப்பைப் போக்கிக் கொண்டு, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்று, மறுபடியும் வேலையிலே ஈடுபடுவதற்கான மாமருந்து.

ஓய்வு நேரம் என்பது வேலை செய்யாதிருக்கும் வேளை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடியதல்ல. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வசதியைக் கொள்வதிலே ஈடுபடுவதே வேலை. அந்த வேலை முடிந்த பிறகு அவன் மனம் ஒரு நிம்மதி பெற்று, தெம்பு பெற வேண்டும். அந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதே ஓய்வு. காலை முதல் மாலை வரை பாடுபட்ட தொழிலாளி, இரவு பிறந்ததும் அயர்ந்து தூங்குகிறான், அதனால் அவனுடைய உடல் அலுப்பு நிச்சயம் குறையும்; ஆனால் உள்ளத்திலே ஏறிவிட்டுள்ள பாரம், சோர்வு - குறையுமா? குறைந்திட வழி இல்லை; ஏனெனில், அதற்கான வழி தேடிடவில்லை அவன், செயலற்றுக் கிடக்கிறான்; தூக்கம். ஆனால், ஒய்வு என்பது தூக்கத்தால் உடல் அலுப்பைப் போக்கிக் கொள்வது மட்டுமல்ல; உள்ளத்திலே உள்ள சோர்வினைப் போக்கிக் கொள்ள அவன் உலவுவது, உரையாடுவது, பாடுவது, ஆடுவது, ஆடல் காண்பது, பாடல் கேட்பது, குழந்தைகளுடன் கொஞ்சுவது, இவ்விதமான ஏதாவதோர் செயலில் ஈடுபாடு கொண்டாக வேண்டும்.

வேலை செய்த அலுப்புப் போக அவன் தூங்கி எழுந்திருப்பது பல மணி நேரம் ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தைச் சில மணி நேரம் நிறுத்திவைப்பது போன்றதே.

இயந்திரத்துக்குக் கூடத் தூக்க நேரம் இருக்கிறது. வேலை செய்யாத நேரம் மனிதன் உழைத்த அலுப்பினால் தூங்குவது, இயந்திரம் சில நேரம் வேலை செய்யாமல் இருப்பது போன்றதே.

தூக்கத்தால் மட்டும் பாட்டாளியின் மனத்திலே உள்ள சோர்வு போய்விடுவதில்லை.

சிறிது நேரம் உறங்கிக் கிடப்பதால் மட்டும் இயந்திரம் வேலை செய்ததால் ஏற்பட்ட "தேய்வு' இருக்கிறதே, அது போய்விடாது, புது வலிவு வந்திடாது.

உழைப்பினால் ஏற்பட்டுவிடும் உள்ளத்துத் தேய்வு இருக்கிறதே, அதனைத் தூக்கத்தினால் மட்டும் போக்கிட முடியாது - மனத்துக்குத் தெம்பு தரத்தக்க விதமாக அவன் சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும்; ஓய்வாக!!

உழைத்த அலுப்பினால் வீடு வந்ததும் படுத்து உறங்கி விடும் பாட்டாளி விடிந்ததும் மீண்டும் இயந்திரமாகிறான் - மனத்திலே "தேய்வு' வளர்ந்தபடி இருக்கிறது; குறைந்திட வழி இல்லை. அங்ஙனமின்றி உழைத்தலுத்தவன், உடனடியாக உறக்கத்தை மட்டுமே தேடிக் கொள்ளாமல், நண்பர்களுடன் பேசி மகிழ்வது, குழந்தைகளுடன் விளையாடுவது என்ற ஏதேனும் ஓர் பொழுதுபோக்கிலே ஈடுபட்டால், உடல் அலுப்பு மட்டுமல்ல, உள்ளத்திலே மூண்டுவிட்ட அலுப்பும் குறையும், அப்போது அவன் புதிய உற்சாகம் பெறுகிறான்.

மாலை ஆறு மணி வரையில் மாடாக உழைத்தாச்சே, பேசாம போய்ப் படுத்துத் தூங்குவதை விட்டுவிட்டு, விடிய விடியக் கண் விழித்துக் கொண்டு தெருக்கூத்துப் பார்த்துவிட்டு வந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகும்?

என்று கனிவுடன்தான் கேட்கிறாள் மனைவி. ஆனால் பகலெல்லாம் பாடுபட்டவன், இரவு கண்விழிப்பது உடலுக்குச் சிறிதளவு கெடுதலைக் கூடத் தரக்கூடும் என்றாலும், கூத்துப் பார்த்ததில், கண்ணுக்கும் காதுக்கும் விருந்து பெற்றான், மகிழ்ச்சி பெற்றான், மற்றவர்கள் மகிழ்ந்திருக்கக் காண்கிறான்; சிரித்தான், மற்றவர்கள் சிரித்திடக் கண்டான், இதிலே அவனுக்குக் கிடைத்த களிப்பு இருக்கிறதே, அது அவனுடைய மனத்திலே மூண்டு கிடந்த சோர்வுச் சுமையைக் குறைத்துவிட்டது. மனம் துள்ளிடுகிறது.

இதுதான் தம்பி! ஓய்வு. இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துத் தூங்குவது மட்டும் அல்ல,

கூத்துப் பார்ப்பதிலேதான் இந்த விருந்து கிடைத்திடும் என்பதில்லை. இரைச்சல் மிகுந்த தொழிற்சாலையையும் அதிலே பரபரப்புடன் சுழன்று கொண்டிருக்கும் ஆட்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன கண்களுக்கு, ஒரு சிங்கார ஓடை, அதிலே பூத்துக் கிடக்கும் மலர், கரையினிலே ஓங்கி வளர்ந்த மரம், அதிலே குலுங்கிடும் கனி, அந்தக் கனியைக் கொத்திடும் கிளி, அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அணில், இத்தகைய காட்சியைக் கண்டால், கண்ணும் கருத்தும் விருந்து பெறும், சோர்வு பெருமளவு நீங்கிடும்.

கவலை தோய்ந்த முகத்துடன், தொழிற் கூடத்தில் தன்னோடு இருந்திடும் பாட்டாளிகளைக் கண்டு கண்டு அவன் மனத்திலே குடிகொண்டு விடுகிறதே ஒரு கவலை, அது அவன் வெண்ணிலவு ஒரு மேகத்திலிருந்து மற்றொன்றுக்கு ஊர்ந்து செல்வது போன்ற காட்சியைக் கண்டால் சிறிதளவேனும் கலையத்தான் செய்யும். காது குடைந்திடும் ஒலியைப் பொறிகளிலிருந்து அதனைக் கேட்டதால், உள்ளத்துக்கு ஓர் அலுப்பு; அந்த அலுப்பு, ஒரு தெம்மாங்கு கேட்டிடப் பெருமளவு குறைந்து போகும்! இந்தவிதமான வாய்ப்புகளைப் பெற்றிடுவதே ஓய்வு - வேலை செய்யாமலிருப்பது, அல்லது தூங்கிக் கொண்டிருப்பது அல்ல.

வயிற்றுக்காகப் பாடுபடுவதைவிடக் கடினமானதுதான், மலை உச்சி ஏறுவது, ஆற்றிலே நீந்துவது போன்றவை; ஆனால், அவை மனத்திலே உள்ள சோர்வைப் போக்கிடும் மாமருந்து; மிக மிகத் தேவை.

வேறு வேலையே செய்யாமல், பொழுதினை ஓட்டிட வேட்டையாடுவது ஓய்வு அல்ல; வேலை செய்தான பிறகு, மனத்துக்குத் தெம்பு பெற, புறாவினைப் பறக்கவிட்டுப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறானே அது ஓய்வு!

உழைத்துத்தான் வாழ வேண்டும் - வாழ்வு, உரிமை; உழைப்பு, கடமை! ஆனால் உழைத்தும் வாழ முடியவில்லை என்றால், அது சமூகத்தில் உள்ள கொடுமையைக் காட்டுகிறது. வாழ்வதற்கு உழைக்கிறான், பிறருக்கு வாழ்வு அளிக்கவும் உழைக்கிறான். ஆனால், அந்த உழைப்பே அவனை உருக்குலையச் செய்து, வாழ்வை நுகரவே முடியாதபடி ஆக்கிவிடுமானால், அவன் உழைத்து என்ன பயன்?

தண்டவாளத்தின் மீது சென்றிடும் இரயில், போகும் போதே தண்டவாளத்தையே தேய்த்துவிடுமானால், பிறகு பயணம் எப்படி நடந்திடும்? அதுபோலவே, உழைத்து உருக்குலைந்து போனால், வாழ்க்கையிலே இன்பம் பெற முடியாத நிலையினனானால், உழைப்பு அவனைப் பொறுத்த மட்டில், உயிர் குடிக்கும் நஞ்சாகியது, உழைத்த பிறகு அவன் வாழ்வை அனுபவிக்கும் நிலையினனாகவும் இருந்திட வேண்டும்.

ஓவியத்தைத் தீட்டி முடித்ததும், அவன் கண்கள் அவிந்து போய்விடும் என்றோர் விபரீத முறை இருப்பின் ஓவியக் கலையிலே எவர் ஈடுவடுவர்?

உழைத்தோம், பிழைத்தோம், உறுதிப்பாடும் இல்லை யெனில், உழைத்திடும் உள்ளம் எங்ஙனம் ஏற்பட முடியும்?

உழைப்பு, தம்பி! உள்ளத்தையும் உடலையும் ஒரே அடியாக முறித்துவிடக் கூடியதாக இருந்துவிடின், உலகப் பெருங்கதை சோகச் சிறுகதையாகிப் போகும் அல்லது பயங்கரப் படுகொலைக் கதையாக முடிந்திடும்.

உழைத்ததால் ஏற்பட்ட உடற் சோர்வு போக, உண்டி, உறையுள், உறக்கம் தேவை; உழைத்ததால் ஏற்பட்ட உள்ளச் சோர்வு போக ஓய்வு, பொழுதுபோக்குத் தேவை.

உழைத்ததால் செலவானது போக, ஓய்வினை அனுப விக்கத்தக்க அளவுக்கு வலிவு மிச்சம் கைவசம் இருக்க வேண்டும். வாழ வழி தேடுவதிலேயே கால முழுவதும், வலிவு முழுவதும் செலவாகிப் போய்விடுமானால், உருக்குலைவு ஏற்பட்டு விடுமானால், தோகை விரித்ததும் செத்துவிடும் மயிலாவான்; அரும்பு மலர்ந்ததும் அறுந்துபடும் கொடியாவான்; பயன் காணான், பயனளித்திடவும் மாட்டான்.

ஆகவே பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று; அடிப்படை நீதி.

ஆகவே அண்ணா! ஓய்வுபெற அங்கெல்லாம் போகின்றாய், அப்படித்தானே! என்று கேட்கிறாய் தம்பி; உணருகிறேன். ஆனால், நான் என் மனத்துக்கு மகிழ்ச்சி தேடிக் கொள்ள அல்ல, உழைத்திட வாய்ப்புப் பெற்று, வாழ்ந்திட உரிமை பெற்று ஓய்வும் சமூக நீதியும் பெற்று எங்கெங்கு உள்ளவர்கள் இன்புற்று வாழ்கின்றார்கள் என்பதனைக் கண்டறிந்து வந்து உன்னிடம் கூறிடும் நோக்குடனேயே பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.

ஓய்வு நேரம் - ஒய்வின் தன்மை ஆகியவற்றினைக் கொண்டு, ஒரு சமூகத்தின் நிலையை மதிப்பிடுகிறார்கள், அறிவாளர். பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கும் "ஓய்வு' இருக்கிறதே, அதனை நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள், நல்லறிவாளர்.

ஒய்வு நேரம் ஒவ்வோர் நாட்டில் ஒவ்வோர் காலத்தில் ஆங்கு அமைந்திருந்த இயல்புக்கு ஏற்றவிதமான வடிவமெடுத்திருந்தது.

வெற்றிமேல் வெற்றி பெற்றிட வீரப்போர் புரிந்து வந்த ரோம் நாட்டவர் உடற்கட்டுள்ளவர்கள். ஒருவருடன் ஒருவர் மறப்போர், வாட்போர் செய்து, ஆற்றலைக் காட்டிடும் வீர விளையாட்டுகளைக் காண்பதிலே மட்டுமல்ல, வீரர்கள் மிருகங்களுடன் போரிட்டு அவைகளைக் கொல்வது அல்லது அவைகளால் கொல்லப்படுவது என்ற "இரக்கமற்ற' விளையாட்டுக்களைக் காண்பதனை உல்லாசமளித்திடும் ஓய்வாகக் கருதினர்.

அறிவுச் செல்வத்தைப் பெற்றுத் திகழ்ந்த கிரேக்கர்கள், ஓய்வு நேரத்தைக் காப்பியம் என்ற தரம்பெற்ற புதிய நாடகங்களைக் காண்பதிலே, களிப்பதிலே, கருத்துப் பெறுவதிலே ஓய்வு நேரத்தைச் செலவிட்டனர்.

முரட்டுக் காளையுடன் போரிடுவது, ஸ்பெயின் நாட்டவர்க்கு வீரவிளையாட்டு; ஓய்வு நேரம் அதற்கே பெரும் பகுதி செலவிடப்பட்டது.

பழந்தமிழகத்தார் தமது ஓய்வு நேரத்தில், ஏறு தழுவுதல், மற்போர் போன்ற வீர விளையாட்டிலே செலவிட்டனர் என்று அறிகிறோம்.

கோழிச் சண்டை, கரடிச் சண்டை இவைகளை நடத்தி ஓய்வு நேரத்தில் பொழுது போக்கினர் இங்கிலாந்து நாட்டவர், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில்.

ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவதில், ஒரு நல்ல முறை அமைக்காவிட்டால், களியாட்டம், வெறியாட்டம், வீணாட்டமாகி, புதிய தெம்பு பிறப்பதற்குப் பதிலாக மனத்திலே போதையும், காட்டுணர்ச்சியும் கொந்தளிக்கச் செய்துவிடும்.

மேனாடுகள் பலவற்றிலே ஓய்வு நேரத்துக்காக என்று அமைக்கப்பட்டுள்ள நாட்டியக் கூடங்களும், சூதாட்டச் சாலைகளும், நல்லியல்பை வளர்ப்பனவாக உள்ளன என்ற உணர்வு இப்போது வலுபெற்று வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இவைகளிலே ஈடுபடுவோர் பெரும்பாலும் உல்லாசம் தேடிடும் பணம் படைத்தோரே - பெரும்பாலான நடுத்தர நிலையினர், காற்பந்து, கிரிக்கட், ஆக்கி போன்ற வீர விளையாட்டுக்களைக் காண்பதிலேயே பெரு விருப்பம் கொண்டுள்ளனர்.

குத்துச்சண்டை கண்டு களிப்பதனை, எழுச்சி தரத்தக்க பொழுது போக்காகக் கொண்டுள்ள அமெரிக்காவில் இதற்கெனப் பெரும்பணம் செலவிடப்பட்டு வருகிறது.

சென்ற திங்கள் க்ளே எனும் குத்துச்சண்டை வீரன், தன்னுடன் போட்டிக்கு நின்ற லிஸ்டன் என்பானை, ஒரே ஒரு குத்து கொடுத்துக் கீழே வீழ்த்தினான், விழுந்தவன் குறிப்பிடப் பட்ட நேரத்திற்குள் எழுந்திருக்கவில்லை. எனவே க்ளே வெற்றி வீரன் என்ற விருது அளிக்கப் பெற்றான். இலட்சக்கணக்கான டாலர்கள் குவிந்தன இந்தக் குத்துச்சண்டையின்போது. ஒரே விநாடி! ஒரே குத்து! குத்துச்சண்டை முடிந்தது! க்ளே பெரும்பொருள் பெற்றான் பரிசுத் தொகையாக.

க்ளே - லிஸ்டன் இருவருமே நீக்ரோக்கள்.

இவை போன்ற விளையாட்டுக்கள், காண்போருக்குக் களிப்பூட்டும்; வீர உணர்ச்சி தரும், அய்யமில்லை. ஆனால், புதிய கருத்துத் தந்திடுமா, கருத்துக்கு விருந்தாக அமையுமா என்ற கேள்வி பலமாக எழுந்து விட்டிருக்கிறது.

மற்ற நாடுகளிலே, ஓய்வு நேரத்தை எந்த வகையிலே செலவிட்டால், கருத்துக்கு இன்பம் கிடைக்கும் என்பது பற்றிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இங்கோ, தம்பி! ஓய்வு நேரம் என்பது, வாழ்வின் இயல்பை, தொழிலின் இயல்பைத் தரமுள்ளதாக்கிடும் என்ற உணர்வே பெறவில்லை. ஓய்வு என்பது வேலை செய்யாத நேரம் என்ற அளவிலேதான் அதற்கான இலக்கணம் இருந்து வருகிறது. ஓய்வு என்பது கருத்துக்கு விருந்து பெறும் ஓர் வாய்ப்பு என்ற நிலை அமையவில்லை; அமைத்திடுதல் வேண்டும்.

வறுமை மிகுந்த நாட்டிலே ஓய்வு நேரம் கிடைப்பதும் அதனை உள்ளத்துக்கு மகிழ்ச்சி தரத்தக்க விதமாகச் செலவிடுவதும் எங்ஙனம் முடியும் - வீண் பேச்சு - என்று கூறுவர், பலர்.

நீர்வீழ்ச்சி - சித்திரச் சோலை - ஆறு உற்பத்தியாகும் இடம் - மலை உச்சி - சிற்றாறு - புள்ளினம் எழுப்பிடும் பண் - மானினம் துள்ளிடும் எழில் - இவை பற்றிக் கூறிப் பொழுதுபோக்குக்காக இவைகளைக் கண்டு களித்திடுவது உண்டா என்று கேட்டால், கோபித்துக்
கொண்டு, தமது இயலாமையைக் காரணம் காட்டும் அதே அன்பர்களை, தம்பி! காஞ்சியில் காணலாம் கருடோற் சவத்தின்போது, தில்லை. திருவரங்கம், திருப்பதி. காளத்தி இங்கெல்லாம், காணலாம். பணம் கிடைக்கிறது செலவிட, கடனாகப் பெற்றதாகக் கூட இருக்கக் கூடும் அந்தப் பணம். இஃது ஓய்வுக்காக மேற்கொள்ளப்படுவது அல்ல, "புண்ணியம்' தேடிட!

இராமர் பல்லாங்குழி ஆடிய இடமும், சீதை மஞ்சள் அரைத்த இடமும், ஜடாயு வீழ்ந்த பள்ளமும், பீமன் சமையல் செய்த இடமும், காண்டீபம் பெற்ற இடமும், கல்லானை உயிர் பெற்ற இடமும் கருங்குருவிக்கு மோட்சமளித்த இடமும் இப்படிப்பட்டவைகளைக் காண்கின்றனர்.

இவைகளிலே இருந்துவந்த நம்பிக்கையின் அழுத்தம் போய்விட்டதாலும் இவைகள் என்ன அற்புதங்கள்! சந்திர மண்டலமே செல்லப் போகிறார்களாமே என்று அவர்களையு மறியாமல் வியப்பு அவர்களைக் குலுக்கி விடுவதாலும், இந்தப் புண்ணியம் தந்திடும் இடங்களைப் பார்ப்பதனால் முந்தைய சந்ததியினர் பெற்றதுபோன்ற உணர்ச்சியையும் இவர்களால் இன்று பெற முடிவதில்லை.

புண்ணியம் தேடிடும் பயணம் என்ற கருத்து இவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பதால், இயற்கையின் எழிலைக் கண்டு களித்திடவும் இவர்களால் முடிவதில்லை. தில்லையையும், திருப்பதியையும் கண்டுவிட்டு, சாத்தனூர் அணையையும் நெய்வேலியையும் பார்த்துவிட்டு, மாமல்ல புரத்தையும், மந்திரி வீட்டையும் கண்டுவிட்டு, "கதம்ப' உணர்ச்சி பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.

மிகச் சிலரால் மட்டுமே, தம்பி! இந்த விதமான பயணத்தையாகிலும் மேற்கொள்ள முடிகிறது. மிகப் பெரும்பாலோர் ஓய்வு நேரத்தின் அருமையினை உணர்ந்திடவும் வாய்ப்பின்றி, உழைத்து உருக்குலைந்து போகின்றனர், இங்கு.

பிற இடங்களில் உழைப்பு எந்த அளவு உருப்படியான வடிவம் கொள்ளுகிறது, வாழ்வை எந்த முறையில் செம்மைப் படுத்துகிறது, உள்ளத்திற்கு ஏற்படும் சோர்வு போக்கிக் கொள்ள ஓய்வு நேரத்தை எம்முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு மிகுதியாக. என் பயணம், எனது இந்த விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.

கண்டறிந்து கொள்பவைகளில் கருத்துக்கு விருந்தாகத் தக்கவைகளைப் பிறகு கூறிட முற்படுவேன்.

எனவே, தம்பி! நான் ஓய்வாகச் சென்றிருக்கிறேன் என்று கூடச் சொல்வதற்கில்லை, உனக்குக் கூறிடத்தக்க சுவையான சேதிகளைத் தேடிப்பெற்றிடவே சென்றிருக்கிறேன்.

நெடுந்தொலைவு என்கிறாயோ தம்பி! எத்தனை தொலைவானால் என்ன, என் கண்களில் உன் உருவம் தெரிந்த படிதான் இருக்கிறது.

அண்ணன்,
அண்ணாதுரை
8-8-65.

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

விடுதலை: கலை நுகர்வும் அரசியல் நுகர்வும் - மகாராசன்


தமிழ்த் தேசிய விடுதலைக்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்த - முன்னெடுக்கும் சமூக இயங்கியலைக் கற்பித்த வாத்தியார்களான தோழர்களுடன் கடந்த கால் நூற்றாண்டு காலமாய்ப் பயணித்து வந்திருக்கிறேன்.

விடுதலை வேட்கையோடும், அதிகார நிறுவனங்களின் கொடிய சித்திரவதைகளை எதிர்கொண்டும், பொதுவாழ்வுக்கென தம் வாழ்வை ஈகம் செய்தும் தமது சமூகப் பங்களிப்பைக் கொடுத்த 'தோழர்கள்' என்போரின் பொதுவாழ்வை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

சமூக அறிவை மக்களிடமிருந்து கற்றுக்கொடுத்தும்/கற்றுக்கொள்ளவும் வழிகாட்டிய ஆசான்களாகப் பல தோழர்கள் எம்மை வளப்படுத்தியிருக்கிறார்கள்.

அப்பேற்பட்ட தோழர்களின் பொதுவாழ்வுப் பங்களிப்பையும் வரலாற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்குக் கடத்துவதிலும் பரவலாக்குவதிலும் வெறும் வரலாற்று நூல்களும் ஆவணங்களும் பேச்சுகளும் மட்டும் போதாது. வெகுசனக் கலை ஊடகங்களின் வழியாகவும் அத்தகைய வரலாற்றுத் தேடலையும் சமூகப் பங்களிப்பையும் ஓரளவு விதைத்திட முடியும். 

அண்மையில் வெளிவந்திருக்கும் வெற்றிமாறனின் விடுதலை எனும் வணிகத் திரைப்படம், தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்த தோழர்களைப் பற்றிய வரலாற்றுத் தேடலை இன்றைய இளைய தலைமுறையிடம் உருவாக்கி இருக்கிறது. காட்சிமொழி எனும் கலை மற்றும் வணிகத் திரை ஊடகத்தின்வழி அரசதிகாரத்தின் அத்துமீறலும், அப்பாவி மக்களின் அல்லல் வாழ்வும், மக்களுக்காகப் போராடிய போராளிகளின் அரசியல் செயல்பாடுகளையும் பொதுவெளி உரையாடலுக்குள் பேசுபொருளாக்கி இருக்கின்றது விடுதலை எனும் படம்.

 ஒரு சமூக அமைப்பின் அரசியல் போக்கு எதுவாக முன்னெழும்புகிறதோ, அதையொட்டியே அச்சமூகத்தின் கலை வடிவங்களும், கலை வணிகமும் பேசுபொருளாகும் அல்லது பேசுபொருளாக்கும். அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்களும் செயல்பாடுகளும் தீவிரம் பெறும் இவ்வேளையில், அத்தகைய தமிழ்த் தேசிய அரசியலுக்கான சார்புக் குரலை விடுதலை திரைப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது. விடுதலை படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த ஆதரவும் அதைத்தான் உணர்த்தியிருக்கிறது. 

கலை நுகர்விலும் அரசியல் நுகர்வைக் கடத்த முடியும் என்பதற்கு விடுதலை திரைப்படமும் சான்றாகும். குறிப்பாக, தமிழ்த் தேசியப் போராளிகள் பற்றிய வரலாற்றுத் தேடலைக் குறியீடுகள் மூலம் விதைத்திருக்கிறது படம். 

விடுதலை திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள்.

அசுரன், கர்ணன் போன்ற படங்களின் வரிசையில் விடுதலை திரைப்படமும் தமிழ்ச் சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டும்.


ஏர் மகாராசன்

04.04.2023.

புதன், 29 மார்ச், 2023

வாழ்தல் நிமித்தங்கள் - மகாராசன்


வெயிலில் தோய்த்த 
மஞ்சளைப் பூசிக்கொண்ட பழுப்பெய்திய இலைகள்
காற்றில் நீந்தியபடி
சறுகென முத்தமிடுகின்றன
தூர் மண்ணில்.

அறுப்புக் கழனியில் 
சிந்தித் தப்பிய நெல்மணிகள் 
கோடை மழையொன்றில் 
ஊறிக்கிடந்து 
வெள்முளை காட்டிச் 
சிரித்துக் கிடக்கின்றன.

அலகு நோகக் கொத்தித் தின்று இரைப்பை நெப்பிய 
கவுதாரிப் பறவைகள்
பனந்தூர்க் குதுவல் மறைவில் 
சிறகை நீவிக்கொண்டிருக்கின்றன.

திக்குகளில் அலைந்து திரிந்து 
இறக்கை வலிக்கப் பறந்து வந்த 
சுள்ளான் குருவியொன்று
வெறுங்கிளையின் அம்மணத்தில் கால்விரல் கவ்வி அமர்ந்திருக்கிறது.

இளைப்பாற இடமிருந்தும்
களைப்பாற மனமில்லாமல்
இறகுகள் துவள 
சிறகை அடித்துப்
பறந்து கொண்டே இருக்கிறது 
வல்லூறு ஒன்று.

வெறுமை ததும்பிய வானத்தை
வெறித்துப் பார்த்தபடி
ஆறுதலாய்க் கிடக்கிறது 
தனிமைப் பொழுது.

கால்த்தடம் மறைந்த பாதையொன்று
மூதாதைகளின் பாடுகளைச் சுமந்து
நீண்டு கிடக்கிறது.

கண்ணீர் கசிய வட்டமிடும்
மனப் பறவையொன்று
தன்னைத் தொலைத்துக்கொண்டே
ஒவ்வொரு இறகாய் உதிர்த்துக்கொண்டிருக்கிறது.

வாழ்தல் நிமித்தங்களை
மென் சிரிப்புடன்
எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறது
ஊழிப் பெருங்காலம்.

ஏர் மகாராசன் 
29.03.2023.

வெள்ளி, 24 மார்ச், 2023

ஆரிய மரபின் நால் வருணப் பகுப்பு வேறு; தமிழ் மரபின் தொழில்குலப் பகுப்பு வேறு - மகாராசன்


ஆரிய வைதீக மரபினரின் நால் வருணக் கருத்தாக்கம் குறித்து விவரிக்கும் பாவாணர், ‘மக்களை நால் வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும், சத்திரியனுக்குச் செந்நிறமும், வைசியனுக்குப் பொன் நிறமும், சூத்திரனுக்குக் கருநிறமும் சார்த்திக் கூறி, நால் வரணப் பாகுபாட்டை ஏற்படுத்தி, பிராமணர் கல்வித் தொழிலையும், பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழில்களையும் வழிவழி செய்து வர வேண்டுமென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவர் என்றும், சூத்திரன் மேல் மூவர்க்கும், வைசியன் மேல் இருவர்க்கும், சத்திரியன் பிராமணருக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்றும், இது இறைவன் ஏற்பாடு என்றும், மேல் வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளர் என்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலும் கேட்கக் கூடாது என்றும், பிராமணனைக் காணின் மற்ற மூவரும் தத்தம் தாழ்வு நிலைக்குத் தக்கவாறு ஒதுங்கி நிற்க வேண்டுமென்றும் இறைவன் கட்டளை இட்டது போல் கற்பித்து விட்டனர். 

இச்சட்ட திட்டம் வடநாட்டில் விரைந்து முழுவதும், தென்னாட்டில் படிப்படியாகப் பேரளவும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. இங்ஙனம், இயற்கையாகத் தொழில் பற்றியிருந்த குலப் பாகுபாடு, நிறம் பற்றி மாற்றியமைக்கப்பட்டது’ என்கிறார்.

மேலும், ‘நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான 'விராட்' என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்னும் 'புருட சூத்தம்' இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்தில் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம்பொருள் கருத்தும் பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே. 

முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும், ஏனை மூன்றும் ஒன்றினொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும் இருப்பதுபோல், நால்வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரின் ஒருவர் தாழ்ந்தவரும், மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டியவருமாவர் என்பதும், நால் உறுப்பும் ஒரே ஆள் வடிவான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால் வரணமும் இறைவன் படைப்பு என்பதும் கருத்தாம். 

இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த் தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடையும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும் வேண்டும் என்பது உட்கருத்தாம். 

இனி, போருக்கு வேண்டும் தோள் வலிமை மறக் குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடியினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல் வலிமை பாட்டாளி மக்கட்கும் இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன்மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே உண்டென்பதும், ஆதலால் நால் வரணத்தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டும் என்பதும், நச்சுத் தன்மையான சூழ்ச்சிக் கருத்தாம்’ என்கிறார் பாவாணர். 

பிறப்பின் அடிப்படையிலான குலப் பாகுபாடுகளைத் தமிழர் மரபு ஏற்றதில்லை; ஏற்பதில்லை என்பதை,

     பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

     செய்தொழில் வேற்றுமை யான்

என, திருக்குறள் தெளிவுபடச் சுட்டியிருப்பதும் நோக்கத்தக்கது ஆகும். 

செய்த தொழிலாலும், செய்கின்ற தொழிலாலும்தான் தமிழர் மரபில் தொழில் குலங்கள் உருவாகி இருக்கின்றன. இந்நிலையில், வேளாளன், வணிகன், அரசன், அந்தணன் என்பதே இயற்கையான வரலாற்று முறைப்பட்ட நால் வகுப்பு வரிசை எனும் வகையில் பாவாணர் விளக்கப்படுத்தும் கீழ்வரும் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

‘எல்லார் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையாத உணவை விளைவிப்பதனாலும், நிலையாகக் குடியிருந்து விளைவில் ஆறில் ஒரு பங்கைக் கடமையாக விறுத்து அரசை நிலை நிறுத்துவதனாலும், போர்க்காலத்தில் படைஞனாகிப் பொருது வெற்றி உண்டாக்குவதனாலும், இரப்போர்க்கு ஈந்து துறப்போர்க்குத் துணையாய் இருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும் தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளர் எல்லாம் உழவனுக்குப் பக்கத்துணைவராகவே கருதப்பட்டனர். 

வெளிநாட்டு அரும்பொருள்களை எல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக்கு அவ்வப்போது பண உதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன், உழவனுக்கு அடுத்தபடியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரர்களாலும் பகைவராலும் அதிகாரிகளாலும் கடு விலங்குகளாலும் உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமல் காக்கும் அரசன், பணி வகையில் வணிகனுக்கு அடுத்தபடியாகவும், அதிகார வகையில் கண்கண்ட கடவுளாகவும் கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரிபவனும், ஆக்க வழிப்பாற்றல் உள்ளவனுமான அந்தணன், இறைவனுக்கு அடுத்தபடி தெய்வத்தன்மை உள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம், உழவு, வாணிகம், காவல், கல்வி என்னும் நால்தொழிலே தலைமையாகக் கொள்ளப்பட்டு எல்லாக் கைத்தொழில்களும் உழவுள் அடக்கப்பட்டன’ எனக்கூறும் பாவாணர், ‘நாகரிகம் முதிர்ந்து அறிவு வளர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் தமிழ்ப் பொருள் இலக்கண நூலார் கிளவித் தலைவரைத் தொழில் அடிப்படையில் நாற்பாலாக வகுக்கும்போது அறிவாற்றல், அதிகாரம், செல்வம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு கொடுத்து அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தலைகீழாக மாற்றி விட்டனர்’ என்கிறார். 

ஆயினும், ஆரிய வைதீகத்தின் நால் வருணப் பகுப்பிற்கும், தமிழரின் நால்வகைத் தொழில் பகுப்பிற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. தமிழரின் நால்வகைத் தொழில் பாகுபாடும், தொழில் குலங்களும் கற்பிதங்களாக உருவாக்கப்படவில்லை. சமூக வளர்ச்சிக் கட்டங்களில் நிலவிவந்த - சமூகத் தொழில் உற்பத்திக் கட்டங்களில் உருவான தொழில் அமைவுகளின் அடிப்படையில்தான் தொழில் குலங்களும் - தொழில் பாகுபாடும் உருவாகி இருக்கின்றன. 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

ஞாயிறு, 19 மார்ச், 2023

புதிய பாடத்திட்டம்: மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடுகிறதா? : மகாராசன்.


அண்மையில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான +2 மற்றும் +1 அரசுப் பொதுத் தேர்வுகளில் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை; தேர்வெழுத வரவில்லை என்கிற தகவல் தற்போது சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாகி இருக்கின்றது. 

மிகப்பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. மாணவர்களின் சமூகப் பொருளாதார மற்றும் குடும்ப நிலைமைகள், குடும்ப வருவாய்க்காகப் பொருளாதார உழைப்பில் ஈடுபடுதல், குடும்ப உறுப்பினர்களின் அறியாமைச் சூழல், பெற்றோர்களை இழந்திருத்தல், மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கம், சமூகக் குற்றவாளிகளுடன் சேர்க்கை, செல்பேசிப் பயன்பாடுகள், சமூக ஊடகங்களில் அதிகப்படியான புழக்கம், நுகர்வு வெறிக் கலாச்சாரம், லும்பன்கள் எனப்படும் உதிரிக் கலாச்சார மனப்போக்கு, அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு என, பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகம் மையமிட்டவை.   

இவை போன்றோ அல்லது இன்னும் பிறவோ நிறைய இருப்பினும், எல்லாத் தரப்பினராலும் கவனிக்கத் தவறுகிற அல்லது கவனிக்க வேண்டிய கல்விசார்ந்த காரணிகளும் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களைக் கல்விச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கும் கல்விசார் அகக் காரணிதான் என்ன?

பொதுவாக, கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் அடைவுகளைப் பெற வைப்பதற்கான கற்பித்தல்- கற்றல் செயல்பாடுகள்தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத் தான் கல்விசார் கலைத்திட்டமானது / கல்வித் திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு உகந்த, பெருவாரி மாணவர்களைப் பங்கேற்கிற வகையில்தான் கடந்த காலத்தியக் கல்வித்திட்டங்கள் அமைந்திருந்தன.

ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாக, அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் விதமாக அமைந்திருந்தன. குறிப்பாக, கல்வி கற்கும் மாணவர்களை மூன்று வகைப்பட்ட தன்மையில் வகைப்படுத்துவர் கல்வி உளவியலாளர்கள். அதாவது, மீத்திறன் மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என மூன்று வகைப்பட்ட மாணவர் தரப்பினர் கல்விச் சூழலுக்குள் இருப்பர். 

மேற்குறித்த மூன்று தரப்பினரையும் மனதில் வைத்துக்கொண்டு தான் - அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறுதான் கல்வித்திட்டப் பாடப்பொருண்மைகள், கற்பித்தல் பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு பாடத்திலும் குறைவான அளவுக்கே பாடப்பொருண்மைகள் வைக்கப்பட்டு, கற்றல் பயிற்சிகள் நிறைய அளிக்கப்பட்டன. இதனால், மீத்திறன் மாணவர்களும், சராசரி மாணவர்களும், மெல்லக் கற்போரும் கற்றல் அடைவுகளின் குறைந்தபட்ச எல்லைகளைக் கடந்து உயர்கல்விக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, மூவகைப்பட்ட மாணவத் தரப்பினரையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா? எனச் சந்தேகிக்கப்பட வைத்திருக்கிறது. புதிய பாடத்திட்டம் எனும் பெயரில் மிக அதிகப்படியான பாடப் பொருண்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருப்பதாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கருதும்படி ஆகியிருக்கிறது. சின்னஞ்சிறு குருவி தலையில் பூசணிக்காயைச் சுமக்க வைத்திருப்பதைப் போலத்தான் மாணவர்கள் உணர்கிறார்கள். அதேபோல, பத்து வண்டிகளில் ஏற்றும் பாரத்தை, ஒரே வண்டியில் ஏற்றி வைத்து, அந்த வண்டியை இழுத்துச் செல்லமுடியாமல் முக்கித் தவிக்கும் வண்டி மாட்டின் பரிதாப நிலையில்தான் ஒவ்வொரு ஆசிரியரும் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பாடத்திட்டத்தை நவீனப்படுத்துவதையும் தரவேற்றம் செய்வதையும் குறையாகவோ அல்லது குற்றமாகவோ கருத வேண்டியதில்லை. அதேவேளை, அது யாருக்கானது? என்ன தரமுடையது? என்ன பலமுடையது? என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது? எல்லோருக்குமான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே ஒரு தலைமுறைக்கான பாடத்திட்டம்/கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஆனால், புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.

அதாவது, இப்போதைய புதிய பாடத்திட்டப் பொருண்மைகளும், அதையொட்டிய தேர்வு முறைகளும் மீத்திறன் மிக்க மாணவர்கள் மட்டுமே அதிகப்படியாகப் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. சராசரி மாணவர்கள்கூட திக்கித் திணறிக் கற்கும் சூழலில்தான் இருக்கின்றனர். மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டப் பொருண்மைக்குள்ளும் தேர்வு முறைகளுக்குள்ளும் நுழைந்து நுழைந்து பார்த்தாலும் நுழையவே முடியாமல் அல்லல்படுகின்றனர். எதைப் எதைப் படித்தால் குறைந்தளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணாவது பெறலாம் என்கிற நிலைமைகள் இப்போது இல்லை. 

கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் வைத்திருக்க வேண்டிய பாடப் பொருண்மைகளை, பள்ளி மாணவர்களின் பாடப் பொருண்மைகளாக அதிகளவில் வைத்திருப்பதைப் பார்க்கும் மெல்லக் கற்கும் மாணவர்கள் ஒருவிதத் தயக்கத்தோடுதான் பள்ளி வகுப்புகளில் சேர்கின்றனர்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதை எதைப் படிக்க வேண்டும்? புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே அவர்களால் தேர்ச்சி பெறமுடியும்; இல்லையெனில் தோல்விதான் என்கிற நிலைமையை அவர்கள் அறிகிறபோது, மெல்ல மெல்ல அதிலிருந்து அந்நியப்படத் தொடங்குகிறார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களை, குறைந்தளவு மதிப்பெண் எடுத்தாவது தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. பாடங்கள் முழுவதையும் படிக்க வைத்தால்தான் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பாடங்கள் முழுவதையும் படிக்க வைக்க முடியாத சூழல்தான் ஆசிரியர்கள் முன்னிருக்கும் சவால்.

மெல்லக் கற்கும் மாணவர்கள், தம்மால் பாடங்கள் முழுமையையும் முற்றும் முழுதாகப் படிக்க முடியாது; இயலாது எனத் தெரிந்த பின்னரும், அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பல்வேறு பாடங்களில் நேரப் போகும் தோல்விகளை எதிர்கொள்வதற்கு அம்மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால், பள்ளிக்கும் வருவதில்லை; வகுப்புக்கும் வருவதில்லை; தேர்வுக்கும் வருவதில்லை எனத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர் அல்லது அந்நியப்படுத்திக்கொள்ள முனைந்து விட்டனர்.

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 9ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறித் தேறிய மாணவர்கள், 11ஆம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் இருக்கின்ற பாடநூல்களின் கனம், பாடப்பொருண்மை, கற்றல் கற்பித்தல் நெருக்கடிகள், குறைந்தளவுத் தேர்ச்சிகூடப் பெறுவதற்கு வழியின்மை போன்றவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட மெல்லக் கற்கும் மாணவர்களுக்குக் கல்வியிலும் கற்றலிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது.

புதிய கல்விச் சூழலில், மெல்லக் கற்கும் மாணவர்களின் இத்தகையத் தனிமைப்படுத்தலுக்கும் அந்நியப்படுத்தலுக்கும் மாணவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது; கூடாது. மாறாக, புதிய பாடத்திட்டக் கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் நோக்கிலேயே அமைந்திருப்பதனால்தான், மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் பங்கேற்புகள் குறைவாகவும் தனிமைப்பட்டும் அந்நியப்பட்டும் விலக்கி வைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால்தான், அதிகளவிலான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. ஒருகாலத்தில், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியை வைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையைப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் கையாளப்படும் சூழலில் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டியது கட்டாயமாகும்.

அதாவது, மீத்திறன் மாணவர்களுக்கு மட்டுமே உரியதாகப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்படாமல், மெல்லக் கற்கும் மாணவர்களையும் உள்ளடக்கியப் பாடத்திட்டப் பொருண்மைகளும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் கல்வித்துறை உடனடியாகச் செய்திடல் வேண்டும். இத்தகையச் சீரமைப்பில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்திரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும்.

கல்வித்திட்டச் சீரமைப்பின் முதற்கட்டமாக, எல்லா வகுப்புகளிலும் எல்லாப் பாடங்களிலும் பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய பிறகு, மறுபடியும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில் நிறைய உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையை இரத்து செய்து, 12ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வாக நடத்திட கல்வித்துறை நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். தேர்வு முறைகளில் வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) என்கிற ஒரு நடைமுறை இருந்து வந்தது. அந்த நடைமுறை புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின்போது நீக்கப்பட்டது. இதனால், ஒரு பாடத்தில் எங்கிருந்து கேள்வி கேட்பார்கள்? எத்தனை மதிப்பெண்கள் எந்தெந்தப் பாடங்களில் கேட்பார்கள்? எதைப் படிக்க வேண்டும்? புத்தகப் பயிற்சி வினாக்களில் (Book back Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? புத்தக உள்நிலையிலிருந்து (Interior Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? என்கிற வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) ஆசிரியருக்கும் மாணவருக்கும் தெரிந்தால் மட்டுமே அதற்கேற்றவாறு மூவகைப்பட்ட மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க முடியும். 

குறிப்பாக, மெல்லக் கற்கும் மாணவரையும் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில், தேர்ச்சி பெற இயலாத அல்லது தேர்ச்சி பெற வைக்க முடியாத சூழல் இருப்பதால் தான், அதிகளவு இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகையால், புதிய பாடத்திட்டத் தேர்வுமுறைகளில் உடனடியாக வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இம்முறை நடைமுறைக்கு வரும்போது மெல்லக் கற்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதற்கான வாய்ப்புகளும், அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் ஏற்படும். 

இவற்றோடு, ஆசிரியர்களைச் சமூகமும் கல்வித்துறையும் மாணவர்களும் அவமதிப்புக்கும் பாதிப்புக்கும் உள்ளாக்காத வகையில் அவர்களுக்கு முழுமையான பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். 

அலுவல் காரணங்களுக்காகவும் தரவுகள் பதிவேற்றங்களுக்காகவும் வெகு தீவிரமாகப் புழக்கத்திலிருக்கும் செல்பேசிப் பயன்பாடுகளை பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பதை உடனடியாகத் தடைசெய்திடல் வேண்டும். கற்றல் கற்பித்தல் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம்திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவுமான கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஓரளவுக்கேனும் கல்வித்துறை சீரமைய வாய்ப்பிருக்கிறது.

(கல்விச் சூழல் குறித்து இன்னும் நிறைய நிறையப் பேசவும் எழுதவும் உரையாடவும் செய்திட வேண்டும். கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும் எழுதவும் உரையாடவும் வேண்டிய நேரமிது. செய்திடுவோம். 

இக்கட்டுரைகூட, மெல்லக் கற்கும் மாணவர்களின் அந்நியப்படுதலை மட்டுமே முதன்மைப்படுத்தி உள்ளது. இன்னமும் இதைப்போன்ற கல்விசார் பிரச்சினைகள் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைத்தல் நன்றாம்.)

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.




புதன், 15 மார்ச், 2023

அறிஞர் அண்ணாவின் கபோதிபுரக் காதல் : அம்சம் மகாராசன்

புதுப்பொலிவுடன் உலகம் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறது. விழித்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிழைத்துக்கொள்வதற்காகத் தந்திர வித்தைகளை நடத்துகின்றன. 

சுதந்திரப்போக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதார்த்தம். இதில் மனிதர்கள் மட்டும் தன் இனத்தைச் சீரழிக்கும் இழி செயல்களைச் செய்து, அதற்குப் பெயர் பெண்மை, தாய்மை என்று மேலோட்டமான புனிதத்தன்மையைக்  கற்பித்துள்ளனர். 

மனம் பொருந்தாத துணைவனுடன் வாழவும் முடியாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்த காதலனை மறக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டு, ரசமற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மீது இயல்பாக இரக்கம்தானே வரவேண்டும். இல்லையென்றால், பெண் பெருமை கொள்ளும்படியான வேறு வாழ்க்கையைக் காண்பிக்க வேண்டும். 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காமவெறி பிடித்த சில மனித ஜென்மங்களால் பெண் சீரழிக்கப்படுகிறாள். வெளியில் தெரிந்தால் உலகம் பாதிப்புக்குள்ளான பெண்ணைத்தானே தூற்றும் என்னும் சமூக பழக்க வழக்கத்தால், அதை மறைத்து வாழ முற்படும் பெண்ணின் நிலை அடுத்தடுத்து சறுக்கு மரமாகிறது என்பதையே இக்குறுநாவல் எடுத்துரைக்கின்றது.

பிறர்மனை நோக்கும் காமக் கூட்டம் தன் குடும்பத்தையும் அழித்து, பாழாய்ப் போன ஊருக்குப் பயந்து பயந்து வாழும் பெண்களின் குடும்பத்தையும் கெடுப்பதில்  படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண் என்ற வேறுபாடில்லாமல் வாழும் ஈனப் பிறவிகளைச் சாடுவதற்காகவும், அத்தகையவர்கள் திருந்துவதற்காகவும், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட குறுநாவல்தான் கபோதிபுரக் காதல். 1968 இல் திராவிடப் பண்ணை வெளியிட்ட இந்நூலை, தற்போது ஆதி பதிப்பகம் மீள்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

இக்குறுநாவல் வெறும் 64 பக்கங்கள்தான். ஆனால், பல கோடி செலவில் வெளியாகும் திரைப்படங்கள் ஊட்டமுடியாத - உணர்த்த முடியாததை எழுத்தில் அறிய வைத்திருக்கிறது. 

கணவன் வீராச்சாமிக்குப் பயந்து பயந்து குடும்பக் கடமையாற்றுபவர் வேதவல்லி. தான் பெற்ற பெண் பிள்ளையின் உணர்வைப்  புரிந்துகொண்டாலும், கணவனிடமும் சொல்லாது, பிள்ளையிடமும் எதுவும் காட்டிக்கொள்ளாத அடக்கக் குணம் கொண்டவள். இருப்பினும், பல்வேறு தொழில்கள் செய்து, எல்லாவற்றிலும் நட்டமும் கடனும் பட்டதால் ஏழ்மை நிலைக்கு வந்துவிடுகிறது அவர்களது குடும்பம். இதனால், 16 வயது மகள் சாரதா என்ற ராதாவை ஜமீன்தார் போன்ற பணக்காரத் தோரணையிலிருக்கும் மாரியப்பப் பிள்ளைக்கு 3 ஆவது மனைவியாகத் திருமணம் செய்துகொடுக்க முற்படுகிறது. இதற்கு  முன்பே  ராதா, ஜமீன்தார் பேரன் பரந்தாமன் மீது காதல் வயப்பட்டிருந்தவள். பரந்தாமனும் அவளை மனதுக்குள் நினைத்திருந்தவன். தற்போது 60 வயது நிரம்பிய ஜமீன்தார் மாரியப்பப் பிள்ளைக்கு 16 வயது மட்டுமே எட்டிய மிக அழகு வாய்ந்த பதுமைப் போன்ற பெண்ணான ராதா மனைவியாகிறாள். 

ராதாவின் மனமோ கிழவனோடு மணவாழ்வில் ஒட்டவில்லை. அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்த உலகில், பரந்தாமனின் சந்திப்பில் தன்னை மறந்த ஒரு நொடியில் ஏதேதோ மாற்றங்கள் தம் வாழ்வில் ஏற்பட்டு விடுகின்றன.  சமயம் பார்த்த கணக்குப் பிள்ளை கருப்பையா, ராதா வாழ்க்கையில் காம வேட்டையாடிச் சீரழிகிறான். வெளியில் தெரிந்தால் ஊர் என்ன பேசும் என்று பயந்து பயந்து ராதா வாழ்ந்து கொண்டிருக்கையில், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், நகரத்திலிருந்து வருகிறவர்கள், சாமியார்கள் என்று பலரையும் நம்பினாள். நாளும் நல்ல காரியங்களைக் கற்றுத்தருவார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு அதிர்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. நன்றாகப் பேசிச் சிரித்துக்கொண்டே தன் இனத்தை வேட்டையாடும்  இழிசெயலைச் செய்யும் மனிதர்களிடம் அவள் அகப்பட்டுக்கொண்டாள். 

அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்வைப்  பதிவு செய்து மிரட்டி சுகபோக வாழ்வு வாழும் மனிதர்களால் நிம்மதியை இழக்கிறாள். பணம், பொருள், உறவு எல்லாம் இழக்கிறாள். இறுதியில் தாலி கட்டியவனையும் இழக்கிறாள். 

நல்லவர்களால் உலகம் இன்று நிலைத்திருக்கிறது என்பது போல, ராதா மீதான காதலைச் சுமந்தலைந்த பரந்தாமன் அம்மை நோயால் கண்பார்வையை இழக்கிறான். கண்ணில்லா கபோதியான பின்பு, ராதாவைச் சந்திக்கிறான். 

சமூகம், திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக்கொள்ளும். தாங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும். ராதா போன்ற பெண்கள், கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும். முன்சென்றால் ஓடிவிடும். சமூகப் பழக்கவழக்கம் என்னும் கொடுமையை எதிர்த்தால்தான் கண்ணுள்ள  கபோதிகள் முன் வாழ முடியும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் அறிஞர் அண்ணா.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால், காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான்; எதுவுஞ்செய்வான்; எவர்க்கும் அஞ்சான்; எதையும் கருதான். 

ஆம்! இன்னமும்,மாடமாளிகை, கூடகோபுரங்களை விட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். எதையும் இழப்பான். காதலை இழக்கத்துணியான். இப்படியாக, ராதாவுக்கு மறுவாழ்வைக் கொடுத்து காதலையும் வாழ்விக்கச் செய்கிறான் பரந்தாமன். இவ்வாறு, கபோதிபுரக் காதலை நிலைநாட்டுகிறார் அறிஞர் அண்ணா.

அறியாத வயதுகளில் புரியாத மனதுடன் அல்லல்படும் பெண்ணின் வேதனையைச் சமூக சீர்த்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும்  நின்று எழுதிய பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். இக் குறுநாவலை அழகுடன் வடிவமைத்துப் பதிப்பித்திருக்கும் ஆதி பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

*

கபோதிபுரக் காதல் (குறுநாவல்),

அறிஞர் அண்ணா, 

முதல் பதிப்பு : டிசம்பர் 2022, 

பக்கங்கள்: 64,

விலை: ரூ 80/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், சென்னை.

பேச: 99948 80005



செவ்வாய், 31 ஜனவரி, 2023

சோ.தர்மனின் சூல் - நிறைசூலியும் நீர்ப்பாய்ச்சிகளின் அறமும் கொலையுண்ட வரலாறு : அ.ம.அங்கவை யாழிசை

என் தாத்தா சோ.தர்மன் அவர்கள் எழுதிய 'சூல்' எனும் கதை நூலை அண்மையில் படித்து முடித்தேன். இந்நூலைப் படித்ததில் பேத்தியான எனக்குப் பெருமிதம்தான். இதனைப் படித்து முடிக்க வெகு நாட்கள் ஆகிவிட்டன. நூலின் பல பக்கங்களை ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தேன். அதில் உள்ள அறிவியல் கருத்துக்களையும், அனுபவத் தத்துவங்களையும், அதில் வந்து போகும் சம்சாரிகளின் வாழ்வியல் அறங்களையும் என் மூளைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அந்தத் தகவல்களைக் குறித்து வைத்தும் எழுதி வைத்தும் வந்தேன்.

பக்கங்கள் செல்லச் செல்ல இப்படி எழுதி வந்தால் முழுப் புத்தகத்தையும் அப்படியே எழுத நேரிடும் என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு நிறைய மனிதர்களும், நிறைய தகவல்களும், நிறையக் கதைகளும் சூல் நூலில் நிரம்பிக் கிடக்கின்றன. சூல் என்பது நீர் நிலைகளை மையமாகக் கொண்டது என்பதால், 'நீர் சூழ்ந்த நிலப்பரப்பு' என்பது போன்ற பொருள் கொண்டது என்றுதான் வாசிக்கும் முன்புவரை நினைத்திருந்தேன். பிறகு, அடிக்கடி கண்மாயை 'நிறைசூல் கர்ப்பினி'யாக விவரிப்பதை வைத்து இதன் மெய்யான பொருளை விளங்கிக் கொண்டேன். 

முழுக்க முழுக்கக் கண்மாயை மையமாகக் கொண்ட கதைதான் சூல். அந்தக் காலத்தில் மொத்த ஊரும் வெள்ளாமையும் கண்மாயைச் சார்ந்திருந்தன. அந்தப் பின்புலமும் வாழ்வும்தான் சூல் காட்டும் பேருலகம்.


இதில் வரும் பல குறிப்புகள் எனக்கு ஆச்சரியமானதாகவும் மிகவும் புதியதாகவும் இருந்தன. ஆண் பனை, பெண் பனை வேறுபாடுகள், பறவைகள், விலங்குகளின் செயல்பாடுகளை வைத்து மழை அறிகுறி அறிதல், மழையைப் போதும் என வழியனுப்பும் வழிபாடு என மிகப் பல விடயங்கள் கிடைத்தன. அன்றைக்கு மக்கள் என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருந்தனர் என்பதை நினைக்கையில் வியப்பாய் இருக்கிறது.


இந்தக் கதையில் இடம்பெறும் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்திருக்கிறது. அந்த மனிதர்கள் பல கதைகளைச் சுமப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய மனிதர்களைப்போல அன்றைய மனிதர்கள் எவரும் வெறுமையாக இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு கதையைச் சுமந்து கொண்டு நிறைந்திருந்தார்கள். உருளைக்குடி கண்மாயைப்போல அதைச் சார்ந்து இருந்த மக்களின் மனதும் விசாலமானதாய் இருந்திருக்கிறது. அந்தக் கண்மாய்த் தண்ணீரின் தூய்மையைப்போல மக்களின் மனதும் இருந்திருப்பதைப் பிரதிபலிப்பதாய் இருந்தது சூல் நூல்.


உருளைக்குடியில் வாழ்ந்த சம்சாரி மக்கள், தங்களைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தனர் அல்லது கதையாகச் சொல்லி வந்தனர். நாம் வணங்கும் பல தெய்வங்கள் விண்ணிலிருந்து பிறந்தவை அல்ல; நம்மோடு நம் மண்ணில் வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதற்கான முன்னோர் வழிபாட்டை உணர்த்தும் பல கதைகள் நூல் முழுவதிலும் வந்தன. காகத்திற்கு ஏன் கோனப் பார்வை என்பதற்குக்கூட ஒரு கதை சொல்வார்கள். இதுபோன்ற கற்பனைத் திறனின் உச்சங்களைப் பல கிளைக் கதைகளில் காணமுடிந்தது. 


அந்தக் காலத்தில் பல நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் பின்பற்றி இருக்கிறார்கள். இக்கால வழக்கின்படி அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள். இந்த மூடநம்பிக்கைகள்தான், அந்தக் கால மக்களைப் பல மூடத்தனமான காரியங்களைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றன என்பதையும், நாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பதையும் இந்நூல் சுட்டிச் செல்கிறது. 


நம் மண்ணில் எங்கும் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், ஜிலேபிக் கெண்டை மீன்கள் இவற்றை ஆங்கிலேயர்கள்தான் நம் மண்ணில் விதைத்துச் சென்றதாக எண்ணினேன். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கம்தான் இம்மண்ணை பாழாக்கிட அந்த நிலத்தின் சம்சாரிகளையே நட வைத்தது என்பது எனக்குப் புதிய செய்தி.


உருளைக்குடி மக்களின் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தைக்கூட மறைத்தும் மறந்தும் வாழ்பவர்களுக்கு மத்தியில் இருந்தால் அந்த வாழ்க்கை அழகாய்த்தானே தெரியும். கதையில் வரும் உறவுக்காரர்களின் கேலிப் பேச்சுகள் எனக்கு மிகப் புதியதாக இருந்தன. என் அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் பலமுறை கேட்ட கேள்வி, இப்படி எல்லாம் கூடவா வெளிப்படையாப் பேசுவாங்க என்பதுதான். ஏனெனில், அவர்களின் பேச்சுக்கள் அவ்வளவும் வெளிப்படையாகவே இருந்தன.


கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தையப் பழமையான கிராமத்து வழக்காறுகள் என்பதால், நூலில் வரும் பல சொற்களின் பொருள்கள் எனக்கு முதலில் புலப்படவில்லை. கதைக்குள் போகப் போகத்தான் அவற்றின் பொருள் புரிந்தன. கதையில் அவர்கள் பேசும் வசவுச் சொற்கள் நான் இதுவரை கேள்விப்படாதவை. நான் கவனித்த மட்டும், கதையில் 'அம்மா' என்ற சொல் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்று அஞ்ஞா அல்லது ஆத்தா. இவைதான் அம்மாவைக் குறித்த சொற்கள். அம்மா எனும் சொல் வரவே இல்லை. அப்பா என்பதற்கும் ஐயா அல்லது அப்பன் என்றுதான் வந்துள்ளன. மேலும், இந்த நூலின் வாயிலாகப் பழைய சொலவடைகள் எனக்குப் புதிதாக அறிமுகம் ஆயின.


அக்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் சிந்திக்க வைக்கும்படி இருந்தன. ஒரு மாதத்திற்குக் கோவில் பகுதியைச் சுத்தம் செய்வது, கோவிலுக்கு விளக்குப் போடுவது என்று சமூக நெறிமுறைகளைச் சார்ந்தே இருந்திருக்கின்றன. குற்றத்திற்குத் தண்டனையும் குற்றவாளிக்கு மன்னிப்பும் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நூல் விவரித்திருக்கிறது. 


நூலை முழுவதும் படித்து முடித்ததற்குப் பின்பாக, எனக்கு இப்போது சூல் நாவல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது, கொப்புலாயி பாட்டியும் அவளின் வெகுளித்தனமும்தான். அவளுடைய வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசியில் அவள் கூறுவது என்னைப் பிரமிக்க வைத்தது. காட்டுப்பூச்சிப் பயல் பட்டணத்திற்குச் சென்று வந்ததைக் கூறும்போது 'துட்டு கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்' என்று சொன்னது, கொப்புலாயி பாட்டியை மிகவும் பாதித்தது. 'துட்டு வாங்கிட்டு சோறு போடுற ஊர் விளங்குமா? அந்த ஊர்ல மனுஷங்க எப்படி வாழ்றாங்க? அந்த ஊருக்கு என்ன பாவம் கிட்டுமோ? என்று புலம்பித் தீர்ப்பார்.


அந்தக் காலத்தில் வழிப்போக்கர்கள் கேட்டால் அன்னம் இடுவார்கள் என்பது தெரியும். ஆனால், அன்னத்திற்குக் காசு வாங்கக் கூடாது; அது பாவம் என்பது எனக்குத் தெரியாது. எவ்வளவு பெரிய விடயம் இது. ஊருக்குள் சாமியார்கள், பண்டாரங்கள் என யார் வந்தாலும், அவர்கள் தெருவில் வந்து கையேந்தக்கூடாது என்றும், அவர்களுக்கு ஆனதை அந்த ஊர் இளவட்டங்களே எல்லோர் வீட்டிலும் சென்று வாங்கி வந்து கொடுப்பார்கள் என்பதும் எனக்கு மேலும் புதிய விடயம். அவர்களை அன்னத்திற்காகக் கையேந்தவிடும் ஊர் விளங்காது என்பது அவர்களது நம்பிக்கை. அன்று வாழ்ந்த எல்லோரும் ஊருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். இல்லையென்றால் பாவத்திற்குக் கட்டுப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன.


முந்தையக் காலத்தில்தான் சாதிச் சண்டைகள் அதிகமாக இருந்தது அல்லது இருந்திருக்கும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால், கதையில் பல சமூகங்களுக்குள் உள்ள புரிதலும் ஒற்றுமையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படி இருந்தவர்களைப் பிரித்துப் பகையாக்கியது யாரோ? எதுவோ?


கதையில் மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், அப்பாவத்தின் பலனாக ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும். விரோதம் காரணமாக ஊர்க் கண்மாயை உடைத்தவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும். இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன. எப்போதும் சிரிக்கும் கண்மாயை ஊமையாக்கியவன் பரம்பரையில் ஊமைப் பிள்ளை பிறக்கும். இது போன்ற பாவங்கள் ஜென்ம பாவங்கள் என்றும், தலைமுறையாகத் தொடரும் என்றும் நம்பினார்கள். ஆனால் இந்தப் பாவத்தைப் பற்றி ஊரில் யாருக்கும் தெரியாது. இந்தப் பாவத்திற்குப் பரிகாரங்களாக அவர்கள்  சொன்னதெல்லாம், மரங்கள் வளர்ப்பது; ஆடு மாடுகள் பராமரிப்பது; கண்மாயைப் பராமரிப்பது என, இயற்கையை இணைத்துப் பயனூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கதையில் வரும் குப்பாண்டிச் சாமியும் குஞ்சான் சாமியும் எதிர்காலத்தைப் பற்றி, அதாவது இன்றைய நிலையை அப்படியே கூறும்போது வினோதமாக இருக்கும்.


ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கும் நீர்நிலைகளுக்கும் ஏற்படாத அவல நிலை, நம் நாட்டவரின் ஆட்சியின்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வைத்தது. ஆங்கிலேயர்கள் மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த நம் நாட்டு அரசியல்வாதிகளால் மண் முழுதும் அடிமையானது. ஆங்கிலேயர்கள்தான் நம் வளத்தை எல்லாம் சுரண்டினார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தேன். ஆனால், மண்ணின் வளங்களைக் காக்க, அந்த வளத்தைப் பற்றி நன்கு தெரிந்த பரம்பரை அறிவு கொண்டவர்களிடம்தான் அதை ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதை இந்நூலில்தான் முதன்முதலாக அறிந்துகொண்டேன். 


கண்மாய்களைக் காக்கவும், வயல்களுக்கு அந்த நீரைப் பாய்ச்சவும் என நியமிக்கப்பட்டவர்கள்தான் நீராணிக்கர்கள் ஆவார்கள். கதையில் நீர்ப்பாய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நீர்ப்பாய்ச்சியும் ஊர்க் குடும்பனும்தான் ஊரின் முதன்மைத் தலைகள். இப்போது அதன் பொறுப்பை ஏற்று இருக்கும் பொதுப்பணித்துறையில் உள்ளவர்களுக்கு, சூழலியல் சார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாததன் காரணமாகத்தான், மண்ணும் தன் அடிப்படைக் குணத்தை இழந்து வருகிறது. பட்டறிவைவிட, பரம்பரை அறிவு முக்கியமானது. அது அனுபவங்களின் கோர்வை. 


ஆங்கிலேயர்கள் சென்ற பின்பு, அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, உருளைக்குடியின் பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் உள்ள புறம்போக்கு நிலத்தைத் தனதாக்கிக் கொள்வது நடக்கும். அந்த வயலுக்குக் கண்மாய் நீரைப் பாய்ச்சிட வேண்டுமென்று நீர்ப்பாய்ச்சியிடம் ஆணையிடும்போது, 'முறை மாற்றி வாய்க்காலில் கண்மாய் நீர் செல்வதை அனுமதிக்க மாட்டேன்' என்பார். அப்படி என்றால், மடைச் சாவியைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு பஞ்சாயத்துத் தலைவர் கேட்பார். 'அய்யனாரப்பன் முன்பு ராசா தொட்டுக் கொடுத்த சாவி இது. இது எங்கிட்ட வாரதுக்கு முன்னாடி, எங்கப்பன் எப்படி அய்யனார்ட்ட ஒப்படச்சாரோ, அங்கயே நானும் ஒப்படைக்கிறேன்' என்று கூறுவார்.  உருளைக்குடியின் கடைசி நீர்ப்பாய்ச்சியான அவர், மடைச்சாவியைக் கோயிலின் முன்பு வைத்து விட்டு வரும் காட்சி உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கும். 


நிலத்தையும் நீரையும் கட்டிக்காத்த நீர்ப்பாய்ச்சிகளின் அறம் இதுதான். மிகவும் பலம் பொருந்திய காளையின் மூக்கணாங்கயிறு அவர் கையை விட்டுச் சென்றதாகவும், சரியான கைகளிடம் போய்ச் சேரவில்லை என்றால், அந்தக் காளை மாடு ஊர் நிலத்தை நாசமாக்கிவிடும் என்று கண்மாயைக் காளையாகவும், மடைச்சாவியை அதன் மூக்கணாங்கயிறாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கும்.


முன்பெல்லாம் கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகளை அந்தந்த ஊர் மக்களே செய்து வந்திருக்கிறார்கள். குடிமராமத்துப் பணிகள் நடக்கும் காட்சியை மிக அழகாகக் கூறியிருப்பார் நூலாசிரியர்.


ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த பிறகு, நாட்டில் இருந்த கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின்கீழ் சென்றன. இதனால், முன்பு போல ஊர் கூடி மராமத்துப் பணிகள் செய்ய முடியாமல் போனது. மராமத்துப் பணிகள் செய்திடப் பல பேரிடம் போய்க் கேட்டும், சாக்குப் போக்குச் சொல்லி வந்தனர் அரசியல்வாதிகள். பல வருடங்கள் ஆகியும் மராமத்துப் பணி நடக்காததால் கண்மாய்கள் மேடேரிப்  போயின. இதனால் வருடத்தின் பாதியிலேயே கிணறுகள் வற்றிப்போயின. கண்மாய்களில் இருந்து வயல்களுக்குக் கரம்பை மண்  எடுக்கவும் தடை. நம் ஊர்க் கண்மாயில் இருந்து நம் வயலுக்கு நாம் மண்ணெடுக்க முடியாது என்றால், எங்கு போவது? கண்மாய் அரசாங்கத்துக்கு உரியது என்றால், அரசாங்கம் யாருக்காக? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. 


குடிமராமத்துப் பணிகள் நடக்காத காரணத்தினாலேயே கண்மாய்களும் வயல்களும் தன் பொழிவை இழந்து போன துயர வரலாற்றைப் பேசும் சூல் நூலானது, நிறை சூலி கொலையுண்ட பெருவலியைப் பதிவு செய்திருக்கிறது. சூல் நூலானது, நீர்நிலை சார்ந்த நிலங்களையும், அந்நிலம் சார்ந்த சம்சாரி மனிதர்களையும், அம்மனிதர்களின் வாழ்வியல் பண்பாடுகளையும் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியிருப்பதாகவே உணர்கிறேன். 


பெருவாழ்வைத் தந்த நிறைசூலியும், நீர் அறத்தைக் காத்துவந்த நீர்ப்பாய்ச்சிகளும் இப்போது கொலையுண்டு போயிருப்பதை உணர்த்துகிறது இந்நூல். இதன் வலி நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பைத் தரத்தான் போகிறது.


சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் தாத்தாவின் இந்த நூலைப் படித்ததில் பெருமை அடைகிறேன்.


கட்டுரையாளர்:

அ.ம.அங்கவை யாழிசை,

இளநிலை சித்த மருத்துவ மாணவி.

31.01.2023

வெள்ளி, 27 ஜனவரி, 2023

தீட்டுக்கு எதிரான முதல் பெண் கலகக்குரல் : மகாராசன்






தமிழ் இலக்கியப் பரப்பில் காலுான்றிய பெரும்பாலான பெண் கவிஞர்கள் இலக்கியத்தின் வழியாகப் பெண்நிலை சார்ந்த கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெண்நிலை சார்ந்த அக்கவிதைகள் எதிர்ச்சிந்தனை மரபையும் மாற்றுச் சிந்தனை மரபையும் உள்ளடக்கி வைத்திருக்கின்றன. 

அந்தந்தக் காலகட்டத்தில் சாத்தியப்பட்ட பாடுகளத்திற்குள்ளும் பெண்ணின் குரலைப் பதிவு செய்யும் முயற்சிகள் பெண் கவிஞர்களிடம் இருந்திருக்கின்றன. இந்த வரிசையில் செங்கோட்டை ஆவுடையக்காளின் குரலும் தமிழ் இலக்கியப் பதிவில் குறிப்பிடத்தக்க ஒரு பதிவாக அமைந்திருக்கிறது.


இதுவரையிலான மற்ற பெண் கவிஞர்களிடம் பெண்நிலை சார்ந்த இலக்கியச் செறிவு மட்டும் காணப்படுகின்றது. ஆவுடையக்காளிடமோ இலக்கியச் செறிவோடு தத்துவச் செறிவும் காணப்படுகிறது. தத்துவ நோக்கில் ஆவுடையக்காள் எழுதிய கவிதைகள் 'செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காள் பாடல் திரட்டு' எனும் நூலாக வெளிவந்திருக்கிறது. ஆயினும், இந்நூல் பற்றிய குறிப்புகள் பெரும்பாலான தத்துவ மற்றும் இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படவில்லை.


தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 'வாழ்வியல் களஞ்சியம்' இரண்டாம் தொகுதியில் 'ஆவுடையம்மாள்' எனும் தலைப்பில் சிறு குறிப்பு மட்டுமே காணப்படுகின்றது. ஆவுடையக்காள் பற்றியும், அவர் கவிதைகள் குறித்தும் விரிவான முறையில் அமைந்த கட்டுரை சு.வேங்கடராமன் எழுதிய 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூலில் உள்ளது. 


தத்துவச் செறிவுமிக்க ஆவுடையக்காளின் கவிதைகளில் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. தத்துவத் துறையினுள் பெண்ணாக நுழைந்து பெண்நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கை அவரின் கவிதைகளின்வழி அறிய முடிகின்றது.


செங்கோட்டையில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடையக்காள். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள கிபி.17ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் பிறந்த இவருக்கு, அன்றை அந்தண சமூக வழக்கப்படி குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையக்காள் குழந்தைப் பருவமாய் இருக்கிறபோதே விதவை ஆகிறார். பருவம் எழுதிய பின்னர் விதவைக் கோலம் கட்டாயமாகப் பூணப்பட்டிருக்கிறது. இளம் பருவத்திலேயே விதவைக் கோலம் பூண்டது ஆவுடையக்காளுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவுடையக்காளின் விதவைநிலை குறித்து 'ஆவிடையம்மாள் சரித்திரம்' கூறும்போது, பெற்றோரால் பாலியத்தில் விவாகம் அடைந்த அவளது பர்த்தா பரகதி அடையவே தன் கிரியை நினைத்து நினைத்து ஆறாத் துயரம் அடைந்து, பின் ஒருவாறு தன் விவேகத்தால் தேர்ந்து, உலகை வெறுத்து, ஒன்றிலும் பற்றுதலும் இன்றி இருந்தாள் என்கிறது.


ஆக, அன்றைய காலத்தின் சமூகச் சடங்குகளாலும், குலம் கோத்திரங்களாலும், தமது வாழ்வு பறிக்கப்பட்டதை எண்ணி எண்ணித் துன்பத்தில் உழன்று தவிக்கும் பெண்களுள் ஆவுடையக்காளும் ஒருவராக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.


அக்காலத்தியச் சமூகத்தின் பொதுத்தளத்தில் ஓரங்கட்டப்பட்ட வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாய்ப் பெண்கள் இருந்தனர். அத்தகையச் சூழலில், பெண்கள் விதவையாக்கப்படும்போது முழுவதுமான அந்நியப்பட்ட வாழ்நிலைக்கு ஆட்படவேண்டியிருந்தது. உயிர் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் விதவையாக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்திருக்கிறது.


உடலை வருத்தியும் மனதை அடக்கியும் எவ்வித இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தவித்த பெண்கள், தங்களுக்கான வடிகாலாய்த் தேர்ந்தெடுத்தது பக்திக்களம்தான். இப்பக்தி நிலையின் வழியாக உலகியல் துன்பங்களை மறப்பதற்கான மடைமாற்றுத் தளமாகக் கைக்கொண்டவர்களில் ஆவுடையக்காளும் ஒருவர் எனலாம்.


தத்துவநிலை சார்ந்து தமது கருத்துகளை வெளிப்படுத்தும் ஆவுடையக்காள், அதனுள்ளும் பெண்நிலை சார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்தி உள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்வழிச் சமூக முறைமைகள் பெண்ணைக் குறித்துப் பல்வேறு கருத்தியல்களை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. அத்தகையக் கருத்தியல்களில் 'தீட்டு' என்பதும் ஒன்று. 


பெண் தீட்டானவர்; பெண்ணுடல் தீட்டானது என்பதான கற்பிதங்கள் பெண்ணைப் பல்வேறு தளங்களில் விலக்கி வைத்திருக்கின்றன. இந்நிலையில், தீட்டுக்கு எதிரான கலகக் குரலைத் தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் அக்காள்.


பெண்ணுக்கென்று வரையறுக்கப்பட்ட வெளிகளில்தான் பெண்கள் நடமாடவேண்டும்; மற்ற வெளிகளில் பெண்கள் நடமாடக் கூடாது; அவ்வாறு பெண்கள் நடமாடிவிட்டால் அவை தீட்டுக்கு ஆளாகிவிடும் என்பதான கருத்து நிலைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார் அக்காள்.


எச்சில் எச்சிலென்று

புலம்புகிறாய்;

மானிடர்கள் எச்சில்

இல்லாத இடமில்லை.

சில்லெச்சில் மூர்த்திகையில்;

ஈஎச்சில் தேனல்லவோ!

என்றைக்கும் உண்ணும்

தாய்முலை எச்சிலன்றோ!

மச்சமெச்சில் நீரில்வந்து

முழுகும் மறையோர்கள் எச்சில்.

பச்சைக்கிளி கோதும்

பழம் எச்சிலன்றோ!

தேரை எச்சில் தேங்காய்

சிறுபூனை எச்சில்;

தேசமெல்லாமே

எச்சிலென்று அறிவேன்.

எச்சிலுந்தன்

வாயும் உடலும் ஆகமாயிருக்கையிலே

பாதம் எச்சில் என்று

அலம்ப சுத்தமாச்சோ? (ஆ.பா.தி.ப90)

என்ற ஆவேசமான குரலை வெளிப்படுத்துகிறார் அக்காள். 


மேலும், பெண்ணும் ஆணும் ஒன்றுதான். சக்தியும் சிவனும் ஒன்றான வடிவில் இருக்க, பெண் எப்படி தனியே தீட்டானவராக இருக்க முடியும் என்ற கேள்வியை அக்காள் எழுப்புகிறார். அதை,

சாஸ்திரமாய்

கோத்திரமாய்

ஜாதிவர்ணாசிரமுமாய்

ஸத்பாத்திரமும்

தீட்டல்லவோ அறியாள்.

சக்தி சிவமே

சராசரமாய் நிற்கையிலே

எதுவும் கர்ம மூடருக்கு

இருட்டாச்சே (ஆ.பா.தி.ப91) என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். 


தீட்டு என்பதை, சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் வர்ணாசிரம தர்மங்களுந்தான் ஏற்படுத்தியவை. மனிதர்கள்தான் தீட்டு என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பெண்ணும் ஆணும் கடவுளாய் அமைந்திருப்பதை அறியாத மூடர்களே தீட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்கிறார் ஆவுடையக்காள்.


பெண்ணின் உடலில் நிகழும் இயற்கை மாற்றங்களான குருதிப்போக்கு நிகழ்வையும் தீட்டு என்றுதான் ஆண்வழிச் சமூகம் கருதி வைத்திருக்கின்றது. பெண்ணின் குருதிக் கசிவைத் தீட்டென்று சொல்லும் சமூகம், காயம்பட்ட ஆண்களின் குருதிக் கசிவைத் தீட்டென்று உரைப்பதில்லை. 


மனித உற்பத்தி நிகழ வேண்டுமானால் பெண்ணுக்குக் குருதிக் கசிவு ஏற்பட்டாக வேண்டும். பெண்ணின் அக்குருதிதான் காமத்தை, குழந்தையை உண்டு பண்ணக் கூடியது என்ற பெண்நிலை சார்ந்த பதிவை ஆவுடையக்காளின் கவிதையில் காணமுடிகின்றது. அதை,

முந்தின தீட்டெடுத்து

முத்தமிடும் தொட்டிலிலே,

கர்த்தனோடு சூத்திரத்தைக் காணார். 

காமத்தீட்டுரைந்து

கைக்குழந்தையாயிருந்து

ஆமையைப்போல முழுக

சுத்தியாச்சோ (ஆ.பா.தி.ப91)

என வெளிப்படுத்துகிறார். 


மேலும், மாதந்தோறும் நிகழும் குருதிப்போக்கு நாட்களில் துயரமும் அவலமும் பெண்ணுக்குத்தான். ஆனால். பெண்ணைத் தீட்டென்று விலக்கி வைத்திருக்கும் ஆண்களிடம் காணப்படுகிற 'அகத்தீட்டு' போய்விடவில்லை. இதைப் பெண்நிலை சார்ந்த ஓர் எதிர்ப்புக் குரலாகவே வெளிப்படுத்துகிறார் அக்காள்.


தீட்டென்று மூன்று நாள்

வீட்டைவிட்டு விலக்கித் திரிந்துவிட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து

நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி நடுவீட்டில் வந்திருப்பாய்

நான் சுசி என்றுரைத்து.

தீட்டென்றும்

பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க தேகமேல் முழுகிவிட்டால்

தீட்டோடிப் போமோ?

ஆசார மாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டுப் போச்சோ (ஆ.பா.தி.ப145) என, தீட்டுக்கு எதிரான பதிவைத் தமது கவிதைவழி வெளிப்படுத்துகிறார். ஆவுடையக்காள். 


தத்துவ நிலைப்பாட்டினுள்ளும் பெண்நிலை சார்ந்து வெளிப்படும் ஆவுடையக்காளின் குரல் 'தீட்டு'க்கு எதிரான முரணைக் கொண்டிருக்கிறது. 'தமிழ் இலக்கிய மரபில் இப்படியான பெண்மொழியையும் பெண்ணின் மாதவிலக்கு - அது தீட்டு என்பதை எதிர்த்துப் பெண் எழுப்பும் கலகக் குரலையும் ஆவுடையக்காள் பாட்டில்தான் முதன்முதலாகக் கேட்கிறோம்' என்பது குறிப்பிடத்தக்கது.


மகாராசன் எழுதிய 'தமிழில் பெண்மொழி மரபு' நூலில் இருந்து...