சனி, 24 பிப்ரவரி, 2018

சோடை போகாத சொல் நிலம் :- பாவலர் வையவன்.


அண்மையில் தனது ஆறாவது படைப்பான ‘சொல் நிலம்’ கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தோழர் ‘ஏர்’ மகாராசன். நானும் எனது ஆறாவது தொகுப்பான ‘சொல் வெளி’ யை அனுப்பினேன். இருவருமே ‘சொல்’ குறித்து தலைப்பிட்டுருப்பதை ஒருகணம் எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இன்னும் கூட வேறு எவரேனும் வெளியிட்ட நூல்களின் தலைப்பில் ‘சொல்’ இருக்கக் கூடும். சொல் குறித்து சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது. நிலத்துக்காகப் போராடும் அதே வேலையில் நாம் நம் சொற்களுக்காகவும் போராடவேண்டிய தேவையிருக்கிறது என்பது என் கருத்து. எனது ‘சொல் வெளி’ சொல்லின் பரப்பைச் சொல்கிறது. மகாராசனின் ‘சொல் நிலம்’ சொல்லின் பொருண்மையைப் பேசுகிறது.

 பொதுவாக கதையோ கவிதையோ கொண்டு வெளிவரும் நூல்கள் அதன் உள் தலைப்புகளுள் ஏதேனும்  ஒன்றை நூலின் தலைப்பாகக் கொண்டு இலங்கும். இத்தொகுப்பில் ஐம்பத்தியிரண்டு தலைப்பில் கவிதைகள் உள்ளன. ஆனால், ‘சொல் நிலம்’ என்ற தலைப்பில் தனியாகக் கவிதை இல்லை. ஆனால் சொல்லைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் பல்வேறு கவிதைகள் மதுரையின் மண்மணத்தோடு பேசுகின்றன. அத்தனை கவிதைகளுமே தீவிர அரசியலை, பண்பாட்டைப் பேசுகின்றன.

 உலகச் சிக்கல்கள் எல்லவற்றையும் சுருக்கி ஒற்றைச்சொல்லில் சொல்ல வேண்டுமானால் “ஏற்றதாழ்வு”தான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கும் காந்த முள்ளைப் போலவே, எப்போதும் வசதியானவர்கள் பக்கமே நிற்கிறது ‘ஆட்சி முள்’. எனவே,
 “எல்லா நாளும்
 பொழுதுகள் விடிந்தாலும்
 இல்லாதவர் வாழ்வையே
 கவ்விக்கொள்கிறது
 இருள்”
எனப் பேசும் இவர்கவிதை, மரநிழல் போர்த்திய காட்டின் குளுமையையும் மனித நிழல் போர்த்திய நாட்டின் வெம்மையையும் ஒப்பிட்டுக் காட்டி மலடு தட்டிப்போன வாழ்க்கையை மல்லாக்காகப் புரட்டிக் காட்டுகிறது.
 “நெல்லை விதைத்தவர்கள்
 சொல்லை விதைத்தார்கள்
 கூடவே தன்மானம் சேர்த்து”
என்னும் ‘செந்நெல் மனிதர்கள்’ கவிதை வெண்மணியின் வேதனையை வலியோடு விவரிக்கிறது. நிலம், உழைப்பு, கூலி என்பன மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள். ஆனால் இவையெல்லாம் மக்களிடமிருந்து எவ்வெவ்வழிகளில் சூரையாடப்பட்டன... படுகின்றன என்பதைப் பேசத்தான் கவிதைகளும் மற்ற படைப்புகளும். அதைத் தொகுப்பு முழுக்க நிறைவாகவே செய்திருக்கிறார் மகாராசன். அப்படி எழுதாத சொற்களை
 “கவித்தனம் காட்டவே
 எழுதிஎழுதித் தீர்க்கின்றன
 சொற்கள்”
எனச் சாடுகிறார். அண்மையில் சமூகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளுள் ஒன்று ஆணவப் படுகொலை. அதில் இவரது பார்வை சற்று விரிகிறது.
 “அதிகாரத்தின் ஆணவத்தால்
 கொல்லப்பட்டான் கோவலன்
 கள்வன் அவனில்லை என
 வழக்குரைத்து
 அதிகாரத்தைச் சாகடித்தாள்
 கண்ணகி...

 “ஆணவப் படுகொலைகளுக்கு
 காரணங்கள் தேவையில்லை
 சாமானியராய் இருத்தலே
 போதுமானது”
மகாராசனின் இந்நூல் மிகவும் கனமானது; அடர்த்தியானது; வலியானது. இதில் எல்லா கவிதைகளையுமே கொண்டாடவேண்டியிருக்கிறது. அதற்கு இவ்விடம் போதுமானதாயில்லை. சோடை போகாத சொல் நிலம் இது. இருப்பினும் இழப்பின் தவிப்போடு முடிகிறது நூல்
 “உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
 அப்பனும் ஆத்தாவும்
 நெடும்பனைக்காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
 மண்ணுக்குள்”

 ஒரு சிறந்த நூலை அறிமுகம் செய்துவைக்க என்னுடைய இந்த சொற்கள் போதாது. அப்படித்தான் நான் உணர்கிறேன். வாங்கிப் படிக்கும்போதுதான் இதன் வன்மையை உணர முடியும். சிறந்த படைப்பு கொடுத்த... அதை எனக்கும் படிக்கக் கொடுத்த “ஏர்” மகாராசனுக்கு வாழ்த்துகள்!

               நூல்பெற: ‘ஏர்’, மகாராசன், 28.காந்தி நகர், செயமங்கலம், பெரியகுளம், 625 603 .
பேச: 94436 76082

புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல் : கருத்துரையும் பதிலுரையும்.

 நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூலைக் குறித்துத் தோழர் பாவெல் பாரதி பள்ளு இலக்கியத்தின் குறியீட்டு அரசியல் கட்டுரையை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரை குறித்துத் தோழர் சிறீரசா அவர்கள் கருத்துரை பதிந்திருந்தார். இதற்கு தோழர் பாவெல் பாரதி பதிலுரை அளித்துள்ளார். அவை வருமாறு.

சிறீரசா கருத்துரை:

 பள்ளு இலக்கியம் தோன்றிய களம் பற்றிய ஆய்வாகவும், அதில் வரும் சித்தரிப்புகள் பற்றிய புறநிலைப் பார்வையுடனான ஆய்வாகவும் அதனை வளர்த்தெடுத்தலே நம் காலத்தின் ஆய்வாளர்கள் செய்ய வேண்டியது. மாறாக, அந்தப் பனுவலுக்குள்ளே மட்டும் நின்று மல்லடிக்கும் வகை ஆய்வுகள் மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்ப்பதில்லை. தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை. மாறாக, பனுவல்கள் சார்ந்த ஆய்வுகளைப் பனுவல்களுக்குள்ளேயே மட்டும் நின்று நிகழ்த்துவனவாகவே உள்ளன. சைவம், வைணவம் என்பதே கூட குறியீட்டு வகை மதங்கள்தான். சைவத்துக்கும் வைணவத்துக்குமான முரண் என்பதும குறியீட்டுவகை முரண்தான். அடிப்படை முரண்பாடாக வரலாற்றில் முதன் முதலில் எழுந்த பால் முரண்பாட்டின் குறியியலில் இருந்து அவை தோற்றம் கொள்கின்றன. பள்ளு இலக்கியத்தில் சொல்லப்படும் சைவ வைணவக் கூறுகளின் புறநிலைகள் 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கத்தின் தோற்றம் கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளோடு, அவற்றில் பால் சார்ந்த ஆண், பெண் குறியீட்டு ஆதி முரண் சார்ந்த கண்ணோட்டங்களும் முரண்களை உருவாக்குகின்றன. வைணவம் பெண் சார்ந்த குறியீடு என்றால், சைவம் ஆண் சார்ந்த குறியீடாக உள்ளது. அது மாமன் மச்சான் உறவாகிற குறியீடும் அதிலிருந்தே தோற்றம் கொள்கிறது. இடைக்காலத்தில் சமுகத்தின் பெரும்பிளவு இரு மதங்கள் சார்ந்த நிலவுடைமைப் பிரிவுகளாகத் தோற்றம் கொள்கிறபோது, அரசு முறையின் ஆதிக்கத்தில் அடங்கிப்போன அத்தனை உப கூறுகளும், குல முறைகளும், சைவ வைணவச் சார்பெடுக்கும் வகையில் தகவமைக்கப்பட்டன, அல்லது தகவமைந்து கொண்டன. நாட்டார் தெய்வங்கள், குல முறைக் கடவுள்கள் இத்தகைய தகவமைப்புக்குள்ளாயின. அவை நாட்டார் மரபியலோடு, சைவ, வைணவ அடையாளங்களையும் தரித்துக் கொண்டன. ஏற்கெனவே இங்கிருந்த கருப்பு, கிருஷ்ணன், விஷ்ணுவோடு இணக்கம் கண்டார், அல்லது வேஷங்கட்டப்பட்டார். அதுபோலவே தாய்த் தெய்வங்கள், பிற தெய்வங்கள் சிவன், ஈஸ்வரி போன்ற கடவுள் முறைகளோடு கணக்கில் சேர்க்கப்பட்டனர். நாட்டார் தெய்வ வழிபாடுகள் முழுக்க இன்றைக்கு இத்தகைய கலப்பு இன வழிபாடாகவே உள்ளன. அவை விநோதக் கலவைகளாக உள்ளன. அதுபோலவே பள்ளு இலக்கியத்தின் மாந்தர்களை வெறும் உழைப்பாளர் என்று சொல்வது சரியானதல்ல, அவர்கள் விவசாய உழைப்பாளர்கள், உழைப்பாளர் என்றார் அது நவீனத் தொழில் முறை சார்ந்த உழைப்பாளர்களைப் பொதுவில் குறிப்பதாக உள்ளன. விவசாயத் தொழிலாளர்களா? அல்லது விவசாயக் கூலிகளா என்பது போன்ற பதங்களை இலக்கியத்தின் வருணனைகள் மூலம் தெளிவுபடுத்திப் பயன்படுத்துவதே சிறந்தது. அதுபோலவே பிரித்தாளுதல் என்கிறது நவீன உத்தியல்ல, அவை பழஞ்சமூகத்திலிருந்து நவீன சமூகம் தனதாக்கிக் கொண்டவை. பள்ளு இலக்கியங்கள் இடைக்காலத் தமிழகத்தின் நிலவுடமைச் சமுக அமைப்பின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், உற்பத்திப் பொருட்கள், உற்பத்திப் பங்கீடு, உற்பத்திப் பண்பாடு, பண்பாட்டு உற்பத்தி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதி. அதிலிருந்து, வானமாமாலை விட்ட இடத்திலிருந்து, நொபுரு கரோஷிமா போன்றவர்கள் தொட்டுத் தடவிச் சென்ற இடத்திலிருந்து, தமிழச் சமூக அமைப்பு பற்றிய புறநிலை ஆய்வைத் தொடர வேண்டிய கடப்பாடு மார்க்சிய ஆய்வாளர்களுக்கு உண்டு. அவர்களோடு நின்றால் கிட்டத்தட்ட ஆய்வுலகம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதென்றே பொருள்...


பாவெல் பாரதி பதிலுரை:

மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்க்க வேண்டிய அல்லது தேக்கத்தைப் போக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிற அக்கறை மிக்க பின்னூட்டம்.

ஆய்வு வளர்ச்சிக்கேற்ப பள்ளு பற்றிய ஆய்வு வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழ் ஆய்வுச் சூழலில் அது நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் இக்கட்டுரைகளை மகாராசன் கொண்டுவந்துள்ளார்.

இன்று 50 ஆண்டுகளுக்கு முந்திய நொபுரு கரோஷிமாவே கூட இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை.  தற்பொழுதுதான் தமிழ் வாசகர்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார். இன்னொரு கரோஷிமாவும் வானமாமலையும் உருவாகவும் இல்லை. என்பதுதான் தமிழ் ஆய்வுச் சூழல்.

சைவ, வைணவக் குறியீட்டம்சம் குறித்த உங்கள்  கருத்து மிக முக்கியமானது.

இந்தக்கட்டுரை நா.வா.அவர்களின் ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை  அறிமுகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டதே!. கூடுதலாக பள்ளுப்பாட்டில் வரும் இரண்டு கூறுகளை மட்டும் எடுத்துக் கொண்டு  குறியீட்டுத் தன்மை எப்படி பள்ளுவில் இயக்கம் பெற்று அரசியலைப் பேசுகிறது என்று தொட்டுக்காட்டும் முயற்சிதான்.

பள்ளு இலக்கியம் என்ற வயல் சார் உற்பத்திபற்றிப் பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிற  உழைப்பாளர் என்ற பதம் பொருட்பிழையைக் கொடுத்து விடாது என்றே கருதுகிறேன். விரிவான கட்டுரையில் உழைப்பின் வகைமை குறித்தே தனித்து எழுதலாம்.

//திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.//

என்ற கருத்து பிரித்தாளுதல் நவீன உக்தியல்ல பழம் உக்தி என்ற உங்கள் பார்வையோடு  உடன் படுவதுதானே! தோழர்.

//தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை.//

உண்மைதான். இதனை இடதுசாரி ஆய்வாளர்கள்தான் செய்யமுடியும்.

எனக்குத் தெரிந்து கிராமப்புறத்தில் நில உடைமை (Land holding) அதன் சமூகப் பின்னணி, கிராமப்புற உற்பத்தி உறவு நில உடைமை எப்படி அது கைமாறுகிறது  என்பது குறித்து 1977 ல் தமிழகத்தில் தேனி மாவட்டம் கோகிலாபுரம் என்ற ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து  ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வைச் செய்தவர்கள் தற்போது கேரளாவின் திட்ட கமிசன் துணைத்தலைவராக உள்ள பொருளாதார வல்லுநர் தோழர் V.K.ராமச்சந்திரன், மதுரா சுவாமிநாதன்.(D/0 M.S.சுவாமிநாதன்- தற்போது V.K.ராமச்சந்திரன் மனைவி ) என்.ராம் உள்ளிட்ட அன்றைய மாணவர் குழு.

மீண்டும் 1999 ல்  IGDR மும்பை ,கொல்கத்தா ISI  நிறுவனம் ஆகிய ஆய்வு நிறுவனங்களில் அப்பொழுது முக்கியப் பொறுப்பில் இருந்த வி.கே.ராமச்சந்திரன். அவரது ஆய்வு மாணவர்களைக் கொண்டு Reasearch for Agrarian studies என்ற ஆய்வைச் செய்தார்.
அம்மாணவர்கள் பலர் .

நானும் என் சகோதரர் வழக்கறிஞர் பாலதண்டாயுதமும் அவர்களோடு 1999 ல் இரண்டுமாத காலம் அவ்வாய்வில் கலந்து கொண்டோம்.

எனது சகோதரர் ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்காளத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளிலும் அவர்களோடு கலந்து கொண்டார். இந்திய அளவில் கிராமப் புறச் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் மாதிரித் தரவாக V.K.ராமச்சந்திரன் அவர்கள் அதனை வளர்த்தார்.

இப்படியான ஆய்வுகளின் அடிப்படையை வரலாறு, இலக்கியங்களோடும்  ஒப்பிட்டு விரிக்க வேண்டியுள்ளது.
மொத்த பள்ளு இலக்கியத்தையும் தற்கால பல்துறை  ஆய்வுத் தரவுகளையும்  உள்வாங்கிக் கொண்டு மார்க்சிய நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பணியைச் செய்யவேண்டி உள்ளது.

ஆரோக்கியமான பின்னூட்டத்திற்கு
நன்றி தோழர்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணம் தான் சொல் நிலம் :- கூடல் தாரிக்

சொல் நிலம் -  மகாராசனின் முதற்கவிதை நூல்.முனைவர் பட்டம் பெற்ற ஒர்  உழவனின் நூலில் நிலம் இழத்தலின் வலியைத்தவிர வேறு பெரிதான வலி எதுவும் இருந்துவிடப்போகின்றது என்று சொல்ல இயலாது .அதனை விடவும் பெரிதாக வேறு எந்த வலி இருந்து விடப்போகின்றது.
   வயல் குறித்தும், உழவு குறித்தும்,விவசாயம் குறித்தும் கொந்தளிப்பான தருணத்தில் கவிதை எழுதிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பும் மனநிலைக்கு அப்பாற்பட்டது,ஏர்பிடித்து உழுதவனின் கரங்களில் இருந்து வெளியாகும் வார்த்தைகள்.
    நிலத்தோடு தனது வாழ்வியலைப்பிணைத்துக்கொண்ட மனிதனின் மனநிலையில் கவிதைகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.எந்த விதத்தாக்கமும் இல்லாமல் தனித்துவமான மொழிநடை கவிஞனின் தேர்ந்த ஆற்றலைப்புலப்படுத்துகின்றது.சுனாமியைக்குறித்தக்கவிதைக்கு அலை நிலம் என்று தலைப்பிட்டிருப்பது அனைத்தையும் நிலமாகவேப்பார்க்கும் மனநிலையைப்புலப்படுத்துகின்றது.நிலத்திலேயே தன் வாழ்வைத்தொலைத்தவனின் காதலும் தனிமையும் முளைப்பதுவும் பூப்பதுவுமான மானாவாரிக்காடு நீ /மழைக்கடுத்துச்செழிக்கும் எனதூர் மண்போல/ பாழ் நிலம் நினைத்துத்தவித்துக்கிடக்கும் கலப்பை போல் தனித்துப்போனது யாவும் / என்று நிலத்தோடு தொடர்புடையதாக வரிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
     அன்றாட வாழ்வில் எளிமையாகப்பயன்படுத்தி விட்டு நகர்ந்து செல்லும் சொல்லுக்கும் அதனை வாழ்வியல் சூழலுக்குள் உட்புகுத்தி வெளிப்படுத்துபவனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை சற்றும் வலி குறையாமல் பதித்துவிட்டுச்செல்கின்றன பல கவிதைகள்.விவசாயத்தைத்தவிர வேறெந்த தொழிலும் அறியாதவனிடம் அழுது கொண்டிருந்தாலும் /உழுது கொண்டே இருந்தாலும் இருவென்று /காலில் விழுந்து கிடக்கிறது நிலம்/.
     மண்ணை வாரி தூத்திப்போடவும் மனசில்லயே  மக்கா/ என்று கதறுபவனின் வார்த்தைகள் காற்றில் கலந்து கண்ணீரை சுவாசிக்க வைக்கின்றன.
     உடலில் மழை பூத்து /ஒழுக ஒழுக உழைப்பைக்கற்பதற்கும்/உழவு மழையில் நனைவதற்கும், உவர் நிலச்சிறுக்கியின்  செல்லச்சிணுங்கல்களை இரசிப்பதற்கும், களையெடுத்துக்காய்த்துப்போன கைகளால் கோதி விடும் கருப்பிகளின் வியர்வை நாற்றத்தை நுகர்வதற்கும் நடை பயிற்சிக்காக வரப்பில் நடப்பவனால் இயலாது நிலத்தவனால் தான் வாய்க்கப்பெறும். ஆனாலும் கவிஞனின் வரிகள் அதன் வலியை வாசிப்பவனுக்கும் உணர்த்து விடுகின்றன.
     நிலத்தை ஆத்தாளாகவே வர்ணிக்கும் கவிஞனும் நெடும் பனைக்காடு நினைத்தே மண்ணுக்குள் தவித்துக்கிடக்கும் அப்பனும் ஆத்தாளும்,மண்ணின் அருவி போல /முண்டியடுத்துப்பூத்து /சட்டென மேலே பறந்து இறக்கை உதிரக/்கீழே விழுந்து /அம்மணமாய் ஊர்ந்து திரியும் ஈசல்களும் செங்காட்டின் புழுதியை கண்களுக்குள் அப்பிவிடுகின்றார்கள்.
      விவசாய நிலத்தை இழந்து கொண்டிருப்பவனின் மனநிலையில் நிலமிழந்த அகதியின் மனநிலையையும், வெண்மணியின் வெப்பத்தையும் இணைத்திருப்பது நிலம் வாழ்க்கைத்தேவைக்கான குறியீடாக பதிவு செய்யப்பட்டுள்ளது தொகுப்பின் கூடுதல் பலம்.
   காற்றசைப்புகளில் /உதிர்ந்து விழுகிற/பன்னீர்ப்பூக்கள்/முகம் சிரித்துச்/செந்தரையில் கிடப்பதைப்போல/கூட்டமாய்ச் சலசலத்து/குரல் சிந்திய கூட்டிசை/காற்றில் கரைந்து/செவியில் நுழைந்து/செல்லத் துள்ளலாய்க்/கண்ணில் மணக்கின்றன/பூனைக் குருவிகள்/என்கின்றது தொகுப்பின் ஒரு கவிதை.எனக்கென்னவோ இத்தொகுப்பினை வாசித்து முடித்தவுடன் நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணத்தைத்தான் நுகரமுடிகின்றது.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல்: நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் குறித்த திறனாய்வு :- பாவெல் பாரதி.






ஏர் மகாராசன் தொகுத்து வெளிவந்துள்ள "நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி" நூல் இரண்டு விதத்தில் கவனம் பெறுகிறது. ஒன்று இது நா.வா அவர்களின் நூற்றாண்டை நினைவு கூறுமுகமாக வெளிவந்திருப்பது. இரண்டு, அடிப்படைவாத ஆதிக்கச் சுரண்டல்  சக்திகள் விளிம்பு நிலைச் சமூகங்களை விழுங்க எத்தனிக்கும் இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வியலை அவர்களின் இலக்கியப் பதிவுகளை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து வினையாற்றியதற்காக!

தோழர் நா.வா அவர்கள் தமிழ்ச்சூழலில்  மார்க்சியத்தை ஆய்வு முறையியலாக ஆக்கியவர். செவ்வியல் இலக்கியங்களைத் தொகுத்த தமிழ்தாத்தா  உ.வே.சா.போல  நாட்டுப்புற இலக்கியங்களின் தந்தை என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டவர். தமிழக வரலாற்றை மக்கள் வரலாறாக எழுதுதல் என்ற  மாற்று வரலாற்றெழுதியல் கண்ணோட்டத்தை உருவாக்கியவர். தமிழகத்தில் செறிவான ஆய்வுப் பரம்பரையை உருவாக்கியவர். அவரின் நினைவை இந்நூற்றாண்டில் விதைத்த தோழர் மகாராசனும் ஆதி பதிப்பகமும்  பாராட்டுக்குரியவர்கள்.

நா.வா அவர்களால் 1956-57 காலத்தில் சரசுவதி இதழில் எழுதப்பட்ட  பள்ளுப்பாட்டு குறித்த ஏழுகட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
*பள்ளுப்பாட்டின் உள்ளடக்கம்;  *பள்ளுப்பாட்டின்தோற்றம்; *பள்ளுப்பாட்டு வளர்ச்சி; *பள்ளுப்பாட்டு மாறுதல்கள்; *பள்ளுப்பாட்டின் கதைப்போக்கு;
*பள்ளேசல்,
* பள்ளும் இணைவிழைச்சும் என்ற வரிசையில் அமைந்த  ஆய்வுக்கட்டுரைகள் இவை. இதில் முதலிரண்டு மற்றும் கடைசி ஆகிய மூன்று கட்டுரைகள் பள்ளுப்பாட்டு பற்றிய நல்ல அறிமுகத்தையும் அதன் தோற்றப் பின்னணியையும், இருபால் கவர்ச்சி இன்பங்குறித்தும் பேசுகின்றன.
அழகர் பெயரிலான கோயில் நிலத்தின் உழவு திணைக்களமே கதை நிகழிடம். 

மலைத்தோட்டத் தொழிலின் கங்காணியை 
( கண்காணி ) ஒத்த மருத நிலத்து பண்ணைக் கங்காணியான பண்ணைக்காரன், உழவின் ஆதாரமான குடிகளான பள்ளன், அவரின் இரண்டு மனைவிகளான மூத்த பள்ளி,  இளைய பள்ளி,  ஆகியோரே மையமான பாத்திரங்கள் . 

பண்ணையாரின் கொடுமைகளையும் , சுரண்டலையும் உழவுக்குடிகளின் பாடுகளையும், மனைவிகளின் முரண்களையும், சக்காளத்தி சண்டைகளையும்,   இளசுகளின் காதலையும், காமத்தையும், பண்ணைக்காரனின் இச்சையையும், பள்ளியர்களின் கிண்டலையும் பெருசுகளின் சில்மிசங்களையும், சேட்டைகளையும், அவற்றினூடாக அவர்களின் உயிர் நிலத்தோடு ஒட்டிக் கொள்வதற்காக  அடைந்து கொள்கிற சிற்சில இன்பங்களையும், துன்பங்களையும்  ஊடுதலையும் கூடுதலையும்  கொண்ட எதிர்பார்ப்பற்ற எளிய வாழ்க்கையை ஆடலுக்கேற்ற  இசைப்பாடலாக எளிய மொழியில் பாடுகிற பாடல்தான் பள்ளுப்பாட்டு.

உணவு உற்பத்தி காலம் தொட்டு உருவாகியிருக்கச் சாத்தியமுள்ள உழவுப் பாட்டின் தொடர்ச்சியாக பள்ளுப் பாட்டு இத்தகைய வடிவில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறது. பள்ளுப்பாட்டின் தோற்றம் குறித்துக் கூறும் நா.வா. அவர்கள் "மன்னர்கள் ஆதரவு தமிழ்ப் புலவர்களுக்கு கிட்டாது போன பிறமொழி ஆட்சிக்காலமான நாயக்க,  கன்னட , மராத்தி , நவாப்  காலத்தில் மக்களின் இப்பாடல் வடிவம் செய்யுள் வழக்குப் பெற்றிருக்கும் என்று கருதுகிறார் .

அன்றைய புலவர்கள் ஆட்சியாளர்களைக் காணச் செல்லும் பொழுது அவர்கள் கண்டும் காணாமல் வேறுவேலை செய்வதுபோல்  பாவனை செய்து புலவர்களை அலட்சியம் செய்தது குறித்து பின் இடைக்காலத்து புலவர் இராமச்சந்திர கவிராயர் பாடிய தனிப்பாடல் ஒன்றை நா.வா.வின் கருத்தோடு இணைத்துப் பார்க்கும் பொழுது பாடலுக்கு கூடுதல் புரிதல் கிடைக்கிறது.

*வணக்கம்வரும் சிலநேரம்
*குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம்
*வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம்
*வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம்
*கயவர்க்கெல்லாம் இணக்கம் வரும்படி தமிழைப் பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா!
என்று புலவர்களின் நிலையை நொந்து இறைவனிடம் முறையிடும் வகையில் ராமச்சந்திர கவிராயர் பாடியிருப்பது தெரிகிறது.  பள்ளு உருவாகிய இதே காலகட்டத்தில்தான் மக்கள் இலக்கியங்களான குறவஞ்சியும், நொண்டி நாடகமும் தலையெடுத்துள்ளன.

மக்கள் செல்வாக்கு மிக்க பண்பாட்டு கலாச்சார அம்சங்களை ஆளும் வர்க்கம் உட்செறித்து  தமக்கானதாக மாற்றி தமது ஆளும் வர்க்கப் பாண்டின் உப கூறாக்கி தம் அடுக்கு வரிசைக் கூம்பில் ஓர் இடத்தை வழங்கி மேலாண்மை செய்யும் தந்திரத்தைக் காலம் முழுவதும் செய்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டார் கடவுளர்  பலர் நிறுவன வைதீக , அவைதீக மதங்களின் பரிவாரங்களாக மாற்றப்பட்டது போல் பல கலை இலக்கிய வடிவங்களும் அப்படி உள்ளிழுக்கப் பட்டவைதான்.

மூன்று முதல் ஆறு வரையிலான நான்கு கட்டுரைகளில் இத்தகைய    அவதானிப்பு மிகமுக்கியமானது. மக்கள் கலையான முக்கூடற் பள்ளுவின் தாக்கம் பெற்று  ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை பள்ளு வடிவத்திற்குள் எப்படி திணிக்கிறது என்பதையும் ஒப்பிட்டு வர்க்கப்பார்வையில் விளக்கியிருப்பது சிறப்பு.

பள்ளுப்பாட்டு வடிவம் நாடகவடிவம் பெற்று  அதன் தாக்கம் தமிழகம் தாண்டியும்  யாழ்ப்பாணம் வரை பரவியுள்ளதோடு ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளுப்பாடல்கள் தோன்றியுள்ளன . பள்ளுப் பாட்டு வடிவம் மக்களிடத்தில் பெற்ற செல்வாக்கால் பல்வேறு நாட்டார் கோவில்களிலும் விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிற வடிவமாகியது. திருநெல்வேலிப் பகுதி வைணவக் கோயில்களில் உற்சவங்களின் போது கோயில் கணிகையர்களால் பள்ளுப்பாட்டு நடனம் ஆடும் வழக்கம் உருவாகிற அளவிற்குச் செல்வாக்கு செலுத்தியுள்ளது.  அதுமட்டுமல்ல ஸ்ரீரங்கம் கோயில்களில் இன்றும் பள்ளு உற்சவம் நடைபெறுகிறது என்றும் ஆனால் பாடல் வரிகள் மௌனிக்கப்பட்டு வெறும் தாள இசைக்கேற்ப அரையர் ஒருவர் ஆடிவருகிற அளவில் உற்சவம் மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் நா.வா.

முக்கூடற்பள்ளுவும் குருகூர்ப் பள்ளுவும் அடிப்படையில் மாறுபடுகிற விதம் குறித்து நா.வா. அவர்களின் ஒப்பீடு இங்கு கருதத்தக்கது.

பள்ளரின் உயிர்ப்பான உழவு வாழ்வை அனுதாபத்தோடு சித்தரித்த உழைக்கும் வர்க்கத்தை கதைப் பொருளாகக் கொண்டது முக்கூடற்பள்ளு. கதைப் பொருளை நீர்த்துப் போகச்செய்து வெறும் கவிதைச் சிறப்பையும் வருணனைச் சிறப்பையும் மட்டும் கொண்டுள்ளதாக மாற்றப்பட்ட அதிகாரவர்க்கத்தின் குரல்தான்  குருகூர்ப் பள்ளு.

முக்கூடற்பள்ளிலே தங்கள் உழைப்பைக்குறித்தும் மூத்த குடியில் பிறந்தது பற்றியும் பெருமிதம் கொள்ளும் இயல்பான மாந்தரைப் படைத்திருக்க குருகூர்ப் பள்ளோ சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும்  தங்கள் உழவுப் பண்பாட்டையும் குலப் பெருமைகளையும் பேசாமல் பக்திப் பிரவாகத்தில் சூழ்ந்து பழைய புராணக்கதைகளைப் பாராயணம் செய்யும் ; திருமால் பெருமைகளைப் பேசும் பக்தி முத்திய பள்ளன் பள்ளியரைப் படைத்திருக்கிறது. குறிப்பாக
சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும் பள்ளியரைக் காட்டுகிறது.

முக்கூடற்பள்ளுவில் தெய்வ வணக்கத்தில்  அவர்களின் தெய்வமான பூலாவுடையார், குமுக்காவுடையார், புலியூருடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகியோரையும் அழகரையும் ஒரு வரிசையில் நிறுத்தி அவர்களுக்கு தேங்காயும், கரும்பும், கிடாயும், சாராயமும், கள்ளும் படைத்து வணங்க ; குருகூர்ப் பள்ளுவோ,  பள்ளர்கள் வணங்கும் தெய்வத்தையும் நம்மாழ்வாரையும் ஒரே வரிசையில் வைக்க மனம் கூசி தெய்வ வணக்கத்தை இரண்டு அடியில் முடித்து விடுகிறார்.

முக்கூடற்பள்ளு , மழைபெய்தால் குதித்தோடி வேலைக்குச் செல்வதாக பள்ளர்களைப் படைக்க குருகூர்ப்பள்ளு பள்ளர்கள் சோம்பேறிகள் வேலைக்கு ஒளிப்பவர்கள், அடித்துத்தான் வேலை வாங்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்க முயல்கிறது.
அதேபோல முக்கூடற்பள்ளு பள்ளன் உழுதல், விதைத்தல் ,முளைத்தல், நீர்பாய்ச்சுதல் , நாற்று விளைத்தல், முளைத்த நாற்றின் முகங்கண்டு , குழந்தை முகம் கண்டு  பிள்ளைப் பேற்றின் வலி மறந்த தாயாய் மகிழ்ச்சி அடைந்தான் என்று உழவனின் மகிழ்ச்சியைப் படம் பிடிக்கிறது. குருகூர்ப் பள்ளு 'விதைத்த விதை வெள்ளி முளை போலரும்பி பசுமையாக மாறிற்று ' என்று ஒட்டாமல் கூறி கடந்து போகிறது. இதுதான் உழுதுண்பானுக்கும் உழுவித்துண்பானுக்கும் உள்ள ஈடுபாடு வேறுபடுமிடம்.

பள்ளேசல் என்ற பகுதி பள்ளுப்பாட்டின் முக்கியமான வடிவம். உழவு அறுவடை முடிந்து பள்ளியர்களுக்கு பங்கு கொடுக்கும் பொழுது இரண்டு பள்ளியர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதும்   இறுதியில் சண்டை  சமாதானம் ஆவதும் பற்றியது. எப்படிச் சமாதானம் ஆகிறது என்பதுதான் நாம் இங்கே காணவேண்டியது. 

முக்கூடற்பள்ளுவில் இரண்டு  பள்ளியர்கள் தாமே சமாதானமடைகின்றனர். திருக்கோஷ்டியூர் திருப்பத்தூர் பள்ளுவில் கணவன் சமாதானம் செய்து வைக்கிறான். குருகூர் பள்ளிலோ பண்ணைக்காரன் சமாதானம் செய்து வைக்கிறான். முக்கூடற் பள்ளில் பள்ளியர் தாங்கள் பொறுப்புணர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கருதியும் கிளைஞரது நன்மையைக் கருதியும் ஒன்று  சேர்கிற சமாதானமும் சகிப்புத்தன்மையும் மிகுந்த பெண்ணாக படைக்கப்பட்டுள்ளாள்.
திருக்கோட்டியூர் திருப்பத்தூர் பள்ளில் தங்கள் அறிவின் திறத்தினால் சண்டையை நிறுத்தாமல் கணவன் சொல்லை மீறமுடியாமல் கணவன் சொல்லி சமாதானமடைகிற ஆணுக்கடங்கிய பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள். குருகூர்ப் பள்ளோ பள்ளியர் தாழ்ந்தவர்கள்; சண்டை போடுவது அவர்கள் இயற்கை; மாடுகள் சண்டை போட்டால் சொந்தக்காரன் பிரித்துவிடுவது போல பண்ணைக்காரன் பிரித்து வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதி வழங்கும்  பொருப்பை பண்ணைக்காரனுக்கு வழங்கி அடிமையாக பெண்ணாகப்  படைக்கப்பட்டுள்ளாள்.
இதிலிருந்து கலையைக் கையாள்கிறவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

இனி விவாதக்குறிப்பு:
----------------------------------------
முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் வரும் பள்ளியர்கள் பாத்திர அமைப்பு  வெறும் குடும்பச் சண்டை என்று  எளிதாகக் கடந்து செல்லக் கூடியதாகத் தெரியவில்லை. அது ஆழமான அரசியல் பேசுவதற்காகவே அமைக்கப்பட்ட பாத்திரங்களோ! என்று கருதவேண்டியுள்ளது. அவை பேசும் இரண்டு விசயங்களை இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒன்று இவர்களின் சமயம் தொடர்பான வர்ணிப்பு மற்றும் சண்டை,  இரண்டு உழைப்புக்காகப் பெறுகின்ற கூலி  தொடர்பான சண்டை.
இரண்டு பள்ளியர்களில் மூத்தவள் வைணவ சமயம் சார்ந்தவளாகவும், இளையவள் சைவ சமயம் சார்ந்தவளாகவும் இருக்கிறாள்.

மூத்த பள்ளி
" நெற்றியில் இடும் மஞ்சணப் பொட்டும் ; மற்றொரு திருநாமப் பொட்டும்  "அணிந்தவளாக இருக்கிறாள்.
இளைய பள்ளி
" மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க ;
சிறியநுதல் பிறை வெண்ணீற்றுக் குறியொளி வீச " வருகிறாள்.
இவர்களுக்குள் நடக்கிற சண்டை  தனி நபர் தாக்குதலையும் தாண்டி வணங்குகிற  கடவுளர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கத் துவங்குகிறார்கள்.

வைணவ சமயத்தினளான மூத்த பள்ளி
" நரி தான் பரியாகச் சாதித்தானும் சம்பு வல்லோடி ? " என்று இளைய பள்ளி வணங்கும் சிவபெருமான் நரியைக் குதிரையாக்கிய கதையை காட்டி ஜாலவித்தை சிவனுக்கும் அவனடியார்களுக்குமே கைப்பழக்கமானது. என்று இடித்துரைக்கிறாள்.

இளைய பள்ளி " கல்லைப் பெண்ணாகச் சாதித்தான் உங்கள் பொம்மானல் லோடி " என்று திருமாலைக் கிண்டல் செய்கிறாள்.
மீண்டும் மூத்த பள்ளி , " ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில் ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல்லோடி " எனறு கூற பதிலுக்கு இளைய பள்ளி " மாடு தானுமில்லாமல் - பட்சி மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல்லோடி. என்று கூறுகிறாள்.

அடுத்து மூத்த பள்ளி ," சுற்றிக்கட்ட நாலுமுழத் துண்டுமில்லாமல் - புலித் தோலையுடுத் தானுங்கள் சோதியல் லோடி ? " என்று கூற , இளைய பள்ளி  ," கற்றைச் சடைகடி மரவுரியுஞ் சேலைதான் - பண்டு கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையனல்லோடி ? " என்று கூறுகிறாள். இவ்வாறு இருவரும் மாறி மாறி சிவனையும், திருமாலையும் புராணக் கதைகளைக் கூறி வம்புக்கிழுக்கிறார்கள்.

இங்கு பள்ளனின் மனைவியாகிய இருவரும் முறையே வைணவ , சைவ சமயச்சார்பானவர்களாக இருப்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. சைவ வைணவச் சண்டையை எப்படிப் புரிந்து கொள்வது.

இரு குழுச் சமூகமுறைச் சாதி அல்லது பழங்குடிகளில் சில பிரிவினரின் இரு குழுக்கள் சைவ கடவுளின் பேரிலும் . மற்றொரு குழு   வைணவ கடவுளின் பேரிலும் இருக்கும். அப்படியானால் பள்ளர்கள் இரு குழுச்சமூக முறையினர் தானா? என்பதை காணவேண்டும்.

ஆதி உடைமைச் சமூகத்தில் காணப்பட்ட தொல்குடிகள் பலவற்றில் தொடக்கத்தில் ஒரு சமூகம் இரண்டு பெருங்குழுக்களாக மட்டுமே பிரிந்து அவ்விரு குழுக்களுக்கிடையில் பெண்களைத் திருமணத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்ளும் முறை இருந்தது என்பதை ஏங்கெல்ஸ் ஆய்வு செய்துள்ளார். இதனை இருகுழுச்சமூகமுறை என்பர்.
இரு குழுச்சமூக முறை கொண்ட சாதி மற்றும் பழங்குடிகளில்  குடி வழியைத் தொடர்புபடுத்துவதற்கும் மண உறவை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு குழுவை வைணவக் குழுவாகவும் மற்றொரு குழுவை சைவக்குழுவாகவும் கருதப்படுகிற மரபு இருப்பதை இனவரைவியல் தரவுகள் மூலம் அறியலாம்.

மலையாளிப் பழங்குடியினர் பெருமாள் கூட்டம் அண்ணாமலையார் கூட்டம் என இரு குழுக்களாக அழைக்கப்படுகின்றனர்.
மலை வெள்ளாளரிடம் உள்ள இரண்டு கூட்டங்களில் ஒரு குழு அரபுலீஸ்வரரையும் மற்றொரு குழு ரங்கநாதரையும் வழிபடுகின்ற குழுக்களாக உள்ளன. கோட்டைப் பிள்ளைமார் சாதியினர் திருநீர்க்காரர்கள், திருநாமக்காரர்கள் எனும் இரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.  அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கே.நல்லூரில் வசிக்கும் வன்னியர்களும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மஞ்சைக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் வன்னியர்களும் சைவ வைணவப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்குள் மண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அனுப்பர்களிடம் பெரிய ஓலை, சிறிய ஓலை என்னும் இரண்டு அகமணப்பெருங்கூட்டங்கள் உள்ளன. காப்பிலியர்களிடம் தர்மகட்டு, மூனுகட்டு ஆகிய இரண்டு அகமணப் பெருங்குழுவினராகப் பாகுபடுகின்றனர். இவர்களும் சைவ வைணவக் குழுவினராகப் பாகுபடுகின்றனர்.  ( இவர்களிடம் சைவம் வைணவம் எப்படிப் புகுந்தது என்பது தனித்து விவாதிக்கப்படவேண்டிய அரசியல்.)
சைவ வைணவப் பிரிவுகள் என்னும் நிலையில் அல்லாது இரு குழுச்சமூகமுறை காணிக்காரர், குறும்பர் போன்ற பழங்குடியினரிடமும் வேலமர், செட்டியார் சாதுசெட்டியார் சாதிகளிடமும் உள்ளது.
இப்படியான சமய அடிப்படையிலோ அல்லது சமூக  அடிப்படையிலோ இயங்குகிற இருகுழுச் சமூக முறைப் பழங்குடிகளையும் சாதிகளையும் காணலாம்.

ஆனால் பள்ளர் சாதியை சைவ வைணவ  இரு குழுச்சமூகமாக வகைப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிப் பொதுவுடைமைச்சமூகம் தொடங்கி  வேளாண்மைச் சமூகமாக உருமாறிய நீண்டகாலப் படிமலர்ச்சியில் இரு குழுச்சமூகமுறையில் இருந்து பல்வேறு கால்வழிக்குழுக்கள் கொண்ட சமூகமுறை வரை தோன்றியுள்ளது.

"கள்ளர்களிடமும் பறையர்களிடமும் முறையே 370, 260 க்கும் மேற்பட்ட கால்வழிக் குழுக்கள் உள்ளன. பண்டைக்காலத்தில் இவ்விரு குடிகளும் வேளாண்குடிகளாக இருந்ததாலேயே இவர்களிடம் நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன" என்கின்றனர் இன வரைவியலாளர்கள்.

"ஒரு சமூகம் சிறு சிறு வட்டாரங்களின் மீதும் அங்குள்ள நிலங்களின் மீதும் பெறுகின்ற உரிமையாலேயே கால்வழிக் குழுக்களின் பெருக்கம் ஏற்படுகிறது.  வேளாண்குடிகளிடமே நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன. "
என்ற இனவரைவியல் உண்மை , உழவுக்குடிகளான பள்ளர்களுக்கும் சேர்த்துத்தான்.

"சிந்திய எள்ளை எண்ணினாலும் பள்ளர் வகையை எண்ண முடியாது." என்ற வழக்கும் பள்ளர்கள் இரு வழிச்சமூக முறையினர் அல்ல எண்ணற்ற கால்வழிக் குழுக்களை உடையவர்கள் என்பதை உணர்த்தும்.
அதேபோல பள்ளர்கள் வணங்கும் தெய்வங்களாக
"பூத்த தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
      பூலியுடையார் கொள்ளப் பலிதானிடும்
வாய்த்த சாராய ம் பனையூற்றுக் கள்ளும்
       வடக்குவாய்ச் செல்லியுண்ணக் குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே ,
      தொழுது தொழுது வேண்டும் மழை பெய்யவே ,
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே
      எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே!"
என்ற பாடலில் பூலாவுடையார், குமுக்காவுடையார் , புலி யுடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகிய புலால் உண்ணக்கூடிய , கள்ளும் சாராயமும் அருந்தக்கூடிய  குலதெய்வங்களோடு அழகரையும் வழிபடுகிறார்கள். இங்கு பள்ளரை சைவ வைணவக் குழுக்களாகக் கூறவில்லை.

ஆனால் இங்கே குலதெய்வ வழிபாட்டுக்காரனான பள்ளன் சைவ , வைணவ ஆகியவிரு சமயங்களைச் சார்ந்த பெண்களையும் மணம் புரிகிறான் . இதன்படி பார்த்தாள் இருவரும் சகோதரிகளாவர். ஆனால்  விசுணுவின் தங்கை பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிற மாமன் மச்சான் உறவுதான் சைவ, வைணவ உறவு.

எனவே இனவரைவியல் அடிப்படையிலும் வழக்கிலும் கால்வழிக் குழுக்களாக உள்ள பள்ளியரை சைவ, வைணவ மதத்தினராகப் படைக்கவேண்டிய தேவை  என்ன என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.
முக்கூடற்பள்ளு  அழகருக்குச் சொந்தமான நிலம் என்கிறது. அப்படியென்றால் அது வைணவக் கோவிலுக்குச் சொந்தமானது என்று பொருள். சைவ, வைணவ கோவில்களும், மடங்களும் வழிபாட்டு நிறுவனங்களாக மட்டும் அல்லாமல் மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்திருக்கின்றன என்பதை அறிவோம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் சொத்துக்களும்  உரிமையானவை என்றால் அக்கோவிலை நிருவகிக்கும் உயர்சாதியினரே சொத்துக்களையும் மேலாண்மை செய்யும் உரிமையுடையவர்களாகிறார்கள்.
நிலங்களை கோயிலுக்கும் மடங்களுக்கும் தானமாகக் கொடுத்ததில் சோழர்கள் முன்னணியிலும் அடுத்து விசயநகர அரசும் இருந்தது. உதாரணமாக சில கோய்வில் நிலவரங்களைப் பார்ப்போம்.  

திருவாருர் தியாகேசர் கோயிலுக்கு 6000 ஏக்கர் நிலங்களும் சீர்காழி வைத்யநாதசாமி கோவிலுக்கு 6000 ஏக்கர் நன்செய் நிலமும் 1176 ஏக்கர் புன்செய் நிலமும் வழங்கப்பட்டும் இவற்றின் பராமரிப்பு பிராமண வெள்ளாள நிலப்பிரபுத்திவத்தின் கீழும் இருந்தது. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 18 சைவ மடங்கள் இருந்தன. சங்கரமடம் 4000 ஏக்கர் நிலமுடையதாகவும் திருவாவடுதுறை மடத்துக்கு தமிழகம் முழுவதும் 24000 ஏக்கர் நிலங்களும் , தர்மபுரம் மடத்துக்கு 2000 ஏக்கர் நிலங்களும் திருப்பனந்தாள் மடத்துக்கு 3000 ஏக்கர் நிலங்களும் சோழ, நாயக்க அரசுகளால் வழங்கப்பட்டன.
கோவில் நிலங்கள் வாரம்தாரிமுறை நிலப்பிரபுக்களின் கீழ் இருந்ததால் அவை நேரடியாகப் பயிர்த்தொழில் செய்பவர்களுக்கு விடாமல் அரசு அதிகாரிகளுக்கு விடப்படுகின்றன. அவற்றை அவர்கள் மற்றவர்கள் மூலம் பயிரிட்டு உற்பத்தியில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு கோவில் கருவூலத்திற்குப் பெயரளவிற்குக் கொடுத்துவிட்டு பெருமளவில் அனுபவித்து வந்தனர் என்ற செய்தியைக் கரோஷிமா கல்வெட்டுச் சான்றுகள் மூலம் விளக்குகிறார். அதனால்தான் இன்று இந்து அறநிலைத்துறை வசமுள்ள கோயில்களைக் கைப்பற்ற ஒரு கூட்டம் அலைகிறது.

இப்படியான சொத்துடைத்த கோயிலுக்கு மட்டுமல்ல இவ்வுலகுக்கே அதிபதிகளான சிவனையும் , திருமாலையும் வம்புக்கு இழுத்தது. சமயமடாதிபதிகள் அல்ல சாதாரண கூலிக்காரர்கள் , அதுவும் பெண்கள்.  கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாதென்பதற்காக கடவுளின் தனிப்பட்ட முறையில் தாக்கத் துணியமாட்டார்கள்.   இவ்வுலகை ஆக்கவும், அழிக்கவும் திறம்பெற்ற இரு பெரும் கடவுளர்களை தெருச்சண்டை கோதாவில் நிறுத்தி பக்தர்களின் மனதைப் புண்படுத்திய, அதுவும் பண்ணை அடிமைப் பெண்களை வைத்து ஏச வைக்க  பள்ளு இலக்கிய ஆக்கத்தால் எப்படி முடிந்தது.

வைதீக சமயத்தின் பேரால் -  கடவுளின் பெயரால் சுரண்டிக் கொழுக்கிற உடைமையாளர்களை , சுரண்டலுக்கு வழி வகுக்கிற கடவுளை , அவற்றை நியாயப்படுத்த புணையப்பட்ட புராணங்களை , சமய நம்பிக்கை கொண்ட அவர்களை வைத்தே  கடவுள்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிற கட்டுடைப்பைச் செய்துள்ளது முக்கூடற் பள்ளு இலக்கியம். ஒரு வேளை சமய நம்பிக்கையாளர்களை வைத்து கேள்வி கேட்கச் செய்வது பாதுகாப்பானது  என்று கருதி பள்ளியர் பாத்திரம் சைவ, வைணவச் சார்பாளராகப் படைக்கப்பட்டதா?
இல்லை பள்ளியரின் சைவ வைணவச் சண்டை, சைவ உடைமையளர்களுக்கும் வைணவ உடைமையாளர்களுக்கும் உள்ள முரண்பாட்டை குறியீடு செய்து படைக்கப்பட்டதா?

காலம் முழுவதும் சமய முரண்பாடு என்பது உடைமைகளை உரிமையாக்கும் பொருளாதார முரண்பாடே என்பதும் நாமறிந்ததே!  மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது  தங்களுக்குள் கலகம் செய்து கொண்டாலும்  உடைமையாளர்கள் தமக்குள்  செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்று கருதுவதா?

எனவே முக்கூடற்பள்ளு இலக்கியம் பள்ளியர்கள் வழியே பேசும் சைவ-வைணவ ஏசல் என்பது உழைக்கும் பெண்களுக்கான சமயச் சண்டையோ குடும்பச் சண்டையோ அல்ல. அதில் குறியீட்டு அரசியல் இருக்குமோ! என்று கருதத்தோன்றுகிறது.
மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது  உடைமையாளர்கள் தமது உடைமையைக் காத்துக் கொள்ள செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்றும் கருதலாம்.

அடுத்து கூலிப்பங்கு தொடர்பானது. கோயில் காரியங்களுக்கும் சத்திரதானங்களுக்கும், பெரிய நம்பி திருமாளிகைக்கும்,  மடங்களுக்கும், கங்காணிக்கும் கொடுத்துவிட்டு விதை நெல்லுக்காக மிஞ்சியதை களஞ்சியத்தில் போட்டுவிட்டதாகக் கூறிகிறான். உடனே தனக்கு  கல்லும் மண்ணும் கலந்த நெல்லைக் கொடுத்துவிட்டு  இளைய பள்ளிக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதாகச் சண்டையிடுகிறாள் பெரிய பள்ளி.
இங்கு
ஆடித்திருநாளுக்கென்று ஒதுக்கப்பட்ட  நெல் ஆறாயிரம் கோட்டை
பங்குனித் திருநாளுக்கு ஆறாயிரம் கோட்டை, அணைக்கட்டுமானச் செலவுக்கு என்று ஆயிரம் கோட்டை, மண்டகப்படிக்கு முறைக்கு ஆறாயிரம் கோட்டை , மறையோர்க்கு நாலாயிரம் கோட்டை, தினப் பூசைக்கு எண்ணாயிரம் கோட்டை நெல் என்று ஆயிரக்கணக்கான நெல்லை கொடுத்து விட்டு உழுதவனுக்கு
வாழ்க்கைக்குப் போதிய நெல் கூடக்கிடைக்கவில்லை என்று சுரண்டல் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

அவ்வளவு நெல்லையும் அபகரித்த ஆள்பவர்களின் மேல் திரும்ப வேண்டிய கோபம் சிறிதளவு அதிகமாகக் கூலி வாங்கிய இளைய பள்ளியிடம் திருப்பிவிடப்பட்டுள்ளது.
காலங்காலமாக சுரண்டும் வர்க்கம் சுரண்டுகிறவர்களின் மீது உழைப்பவர்களின் கவனம் திரும்பிவிடாத அளவிற்கு அவர்களின் சிந்தனையை மடைமாற்றி அவர்களுக்குள்ளான உள்  முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி விடுகிறார்கள். பூசணிக்காய் ஒழித்த இடத்தைத் தேடாமல்  சிந்திய கடுகைத் தேடுவது போல மக்களைத் திசை திருப்பிவிடும் தன்மையைத்தான் மூத்தபள்ளி, இளைய பள்ளியின் கூலிப்பங்குச்  சண்டையில் படைக்கப்பட்டுள்ளது.

அடுத்து உழைப்பாளிகளின் கோபம் திரும்புகிற இன்னொரு இடம் கங்காணியாக இருக்கிற பண்ணைக்காரன்.கண்ணுக்குத் தெரியாத  நிலத்தின் உண்மையான உரிமையாளன் மீது திரும்ப வேண்டிய கோபம் அவனது கூலிக்கு வேலை செய்யும் பிரதிநிதியின் மேல் திரும்புகிறது.
இன்று  அம்பானிகளும், அதானிகளும், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளும் நம் செல்வத்தைக்   கொள்ளையிடுவதிலிருந்து  நம் கவனத்தைத் திசை திருப்பி சக மனிதர்களைக் காட்டி பொறாமை கொள்ளச் செய்வதும் தூரத்திலிருக்கும் அதிகாரத்தை மறைத்து கண்ணுக்குத் தெரிகிற உடனடி நிர்வாகத்தின் மீது கோபத்தைத் திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.

ஆக முக்கூடற் பள்ளு என்பது கோயில் நில உடைமை உற்பத்தி உறவின் தன்மையையும், வைதீகக் கடவுள் கட்டுடைப்பும் உடைமையாளர்களின் அக முரண்பாடையும் உழுவித்துண்போரின் திறமையான சுரண்டலையும் நிலத்தில் உடலுழைப்பைக் கொடுத்தும் சகல பணிகளையும் செய்கிற உழுதுண்போர் சுரண்டப்படுவதை அறிந்தும் திசை திருப்பப் படுவதையும் உழு குடிகளான பள்ளர் பள்ளியரை மையமாக வைத்து மக்கள் மொழியில் நகைச்சுவை ததும்ப உழவுக்குடிகள் படும்பாட்டை குறியீட்டு வடிவில் இயற்றிய மாற்றுக் குரலாக இருக்கிறது.

இத்தொகுப்பு நூல் பள்ளு இலக்கியத்தை முழுவதுமாக வாசிக்கவும் மீளாய்வு செய்யவுமான தேவையை உருவாக்கியிருப்பதில் வெற்றியடைந்துள்ளது.
முன்னோடி ஆய்வுக்காக நா.வா..அவர்கள் தமிழ்ச்சமூகத்தால் நன்றி கூறப்படவேண்டியவர். 

எவரின் கடமையோ! என்றிறாமல் காலத்தே வினையாற்றிய  தோழர் மகாராசனும் அதனை  அச்சு வாகனமேற்றி அழகுபார்த்த ஆதி பதிப்பகமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு படைப்பு சொல்லியதையல்ல சொல்லாமல் கிசுகிசுப்பதையும் கேட்கும் பொழுதுதான் அல்லது சந்தேகிக்கும் பொழுதுதான்   மறைந்திருக்கும் எதிர்வினையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சொல்நிலம் : நாளைய விடுதலைத் தேசத்தின் விதை நெல் :- நா.காமராசன்


    சொல் நிலம் : தமிழ் மண்ணின் வேர்களைத்தேடி பயணிக்கிறது ஒவ்வொரு கவிதையும்.தோழர் மகராசன் தன் வாழ்ந்த வாழ்வியலிருந்தே ஒவ்வொன்றையும் கிளறி எடுத்து இங்கே படைத்திருக்கிறார்.

   "உயிர்க்கூடு
   வேர்கரைக்கும் விழுதுகள்
   தனியன்
   விதைச்சொல்
   சாவிப்பயிர்
   உலர்நிலச்சிறுக்கி
   நிலத்தாள்
   குறுணிமழை
    ஈசப்பால்
    உயிர்க்கொடி " தலைப்புகளே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது.
ஈரநிலங்களுக்கு பதிலாக செங்காடும் புழுதிக்காடும் எங்கும்
விரவிக்கிடக்கிறது . கோபத்தீ பற்றிக்கொண்ட ஒவ்வொருவரின் எழுத்திலும் இருக்கக்கூடிய நியாயங்களே இவர் நிலமெங்கும்
சொல்லாய் தெறித்து நிற்கிறது.

"அய்யா சாமீ ஆண்டே எனக்
கால்பிடித்து கதறி அழுது,
வயிற்றுப்பாட்டுக்காய்
கூடக்கொஞ்சம் கொடுங்களேன்
எனக் கேட்டிருந்தால்
போதுமடா போ போவென்ற
பதக்கு நெல்லை கொடுத்திருக்கலாம்
பழைய தோரணையோடு

நெல்லை விதைத்தவர்கள்
சொல்லை விதைத்தார்கள்
கூடவே தன்மானம் சேர்த்து
வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்"
ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின்
நியாயங்களையும் அவர்கள் போர்க்
குணங்களையும் வரிகள் முழுதும்
கொப்பளிக்கச் செய்திருக்கிறார் ஒரு படைப்பாளியைத்தாண்டி இந்த மண்ணின் மைந்தனாய்.

"சிறுவாட்டுக்காசும்
சுருக்கூப்பை காசும்
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடிந்துபோட்ட காசும்
ஆத்தா அப்பன் நெனைப்பாலே
எடுத்து வச்ச காசும்,
மூத்த புள்ளயக்
கட்டிக் கொடுக்க
அடுக்குப்பானைக்குள்
போட்டு வந்த காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக்கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாய் போட
வச்சிருந்த காசும்,
செல்லாக்காசெனப் போச்சே
செல்லாக்காசெனப் போச்சே"
குருவிகள் சேர்ப்பதைப்போல் எளிய
மனிதர்கள் சேர்த்தக்காசை ஒரே
இரவில் செல்லாதென அறிவித்த
கேடுகெட்டவர்களின் முகத்தில் காரிஉமிழ்கிறது இவ்வரிகள் ஒவ்வொன்றும்!

இதோ காவிரியின் அநீதியைப்ற்றி
அப்போதே
"பூநூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபட சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள்தான் அழிக்கின்றன"
ஒரு படைப்பாளியைத்தாண்டி போராளியின் குரலாய் கனன்று
விழுந்திருக்கிறது வரிகளில்!

ஈரமுள்ளவர்களாலும் அறத்தின்நின்று போராடுபவர்களாலும் மட்டுமே இத்தகைய படைப்புகளைத்தர முடியும்.அந்த வரிசையில் தோழர்
மகராசனின் "சொல்நிலம் " நாளைய விடுதலைத்தேசத்தின் விதைநெல்லாகவும் இருக்கும்.

மென்மேலும் படைப்புகள் செழிக்க
புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்!

தோழமையுடன்
நா.காமராசன்
மண்டகொளத்தூர்.

சனி, 17 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்களால் இலக்கு நோக்கி இயங்குகின்றது :- த.ரெ. தமிழ்மணி


பாவலர் மகாராசன் தூவலில் இருந்து ஓவியமாய் உயிர்த்திருக்கிறது சொல்நிலம்.  நூலில் கவிதை இல்லை; நூலே கவிதையாய் இருக்கிறது. கவிதை...கவிதை... வடிவமைப்பு, தலைப்புகள் எல்லாமே கவிதை. தாய்மண்ணில் வேர்கொண்டு விடுதலையை விதைக்கிறது இவரின் தூவல். 52 கருப்பொருள்களில் பாடப்பட்ட இந்நூலின் முதற்பொருள் மாந்தநேயம்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளாய் ஆன வாழ்வு, இழப்பிற்குப் பின் உறவுகளுக்காக ஏங்குவதை-

"சில பறவைகளின் ஒப்பாரி
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
கூடு தேடி."
             
                -என்று பதிவு செய்கிறார்.
தமிழினம் எங்கெல்லாம் படர்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் தேடி உயிர் குடித்தது கடல். அதன் துயரத்தை அறிவுமதி ஓர் இசை வட்டும் குறும்படமும் எடுத்து
வெளிப்படுத்தியுள்ளார். ஆழிப் பேரலை நிகழ்த்திய அழிவைச் சாதிவன்மமாகப் பார்க்கும் மகாராசனின் நோக்கும் வலியிலிருந்து பிறந்ததுதான் என்பதை கீழ்வரும் சொற்களில் உணரமுடிகிறது.

உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.

காதல் அழகு. அதைக் கவிதையில் சொல்வது இன்னும் அழகு. அதுவும் மழைவந்த பின் கொழுக்கும் மண்ணோடு ஒப்பிடும் மகாராசன் பார்வை அழகு.

முளைப்பதும் பூப்பதுமான
மானாவாரிக் காடு நீ
மழைக்கடுத்துச் செழிக்கும்
எனதூர் மண்போல.

அறத்தீ மனிதர்கள் என்னும் தலைப்பில் இனவிடுதலைக்குத் தம் உயிர்எழுதியவர்களை இவர் எழுதுகிறார்-

நீருக்கும் நிலத்துக்கும்
அழுத கண்ணீர்
நெருப்பிலும் கரையுமென்று
நீரிலே
நெருப்பெழுதிப் போனீர்கள்.

இயங்களால் சிதைக்கப்படும் மண் தமிழ்த்தேசம். தன் தொல்வாழ்விழந்ததன் அனைத்திற்கும் காரணமானதை இவரும் சுட்டுகிறார். அதை,
நீரின்றி அமையாது தமிழகம் தலைப்பிலான கவிதையில் காணலாம்

பூணூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வபோது
ஆறுகள்தாம் அழிக்கின்றன.

      - என்ற வரிகளில் மகாராசன் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார் என உணரலாம். அது விதைச்சொல் என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுகிறது.

எனது முதுகுத்தண்டிலா
உனது மாளிகையெனக்
கேள்வி எழுப்பு.

வீறு பயிர் செய்து
கனல் பாய்ச்சி
விடுதலையைப் பறி

என விடுதலைமுழக்கம் வெடிக்கிறது.

கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு மீண்டும் வரும்

எனவரும் "ஈழப்பபனைகளும் குருவிகளும்" கவிதையிலும் அந்த நம்பிக்கை அறியக் கிடக்கிறது.

இங்கு சுட்டப்படாத ஒவ்வொரு கவிதையிலும் சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்கள் தம் இலக்கு நோக்கி இயங்குகின்றன. பேதம் அழித்த தேசம் படைக்கும் தமிழ்த்தேசியராய்ப் பாவலரை நாம் அடையாளம் காண்கிறோம்.
 

திங்கள், 12 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : நிகழ்ந்துவிட்ட நிலப்படுகொலையை விருட்சமாய் நின்று விவரிக்கின்றது :- விசாகன்


ஆய்வு நோக்கிலான எழுத்துக்குச் சொத்தக்காரர் என்ற அடையாளத்துடன் பார்த்து வந்த தோழர் மகாராசனின் "சொல் நிலம்" என்ற அவரின் முதல் கவிதைத் தொகுப்பை வாசித்ததில் குளிர்ந்து செழித்த நிலப்பகுதிகளில் குதியாட்டம் போட்டுத் திரிந்த கடந்தகால நினைவுகளினூடாக அவைகளையெல்லாம் இழந்து வெம்மைசூழ் உலகின் அவலத்தைக் கண்முன் காட்டுகின்ற அனுபவம் உணர முடிந்தது. சிதைவுக்காளாகி வருகின்ற, அல்லது முற்றிலும் சிதைந்துவிட்ட நிலவளம் குறித்து ஆதங்கத்துடன் எடுத்துரைப்பதே இக்கவிதைகளின் மையப்பொருள். இப்பொருள்கொண்ட கவிதைகள் பலதரப்புகளிலிருந்து எழுதப்பட்டு வந்தாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படைத்திருக்கிறார் மகாராசன். அதனோடு ஆணவக்கொலை, பகாசுரக் கம்பெனிகளின் கோரப்பசிக்கெனத் திணிக்கப்படும் மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களின் அரசியலையும், ஈழத்து  சோக அரசியலையும் பேசியிருக்கிறார்.

"பஞ்சமும் வஞ்சமுமாய்ப்
பொங்கிடும் துயரங்கள்
நிரம்பி வழிந்தாலும்,
உழவுத் துயரில் கசியும்
ஈர மொழியாய்
ஊறி நிற்கின்றன
சொற்கள்..."

பஞ்சம் வந்தது மாத்திரமல்ல, அப்பஞ்சம் வந்ததற்கே வஞ்சமே காரணம், அத்தகைய வஞ்சம் எங்கிருந்து ஏன் ஏவப்பட்டது என்பதையும் உணரச் செய்கின்ற படைப்பாக வீரியங்கொள்கிறது கவிதைகள். இழப்பின் வலியை உணர்த்துவதிலும், இழந்ததை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வாயிலைத் திறப்பதிலும் இலக்கியத்தின் பங்களிப்பு அபரிமிதமானது. கவிதைகள் என்றாலே கற்பனை - அழகியல் போன்றவை அலங்கரித்து எழுதப்படும். ஆனால் முற்றிலும் நேரடியாக சொற்களைப் பயன்படுத்துவதோடு, அவையனைத்துமே சமுதாயத்திற்கான மொழியாக ஒரு தனித்த வடிவத்தை மிளிரச் செய்திருப்பதில் மகாராசனின் எழுத்துத்தோளின் வலிமை அபாரமாகத் தெரிகின்றது.

"தாழி அறி
வரலாறு பிரி
வாழ்வு நுகர்.

"விதைச்சொல்" என்ற தலைப்பிலான இந்தக் கவிதை இத்தொகுப்பின் உச்சியில் நின்று நம்மை உலுக்குகிறது. உழவின் பெருமையை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதிச்சென்றுவிட்ட வள்ளுவன் வழிவந்த இந்த இனத்தின் கண்களை மறைத்துவிட்ட இழிசக்தியின் கோரமுகத்தை கிழித்துக் காட்ட முனையும் மகாரசனின் கம்பீரக் குரல் கவிதை வரிகள் முழுக்க ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. "பன்முகம்" என்ற கவிதை காட்டுகின்ற படிமம் நம் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெருமைமிகு முகத்தைக் காண்பிப்பதாகவே உணர முடிகிறது.

"உழைப்பு சொற்களால்
நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்"

இந்தத் தவிப்பும் ஏக்கமுமே மகாராசனின் முகத்தில் குடிகொண்டிருக்கின்றது என்பதை அறிவதே இத்தொகுப்பின் வாசிப்பனுபவமாக இருக்கும். இவரது செழிப்பான சொல் எனும் நிலத்தில் விதைக்கப்பட்ட கவிதை விதைகள் நிகழ்ந்துவிட்ட நிலப்படுகொலையை விருட்சமாய் நின்று விவரிக்கின்றன, அதற்கான நியாயஞ்செய்யுங்கள் என்று நம்மிடையே எதிர்பார்க்கின்றன.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

சொல் நிலம் – மொழி வயலில் விளைந்து நிற்கும் சொற்கதிர்கள் : - அன்பரசு

தோழர் மகாராசனின் எழுத்துக்கள் எப்போதும் மொழியையும் நிலத்தையும் மையமாக கொள்பவை,உழவுக்குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை தனது கட்டுரைகள் பலவிலும் ஆழமான ஆய்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார்.அவரது அண்மைய எழுத்து கவிதையாக சொல்நிலம் கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது.இது அவரின் முதல் கவிதை தொகுப்பும் கூட வயல் சார்ந்து விளைச்சலின் ஒவ்வொரு கணத்தையும் கண்டு வளர்ந்த அகத்தின் தன்னுணர்வு வெளிப்பாடாய் அமைந்துள்ள கவிதைகள் அவை.தனது எழுத்துக்களின் உள்ளீடாய் அமையும் மொழி,நிலம் அது சார்ந்த மனித மனத்தின் தவிப்புக்களுக்கு கவிதை வடிவம் தந்திருக்கிறார் மகாராசன். தமிழ்நிலத்தோடு இயைந்து வாழும் உழவுக்குடியின் மொழியாக, இயற்கையோடு உறவாடும் மனித மனத்தின்,ஓர் இனத்தின் தவிப்புகளை,கோபங்களை,கலக உணர்வை வெளிக்காட்டுகின்றன கவிதைகள், மகாராசனுக்கு வாழ்வின் சகல பரிமாணங்களும் ஒரு விளைச்சல் செயல்பாடாகவே பட்டிருக்கின்றன இயற்கையின் செயல்பாடுகளுக்குள்,குறிப்பாக
விளைச்சலுக்கு மனிதத் தன்மையேற்றும் வகையில் அவருடைய பல கவிதைகள் அமைந்துள்ளன.

“மகரந்த மனிதங்களால்
சூல் வலி கூடி
பூக்கும் அழுகையில்
காய்த்த ஈரம்
தேங்கியது கூட்டில்”(உயிர் கூடு)

“நீங்கள்

நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களை சுமக்கும்
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம்.

கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வை சுவைத்திருக்கிலாம்” (அறத்தீ மனிதர்கள்)

போன்ற கவிதை வரிகள் இயற்கைக்கும் மனிதத்திற்கும் இணக்கமான உறவை காணும் மனநிலையின் வெளிப்பாடாய் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாததும் எதிராக நிறுத்த முடியாததுமான நிலையை சுட்டிக்காட்டுகின்றன.

மேலும்,இன்றைய தமிழ் இனம் எதிர்கொள்ளும்,காவிரி,ஈழம்,மீத்தேன்,மற்றும் சாதீய சிக்கல்கள்
குறித்து மகாராசனின் கவிதைகள் அறவுணர்வோடு,தமிழ்நிலத்தின் உரிமைக்குரலை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன,அது குறித்து இன்னோரு பொழுதில் விரிவாக எழுத விரும்புகிறேன்.

“நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில்தானே
செழித்து நிற்கின்றன’(கூதிர் காலம்)

 என மகாராசனே கூறுவது போல தனது உயிர்ப்பான நினைவுகளை கவிதைகளாக வளர்த்திருக்கும் தோழர் மகாராசனுக்கு வாழ்த்துக்கள்.

சொல் நிலம் - மண்ணின் காதல் : - கண்மணிராசா

சமீபத்தில் அறிமுகமான தோழர் ஏர் மகாராசன்.ஆனால், அவரது கவிநூலான "சொல் நிலம்"வாசித்தவுடன் ஆண்டாண்டு காலம் தொடர்ந்த தோழமை உணர்வு மனதில்.
மக்களைப் பாடுவதே மகத்தான இலக்கியம்..என்பதில் உடன்பட்டு இந்த மண்ணை..மக்களைப் பாடும் எந்தக் கவிஞனும் நம் தோழனே.

ஒற்றைப் பசுங்கால்
வெள்ளோவியச் சிறுக்கிகளின்
வெள்ளந்திச் சிரிப்புக்குள்ளும்
மணம் கமழ்கிறது
களையெடுத்துக் காய்த்துப் போன
கைவிரல் கோதிய கருப்பிகளின்
வியர்வை.
...இது   நூலிலுள்ள மல்லி  கவிதையின் வரிகள்.
இதில் என்ன அழகில்லை..
என்ன உணர்வில்லை...உழைக்கும் மக்களை இதைவிட உன்னதமாகச் சொல்லமுடியுமா...?

நம் நிலமும்....ஐந்திணையும்
எங்கிருந்தோ நீளும் ராட்சதக் கரங்களால் தின்னப் பட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில்
ஆறாம் திணையாய் கவிதையும் கவிதையின் நிமித்தமுமாய் எழுந்து யாராடா அவன் எம்நிலத்தில் என குரலெழுப்பும் கவிஞன் நம் கவிஞனல்லவா...?


முல்லைக்குத் தேர் கொடுத்த
பாரிகளும்
மயிலுக்குப் போர்வை கொடுத்த
பேகன்களும்
வாழ்ந்திட்ட பெருநிலத்தில்
நரிமணம்
நெய்வேலி
கல்பாக்கம்
கூடங்குளம்
நெடுவாசல்
கதிராமங்கலம்
மிச்சமிருக்கும் மானம் எனக்
கொடுத்தும் கெட்டும்
கொடை மடத்துச் சான்றாவோம்
அம்மணமாய்க் கூவியபடி.

இந்தக் குரல் நம் குரல்.
இது நம் கவிதை.

சாதியவன்மமும் ...மதமும் கூறு போட்டு நம்மைக் காவு வாங்குகையில் அதைப் பேசாது எழுதாது உன்னத இலக்கியங்களை படைக்கும் போக்கின் நடுவே
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்தங்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக் கடன்
போட சேர்த்த பணத்தை ஒற்றை இரவில் செல்லாது என அறிவித்த திமிரை  எதிர்த்து பாடும் நூல் நம் நூல்.

அழுதுகொண்டிருந்தாலும்
உழுது கொணடிரு எனக் காலில் விழும் நிலத்தை கசியும் கண்களோடு கையிலேந்தி....அதன் கேவலை கவிதையிலேந்தி வந்திருக்கும் நூல் சொல்நிலம்.

கள்ளியை உலர்நிலச் சிறுக்கியென்னும் மகாராசன்
மண்ணின் காதலன்.
வார்த்தைகளின் வழியாக மட்டுமல்ல, நேரில் பழகிய தருணங்களிலும் இதை யாவராலும் உணர முடியும்.


வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : மக்களுக்கான கவிதைகள் :- தமிழ்ப் பரிதி


சொல் நிலத்தின் கவிதைகள் என்பன பல்வேறு பேசுபொருள்களை கொண்டிருப்பினும் அரசியல் கவிதைகள் மக்களின் வலியை, மண்ணின் மரபை பேசும் கவிதைகளே எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அத்தகைய கவிதைகளையே தாங்கள் சொல் நிலத்தில் கொடுத்திருக்கிறீர்கள். நூலில் 87 கவிதைகளின் தலைப்புகளே தமது பாடு பொருளை சொல்லிவிட்டன. அனைத்து கவிதைகள் பற்றியும் சொல்ல வேண்டியவை நிறைய இருப்பினும் என்னால் சிலவற்றை மட்டுமே மேற்கோள் காட்ட முடிந்தது.

போலி சனநாயகத்தை எள்ளிச் சிரிக்கும் குண்டர்கள் கவிதை மிக அருமை

கருப்பிகளின் வியர்வை என்ற சொல் மிக அழகாக அக்கவிதையில் வந்து விழுந்திருக்கிறது.

இவை மக்களுக்கான கவிதைகள்.
கவிஞர்களுக்கான கவிதைகள் அல்ல இவை. இவற்றை புகழ்ந்தோ திறனாய்ந்தோ எவரும் பேசினாலும் பேசாவிட்டாலும் இவை என்றும் நிலைத்து நிற்கும் கவிதைகளாய் வாழும்
வாழ்த்துகள் தோழர்

சொல் நிலத்தில் நிலத்தின் சொற்கள் :- தமிழ்ப் பரிதி


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கண்ணில் பட்ட ஒரு சிறு கவிதை நூல் தோழர் ஏர்மகாராசனுடைய சொல்நிலம்.
நிலத்தின் வலியும் பெத்த ஆத்தாளின் வலியும் ஒன்றெனச் சொல்லி பல தலைப்புகளில் நம் வேர்களைத் தேடும் கவிதைகள் இவருடையது.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."

ஏர்மகாரசனின் சொல் நிலம் கவிதை நூலில் நெஞ்சைக் கவ்விக் கொண்ட ஒரு கவிதை.
கருத்தமேனித் தமிழன் தன் நிறம் வெளுத்துப் போகட்டும் கொஞ்சம் வெள்ளையாவோம் என்றே விரும்புகிறான். நிறம் மட்டுமல்ல நிலமும் போய்க்கொண்டிருக்கிறது அவனைவிட்டு.

செல்லாக் காசுகளின் ஒப்பாரி என்றொரு கவிதை மக்களின் வாழ்வை வழமையை அழகாகக் சொல்லிவிட்டு நச்சென்று ஆள்வோரின் தலையில் குட்டிவிட்டுப் போகுமொரு கவிதை இது.

"சிறுவாட்டுக் காசும்
சுருக்குப்பைக் காசும்
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடித்துப் போட்ட காசும்
ஆத்தா அப்பன் நினைப்பாலே
எடுத்து வச்ச காசும்,
மூத்த புள்ளயக்
கட்டிக்கொடுக்க
அடுக்குப் பானைக்குள்ள
போட்டு வந்த காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாயல போட
வச்சிருந்த காசும்
செல்லாக் காசாப் போச்சே
சொல்லாக் காசாப் போச்சே.."

நெடுநகர்கள் இன்று கெடு நகர்களாய் மாறிவரும் நிலையில் யாரையும் யாரும் அறியாமல் யாருக்கும் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் எல்லாரும் நண்பர்கள்தாம் மின்னணுத்திரையில் மட்டுமென்று வாழ்கின்ற இச்சூழலில்...
இக்கெடு நகர்கள் விலக்கும் விளிம்புநிலை  மக்களை பற்றிப்பேசுமொரு கவிதை...

"தூசுகள் மண்டிய
நகரங்களில்
அப்பிக் கிடக்கின்றன
வன்மங்கள்.

அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
முகமூடிகள் போர்த்திய
உடல்கள்.

தெருக்களின் மூலையில்
ஒடுங்கிக்கின்றன
தோல் வற்றிய முகங்கள்.

கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ் வெளியாய்
சுருங்கிப் போனது
உலகம்.

எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்."

கவிதைகள் ஆழ உழுத அரசியல் கவிதைகளாய் மண்ணின் விடுதலை மக்களின் விடுதலையைப் பேசி

"வீறு பயிர் செய்து
கனல் பாய்ச்சி
விடுதலையைப்பறி"

என்கிறது சொல் நிலத்தின் கவிதைகள்...

வாழ்த்துகள் தோழர்  ஏர் மகாராசன்

செவ்வாய், 30 ஜனவரி, 2018

நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் வெளியீடு

தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரைவியலைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வளப்படுத்திய மார்க்சியத் தமிழியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு நினைவுக்கு சின்னஞ்சிறு கைமாறு ஒன்றையாவது செய்திட வேண்டும் என்கிற உள்ளுணர்வு ஊறிக் கொண்டே இருந்தது. கூடவே, நா.வாவின் கருத்தாடல்களை மீளவும் பரவலாக்க வேண்டும் என்கிற விருப்பும் இணைந்து கொண்டது. இதைச் செயலாக்கும் ஒரு முயற்சி தான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி எனும் நூல்.

இந்நூலின் வெளியீட்டு விழாவைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வாஞ்சையுடனும் தோழமையுடனும் நிகழ்த்திக் காட்டியது.

இவ்வமைப்பின் 5ஆவது மாநிலப் பண்பாட்டுப் பயிற்சி முகாம் இராசபாளையத்தின் நீர் காத்த அய்யனார் கோயில் வனப்பகுதியில் உள்ள சிவானந்தா ஆசிரம வளாகத்தில் கடந்த 27.01.18 மற்றும் 28.01.18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

உலக இலக்கியம், தமிழ்க் கவிதை மரபு, நாட்டுப்புற வழக்காறுகள், பண்பாட்டுச் சிக்கல்கள் போன்ற பல பொருண்மைகளில் கருத்துரைப்புகள் நடைபெற்றன. தோழர் மீரான் மைதீன் அவர்கள் இயக்கிய எழுத்தாளர் பொன்னீலன் அவர்களைக் குறித்த ஆவணப் படம், திருவண்ணாமலைத் தோழர்கள் தயாரித்த அறம் செய்யப் பழகு என்கிற குறும்படம் போன்றவையும் திரையிடப்பட்டன. பாட்டு, கவிதை எனத் தோழர்களின் படைப்பு வெளியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி நூலுக்கான வெளியீட்டு அரங்கமும் சிறப்புற அரங்கேறியது.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் எசு.கே.கங்காதரன் அவர்கள் நூலை வெளியிட, தோழர்கள் சொக்கலிங்கம் அவர்களும் தோழர் கண்மணிராசா அவர்களும் முதல் இரு படிகளைப்பெற்றுக் கொண்டார்கள்.

நூல் வெளியீட்டுரை நல்கிய தோழர் எசு.கே.கங்காதரன் அவர்கள், நா.வாவோடு எவ்வகையிலும் நேரடித் தொடர்பு இல்லாத ஒருவர், நாவாவின் எழுத்துகளைத் தேடிப் பிடித்து அவற்றின் ஊடாகத் தமது எழுத்தைக் கொண்டு செலுத்தும் மகாராசன் அவர்களை, நாவாவின் எழுத்துலக வாரிசுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். நாவாவோடு நேரிடையாகவும் ஆய்வுகளோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள எங்களைப் போன்றவர்கள் செய்திடாத ஒரு காரியத்தை நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி நூல் வழியாகச் செய்து காட்டியிருக்கிறார். உழவுத் தொழில் மரபினரான பள்ளர்களும் பள்ளிகளும் தான் இந்தச் சமூகத்தின் ஆதார சுருதிகள் என்பதை நா.வா அவர்களின் இந்தக் கட்டுரைகள் பேசியுள்ளன. நா. வாவின் தொடக்க கால ஆராய்ச்சி இந்தப் பள்ளுப் பாட்டிலிருந்து தான் தொடங்கி இருக்கிறது. உழவர்களைக் குறித்த உரையாடல்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும். மிக அழகான நேர்த்தியான வடிவமைப்போடு இந்நூல் வெளிவந்திருக்கிறது. இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் மகாராசனுக்கும் ஆதி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள் பல. இது போன்று நிறைய நூல்களை வெளியிட வேண்டும் எனப் பேசியது நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந் நூலை நான் வெளிக்கொண்டு வந்தமைக்காகப் பேராசிரியர் முனைவர் ந.முத்து மோகன் அவர்கள், நூலாடை போர்த்திப் பாராட்ட, இறுதியாய்ச் சின்னதோர் ஏற்புரை வழங்கினேன்.

தமிழ்த் தேசியத்தின் இரு பெரும் அறிவு ஆளுமைகளாகத் திகழும் பாவாணர் மற்றும் நா.வானமாமலை ஆகியோரின் எழுத்துகளே எனது எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்கள். தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தமிழ்ச் சமூகத்தைப் புனரமைக்கவுமான பண்பாட்டுக்களத்தில் இவ்விருவரின் எழுத்துகள் தவிர்க்க முடியாதவை. இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமூகத்தில் எந்தப் புரட்சியையும் செய்ய முடியாது. அந்த வகையில், நா.வாவின் நூற்றாண்டுக்கு என்னால் ஆன ஒரு தளுகையே இந்நூல். இந்த முயற்சிக்கு வாஞ்சையுடனும் அன்புடனும் மதிப்புடனும் ஒரு வெளியீட்டு நிகழ்வை நிகழ்த்தியிருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும் மதிப்பும் எப்போதும் உண்டு எனப் பேசி முடித்தேன்.

முன் பின் அறிமுகமே இல்லாத தோழர்களின் இந்த முயற்சியும் ஏற்பாடும் இன்னும் எழுதுவதற்கான தெம்பைத் தந்திருக்கின்றன. இந்த நூல் வழியாக நிறைய தோழர்களின் அறிமுகமும் அன்பும் கிடைத்திருக்கிறது.

இரு நாள் முகாமை ஒருங்கிணைத்தும் விருந்தோம்பல் பண்பை உயிர்ப்பித்தும் காட்டிய தோழர்கள் கண்மணிராசா, அமீம் முசுதபா, செல்வக்குமார், செந்தழல், ஆனந்தி, சரவணன் உள்ளிட்ட தோழர்களின் உழைப்பு மதிக்கத் தக்கவை.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும் தோழர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்.

வியாழன், 18 ஜனவரி, 2018

எனதூர்த் தல புராணம்.

கல்லடுக்குகளின் செதில்களில் வேர்களை நுழைத்தபடி
கோபுர நிழல் மறைப்பில்
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது இச்சிச் செடி.

பசப்பூறிய பூசனத்தின் ஈரத்தில்
நீந்தத் தவித்து
சுற்றுக்கல் புடைப்புகளில்
ஒட்டிக் கிடக்கின்றன
கெண்டை மீன்கள்.

திரிகள் நனைத்து
வளையொலி இசைத்த
உள்ளங்கைக் கோடுகளில்
கரி அப்பிக் கிடக்கின்றன
நெய் கசிந்த மாடக்குழிகள்.

முகமற்ற குறிகள்
புணர்ந்து கிடந்த கருவறைக்குள்
மெல்ல நுழைந்து பார்த்த
சிற்றொளிக் கோடுகள்,
கரைந்து போன
காலடித் தடங்களைத்
தாவியோடி அணைத்திட
சுவர்களில் முட்டி மோதி
அழுது கிடக்கின்றன.

வளர்பிறையும் தேய்பிறையும்
காலத்தில் கரைந்து போனதைத்
தோல் உரித்துக் காட்டியிருக்கிறது
கருநாகத்தின் சட்டையொன்று.

களவு போன கலசத்தைப் பேசியபடியும்,
நஞ்சையும் புஞ்சையும் பறிகொடுத்து
காணிகளில் உழுதவர்கள்
கண்ணீர் மல்க ஊர் விட்டுப் போன திசை வெறித்துத் தவித்தும்,
தொன்மங்களின் பூச்சுகள் கரைய
உயிர் வழியும் கண்களால்
சுதைகள் சுற்றி நிற்கின்றன
கோபுரத்தைச் சுற்றியபடி.

மனிதத் தழுவுதல் வேண்டியும்
ஒற்றையாய் மண்டியிட்டு
வெளியே கிடக்கிறது எருது.

கோயிலுக்குச் சாற்றிய காணிகளும் களவு போயின இப்போதும்.

கருவறைக்குள்
ஒளிந்து கிடக்கும் தெய்வம்
வெளிவருவதாய்த் திட்டம் இல்லை
இப்போதும்
எப்போதும் போலவே.

வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் - பெண்மொழியும் எதிர் மரபும் : மகாராசன்



     சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால், சைவ - வைணவ சமயங்களோ அத்தகைய விலக்கல் முறைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய
ஈடுபாடுகள் போன்றவற்றைத் தமது பக்திநிலைப் பரப்புகளில் படியச் செய்வதற்கான வாய்ப்புகளுக்கு இடமளித்தன. அதனால்தான், சங்ககாலத் திணை இலக்கிய மரபுகளுள் ஒன்றான  ‘அகப்பொருள் மரபு’ பக்திநிலை இலக்கியத்திலும் படிய நேர்ந்திருக்கிறது.

சங்க கால அகப்பொருள் இலக்கிய மரபு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலை மய்யமிட்டிருப்பது. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்ற மரபைப் பின்பற்றித்தான் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தம்மைப் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பாவித்துக்கொண்ட காதல் அனுபவ வெளிப்பாடுகள் மானுடம் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. கடவுள் பற்றிய காதல் அனுபவ வெளிப்பாடுகளும் அகப்பொருள் மரபைச் சார்ந்ததுதான் எனும் வகையில்
காமப்பகுதி  கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்(தொல்.பொரு.81)
என்கிறது தொல்காப்பியம். இத்தகைய அகப்பொருள் மரபின் தொடர்ச்சியைப் பக்திநிலைக் கவிதைகளிலும் காணலாம்.

சமணத்திலும் பவுத்தத்திலும் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் போனதற்குக் காரணம், வீடு பேறு என்ற நிலையை அடைவதற்குப் பெண்களால் முடியாது என வாதிட்டதுதான். இன்னொரு பிறவியில் ஆணாகப் பிறந்து வீடுபேறு அடைய வழி சொன்னதோடு, பெண்ணோடு இணைந்திருக்கும் இல்லறம் சிறப்பல்ல எனச் சமணமும் பவுத்தமும் கருதியிருந்தன. இதனால், தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறை நிராகரிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. இதே சூழலில் சைவமும் வைணவமும் தமிழ் அக ஒழுக்க வாழ்க்கை முறையைத் தமதாக்கிக் கொண்டன. பழைய அகப்பொருள் மரபை வைத்துக்கொண்டு இறைக் காதலையும் மனிதக் காதலையும் பாடும் வகையில் பக்திநிலைக் கவிதைகள் பாடப்பட்டன.

சைவத் திருமுறைகளிலும் வைணவப் பிரபந்தங்களிலும் காணலாகும் அகபொருள் மரபானது, அக்காலத்தியப் பக்திநிலைச் சூழலுக்கேற்றவாறு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, கடவுளைக் காதலராகப் பாவனை செய்துகொண்டு பாடுதலை பக்திநிலைக் கவிதைகளில் காணலாம். இத்தகைய அகப்பொருள் சார்ந்த பக்திநிலை மரபு சைவ-வைணவ இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கின்றது. அவற்றுள் வைணவ சமயம் சார்ந்து பாடியவர்களான நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் நாயகி - நாயகன் பாவனையில் பெண் மனவுணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆயினும், அப்பாவனைகள் ஞானத்தில் தன்பேச்சையும், பிரேமத்தில் பெண் பேச்சையும் கொண்ட ஆணின் குரலாகவே அமைந்திருந்தன. ஆனால், ஆண்டாளோ ஞானத்திலும் பிரேமத்திலும் தனது இயல்பான பெண் பேச்சையே வெளிப்படுத்தியுள்ளார்.

   வைணவ இலக்கியக் கர்த்தாக்களான ஆழ்வார்களுள் ஆண்டாள் ஒருவரே பெண். மற்றவர்கள்  அனைவரும் ஆண்கள். ஓர் ஆண் என்னதான் மெனக்கெடுத்துக் கொண்டு பெண் போலப் பாடினாலும், அது ‘பெண் பாடியது போல’ என்றுதான் அமையுமே தவிர, பெண் பாடியதாக இருக்க முடியாது. ஆண்களாக இருந்து கொண்டு பெண்போல பாவித்துக் கொண்டு பாடுவது செயற்கைத் தனம் கொண்டது. பெண்ணாகவே இருந்து பெண்ணாகவே பாடுவதில்தான் உண்மையும் உயிர்ப்பும் இருக்க முடியும். அவ்வகையில்,  ஆண்டாளின் கவிதைகள் இயற்கை ஓட்டத்தைக் கொண்;டிருப்பன. இவ்வியற்கை ஓட்டத்தைத்தான் ‘பள்ளமடை’ என்கிறார் திருப்பாவை உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை. அவர் எழுதிய திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகையில் “புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேகிப்பதிலுங் காட்டில் ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடையாகையாலே”1 எனக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் ஆண்டாளின் பக்திநிலை சார்ந்த கவிதைகளில் நாயகி நாயகர் காதல் வெளிப்பாடுகள் இயற்கைத்தன்மை கொண்டது என அறியலாம்.


ஆண்டாளின் இயற்கையான பெண்பேச்சு தமிழ் இலக்கிய மரபிலிருந்து விலகிய மாற்று மரபை முன்னிறுத்துகிறது. பெண்நிலை சார்ந்து ஆண்டாளின் கவிதைகளை நோக்கும்போது இவ்வுண்மை புலப்படுகின்றது. ஒரு பெண்ணின் நனவிலித் தளத்தில் உருவாகும் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குப் பல்வேறு சமூகத் தடைகள் மரபுகளின் பேரில் உருவாக்கப்பட்டிருந்தன. பெண்ணின் இயற்கைக் குணாம்சத்தை, இயற்கைக் காதலை, இயற்கைக் காமத்தை, இயற்கை களிப்பையெல்லாம் எக்காரணம் கொண்டும் ஒரு பெண் வெளிப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் பெண்ணை இறுக்க நிலையிலே வைத்திருந்தன. இந்நிலையில்தான், பக்திநிலை என்ற வெளிப்பாட்டுத்தளம் மூலமாக மடைமாற்றம் செய்து கொள்ளுதலைப் பெண்கள் மேற்கொள்ளத் தொடங்கினர் எனலாம்.

“எந்த ஓர் உணர்வுத் தளத்தின் தீவிரத் தன்மையும்  ‘பக்தி’ என்பதால் மடைமாற்றி விடலாம். தீராத காமமும், காமம் பற்றிய அச்சமும்; தீராத காதலும், காதல் மீதான அருவருப்பும்; பெரும் திளைப்பும், திளைப்பை மறுக்கும் துறப்பும் என எதிர் எதிர்த் தீவிரத் தன்மைகளைக் கையாளும் இடம் இந்த பக்தி.”2 அவ்வகையில் நோக்கும்போது ஆண்டாளின் காதல் துயரமும் காம வேட்கையும் பக்தியின் வழியாக மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனக் கருத இடமுண்டு.

ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் பக்திநிலை சார்ந்து வெளிப்பட்டிருப்பினும், அவற்றுள் பெண்நிலை சார்ந்த கூறுகளைக் கொண்ட இயல்பான பெண்மொழியைக் காணமுடியும். “மரபான ஆணாதிக்கச் சமூக அமைப்பில், ஆண்களை மேன்மைப்படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கிய மரபுகளையும் மொழியமைப்பையும் உடைத்துக் கொண்டு மாற்று மரபாகத் தன்னுடைய காதல் உணர்வுகளை எந்தவிதப் பூச்சுமின்றி இயல்பான பெண்மொழியில் வெளிப்படுத்தியவர் ஆண்டாள்”3ஆவார்.

 மரபுகளாலும் வரம்புகளாலும் தடுக்கப்பட்ட பெண்ணின் இயல்பான காதல் உணர்வுகள் இலக்கியத்தளத்தில் பதிகின்றபோது, இதுவரையிலான மரபார்ந்த பார்வையைக் கொண்டிராமல் மாற்று மரபைக் கொண்டிருக்கிறது புலனாகின்றது. நிலவுகிற மரபுகளின் மீது எதிர்வினையாற்றக் கூடிய தன்மையை மாற்று மரபுகள் பெற்றிருக்கும். எதிர்ப்பும் மறுப்பும் புதிதும் கொண்ட மரபாகவே ஆண்டாளின் மாற்று மரபு அமைந்திருக்கிறது. இத்தகைய மாற்று மரபு தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது எனலாம். 
                        
ஆண்டாளின் கவிதைகள் திருமால் மீது கொண்ட காதலையும், திருமாலுடன் சேரத்துடிக்கின்ற வேட்கையையும் வெளிப்படுத்தியமைக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஆண்டாள் குறித்து வழங்கப்பெறும் கதைகள்வழி நோக்கும்போது அவர் பாடியதன் பின்னணியை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.

ஆண்டாள் பற்றிய திட்டவட்டமான வரலாறு கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், அவர் குறித்த சில தரவுகளின் அடிப்படையில், ஆண்டாள் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாகக் கருதப்படுகிறார். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள் என்று புராணக் கதைகள் கூறும் நுhல்கள் குறிப்பிடுகின்றன. கடவுளால் அருளப்பெற்ற குழந்தையே ஆண்டாள் எனும் புனைவை விலக்கி வைத்துப் பார்க்கும் போது, ஆண்டாளைப் பெற்ற தாய் தந்தையர் இன்னாரென்று அறிய இயலவில்லை.அநாதரவான நிலையில் இருந்த ஆண்டாள், பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆண்டாள் பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்திருக்கலாம்.
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே (நா.திரு.13:7)
என்ற குறிப்பின்வழி தமது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஆண்டாள். பெற்ற தாய் வெறுத்து ஒதுக்கியதனால் அனாதையாகிப் போனதும், அனாதையான பிறப்பைக் கொண்டதால் மணவாழ்வு கிட்டாமல் மறுபடி அனாதையாக்கப்படுவதும் ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழும் கசப்பான அனுபவங்கள்.

மானுட உலகின் மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் அவமானங்கள், மானுட உலகின் ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்க்கை போன்றவையால் மானுட உலகின்  ஆண்களையே நிராகரிக்கும் முடிவுக்கு ஆண்டாளைத் தள்ளியிருக்க வேண்டும். அதனால்தான்,
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் (நா.திரு.1:5)
என்று மானுட உலக ஆணினத்தின் மீதான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார். “மரபு வழியாக ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் அழகு, தோற்றப் பொலிவு, அவற்றுக்கெல்லாம் மேலாகக் கல்வி, அதனால் விளைந்த தனித்த ஆளுமையான கவித்திறன் ஆகிய அனைத்தும் தன்னிடம் கைகூடியிருந்தபோதும், பிறப்பின் மர்மத்தில் திருமணச் சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழ்மன ஆவேசம், பக்திப் பின்னணியோடு ஒருங்கிணைந்து இயக்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிரான எதிர்ப்புக் குரலாக அவர் பாடல்களில் எதிர் வினையாற்றியிருக்கிறது”4 எனலாம்.

ஆண்டாள் வாழ்ந்த காலத்தியச் சமூக அமைப்பு, பெண்களைக் குடும்ப அமைப்பிற்குள் இருத்தி வைப்பதற்காக மணவாழ்க்கைமுறை குறித்தான மிகை மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருந்தது. பெண் ஆண் உறவைக் கொண்ட மணவாழ்க்கை முறைக்கு முதன்மை அளிக்கப்பட்ட சமூக அமைப்பின் தாக்கம் ஆண்டாளுக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். பெற்றோர்களால் ஏற்படுத்தித் தரக்கூடிய மணவாழ்க்கை முறையே அன்றைய காலகட்டத்தில் உயர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆண்டாளும் அத்தகைய மணவாழ்க்கை முறையைத்தான் விரும்பியிருக்கிறார்.
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழியே போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழிகாப்பு அரிது (நா.திரு.12:3)
என, உடன்போக்கின் மூலமாக அமையும் மணவாழ்க்கை முறையை ஆண்டாள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆண்டாள் எதிர்பார்த்த மணவாழ்க்கை முறையைப் பெரியோர்களே ஏற்படுத்தித் தரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், அத்தகைய மணவாழ்க்கை ஆண்டாளுக்கு வாய்க்கப்பெறவில்லை. அதனாலேயே மானுட மணவாழ்க்கை மீதான வெறுப்பையும், மானுட ஆண்கள் மீதான எதிர்ப்பையும் ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். இவ்வெதிர்ப்பை நேரிடையாக வெளிக்காட்ட முடியாத சூழலில்தான் அவ்வெதிர்ப்பைப் பக்திநிலை வடிவில் - திருமாலைக் காதலிப்பதாகவும் - அத்திருமாலையே மணமுடிக்க வேண்டுமென்று துடிப்பதாகவும் மடைமாற்ற முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கருதலாம்.

       மானுட உலகின்  ஆண்களின் மீதான எதிர்ப்பை, தன்னில் எழும் காதல் உணர்ச்சியும் - காம வேட்கையும் திருமாலுக்குரியது எனப் பாடுவதின் மூலம் காட்டுகிறார். மானுட உலகின் ஆண்கள் எதை நிராகரித்தார்களோ, எதை வெளியிடக்கூடாது என்றார்களோ அவற்றையே பாடுவதின் மூலமான எதிர்ப்பு மனநிலை ஆண்டாளிடம் காணப்படுகின்றது. ஆனால், “பெண்ணின் இயல்பான இந்த எழுச்சியை ஏற்க முடியாதவர்கள் அவளை இறைவியாக ஆக்கினர். இராமாநுசர் காலத்தில் நிறுவன சமயமாக வைணவம் உருப்பெற்றது. அவரது சீடர்களாலும்;, பின்வந்தவர்களாலும் உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட திவ்ய ஆசரிதம் (ஆழ்வார்கள் வரலாறு கூறும் வடமொழியிலான நூல்) குருபரம்பறை (மணிபவள நடையில் அமைந்துள்ள ஆழ்வார்கள் ஆசாரியர்கள் வாழ்க்கை வரலாறு கூறும் நூல்), திருப்பாவை, நாச்சியார் திருமொழி உரைகள் அனைத்திலும் ஆண்டாள் பெரிய பிராட்டியாகவும், அவர் பாடிய பாடல்கள் வேதம், உபநிடதம் எனவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன.”5 அதாவது, பக்திநிலை மடைமாற்றத்தின் மூலமாக வெளிக்கொணரப்பட்ட எதிர்ப்புணர்வு தீவிரத்தன்மை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஆண்டாளை இறைவியாக்கியிருக்கிறார்கள்.

மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட அம்மை, மானுட வாழ்வை மறுத்ததும், மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட  ஆண்டாள் மானுட மணவாழ்வை மறுத்ததும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஆயினும், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் இறையடியாராக, இறைவியாக ஆக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்பது எதிர்ப்புகளைக் காயடிக்கும் ஆண்வழிச் சமூக முறைமைகள்தான் என்பது தெளிவான ஒன்றாகும்.

மானுட மணவாழ்வை ஆண்டாள் நிராகரித்ததற்கான காரணங்களுள் ஒன்றாக, அவருடைய வளர்ப்புச் சூழலையும் கருத இடமுண்டு. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், குழந்தைப் பருவத்திலிருந்தே பக்திச் சூழலோடு வளர்க்கப்படுகிறார். தாயற்ற ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தாயும் தந்தையுமாகக் காணப்படுகிறார்.
திருமாலுக்குப் பெரியாழ்வார் மேற்கொள்ளும் பக்திக் கடமைகளுக்கு ஆண்டாள் உதவியாய் இருப்பதோடு, பக்திநிலை உணர்வில் தானும் இரண்டறக் கலந்துவிடுகிறார். திருமால் குறித்தான அவதாராக் கதைகளும், நம்பிக்கை சார்ந்த புனைவுகளும் பெரியாழ்வாரால் உணர்வுப் பூர்வமாகச் சொல்லப்பட்டதை ஆண்டாளும் உள்வாங்கியிருக்க வேண்டும். உள்ளம் உருகச் சொல்லப்பட்ட பக்திநிலைக் கதைகள் ஆண்டாளின் உள்ளத்தில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் “தந்தையால் வர்ணிக்கப்பட்ட கிருஷ்ணனின் பல பெண்களை நேசிக்கும் போக்கை, அவன் கோபியரோடு வைத்திருந்த உறவும், அவனை மணம் முடிக்க அவர்கள் விரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் தான் மணம் முடிப்பதாக அவன் வாக்களித்து விளையாடியதெல்லாம் ஆண்டாள் மனதிலும் வேரூன்றி தன்னையும் ஒரு கோபியராகப் பார்க்க வைத்தது.”6 அதனால்தான், திருமாலுக்காகக் கட்டப்பட்ட மாலையைத் தான் சூடிப்பார்க்கும் ஆசையை ஆண்டாளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

திருமாலுக்குச் சூட வேண்டிய மாலையைத் தான் அணிந்து பார்க்க வேண்டும் என்ற காதல் உணர்வு இயல்பாகவே ஆண்டாளின் உள்ளத்தில் தோன்றுகிறது.
ஏனெனில், மலர்களோடும் மாலைகளோடும்தான் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறார். இந்த மாலைகளும் மலர்களும் மணவாழ்வையும் மங்கலத்தையும் குறித்து நிற்கக் கூடியவை. ஆகவே, ஆண்டாள் கட்டிக் கொடுக்கின்ற மலர் மாலைகள் ஆண்டாளின் மணவாழ்க்கை விருப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே திருமால் மீது கொண்ட விருப்பங்களும் ஒன்றுகூடி திருமால் மீதான காதலாக ஆண்டாளிடம் உருவெடுக்கின்றது.

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என ஆண்டாள் குறிப்பிடுவதின் மூலம், குழந்தைப்பருவம் முதலே திருமாலின் மீது ஈடுபாடும் காதலும் கொண்டு ஆண்டாள் வளர்ந்து வந்திருக்கிறார் என அறிய முடிகின்றது. இவ்வாறு மானுட ஆண்களின் மீதான எதிர்ப்புணர்வு ஆண்டாளிடம் தோன்றுவதற்கு, மானுட ஆண்களால் நிராகரிக்கப்பட்ட மணவாழ்வுத் தடைகள், வளர்ந்து வந்த பக்திச் சூழல் போன்றவை காரணமாக இருக்கலாம் எனக் கருதலாம்.

ஆண்டாள் பாடிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் திருமாலின் மீதான காதலையும் காம வேட்கையையும் வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்திருக்கின்றன. திருப்பாவை காதல் உணர்வையும், நாச்சியார்திருமொழி காமத்துயரத்தையும் வெளிப்படுத்துகின்றன. திருப்பாவை மார்கழி நோன்புச் சடங்கு குறித்துப் பாடப்பட்டிருந்தாலும், அதனுள் திருமாலின் மீதான காதல் உள்ளத்தை வெவ்வேறு நிலையில் அவர் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடியும். அதாவது, “ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் திட்டமிட்டுப் போய்ச் சேர்வதுதான் திருப்பாவையின் பாடுபொருள்”7 ஆகும்;. பெண் ஆண் மனக்கலப்புகளின் குறிப்புகளை மிக நுட்பமாக விவரித்துச் சொல்வதாகத்தான் திருப்பாவை அமைந்திருக்கிறது.

திருப்பாவையின் முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர்! போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! (திரு.1)
என்கிறார் ஆண்டாள். நீராடச் செல்லும் பெண்கள் குறித்துப் பேசும் ஆண்டாள்,திருப்பாவையின் ஓரிடத்தில்கூட ஆற்றங்கரை குறித்தோ, குளத்தங்கரை குறித்தோ அல்லது அவற்றை ஒட்டி நடந்ததாகவோ குறிப்பிடவில்லை. ஆனாலும், “நீராட்டம் ஒரு பூடகம். வேறு ஏதோ ஒன்றைத் தங்கள் குழுவினர் மட்டும் புரிந்துகொள்ளும்படி, அயலார் அறியாமலிருக்கும்படி குறியிட்டுச் சொல்கிறார்கள்.”8

பூடகமாக உணர்த்தப்படும் ‘நீராடல்’ என்பது ‘கலவி’யின் விருப்பத்தை உணர்த்துவது. சங்ககாலத் திணைக் கவிதைகளில் காணலாகும் நீராடல், புனலாடல் போன்றவை அந்தப் பொருளைத்தான் குறிக்கின்றன. ஆகவே,ஆண்டாளும் அவ்விருப்பத்தைப் பூடகமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார். இவ்விருப்பம் திருமாலின் மீது கொண்ட காதல் உணர்வால் வந்த விருப்பம். அக்காதலைப் பல்வேறு நிலைகளில் உணர்த்துவதற்காகத்தான் திருப்பாவையின் தொடக்கத்திலேயே ‘நீராடல்’  பூடகமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.

திருமாலின் மீது கொண்ட காதலை
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான் (திரு.1)
என்பதில் வெளிப்படுத்துகிறார். பறை என்பது இங்கு குறியீட்டுப் பொருளைத் தருவது. திருமாலிடம் பறை வேண்டுவது காதலை வேண்டுவதாக வெளிப்படுகின்றது. ஆயினும், ஆண்டாள் தனது காதலை வெளிப்படுத்திவிட்டார். பறை வேண்டுவதின் மூலமாகத் திருமாலின் மீது கொண்ட காதல் நினைவுகளாலே ஒன்றிப்போன மனநிலையைப் பின்வரும் கவிதையிலே ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.
நெய் உண்ணோம்!பால் உண்ணோம்! நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்!
செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்றோதோம்! (திரு.2)
என்பதில் ஆண்டாளின் நினைவுகளெல்லாம் திருமாலே ஆகிப்போன நிலையைக் காணலாம். தனக்குக் காதல் இருக்கிறது. திருமாலும் தன்னைக் காதலிக்க வேண்டும். இதைத்தவிர வேறெதுவும் வேண்டாம் என்ற காதல் துயரின் வெளிப்பாடுதான் அது.

திருமாலிடம் கொண்ட காதல் வேட்கையும் ஆவலும் முடிவில்லாத நிலையைக் கொண்டிருப்பினும், திருமாலை அடைவதில் மட்டும் உறுதியைக் கொண்டிருக்கிறார் ஆண்டாள். அதனால்தான்,
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலெறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த காட்சியை மலர்மார்பா (திரு.19)
என்ற கனவு நிலைக் காட்சியை வெளிப்படுத்துகிறார் ஆண்டாள்.

பெண்ணின் பருவ வயதில் ஏற்படும் பாலியல் துய்ப்புக்கான விருப்பங்கள் கனவு நிலையில் தோன்றுவதுண்டு. மேற்கண்ட கவிதையானது பாலியல் துய்ப்பு நிகழ்ந்து விட்டதைச் சொல்வதுபோலத் தோன்றும். நிறைவேறாத ஆசைகள் கனவுகளாகத் தோன்றும். எனினும், பாலுறவு அனுபவம் அல்லாதவர்களுக்குச் சேர்வது போன்ற கனவுகள் தோன்ற முடியாது. இருப்பினும், பாலியல் துய்ப்புக்கான விருப்பங்கள் வேறு வேறு வகைகளில் கனவில் தோன்றக் கூடியவை. இங்கு, ஆண்டாளும் திருமாலும் ஒன்று கலப்பதைப் போன்ற கனவு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறார். ஆனால், இருவரும் ஒன்று சேரவில்லை. அக்கவிதை பெண்ணின் கனவு நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது என்பதற்கான ஒரே குறிப்பு ‘குத்து விளக்கெரிய’ என்பதுதான்.மிக நுட்பமாகப் பெண்ணின் கனவு நிலையை இயல்பான பெண்மொழியாலே ஆண்டாள் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு அக்கவிதை மிகச்சிறந்த சான்றாகும். அதனால்தான் “தம் காதல் உணர்வை இயல்பான தன் மொழியில் மிகச் சாpயாக வெளிப்படுத்தியவர் ஆண்டாள். அவருக்கு முன்னும் அப்படி ஒரு பெண் கவிஞர் இல்லை. அவர் வெளிப்படுத்திய முறையில் பாடிய பெண்கவிஞர் அவருக்குப் பின்னும் இல்லை”9 என்கிறார் சு.வேங்கடராமன்.

ஆண்டாளின் இளமைப்பருவம் முழுவதும் திருமாலையே மய்யமிட்டு இருப்பதனால், அவரின் கனவு நிலையிலும் திருமாலே மய்யம் கொண்டிருப்பது அவர் கவிதையில் வெளிப்படுகின்றது. திருமாலையே காதலித்து, அக்காதல் நினைப்பிலே வாழ்ந்து, கனவு நிலையிலும் திருமாலையே கூடநினைக்கும் ஆண்டாள், திருமாலே தனக்கு எல்லாம் தரவேண்டும் என்பதை
......கோவிந்தா! உன் தன்னைப்
பாடி பறைகொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே! தோள்வளையே! தோடே! செவிப்பூவே!
பாடகமே! என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன்பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து......(திரு.27)
எனப் பாடுகிறார். ஒரு பெண்ணின் காதல் உச்சத்தின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கிறது.

கைவளை, தோள்வளை, தோடு, புறங்காதில் சிறுதோடு, கால்கொலுசு, மற்றும் பல அணிகள், உடை போன்றவை காதல் விருப்பத்தின் பரிசுப் பொருட்களாகவும், மணவாழ்க்கை மகிழ்வின் வெளிப்பாடுகளாகவும் இருப்பவை. ‘நாடு புகழும் பரிசினால் நன்றாக’ என்பது காதல் கைகூடச் செய்யும் மணவாழ்க்கையை வேண்டுவதைக் குறிக்கின்றது. காதலரைக் கைபிடித்த மணவாழ்க்கைக்குப் பின்தான், காதலரோடு கூடியிருக்கும்போதுதான் நெய்யும் பால்சோறும் முழங்கை வரைக்கும் வழிந்தோடும்படி உண்ணமுடியும். மணவாழ்க்கை அமையப் பெற்றால்தான் இவையெல்லாம் நடைபெற முடியும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் ஆண்டாள்.

ஆண்டாளின் காதல் உணர்வுகள் பல்வேறு நிலைகளில் வளர்ந்து உச்சத்தைத் தொடுகிறது. காதல் வயப்பட்ட பெண்ணின் உளவியல் படிநிலைகளை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார் அவர். முதலில் காதல் விருப்பம், பின்பு காதல் நினைவுகளால் ஏற்படும் மறத்தல், கனவு நிலையில் வேண்டுவதான மணவாழ்க்கை விருப்பம்…… இவ்வாறு ஒவ்வொரு படிநிலைகளையும் கடந்து செல்லும் பெண்ணின் காதல் நிராகரிக்கப்படுகிறது. “எத்தனையோ விதத்தில் தன் காதலைச் சொல்லி, தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்துவிட முடியாதபடி தன் மனம் கண்ணனுடன் இணைந்து பின்னியிருப்பதைச் சொல்லி, திரும்பிப் போய்விட இயலாத தூரத்தில் வீடு வாசல் எல்லாம் விட்டு வந்த கோபிகையின் பாத்திரத்தை அநுகரித்து, மனசால் ஒரு கோபியாக கண்ணனைக் கிட்டி, படிப்படியாக அவனைப் பலவந்தம்  செய்து அவனைக் கூடிய ஆண்டாள் இப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள்”10 எனும்போதுகூட, ஆண்டாளுக்குள் இருந்த காதல் மறைந்தபாடில்லை. காதல் நிராகரிப்பால் உண்டான ஆற்றாமைத் துயரம் அவரின் காதலை மேலும் மேலும் வளர்த்தெடுக்கின்றது. தான் கொண்ட காதலில் உறுதியாய் இருக்கச் சொல்கிறது மனம். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காயினும் காதல் கைகூடும் என்ற நம்பிக்கை ஆண்டாளுக்குள் இருந்திருக்கிறது. அதனால்தான்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேல் (திரு.29)
என்ற உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் இளமைப் பருவத்தில் பாடப்பட்ட இக்கவிதைகள், திருமாலின் மீது பாடப்பட்ட பக்திநிலைப் புனைவுக் காதலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. ஓர் ஆண் மீது பெண் கொள்கிற காதல் எத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறதோ, அத்தகைய உணர்ச்சிக் குவியல்களையே ஆண்டாளின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. மானுடத்தின் காதல் உணர்ச்சியைத்தான் ஆண்டாளும் கவிதையாக்கியிருக்கிறார். “மானுடப் பெண்ணாகப் பிறந்து தன் காதல் உணர்வை - பிரிவின் ஏக்கத்தை உணர்ச்சி பொங்க, இலக்கிய மரபிற்கு மாற்று மரபாக, புதியன படைப்பதாக ஆண்டாள் பாடினார். மரபு மாற்றத்தில், பழமையான ஆண்களை முதன்மைப்படுத்தும் இலக்கிய மரபுகளையும், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையும் உடைத்துத் தன் ஆசையை - உணர்வுப் போராட்டத்தை - தன்மொழியில் அவர் தமிழ் மரபில் முதல் பெண் கவிஞராகப் பாடினார்”11 என்பது குறிப்பிடத்தக்கது.

மானுடம் முழுமைக்கும் பொதுவாய் உள்ள காதல் அனுபவத்தை ஆண்களே பாடத்தக்கவர்கள்; பெண்கள் பாடுதல் கூடாது என்ற மரபுகள் வழக்கில் இருந்த காலகட்டத்தில், ஆண்டாள் தன் காதல் உணர்ச்சிகள் பொங்கப் பாடியிருப்பது மரபு மீறலைக் கொண்ட மாற்று மரபாகவே அமைந்திருக்கிறது. ஆண்டாள் குறித்த சமயப் புனைவுகளையும், திருமால் பற்றிய சமயப் பிம்பத்தையும் விலக்கிப் பார்க்கும்போது இம்மாற்று மரபு பெண்நிலை சார்ந்த ஒன்றாக அமைந்திருப்பதை அறிய முடியும்.

பெண்ணுடல் ஆணின் பாலியல் துய்ப்புக்கான பண்டமாகத்தான் ஆண்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. பெண்ணுடல் தனித்து இயங்கக் கூடியதான ஆற்றலை இழந்து நிற்கக் கூடியது; ஆணுடலை மய்யமிட்டுத்தான் பெண்ணுடல் இயக்கம் கொள்கிறது என்பதான கற்பிதங்கள் ஆண்வழிச் சமூக முறைமையில் நிலவிக் கொண்டிருப்பவை. மேலும், பெண்ணுடலின் காமமும் உணர்ச்சியும் இச்சையும் பெண்களால் வெளிப்படுத்தக் கூடாதவை; அக்காமத்தையும், உணர்ச்சியையும், இச்சையையும், துய்ப்பையும் ஆண் தரப்பிலிருந்தே வெளிப்படுத்தக் கூடியவை என்கிற கருத்தாக்கங்கள் பெண்ணைப் பேசவிடாமலும், எழுதவிடாமலும் தடுத்து வைத்திருக்கின்றன. இம்மாதிரியான நியதிகளால் பெண்ணின் குரல் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்த நிலையில்தான் ஆண்டாளின் பக்திக் குரல் பெண்நிலை சாh;ந்து ஒலிக்கத் தொடங்கியது. அதாவது, “நீண்ட நாட்களாக இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் ஒட்டு மொத்தமான குரல்”12 ஆண்டாள் மூலமாக  வெளிப்பட்டிருக்கிறது எனலாம்.

பெண்ணுடல் குறித்து ஆண்வழிச் சமூக முறைமைகள் கட்டியெழுப்பியிருந்த கலாச்சாரக் கூறுகளையெல்லாம் தகர்க்கும் போக்கை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக் கவிதைகளில் காணமுடிகின்றது. பெண்ணின் உடல் இன்பம் குறித்தும், பெண்ணுடலின் காமவேட்கை குறித்தும் ஆண்டாள் முன்வைக்கும் உணர்ச்சி நிலைகள் பெண்ணின் இயற்கை சார்ந்த உயிரியல் கூறாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்விதச் செயற்கைப் புனைவுகளும் அல்லாமல், இயல்பான பெண்ணுடல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இயல்பென்று கருதியேதான் ஆண்டாள் தன்னுடைய உணர்ச்சிகளைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.

பெண்ணின் காதல் அனுபவமும் உடல் வேட்கையும் இயல்பென்று கருதியதால் வெளிப்பட்ட ஆண்டாளின் படைப்பாளுமை ஒரு மீறலைச் சாதித்திருக்கின்றது. இத்தகைய மீறலை “பெண் பாலருக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஒழுக்க நடவடிக்கைகளுக்கும், சமூகத் தடைகளுக்கும் எதிராகப் பிரஞ்ஞை பூர்வமாகக் காட்டப்படும் மீறல் என்றும் சொல்லலாம்”13 என்கிறார் செல்வி திருச்சந்திரன். இங்கு, பெண்ணின் உடல் மூலமான அனுபவத்தை இயற்கை சார்ந்த அனுபவமாகக் கருதும் போக்கு ஆண்டாளிடம் காணப்பட்டதனால்தான் அம்மீறலை உணர்வுப்  பூர்வமாகச் சாதிக்க முடிந்திருக்கிறது.

பெண்ணுடல் குறித்துப் பேசுவதில், குறிப்பாகப் பாலியல் நிலைகளில் பெண்ணுடல் அனுபவத்தைப் பேசுதல் பெண்ணுக்கு விலக்கப்பட்டதாக இருந்த சூழலில், பாலியல் குறித்து; பாலியல் உந்துதலைக் கொண்ட பெண்ணுடல் குறித்து; பெண்ணுடலுக்குள் நிகழும் பாலியல் கிளர்ச்சிகள் குறித்து; பாலியல் துய்ப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ளும் போக்கு பெண்களுக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், பெண்ணுடல் அனுபவங்களைக் கவிதையாக்கி, அவற்றைப் பொதுவெளி பகிர்வுக்குக் கொண்டு வந்து மகிழ்ச்சி பொங்க -உணர்ச்சிகள் ததும்ப உலவவிட்டிருக்கும் புதுமரபை ஆண்டாள் முன்வைக்கிறார். இவ்வாறு பெண்ணுடலைப் பெண்ணுக்குச் சொந்தமாக்கியிருப்பதன் மூலம், ஆணுக்குச் சொந்தமானதல்ல பெண்ணுடல் என்ற மாற்றுக் குரலை அவர் முன்வைக்கிறார்.
அச்சமும் நாணும் மடனும் முந்துறந்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொல்.பொரு.96) என்றும்,
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் (தொல்.பொரு.106)
என்றும் பெண்மையின் குணங்களாகச் சொல்லப்பட்டதற்கு மாற்றாக, தனக்கு வெட்கம் என்பது தேவையில்லை என்ற மாற்றுக்குரலை
நாணி இனியோர் கருமமில்லை
நால் அயலாரும் அறிந்தொழிந்தார் (நா.திரு.12:2)
என வெளிப்படுத்துகிறார்.

      ஆண்டாளின் திருப்பாவைக் கவிதைகள் பேதைச் சிறுமி நிலையில் பாடப்பட்டவை அல்ல. பெண்ணின் இளம்பருவத்துக் காதல் உணர்வுகள்தான் திருப்பாவைக் கவிதைகளாக ஆகியுள்ளன. திருப்பாவையில் சொல்லப்பட்ட காதலின் நீட்சியாகத்தான் நாச்சியார் திருமொழிக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. திருப்பாவையில் பெண்ணின் காதல் நிலையினையும், நாச்சியார் திருமொழியில் காதல் முற்றிய பெண்ணின் காம வேட்கை நிலையினையும் காணமுடியும்.
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி (நா.திரு.1:2)
கொத்தலர்  பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரேழுதி (நா.திரு.1:3)
என, காதல் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதலரின் பெயரை எழுதி எழுதிப் பார்க்கும் காதல் மனத்தின் செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்துகிறார். திருமாலையே தன் காதலராக நினைத்துக் கிடக்கும் ஆண்டாள், அக்காதல் நோயால் பெண்ணுடல் எதிர்கொள்ளும் மாறுபாடுகளையும், அமைதியின்றித் தவிக்கும் மனக் கோலங்களையும் இயல்பான பெண்ணுணர்ச்சியிலே வெளிப்படுத்துகிறார்.
மாசுடை உடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்த ஒரு போது உண்டு (நா.திரு.1:8)
என்கிறார் ஆண்டாள். திருமாலை அடைய வேண்டுமென்று நீராடச் சென்ற ஆண்டாள், இப்போது நீராடாமல் இருப்பதும், பூக்களைச் சூடாமல் தலைவிரிக் கோலத்திலிருப்பதும், ஒரு வேளை மட்டுமே உண்பதும், வாய்கூட வெளுத்துப் போனதும் திருமாலை நினைத்துத்தான். மேலும்,
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உள்மெலிவும்-(நா.திரு.12:7)
தமக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார். காதல் முற்றிப்போனதின் அறிகுறிதான் இவ்வெளிப்பாடுகள். காதல் நோயால் அவதியுறும் ஆண்டாளின்  மனத்துடிப்புகள் மற்றவருக்கு  அறிய வாய்ப்பில்லை. அவரவரின் அவதி அவரவருக்குத்தானே தெரியும் என்பதை
ஆர்க்குமென் நோய் இது அறியலாகாது (நா.திரு12:5)
என வெளிப்படுத்துகிறார். காதலால் அவதியுறும் பெண்ணின் கனவிலும் வேறென்ன தோன்றப் போகிறது. நனவிலே கைகூடாதவை நனவிலியில் கைகூடுவதுபோலத் தோன்றும். அந்நனவிலி மனதின் வெளிப்பாட்டைத்தான்
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை  புகுதக் கனாக் கண்டேன் தோழி நான் (நா.திரு.6:2)
என்கிறார். திருமாலைக் கூடநினைப்பதின் கனவு வெளிப்பாடு இது.இங்கு கமுகு என்பதும், பாளை என்பதும் குழைதள்ளக் கூடியவை. பெண் தன்மை கொண்டிருப்பவை. காளை என்பது ஆணுக்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது. பெண்ணுடல் மீது ஆணுடல் புகும் வேட்கை விருப்பம்தான் கனவில் குறியீட்டுப் பொருளாய்த் தோன்றுகின்றது. நனவிலியில் தோன்றும் குறியீடுகளைத்தான் கவிதைப் பொருளாக்கியிருக்கிறார் ஆண்டாள்.
காதல்வயப்பட்ட பெண்ணின் மனம் முதலில் நினைப்பையும்,கனவையும் வேட்கையையும், உடல்துயரத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தக் கூடியது. பெண்ணின் மனத்தை மட்டுமல்ல, உடலையும் காதலருக்கென்றே ஒப்படைத்துவிட்ட பெண்ணின் மனநிலையை ஆண்டாளின் கவிதையிலே காணமுடியும்.
........... ஆதரித்து  எழுந்த என்தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் (நா.திரு.1:4)
என்கிறார். அது மட்டுமல்லாமல், தமது காதலருக்கென்றே தமது உடல் வளர;ந்திருப்பதாகக் கருதுகிறார். அதனால்தான்,
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள் (நா.திரு.1:5)
என்று குறிப்பிடுகிறார். தனது உடல் உறுப்புகள் குறித்து மிக இயல்பாகச் சொல்லிக் கொண்டு போதலை இங்கு கவனிக்கலாம்.

காதல் முற்றி காமம் அதிகரிக்கத் தொடங்குகின்றது. பாலியல் துய்ப்புக்கான நாட்டமும் வேட்கையும் பெண்ணுடலுக்குள் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியவை. காதலும் காமமும் பெண்ணின் உடல் - மனமெங்கும் பரவியதால் வேட்கை நிரம்பிய உடலை ஆணின் உடல் வந்து தணிக்க வேண்டும் என்ற பெண்ணின் உடல் கிளர்ச்சியை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.அதை,
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர்
ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும் (நா.திரு.5:7)
என வெளிப்படுத்துகிறார். பாலியல் துய்ப்பின் விருப்பமும், அதனால் உண்டான உடல் கிளர்ச்சியும் இங்கு கவிதையாக ஆக்கப்பட்டிருக்கிறது. பாலியல் துய்ப்பின் விருப்பம் வேறொரு கவிதையிலும் வெளிப்பட்டிருக்கிறது.
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து (நா.திரு.8:7)
என, பெண் ஆண் உடல்கலப்பு நிகழ்வை வேண்டிநிற்கிறது கவிதை. பெண்ணின் பாலியல் நாட்டத்தைத் துளியளவும் இயற்கை மாறாமல் தந்திருக்கிறது ஆண்டாளின் கவிதைமொழி. நனவு நிலையில் பாலியல் துய்ப்பு கிடைக்கப் பெறாதபோது, நனவிலி நிலையில் துய்த்துக் கொள்ளும் பெண்ணின் மனநிலையை ஆண்டாள் பதிவு செய்துள்ளார்.
.....எம்மை
உடைமாடு கொண்டான் ..... (நா.திரு.10:7) எனவும்,
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் நானும்
அவனும் அறிதும்  (நா.திரு.5:8) என்றும்,
..... என்னானவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று
போகானால் (நா.திரு.13:5)
எனவும் வெளிப்படுத்துகிறார். கனவில் கூடியிருந்த நனவிலி நிலையைப் புலப்படுத்துகையில் ‘கச்சங்கம்’ என்கிறார். கச்சங்கம் என்ற சொல்லுக்கு ‘ஈரமாதல்’ என்ற பொருள் உள்ளதாகக் கூறுகிறார் சு.வேங்கடராமன். புணர்ச்சி வேண்டலை நினைத்துக் கிடக்கும் கனவு நிலையின் போது பெண்ணுக்கு ‘ஈரமாதல்’ என்ற பெண்ணுடலின் நிகழ்வைப் புதிய பதிவாகக் கொணர்ந்திருக்கிறார் ஆண்டாள்.

பெண்ணுடலை ஆண் சுவைத்துப் பார்த்த அனுபவங்களை ஆண் பகிர்ந்து கொண்டிருந்த நிலைக்கு மாற்றாக, பாலியல் துய்ப்பு நிலையில் ஆணுடலைப் பெண் சுவைத்துப் பார்க்க விரும்பியதன் வெளிப்பாட்டை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். அதை
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்திருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்தன்வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்.... (நா.திரு.7:1)
என்கிறார்.
பாலொடு தேன்கலந் தற்றே,பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர் (குறள்1121)
என்ற ஆணின் வாய்ச்சுவை அனுபவத்திற்கு மாற்றாக, பெண்ணின் வாய்ச்சுவை அனுபவ விருப்பம் ஆண்டாள் கவிதையில் வெளிப்படுகின்றது.

பாலியல் துய்ப்புக்கான வேட்கை பெண்ணின் உடலெங்கும் பரவியதால் காமத்தீ சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்க, வேட்கையுற்ற உடல் அவதியைத் தமது கவிதையில் வெளிப்படுத்தும்போது
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
அற்ற குற்றம் அவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே (நா.திரு.13:7)
என்பதின் மூலம் பெண்ணின் முலைகள் படும் துயரத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் பெண்ணின் காமத்துயர் உச்சத்தை அடையும்போதும், பாலியல் துய்ப்பு நிறைவேறாதபோதும்,
உள்ளே உருகி நைவேனை உளளோஇலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்பிலெறிந்து என் அழலைத் தீர்வேனே
(நா.திரு.13:8)
என்று உரக்கச் சொல்கிறார். பாலியல் துய்ப்பு நிறைவேறாத ஆற்றாமையின் வெளிப் பாடாகவே அவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

பெண்ணின் காதல் உணர்ச்சியும் காம வேட்கையும் பெண்ணின் முலைகளில் மய்யம் கொண்டிருப்பன என்பதை ஆண்டாள் கவிதைகள்வழியும் அறிய முடிகின்றது. காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மனத் தவிப்புகளும் - துயரங்களும் - வேட்கைகளும் - காமத் தவிப்புகளும் -ஆற்றாமை உணர்வுகளும் எவ்விதத் தடைகளுமற்று பெண்ணின் உணர்ச்சிகளாலே பெண்நிலை சார்ந்து வெளிப்படுத்தும் பெண் ஆளுமை ஆண்டாளிடம் காணப்படுகின்றது.

ஆண்டாளின் கவிதைகள் பக்திச் சாயலைக் கொண்டிருப்பினும், காதலை உரக்கப் பேசியிருப்பதும், பெண்ணுடல் அனுபவத்தைப் பரக்கப் பேசியிருப்பதும் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளாகும். அவ்வகையில், ஆண்டாளின் கவிதைகள் ஒரு மீறலையும் - எதிர்ப்பையும் -மாற்றையும் கொண்ட படைப்பாளுமை நிறைந்தவை எனக் குறிப்பிடலாம்.

ஆண்டாளின் கவிதைகளில் காணலாகும் சுதந்திரத் தன்மையை வைத்துக்கொண்டு ஆண்டாளை ஒரு தேவதாசிப் பெண்ணாகப் பார்க்கும் போக்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆண்டாள் திருவரங்கக் கோயிலில் உள்ள திருமாலோடு போய்ச்சர்ந்தார் என்ற புனைவையும், திருவரங்கனோடு தன்னைச் சேர்த்து விடுங்கள் என்ற ஆண்டாளின் புலம்பலையும் வைத்துக் கொண்டு ஆண்டாளைத் தேவதாசிப் பெண்ணாகக் கருதும் நிலை ஆய்வாளர்கள் சிலரிடம் காணப்படுகின்றது.

“Andal was herself a devadasi who lived and died in the srirangam temple. There is atradition that Kulasekara Alvar's daughter Nila, was presented to srirangam temple as devadasi. She called cerakula Nachiyar and shrine dedicated to her us found in this temple.(p.47 malik Ed.); Indian movement: some aspects of dissent, protest and reform, 1978)”14  என ஆண்டாளைத் தேவதாசிப் பெண்ணாக மதிப்பிடும் போக்கு வெளிப்பட்டிருக்கிறது..

பாலியல் குறித்த வெளிப்பாட்டுச் சுதந்திரம் தேவதாசிப் பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. அச்சுதந்திரம் தேவதாசிப் பெண்களுக்கு மட்டுமே என வரையறுப்பதுகூட, மற்ற பெண்களின் படைப்புச் சுதந்திரத்தைக் கட்டம்கட்டி முடக்கிப்போடும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். ஆண்டாள் தேவதாசிப் பெண்ணாக இருந்திருந்தால் அவருடைய கவிதைகளிலே வெளிப்பட்டிருக்கக்கூடும். ஆனால், அதைப்பற்றிய குறிப்புகள் அகச்சான்றுகளாகவோ புறச்சான்றுகளாகவோ கிடைக்கப்பெறவில்லை. வெறும்  அனுமானத்தின் அடிப்படையில் வரையறுப்பது ஆய்வுக்குப் பொருத்தமானதல்ல.

தேவதாசிப் பெண்கள் விரும்பாமலோ விரும்பியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பாலியல் துய்ப்பு உறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தேவதாசிப் பெண்களின் வெளிப்பாடுகளில் அத்தகைய அனுபவங்கள் வெளிப்படக்கூடும். ஆனால், ஆண்டாளின் கவிதைகளில் பாலியல் துய்ப்பு உறவு நிகழ்ந்ததற்கான எந்தக் குறிப்பும் இல்லை. பாலியல் துய்ப்பு விருப்பம் குறித்தும், நனவிலி மனதில் தோன்றிய நிறைவேறியதான பாலியல் துய்ப்பு குறித்தும்தான் ஆண்டாள் கவிதைகளில் காணமுடிகிறது.

ஆகவே, ஆண்டாள் தேவதாசி மரபைச் சார்ந்த பெண்ணல்ல என்பதைத் திட்டவட்டமாகக் கருதலாம்.

ஆண்டாள் தேவதாசிப் பெண்ணாக அல்லாமல், மானுடப் பெண்ணாகப் பிறந்து பக்திநிலையில் காதலையும் காமத்தையும் பாடுகிறார். அக்காலச் சமூக மரபுகளுக்கும் இலக்கிய மரபுகளுக்கும் மாற்றாக அவருடைய கவிதைகள் அமைந்திருக்கின்றன. இந்த மாற்று மரபின் தொடக்கம் பெண்ணாக இருத்தல் கூடாது என்பதற்காகவே, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழிக் கவிதைகளைப் பெரியாழ்வார் என்னும் ஆணால் எழுதப்பட்டவை என்ற கருத்தை மரபுவழி ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அவ்வகையில் “ஆண்டாள் கற்பனைப் பாத்திரமே என்றும், ப்ம்மைெர்பியாழ்வாரே பெண்ணாக வரித்துக்கொண்டு பாடிய பாசுரங்களே திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் என்றும் இராஜாஜி, டி.கே.சி., உட்பட பலர் வாதித்தது உண்டு”.15 மேலும், “காதலின் படுவேகத்தைக் குறிக்கும் பெரியாழ்வார் திருமொழிப் பகுதியே நாச்சியார் திருமொழி என்று வழங்கப்பெற்று, நாளடைவில் கோதை நாச்சியார் ஓர் உண்மையான பெண்மணியாவும்,வேறொரு பக்த மணியாகவும் கருதப்பெற்றிருக்க வேண்டும்”16 என மரபுவழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காலந்தோறும் பெண்ணைப் பேசவிடாமல் ஊமையாக்க விரும்பும் ஆணாதிக்கத்தின் உச்சவெளிப்பாடுதான் அக்கருத்தாக அமைந்திருக்கின்றது. அடங்கிக் கிடக்கும் பெண் பாடவே மாட்டார், பாடவும் கூடாது என்று கருதியதின் வெளிப்பாடாகவே அவர்களின் கருத்தாய் வெளிப்படுகின்றது எனலாம்.

பெண்ணுடல் குறித்து ஆண் பாடுவதற்கும், பெண்ணுடல் குறித்துப் பெண் பாடுவதற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. பெண்ணுடல் குறித்து ஆண்டாள் பாடிய கவிதைகள் அசல் பெண் தன்மை கொண்டவை. மேலும், பெண்ணின் நனவிலி மனதின் வெளிப்பாடுகளைப் பெண்ணால் மட்டுமே வெளிக்கொணர முடியும். அந்தவகையில் ஆண்டாள் கவிதைகள் சமயம் கடந்த அழகியலையும், உலகியல் இசைந்த காதலையும் கொண்ட பெண்ணின் அகவெளியைப் பெண்நிலை சார்ந்து வெளிப் படுத்தியுள்ளன எனலாம்.

குறிப்புகள்:

1. பெரியவாச்சான் பிள்ளை, திருப்பாவை மூவாயிரப்படி அவதாரிகை,
    கிருஷ்ண ஸ்வாமி அய்யங்கார் (ப.ஆ)., திருப்பாவை வ்யாக்யானங்கள், ப.10
2. பிரேம் (க.ஆ)., பக்தி காதல் காமம் பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள்,
மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி(தொ.ஆ)., அணங்கு,  ப.85
3. வேங்கடராமன்.சு.,(க.ஆ), ஆண்டாள், சுப்பிரமணியன்.ச.வே., மெய்யப்பன்.ச.,(ப.ஆ)., தமிழ்ப் பெருங்கவிஞர்,தொகுதி ஒன்று, ப.134
4. சுசீலா.எம்.ஏ., தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும், பக்13,14
5. வேங்கடராமன்.சு.,(க.ஆ), மு.கூ.நூ, ப.135
6. செல்வி திருச்சந்திரன்; தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில்
ஒரு பெண்நிலை நோக்கு, ப.54
7. சதாரா மாலதி, உயர்பாவை, ப.156
8. மேலது, ப.10
9. வேங்கடராமன்.சு.(க.ஆ)., மு.கூ.நூ., ப.135
10. சதாரா மாலதி. மு.கூ.நூ., ப.156
11. வேங்கடராமன்.சு.,(க.ஆ)., மு.கூ.நூ., ப.135
12. மேலது, ப.138
13. செல்வி திருச்சந்திரன், மு.கூ.நூ., ப.56
14. மேற்கோள்: கண்ணன்.எஸ்., பெரியாழ்வார் ஆண்டாள் பாசுரங்கள்
சமூக சமயப் பண்பாட்டு ஆய்வு, ப.19
15. மேலது, ப.17
16. மேற்கோள்: பாலசுப்பிரமணியன்.சி., ஆண்டாள், ப.50