வியாழன், 21 டிசம்பர், 2023

மழை வெள்ளமும் வதை நிலமும் - மகாராசன்



விதை நிலமெல்லாம் 
வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம் 
வயிறு காய்ந்து கிடக்கிறது.

வியர்வை மணக்கும் நெல்லை 
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் பருக்கைகளுக்காகக் கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளாய் 
மிச்ச வாழ்வும் முதுகொடிந்து போனது. குலையோடு சரிந்த வாழைகளாய் 
குலம் நொடிந்து போயிருக்கிறது.

கூடிழந்த பறவைகளாய் 
வீடிழந்து நிற்கிறது.
கருப்பம் கலைந்த நெல் பயிராய் உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும் 
கண்ணீர் தேங்கி நிற்கும் 
வதை நிலமாகிப் போச்சே மக்கா.

நிலத்தை விட்டு விடுவோமா? 
நிலம்தான் எம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி அறுத்தெறிஞ்ச நமக்கு, 
நிலத்தாளோட தொப்பூள்க் கொடியை அறுத்தெறிய மனசில்லயே மக்கா; அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

புதன், 20 டிசம்பர், 2023

வலியெழுத்து - மகாராசன்


அப்பன் ஆத்தாள் செத்துப்போனால் இடுகாட்டில் புதைத்துவிட்டுத் திரும்பும்போது 
கூடச்சேர்ந்து நாமும் செத்திருக்கலாமென 
வீடுவரை வந்துகொண்டே இருக்கும் 
அந்த நினைப்பு.

காடும் வயலும் தோப்பும் துரவும் 
ஆடும் மாடும் வீடும் என 
அத்தனையவும் வாரிச் சுருட்டிக்கொண்டு 
உயிரை மட்டும் விட்டு வைத்து நாசமாக்கிவிட்டுப் போயின 
புயலும் மழையும்.

உயிரைக் கொடுத்த 
அத்தனையும் போன பின்னால் 
இந்த உயிரும் போயிருக்கலாம். இப்போதும் அந்த நினைப்பு அழுகையோடு வந்து வந்து போகிறது.

நிலம் நிலமென்று நம்பியிருந்த 
சாதி சனமெல்லாம் 
நிலத்தில் அழுது மடிகிறது.

இந்தச் சனம் வாங்கிவந்த தலையெழுத்து இதுதான்.

ஏர் மகாராசன்

சனி, 16 டிசம்பர், 2023

கல்வித்துறைக்குள் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்: மகாராசன்


அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையைத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறது. மாணவத் தலைமுறையைச் சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்கும் மிக முக்கியமான தளமாக அமைந்திருப்பது பள்ளிகள்தான். அந்தப் பள்ளிகளை நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர்களுக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கின்றன. 

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்கள், தேர்வுகள், நிர்வாகக் கட்டமைப்புகள் எனப் பலவகைத் தளங்களில் தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்தாக வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாகவும் கல்வியாளராகவும் இருந்து இருவேறு தளங்களிலும் வழிநடத்தும் மிக முக்கியமான பணிச் சூழல்தான் தலைமை ஆசிரியர்களுடையதாகும்.

இன்றைய கல்வி மற்றும் சமூகச் சூழலில், தலைமை ஆசிரியர்களின் நிர்வாகத் திறன்களையும், கல்விசார் அடைவுத்திறன்களையும் வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டவுமான தலைமைத்துவப் பயிற்சி முகாமாக வடிவமைத்து நடத்திக் கொண்டிருக்கிறது கல்வித்துறை. இதைத் திறம்பட வடிவமைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரும் எனது நண்பரும் வகுப்புத்தோழருமான திரு ஜெயக்குமார் அவர்கள். 

மதுரை பில்லர் மையத்தில் மூன்றுநாள் நடைபெறும் உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் பல்வேறு பொருண்மைகளில் ஆளுமைப் பண்பு வளர்ச்சி குறித்த வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறுகின்றன. அம்முகாமில் குறிப்பிடத்தக்க ஒரு பண்பை வளர்த்தெடுக்கும் நோக்கில், ஒவ்வொரு முகாமிலும் ஓர் அமர்வாக அமைந்திருப்பது புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டல் தொடர்பானதாகும். 

தலைமை ஆசிரியர்களுக்கு வெறுமனே நிர்வாக ஆளுமைத் திறன்களை மட்டும் கற்பித்திடாமல், தலைமை ஆசிரியர்களையும் வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, தமிழில் வெளிவந்திருக்கும் கல்விசார் புத்தகங்கள், சமூகம், சூழல், மொழி, இலக்கியம் சார்ந்த மிக முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகங்களும், புத்தகங்கள் குறித்தும் புத்தக வாசிப்பு குறித்தும் தூண்டல் உணர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முகாம் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலைமை ஆசிரியர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக ஆக்கும் முயற்சியில் பல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களோடு உரையாட வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 

இம்மாதிரியான திட்டமிடலைப் பெருங்கனவோடும் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஈடுபாட்டோடும் அக்கறையோடு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் திரு ஜெயக்குமார். 

தொடர்ந்து நடைபெற்று வரும் அம்முகாம்களில் நூல்கள் வாசிப்பு குறித்த உரையாடலை வழங்கிக்கொண்டிருக்கும் தோழர் கண்மணிராசா அவர்கள் இன்று உரையாற்றுவதாய் இருந்தமையாலும், தலைமை ஆசிரியர் நட்புகளைச் சந்திக்க வேண்டியமையாலும், இணை இயக்குநர் நண்பரைச் சந்திக்க இருந்தமையாலும் இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு நானும் துணைவியாரும் சென்றிருந்தோம்.

தலைமை ஆசிரியர்கள் அனைவரிடமும் எமது கல்வி மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் குறித்து அறிமுகப்படுத்தியதோடு, அவர்கள் மத்தியில் உரையாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இணை இயக்குநர் அவர்களிடம் இன்றைய கல்விச்சூழல் குறித்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் மிக விரிவாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. 

அண்மையில், நான் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூலையும் இணை இயக்குநரிடம் வழங்கி, இன்றைய மாணவர்களின் கல்வி மற்றும் சமூகச் சூழல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தமக்குக் கிடைத்திருக்கும் பணி வாய்ப்பை மிகுந்த பொறுப்புணர்வோடு திறம்படச் செயலாற்றிக்கொண்டிருக்கும் இணை இயக்குநரின் செயல்பாடுகள் தொலைநோக்கும் கனவும் நிரம்பியிருப்பவை. அந்த இலக்கும் கனவும் நிறைவேறும்; நிறைவேற வேண்டும் என்பதைத்தான் அவரது செயல்பாடுகள் கோடிட்டுக் காண்பித்திருக்கின்றன. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

முனைவர் ஏர் மகாராசன்

16.12.2023.


வியாழன், 14 டிசம்பர், 2023

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: அறிவுக் களத்தின் ஆய்தம். - திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்.

கீழடி அகழாய்வு குறித்தப் பேச்சுக்கள் எழத்தொடங்கிய 2015ல் அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். ஏறத்தாழ பத்தடி ஆழம் தோண்டப்பட்டிருந்த சில குழிகளின் அருகிருந்து மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பானைப்பொறிப்பைக் கையில் வைத்துக்கொண்டு 'இதில் திசன் என்று தமிழ்ப்பிராமியில் எழுதியிருக்கிறது' எனச் சொன்னார் ஒருவர். 

"ஐயா, ஒன்று தமிழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அல்லது பிராமியில் இருக்கிறது என்று சொல்லுங்கள். அதென்ன இப்பொழுதும் கூட தமிழ்ப்பிராமி?" என்று கேட்டபோது சினங்கொண்டார் அவர். எமக்குள் தருக்கம் தொடங்கியது. "எங்கள் குழுத்தலைவரிடம் வந்து கேளுங்கள்" என நெகிழிப்பாய் வேய்ந்த குடிலுக்கு அழைத்துச் சென்றார். தலைவர் (திரு அமர்நாத்) அங்கில்லை. கோவையானத் தரவுகள் இல்லாமல் மாணவர்களிடம் தெளிவுபடுத்த இயலாத நிலையில் நண்பரும் நானும் திரும்பிவிட்டோம். இந்த நூல் அன்றே கிடைத்திருந்தால் வேலை எளிதாக முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அத்தனை பெறுதியானது இந்நூல்.

எனக்கு நூல் கிடைத்த கதையும் நூலைப் போன்றே பெறுமதியும் சுவையும் கொண்டதுதான். மகாராசன் அவர்களின் 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' மற்றும் 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' எனும் இரு நூற்களும் வேண்டுமென்றும், விலை விவரம் அனுப்புங்கள் எனவும் ஆதி பதிப்பகத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

"ஐயா பணம் எதுவும் அனுப்ப வேண்டாம் முகவரி மட்டும் அனுப்புங்கள். நூற்களை அனுப்பிவைக்கிறேன் - செந்தில் வரதவேல்." என்றொரு மாற்றச் செய்தி வந்தது. பிற்பாடு நூற்களும் வந்தன. அருமையான நூற்களை அனுப்பிவைத்த செந்திலுக்கு மிக்க நன்றி. (காலந்தாழ்ந்து எழுதுகிறேன் பொறுத்தருள்க).

தமிழும் தமிழரும் பலகாலும் பலவாறான வினாக்களை, தெளிவுபடுத்த இயலாத கருத்தாக்கங்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தரவுகளைத் தேட பல நூற்களை, கட்டுரைகளைத் தேடிப் படிக்கவேண்டியது கட்டாயமாகிறது. பேரறிஞர் பலரால் ஆய்வு செய்து எழுதப்பெற்றக் கட்டுரைகள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் எழுதப் பெற்ற ஆய்வு முடிவுகள், அகழாய்வுச் செய்திகள், செவ்விலக்கியச் செய்திகள் என பலவற்றையும் படித்தால் மட்டுமே பல வினாக்களுக்கும், வலிந்து செய்யப்பெறும் திரிபுகளுக்கும் விளக்கமளித்து ஏற்கவோ மறுக்கவோ இயலும்.

இப்படி பல்துறைத் தரவுகள் இன்றைய காலகட்டத்தில் பெருந்தேவையாக இருக்கின்றன. அவற்றை நோக்கி நகர்வதற்கான நுழைவாயில்கள், அறிமுகங்கள் கட்டாயமாகின்றன. எளிமையாகவும் அதே வேளையில் செறிவாகவும் தொகுக்கப் பெறும் ஆய்வு நூற்கள் இந்தத் தேவையை முழுமையடையச் செய்யும்.

அப்படியொரு ஆய்வு நூல்தான் முனைவர் திரு மகாராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு". பரந்துபட்ட பெருவேலையின் சிறுவிளைச்சலாக அருமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது நூல்.

"தமிழி"க்குச் சாதி சமய அடையாளங்கள் இல்லையென்பதை அடிக்கூறாகக் கொண்டு, பெருநகரொன்றின் கையடக்க வரைபடம்போல, பெருங்கோட்டையொன்றின் நுழைவாயில் அறிவிப்புப் பலகைபோல விரிகின்றன பக்கங்கள்.

"சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது" எனத் தொடங்கி, மொழியின் பிறப்பியல் குறித்து விவரிக்கையில் ஒலி, சைகை, ஓசை, பேச்சு என எல்லாவற்றையும் ஆசிரியர் தொட்டுக்காட்டுகின்றபோது தமிழ் போன்ற இயன்மொழியின்; உழைப்புக்காலத்திற்கு முந்தைய காரணிகள், மொழிக்கூறுகள் மொழியியல் அறிஞர்களால் முகாமையானதாகப் பார்க்கப்படவேண்டுமென்ற உரையாடலொன்று உள்ளுறையாகத் தொடங்குகின்றது, சிறப்பு.

நூலின் அளவும் படிப்போரின் எண்ணவோட்டங்கள் குறித்தானச் சிந்தனையும் மாந்த வரலாற்றின் பல பக்கங்களை விரைந்து கடக்கவேண்டிய கட்டாயத்தை ஆசிரியருக்கு ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணம் எமக்குள் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. காட்டு வாழ்வியலின் பெரும்பகுதியிலிருந்து சட்டென்று கூட்டுழைப்பின் காலத்திற்குள் அடியெடுத்து நடக்கிறது நூல்.  

தமிழி, பிராமி குறித்தான சிறப்பான விவரிப்பு, சீராய்வு நூலை மிக்கச் செழுமையுடைதாகச் செய்கின்றது. அசோகப் பிராமியின் காலம் குறித்தச் செய்திகள் மற்றும் ஒப்பாய்வு தமிழியின் காலத்தை முன்னிறுத்துவதோடு தமிழுக்கு உற்றார் மற்றும் உறார் யாரென்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. (இத்தனைக்குப் பின்னும் 'தமிழ்ப்பிராமி' என்பாரும் உளர் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் பெருங்கேடு).

"தமிழி எழுத்து வடிவம் அசோகரின் காலத்திற்கு முன்பான காலகட்டத்தைச் சார்ந்தது. அசோகர் காலத்திற்கு முன்பு பிராமி என்பதான எழுத்து வடிவமே கிடையாது. அசோகர் காலத்தியப் பிராமி எழுத்து வடிவம் வேறு; தமிழி எழுத்து வடிவம் வேறு. தமிழி எழுத்து வடிவம் தனித்து வளர்ச்சி அடைந்தும் பரவலாக்கம் பெற்றும் வந்துள்ளது. சிந்துவெளி எழுத்துக் குறிகளோடு தொடர்புடைய எழுத்துக் குறியீடுகள் தமிழி எழுத்து வடிவத்தோடும் பொருந்திப் போகின்றன எனலாம்.தமிழி எழுத்து வடிவமானது அரசதிகார மரபின் உருவாக்கம் அல்ல; அக்காலத்தியத் தமிழ் மக்களின் பாடுகளையும் அறிவையும் புலப்படுத்துவதற்கான பண்பாட்டு மரபின் உருவாக்கம் ஆகும்.

 தமிழி எழுத்து வடிவங்களின் தொல்லியல் புழங்கு வெளிகளை வைத்து நோக்கும்போது, மக்கள் மொழியாகத் தமிழி எழுத்து வடிவம் உயிர்ப்பாக இருந்திருக்கிறது என உறுதியாகக் கருத முடிகிறது" என்ற வரிகளில் காணக்கிடைக்கும் ஆசிரியரின் ஆய்வுநோக்கும், உறுதியும் நூலெங்கும் விரவிக்கிடக்கிறது.

எழுத்தின் வடிவங்கள், வகைகள் குறித்தான விவரிப்பு மற்றும் வரலாற்றுத் தொகுப்பு செறிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஓவிய எழுத்து, கருத்தெழுத்து, ஒலியெழுத்து போன்ற எழுத்துநிலைகளை விளக்க, ஏராளமான காட்டுகளை தொல் இலக்கியங்களிலிருந்தும் தொல்லியல் ஆய்வு முடிவுகளிலிருந்தும் எடுத்தாண்டிருப்பது தமிழ் குறித்தான உரையாடல்களில் பங்கேற்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

"பாண்டிய நாட்டை வென்ற பிற்காலச் சோழ மன்னர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச் சோழன், முதலாம் இராசராசன் காலம்வரை ஆண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட பிராமியின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும்தான் வழக்காறு பெற்றன. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டியர் பகுதிகளில் வட்டெழுத்துப் பயன்பாடு குறைந்து விட்டது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து முறை மங்கி, கிரந்தத் தமிழ் எழுத்துமுறை மேலோங்கியது. இது, சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டதால், வட்டெழுத்துகள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது" என்பன போன்ற பலவிடங்களில்; வரலாற்றுச் செய்திகள் காய்தல் உவத்தலின்றி படிப்போரை வந்தடைகின்றன.

அதனாலேயே, "தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம், பிராமி) தமிழகம் புக்கனர் எனப் பர்நெல் கூறுவதிலிருந்து, தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பாலும் வடமொழித் தொடர்பாலும் நாளடைவில் கிரந்தத் தமிழாகத் திரிபடைந்தது எனலாம். தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி / சமய / பாலின / வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்." என்ற ஆசிரியரின் முடிபு இயல்பாக இருக்கிறது.

'உ'வில் தொடங்கும் உலகு தழுவிய தமிழின் எழுத்துப் பண்பாட்டியல் குறித்தான நூலின் பகுதி முகாமையானது. தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் பற்றியச் செய்திகள் சீராகத் தொகுக்கப்பெற்றுள்ளன.

தமிழும் அதன் எழுத்துகளும் அதிகார, சமய, சாதி, பாலின மற்றும் வட்டாரச் சார்புகளின்றி மக்கள் மொழியாகவும் பொது எழுத்துக்களோடும் பன்னெடுங்காலமாகவே நிலவிவருகின்றது என்பதை அறுதியாக உறுதி செய்கிறார் முனைவர் மகாராசன் என்பதே நூலின் பெருஞ்சிறப்பு. 

இளையோர் பலர் பங்கெடுக்கத் தொடங்கியிருக்கும் அறிவுக்களத்தில் இஃதோர் ஆய்தமாகும் என்பது உறுதி. இன்னும் விரித்துப் பேசியிருந்தால் பேராய்தமாயிருக்கும் என்பது எமது கருத்து. அப்படிப் பல நூற்களைப் படைக்கவேண்டுமென்று திரு மகாராசனை வாழ்த்துகிறேன்.

*

ஆதி பதிப்பகம் வெளியீடு,

விலை: உரூ 120/-

தொடர்புக்கு:

+91 99948 80005.

அஞ்சலில் நூலைப்பெற:

செந்தில் வரதவேல்

90805 14506

*

என்றென்றும் அன்புடன்,

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

14-12-2023

https://www.chirappallimathevan.com/2023/12/blog-post.html


திங்கள், 11 டிசம்பர், 2023

கனகர் விசயரைத் தோற்கடித்த செங்குட்டுவனின் வெற்றிக்கு யார் காரணம்? - மகாராசன்



கண்ணகிக் கோட்டம்.

கனக விசயர்தம் முடித்தலை நெறித்து...

சேரன் செங்குட்டுவனின் வெற்றிக்குக் காரணம் யார்?

*

சிலப்பதிகாரத்தில் வரும் எல்லாத் திருப்பங்களுக்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் மாதவிதான். மாதவி எனும் கதாப்பாத்திரத்தால்தான் கோவலன் கண்ணகி பிரிவு, கோவலன் மாதவி பிரிவு, கோவலன் கண்ணகி மதுரைப் பயணம், கோவலன் கொலை, கண்ணகி நீதி கேட்டல், பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவு, மதுரை தீப்பற்றி எரிதல், கண்ணகி பெருஞ்சாபம், கண்ணகியின் மலைப் பயணம், கண்ணகியைத் தெய்வமாய்ப் பழங்குடி மக்கள் வழிபடல், சேரன் செங்குட்டுவன் படையெடுப்பு, கனகன் விசயன் தோற்கடிப்பு, இமயத்தில் கல்லெடுப்பு, கண்ணகிக் கோட்டம் அமைத்தல் என அத்தனை நிகழ்வும் மாதவியால்தான் நடந்தன என்பார் இளங்கோவடிகள்.

சேரன் செங்குட்டுவன், கனகர் விசயனைத் தோற்கடித்த நிகழ்வுக்கு மாதவிதான் காரணம் என்கிறார் அவர். அதாவது, மாதவி எனும் ஒருவர் இல்லையென்றால், கோவலன் கண்ணகி பிரிவு நிகழ்ந்திருக்காது. அதனால், கோவலன் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கண்ணகிக்குக் கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் வடவர் மீது படை தொடுத்திருக்கவும் மாட்டார்.

 ஆகையால்தான், சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று கனக விசயரைத் தோற்கடித்து, போரில் வெற்றி அடைந்திருப்பதற்குக் காரணம் மாதவிதான். மாதவி எனும் ஒருவர் இருந்திருக்காவிட்டால், கனகர் விசயரைத் தோற்கடிக்கும் சூழல் எழுந்திருக்காது எனும் வகையில் இளங்கோவடிகள் பதிவு செய்திருப்பார். இதுகுறித்துப் பேசும்போது, சேரன் செங்குட்டுவன் வெற்றிக்கு மாதவிக்கு வாழ்த்துச் சொல்வார் இளங்கோவடிகள்.

அதைத்தான்,

"வாழிய எங்கோ மாதவி மடந்தை       காதற் பாணி கனக விசயர்தம்     முடித்தலை நெறித்து " 

என்கிறார் இளங்கோவடிகள்.

தமிழ், தமிழர், தமிழ் நிலம் என்றாலே ஒவ்வாமை கொள்பவர்களுக்கு, சிலம்பின் மொழி தெரிய வாய்ப்பில்லைதான்.

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஒரு புத்தகம் அப்படி என்னதான் செய்துவிடப் போகிறது? - மகாராசன்

ஒரு புத்தகம் என்ன செய்துவிடப் போகிறது? எனப் பலரும் நினைக்கலாம். நான் எழுதிய புத்தகங்களும்கூட என்ன செய்துவிடப் போகின்றன? என நானும் நினைத்திருக்கிறேன்தான். ஆனாலும், நாம் சொல்ல வருவதையெல்லாம் எழுத்துகளின் மூலமாகப் புத்தகமாக வெளிக்கொண்டு வருவதே எம் கடமையென எழுத்துப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 

அண்மையில் நான் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூலினை, சாதியப் பாகுபாட்டு உணர்வைத் தமது மாணவர் ஒருவரிடம் ஓர் ஆசிரியர் திணித்தபோது, 'எல்லோரும் சமம்தானே டீச்சர்' என, சமத்துவக் குரலை வெளிப்படுத்திய மாணவத் தம்பி முனீசுவரன் அவர்களுக்குத்தான் தளுகையாகப் படைத்திருந்தேன். அந்த மாணவத் தம்பியை முன்பின் பார்த்ததில்லை; இதுவரையிலும் எந்த அறிமுகமும் இல்லை. ஆனாலும், அந்த மாணவரின் சமத்துவக் குரல் எமக்குப் பிடித்திருந்தது. அதனால்தான், மாணவர்கள் தொடர்பான இந்நூலை அம்மாணவருக்கே படையலாகப் படைத்திருந்தேன். 

அந்த மாணவரின் சமத்துவக் குரல்போல பொதுசமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதையும் நூலின் இறுதிப் பகுதியில் விவரித்திருந்தேன். எனினும், இந்தத் தகவல் அம்மாணவருக்குத் தெரியாது. தொடர்பு விவரங்கள் ஏதும் இன்மையால், இதைத் தெரியப்படுத்த நானும் மெனக்கெடுக்கவில்லை. 

சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த நூல் சமூகத்தின் கவனிப்பைப் பரவலாகப் பெற்றிருக்கிறது. பல்வேறுபட்ட சமூகத் தரப்பினரும் இந்நூலினைப் பல தளங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நூலைப் படித்த பலரும் எம்மோடு தொடர்பு கொண்டு பேசினார்கள். வேறெந்த நூலுக்கும் இப்படியான சமூக உரையாடல்களும் வரவேற்பும் இருந்ததில்லை. 

அண்மையில், தூத்துக்குடியைச் சார்ந்த மீனவர் திரு டேவிட் அவர்கள் இந்நூலைப் படித்துவிட்டுத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரும் எனக்கு முன்பின் அறிமுகமில்லை. ஆயினும், இந்நூலைப் பலருக்கும் வாங்கிக் கொடுத்திருப்பதோடு, இந்நூல் யாருக்குப் படையலாகப் படைத்திருக்கிறதோ அந்த முனீசுவரன் தம்பியிடமே அந்நூலைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் திரு டேவிட். 

தம்பி முனீசுவரன் படித்த பள்ளிக்குச் சென்று, அவரைப்பற்றி விசாரித்து, அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் முனீசுவரனின் தங்கையிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தப் புத்தகத்துல உங்க அண்ணனைப் பத்தி எழுதியிருக்கு. அண்ணன்கிட்ட கொடுத்துக் காண்பிக்க வேண்டும். இந்தப் புத்தகத்த எழுதுனவருக்கிட்ட அண்ணனப் பேசச்சொல்லு பாப்பா எனச் சொல்லி அனுப்பி உள்ளார். கடந்த வாரம் தம்பி முனீசுவரன் தொலைபேசியில் வைகுநேரம் பேசினார். மிக நெகிழ்ச்சியான உரையாடல் அது.

இப்ப என்ன செய்யிற தம்பி? என்றேன் நான். குட்டி யானை வண்டி ஒன்னு லோன் போட்டு வாங்கியிருக்கேன் சார். வீட்டு வீட்டுக்கு அதுல தண்ணீர் சப்ள பண்ணிக்கிட்டு இருக்கேன் சார் என்றார். மேக்கொண்டு எதுவும் படிக்கலயா தம்பி என்றேன். எந்தக் காலேஜ்லயும் சேத்துக்க முடியாதுன்னுட்டாங்க. சேத்தாக்க, வேற எதுவும் பிரச்சனை வந்துரும்னு பயந்துக்கிட்டு யாரும் சேக்கல சார். அப்புறமாத்தான், ஐ.டி.ஐல சேந்து படிச்சேன். அம்மா அப்பாவுக்கு முடியல. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. குடும்பத்தப் பாக்க வேண்டி இருந்ததால, தண்ணீர் சப்ளை வேல பாக்க வேண்டியதாப் போச்சு சார் என்றார். 

நான் எழுதிய புத்தகத்த ஒனக்குதான் படையலாகக் குறிப்பிட்டு இருக்கேன் தம்பி. புத்தகத்துல ஒன்னையப் பத்திதான் பெருமையாப் பாராட்டி எழுதி இருக்கேன். பாரு தம்பி என்றேன். ஆமா சார். தங்கச்சி காட்டுனா. நானும் பாத்தேன் சார் என்றார் நெகிழ்ச்சியாக. 

வீட்டுல இருந்தேகூட படிக்கிறதுக்கான வாய்ப்புலாம் இருக்கு தம்பி. தொலைதூரக் கல்வி மூலமாக்கூட கல்லூரிப் படிப்பு படிக்கலாம். படிக்க விருப்பம் இருந்தா சொல்லு தம்பி. அதுக்கான செலவ நானே பாத்துக்கிறேன்; எந்த உதவியா இருந்தாலும் கேளு; அடிக்கடி பேசுவோம் தம்பி என்றேன். சரிங்க சார் என்றார் முனீசுவரன்.

இன்று, தம்பி முனீசுவரனிடமிருந்து அழைப்பு வந்தது. வணக்கம் சார். நல்லா இருக்கீகளா? எங்களப் பாக்க டேவிட் அய்யா வந்திருக்காரு என்றார். டேவிட் அய்யாவிடம் செல்பேசியைக் கொடுத்தார். வணக்கம் சார். இன்னிக்கி கடலுக்குள்ள போகல. அதனாலதான், முனீசுவரன் வீட்டுக்கு வந்துட்டுப் போகலாம்னு புளியங்குளத்துக்கு வந்தேன் என்றார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசச்சொல்லி அலைபேசியைக் கொடுத்தார். நானும் எல்லோரிடமும் பேசினேன். முனீசுவரன் குடும்பத்தையும், பிள்ளைகளோட படிப்பையும் நாமதான் சார் பாத்துக்கனும் என்றார். நானும் அவ்வாறே உறுதி அளித்திருக்கிறேன். தம்பி முனீசுவரன் குடும்பத்திற்கு உதவ விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ளலாம்.

தம்பி முனீசுவரனையோ, அய்யா டேவிட் அவர்களையோ முன்பின் பார்த்தது இல்லை. ஆனாலும், ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது. புதிய உறவுகளை இணைத்திருக்கிறது. 

டேவிட் அய்யாவுடன் தமது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை தம்பி முனீசுவரன் அனுப்பி வைத்திருந்தார். எனினும், சில பல காரணங்களுக்காகப் படத்தைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என அவர் வேண்டிக்கொண்டார்.

தம்பி முனீசுவரனுக்கும், அய்யா டேவிட் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல், பலரது மனங்களோடு மிக நெருக்கமாக உரையாடிக்கொண்டிருப்பது பெரு மகிழ்ச்சிதான்.

வாய்ப்புள்ளோர் இந்நூலை வாசியுங்கள்.

ஏர் மகாராசன்

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

சனி, 9 டிசம்பர், 2023

நீர் மேலாண்மையின் படுதோல்வியும், பெருவெள்ளப் பாதிப்புகளும்: மகாராசன்


அவரவர் வாழ்ந்த ஊர்களில் வேலைவாய்ப்புகளும், வாழ்வதற்கு உகந்த சூழல்களும் இருந்திருந்தால் சென்னையில் வந்து இப்படி மொத்தம் மொத்தமாய்க் குவிந்திருக்க மாட்டார்கள்தான். அவரவர் பூர்வீக ஊர்களையும் சொந்த உறவுகளையும் விட்டுவிட்டு நகரத்தில் அல்லல்பட ஆசைப்பட்டு எவரும் சென்னைக்குக் குடியேறவில்லை.

 சென்னையை மய்யப்படுத்தியேதான் அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழில்சாலைகள், கல்வி நிலையங்கள், வணிகங்கள், நகர உருவாக்கங்கள் என அத்தனையும் உருவாக்கப்படுகின்றன. இதனால், நீர் ஆதாரப் பகுதிகள் யாவும் மக்கள் வாழிடப் பகுதிகளாகவும் கட்டிடங்களாகவும் மாறிக் கிடக்கின்றன. இதுபோன்ற மழை வெள்ளப் பாதிப்புகள் அடுத்தடுத்து வரத்தான் போகின்றன.

ஒவ்வொரு தலைமுறையும் மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தம்மைத் தற்காத்து மீண்டு வந்திருக்கின்றன. கடந்த காலத் தலைமுறையின் தற்காப்பு முறைதான் நீர் மேலாண்மை. இத்தகைய நீர் மேலாண்மையைத் திறம்படக் கையாண்டு நிலத்தையும் நீரையும் மக்களையும் காத்து வந்திருக்கின்றனர். இதைத் தனி மனிதர்களால் செய்திட இயலாது. ஒட்டுமொத்த சமூகமும் நீர் மேலாண்மையில் தத்தமது அளவில் பங்கெடுத்திருக்கின்றன. அன்றைய ஆட்சியாளர்களும் நீர் மேலாண்மை தொடர்பாகப் பல்வேறு வகையில் அக்கறையோடும் அறத்தோடும் செயலாற்றி வந்திருக்கின்றன. அதனால்தான், நீர் மேலாண்மை என்பது மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் இருந்திருக்கிறது.

அத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்கள் அடுத்தடுத்து வளப்படுத்தியும் வலுப்படுத்தியும் விரிவுபடுத்தியும் பாதுகாத்தும் பராமரித்தும் வந்திருக்க வேண்டும். ஆனால், விடுதலைக்குப் பிந்தைய அரசுகளிடம் நீர் மேலாண்மை குறித்தத் தெளிவான தொலைநோக்கான எந்தத் திட்டங்களும் இல்லாமல் போயின. 

மாறாக, நீர் ஆதாரப் பகுதிகளும் நீர்த்தடங்களும் முற்றாகச் சிதைக்கப்பட்டன. நீர் மேலாண்மை குறித்த எந்தப் புரிதலும் அரசுகளிடமும் இல்லை; அதிகாரிகளிடமும் இல்லை. நீர் மேலாண்மையின் படுதோல்விதான் இது போன்ற வெள்ளப் பாதிப்புகளுக்கு முழுமுதல் காரணமாகும். 

இனி வரும் காலங்களிலாவது நீர் மேலாண்மைத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும். நீரையும் மக்களையும் மண்ணையும் உளமார நேசிக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் களத்திற்கு வரும்போது வெகுமக்களும் கைகள் கோர்ப்பார்கள். அப்படித்தான் கடந்த தலைமுறையின் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மக்களின் பெருந்துணையோடு செய்து முடிக்கப்பட்டன. நம் முன்னோர்களிடமிருந்து இந்தத் தலைமுறை மக்கள் மட்டுமல்ல, அரசுகளும் அதிகாரிகளும் பாடம் படிக்க வேண்டும். 

மேலும் பார்க்க:

https://maharasan.blogspot.com/2021/11/blog-post_13.html

https://maharasan.blogspot.com/2021/11/blog-post_11.html

பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மீள வேண்டும். 

ஏர் மகாராசன் 

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

ஞாயிறு, 26 நவம்பர், 2023

புலித்தடம் பதியக் காத்திருக்கும் நிலம் - மகாராசன்

 

கடல்சூழ் வனத்தைப் போர்த்தி
விரிந்து கிடந்த நிலப்புழுதியில்
எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி
எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு
முளைத்துக் கிளைத்திருந்தது
குலக்கொடியொன்று.

ஈரநெப்பு கசிந்த மண்ணை
இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள்
ஆழஆழப் பதிந்ததில்
நிறைந்து செழித்து வளம் கொழித்தன
மனிதப் பச்சையங்கள்.

பஃறுளியும் குமரிக்கோடுமாய்
மூதாதை நிலம் பரவிக் கிடந்தது.

காலமும் கடல்கோளுமான ஊழ்வினை
உப்புநீர் தெளித்து
அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது.  
பரிணாமக் காலங்களை
உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
விழுந்த வித்துகள்
சிம்படித்துக் கிளைத்திருந்தன.  

கிளை பரப்பிச் சிலிர்த்துச்
சிரித்திருந்த பேரினத்திற்கு
தாய் மடிகள் இரண்டிருந்தன.
இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக
காலம் இசைத்த நெடும்பாடல்
உலகத்தின் காதுகளில்
நிரம்பி வழிந்திருந்தது.

பெருமரத்தின் வித்துகள்
காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன.
விழுந்த திசையின் மண்ணின் வாகும்
பருவ நேக்கும் சுழல் காலமும்
உயிர்ப் படிமலர்ச்சியாய்
வேறு வேறு முகங்களை
தந்துவிட்டுப் போயின.

பூர்வத்தின் வேர்நுனி மணத்து
தாய்நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு
பேருரு அடையாளத்தில்
மினுத்திருந்தது இவ்வினம்.

அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து
குஞ்சுகளைக் காக்க
மூர்க்கமாய்ப் போராடின
இரு தாய்க்கோழிகள்.

அறுந்துவிட்ட தொப்பூழ்க்கொடியிலிருந்து
உயிர்க்கொடிச் சிம்புகள்
அத்துப் போகாமலும் இத்துப் போகாமலும்
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

முந்நிறத்துக் கொடியாலும்
முப்புரி நூலாலும்
இறுகக் கட்டிய தொரட்டிகளால்
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு
சுருண்டு போயின வேர்கள்.

ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின்
உயிர்ச்சத்தை உறிஞ்சி
பெருவனத்தை வரைந்திருந்தது.

மறப்பாய்ச்சலில் தேர்ந்திருந்த புலிகள்
வன்னி நிலத்தில் அறம் பாடித் திரிந்தன.

கரு நாகங்களின் துரோகத்தை
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த
சிங்கக் கூர்வாளை
ஏந்திச் சிரித்தான் புத்தன்.

தப்பிப்போன புலிகளின்
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்.

ஏர் மகாராசன்
26.11.2023

வியாழன், 16 நவம்பர், 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழைச் சிறுமைப்படுத்துவதாகும் - மகாராசன்


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்த்தல் கூடாது. 

*


இந்தக் கல்வி ஆண்டின் பொதுத்தேர்வு அட்டவணையைக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அட்டவணையில், தமிழ்ப் பாடம் என்பதற்குப் பதிலாக மொழிப்பாடம் (Language) என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 

தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.

தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 

இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும். இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.

தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 

தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.

தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 

ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

16.11.2023

சனி, 11 நவம்பர், 2023

தீப ஒளித்திருநாள்:தமிழர் மரபு வேறு; ஆரிய மரபு வேறு - மகாராசன்



சூழ்ந்திருக்கும் இருளை விலக்கி, பொருள் இதுவென்று விளக்கிக் காட்டும் ஒளிப்பொருளை விளக்கு எனச் சுட்டுவதும், விளக்கேற்றுதலை வளமைப் பண்பாட்டு நடத்தைகளின் குறியீடாகவும் புலப்படுத்தி வந்துள்ளனர் தமிழ் முன்னோர். 

மழைக்காலக் கார்காலத்தின் மாலைப்பொழுது விரைவாகவே இருட்டத் தொடங்கிவிடும். இருளும் குளிரும் மிகுந்திருக்கும் கார்காலப் பெரும்பொழுதின் மாலைச் சிறுபொழுதை விளக்குகள் ஏற்றி, இருளையும் குளிரையும் விலக்கி வைக்கும் பண்பாட்டு நடத்தைகள் தமிழர் வழக்கில் இருந்திருக்கின்றன. அத்தகைய விளக்கேற்றும் பண்பாட்டு நடத்தையே மா ஒளித்திருநாளாக - தீப ஒளித்திருநாளாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. அதுவே கார்த்திகை மாதத்துத் தீப ஒளித் திருநாள் விழா. 

கார்த்திகை மாத ஒளித்திருநாள் வழக்கம் இன்னும்கூட இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், அத்தகையப் பண்பாட்டு நடத்தைகளுக்குச் சமூக முக்கியத்துவம் அளிக்கவில்லை. சூழலியல் அடிப்படையில் உருவான ஒளித்திருநாளுக்குப் பதிலாக, புராணக் கற்பிதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீபாவளி தமிழர் பண்பாட்டில் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் விசயநகரத் தெலுங்கின ஆட்சியாளர்களின் காலகட்டத்தில்தான்,  ஆரியத்தின் புராணக் கற்பிதங்களால் உருவாக்கப்பட்ட தீபாவளி முன்னிலைப்படுத்தப்பட்டது. 

தமிழர் மரபின் ஒளித் திருநாள் விழாக்களை முன்னெடுப்பதும், ஆரியப் புராணத் தீபாவளிகளைப் புறக்கணிப்பதும்தான் தமிழர் பண்பாட்டு மீட்பாகும்.

தமிழரின் தீப ஒளித்திருநாள் குறித்து நான் எழுதிய விரிவான கட்டுரையும், அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது கட்டுரையும் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளன.

https://maharasan.blogspot.com/2016/12/blog-post_41.html

https://aerithazh.blogspot.com/2018/11/blog-post_4.html

ஏர் மகாராசன்.

வெள்ளி, 10 நவம்பர், 2023

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ்ப்பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் பாழ்படுத்துவதாகும்: கி.ஆ.பெ.விசுவநாதம்.


தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச்சொல். திராவிடம் என்ற சொல்லே திரிந்து ‘தமிழ்’ என்று ஆயிற்று என்பது தமிழ்ப் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றைக் காட்டுமேயன்றி, உண்மையைக் காட்டாது. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் ‘திராவிட’ என்ற சொல் ஒன்றுகூட இல்லை. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.


650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில்தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை - தமிழ் நாட்டை - தமிழ்மொழியை மட்டுமல்லாமல், தமிழ் இனத்தையும் - தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்துத் ‘திராவிடம்’ எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். 

தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு, வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே! ‘தமிழ்’ என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் ‘ழ்’ ஐ உடையது (தம் + ழ்) என்பது பொருள். ‘திராவிடம்’ என்ற வடசொல்லிற்குக் குறுகிய விடம் என்றும், திராவிடர் என்ற சொல்லிற்குக் குறுகியவர் அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள் (திராவி - அற்பம், குறுகல்).

தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும். திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும். தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை. தமிழ்நாடு, தமிழ் மொழி எனக் கூறலாம். ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும். 

தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்துக் கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே ‘திராவிட நாடு’ கூறப்பட்டதும் உண்டு..

தமிழ் என்றால் திராவிடம்தான்; திராவிடம் என்றாலும் தமிழ்தான். தமிழர் என்றால் திராவிடர்தான்; திராவிடர் என்றாலும் தமிழர்தான். தமிழ்நாடு என்றால் திராவிட நாடுதான்; திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடுதான் - ‘அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது’ என்பதில் புரட்டு இருக்குமே தவிர, உண்மை இருக்காது. 

தமிழர் என்று எழுதி (திராவிடர்) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் (தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும், திராவிட நாடு (தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.

தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பைத் தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் ‘ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே’ என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 

தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க, எழுதப்பேச இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக விலகப் பெருமையடைகிறது!

தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை. 

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது தமிழ் மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்பது வேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும். 

திராவிட நாட்டினர்களில் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. 

திராவிட மக்களில் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறவர், வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை ‘அதுகள்; இதுகள்’ என அஃறிணைப்படுத்தி வைதும், செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை -அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது, திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது. 

10 ஆண்டுகளாகத் திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால், அதைத் தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய, திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும். 

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை -தமிழ் நாட்டுப் பற்றை - வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கிப் பாழ்படுத்துவதாக இருந்து வரும். 

காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து, அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர், தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டிவிட வேண்டும். 

திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு ‘அடைந்தே தீருவேன் திராவிட நாடு’ என்றால், அது இல்லாத ஊருக்குப் போகாத பாதையைத் தெரியாத மனிதனிடம் புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனைத் திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும். 

அப்படியே ஒப்பினாலும், கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

அவ்விதமே முடிந்தாலும், அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாகத் தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்குப் போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.

தமிழ் வாழ்க என்று கூறி, தமிழ்நாடு தமிழருக்கே என அலறி, தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்டு திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி, திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி, திராவிடர்க்குப் போராட வேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? என்பதற்குத் திராவிடம் இதுவரை பதில் கூறவேயில்லை. தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.

தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டுத் தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும் சொல்லியும் வரலாற்றில் எழுதியும்கூட, அவர் தன்னைக் கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும். 

இதுகாறும் கூறியவைகளைக் கண்டு, தமிழ் எது? திராவிடம் எது? தமிழர் யார்? திராவிடர் யார்? தமிழ்நாடு எது? திராவிட நாடு எது? தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது? என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம். 

மகாராசன் தொகுத்த 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


திங்கள், 6 நவம்பர், 2023

சமூகத்தின் சுய பரிசோதனையை வலியுறுத்தும் நூல்: மணி மீனாட்சி சுந்தரம்


தமிழக பள்ளி மாணவர்கள் வகுப்பறையிலும் பொதுச் சமூகத்திலும் நடந்துகொள்ளும் நெறிபிறழ் நடத்தைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்தபடியே உள்ளன.இவற்றைக் கண்டும் காணாமலும் கடந்துபோகும் தமிழ்கூறும் நல்லுலகைக் கைப்பிடித்து நிறுத்தி, அவை குறித்து விவாதிக்கவும் மாற்றத்தை முன்னெடுக்கவும் வற்புறுத்துகிறது இச்சிறு நூல்.

மாணவர்களின் தம்மதிப்பற்ற செயல்களுக்கும்,நெஞ்சைப் பதற வைக்கும் வன்முறைகளுக்கும் முக்கிய காரணம், கல்வி பற்றிய அவர்களின் அக்கறையின்மையே என்றாலும்,அந்த அக்கறையற்ற மனோநிலையை வளர்த்தெடுக்கும் கூறுகளை முன்வைத்து இந்நூல் பேசுகிறது.

மேல்நிலைக் கல்வியில்,போட்டித் தேர்வுகளை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள கடினமான பாடத்திட்டமும் தேர்வுமுறையும், மெல்லக் கற்கும் மாணவர்களைக் கற்றலில் இருந்து விலக்கி சமூக உதிரிகளாக மாற்றும் ஆபத்தை விளைவிப்பதை விரிவாகப் பேசுகிறது முதல் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை,நாங்குநேரியில் சக மாணவனை வெட்டி வீழ்த்திய சாதிய மனோநிலையின் அடிப்படைக் காரணிகளை ஆராய்கிறது.

பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கும் சாதி வெறிகொண்ட சமூகம், ஆசிரியர்,பெற்றோர்,சாதிச் சங்கங்கள்,அரசியல்வாதிகள் என குற்றத்திற்குத் துணைபோகும் அனைவரையும் சுய பரிசோதனைக்கு அழைக்கிறது இந்நூல்.

மதுப்பழக்கத்தினால், வளர்ந்த பெரியவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அவர்களை விட வேகமாக, வளரிளம் பருவத்து மாணவர்கள் போதைப் பழக்கத்தினால் வீழ்ந்துகொண்டிருக்கும் பேராபத்தையும் பேசுகிறது இந்நூல்.

சமூகத்தின் எதிர்காலமான மாணவரைச் சிறந்தவராக,அற உணர்வு கொண்டவராக உருவாக்க வேண்டிய பள்ளிகள், அதற்குரிய போதாமைகளை வளர்த்துக்கொண்டே போவதை எச்சரிக்கின்றது இந்நூல்.

தமிழ்ச்சமூகம்,பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரை நூல்களைத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் 'ஏர்' மகாராசனின் இந்நூல், கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும்,மாணவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட எவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

கட்டுரையாளர்:
மணி மீனாட்சிசுந்தரம்,
ஆசிரியர் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
மதுரை.

*
நூலின் பெயர் : 
மாணவர்கள் சமூக உதிரிகளாகும்
பேராபத்து.
நூல் வகை : கட்டுரை 
நூலாசிரியர் : மகாராசன்.
முதற்பதிப்பு : செப்டம்பர் '2023
பக்கங்களின் எண்ணிக்கை : 72
விலை : ரூபாய்.90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606806.
பேச: 99948 80005.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.

செவ்வாய், 31 அக்டோபர், 2023

மழைவளச் சடங்குகளும் மழைத் தெய்வ வழிபாடும்: மகாராசன்



மழை இல்லாத கோடைக் காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் தென்மாவட்டங்களின் சிற்றூர்ப் புறங்களில் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பெண்கள் முன்னெடுக்கும் ஒரு சடங்கு, மழைச் சோறு சடங்கு எனவும் மழைக் கஞ்சிச் சடங்கு எனவும் நிகழ்த்தப்படுகிறது.  பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, ஊரார் தருகின்ற அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம் என எந்தவகைத் தானியங்களாக இருந்தாலும் சேகரித்து, ஊர் மந்தையிலோ அல்லது கண்மாய்க் கரையிலோ ஒரே வட்டகையிலோ அல்லது பானையிலோ கஞ்சியாகச் சமைத்து ஆக்கப்படுகிறது. இது மழைக் கஞ்சி எனப்படுகிறது. 

அன்னந் தண்ணிக்கி வழியில்ல 

கம்மாக் கரையில தண்ணி இல்ல

ஆட்டு மாட்டுக்குத் தண்ணி இல்ல

தவிச்ச வாய்க்குத் தண்ணி இல்ல

பச்சப் பிள்ளைக்குப் பாலுமில்ல 

எனப் பெண்களும் குழந்தைகளும் ஒப்பாரியாய்ப் பாடியபடியே, மழை பெய்ய வேண்டும் என வானத்தை நோக்கி வழிபடுகின்றனர். 

ஊரார் அனைவரும் மழைக் கஞ்சியைப் பகிர்ந்து குடிக்கும் இந்தச் சடங்கானது, மழை வேண்டுதலை நோக்கமாகக் கொண்டது. ஊரார் பலரும் இதில் கலந்து கொண்டாலும், பெண்களே இத்தகையச் சடங்கை முன்னெடுக்கின்றனர். பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான், நிலத்தின் மழை ஏக்கத்தை - நிலத்தின் மழைத் தவிப்பை - நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள். 

நிலம் மட்டுமல்ல, நிலம் சார்ந்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மழைநீர் அடிப்படைத் தேவை. மழை இல்லாவிட்டால், வறட்சியும் வறுமையும் பஞ்சமும் ஏற்படும். மழை இல்லாமல் போனால், உயிர் வாழ்வுக்கும் உணவுக்கும் கையேந்தும் நிலை உருவாகும் என்பதை மழைத் தெய்வத்துக்கு முன்னுணர்த்தும் போலச் செய்தல் சடங்குதான் மழைக் கஞ்சிச் சடங்காகும். மக்கள் துயர் கண்டு அல்லது மக்கள் துயர்நிலை அடையாமல் இருக்க, மழைத் தெய்வமானது மழையைப் பொழியும் என்கிற நம்பிக்கையோடும் வேட்கையோடும் வேண்டுதலோடும்தான் இத்தகையச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

மழையை எதிர்நோக்கியும் மழைத் தெய்வ வழிபாட்டையும் உள்ளீடாகக் கொண்ட மழைக் கஞ்சிச் சடங்கைப் போலவே, தமிழ்நாட்டின் தென்பகுதியில் மழைச்சோறு சடங்கு என்பதாகவும் ஒரு சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. முகவை (இராமநாதபுரம்) மாவட்டத்தில் உள்ள சிற்றூர்ப் புறங்களில் ஆண்டுதோறும் மழை இல்லாத காலகட்டங்களில் மழைச் சோறு சடங்கானது இன்றளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இச்சடங்கையும் ஊரில் உள்ள பெண்களே முன்னெடுக்கிறார்கள். 

பெண்களும் சிறுமிகளும் மட்டுமே இச்சடங்கில் பங்கேற்கிறார்கள். பெண்களும் சிறுமிகளுமாகச் சேர்ந்து, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வீட்டார் தருகின்ற சமைத்த உணவு எதுவாயினும் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேகரித்துக் கலந்து, சோற்று உருண்டைகள் பிடித்து, சடங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சோற்று உருண்டைகள் சாப்பிடக் கொடுக்கின்றனர். பெண்கள் நோன்பிருந்து நிகழ்த்தப்படும் இச்சடங்கில் கும்மிப் பாடல்களும் ஒப்பாரிப் பாடல்களும் பாடப்படுகின்றன. இந்தப் பாடல்கள் யாவும் மழைநீரை மய்யமிட்டதாகவே - மழைத் தெய்வ வழிபாடாகவே அமைந்திருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத்தகைய மழைவளச் சடங்கு பற்றி பா.அரிபாபு முன்வைத்திருக்கும் கள ஆய்வுத் தரவுகள், மழைத் தெய்வ வழிபாட்டு மரபில் உள்ள இந்திர வழிபாட்டுச் சடங்கின் நீட்சியாக இருப்பதை அடையாளப்படுத்துகின்றன. மழைச் சோறு சடங்கு பற்றி அவர் முன்வைத்திருக்கும் விவரிப்புகள் வருமாறு.

மழைச் சோற்றுச் சடங்கானது, பெரும்பாலான தென்கிராமங்களில் தனித்த குழுவினர் அல்லது ஒரு சாதியினர் மட்டுமே வாழும் ஊர்களில் முன்னெடுக்கப்படுகின்றன. மழைச் சோற்றுச் சடங்கானது மிக எளிமையாக நடத்தப்படினும், நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு குழுவினர் அல்லது ஒரு சாதிக் குழுவினர் மட்டுமே பங்கெடுப்பது தெரிய வருகிறது. 

ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தெ.அண்டக்குடி, சத்திரக்குடி, இலந்தைக்குளம், பனையடி ஏந்தல் ஆகிய ஊர்களில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே வாழ்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பல சாதிகள் வாழும் கிராமங்களில் மழைச் சோற்றுச் சடங்கினைச் சேர்ந்து செய்வதில்லை. தனித்தனியாகவே செய்கிறார்கள். இங்கு ஊரின் நன்மை பொதுவாக இருப்பினும், சடங்கு நிலையில் சாதிவாரியாகச் சடங்குகளை நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்க உண்மையாகும். 

மழைச் சோறு எடுக்கும்போது எல்லா வீடுகளிலும் சோறு வாங்குகிறார்கள். கிராமங்களில் சாதாரணமாக ஒரு வீடு இன்னொரு வீட்டில் அன்னம் தண்ணீர் புழங்குவது இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லா வீட்டுச் சோறும் ஒரு ஓலைப் பெட்டியில் வாங்கப்படுகிறது. காலம் காலமாகக் கை நனையாது இருத்தல் அல்லது சோறு சாப்பிட மாட்டேன் என்று கூறுகிற பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இங்கு மங்குகிறது. 

ஏனெனில், கிராமங்களில் பகையாளி வீட்டுச் சோற்றை எக்காரணம் கொண்டும் சாப்பிடமாட்டார்கள். மழைச் சோற்றுச் சடங்கில் இயல்பாக ஒன்றாகிறது. தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் தீட்டுப் பார்ப்பது இல்லை. உருண்டையாக உருட்டிக் கொடுக்கும்போது யாரும் மறுப்பதும் இல்லை. பகை உணர்வின் உச்சத்தைப் பாதுகாக்கும் சோறானது, இங்கு தன்னிலைப்படுத்தப்படுகிறது. ஊரின் பொது நன்மைக்காக இது ஒரு சாதிக்குள் மட்டுமே தற்காலிகமாகச் சாத்தியமாகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கில் பெண்கள் பாடும் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பாடல் வழியாக மழையையும் கடவுளையும், மழை இல்லாமல் தங்களுக்கு ஏற்படும் வாழ்வியல் துன்பத்தையும் எடுத்துரைக்கின்றனர். பாடல்களைப் பாடி வரும்போது இடையிடையே அம்ம மாரி! அம்ம மாரி! என்று திரும்பத் திரும்ப அழைப்பதும், குலவையிட்டு ஒரே மாதிரியாக வணங்குவதும் மழையை வருவிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கின் கடைசியில் ஒப்பாரி வைப்பது முக்கியமானது. போலியான ஒப்பாரிதான். ஆனால், பெண்களும் சிறுமிகளும் இயற்கையாக அழுவதுபோல நடிப்பார்கள். இது இறப்பிற்கான ஒப்பாரி இல்லை. மழையில்லாமல் வாழ்க்கை கடினமாக மாறி விட்டதே என்று புலம்பும் ஒப்பாரி. இதிலும் ஊரின் நன்மையே மையமாகிறது. எல்லா நாட்டுப்புறச் சடங்குகளும் ஊரின் பொது நன்மையை முதன்மைப்படுத்தி எதனையும் செய்யத் துணிகிறது. 

மக்களின் விருப்பம், மழை பொழிவதை மையமாகக் கொண்டிருந்தாலும், இன்னலை (வறட்சி) எதிர்கொள்ளும்போது மக்கள் அனைவரும் அந்த ஆண்டில் ஏற்பட்ட பகை உணர்வுகளை மறந்து ஒன்று சேர்கின்றனர் என்பதும், பெரும் குழுவாகச் சேர்ந்து செயல்படுவதன் மூலம் சமூக ஒருங்கிணைவையும் எதிர்பார்ப்புகளையும் எட்ட முடிகிறது என்பதும் திருவிழாவழி வெளிப்படுகிறது என்று கூறுவார் பக்தவத்சல பாரதி. 

மழை பெய்தால் பயிர்கள் விளையும்; உணவுக்குப் பஞ்சம் இருக்காது; ஆநிரைகளுக்குத் தண்ணீரும் உணவும் கிடைக்கும்; மக்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு; ஊரை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதே நிலையில், மழை பெய்யாவிட்டால் மேலே சுட்டிக்காட்டிய அனைத்தும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், கிடைக்க வேண்டியே - மக்கள் எது நடக்கப் போகிறதோ அதை நிகழ்த்திக் காட்டி இயற்கையைப் பணிய வைக்க விரும்புகிறார்கள். பஞ்சம் பிழைக்க ஊரு விட்டு ஊரு போகப் போகிறோம் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். 

சோறு ஒரு ஏக்கமாக மாறுகிறது. இந்தச் சோறு இந்த வருடம் கிடைக்காமல் தவிக்கப் போகிறோம் என்றவாறு சோற்றுப் பெட்டியைத் தலையில் சுமந்து சிறுமிகளோடு ஊரை விட்டுச் செல்வதாக நிகழ்த்திக் காட்டித் திருப்தியடைகிறார்கள். இங்கு விளைச்சல் பொருளாதாரப் பலனாகும். 

இச்சடங்கில் பெண்களே மையம் கொள்கிறார்கள். ஆண்களுக்குச் சிறு பங்களிப்புகூட இல்லை. சோறு வாங்குவது, பாடல் பாடுவது, கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பரதேசம் போவது என அனைத்து நிகழ்வுகளிலும் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. சோறு சமைத்தல், வீட்டில் நிலவும் வறுமை, பாடல்களைப் பாடும் தொழில் மரபு, வீடு, புழங்கு வெளி, விவசாய உற்பத்தியை உருவாக்குதல் என, பெண்களின் பங்களிப்பு நிரம்பி வழிவது வரலாறாகும். 

இங்கும் மழைச்சோறு சடங்கை நிகழ்த்தி வளமையை நோக்கி அல்லது மழையை மன்றாடுகிறார்கள் என விவரிக்கும் பா.அரிபாபு,

யானையது யான, அய்யனார் தந்த யான! 

யானைகளைப் பார்த்தா, மேகங்க போல! 

யானை கண்ணுகளப் பார்த்தா, முத்துருண்ட போல! 

யானை காதுகளப் பார்த்தா, சிறு சொளகு போல! 

யான வந்து இறங்கவே, அல்லி அக்கா நாட்டவே!

சேனை வந்து இறங்கவே, 

அண்டக்குடி செல்வம் பொழியுதுன்னு 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

புத்துப் புத்து நாகரே! பூமிக்கும் உடையவரே! அம்ம மாரி!

ஒலக்கம்பு போல நாக்கை நீட்டும் நாகரே! அம்ம மாரி! 

பச்சரிசி போல பல்லிருக்கும் நாகரே! அம்ம மாரி!

சிறு சொளகு போல படமெடுக்கும் நாகரே! அம்ம மாரி! 

தேச ராசாருக! தெய்வேந்திர மன்னருக! 

மம்பட்டிய தோள்ல வச்சு மடை திறக்க வாராக!

மஞ்சள் நீராடி மடையத் தொறந்துவிடு! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

வட்டிக்கு நெல் வாங்கி வயல வெதச்சு வச்சோம்! அம்ம மாரி! 

வட்டி வளருதையா! வஞ்சாவி ஆகுதையா! அம்ம மாரி!

மானத்து ராசாவே! மேகத்துரை மகனே! 

மேகங்கள ஓடிவந்து ஒரு மழைய எறங்கச் சொல்லுங்க! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

என்பதான மழைச் சோறு சடங்குப் பாடலையும் பதிவு செய்கிறார். 

வேளாண்மை உழவுத் தொழில் மரபினரால் நிகழ்த்தப்படும் மழைச் சோற்றுச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டிருப்பதோடு, அத்தகைய மழைத் தெய்வமாக இந்திரனையே - தேவேந்திரனையே அடையாளப்படுத்தும் வழக்காற்று வாய்மொழிப் பாடல்களைச் சடங்கியல் தன்மையோடு புலப்படுத்துகின்றன. இந்திர குலத்தார் எனும் உழவுத் தொழில் மரபினரே இத்தகையச் சடங்குகளை நிகழ்த்தி வருகின்றனர். இதுபோன்ற மழை வளச் சடங்குகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டும் வருகின்றன.

இடி இடிக்க மழை பொழிய இருகரையும் தண்ணி வர 

பாசி போல மின்னல் மின்ன பவளம் போல உதயமாகி 

ஊசி போல மின்னல் மின்ன உதயம் போல கால் இறங்கி 

சட்டம் போல வாய்க்கால் வெட்டி பாசி போல மின்னல் மின்ன 

பொன்னான மண் வெட்டிகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கொழுவுகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கலப்பைகள கொண்டு வந்தார் தேவேந்திரரு!

எனும் கும்மிப் பாட்டு, மழை வேண்டும் சடங்கில் பாடப்படும் மந்திரப் பாடலாகச் சுட்டுகிறார் தே.ஞானசேகரன். 

வடக்கே மழை கருக்கவே! வாய்மடை எல்லாம் சங்கு புரளவே!

தண்டொதுங்கி தடியொதுங்கி வருகுதாங் காவேரி!

தாழை மடலொதுங்கி வருகுதாங் காவேரி!

கெண்டை மீன் வாய்திறந்து வருகுதாங் காவேரி!

அத்துணைக் காவேரியை - நம்ம 

தேவேந்திரரு ராசதண்ட மாலையிலே தடுத்தொதுங்கி வாராங்கோ!

சேரக் குலவையிடுங்க தேவேந்திரக் கன்னியெல்லாம்! 

எனும் ஏர்வலப் பாட்டையும், மழை வேண்டும் மந்திரப் பாடலாகவே தே.ஞானசேகரன் எடுத்தாள்கிறார். 

மேற்காணும் இரு பாடல்களைக் குறித்து தே.ஞானசேகரன் கூறும்போது, இங்கே மழை வேண்டி ஒரு மாய மந்திரப் பாடல் பாடப்படுகின்றது. அதாவது, மழையின் மைந்தனான இந்திரரை அவரின் மக்கள் வேண்டி விரும்பிப் பாட, அவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மழை பொழியச் செய்கிறார். அதன் பின்னால், மண்வெட்டி தருகிறார். கழனி உழக் கொழு தருகிறார். கலப்பை தருகிறார். விதைக்கப் பெரும்பாலான நெல்களையும் தருகிறார். உழுவதற்கு மாடு கொண்டு வருகின்றார். இதோடல்லாமல், காவேரியின் வெள்ளத்தில் மீன், சங்கு, நத்தை, தவளையெல்லாம் உண்டாக்கி மருத நிலத்தைச் செழிப்பாக்குகிறார் தேவேந்திரர் என்று இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன என்கிறார். 

இத்தகைய மழைத் தெய்வ வழிபாட்டை - மழை வேண்டுதலை மய்யப்படுத்திய மழைவளச் சடங்கை நிகழ்த்தும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்துப் பள்ளு நூல்கள் கூறும்போது,

மாரிப் பொருட்டாய் வரங்குறித்து மள்ளரெல்லாம்

சேரிக் குரவையெழத் தெய்வநிலை போற்றினரே…

காவுக்கு இறைவனாம் இந்திரன்

ஏவல் பண் கொண்டெழுந்தான்

என்கிறது முக்கூடல் பள்ளு. 

அதேபோல, மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கைப் பற்றித் திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு கூறும்போது, 

கழை வேண்டி முத்து ஒளித்த கல்லக நல்நாட்டில் எதிர்

குழை வேண்டிப் பாயும் கொழுங்கண் கடைசியர்கள்

இழை வேண்டிப் பூரித்து எழுமுலைநோய் மள்ளர் எல்லாம்

மழை வேண்டித் தெய்வம் வரம் கேட்கச் சென்றாரே

என்கிறது. 

இதேபோன்ற மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கை மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு சுட்டும்போது,

செந்நெல் செழித்தோங்கத் தென்மாரியும் பொழிய 

வண்ணமிகும் மள்ளரெல்லாம் வந்து தெய்வம் செய்தனரே

என்கிறது. அதேபோல, மழை வேண்ட தேவேந்திரன் எனும் இந்திரன் மழை பெய்வித்தான் என்பதை,  

தேவேந்திரன்கை விடைகொண்டருளி ஆகாயந்தன்னில் பரவியே 

சேந்து குரவை நீரில் படிந்து மேய்ந்து கருக்கொண்டேகியே 

எனக் கட்டிமகிபன் பள்ளுவின் பாடல் கூறுகிறது. 

இவ்வாறு, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபட்டிருப்பதையும், அத்தகைய இந்திரத் தெய்வ வழிபாட்டை மள்ளர் எனும் உழவுத் தொழில் மரபினரே முன்னெடுத்திருக்கின்றனர் என்பதையும் மேற்காணும் பள்ளுப் பாடல்கள் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, மேற்காட்டிய தரவுகள் யாவும் மழைத் தெய்வ வழிபாட்டு நீட்சியையும், மழைத் தெய்வ அடையாளமாக இந்திரனையுமே உள்ளீடாகவும் குறியீடாகவும் விளக்கப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக, ஆரியத்தின் வழிபாட்டுச் சடங்கியலோடும் மரபோடும் அடையாளத்தோடும் தொடர்பில்லாத வகையில், தமிழரின் தனித்த வழிபாட்டு மரபில் காணலாகும் இந்திரத் தெய்வ வழிபாட்டு மரபின் நீட்சியாகவே - மழைத் தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு நீட்சியாகவே இருந்து வருவது புலனாகிறது.

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூலில் இருந்து…

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை-76

விலை: ரூ.250.

நூல் வேண்டுவோர்

தொடர்புக்கு: 

9080514506.