புதன், 11 அக்டோபர், 2023

பரவலாகச் சென்றடைய வேண்டிய நூல்: வெ.மு. பொதியவெற்பன்.


புது வெளிச்சமும் இருட்டடிப்பும் ஒருசேர : ஏர் மகாராசனின் நூலை முன்வைத்து…
 



"தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும் காட்சி ஊடகங்களும்கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலக்கட்டத்தில் செய்ததோடு, சாதிய அணுகுமுறைகள், செயல்பாடுகள், வன்முறைகள் தமிழகக் கல்விச் சூழலில் எவ்வெவ்வாறெல்லாம் உள்ளன என்பதை விலாவாரியாக விளக்குகிறார். அவர் சொல்லும் செய்திகள் விவரிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரத் தக்கனவாக உள்ளன.

இந்த நூல் கல்விப்புலத்தில் பரவலான வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு பரந்துபட்ட விவாதங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான கல்விச்சூழலுக்கான முன்னெடுப்பாகத் தான் இந்த நூலைப் பார்க்க முடிகிறது." - சாவித்திரி கண்ணன்.

'வையம் ' மாதிகை, 'அறம் ' இணையத்தில் வெளியான கட்டுரைகள். நாங்குநேரி படுகொலை எத்தனை கொடூரம்; கல்வி நிலையங்களில் ஊடே தலையெடுத்துள்ள சாதி வன்மம், அது புரையோடித் தலைவிரித்தாடும் அலங்கோலங்கள்; பிள்ளைகளைக் கண்டிக்காத பெற்றோர்களின் பொறுப்பற்ற விட்டேற்றித்தனம், தண்டிக்க இயலாத ஆசிரியர்களின் ஆற்றாமை என பல பக்கங்களையும் வாசிக்கையில் மனம் பதறத்தான் செய்கின்றது. 

பூணூலின் வாலான வண்ண வண்ணக் கைக்கயிறுகள், வலைப்பின்னலாகத் தொடரும் வன்கொடுமைகள், ஆசிரியர்களுக்கூடாகவும், பாடத்திட்டத்திலும் ஊடுருவும் நஞ்சூட்டல், அதைத் தடுக்க முறையான சட்ட யாப்பின்மை என, மெய்யாலுமே கல்வி நிறுவன அகச்சூழல் புறச்சூழல் யாவும் இந்நூலின் பேசுபொருளாகி உள்ளன. எனவே இந்நூல் பரவலாகச் சென்றடைய வேண்டிய நூலேயாகும்.

உயர்சாதி என்னாது உயர்த்தப்பட்ட சாதி எனவே கையாள வேண்டும் என்பது சரிதான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட எனுமாப் போலவே.

பட்டியல் மாற்றக் கோரிக்கையைத் தமது தன்மான வேட்கையாக, தம் மீதான நவீன வடிவில் சுமத்தப்படும் சமூக இழிவாகப் பார்ப்பதாகக் குறிப்பிடுகின்றார். இது ஒரு பகுதி உண்மையே. காட்டாக இத்தகு குரல்கள் தேவேந்திரகுல வேளாளர் என்னும் மள்ளர்கள்; சௌராஷ்ட்ரர்கள் போலும் சாதியின மக்கள் மத்தியில் எழக்கூடியனவாக உள்ளன. இவ்விரு சாதியினர் இடையேயிருந்து தம் பணிவாய்ப்புகளால் மேம்பட்டோர் ஊடேயிருந்துதான் இவ்வாறு குரல் ஒலிக்கக் கேட்கின்றோம்.

சௌராஷ்ட்ர இன மக்களில் பட்டுப்புடைவை வணிகர்களான பெரும் பணக்காரர்களும் உண்டு. ஏழை எளிய நெசவாளிகளே மேலதிகமானோர். அவர்களூடே இருதார மணவாழ்க்கை சகஜமே. மூவர் இணைந்த குடும்பமாய் இல்லத்திலே தறியோடும் நெசவு வாழ்க்கைக் குடும்பப் பொருளாதார நிர்ப்பந்தமாக அம்மக்களிடையே காணக்கிடக்கின்றது.

மதுரையில் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இத்தகு சௌராஷ்ட்ர பணக்காரப் பிரமுகர் ஏற்பாட்டில் அவர்கள் இவ்வாறு குரலெழுப்பி ஊர்வலம் வந்தனர். என் கேள்வி இதுதான். இது எவ்வாறு சௌராஷ்ட்டிர இனத்தாரின் ஒட்டுமொத்தக் குரலாக ஆதல் கூடும் என்பதே. 

ஆண்ட பரம்பரை வாரிசுகளாகப் புதிய தொன்மங்களைப் படைத்து, அதனையே தம் வரலாறென முன்வைக்கலாகின்றனர். எனவே இது ஒருவகையில் 'சங்கதமயமாதற் (மேனிலையாக்கப்) போக்கே எனலாம். நிலைகுடிகள் தவிர்த்த அலைகுடி வாணர் இடையே இத்தகு மனோபாவங்கள் காணக்கிடையா.

இந்நூலின் சில மௌனங்கள் குறித்தும் இதே மூச்சில் பேசியாக வேண்டியுள்ளது. கல்வி நிலையங்களிடையே பேராசிரியர்கள் மத்தியிலும் நிலவும் சாதியாதிக்க மனோபாவங்கள் குறித்த சோ.தர்மன் கருத்துக்களை இந்நூலில் எடுத்தாளும் நூலாசிரியர், மோடி தாடியில் பெரியாரைக் காணவல்ல அவரின் சங்கிச்சாய்வு அரசியல் குறித்துச் சாதிப்பது மௌனமே.

"மோடி அரசின் செயல்பாடுகளைச் சிலாகிக்கும் சோ.தருமன், மாலன் நாராயணன் போன்ற எழுத்தாளர்கள் இன்றைக்கு மாநில, மைய அரசின் வணிக நோக்கினால், ஊழலினால் உயர்கல்வித்துறை எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை முதலில் எழுத வேண்டும். தமிழக அரசும் இதில் விதி விலக்கு அல்ல."

அண்ணல் அம்பேத்கரை சாதித்தலைவராக முன்னிறுத்தும் போக்கை நூலாசிரியர் கடிந்துரைத்து, அதற்கப்பாலாக ஒட்டுமொத்த சமூக விடுதலைக்குப் பாடாற்றும் தலைவராக இனங்காணக்கூடிய நூலாசிரியரே! அவ்வாறே பிற்படுத்தப்பட்ட இடைநிலைச் சாதியினர்க்கான தலைவராகப் பெரியாரைத் திரித்துரைக்கும் போக்கைக் குறித்தும் ஏன் பேசவில்லை?

இத்தகு மௌனம் யாவும் நூலாசிரியரின் திராவிட இயக்க ஒவ்வாமை வெளிப்பாடுகளே எனலாம்.

இத்தொடர்பில், நேர்மையான ஊதியம் வேண்டாப் பணியை மேற்கொண்ட நீதியரசர் சந்துருவிடம் இத்தொடர்பிலான விசாரணைக் கமிசன் நியமனம் அரசால் நியமிக்கப்பட்டுள்ளதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்பதற்கு நம்பகமானதே.

கட்டுரையாளர்:
வெ.மு.பொதியவெற்பன்,
ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


சம காலத்தில் வெளிவந்துள்ள மிக முக்கியமான நூல் : கண்மணி ராசா


தமிழ்நாட்டில் சமூக அக்கறையுள்ள அனைவரையும் உலுக்கிய சம்பவம், நாங்குநேரியில் நடந்த பட்டியலினச் சமூக‌‌ மாணவனின் மீது மாற்று சாதி சக மாணவர்களே நடத்திய வன்கொலைத் தாக்குதல்.

இதற்கு முன் இங்கு சாதீய மோதல்களே இல்லையா என்றால், உண்டு. ஆனால், சிறார்கள் வரை சாதீய வெறி ஊடுருவும் இந்தக் காலம் கொடுங்காலம்.

தம் பால்யத்தின் எந்தக் கணத்தில் இவர்கள் சாதிய வெறியராக மாறுகிறார்கள்....? இதற்கெல்லாம் யார்/எது காரணம்...? நம் பள்ளிகளால்/ஆசிரியர்களால் இவர்களை ஏன் மாற்றமுடிவதில்லை....?

நாங்குநேரிச் சம்பவம் உட்பட பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களின் பின்புறமும் உயர்த்திக்கொண்ட அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்ட சாதியினரின் சாதீய மனோபாவம் மட்டுமல்ல, பொருளாதார நலன்களும் அடங்கியுள்ளதை ஏன் நாம் பேசுவதில்லை...?

படிப்பு என்பது தேவையில்லை. தொழிலைக் கற்றுக் கொள்க. பொறியியல் கல்வியெல்லாம் பயனற்றது. எல்லாரும் டாக்டராகத்தான் ஆகனுமா...?கிராமத்தில் ஆடு மாடுகளோடு இயற்கை சூழ வாழ்ந்து லாபம் கொழிக்கச் சம்பாதிக்கலாம்... என்றெல்லாம் விதவிதமான கேள்விகள் நம்மை நோக்கி, நம் குழந்தைகளை நோக்கி எழுவதன் அரசியல் என்ன...?

எனக்கு....அவனுக்கு... இவனுக்கு.... உனக்கு என எல்லோருக்கும் ஒரே மாதிரியான தேர்வுகள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்...?

தேர்வு என்பது மாணவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லவா....? கழித்துக் கட்டி விரட்டி அடிக்கவா...?

தேர்வில் தோல்வி எனப் பள்ளியிலிருந்து ஒதுக்கப்படும் மாணவன், மது/போதை இவற்றோடு சுயசாதிக் கும்பல் போதையும் சேர்ந்து கொள்ள சமூக உதிரியாகப் போவான்...என்பதை நாம் எப்போது கவனிப்போம்...?

சாதீய வெறி மாணவர்/ஆசிரியர்/பேராசிரியர்/தாளாளர்/அதிகாரிகள்...எனக் கல்வித் துறையின் சகல திக்கும் ஊடுருவியுள்ளதை உணர்கிறோமா...?

இத்தகைய கேள்விகளை முன் வைத்து மிக விரிவாக அலசியுள்ளது ஆசிரியர் ஏர் மகாராசன் அவர்கள் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" கட்டுரை நூல். சமகாலத்தில், தேவையான நேரத்தில் வந்துள்ள மிக முக்கியமான ஆய்வு நூல்.

கட்டுரையாளர்:
கவிஞர் கண்மணி ராசா,
எழுத்தாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
இராசபாளையம்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


சனி, 7 அக்டோபர், 2023

திரைமீளா் என்ற தமிழ்ச்சொல்லின் திரிந்த கொச்சை வடிவமே திராவிடா் என்பதாகும் : ஆய்வறிஞர் ஒரிசா பாலசுப்பிரமணியம்.




நமது நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

நாம் இந்தியா என்ற பெயரை நமது நாட்டிற்குச் சொல்கிறோம். இந்தப் பெயர் எப்படி வந்தது? எங்கோ இருந்து கிரேக்க இன வெள்ளை நிற மக்கள் நமது மக்களின் கறுப்பு நிறத்தைப் பார்த்து அதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ‘இண்டி’ என்ற வார்த்தையால் நம்மை அழைத்தனர். அதனால்தான், கறுப்பு நிற மக்கள் வாழும் பகுதியான இந்தப் பகுதி ‘இண்டியா’ என்று குறிக்கப்பட்டது. பிறகுதான் ‘இண்டஸ் வேலி’ என்று சொல்லப்படும் சிந்துப் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டே இந்தச் சொல் வந்தது என்று கூற ஆரம்பித்தார்கள். 

 உண்மையில், 1922இல்தான் இண்டஸ் வேலி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னமே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே ‘இண்டிகா’ என்ற சொல் கறுப்பு நிற மக்களைக் குறிக்கும் சொல் இருந்து வந்துள்ளது. கிரேக்கர்கள் அலெக்ஸாண்டருக்கு முன் கடல்வழியாகத்தான் இந்தியாவை வந்தடைந்தார்கள். 

அலெக்ஸாண்டருக்குப் பின்தான் நிலவழிப் பயணம் மேற்கொண்டார்கள். அதன் பிறகுதான் ‘பட்டு வழிப்பாதை’ மூலம் வந்தார்கள். அதனால்தான் சொல்கிறேன், அயோனியர், யவனர் என்று அழைக்கப்பட்ட மக்களாகிய கிரேக்க வெள்ளை நிற மக்கள், இந்தியாவின் கடற்கரையை வந்தடைந்தபோது அங்கு இருந்த கறுப்பு நிற மக்களைப் பார்த்துச் சொன்ன சொல்லில் இருந்துதான் ‘இந்தியா’ என்ற சொல் வந்தது.

சரி, ஏன் அவர்கள் அங்கிருந்து நடு நிலக் கடலாகிய மத்தியத் தரைக் கடலில் இருந்து இங்கு வந்தார்கள்? 

ஏனென்றால், ஏற்கனவே அவர்களோடு நமக்குத் தொடர்பு உண்டு. அங்கு நம் ஆளுமையும் இருந்திருக்கிறது. கி.மு பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னமே ‘பாண்டியா’ என்ற மன்னன் ‘க்ரீட்’ என்ற தீவை ஆண்டிருக்கிறான் என்பதும், அங்கு பேசப்பட்ட மொழி திரமிளை என்பதும், அவன் வம்சம் ‘மீனோவன்’ என்றும் பதிவாகி இருக்கிறது. 

நீங்க பார்த்திங்கன்னா க்ரீக், ரோம், எரித்ரியன் பகுதிகள் மற்றும் சிரியன் பகுதிகளில் தமிழ் வணிகர்களின் ஆளுமை இருந்தது தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. கடல்வழி வணிகத்தில் இவர்கள்தான் முன்னோடிகள். இவர்கள்தான் பட்டுவழிப் பாதையையும், நிலவழிப் பாதையையும் ஒருங்கிணைத்தார்கள். உலகில் மனிதர்கள் கடலை ஒட்டி வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழர்களுடைய பங்களிப்பு இருக்கிறது.

தமிழர்கள் இயற்கையை அணுகிய முறை? 

பொதுவாகச் சொல்லுவாங்க, முதல் புரிதல் வந்து எப்பிடி வந்ததுனா, மனிதனுக்கு விலங்குகளைப் பற்றிய புரிதல் வந்த பிறகுதான் விலங்குகள் மூலமாகத் தாவரங்களையும், இயற்கையையும், தட்பவெப்ப நிலையையும் அவன் அறிஞ்சுக்கிட்டான் என்று பொதுவான ஒரு கோட்பாடு சொல்லுவாங்க. அந்தக் கோட்பாடு மட்டுமல்லாமல் பல கோட்பாடுகளும் நடந்த இந்த இடம், கடலை வெளியாகக் கொண்ட இந்த நிலம். நீங்க வரைபடத்தைப் பார்க்கிறப்ப இந்த நிலம், குறிப்பா தென்னாட்டுப் பகுதியில் இருக்கிற நிலம் முழுக்க முழுக்கக் கடல் சூழ்ந்த நிலம். நடுவுல வந்து மிக அழகாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரும் சூழ்ந்து பேரழகாக இருக்கிற நிலம்.   

இந்த மலைத் தொடர்களுக்கும் கடலுக்கும் இடையில் வாழ்ந்த மக்கள், அவர்களின் புரிதல், அவர்கள் பெரும்பொழுது, சிறுபொழுதை எப்படிப் பார்த்தாங்க? ஒரு நாளை எப்படி ஆறு பகுதிகளாகப் பிரிச்சாங்க? வருடத்தை எப்படி ஆறு பகுதிகளாகப் பிரிச்சாங்க? அதே நேரத்தில் சூரியனுடைய வட செலவு, தென் செலவு எப்படிப் பார்த்தாங்க? பருவ மாற்றத்தை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? அதன் மூலம் வலசைப் பயணம் எப்படிப் போனாங்க? அந்த வலசைப் பயணத்திற்குக் காரணமான நிலத்திலுள்ள யானைகள், காளை மாடுகள், அதே மாதிரி வானத்தில் வலசை போகும் கொக்கு, அன்னம் போன்ற பறவைகளையும், கடலில் உள்ள ஆமைகளின் போக்கையும் எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? இப்படி பல கோணங்கள் இருக்குது.

குறிப்பாக, நான் சென்ற இடங்களிலெல்லாம் கிடைத்த தமிழ் தொடர்பான தரவுகள், அதனுடைய மேலாண்மை, இந்த மக்களின் திறன் என்னை மேலும் உள்ளார்ந்து போக வைத்தது. நீங்க சொல்லும் தமிழ் என்கிற சொல், அந்த மொழியைக் கொண்டு போனவங்க யார்னு பார்த்தா ‘திரை மீளர்கள்’ என்று சொல்லக்கூடிய கடலோடிகள். கடலோடிகள் என்ற வார்த்தையைவிட உலக நாடுகள் முழுக்க ஒரு பெயர் நல்லா பதிவாயிருக்கிறது.  

‘திரை மீளர்’, ‘திரமிளா’, ‘திரமிரா’ இப்படி நிறையச் சொற்கள் சொல்லலாம். உதாரணமா, இப்ப கிரிட் தீவில் ‘திரமிளை’ என்ற மொழி வழக்கில் இருந்திருக்கு. இலங்கையில் ‘திரமிரா’ என்ற சொல் பதிவாகி இருக்குது. ஒரிசாவில் ‘திரமிளா’ என்ற மன்னன் ஆட்சி நடத்தினதாகக் குறிப்பு இருக்குது. 

இந்த மாதிரி, இந்தச் சொல் - இந்தச் சொல்லுக்கு அடிப்படையான காரணம் இந்த நிலத்தில் பேசப்பட்ட மொழி. இதைக் கொண்டுசென்ற ‘திரை மேல் சென்று மீண்டவர்கள்’ என்று ஆராயும் நிலை ஏற்பட்டது. பொதுவாக, ஆரம்ப காலத்தில் மனிதன் கடல் கடந்து போகப் பயப்பட்டான். காரணம், அதன் பிரமாண்டம். அந்தக் கடல் என்ன தன்மையானது? அதில் என்னென்ன இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அப்படி மனிதர்கள் இருந்த சூழ்நிலையில்கூட, அந்தக் கடலில் மேல் நிறையப் பேர் போய் இருக்காங்க. போனவங்க இறந்தும் போய் இருக்காங்க. கடலைத் தாண்டி வேறு நிலம் சென்று அங்கே வாழ்க்கையைக் கழித்தும் இருக்காங்க. 

இந்த மாதிரியான நிலையில், இங்கிருந்து அந்தக் கடலின் மேல் சென்று மீண்டும் வந்த திரைமீளர்கள் எந்த மாதிரியான பாதிப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கணும்!

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 22,000 தமிழ்ப் பெயர்கள் வழக்கில் இப்பவும் இருக்கு. இதுதான் இந்த மக்களின் திறன். இவர்கள் வெறுமனே கடலோடிகள், மீன் பிடிக்கிறவர்களாக மட்டும் இல்லாமல் ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’, ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற வாக்கியங்களுக்கேற்ப வாழ்ந்து இருக்காங்க. 

இவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் பிரிவினை பார்க்காமல் அந்த இடத்து மக்களோடு கலந்து, அந்த மக்களுக்குத் தங்கள் திறன்களைச் சொல்லிக் கொடுத்து இருக்காங்க! இவர்களைப் பற்றிய தேடலில் மிக மிக அவசியமாக நான் கருதுவது, இந்த மக்கள் யார்? இவர்களின் தனித்தன்மை என்ன? அது எப்படி உலகம் முழுவதும் இப்பவும் பயன்படுகிறது? இவர்களின் திணைக் கோட்பாடு என்ன? என்பதுதான். உங்களுக்கு ஐவகைத் திணைகள் என்று சொன்னாக்கூட புரியாது. ஆனா, திருக்குறளில் ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும்’ என்று வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கார் பாருங்க! இதில் ‘மணிநீர்’ என்பது கடலைக் குறிக்கும். பெரும்பாலும் என்ன பண்றோம்னா, தமிழ் மொழியை இலக்கண இலக்கிய உயர்வைக் கூறி, அதைத் தெய்வ மொழி என்று சொல்லி விட்டுறோம். 

ஆனா, என்னைப் பொறுத்தவரை தமிழ் என்பது வாழ்வியல் மொழியாகப் பார்க்கிறேன். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 120 மொழிகளில் தமிழோட ஆளுமை இருக்கு! இந்தோ - அரபிய மொழிகளில்கூட தமிழோட தாக்கம் இருக்கு. 14 பிற மொழிகளின் கலப்பு தமிழில் இருக்குது! எப்படி 14 மொழிகள் இங்கு வந்தது? இங்க யார் யார் நம்மை ஆட்சி புரிய வந்தாங்களோ, அவங்களோட மொழி தமிழோடு கலந்தது. இந்தி, உருது, பாரசிகம், சமஸ்கிருதம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, பிரெஞ்ச், ஜெர்மன் என்று எல்லா மொழிகளும் கலந்து இருக்கு. அதனால், இப்போ இந்த மக்கள் பேசக்கூடிய மொழிவழக்கை வைத்துத் தமிழை எடைபோடக் கூடாது. 

தமிழுக்கு மிகப் பெரிய தன்மை இருக்குது. யோசிச்சுப் பாருங்க, ஒரு மொழியில் எப்படி 14 மொழிகள் கலக்க முடியும்? உலகம் முழுக்க தமிழின் தாக்கம் இருந்து, தமிழர்களின் இந்த மண்ணின் பெருமை அறிந்து வெவ்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இங்கே வந்து இருக்கலாம் இல்லியா! அது மட்டும் இல்ல! தமிழ்நாட்டின் தொன்மையை இப்போ குறித்துள்ளபடி குறிப்பிட்டு, ஒரு எல்லைக்குள் கூற முடியாது.

 நாம் வாழும் இந்தப் பகுதி பற்றிக் கூற வேண்டுமென்றால், 1802இல்தான் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நிலத்தை ‘மதராஸ் மாகாணம்’ என்று பெயரிடுறாங்க! அப்போ இதன் எல்லை கிழக்கில் கர்நாடகாவிலிருந்து ஒரிசா வரை பரந்து இருக்குது. அதன் பிறகு 1956 நவம்பரில் ‘சென்னை மாநிலம்’ என்று மாறுது. பரப்பும் சுருங்குது. அது பிறகு 1969இல் மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு உயிரிழப்புகள் நடந்த பிறகு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறுது. சரி, ஏன் தமிழ்நாடுன்னு பெயர் மாத்தினாங்க? தமிழ் மக்கள் வாழும் இடம் தமிழ்நாடு என்று இலக்கியங்களில் பதிவாகி இருக்குது. அந்த அடிப்படையில்தான் பெயர் மாற்றம் ஆனது. 

சரி, இந்த மக்களின் பின்புலம் என்ன? இவங்க எப்படி உலகை வென்றாங்க? நடந்தே சென்றார்களா? 

இல்லியே! கடல் வழியாப் போனாங்க. உலகம் முழுக்க இவர்களின் பதிவுகள் இருக்குதே! அது ஏன் இப்போ தெரியவில்லை! அதற்கான முக்கியக் காரணம் நமக்கு நமக்கான புவியியல் புரிதல் இல்லை. நமக்கு நம் நில அமைப்பைப் பற்றித் தெளிவான அறிதல் இல்லை. 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நில அமைப்பைப் பற்றிப் பேசும்போது கடல் எங்கு இருந்தது? உள்ளே இருந்ததா? வெளியே இருந்ததா? நிலப் பகுதி எங்க இருந்துது? அதை ஆராய்ந்து இருக்கோமா? 

நாம பூம்புகார் கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். மாமல்லபுரத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். திருச்செந்தூரின் ஒரு பக்கம் கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். அதே சமயத்தில, கன்னியாகுமரி கடலில் நிலப் பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது பற்றிப் பல வகையாகப் பேசுறோம்.

குறிப்பா, கன்னியாகுமரியிலிருந்து மடகாஸ்கர் பகுதி வரை கடலில் மூழ்கியிருக்கும் பகுதியை ‘லெமூரியா கண்டம்’ என்றும், தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் ‘குமரிக் கண்டம்’ என்றும் சொல்றோம். அதையே ‘கடல் கொண்ட தென்னாடு’ என்றும் சொல்றோம். 

இவ்வளவு ஆளுமை நிரம்பிய இந்த இடத்தின் சிறப்பு என்ன? உலக மக்களே பயணம் செய்யப் பயந்த கடலில் பயணம் செய்து, கிழக்கையும் மேற்கையும் இணைத்த இந்த மக்களின் திறன் என்ன? கடலோடிகளின் திறன் என்ன? இவங்க கடல் வழியா என்னென்ன கொண்டு போனாங்க? என்னென்ன கொண்டு வந்தாங்க? இவங்க எப்படி உலக மக்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தாங்க என்பதுதான் நமது தேடல். 

சென்னையின் பழைய பெயர் திரையர் நாடு. இளந்திரையன் என்ற அரசனே இங்கு மன்னனாக இருந்துள்ளார். திரையர்கள் கடலில் சென்று மீண்டு வந்தால் அவர்களைத் ‘திரைமீளர்கள்’ என்று சொல்வார்கள். இந்தச் சொல் உலகிலேயே தமிழர்களுக்கு மட்டும்தான் உள்ளது. 

‘திரைமீளர்’ என்ற சொல்லை உச்சரிக்கத் தெரியாத பிற இனத்தவா்களால் திரமில, திரவிட, திராவிடா் என்ற சொல்லாகத் திரிந்து போனது. இவ்வாறு, திராவிடா் என்பது இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல என்பதும், இயல்பான பொருளை உணா்த்தும் நேரடியான சொல் அல்ல என்பதும் தெளிவாகிறது.

எனவே, கடலுக்குச் சென்று மீண்டவா்களைக் குறிக்கும் 'திரைமீளா்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிந்த கொச்சை வடிவமே ‘திராவிடா்’ என்பதாகும்.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506


வெள்ளி, 6 அக்டோபர், 2023

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு நிலைத்திருப்பார்.

பெருந்துயர் இரங்கல்.

தமிழர் வரலாற்று வரைவியலை, உலகலாவிய ஆய்வுத்தேடல்களாலும் புதிய தரவுகளாலும் வலுப்படுத்தி உருவாக்கியதில் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. தமது வாழ்நாள் முழுதும் தமிழர் அடையாள மேன்மைக்கு அரும்பாடுபட்டவர்.

தமிழர் வரலாற்றைத் தேடிய பயணத்தையும் பெருந்தாகத்தையும் இவரளவுக்குக் கொண்டவர்கள் தற்போது யாருமே இல்லை. 

என் மீதும் என் எழுத்துகளின் மீதும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். அவ்வப்போது எம்மை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்.

அய்யாவின் ஆய்வுகள் அனைத்தும் நூல்களாக வெளிவரவேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தேன். அதற்கான முயற்சிகளிலும் அய்யா ஈடுபட்டிருந்தார். அண்மைக் காலத்திய உடல்நலக் குறைவு காரணமாக அதை உடனடியாகச் செய்திட முடியாமல் போயிற்று.

அய்யாவின் மறைவு தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு. வருங்காலத்தில் அய்யாவின் ஆய்வுகளை நூல்வடிவில் நிலைத்திருக்கச் செய்வதுதான் அய்யாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

அய்யாவின் மறைவு பெருந்துயரைத் தந்திருக்கிறது.

அய்யாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.அய்யாவுக்குப் புகழ் வணக்கம்.

இனி,

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு அவர்கள் நிலைத்திருப்பார்.

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

06.10.2023.




ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இன்றைய சமூக நிலைமைகளைச் சீர்செய்வதற்கான புத்தகம் : மு.மகேந்திரபாபு


முனைவர் மகாராசன் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்கிற நூல், இன்றைய கல்வி முறையையும், தற்போதைய பாடத்திட்டம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கல்விக்கூடத்தினின்று எவ்வாறு அப்புறப்படுத்துகிறது என்பதையும், அதைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறது.

அளவில் சிறிய புத்தகம் என்றாலும் இன்றைய சமூக நிலையைச் சீர்செய்வதற்காக எழுதப்பட்ட புத்தகம் என்பதை நாம் இவரது எழுத்துகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடமும், அரசிடமும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் இது.

இப்புத்தகத்தில் இரண்டே கட்டுரைகள். முதலாவது கட்டுரை ' மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள் - புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல்'. 2022 - 23 ஆம் கல்வியாண்டு இறுதித் தேர்வினை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத வரவில்லை. அதற்கான சமூக & அகக் காரணிகள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

தற்போதைய நடைமுறையில் இருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது மீத்திறன் மாணவர்களையும், சாராசரி மாணவர்களையும், மெல்லக் கற்கும் மாணவர்களையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா ? எனக் கேள்வி எழுப்புகிறார் கட்டுரை ஆசிரியர். 

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என கட்டுரையாசிரியர் கூறுவது முற்றிலும் உண்மையே. இதைக்களைவதற்கு ஆரோக்கியமான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்.

*மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்வி சார்ந்த கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்தல்.

* பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்தல்.

* 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரத்து செய்தல்.

*வினாத்தாள் மதிப்பெண் பகுப்புமுறையை ( Blue Print ) நடைமுறையை மீண்டும் கொண்டுவருதல்.

* ஆசிரியர்களுக்கு முழுமையான பணிப்பாதுகாப்பு வழங்குதல்.

* ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல்.

இது போன்று பல ஆரோக்கியமான ஆலோசனைகள் நூல் முழுமையும் தந்துள்ளார் கட்டுரையாளர் மகாராசன். 

'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்ற இரண்டாவது கட்டுரை, மாணவர்களின் இன்றைய நிலையை விரிவாகப் பேசுகிறது. பிஞ்சு நெஞ்சிலே சாதிய நஞ்சுடன் இன்றைய மாணவர்கள் வலம் வருவதையும் , அவர்களால் பாதிக்கப்படும் சக மாணவர்களைப் பற்றியும் ஆய்வு நோக்கில் பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார் கட்டுரையாசிரியர். 

சாதி தெரியாமல், மதம் தெரியாமல் பாடித்திரிந்த பறவைகளாக இருந்தது ஒரு காலத்தில் பள்ளிப்பருவம். ஆனால் இன்று பள்ளிப் பருவம் சிலருக்கு எவ்வாறு உள்ளது என்பதை சமீபத்தில் நிகழ்ந்த நாங்குநேரி துயரச் சம்பவத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறார். சாதிய அடையாளக் கயிறுகளுடன் வலம் வரும் மாணவர்களின் மனநிலையும், ஆசிரியர்கள் சிலரும், பெற்றோரும் மற்றும் புறச்சூழல்களும் எவ்வாறு உள்ளன என்பதை மிக நேர்த்தியாக, பாரபட்சமற்ற முறையில் தெளிவான கண்ணோட்டத்துடன் உண்மையை எடுத்துரைக்கிறார். வெறும் கற்பனைக் கட்டுரையாக இல்லாது களப்பணி செய்தவர்களின் அனுபவத்தையும், உண்மையையும் பதிவு செய்திருக்கிறார். மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்குப் பெற்றோர்கள் எவ்வாறு காரணம் என்பதையும் விளக்குகிறது இக்கட்டுரை. 

பெற்றோர், ஆசிரியர், மாணவர் என அனைவருக்குள்ளும் உள்ள தற்சார்பு சாதியக் கண்ணோட்டம் எவ்வளவு தீமையைத் தருகிறது என்பதை நாம் உணர முடிகிறது. கல்வியின் சிறப்புகளையும், எழுத்தாளர்கள் பூமணி, சோ.தர்மன் அவர்களின் அனுபவப் பகிர்வுகளையும் ஆவணப் படுத்தியுள்ளார்.

மிகக்குறுகிய காலத்தில் எழுதி வெளிவந்த நூலாயினும், பல்லாண்டுகளாகச் இச்சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய விசம் எவ்வாறு களையப்பட வேண்டும் என்பதை நாம் தெரியவும் தெளியவுமான அற்புதமான பொக்கிசமாக இந்நூல் அமைந்துள்ளது. இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.

கட்டுரையாளர்:
மு.மகேந்திர பாபு,
ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்,
பைந்தமிழ் வலையொளி.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

சனி, 30 செப்டம்பர், 2023

கல்வி அகச்சூழலும் சமூகப் புறச்சூழலும் குறித்த உரையாடலை முன்னெடுத்திருக்கும் நூல் : பி.பாலசுப்பிரமணியன்


தமிழ்ச்சமூகம், கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் ஏர் மகாராசன். தற்போது, தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இவரது அண்மை நூல் தமிழகத்தில் பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. 

நூலின் அணிந்துரையில் ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன், “தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும் காட்சி ஊடகங்களும் கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலகட்டத்தில் செய்திருக்கிறார்” என்று குறிப்பிடுவது பெரும் கவனத்திற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் கண்முன்னே சீரழிவதை நினைத்தால் மனம் பதறுகிறது. பழங்காலத்தில் கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரியதாக இருந்தது. அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்க வந்த வரலாறு அண்மையிலானது. 

மீண்டும் விளிம்புநிலை மக்களைக் கல்விக்கூடங்களிலிருந்து புறந்தள்ளுகிற நவீனத் தீண்டாமைச் சூழல் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது கல்வி கற்று முன்னுக்கு வந்து விட வேண்டும் என்ற வேட்கையில் எண்ணற்ற மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். அவர்களுக்கு அரசும் சமூகமும் திருப்பியளிப்பது என்ன? என்ற கேள்வி உள்ளூர எழுகிறது.

சாதிய மனோபாவத்துடன் கையில் அரிவாளுடனும் மதுப்புட்டி, கூலிப், சிகரெட் போன்ற போதைப்பொருட்களுடனும் வலம் வருகின்ற மாணவர்களைச் சாலைகளில் பார்க்கின்ற போது ஒரு நிமிடம் மனம் கனத்துப் போகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, பொதுமையில்லாத சுமையான பாடத்திட்டம், கல்வியிருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகுதல், பெற்றோர்களின் பொறுப்பின்மை, வாக்குவங்கி அரசியலுக்காக எதையும் கண்டும் காணாமல் இருக்கும் அரசு, அரசியந்திரத்திற்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற புரிதலற்ற ஊடகங்கள், மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் காட்டாத வெற்றுக் கோசமிடும் சமூக இயக்கங்கள், இளைஞர் மனதில் மனித விரோதப் போக்குகள் சார்ந்த கருத்தியல்களை நஞ்சூட்டும் சாதிய, மத நிறுவனங்கள், இயக்கங்கள், சங்கங்களின் செயல்பாடுகள் என யாரைக் குற்றம் சொல்வது? என்ற நிலையில் தான் எழுத்தாளர் மகாராசனின் இந்நூல் வெளிவந்திருக்கிறது. 

மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள்: புதியபாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல், மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து : சமூகப் புறச்சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும் என இரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

2022 – 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 11, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை, தேர்வு எழுதவில்லை என்ற செய்தி தமிழகம் முழுக்கப் பேசு பொருளானது. இதற்கு யார் காரணம்? என்ற கேள்வியை எழுப்பி முதற்கட்டுரையில் விவாதிக்கிறார் மகாராசன்.

மாணவர்களின் குடும்பச்சூழலும் பொருளாதார நிலையும் அவர்களின் தீய நடவடிக்கைகளும் காரணமாக இருந்தாலும் மாணவர்களைக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்தும் புதியபாடத்திட்டம் முதன்மைக் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

மீத்திறன் மாணவர்கள் (High ability learning Students), சராசரி மாணவர்கள் (Average level learning Students), மெல்லக் கற்கும் மாணவர்கள் (Slow learning Students) என்று கல்வி கற்கும் மாணவர்களைக் கல்வியாளர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கூறுவர். இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளப் பாடத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதல்ல. இது மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. பாடம் முழுமைக்கும் படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில் அவர்களால் பாடத்தை எளிதில் உள்வாங்க முடியவில்லை. ஆசிரியர்கள் மெனக்கெட்டும் முடியவில்லை. இதனால்தான் மெல்லக்கற்கும் மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை நிகழ்கிறது. 

இதன்காரணமாக அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சமூக உதிரிகளாக மாறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இதைப்பற்றி அரசும் சமூகமும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகக் கல்வித்துறை கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் உடனடியாகச் செய்திடல் வேண்டும். சீரமைப்பில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்தரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும். வினாத்தாள் மதிப்பெண் பகுப்புமுறை (Blueprint) புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. அது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். ஆசிரியர்களின் உள்ளக்குரலை மனம் திறந்து கேட்கவும் நியாயங்களை உணர்ந்து கொள்ளவும் கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இன்றைய கல்விச்சூழல் பற்றியும் கல்விசார் பிரச்சினைகள் குறித்தும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைக்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதை முதற்கட்டுரையில் காத்திரமாக விவாதிக்கிறார்.

நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அவரது தங்கை சந்திரா செல்வி மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல், நாங்குநேரி ஊரின் கள நிலவரம், தென்மாவட்டப் பள்ளிகளில் நிலவும் சாதியம், கிராமத்தில் உள்ள மூத்த இளைஞர்கள் மாணவர்களிடையே சாதிய நஞ்சை விதைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் அரசியல் கட்சிகள், சாதிக்கட்சிகள், சமூக இயக்கங்கள், அரசு அதிகாரிகளின் அபத்த மனநிலை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

கொலைவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரிப் படிப்பிற்கான முழுச்செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கல்வி அமைச்சர் கூறுவது இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வாகும்? என்ற கேள்வியை எழுப்புகிறார். பாதிக்கப்பட்டவருக்கு அரசு இழப்பீடு கொடுப்பது மட்டும் சமூகத் தீர்வாகாது. 

பாதிக்கப்பட்டவர்கள் விளிம்புநிலையினர். அவர்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் சகமனிதர்களைப்போல நிம்மதியாக வாழ வழியமைத்துக் கொடுப்பது அரசின் கடமை என்று குறிப்பிடுகிறார்.  

ரோஹித்வெமுலா, சங்கர், இளவரசன், கோகுல்ராஜ், சின்னதுரை என்ற வரிசை நீள்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதலால் பல மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது.

திருவிழாக்கள், குருபூஜைகள், திருமணச் சுவரொட்டிகள், பதாகைகளில் சாதியமனோபாவம் தலைவிரித்தாடுகிறது. இதில் பெரும்பான்மை பங்கு கொள்பவர்கள் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருப்பது பெரும் வருத்தத்திற்குரியதாகும். கயிறு, அரிவாள், டீசர்ட் என சாதிய அடையாளம் மாறிக்கொண்டேயிருக்கிறது. 

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் சாதிய மனோநிலை இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது. 

சாதிக்கட்சிகளும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இளைஞர்களிடையே சமத்துவத்தைப் போதிப்பதில்லை. மாறாக, தேசியத்தலைவர்களைச் சாதித்தலைவர்களாக அடையாளப்படுத்தல், இடஒதுக்கீடு பற்றித் தவறான புரிதலை ஏற்படுத்துதல், மாமேதை அம்பேத்கரை எல்லோருக்குமான தலைவர் என அடையாளப்படுத்தாமை, போதைப்பொருள் பயன்படுத்துதலைக் கண்டிக்காமை போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கிமானதல்ல. காவல்துறை, வழக்கறிஞர், நீதித்துறையினர் இணைந்து சமூக உதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பெரும் அவலத்திற்குரியதாகும்.

தாழ்ந்த சாதி, உயர்சாதி, மேல்சாதி, ஆதிக்கசாதி, இடைநிலைச்சாதி ஆகிய சொல்லாடல்கள் பிழையானவை, செயற்கையானவை. மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படுத்தப்பட்ட என்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. சமகாலத்தில் இந்தச் சொற்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல என்ற கருத்தும் கற்றவர்கள் மத்தியில் நிலவுகிறது. 

அட்டவணைச் சாதியினர், பட்டியலினச் சாதியினர் என்ற சொற்களைப் பயன்படுத்துவதுதான் சாியானது எனக்கருதுபவரகள் உண்டு என்கிறார் மகாராசன்.  

பெற்றோர்களின் பொறுப்பின்மையும் மாணவர்கள் சீரழிவதற்குக் காரணமாக அமைகிறது. இன்னும் சிலர் மாணவர்கள் கெட்டுப் போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்ற பொதுப்புத்தியுடன் வலம் வருகின்றனர். இது தவறான பார்வை என்கிறார் மகாராசன். 

இன்று ஆசிரியர்களுக்குரிய ஆகப்பெரிய அதிகாரம் என்பது தவறிழைக்கும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் அதிகாரிகளிடமும் மன்னிப்புக் கேட்பது மட்டுமே என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தமிழகப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலையை உணரமுடிகிறது.

சமகாலச் சூழலில் மாணவர்களாலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். பெற்றோர் கும்பலாகப் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களைத் தாக்கும் வன்ம நிகழ்வுகளை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் காணப்படும் சாதிய மனோபாவம் மாணவர்களைச் சமூக உதிரிகளாக மாற்றுகிறது. இது போன்ற ஆசிரியர்களைக் கண்டுபிடித்துக் களையெடுக்க வேண்டும். குறிப்பாக, மாநில, தேசிய அளவிலான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பின்பற்றப்பட வேண்டும்.

அறம்சார்ந்த சமூகக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் தேவையானதாக இருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு அறுபடாமல் இருக்க இத்தகைய கல்வி அவசியமானதாகும்.

இறுதியாக, “எல்லாரும் சமம்தானே டீச்சர்” எனச் சாதியத்தை அடித்து நொறுக்கி ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பித்த முனீஸ்வரனை நூலில் பாராட்டியது மட்டுமல்லாமல் இந்த நூலை அவருக்கே தளுகையாக்கியிருக்கிறார் நூலாசிரியர். ஆக, மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறும் பேராபத்தைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இது ஒவ்வொரு சமூக மனிதரின் உடனடிக் கடமையாகும் என்ற சிந்தனையை நூலில் விதைக்கிறார். 

மாணவர், பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர்கள், அரசியலாளர்கள், சிந்தனையாளர்கள் இணைந்து கைகோர்த்து மாணவர்களின் வாழ்வை உயர்த்திட வேண்டும் என்பதை மையநோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது எனலாம். இந்நூலை அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் படித்து ஒரு பெரும் உரையாடலை, விவாதத்தை எழுப்பினால் சமூகம் ஆரோக்கியம் பெறும் என நம்புகிறேன். 

கட்டுரையாளர்: 
பி.பாலசுப்பிரமணியன்,
பேராசிரியர் மற்றும் ஊடகவியலாளர்.
தொடர்புக்கு: uyirneyan@gmail.com

நன்றி:
தி இந்து தமிழ் திசை நாளிதழ்,
30.09.2023.

*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


புதன், 27 செப்டம்பர், 2023

சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கிச் சிந்திக்க வைக்கும் நூல்: தேனி சுந்தர்


ஏர் மகாராசன் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூல் குறித்து..

நாங்குநேரி சம்பவம் தமிழ்ச் சமூகத்தை மிகவும் உலுக்கிய ஒன்று. காரணம், பாதிக்கப் பட்டவர்கள் குழந்தைகள். பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் குழந்தைகள் தான்..! ஆக, பாதிக்கப் பட்டவர்கள் இரு தரப்பினரும் தான். 


சின்னத் துரையும் சந்திரா செல்வியும் சக மாணவர்களால் பாதிக்கப் பட்டார்கள். எனில் சக நண்பனையே கொல்லத் துணிகிற அந்த சாதிய மனோவியாதிக்கு உள்ளான அவர்கள் யாரால் பாதிக்கப் பட்டவர்கள் என்பதையே இந்நூல் மிக விரிவாக பேசுகிறது.


ஒடுக்கப் பட்ட மக்கள் தங்கள் துயர வாழ்வில் இருந்து மீள்வதற்கு, உயர்வதற்கு ஒரே துடுப்பாக, துருப்பாக இருக்கும் கல்வி இன்று என்னவாக மாறி இருக்கிறது. அரசின் திட்டங்கள் யாவும் அனைவருக்கும் என்றில்லாமல், எவ்வாறு இலக்கு சார் திட்டங்களாக மாறி வருகின்றனவோ அதுபோல கல்வியும் இலக்கு சார் ஒன்றாக மாறி இருக்கிறது. அதன் இலக்கு "எலைட்" மட்டுமாக இருக்கிறது. சாமானிய வீடுகளில் இருந்து, பள்ளிக்குள் முதல் முறையாக நுழைந்து, கல்வியில் மெல்ல மலரும் குழந்தைகளாக இருப்போரை அது கவனத்தில் கொள்ள மறுக்கிறது. அவர்கள் அவர்களாகவே கல்வியில் இருந்து வெளியேற ஏதுவான சூழலை திட்டமிட்டு உருவாக்கும் ஒன்றாக செயல்படுத்தப் படுகிறது.


யாரும் விரும்பித் தங்களைத் தாங்களே தாழ்த்தி கொள்ளவில்லை. எனவே தாழ்ந்த சாதியினர் அல்ல, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதி. உலகம் உருவான போதே, ஆதி காலத்தில் இருந்து பிறக்கும் போதே உயர்ந்த சாதி அல்ல. பல்வேறு சமூகச் சூழல்களை பயன்படுத்தி தங்களைத் தாங்களே "உயர்த்திக் கொண்ட" சாதியினர் தான். எனில் உயர்சாதி, மேல்சாதி, ஆதிக்க சாதி என்றும் கீழ்சாதி, இழிசாதி, தாழ்ந்த சாதி என்றும் பயன்படுத்தப் படும் சொற்பிரயோகம் சரியா? அந்தந்த சாதியினர் சொல்லிக் கொள்வது தாண்டி, பொது சமூகமும் ஊடகமும் அப்படியே குறிப்பிடுவது நியாயமா? என்கிறார்.


200 ஏக்கர் நிலத்தை நீர் இருந்தும் பாசானம் இல்லாமல் தரிசாக போட்டு வைக்கும் சாதியை என்ன சொல்வது??


ஊரில், தெருவில், குடும்பத்தில், ஊர்த் திருவிழாக்களில், அரசியலில், பள்ளியில், கல்லூரியில் சாதி எங்கு இல்லாமல் இருக்கிறது?


பெற்றோர், ஆசிரியர், பேராசிரியர், அரசியல் அமைப்புக்கள், தலைவர்கள் என எல்லா மட்டத்திலும் ஊடுருவி இருக்கும் சாதியை, சாதிய உணர்வை எவ்வாறு களைவது??


கயிறு, பாசி, பொட்டு என சுயசாதி அடையாளங்கள், சுயசாதி பெருமிதங்கள் தான் சுயசாதி அணிதிரட்டலுக்கான அச்சாணி, இந்த அணி திரட்டல்கள் தான் பிற சாதியினர் மீதான அத்துமீறல்கள், சீண்டல்கள், பாலியல் துன்புறுத்தல், வன்முறை, கொலைவெறி தாக்குதல் என அவர்களை வழிநடத்துகிறது என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்??


சாதிய அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியல் செல்வாக்கு செலுத்தும் சூழலில் கொடூரமான சாதிய தாக்குதல்களை கூட உறுதியாக, தைரியமாக கண்டிக்க மறுக்கும் அரசியல் கட்சிகளை நாம் நிராகரிக்க வேண்டாமா??


வன்முறையில் ஈடுபட்டவர்கள் குழந்தைகள் என்றாலும் எது அவர்களுக்கு சரியான தண்டனையாக இருக்கும்..? எது மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும்??


பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டுமா? அது போதுமா? நீதி வேண்டுமா? எனில் எது அவர்களுக்கான நீதி??


பள்ளியில் என்ன செய்ய வேண்டும்? பாடத்திட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? பாடத் திட்டக் குழுவில் என்ன செய்ய வேண்டும்? இதுவரை யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாரெல்லாம் இருக்க வேண்டும்??


இவை அத்தனைக்கும் பிறப்பிடமாக இருக்கின்ற சமூகத்தில் என்ன செய்ய வேண்டும்??


இந்தப் பிரச்சினையின் ஊடாக, பல்வேறு கேள்விகளை எழுப்பி, எண்ணங்களைத்  தூண்டி, நம்மை ஒரு சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கி சிந்திக்க வைக்கிறது இந்நூல்..


அரசு நாங்குநேரி சம்பவம் தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்துள்ளது. அது போல எங்கள் ஊர் ஏர் மகாராசன் தனக்குத் தானே ஒரு நபர் குழுவை அமைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கோணங்களிலும் ஆராய்ந்து சமூகத்தின் முன் வைத்துள்ள "ஏர் மகாராசன் குழு அறிக்கை" தான் இது..!


எழுத்தாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..


கட்டுரையாளர்:

தேனி சுந்தர்,

எழுத்தாளர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்.

டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,

ஆசிரியர்: மகாராசன்,

முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,

பக்கங்கள்: 72

விலை: உரூ 90/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 

ஆதி பதிப்பகம்

99948 80005.


அஞ்சலில் நூலைப் பெற:

செந்தில் வரதவேல்

90805 14506.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

திலீபன்: விடுதலைப்பசி உணர்த்திய பேரறம் - மகாராசன்


தமிழ் இனத்தின் 
விடுதலைப் பசிக்குத்
தன்னுயிரை
மெல்ல மெல்லத் 
தின்னக்கொடுத்தவன்.

ஈழக் கனவை
நிலத்தில் விதைத்து,
சொட்டு நீரும் அருந்தாமல்
உண்ணா நோன்பிருந்து
உயிர் நீத்தவன்.

அறத்தையும் மறத்தையும்
காண்பித்துப் போன
ஈகத்தின் பெருஞ்சுடர்
திலீபன்.

தமிழர் தாயகத்தின் 
விடுதலைப் பசி உணர்த்திய பேரறம் திலீபம்.

திலீபனின்
தாயகப் பசிதான்
இன்னும் அடங்கவில்லை.

ஏர் மகாராசன்


சனி, 23 செப்டம்பர், 2023

இந்தியக் கல்வியகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிற சாதிய மதவாதப் பிற்போக்குத்தனங்களின் நிலைகளைச் சுட்டும் நூல்: கு.தமிழ்வேந்தன்


கல்வியாளர் முனைவர் மகாராசன் அவர்கள் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்ற புத்தகம், கல்வி நிலையங்களில் நடந்துகொண்டிருக்கிற அவலங்களையும், வகுப்பறைக்குள் மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் போராசிரியர்களும் இறுகப் பற்றியுள்ள சாதிய அபிமானங்களையும், இன்றைய நவீன சமூக அகப் புறச் சூழலிருந்து அவற்றை எப்படி மழுங்கடிக்க வேண்டும் என்ற கருத்தாங்களையும் நிகழ்கால இரத்தக்கறை படிந்த சம்பவங்களோடு எடுத்துரைக்கிறார். 


லும்பர் கல்ச்சர் என்கிற உதிரியான மாணவர் கலாச்சார நிகழ்வுகள் தற்கால மாணவர்களிடையே அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் எனப்படும் பள்ளி மாணவ மாணவிகள் கூலிப்(புகையிலை), கஞ்சா, மது என எல்லா தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி இருக்கின்றனர். நவீனத் தொழில் நுட்பங்களான முகநூல், சுட்டுரை, படவரி (Instagram) என ஏராளமான மின்னணுச் சாதனங்களில் வருங்கால இளைய தலைமுறை அதிலே மூழ்கிக் கிடப்பதற்கான பங்களிப்பை அதிகமாக வழங்கி வருகிறது.   

ஏற்கனவே உயர்கல்வி படித்து முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்று கிடைத்த வேலைகளுக்குச் செல்லும் சூழலுக்குப் பலர் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அதனோடு அதிக பாடச்சுமையால் மாணவர்கள் பள்ளியை விட்டு இடைநிற்றலுக்குப் பலர் ஆளாகின்றனர். மாறிக்கொண்டிருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்விகளும் மாற்றமாக வேண்டும் என்பது உண்மை. ஆனால், சமூகக் கட்டமைப்பில் நிலவக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டும், பொருளாதார விளிம்புநிலைக் குடும்பங்களையும் முதல் தலைமுறை மாணவர்களையும் கணக்கில் எடுத்தும் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய நிலைப்பாட்டைப் புரியாமல் அதிக பாடப்பொருண்மைகளைக் கல்வி வல்லுநர்கள் திணிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், படிக்கும் மாணவர்களோடு ஒப்பிட்டுப் பல மொழிகள், நடனம், பாட்டு, தற்காப்புக்கலைகள் என காலை, மாலை, இரவெனத் தொடர்ச்சியாக இயங்கும் இயந்திரம் போன்று இன்றைய மாணவர்களை இருக்க வைக்கப் பல பெற்றோர்களும் விரும்புகின்றனர்.

மாணவர்களின் வாசிப்புத் திறனும் கூர்த்த கவனிப்பும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதிலும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடுகள் நிறைய இருக்கும். அத்தகைய வேறுபாடுகள் நிறைந்த மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும், அனைத்துச் சமூகப் பிரதிநிதிகளும் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் இடம் பெற வேண்டும் எனவும் வற்புறுத்துகிறார் நூலாசிரியர்.

சக மாணவனோடு நெருக்கமாகப் பழகிய ஒருவனை, சாதியக் கண்ணோட்டத்தோடு வீடு புகுந்து வெட்டும் கொடூர மனநிலைக்கு மடைமாற்றிய பொறுப்பும் தங்களை உயர்த்திக்கொண்ட சாதி மனக்கும்பலுக்கு உள்ளது எனவும் சுட்டிக் காட்டுகிறார். 

நாங்குநேரியில் நடந்தது சாதிவெறி மட்டுமில்லை. சமூக அடாவடித்தனமும் கட்டபஞ்சாயத்துகளும் அதிகமாக அங்கு கோலோச்சுகிறது. அதனால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பலர் தங்கள் குடியிருப்பை விட்டு வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்தும் இருக்கின்றனர். 

மாணவர்கள் சாதிக் குழுக்களாக ஒன்று சேர்ந்து பிறர் சமூக மாணவனை சாதி சொல்லிச் திட்டுவது,தாக்குவது, பள்ளிச் சுவற்றில் பிற சமூகங்ளை இழிவாக எழுதி வைப்பது, கூடவே ஆசிரியர்களும் தன்சாதி ஆசிரியர்களோடு சேர்ந்து கொண்டு பிறரை ஒதுக்கி வைக்கும் சாதிய வன்மம் ஆசிரியர்களிடமும் இருக்கிறது என்கிறார்.

அம்பேத்கர் அவர்கள் படிக்கவே கூடாது என்கிற கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் சிலரின் உதவிகளால் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தார். அவரே கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தியோடு அதனைச் சட்டமாக்கிக் கிடைக்க வழிவகையும் செய்தவர். ஆனால் இன்று அவரின் சிலைகள் உடைக்கப்படுவதும் சிலையின் வர்ணத்தை மாற்றுவதுமாக நடைபெறும் ஆபத்துப் போக்கு நிகழ்கிறது. அவரை குறுகிய சாதி வட்டத்துக்குள் அடைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கும் குறுக்குப் புத்தியும் நடைபெற்று வருகிறது. 

வடமாவட்டங்களில் அம்பேத்கர் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டிருக்கும். ஆனால் மேற்கு மாவட்டங்களில் அவரின் சிலை அரிதான ஒன்றாக இருக்கிறது. எந்த இயக்கங்களால் அவரின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதோ அவர்களே முற்றிலும் புறந்தள்ளும் சூழல் நிகழ்ந்தேறி வருகிறது. இதனையெல்லாம் அழகாகச் சுட்டிக்காட்டி உள்ளார். 

இணையத்தில் உலவும் காணொலி ஒன்றில் அம்பேத்கர் அவர்களை "டாக்டர் அம்பேத்கர்" என்று சொல்கிறீர்களே அவருக்கு ஊசி போடர் தெரியுமா? மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியுமா என்று கல்வியின் புரிதல் இல்லாமல் பேசும் சூழல் அரசியல் அதிகாரத்தினால் நஞ்சை விதைக்கும் போக்கு நன்றாக அரங்கேறி இருக்கிறது.

கடந்த காலங்களில் ஐஐடி (IIT) நிறுவனங்களில் நிலவிய சாதி வெறியாட்டம் தற்கொலைக்குத் தூண்டி மாணவர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு.

கயிறு அரசியல், கேளிக்கை சினிமா, இணையதள சாதிச் சண்டை, திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் தென்படும் பிளக்ஸ், இரு சக்கர வாகனம், ஆட்டோக்களில் எழுதப்படும் ஆண்டசாதி உரையாடல் இவையெல்லாம் மூர்க்கத்தனமான நஞ்சை விதைத்து, பிறரிடம் சராசரியாகப் பேசக்கூட முடியாமல் செய்ய வைக்கிறது. அரசியல் அதிகாரத் துணையால் நடைபெறும் இத்தகைய அடாவடித்தனங்களை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யும் வேலையைச் செய்வது அனைவரின் கடமையாகும்.

மிக மிகக் குறுகிய காலத்தில் எதிர்வினையாற்றி இந்நூலைக் கொண்டு வந்தற்கு வாழ்த்துகளும் பேரன்பும் தோழர்.


கட்டுரையாளர்:
கு.தமிழ்வேந்தன்
கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர் : மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள் : 72
விலை : உரூ 90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம்,    
தொடர்புக்கு : 99948 80005.


மாணவர்கள் பிம்பச் சிறையிலிருந்து விடுபட உதவும் திறவுகோல் நூல்: அறிவழகன்


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸைவிட அதிவேகமாகவே தொற்றிப் பரவிவருகிறது சாதியம். குறியீடுகளின் ஊடே, வன்மத்தில் ஊடாடி வரும் வன்முறையின் கோரமுகங்கள் எங்கிருந்து ஊற்றுக்கண்ணாகச் சுரக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கள ஆய்வு செய்தும், தமது ஆசிரியர் பணியில் கிடைத்த மாணவர்களின் உளவியல் சிக்கல்களையும் ஆய்வு செய்தும், சமூகத்தில் மாணவர்களின் விட்டேத்தி நிலைகளையும் பல விடயங்களையும் நம்மிடம் தந்து விசனப்படுத்தி விடுகிறது மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல்.

தக்க நேரத்தில் தக்க ஆதாரங்களையும், பள்ளிகளின் வகுப்பறைகளில் படிந்தபடி கிடக்கும் சாதியவெறியில், அறமற்றவர்களால் விரையம் செய்யபட்ட அப்பாவி மாணவர்களின் ரத்தம் படிந்த புத்தகங்களையும் நம்மிடம் நிழலாடச் செய்கிறார் ஆசிரியர்.

நாங்குநேரியில் வாழ்ந்த தலித் மக்களின் விவசாய நிலங்கள் தரிசாக்கப்பட்டு இதர சமூகத்திடம் கைமாற்றப்பட்ட தாட்டிய அரசியலைத் துல்லியமாகவும் ஆதாரத்துடனும் காட்டிச் செல்கிறார்.

சாலைகள் தோறும் சாதியக் குறியீடுகள், திரைபடங்களின் பஞ்ச் டயலாக் பேனர்கள், மாணவர்கள் கையில் கயிறு அரசியல் என்று பல நோக்கில் மாணவர்களைக் களிமண் பொம்மைகளாக வனையப்படும் ஒவ்வொன்றையும் எவ்விதமான சமரசமும் அற்று இந்நூல் பேசுகிறது. சமூக அக்கறையோடு, அதைகாட்டிலும் காலத்தையறிந்து வெளிவந்தது என்பதற்காகவும் கூடுதல் பாராட்டுகள்.

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். இந்நூல் பள்ளிகள் தோறும் மாணவர்கள் வாசித்தால் பிம்பச் சிறையில் இருந்து விடுபடவும் இது திறவுகோலாகும் என்பது உண்மை.

வாழ்க ஆசிரியர் ஏர் மகாராசன்.

நன்றியும் பேரன்பும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அறிவழகன்,
கவிஞர் மற்றும் சிறுகதை ஆசிரியர்.

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


ஆசிரியச் சமூகம் வாசிக்க வேண்டிய நூல்: திலகர்


நீண்ட நெடிய நாள்களுக்குப் பின் ஒரே அமர்வில் உட்கார்ந்து வாசித்தது, அண்ணன் ஏர் மகாராசன் படைத்த "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூலாகும்.

சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும், குறிப்பாகச் சமூகத்தை வழிநடத்தும் ஆசிரியர் சமூகம் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு. 

எங்கே தவறுகிறோம்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ் மண்ணில் சாதீயப் படிநிலை ஏன்? 

கல்வியை எப்படி எல்லாம் வணிகமயமாக்கியுள்ளோம்? அரசுகள் வீதி வீதிக்கு மதுக் கடைகளைத் திறந்து வைத்து விற்றுக் கொண்டு, யாரை ஏமாற்ற போதைப் பொருளை ஒழிக்கிறோம் என வெற்று விளம்பரம் செய்கிறது? 

மாணவர் - ஆசிரியர்கள் என்ற மரியாதையை, பயத்தைப் போக்கியது யார்? 

தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் கற்பதன் மூலம் அறம் சார்ந்த வாழ்வு கற்றுக் கொள்வர் என அதனை நீக்கியது யார்? 

மாணவர்கள் கல்வி கற்று முடித்த உடன், கண்டிப்பாகப் பணம் சம்பாத்தித்துக் கொடுக்கும் ஏடிஎம் ஆக வேண்டும் என வாஞ்சிக்கும் பெற்றோர், அறம் சார்ந்த கல்வி முறை இல்லாமல் எப்படிச் சாதியை, தான்தோன்றித் தனமான வாழ்வை (சுயநலமான) வாழ இயலும்? 

அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் அதிகரிக்க யாரைக் குற்றம் சொல்லுவீர்கள்? 

மாணவர்களை நல் வழிப்படுத்துவதில் பொது சமூகத்தின் பங்கு என்ன? 

அனைவருக்குமான தலைவர் அம்பேத்கரை ஒரு சாரார்க்கு என ஒதுக்கியது ஏன்? அது யார்?

ஆசிரியர் மாணவர்களிடம் கெஞ்சும் நிலையை ஏற்படுத்தியது யார்? என எண்ணற்ற கேள்விகளையும் நம்முள்ளே கடத்தி, இவற்றிற்கான விடையை எப்படி? எப்போது பேசு பொருளாக மாற்றி விடை காண இருக்கிறோம்? 

நாங்குநேரி சம்பவத்தைக் கடந்து செல்லாமல், எதிர் வரும் - கல்வி கற்க வரும் சமூகத்தை எப்படிப் பாதுகாக்க இருக்கிறோம்? என்ற கேள்வியோடு, இறுதியாக, சாதீயக் கண்ணோட்டத்தை ஒழிக்க சமூகம் முன் வராமல், வெறும் சட்டங்களை இயற்றுவதோ - ஏழை / ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனிக் கல்வி நிலையங்கள் என்பதோ மட்டும் தீர்வு ஆகாது. மக்களின் பொது நிலையை மாற்ற, மதுக் கடைகளை மூடுவோம். புதிய சமூகம் படைப்போம்.

கட்டுரையாளர்:
முனைவர் செ.இரா.திலகர்,
இணைப் பேராசிரியர்,
கற்பகம் பொறியல் கல்லூரி,
சென்னை.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்: எழுத்தாளர் சோ.தர்மன்


சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திருமிகு சோ.தர்மன் அவர்கள், அண்மையில் நான் எழுதிய மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலைக் குறித்துத் தமது முகநூலில் எழுதிய அறிமுகக் குறிப்பு. அய்யா அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்.

"தம்பி ஏர் மகாராசன் எழுதியுள்ள "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்கிற சிறு புத்தகம் நேற்று ஆதி பதிப்பகத்தால் பதிவுத் தபாலில் வந்து சேர்ந்தது.

இன்றைய மாணவர்கள், குறிப்பாகப் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இன்றைய நிலையை ஆழமாகவும் விரிவாகவும் போலித்தனம் இல்லாமலும் ஆராய்கிறது.

நாங்குனேரி மாணவர்கள் வெட்டப்பட்டதின் பின்னணியை வெகு நுட்பமாக நம் முன் பேசுகிறது. முற்போக்காளர்களின் சப்பைக் கட்டுக் காரணங்களை நிராகரித்து உண்மையைப் பேசுகிறது.

ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். அரசின் கவனம் பெற வேண்டிய புத்தகம். எழுபது பக்கங்கள் மட்டுமே உள்ள மிகச் சிறிய புத்தகம்."

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க.
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை
விலை:90 ரூபாய்.
தொலை பேசி:9159933990.


சமூக வெளிச்சத்திற்கான திறப்பு நூல்: யாழ் தண்விகா


எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்...? என்ன செய்யப் போகிறோம் நாம்?

இரண்டு முக்கியச் செய்திகள் என்று கூறுவதை விட இரண்டு அதிர்ச்சிச் செய்திகள் என்று கூறிவிடலாம் இரு கட்டுரைகளை. கல்வித்துறை, மாணவர்கள், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே மலிந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களையும், அச்சீர்கேடுகளைக் களைவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகளையும் கூறும் கட்டுரைகள் இவை. இரண்டும் கல்வித்துறையோடு நேரடித் தொடர்பு உடையவை என்ற வகையில் கல்வி கற்ற அனைவரும் அல்லது சமூகம் உருப்பட நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் புத்தகம். 

முதல் கட்டுரை 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அது எதனால் என்பது குறித்துப் பேசுகிறது. முதல் பத்தியிலேயே இத்தகவல் சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாக இருந்தது என்றிருக்கிறது. ஆம். இருந்தது. கடந்தகாலத்தில் நடந்த ஒன்று, அதிலிருந்து பாடம் கற்று அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க என்னென்ன திட்டங்கள் கல்வித்துறையில் உருவாக்கப்படவேண்டும் என்பது குறித்து அலசுகிறது. 

மெல்லக் கற்போர், சராசரியாகக் கற்போர், மீத்திறன் வாய்ந்த கற்போர் இவர்கள் அனைவருக்குமான பாடத்திட்டமாக இருக்கவேண்டிய கல்வி, மீத்திறன் பெற்றவர்களுக்கான பாடத்திட்டமாகவே இருக்கிறது. அதையும் முழுமையாக சொல்லிவிட முடியவில்லை. மீத்திறன் பெற்றவர்களே பாடத்திட்டத்தைப் பார்த்து மலைக்குமாறு இருக்கிறது. அப்படியானால் சராசரியாகக் கற்போர் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டாம். தொடர்ந்து மூன்று வருட பொதுத் தேர்வு முறை. 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் உள்ள பொதுத் தேர்வு முறையால் என்ன சிக்கல் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. 

மாணவர்களை அடிமாட்டுத்தனமாக, பாடம் தவிர்த்த செயல்பாடுகள் எதுவுமற்ற இயந்திரத் தன்மையுடன் வார்த்து இக்கல்விமுறை எதைச் சாதிக்கப் போகிறது என்று பார்த்தால் மெல்லக் கற்கும் மாணவர்கள் இத்துயரிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறார்கள். அதுதான் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றனவற்றிற்குக் காரணமாக அமைகிறது. இதனைக் களைய மேற்கண்ட மூன்று பிரிவினருக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், ஆசிரியர்களிடம் கல்வித்துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்துப் பேசி தீர்வுகாண மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் பேசுகிறது முதல் கட்டுரை. 

இரண்டாம் கட்டுரை, சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பற்றியும், பகுத்தறிவு வாய்ந்த மனித சமூகம் செல்லும் இழிபாதை எப்படி படிப்படியாக பரிமாணம் பெற்று இன்று வன்முறையின் உச்சத்தில் நிற்கிறது என்பதையும், அதற்குக் காரணமாகத் திகழும் கூறுகள் எவையெவை என்பது பற்றியும், அதனை மாற்றியமைக்கும் வழிமுறைகளையும் முன்வைக்கிறது. மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவிக்கும் களங்களாக அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாறி வருகின்றன என்பது கண்கூடான உண்மை. 

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வந்திருந்தாலும் அவை பல்வேறு சமூகக் காரணிகளால் திசை திருப்பப்பட்டுவிட்டன என்கிறார் கட்டுரையாளர். அதே சமயம் நாங்குநேரியில் நடந்த கொலைவெறிச் சம்பவம் சமூகத்தால் பேசப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன்னரே, நாங்குநேரி சம்பவத்தின் இரத்தம் காயும் முன்னரே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதும் சமூகத்தின் முன்னால் தான் என்பது வருத்தம்தரும் ஒன்றாகவே பார்க்க நேரிடுகிறது. 

சின்னத்துரை மற்றும் சந்திராசெல்வி இருவரும் பள்ளி மாணவர்கள். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தாக்கியவர்களும் மாணவர்கள். அவர்கள் உயர்த்தப்பட்ட சாதியினர். தாக்கியவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தத்து. இது வெறுமனே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்த ஒன்றல்ல. 

சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல காலங்களாக ஊறிக் கிடந்த சாதியானது, சமூகங்களால் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்கள் மூலமாக வெளிப்படையாகவே இன்று தனது முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், பெரியவர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பதைவிட சாதிச் சங்கங்களில்தான் திரண்டிருக்கிறார்களோ என்கிற அளவுக்கு சாதியக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றது. இவற்றிற்கு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அனைவரும் பங்கேற்கிறார்கள். இதனை அவ்வவரின் குடும்பத்தினரே சாதிப் பெருமிதமாக நினைக்கிறார்கள். 

இதனை பல்வேறு தரவுகளின்மூலமாக கட்டுரையாளர் கூறும்பொழுது சாதியானது சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம், இனி உண்டாக்கப்போகும் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தை உருவாக்குகிறது. சாதி மற்றும் மதத்தால் உண்டாகும் வன்முறைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட சாதிகள் என இருபுறம் வாயிலாகவும் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடம் இன்று பரவலாகி வரும் அடாவடித் தாட்டியங்கள், வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைச் சீண்டல்கள் என நீளும் பட்டியலை கட்டுரையாளர் கூறுகிறார். 

இவை ஆங்காங்கே நாம் கண்ட, கேட்ட பட்டியலின் தொகுப்புதானே ஒழிய மிகையல்ல. இவற்றை மாற்ற சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம். கல்வித்துறை, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம் சார் வகுப்புகளை நடத்தவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள சாதிய மனப்பான்மை மாற வேண்டும். இட ஒதுக்கீட்டைக் கூட தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்களால் அம்பேத்கரைப் பற்றி எப்படி உயர்வாகப் பேசிவிடமுடியும் என தனது ஆதங்கங்களையும் கட்டுரையாளர் கூறியுள்ளார். 

இன்னும் பல தகவல்கள். வெறும் தரவாக மட்டுமல்லாமல் தவறான பாதையில் செல்லும் இந்தச் சமூகத்தின், மாணவர்களின், ஆசிரியர்களின், கல்வித்துறையின் குறுக்கு வெட்டுச் சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. சமூக உதிரிகளாக மாணவர்கள் மாறுவதற்கு முன்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு. அவற்றை அறிந்து களைய சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதரும், கல்வித்துறை தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. வாசியுங்கள். சமூகத்தின் மீது விழும் நல்ல வெளிச்சத்திற்கு திறப்பாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றமில்லை.

வாழ்த்துகள் தோழர் ஏர் மகாராசன்.

கட்டுரையாளர்:
யாழ் தண்விகா,
கவிஞர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


சனி, 16 செப்டம்பர், 2023

கல்விக் களத்தில் நிகழும் நுண் அரசியல் பின்புலத்தை விவரிக்கும் நூல்: தமிழ் நேயன் செ.



மாணவர் சமூகம் குறித்துப் பேசப்படாத பகுதியை மிகவும் எளிமையாகவும், சமூக அக்கறையோடும் பதிவு செய்துள்ளார் மகாராசன்.

மாறிவரும் உலகில் கல்விச்சூழல் எதை நோக்கிச் செல்கிறது? கல்வி, சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும், அதற்கான செயல்பாட்டுத் திட்டம் குறித்தும் அலசுகிறார். கல்விக் களத்தில் நிகழும் அரசியல் குறித்தும், பாடத்திட்டங்கள் வரையறைப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விரிவாக விவரிக்கின்றது 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல்.

மாணவர்களின் கற்கைத் திறன் பின்னடைவு குறித்தும், மெல்லக் கற்கும் நிலையில் உள்ள மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறுவதற்கான காரணிகளையும் பட்டியல் செய்வதோடு, அவற்றை நேர் செய்ய வேண்டிய தேவை பற்றியும் பேசுகிறார். கூடவே, கல்வித்துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நுண்அரசியல் பின்புலத்தையும் விவரிக்கிறார். 

மாணவர்கள், சமூக உதிரிகளாக மாறுவது பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் என்ற கசப்பான உண்மையைப் பதிவு செய்கிறார்.

மது, போதைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பண்பாடுகள் போன்றவை மாணவர் சமூகத்தைச் சீர்கெடுத்து உதிரிகளாக மாற்றுவதற்குத் துணை நிற்கின்றன. மது அருந்தி வரும் மாணவர்களைக் கண்டிக்க வழியில்லாமல் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், கண்காணிப்புப் துறை அலுவலர்கள் அறிவுரை வழங்குவதோடு கடமை முடிந்ததெனக் கடந்து செல்லும் போக்குதான் இன்றுவரை தொடர்கின்றது என்பதையும் காட்டுகிறது இந்நூல்.

மாணவர் ஆசிரியர் இடையே உள்ள உறவு, முன்பு போல் இல்லாமல் செயற்கைத் தன்மையோடு இறுக்கத்தை தரும் வகையில் உள்ளது. ஆசிரியராகப் பணிக்கு வருபவர்கள் பாடத்திட்டங்களை மட்டுமே கற்பித்தல் பணியெனக் கருதி ஒதுங்கிக் கொள்ளும் போக்கும் உள்ளது. மாணவர் சமூகத்தில் பதின்பருவத் தடுமாற்றம் சமூகத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

தடம்மாறும் மாணவர்களைக் குறிவைத்தே சாதிய அமைப்புகள் செயல்படுகின்றன என்ற பார்வையும் எழுகிறது. சாதி என்ற சொல் வெற்றுச் சொல். ஒன்றுக்கும் உதவாது என்பதே உண்மை. சாதி பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது என்ற ஒவ்வாமைக் கருத்தியல் சமூகத்தில் நிலவுகிறது. பழக்க வழக்கங்கள், சடங்குகள், முறைப்பாடுகள் சாதி இறுக்கத்தைக் காக்கின்றன. 

ஒரே வகையான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், உளவியல் அடிப்படையிலான வேறுபாடுகள், எண்ணங்கள் சாதி இருப்பை வலுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதற்குச் சாதி அடையாளம் துணை நிற்கின்றன. சாதி அடிப்படையில் வழங்கப்படும் பங்கீடும் நிறைவான தீர்வாகாது.

மாறாக, சாதி இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. சாதியின் பெயரில் வழங்கப்படும் உதவிகளுக்கு மாற்றுச் சொல் காலத்தின் தேவை. சாதியற்ற சமூகத்தை உருவாக்க அரசு முயற்சி செய்யவில்லை. மாறாக, சாதியப் பதற்றத்தைக் கேடயமாகக் கொண்டு ஆட்சி நடைபெறுகின்றன என்பதைக் கழக ஆட்சி நிகழ்வுகள் நிறுவுகின்றன.

உதிரிகளாகும் மாணவர் சமூகத்தைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு ஆசிரியர், பெற்றோர், அரசு, பொதுசமூகம் என அனைவருக்குமானது.

சாதியற்ற சமநிலைச் சமூகத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

கட்டுரையாளர்:
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

வியாழன், 14 செப்டம்பர், 2023

பெருத்த வலி தந்திருக்கும் நூல் - எழுத்தாளர் அய்யனார் ஈடாடி



முனைவர் ஏர் மகாராசன்  அவர்கள் தற்போது எழுதி வெளிவந்த நூலான 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல் கிடைத்தது.

மாணவர்கள் நலனில் அக்கறையும் பெரும் பண்பும் பேரன்பும் கொண்ட இவரது மனம் நொறுங்கியிருக்கிறது; பெருத்த  வலி கொடுத்திருக்கிறது;

உலுக்கியிருக்கிறது; உறக்கமில்லாத இரவுகளின் மடியிலே வெடித்திருக்கிறது. இதன் வெளிப்பாடே இந்நூல்.


புதிய பாடத்திட்டத்தால் மாணவர்கள் உள்ளாகும் சிக்கலையும் தடுமாற்றத்தையும் உளவியலையும் அடர்த்தியாக உயர்த்திப் பிடித்திருக்கிறார். தமிழக அரசும் கல்வித்துறையும் ஆட்சியாளர்களும் மாணவர்கள் நலனில் தடுமாறுகிறது என்பதை ஆங்காங்கே காண்பித்திருக்கிறார்.


வாக்கு வங்கி அரசியலுக்காக ஆதிக்கவாதிகளின்/ஆதிக்க சாதிகளின் அநீதிக்குத் துணைபோகாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி, உடைமை, உரிமை பாதுகாப்பதில் அரசு துணை நிற்க வேண்டும் என்கிறார்.


நாங்குநேரியில் நடந்த சாதி ஆணவத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனத்தைவிட மோசமானது. சாதிய அடாவடி அட்டூழியத்தை ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் துணிச்சலாகக் கண்டிக்கவில்லை. 

சாதியப் பேராபத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அரசும் பொதுச்சமூகம் கடந்து போகிறது என்கிறார்.


கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருளை ஒழிப்பதாக அரசு நாடகமாடுவதையும், அதற்குப் பின்னால் மதுவை மிகப்பெரிய வணிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


ஆதிக்கவாதிகள் எப்போதுமே அட்டவணைப் பிரிவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களையே காலங்காலமாகக் கொடுமைப்படுத்தியும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியும் வருவது வேங்கைவயல், நாங்குநேரி போன்ற சம்பவங்களே உதாரணம் என்கிறார்.


சாதியக் கண்ணோட்டம், சாதிய ஏற்றத் தாழ்வு மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினரிடையே பரவலாகப் புரையோடியும் அழுக்குகளாகவும் படிந்து கிடப்பதை உள்ளம் நொந்தும் வெந்தும் எழுதியிருக்கிறார்.


அறம் சார்ந்த மொழிவாரிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


ஒரு சமூகத்தை மாற்றுவதில் பெரும்பங்காற்றுவது கல்வி ஒன்றே.

கல்வி நிலையங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குப் பொதுச்சமூகத்திற்கும் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடமையுண்டு என்பதனை அன்பு வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.


மாணவர்கள் சமூக உதிரிகளாக உருவாவதற்கு அரசும் ஆட்சியாளர்களும் கல்வித்துறையும்தான் காரணம் என்பதனைத தாண்டி, பெற்றோர்களும் முக்கியக் காரணம் என்கிறார்.


வாய்ப்புள்ளோர் வாங்கி வாசியுங்கள்.


கட்டுரையாளர்:

அய்யனார் ஈடாடி,

எழுத்தாளர் மற்றும் பொறியாளர்,

எனதூர் சரித்திரம், ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி ஆகிய நூல்களின் ஆசிரியர்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,

ஆசிரியர்: மகாராசன்,

முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,

பக்கங்கள்: 72

விலை: உரூ 90/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 

ஆதி பதிப்பகம்

99948 80005.


அஞ்சலில் நூலைப் பெற:

செந்தில் வரதவேல்

90805 14506