செவ்வாய், 22 ஜனவரி, 2019

கல்விப்புல ஆய்வரங்கில் சொல் நிலம் : மு.செல்லமுத்து




மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் தமிழியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திரு மு.செல்லமுத்து அவர்கள், எனது கவிதைத் தொகுப்பான சொல்நிலம்  நூல் அறிமுகத்தை முன்வைத்துப் பேசியதன் சாரம்.

ஏர் மகாராசன்  மதுரைக்கு அருகிலிருக்கும் சின்ன உடைப்பு என்னும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேளாண்மை. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, தொல்லியல்,சூழலியல், தமிழியல், மாற்று அரசியல், எளிய மக்களின் வாழ்வியல் அசைவுகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றுகிறவர். தொன்மை பாதுகாப்பு மன்றம், மக்கள் தமிழ் ஆய்வரண், ஏர் இதழ் போன்று ஈடுபாட்டோடு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியராகவும், தற்போது ஒரு பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுவதாகவும் இந்நூலாசிரியர் குறித்த அறிமுகத்தை முதலில் தெளிவுபடுத்தினார். பின்னர், இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருந்தது போல்,

“நனவிலும் கனவிலும்
 பாடாய்ப் படுத்தும்
 நினைவுகள்,
 இப்படியான
 கவிதைகளில் தானே
 செழித்து நிற்கின்றன”
என்ற வரிகளை நினைவுகூர்ந்தார்.

 இந்நூலில் கருச்சொல், நிழல் வனம், கூதிர்காலம், அகக் கண்ணர்கள், அலை நிலத்து அழுகை, கெடுநகர், நிலப்படுகொலை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலை, மனங்கொத்தி, அழுகைத்தமிழ், ஆயுட்காலம், அறத்தீ மனிதர்கள், ஈழப்பனையும் குருவிகளும், உறவுக்கூடு, துயர்ப்படலம், ஆழிமுகம், செந்நெல் மனிதர்கள், பாழ்மனம், ஈசப்பால் போன்ற பல்வேறு பாடுபொருளில் தலைசிறந்த 52 கவிதைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்நூலாசிரியர் மானுட சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சனைகள் பலவற்றைக் கவிதைகளாக்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."
என்கிற கவிதை வரிகளைக் கோடிட்டுக்காட்டி, விவசாயத்தை தன் குலத்தொழிலாக ஏற்று தன் மண்ணையும் அதுசார்ந்த மக்களையும் பெரிதும் நேசிப்பவராக வாழ்கிறார் எனவும், சமூகத்தின் மீதான தனது சிந்தனைகளை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைக் கொள்கையில் நின்று பேசியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

சொல்நிலம் என்கிற இக்கவிதைத் தொகுப்பனாது பல்வேறு பார்வையில் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஓரு நல்ல இலக்கியப்படைப்பு எனவும் குறிப்பிட்டார்.

        எந்தவொரு படைப்பாளியும் தன் படைப்பில் அடையவேண்டிய உச்சநிலையை நோக்கியே பயணப்படுவர். இலக்கியவாசிப்பில் பெரும் ஈடுபாட்டோடு செயல்படும் வாசகர்களின் மனங்களில் அவ்வாறான படைப்புகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.

 தொல்காப்பியம், சங்கஇலக்கியம், நவீனவாசிப்பு போன்ற பல்வேறு தமிழிலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்து இந்நூலாசிரியர் தனது படைப்பின் பாடுபொருளை திட்டமிட்டு கவிதைகளாக்கியுள்ளார் எனத் தாம் உணர்ந்ததாகவும் அவையில் குறிப்பிட்டார். தான் பிறந்த சிவகங்கை மாவட்ட வட்டார வழக்கிலும் கவிதைகள் புனையப்பட்டுள்ளன என்றும், இவரது கவிதைகள், வாசிக்கும் வாசகனுக்கு புதிய புதிய விளக்கங்களைத் தருவதால் இப்படைப்பு நிச்சயம் காலம்கடந்தும் பேசப்படும் எனவும் குறிப்பிட்டார்.

 எண்ணற்ற பதிப்புக்களைக் கண்ட ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற கவிதைத்தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா,

 “இந்த பூமி உருண்டையை
 புரட்டிவிடக்கூடிய
 நெம்புகோல் கவிதையை
 உங்களில் யார் படைக்கப்போகிறீர்கள்”

என்ற வினாவை எழுப்பியிருந்ததாகவும், ‘சொல்நிலம்’ என்ற கவிதைத்தொகுப்பின் வழி கவிஞர் ஏர் மகாராசன் அதைச்செய்ய முயன்றுள்ளார் எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். எனவே, இந்நூல் முயற்சி பாராட்டத்தகும் என்கிற அடிப்படையில் இவரது நூல் அறிமுகம் அமைந்திருந்தது.

எண்ணற்ற கலந்துரையாடலோடு இறுதிவரை அரங்கமும் இன்புற்றிருந்தது. திட்டமிட்டவாறு நிகழ்வும் இனிதே நிறைவடைந்தது.

சனி, 12 ஜனவரி, 2019

உழைப்பின் உற்பத்தியே மொழி : மகாராசன்


அய்வகை வெளிகள் சூழ்ந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்கிற நிலப்பகுதியிலே சமூகவெளி அமைந்திருக்கிறது. இச்சமூக வெளியானது முற்றுமுழுதான ஒருமித்த கூறுகளால்  ஆனதல்ல. எண்ணற்ற இனக்குழுக்களும், பல்வேறு தேசிய இனங்களும் தமக்கான எல்லைக்  கோடுகளை வகுத்துக்கொண்டு தனித்த அடையாளங்களோடு திகழ்கின்றன. இவ்வாறான வெவ்வேறுபட்ட கூறுகளைக் கொண்டதாகச் சமூகவெளி அமைந்திருப்பினும், மொழி அல்லாமல் சமூக வெளியின் இயக்கம் இல்லை; சமூகவெளி அல்லாமலும் மொழியின் இயங்குதல் இல்லை. ஆக, சமூகத்திற்கும் மொழிக்கும் இயங்குதல் நிலையில் பிணைப்பு உண்டு.

சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது. மொழியின் இயங்கியல் என்பது மனிதகுல வரலாற்றோடு சேர்ந்த இருகோட்டுப்பாதையாக அமைந்திருக்கிறது. மனித சமூகத்தில் புழங்கிவரும் மொழியின் தோற்றம் குறித்துப் பல்வேறு விவரிப்புகள் உள்ளன.

மொழி குறித்து நிலவும் இவ்விவரிப்புகளில் இருவகைப் போக்குகள் காணப்படுகின்றன. அதாவது, மனிதர்களுக்கிடையில் கருத்தைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படும் ஒரு கருவியாக  மட்டுமே  மொழியைக் கருதும் நிலையும், உயிரோடும் உணர்வோடும் தொடர்புபடுத்தப்பட்டு அதீதப் புனிதத்தோடு மொழியைக் கருதுவதும் சமூகத்தில் இருந்து  கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மொழி குறித்த அறிவியல் வழிப்பட்ட சமூகவியல்  சிந்தனைகள் இதுவரையிலும் நிலவுகிற மொழி குறித்தக் கருத்துப் படிமங்களிலிருந்து  வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஒரு சமூகத்தின் இயங்கியல் என்பது மனிதர்களை மய்யமிட்டுத்தான் அமைந்திருக்கின்றது. அதனால்தான், ‘மனித வரலாற்றின் முதல் நிபந்தனையாக உயிருள்ள தனி மனிதர்கள் இருக்க வேண்டும்’ என்கின்றனர் மார்க்சும் எங்கெல்சும். மனிதகுலத்தின் தோற்றம் குறித்து இருவேறு கருத்துருவங்கள் நிலவுகின்றன. நம்பிக்கை சார்ந்த மெய்ப்பிக்க இயலாமற்போகிற கருத்து முதல்வாதச் சிந்தனைகள் ஒரு புறமும், அறிவியல்வழி மெய்ப்பிக்கப்பட்ட / மெய்ப்பிக்க ஏதுவாக உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இன்னொரு புறமுமாக விரிந்த அளவிலே விவரிப்புகளை முன்வைக்கின்றன.

பூமியை மய்யமாகக் கொண்டுதான் சூரியன் உள்ளிட்ட அனைத்துக் கோள்களும் சுழல்கின்றன எனும் ‘பூமி மய்யக் கொள்கை’ பதினாறாம் நூற்றாண்டு வரையிலும் சமூகத்தில் நிலவி வந்தது. இக்கொள்கைக்கு மாற்றாகக் ‘கதிர்மய்யக் கொள்கை’யை  ‘வானக்கோள்களின் சுற்றுகள்’ (Derevolutionibus oribum conelestum) எனும் நூலின் வழியாக அறிவித்தவர் கோபர்  நிக்கஸ் எனும் இயற்பியல் அறிஞர்.

‘பூமி உருண்டையானது; அது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ எனச் சொன்ன கோபர் நிக்கசின் கதிர்மய்யக் கொள்கையானது, இயற்கை விஞ்ஞானம் தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்த புரட்சிகரமான செயலாக இருந்தது என்பார் எங்கெல்ஸ்.

இதைப்போலவே, ‘ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிகளாகப் பரிணமித்துத் தாவரங்களும் விலங்குகளும் தோன்றுகின்றன’ என்பதை விளக்கும் வகையில் ‘இயற்கைத் தேர்வின் மூலம் இன வகைகளின் தோற்றம் பற்றி ’ எனும் நூல் சார்லஸ் டார்வின் எனும் அறிஞரால் முன் வைக்கப்பட்டது. டார்வின் விளக்கிய அப்பரிணாமக் கோட்பாடானது, பரிணாமக் கருத்துகளின் வளர்ச்சியை நிறைவாக்குவதாகவும் நவீன உயிரியலின்  அடித்தளமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மனிதர் விலங்குலகிலிருந்து, குறிப்பாக மனிதக் குரங்கிலிருந்து தோன்றினர் எனும் டார்வினின் கண்டுபிடிப்பானது, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் நிலவிய கருத்துகளின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், டார்வின் போதனை அக்காலத்தில் மனிதன் தோற்றம் பற்றி நிலவிய கருத்துகளில் ஒரு புரட்சியைக் குறித்தது என்கிறார் இ.லி.அந்திரேயெவ்.

மனிதகுலத் தோற்றம் குறித்து நிலவிய கருத்து முதல்வாதச்   சிந்தனைகளுக்கு நடுவே, டார்வின் தத்துவமானது இயக்கவியல் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் உருக்கொள்வதற்கான இயற்கை அறிவியல் காரணிகளில் ஒன்றாகவும் அமைந்திருந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றிய பரிணாம வளர்ச்சிக்கு இயற்கைக் காரணிகள் வழிகோலியிருக்கின்றன. குரங்கிலிருந்து மனிதராக மாறிய இடைநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதற்குப் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. வேறெந்த வெளிச்சக்திகளின் தலையீடும் இல்லாமல் தாவரங்களும் விலங்குகளும் தோன்றியிருக்கின்றன. இத்தகைய ‘தாவரங்களும் விலங்குகளும் வாழ்வதற்கு உகந்த வகையில் போதுமான அளவுக்குப் பூமி குளிர்ச்சியடையப் பத்து கோடி ஆண்டுகளுக்கும் சிறிது அதிகமாகவே கடந்துள்ளன’ என்கிறார் வில்லியம் தாம்சன் எனும் இயற்பியல் அறிஞர். ஆகவே, குரங்கிலிருந்து மனிதக் குரங்கிற்கும், மனிதக் குரங்கிலிருந்து மனிதராகவும் தோன்றுவதற்கு இலட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றிருக்க வேண்டும்.

நீண்ட நெடிய காலகட்டத்தின் மிக முக்கியமான படிநிலை வளர்ச்சியாக முதல் தாவரங்களும் முதல் விலங்குகளும் தோன்றியதை அடுத்து, ‘முதல் விலங்குகளிலிருந்து பிரதானமாகப்  பின்வந்த வேறுபாடுகளினால் அனேக வகைகள், வரிசை முறைகள், குடும்பங்கள், வம்சங்கள், இனங்களான விலங்குகள் தோன்றி வளர்ந்தன. கடைசியாக நரம்பு மண்டலம் முழுவளர்ச்சி பெற்ற முதுகெலும்புள்ள விலங்குகளும் தோன்றின. இவைகளின் மத்தியிலிருந்து இறுதியாக இயற்கை தன்னைத்தானே உணரும் சக்தி பெற்ற முதுகெலும்புள்ள விலங்கான மனிதனும் தோன்றினான்’ எனும்போது, மனிதத் தோற்றம்  என்பது  திடுதிப்பென்ற தோற்றமாகக் கருத முடியாது. மனிதர் பல்வேறு வரலாற்று வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்தே தோற்றம் கொண்ட உயிரி என்பதாகத்தான் சமூக வரலாற்றுத் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.

மனிதக் குரங்கினத்திலிருந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்பதற்காக, மனிதக் குரங்கினத்தையும் மனித இனத்தையும் ஒரே மாதிரியாக வரையறுக்க முடியாது. குரங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன. ‘உழைப்பில்தான் மனித சமூகத்திற்கும் குரங்குகளின் கூட்டத்திற்கும் இடையிலான வேறுபாடு அடங்கியுள்ளது’. மனிதக் கூட்டத்தைப் போலவே குரங்கினங்களும் உயிர் வாழ்கின்றன. ஆனால், உயிர் வாழ்வுக்குத் தேவையானவற்றைக் குரங்கினங்கள் உற்பத்தி செய்வது கிடையாது. இயற்கை வழங்கியுள்ளவற்றில் தமக்குத் தேவையானதைக் கண்டடைந்தோ அல்லது தேடியலைந்தோ எடுத்துக் கொள்ளும் அவ்வளவுதான். குரங்கினங்கள் இனப்பெருக்க உற்பத்தியைத் தவிர வேறெந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. இதனாலேயே மனித இனம் குரங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அதாவது, மனித இனம் குரங்கினத்திலிருந்து விலகி ‘நிமிர்ந்து நேராக நடப்பதற்கு மாறியதுதான் உயிரியல் ரீதியாக முதன்மையான அம்சமாகும்’எனலாம்.

நிமிர்ந்து நடக்கும் தன்மையைப் பெற்றதன் காரணமாகவே தனக்குத் தேவையான உணவு ஆதாரங்களைத் தேடியும், தன்னைச் சுற்றியுள்ள இயற்கை சார்ந்த பொருட்களின் மீது கவனத்தைச் செலுத்தியும் மனித இனம் உயிர் வாழ்கின்றது. மேலும், ‘பாதத்திலிருந்து கை வேறுபாடு அடைவது என்பதும், நிமிர்ந்த நடை என்பதும் தோற்றம் பெற்றதால் மனிதக் குரங்கிலிருந்து மனிதன் வேறுபட்டு நின்றான்’. ஆக, குரங்கினத்திற்கும் மனித இனத்திற்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று, நடப்பதற்குப் பயன்பட்ட முன்னங்கால்கள் மனித  இனத்திற்குக் கைகளாக ஆகியிருப்பதுதான்.

இந்தக் கைகள்தான் மனித ‘வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் சாதனமாகவும், பற்களுக்கு அடுத்தபடியாக முதல் இயற்கை உழைப்புக் கருவியாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது’. கைகள்தான் மனித சமூக வளர்ச்சியின் முதல் கட்டமாகும். இந்தக் கைகளே உழைப்பைச் செலுத்துவதற்குத் தோற்றுவாயாக அமைந்தன.

கையின் வளர்ச்சியுடனும் அதன் உதவியுடனும் இயற்கை மீது வினைபுரியத் தொடங்கும் போதுதான் உழைப்பு தொடங்குகிறது. இதனால், ‘இயற்கையின் மீது ஆளுகை கொள்வது தொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடைய அறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருட்களின் அதுவரை அறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போல அவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பர ஆதரவு, கூட்டுச்செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்; ஒவ்வொரு தனிநபருக்கும் இவ்விதக் கூட்டுச்செயலின் நல்லாதாயத்தைத் தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடிவர உழைப்பின் வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது’. ஆக, மனித இன அறிவு வளர்ச்சிக்கும் கூட்டுணர்வுக்கும் அடித்தளமாக இருப்பது உணவு ஆதாரங்களுக்காக மேற்கொண்ட உழைப்புதான். இவ்வுழைப்புதான் குரங்கினத்திலிருந்து மனிதரை வேறுபடுத்திக் காண்பிக்கிறது எனலாம்.

மனித சமூக வாழ்நிலைக்கு, குறிப்பாக உணவு ஆதார நிலைகளுக்கு அடிப்படையாக இருப்பது உழைப்புதான். கற்களைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுதலும், நெருப்பை உண்டாக்குதலும், கூர்நகங்களையும் பற்களையும் பயன்படுத்தலும் உழைப்பின் ஆரம்ப வடிவங்கள் எனலாம். இந்த ‘உழைப்பின் ஆரம்ப வடிவங்களிலேயே கூட்டு நடவடிக்கை, கூட்டுறவு இன்றி உழைப்பு சாத்தியமில்லை’.  ஏனெனில், இயற்கைச் சீற்றங்களில் இருந்தும்,  கொடிய விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு   மட்டுமல்லாமல், தனக்குத் தேவையான உணவு ஆதாரங்களை வேட்டையாடுவதற்கும் பிற மனிதர்களின் கூட்டுறவு தேவைப்படுகிறது. இதனால் தன்னை ஒத்த மனிதர்களுடன் ஒத்துழைத்துச் செயல்படும் குணத்தால் மனிதர்கள் ஒருங்கிணைகிறார்கள்.

ஆக, ‘மனிதனாக மாறுவதற்கும் மனிதனாக இருப்பதற்கும் செயற்கைக் கருவிகளை வைத்திருப்பது மட்டும் போதாது. அவனுக்கு மற்ற மனிதர்கள் தேவை. அவர்களுக்கும் அவன் தேவை. இதுதான்  உழைப்பிற்கான கண்டிப்பான முன் நிபந்தனை’ என இருக்கும்போது, மனிதக் குழுக்களும் கூட்டுகளும் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகிறது. இவ்வாறாக, ‘உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவை என்பது ஓர் உறுப்பைப் படைத்தது. மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத குரல்வளை மெதுவாக, ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் (Modulation) மூலம் இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்ய மாற்றியமைக்கப்பட்டது. வாயின் உறுப்புகள் படிப்படியாக ஓர் தீர்க்கமான ஒலிக்குப்பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டன’. இந்நிலையில், சக மனிதர்களை இணைப்பதற்கும், தங்களின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும்,  தமக்கு ஏற்படும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கும் ஏதோ ஒன்று  தேவைப்பட்ட நிலையில் பேச்சுதான் அவர்களுக்குக் கை கொடுக்கிறது.

ஆக, விலங்குகளுக்கு வாய்க்காத இப்பேச்சு வடிவம்தான் மனிதர்களாக இணைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது எனலாம். இந்த மிக முக்கியமான வளர்ச்சிக் கட்டம் குறித்து எங்கெல்சு குறிப்பிடுகையில், முன்னங்கால்கள் கைகளாகவும் குரல்வளை பேசும் உறுப்பாகவும் மாறியதுதான் மனிதப் படிமலர்ச்சியில் ஏற்பட்ட முதல் புரட்சி என்கிறார்.

பேச்சு மனிதரோடு இணைந்த ஒன்று. இந்தப் பேச்சு என்பது தேவையிலிருந்துதான் தோன்றுகிறது. ஏனெனில், ‘உணர்வு போன்றே மொழி மற்ற மனிதர்களுடன் உறவு கொள்வதன் தேவையிலிருந்தே; இன்றியமையாமையிலிருந்தே தோன்றுகிறது’. ஏதோ ஒரு வகையில் மனிதத் தேவைதான் மனிதர்களிடம் பேச்சை உருவாக்குகிறது. உணவு ஆதாரங்களைச் சேமிப்பதற்கும், வேட்டையாடுவதற்கும், கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் மனிதக் கூட்டு என்பது அவசியமானதாக அமைந்து போனதோடு, அம்மனிதர்களிடையே அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதற்கும் ‘பேச்சு’ என்பது தேவையாகி நிற்கிறது.

மனிதக் கூட்டின் மூலமாக நடைபெறக்கூடிய இன்னொரு வினை உற்பத்திச் செயல்பாடு. உழைப்பின் மூலம் வெளிப்படும் உற்பத்திச் செயல்பாட்டை மேற்கொள்கிறபோது மனிதப்பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத வினையாகவும் ஆகிறது. ‘உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூற வேண்டிய அளவுக்கு அது மானுட வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக’ இருப்பதைப்போல, பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத அடிப்படை நிபந்தனையாகவும் அமைந்திருக்கிறது. பேச்சை வெளிப்படுத்தும் மனிதர்களின் இச்செயலானது, இயற்கை வாழ்நிலைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, சமுதாய வாழ்நிலைக்கும் அடிப்படையான தேவையாகவும் முன்நிற்கிறது.

மனிதக் குரலாய் வடிவெடுக்கும் பேச்சு உருவானதற்கு முன்பே மனிதர்களிடையே பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது, உணர்ச்சிகளை - தேவைகளை - தாம் நினைப்பதையெல்லாம் முகபாவனைகள், சைகைகள் வழியாகவும், போலியாக நடித்துக் காட்டுவதன் வாயிலாகவும், பிறருக்கு உணர்த்த வேண்டியதைக் கிறுக்கியும் வரைந்தும் காண்பித்து ஏதோ ஒருவகையில் பரிமாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். இப்பரிமாற்ற நிகழ்வுகளில் புரிந்து கொள்வதிலும் - புரிய வைப்பதிலும் போதாமைகள் ஏற்படும்போது, அப்போதாமைகளை ஈடுசெய்வதன் தேவையிலிருந்தும் ‘பேச்சு’ உருவாகியிருக்க வேண்டும். ஆக, மனிதத் தொடர்புக்கு அவசியம் பேச்சு. இப்பேச்சின் வழியே மனிதக்கூட்டு ஏற்படுகிறது. மனிதக் கூட்டின் செயல்பாடு உழைப்பு; உழைப்பின் வெளிப்பாடு உற்பத்தி நடவடிக்கை என்றாகிறது.

‘முதலில் உழைப்பு, அதன் பின்னரும், பிறகு அத்துடன் சேர்ந்தும் பேச்சு - இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாக மாறியது. மனித மூளை மனிதக் குரங்கின் மூளையை  ஒத்ததாக இருந்த போதிலும், மனிதக் குரங்கின் மூளையைவிட இன்னும் பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின் வளர்ச்சியுடன் கைகோர்த்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியான கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவது என்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போலவே, மூளையின் வளர்ச்சி முழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன’. ஆக, உழைப்பும் பேச்சும்தான் மனிதப் புலன்களின் வளர்ச்சிக்கும் மூளையின் படிப்படியான வளர்ச்சிக்கும்  காரணமாக அமைந்திருக்கின்றன எனலாம்.

மேலும், ‘மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவு பெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன் ஆகியவற்றின் வளர்ச்சி, உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்திய எதிர்ச் செயல்பாடு, உழைப்பு - பேச்சு இவற்றின் கூடுதலான  வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது’ எனலாம்.

மனிதர்களும் சமுதாயமும் தோன்றியது ஒரே நிகழ்ச்சிப் போக்காக அமைந்திருப்பதைப் போலவே, மனித உழைப்பு நடவடிக்கையும் பேச்சும்  ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இயங்கியல் கூறாக அமைந்திருக்கிறது. பேச்சு மனிதக் கூட்டின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. அம்மனிதக் கூட்டின் பரிமாற்றத்திற்கு மட்டும் பேச்சு உதவுவதில்லை. அதற்கும் மேலாக, தொழிலில் - உற்பத்தியில் - உழைப்பில் மனிதர்கள் ஈடுபடும்போதும் உதவுகிறது.

‘மனிதன் தொழிலில் ஈடுபடாது கருவிப் பிரயோகம் பற்றிய அனுபவமில்லாது, மொழியை இயற்கையின் அநுகரணமாகவும் நடவடிக்கைகளையும் பொருட்களையும்  குறிக்கும் சின்னமாகவும் கருத்து நிலையில் தோற்றுவித்திருக்க முடியாது. ஆற்றல் மிக்க ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டதான சொற்களை மனிதன் தோற்றுவித்ததற்குக் காரணம், அவன் வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம் முதலிய மெய்ப்பாடுகளுக்கு ஆட்படுபவன் என்பதால் மாத்திரமன்று, அவன் தொழில் செய்யும் உயிரினம் என்பதாலுமாகும்’ என ஏண்ஸ்ற் ஃபிஷர் கூறுவதிலிருந்து, உழைப்புடன் மனிதர்கள் கொண்டுள்ள இன்றியமையா உறவின் காரணமாகவே மனிதப்பேச்சு உருவாகிறது எனலாம்.

மனிதர் வெளிப்படுத்தும் பேச்சும், அப்பேச்சு வெளிப்படுத்தும்போது உடன் பிறக்கும் சிந்தனையும்தான் மனிதரைத் திட்டவட்டமாக வேறுபடுத்திக் காட்டின. ஆக, பேச்சு என்பது மனித உயிர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகிறது. மனித உயிர்களின் இயல்பூக்கங்களாக உள்ள பசித்தேவைக்கும், பாலுறவுத் தேவைக்கும், தூக்கம் போன்றவற்றிற்கும் பேச்சு என்பது அவசியப்படாது. ஆனால், ஒரு மனித உயிர் பிற மனித உயிர்களுடன் உறவுபடுத்திக் கொள்ளவேண்டிய நிலையில் பேச்சு அவசியமாகிறது. அதாவது, மனித உயிர்கள் சமூகமாக மாறும் நிலையில் பேச்சு தேவைப்படுகின்றது. மனிதர் தனித்து ஒதுங்கி வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட நிலையில், சமூக மனிதர்களோடு கலந்து கொள்வதற்குப் பேச்சைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மனித உயிர்கள் சமூகமாக மாறும் வளர்ச்சிக் கட்டங்களில், மனித உயிர்களால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும் சைகைகளும் அர்த்தம் கொள்ளத் தொடங்குகின்றன. இந்த அர்த்தப் புலப்பாடுதான் ‘மொழி’ எனப்படுகிறது. அதாவது, ‘வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவி கொண்டு இவற்றிற்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும்தான் மொழி பிறந்தது’. மொழி என்பதற்கு அடிப்படை பேச்சொலி என்றாலும்கூட, எல்லாப் பேச்சொலிகளும் மொழி என்றாகி விடுவதில்லை. முறைப்படுத்தப்படுகிற பேச்சொலிகளே மொழி வரம்பிற்குள் வரமுடிகிறது. இதைக்குறித்து ஜமாலன் கூறும்போது, மொழி என்பது அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சப்தம் அல்லது ஓர் உடலில் இருந்தோ பொருளில்  இருந்தோ உருவாகும் ஒரு சப்த ஆற்றல் (ஒலி ஆற்றல் / Sound energy). இந்தச்  சப்தம் குறியீடுகள் வழியாக அடையாளப்படுத்தப்படும் வண்ணம் பெயரிடுதல் என்பதாக ஒழுங்கமைக்கப்படும்போது மொழி உருவாகிறது என்கிறார்.

மனிதர்கள் வெளிப்படுத்திய பேச்சொலிகளுக்கும், எதிர்கண்ட பொருட்களுக்கும் குறியிட்டுப் பெயரிடுவதன் விளைவாக மொழி உருவாகிறது; சொல்லாடல்கள் உருவாகின்றன. குகைகளிலும் பாறைகளிலும் பொறிக்கப்பட்ட அடையாளங்களும் குறியீடுகளும் எழுத்துருவம் கொள்கின்றன. எழுத்துருவங்களும் பேச்சொலிகளும் சேர்ந்து ‘மொழி’ என்பதாகத் தோற்றம் கொள்கிறது. இவ்வாறாக,  மனித உழைப்பிலிருந்தும் அதனுடைய தொடர்ச்சியான மாற்றப் படிநிலைகளில் இருந்தும்தான் மொழியின் தோற்றம் அமைந்திருக்கிறது எனலாம்.

சமுதாய உறுப்பினர்களிடையேயான பொருளுடைய பேச்சு மூலமே கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பொருளுடைய பேச்சில் சொற்கள் வாக்கியங்களாகக் கட்டமைக்கப்படுகின்றன. இவ்வாறு தமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடிய அனைத்துத் தனி நபர்களையும் சமூகம்  உள்ளடக்கியுள்ளது. பொதுவானதொரு பேச்சு வடிவம் இருப்பதாலேயே இவர்களால் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. ஆதி நிலைமைகளில், ஒவ்வொரு சமூகமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தனக்கென ஒரு சொந்த மொழியையோ அல்லது குல வழக்கையோ கொண்டிருக்கிறது. இந்த மொழி அல்லது குல வழக்கு அந்த சமூகத்தின் பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்ததாகும் எனக் குறிப்பிடும் ஜார்ஜ் தாம்சன், எழுத்துக் கலையின் கண்டுபிடிப்பு பேச்சின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு புதிய கட்டமாகும் என்கிறார்.

மேலும், எழுதப்பட்ட பேச்சு என்பது வாய்மொழிப் பேச்சைப்போல அப்போதைக்கப்போது தன்னியல்பாக வெளிப்படுவதல்ல. மாறாக, முன் தயாரிப்போடு செய்யப்படுவதும், அந்தந்த நேரத்தில் பேசவேண்டிய  உடனடித் தேவையிலிருந்து விடுபட்டு நிதானமாகச் சிந்தித்துக் கருத்துகளைக் கூறுவதற்குப் பயன்படுவதாயும் உள்ளது. எழுதப்பட்ட பேச்சு, வாய்ப்பேச்சுப் போல வாய், காது ஆகிய புலன்சார்ந்த அம்சத்தைக் கொண்டதல்ல. அந்தப் புலன் சார்ந்த அம்சத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு ஒரு உயர்ந்த மட்டத்திலான அருவத்தன்மையைப் பெறுகிறது. எழுத்துமுறை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகுதான் மனிதன், பேச்சு என்பது அதற்கே உரிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஒரு புற யதார்த்தமாக இருப்பதை உணர்ந்தான். பின்னர், அந்த விதிகளை இலக்கண விதிகளாக முறைப்படுத்தத் தொடங்கினான். எழுத்தறிவு பேச்சார்ந்த கலைகளுக்குப் புதிய தன்மையை வழங்கியதுடன் அறிவியல் பகுத்தாய்வுக்கான இன்றியமையாத சாதனமாகவும் அமைந்தது என எழுத்து மரபின் தோற்றச் சூழல் குறித்தும் விவரிக்கிறார் ஜார்ஜ் தாம்சன்.

அதாவது, மனிதர்கள் தோன்றிய காலத்தில் தம்முடைய செயல்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த சைகைகளைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் ஒலிகள் மூலம் குரல்களை வேறுபடுத்திக் காட்டிய அவர்கள், தமது செயல்பாடுகளையும் கருத்துகளையும் தமக்குப் பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவான குறியீடுகளைப் பயன்படுத்திக் கற்களிலும் பாறைகளிலும் பொறித்து வைக்கும் வழக்கத்தைப் பயின்று வந்திருக்கிறார்கள். இவ்வழக்காறே மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டதின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால கட்டங்களைச் சார்ந்த  முதுமக்கள் தாழிகள், ஓவிய வரைவுகள், மண்பாண்டங்கள், காசுகள், அணிமணிகள், முத்திரைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில்கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, ஜப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாக சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை கொண்டிருப்பதாகவும் கருதுகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மொழியின் வளர்ச்சியில் குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெருவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும் குறியீடுகள் திகழ்ந்தன. குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்பு குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்பு குறைந்தும் அமைகின்றன. குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்புதான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற்காலத்து மட்பாண்டக் குறியீடுகள்தான் தமிழ் எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன என்கிறார் இராசு.பவுன்துரை.

மொழியைப் பற்றி எடுத்துரைக்கும் எஸ்பெர்ஸன், மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்குப் பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான்; தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான்; பின்னர் நாளடைவில் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான்; அதன் பிறகு பொருளின் பண்புகளைத் தன் செய்கையால் அறிவித்து அதனைப் பெற்று வந்தான்; மூன்றாவதாகக் குறுக்கெழுத்துப்போல ஒரு பொருளுக்கு ஓர் எழுத்து இட்டு வழங்கினான்; அடுத்து எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழியானது உருப்பெறுகிறது என, எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கமாகக் கூறியுள்ளார்.

மொழியின் தோற்றத்தையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் பரிதிமாற்கலைஞர், உலகின் கண்ணே மக்கள் ஒருங்குகூடி வாழவேண்டியவராதலின், அவர்கள் அடிக்கடி தங்கள் கருத்துகளை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக்கொள்வது அவசியமாயிற்று. ஆகவே, அவர்கள் கை, வாய் முதலிய உறுப்புகளால் பலவிதச் சைகைகள் செய்துகாட்டித் தங்கள் கருத்துகளை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை இயற்கை மொழி என்பர். இவ்வியற்கை மொழி, முதலில் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வி அளவிலும் பரவிற்று. அதாவது, சில ஒலிகளும் ஒலிக்கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாகி அச் சைகைகளுடன் கூடின. அவ்வொலிகளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவைதாம், போறல் வகையானும், சுவை வகையானும், அறிகுறிவகையானும் எழுந்தனவாம் என்கிறார்.

இம்மூவகை குறித்து விவரிக்கும் அவர், ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதனால் பலவகைப்பட்ட மிருகங்களின் ஒலி வேறுபாடுகளையும் நன்குணர்ந்து தமக்குள்ளே அவற்றை அறிந்து கொள்ளுமாறு அவ்வொலிகளினின்றும் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர். ஒன்று பிறிதுபோல் கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் போறல் வகையால் எழுந்தன. மக்கள் சுவை உடையவர் ஆதலின், அவற்றுக்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவெல்லாம் சுவை வகையால் உண்டாகிய சொற்களாம். அறிகுறி வகையால் எழுந்த பகுதிகள் நாவின் சைகை என்பதனடியாகப் பிறந்தன. நாவின் சைகையும் கைச்சைகையின் உதவிக்காக வந்து, அதனைச் சிலநாள் பாதுகாத்துப் பார்த்தும் அது கருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால், அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. இவ்வாறு நடாத்தினதால் சொற்கள் பல உண்டாயின என்கிறார்.

மொழியின் தோற்றம் குறித்தும், அதன் ஒலி மற்றும் வரி வடிவங்கள் குறித்தும் ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழியானது காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழி எவ்வாறு வடிவமைந்துள்ளது என விளக்கி, காலப்போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆராய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இதுவே மொழி வரலாறு எனப்படுகிறது. அவ்வகையில், மொழி வரலாற்றின் தொல்லியல் சார்ந்த அடையாளங்கள் நிரம்பிக் கிடப்பதே எழுத்தின் வரலாறாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து..

ஆதி பதிப்பகம் வெளியீடு.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு


பண்டைக் காலத் தமிழகத்தில் எழுத்துக் குறிகளைப் பயன்படுத்தி ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப் பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட தாழை மடல்கள், ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெறவில்லை. அண்மைக் காலத்தைச் சார்ந்த ஓலைச் சுவடிகளே  கிடைத்துள்ளன. ஆயினும், பல்லாயிரம் மற்றும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றில், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய வெவ்வேறு எழுத்து வடிவங்களைக் காணமுடிகிறது.

எழுதுவதாகிய வரிவடிவங்கள் காலம்தோறும் சிறிது சிறிதாகவும் வெவ்வேறாகவும் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இத்தகைய எழுத்து வடிவங்கள் பற்றிய எடுத்துரைப்பைத் தொல் வரி வடிவவியல் என்பர் தொல்லியலார்.
தொல் வரி வடிவவியல் சார்ந்த விவரிப்புகள் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்கும் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களைத் தமிழகத்தின் குகைக் கல்வெட்டுகள் வழியாக அறிய முடியும். இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் பல்வேறு கருத்து நிலைகள் நிலவுகின்றன.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில்  எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. பாறைகளிலும் தூண்களிலும் பிராகிருத மொழியில் பொறித்து மக்கள் அறியும்படியாகச் செய்திருக்கிறார் அசோகர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவைப் பிராமி என முதன் முதலாகப் பெயரிட்டுக் கூறியவர் பியூலர் ஆவார். பிராமி எனும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும், தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப்பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருந்ததினால், பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகளைப் பிராமி வரிவடிவத்தின் தென்னக வகை என அழைக்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.  அதேவேளையில், தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ் பிராமி என்று பெயரிட்டு அழைப்பார் ஐராவதம் மகாதேவன்.

பொதுவாகவே, பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் உருவாகி இருக்க வேண்டும் எனும் கருதுகோள்தான் பெரும்பாலும் நிலவுகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டெழுத்துகளைத் தமிழ் பிராமி எனக் குறிப்பது தமிழின் தனித் தன்மையை ஏற்க மறுக்கும் நோக்கம் கொண்டதாகக் கருதும் நடன.காசிநாதன், தமிழ் பிராமி என்று அழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியில் இருந்து இவ்வெழுத்து தோன்றியதே எனினும் அதில் இருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறு எனில், பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமி என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும், அப் பிராமி எவ்விடத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவர்கள் உருவாக்கிக் கொள்கையில், மற்ற பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கு என ஒரு எழுத்தை உருவாக்கிக்கொண்டு இருக்க மாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து என, தமிழின் தனித்ததோர் எழுத்து மரபு தனித்து இயங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.

தமிழ் மொழியில் எழுதும் வடிவ முறையினைப் பிராமியாகவும், அவ்வெழுத்து வடிவம் வடக்கிருந்து பெறப்பட்ட ஒன்றாகவுமே பெரும்பாலும் கருதப்பட்டது. ஆனால், அசோகர் காலத்திய கல்வெட்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் வழக்கில் இருந்துள்ளதையும், அவை முறையாக வளர்ச்சி அடைந்து வந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது.

கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்தா’ (சமவாயாங்க சூத்திரம்), ‘பன்னவயன சுத்தா’ என்னும் சமண நூல்களில் அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்து வகைகளுள் 18 வகையான எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் பிராமி எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. பிராமி என்பதே பம்பி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

மேற்குறித்த சமண நூல்கள் எடுத்துரைக்கும் அதே பட்டியலில்தான் தமிழி எழுத்து வகையும் குறிக்கப்படுகின்றது. தமிழ் எழுத்தைப் பிராகிருத மொழியில் தாமிழி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டையத் தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. அவ்வகையில், தமிழி மற்றும் பிராமி என்னும் இவ்விரண்டு எழுத்து வகைகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை; தமிழியும் பிராமியும் வேறு வேறானவை  எனத் தெரிகின்றது.

உலகில் உள்ள எழுத்து வடிவங்கள் யாவும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது.  எழுத்து கடவுளின் ஒரு தோற்றம் என்றும், கடவுளே அதைத் தோற்றுவித்தார் என்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் கருதினர். எகிப்தியர் தோத் என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டது எனக் கருதினர். பாபிலோனியர் நேபோ என்னும் தெய்வத்தாலும்; யூதர்கள் மோசஸ் என்பவராலும்; கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்னும் தெய்வத்தாலும் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதினார்கள்  என்கிற குறிப்பைத் தருகிறார் இரா.நாகசாமி.

இந்நிலையில், பிராமி எழுத்து வடிவமும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது. அதாவது, பிரமனால் இவ்வெழுத்துக்கள் உண்டாக்கப்பட்டதாகக் கருதப்பெற்றதால் பிராமி எழுத்துக்கள் என்று பெயராயிற்று என்றும், பிராமணரிலிருந்து பிராமி எனும் பெயர் பெற்றது என்றும் கூறுவர். அதேபோல, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரின் மகள் பெயரான பம்பியிலிருந்தே பிராமி வந்தது என்பர். ஆக, பிராமி எழுத்து வடிவம் சமயம் / சாதி சார்ந்த அடையாளத்தையே பின்புலமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், பண்டையத் தமிழி எழுத்து வடிவத்திற்கு எந்தவகையான சமய / சாதி அடையாளப் பின்புலங்கள் எதுவும் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறைமையே தமிழி எனக் குறிக்கப்படுகிறது. அதாவது, தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்தியப் பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் இரா.நாகசாமி.

பிராமிக்கும் தமிழிக்கும் பலவகை வேறுபாடுகள் நிறைய இருப்பினும், சில அடிப்படையான வேறுபாடுகளும் இருக்கின்றன. அதாவது, அசோகர் காலத்துப் பிராமியைப்போல் பண்டையத் தமிழியில் கூட்டெழுத்துகள் கிடையாது. மேலும், அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துகள் தமிழியில் உள்ளன. அவை ற, ன, ள, ழ என்கிற எழுத்துகள் ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழியையும் வேறுபடுத்த உதவுகின்றன. அக்காலத்திய இந்த எழுத்து முறைமையைத் தனித்தமிழ் எழுத்து முறைமை எனவும் கூறப்படுகிறது.

குகைப் படுக்கைகள், நடுகற்கள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள், இன்னும் இதரப் புழங்கு பொருட்கள் ஆகியவற்றிலிருந்தும் தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம் இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழி எழுத்துப் பொறிப்புத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழியும் பிராமியும் வேறு வேறு எழுத்து வடிவங்கள் எனினும், பிராமி எழுத்து வடிவம் வழங்கி வந்த கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததே தமிழியின் காலமும் ஆகும் எனப் பொதுவாய்க் கருதப்படுகிறது. அதாவது, பிராமியிலிருந்தே தமிழ் எழுத்து வடிவம் உருக்கொண்டது என்பதற்காகவே தமிழ் பிராமி என்கிற சொல்லால் தமிழி எழுத்து வடிவம் குறிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பது, தமிழியைப் பிராமி எழுத்து வடிவத்தின் உள் வடிவமாக அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

அதேபோலவே, பிராமியின் காலமும் தமிழியின் காலமும் ஒரே காலகட்டமாகக் கணிப்பதிலும் இருக்கிற நோக்கம் என்பதெல்லாம், பிராமிக்கு முந்தியதாகத் தமிழி இருந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனாலும், பிராமி எழுத்து வடிவத்திற்கு முந்திய எழுத்து வடிவமே தமிழி ஆகும். இவ்வரலாற்று உண்மையைத் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...
ஆதி பதிப்பகம் வெளியீடு / 2019.

வியாழன், 20 டிசம்பர், 2018

எழுத்தின் தோற்றநிலையும் வரலாறும்: மகாராசன்

எழுத்துகளின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பன ஓவியங்களே ஆகும் எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தொல் பழங்காலத்தில் வேட்டையாடித் திரிந்த மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த சில பல கிறுக்கல்களைக் கீறி, நாளடைவில் ஓவியங்களாகவும் வரைந்துள்ளதைத் தொல்லியல் சான்றுகளின்வழி அறிய முடிகிறது.

இத்தகைய ஓவிய நிலை குறித்துக் கூறும்போது, தொல் பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழி மற்றும் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. பின்னர் அது அலங்காரமாகவும் இருந்துள்ளது. இவ்வகை தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வெறும் வெளிப்பாடு மட்டுமல்ல, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சமூகத்தின் வியக்கத்தக்க வாழ்வியல் சூழலைப் பதிவு செய்துள்ள தொல் காட்சி ஆவணம் என்கிறார் காந்திராஜன். 

அதாவது, பாறை ஓவியங்கள்தான் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அழகியல் வெளிப்பாடுகளைப் புலப்படுத்தக்கூடிய வடிவமாகத் திகழ்ந்திருக்கின்றன. ஓவியம் வரைதலையே சித்திரம் வரைதல் என்பர். சித்திரமும் கைப்பழக்கம் என்கிற சொல்வழக்கும் ஓவியம் வரைதலைத்தான் குறிக்கிறது.

சித்திரம் வரைதலே எழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படையான காரணம் எனக் கூறும் இரா.நாகசாமி, குழந்தைகள் தாங்கள் கண்ணுறும் விலங்குகளையும் பறவைகளையும் படமாக வரைகின்றனர். அவற்றிற்கு உயிர் இருப்பதாகவே அவர்கள் கருதுவர். காடுகளிலும் மலைகளிலும் வேட்டையாடித் திரிந்த காலத்தில் இவ்வாறுதான் ஓவியங்களை வரைந்துள்ளனர். விலங்குகளின் உருவம் வரைந்து அவற்றை ஈட்டியால் குத்தியதுபோல் வரைந்தால் அது அவனுக்கு மாந்திரீக சக்தியைக் கொடுக்கும் என்றும், அதனால் ஏராளமான விலங்குகளை வேட்டையாட முடியும் என்றும் கருதி இருக்க வேண்டும் என்கிறார்.

மேலும், பல குடிமக்கள் சேர்ந்து ஓர் ஊரிலோ நகரிலோ வாழத் தலைப்பட்டபோது அவர்களுடைய பொருள்களைக் குறிக்கக் குறியீடுகள் இட்டுத் தெரிந்து கொண்டனர். ஊர்த் தெய்வத்திற்கு மக்கள் பல பொருள்களை வழிபாடாகக் கொடுப்பது வழக்கம். ஆதலின், ஊர்க் கோயில்களிலும் நகரக் கோயில்களிலும் ஏராளமாகப் பொருள்கள் சேர்ந்தன. இவற்றைக் கணக்கு வைத்துக் கொள்ள பல குறியீடுகள் தேவைப்பட்டன. உதாரணமாக, இவ்வளவு மாடுகள் எனக் குறிக்க மாட்டின் தலை போட்டு அருகில் வேண்டிய புள்ளிகள் இட்டு வைத்தால் அது அவ்வளவு மாடுகள் எனக் குறிக்கும். கலன்களையும் தானியங்களையும் போட்டு அருகில் இட்ட புள்ளி இவ்வளவு கலம் அல்லது தானியம் எனக் குறிக்கும். இவ்வாறு தனிப்பட்ட மனிதர்களிடத்தைக் காட்டிலும் கோயில்களில் கவனத்துடன் கணக்கு வைத்துக் கொள்ளும் தேவை இருந்தது. அதற்குக் குறியீடுகள் தோன்றின. இவற்றைச் சித்திர எழுத்துக்கள் என்பார் இரா. நாகசாமி. 

எகிப்து தேசத்தில் காணப்படும் ஓர் ஓவியத்தில் முட்டை வடிவமான ஓர் அடி நிலத்தில் சில செடிகள் காணப்படுகின்றன. அந்த அடி நிலத்திலிருந்து கிளம்புவது போல் ஒரு மனிதன் தலை இருக்கிறது. அவனுடைய தலையை ஒரு கயிற்றினால் பருந்து ஒன்று பற்றிக் கொண்டிருக்கிறது. இத்திரண்ட ஓவியம் பாப்பைரஸ் எனும் கோரைப் புல்லுக்குப் பெயர் போன நைல் ஆற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்த புராதன மக்களை எவனோ ஒருவன் வென்று அரசனானான் என்னும் கதையைக் கூறுகிறது. இவ்விதம் படத்தில் உள்ள வடிவங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நிகழ்வைக் குறிக்கும். இது பாங்குஸ்கேண்டி நேவியா மக்களிடத்திலும் அமெரிக்க ஆதிக்குடிகளிடத்திலும் உண்டு  என்கிற குறிப்பைத் தருகிறார் மணி.மாறன். 

மேலும், சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும். 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம் என்ற மு.இராகவையங்கார் கூற்றும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொல் பழங்காலத்தியத் தமிழ் மக்கள் ஓவியங்கள் மூலமாகத் தம்முடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதைத் தமிழகப் பாறை ஓவியங்கள்வழி அறிய முடிகிறது. இதைக்குறித்து விவரிக்கும் காந்திராஜன், தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்களில் வரையப்பட்ட கருப்பொருள்கள் இந்தியாவில் பிற பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள் போல பல்வேறு காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளை வேட்டையாடுதல், மான்கள், மாடுகள், குதிரைகள், யானை, நாய், ஆடு, பன்றி, புலி, சிறுத்தை, நரி, கழுதை, பாம்பு, மீன், பறவைகள், சண்டைக்காட்சிகள், மரம், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. அதுபோல கணிசமான அளவில் அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன. அதேபோல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உருவங்களும் எண்ணற்ற அளவில் உள்ளன.

தமிழகத்தில் இதுவரை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் குறியீடுகளும் சில அடையாளங்களும் காணப்படுகின்றன. மேலும் வடிவியல் சார்ந்த மற்றும் சாராத உருப் படிவங்கள் பெருமளவில் பெருங்கற்காலச் சின்னங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக கீழ்வாலை, செத்தவரை, மல்லசத்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன்பள்ளி  பாறை ஓவியங்களில் இவை தென்படுகின்றன.  பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் கீறல்கள் போல உள்ளன. செத்தவரையில் காணப்படும் ஒரு ஓவியம், விலங்கு ஒன்றினைத் தீயில் வாட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியின் மூலம் அக்காலத்தில் எவ்வாறு நம் முன்னோர்கள் உணவினைத் தயார் செய்தார்கள் எனத் தெரியவருகிறது. மீன் மற்றும் கடல் வாழ்வியலை கீழ்வாலை மற்றும் காமயகவுண்டன்பட்டி ஓவியங்கள் மூலம் அறிய முடியும் என்கிறார்.

தமிழகத்தின்  கீழ்வாலை என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய ஓவியத்தில் உருவ எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. முதல் எழுத்து தென்னங்கீற்று போலவும், இரண்டாம் எழுத்து மத்தளம் போன்றும், மூன்றாம் எழுத்து சீப்பு போன்றும், நான்காம் எழுத்து மத்தளம் போன்றும், ஐந்தாம் எழுத்து நான்கு குறுக்குக் கால்களையுடைய சக்கரம் போன்றும் எழுதப்பட்டுள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ் ஓவிய எழுத்துகள், சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், கீழ்வாலை ஓவிய எழுத்துகள் ‘நாவாய்த் தேவன்’ என ஓவிய எழுத்தில் குறிக்கப்பட்டிருப்பதாகச் சிந்துவெளி எழுத்துகளோடு தொடர்புபடுத்துகிறார் இரா.மதிவாணன். மேலும், தமிழகத்தின் பழங்காலத்தியப் பாறை ஓவியங்கள் பலவற்றிலும் சிந்துவெளி எழுத்தமைந்த சொற்களை அவர் எடுத்துக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குகைகளின் சுவர்களில் ஓர் ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டிருப்பது ஆய்விற்கு உரிய ஒன்றாகும். இது தொடர்ந்து இந்தக் குகைகளில் மனிதர்கள் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும், இந்தக் குகைப் பகுதிகளில் தேவையான விலங்குகள் அதிக அளவில் கிடைத்திருக்க வேண்டும். இந்தக் குகைகளில் வேட்டையாட விரும்பும் விலங்கின் உருவத்தை வரைந்து சென்றால் அந்த மிருகம் வேட்டையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இங்கு ஒன்றின் மீது ஒன்றாக ஓவியங்களை வரைந்திருக்கலாம். இதுதவிர, இந்தக்குகை ஓவியங்கள் வரையும் பயிற்சித் தளமாகவும் இருந்திருக்கலாம் என்கிற ஆய்வாளர்களின் கருத்து, ஓவிய உருக்களின்வழி எழுத்துக் குறிக்கான பயில்களம் இருந்திருப்பதையும் சுட்டி நிற்கிறது.

மேற்காணும் சான்றுகளின்வழி, ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும் குறிகளாக, அக்குறிகளே அப்பொருட்களைக் குறிக்கும் சொற்களின் அறிகுறிகளாக வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, ஒரு பொருளின் உருவத்தை வரைந்தெழுதி, அது அப்பொருள் என்பதன் அறிகுறி என்று கருதப்பட்டிருக்கிறது. இவ்வாறாக,  ஒரு சொல்லுக்கு ஒரு ஓவியம் என்று எழுதப்பட்ட காலகட்டத்தில், கருத்துப் புலப்பாடுகளுக்கு  ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஓவியக் கருத்துப் புலப்பாட்டு வடிவத்தையே ஓவிய எழுத்து (Pictography) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். இவ் ஓவிய எழுத்தையே சித்திர எழுத்து, படவெழுத்து, உருவெழுத்து, வடிவெழுத்து எனப் பல பெயர்கள் குறிப்பதாகக் கருதலாம்.

ஓவியங்களையே எழுத்தாகக் கொள்ள முடியாது. வரைந்த உருவை மட்டும் ஓவியம் குறிக்குமே ஒழிய, வேறு எக்கருத்தையும் குறிக்காது. இவை வரையப்பட்ட பொருளையே குறிக்கும் எனக் கூறுகிறார் இரா.நாகசாமி. மேலும், சித்திர எழுத்துகளையும் உண்மையான எழுத்துகள் என்று கூறமுடியாது. அவை வளர்ச்சி பெற்று கருத்து எழுத்துக்களாக பரிணமித்தன. உதாரணமாக சூரியனின் உரு வரைகிறோம். இது சூரியனை மட்டும் குறிப்பது சித்திர எழுத்து நிலை. இதற்கு அடுத்த நிலை சூரியனுடன் தொடர்பு கொண்ட பகல், வெப்பம் என்ற பொருள்களையும் குறிப்பதாம். இப்போது உருவை மட்டுமின்றி ஒரு கருத்தையும் குறிப்பதால் இதைக் கருத்து எழுத்து என்பர். இதுமட்டுமின்றி முழு உருவும் போடாமல் இரு கொம்புகளும் தலை மட்டும் வரைந்தால் மாடு என்று அறியலாம். இதுவும் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது என அவர் விவரிக்கிறார்.

ஓவிய எழுத்துக்கள் நாளடைவில் கருத்தெழுத்தாக வளர்ச்சியுற்றன. சூரியனின் ஓவியத்தை எழுதி இது சூரியன் என்று சொல்லப்பட்டால் அது ஓவிய எழுத்து எனப்படும். அந்தச் சூரியனின் ஓவியம் சூரியனோடு தொடர்புடைய பகற்காலத்தையோ சூரிய வெப்பத்தையோ குறிக்கிறதாகக் கொள்ளப்பட்டால் அது கருத்து எழுத்து (Ideogram / Ideography) எனப்படும் என்பர். அதாவது, தமது மனக்கருத்தைப் புலப்படுத்தும் வண்ணம் வரைந்தெழுதியதே கருத்தெழுத்து எனலாம். இதுவே உணர்வெழுத்து எனவும் சுட்டலாம். 

கருத்தெழுத்து பற்றி எடுத்துரைக்கும் மணி.மாறன், எழுத்து வளர்ச்சியின் அடுத்த நிலையில் ஒவ்வொரு உருவமும் தனித் தனிப் பொருள்களை நேரிடையாகக் குறிக்க முற்பட்டது எனவும்,  எடுத்துக்காட்டாக, எகிப்து தேசத்தில் அமைந்த ஒருவகை எழுத்தில் கண்ணின் உருவம் கண்ணையும், வட்ட வடிவம் திங்களையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டன. இவ்வடிவங்களைக் கண்டவுடன் பொருள் இன்னது என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பொருளின் நிலையை அல்லது செயலைக் காட்டக் கூடுமேயல்லாமல் எண்ணினையோ வேற்றுமையையோ காலத்தையோ காட்டாது. எனவே, பல்வேறு வகையான கருத்துகளைத் தெரிவித்தல் இவ்வகை எழுத்துகளால் இயலாது எனவும் கூறுகிறார். 

கருத்தெழுத்துகள் பல காலம் வழக்கில் இருந்ததால் வரைந்துள்ள பொருளைக் குறிக்காமல் சில இடங்களில் கருத்தை மட்டும் குறிக்கவும் உபயோகப்பட்டன. மேலும், சூரியனைக் குறிக்க அதன் உருவம்  வரைகிறோம். அதை சூரியன் என்ற பெயரால் அழைக்கிறோம். பலநாள் வழக்கில் இருந்ததால் அவ்வுருவம் வரைந்தபோது சூரியனைக் குறிப்பதோடு அல்லாமல் சூ என்ற குறுகிய ஒலியையும் குறித்தது. இதேபோன்று முன்னர் பல பொருள்களைக் குறிக்க அவற்றின் உருவங்களை வரைந்தனர். அவை நாளடைவில் சொற்களின் முதல் ஒலியை மட்டும் குறிக்கவும் தலைப்பட்டன. இதுபோன்ற வளர்ச்சிகளால் ஒலி எழுத்துக்கள் தோன்றின.

சித்திர எழுத்துக்களிலும் கருத்து எழுத்துகளிலும் இட்டுள்ள குறிக்கும், அது குறிக்கும் பெயருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், ஒலி எழுத்துகள் பொருளையோ கருத்தையோ குறிக்காமல் குறிப்பிட்ட ஒலியைக் குறித்தன. இந்நிலையில்தான் குறிக்கும் ஒலிக்கும் நேர்முகத் தொடர்பு ஏற்படுகிறது. இப்பொழுதுதான் மொழிவதைக் குறிக்க எழுத்து ஏற்பட்டது என்று கூறமுடியும். இம்முறையில் உருவத்துக்கும் ஒலிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லாவிட்டாலும் அவ்வுரு அவ்ஒலியை மட்டும் குறிக்க நிலைத்துவிட்டது என, ஒலி எழுத்துகளின் தோற்றப் பின்புலம் குறித்து விவரிக்கும் இரா.நாகசாமி, ஓவிய எழுத்து, கருத்து எழுத்து போன்றவற்றில் இருந்து தோன்றிய புரட்சிகரமான மாற்றமே ஒலி எழுத்தாகப் பரிணமித்தது என்கிறார்.

ஒரு சொல்லுக்கு ஒரு அடையாளமாக எழுதிய ஓவியம், நாளடைவில் அச்சொல்லின் முதல் ஒலிக்கு உரிய அடையாளமாக ஏற்பட்டது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தினைக் குறித்து நிற்காமல், அந்தந்த வடிவத்திற்கேற்ப ஒலியைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அதாவது, முற்காலத்தில் மக்கள் ஓவியத்தின் வழியாகக் கதை சொல்லக் கற்றுப் பிறகு, ஒவ்வொரு வடிவத்தையும் ஒவ்வொரு தனித்தனிப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தினர். நாளடைவில், அவ்வடிவானது பொருளைக் குறிக்காமல் ஒலியைக் குறிக்கத் தலைப்பட்டது. இத்தகைய எழுத்து நிலையினையே ஒலி எழுத்து (Acrophony / Phonography) என்கின்றனர் தொல்லியலார்.

அவ்வடிவு அல்லது அவ்வடிவின் திரிபு முழு ஒலியையும் குறிப்பிடாமல் முதல் அசை ஒலியை மட்டுமே குறிப்பிடுவதாகிப் பின்னர் முதல் எழுத்தளவிலேயே நின்று விட்டது. இக்காலத்தில் உள்ள எழுத்துகளெல்லாம் இம்முறைப்படி ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபு வேறுபாடுகளாகக் கருதப்படுகின்றன. இங்ஙனம், ஒரு ஒலிக்கு ஒரு அடையாளம் என்று ஏற்பட்ட நிலையே ஒலி எழுத்தாகும். இவ்வாறாக,  ஓவிய மற்றும் கருத்து எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் என்பது மொழி வளர்ச்சியின் இன்னொரு பரிணாமக் கட்டமாகும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

வதை நிலம் : மகாராசன்


விதை நிலமெல்லாம்
வதை நிலமாகிக் கிடக்கிறது.

சோறுடைத்த மண்ணெல்லாம்
வயிறு காஞ்சு கிடக்கிறது;
வியர்வை மணக்கும் நெல்லை
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம்
பருக்கைகளுக்காகக்
கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளைப் போல
முதுகொடிந்து கிடக்கிறது;
குலையோடு சரிந்த வாழைகளைப் போல
குலம் நொடிந்து கிடக்கிறது.

கூடிழந்த பறவைகள் போல
வீடிழந்து நிற்கிறது;
கருப்பம் கலைந்த நெல் பயிர்போல
உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும்
கண்ணீர் தேங்கிக் கிடக்கும்
வதை நிலமாகிப் போச்சே மக்கா
வதை நிலமாகிப் போச்சே.

நிலத்தை விட்டு விடுவோமா?

நிலம் தான்
நம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு,
நிலத்தாளோட தொப்பூள்க் கொடிய
அறுத்தெறிய மனசில்லயே மக்கா
அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

எழுத்தோவியம்
தோழர் Palani Nithiyan

வெள்ளி, 23 நவம்பர், 2018

வலியெழுத்து : மகாராசன்

நாடிழந்த ஈழத் தமிழர்
அகதி வாழ்வின் வலியை,
இப்போது தான்
கூடும் வீடுமிழந்த சனமெல்லாம்
உணரத் தொடங்கியிருக்கிறது.

வெட்டியான் நிழலில் வெள்ளாளனும்
வெள்ளாளன் நிழலில் வெட்டியானுமாக
நிழல்களை  ஒன்றாக்கியது
அந்நிலத்துப்
போர்.

ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும்
சேரிக்குள்ளிருந்த குச்சுக் குடிசையவும்
வாரிச் சுருட்டி
ஊரையும் சேரியவும்
ஒன்றாக்கி விட்டுப் போயிருக்கிறது
இந்நிலத்துப்
புயல்.

அவர்களுக்கொரு நாடிருந்தது;
நமக்கொரு வீடிருந்தது.

இரு நிலத்துத் தமிழரும்
வாழ்விழந்து அகதியானோம்;
வலி சுமக்கும் பிறவியானோம்.

ஏர் மகாராசன்.

சம்சாரிப் பிஞ்சுகள் : மகாராசன்

ஊருக்குச் சோறு போட
ஒழச்ச சனமெல்லாம்
ஒரு வாய்ச் சோத்துக்கு
ஊரிடம் கையேந்தி நின்றபோது
உக்கிப் போனது
நிலமும்.

புயலடித்துக் கூடிழந்த பிஞ்சுகளின்
கண்களில் கசிந்தது
பசியின் வலி மட்டுமல்ல;
சம்சாரி வீட்டுப் புள்ளைகளாய்ப்
பிறந்ததன் வலியும் தான்.

ஏர் மகாராசன்.

மிச்ச உசுரு :- மகாராசன்

அம்மா அப்பா செத்துப்போனா
சுடுகாட்டுக்குப் போய்ட்டு திரும்பும்போது,
நாமும் செத்துப்போயிருக்கலாம்னு தோனுமே,
அதுமாதிரி அனாதையாகிப் போன மனநிலையில இருக்காக
சனமெல்லாம்.

வயல், தோப்பு, தோட்டம், ஆடு, மாடு, வீடு என அத்தனையவும் வாரிச் சுருட்டி நாசமாக்கிவிட்டுப் போன இந்தப் புயலும் மழையும்,  உசுர மட்டும் விட்டு வச்சிட்டுப் போயிருக்கு.

உசுரக் கொடுத்த அத்தனையும்
போன பின்னால,
இந்த உசுரும் போயிருக்கலாம்.

நெலம் நெலம்னு கிடந்த
சாதி சனமெல்லாம்
நெலத்துல அழுது மடியுது.

இது தான் இந்தச் சனம்
வாங்கியாந்த தலையெழுத்து.

நெலத்த விட்டுப் போட்டு
நாங்க வெளியேறும் போது,
வேடிக்க பாக்குற சனத்தோடு
தலையெழுத்து மாறத்தான் போகுது
கல்லு மண்ணு திங்குற சனமாக.

ஏர் மகாராசன்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

தமிழ் அடையாள அரசியல் - திசை நோக்கிய நகர்வு: மகாராசன்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கொள்கை மற்றும் பண்பாட்டு அறிக்கையை அவ்வமைப்பின் மாநிலச் செயலர்களுள் ஒருவரான தோழர் கண்மணிராசா அனுப்பி வைத்திருந்தார்.

கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, ஆய்வு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த படைப்பாளிகளுக்கான இடதுசாரிக் கண்ணோட்டத்தையும் நிலைப்பாட்டையும் தெளிவுபட வரையறுத்துக் கொள்வதற்கான கருத்தியல் ஆவணமாகவும், வழிகாட்டுக் கையேடாகவும் பல்வேறு பொருண்மைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, 2009 இல் ஈழத்தில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குப் பின்பாகத் தமது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

"ஈழப் போரின் அழிவுகள் மிக முக்கியமாகத் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த தமிழ் அடையாளத்தின் மேட்டுக்குடி நலன் சார்ந்த பண்பை வெளிப்படுத்துகின்றன. தமிழ் மேட்டுக்குடிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தமிழ் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி, உழைக்கும் தமிழ் மக்களை அவர்களது உரிமைகளுக்காக ஒன்றிணைக்கவில்லை என்பது இன்று அப்பட்டமாகத் தெளிவாகியுள்ளது. இன்னொருபுறம், தமிழ் அடையாளத்தை வெகுமக்கள் சார்ந்த ஒன்றாக இடதுசாரி சனநாயக சக்திகள் வளர்த்தெடுக்க இயலாமல் போன குறைபாட்டையும் இச்சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் அடையாளம் என்பது எதிர்காலங்களிலும் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு பண்பாட்டு அரசியல் பிரச்சினை என்பதையும் இச்சூழல் உறுதிப்படுத்துகின்றது " என, தமிழ் அடையாள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் குறித்து முனைப்புடனும் அக்கறையுடனும் கூடிய செயல்பாடுகளை வகுக்க வேண்டும் எனத் தமது நிலைப்பாட்டை மறுவரையறை செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

அவ்வகையில், தமிழ் அடையாள அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலே ஆகும். உழைக்கும் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலே இடதுசாரித் தமிழ் அடையாள அரசியல் ஆகும். ஆக, தமிழ்த் தேசியம் குறித்த அரசியல், பொருளியல், சமூகவியல், பண்பாட்டியல் சார்ந்த கருத்தியல் உரையாடல்களுக்கும் அவை சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் மிக முக்கியமான களத்தை ஏற்படுத்தி இருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

தமிழ்த் தேசிய அடையாள அரசியலைக் குறித்த இந்நகர்வுக்கு முன் வந்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தினர் இந்நிலைப்பாடு சார்ந்த செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவதே அவர்கள் முன் இருக்கும் பெருங்கடமை என்பதை உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு செயல்படும் தளங்களில் எமது தோழமைப் பங்கேற்பும் கண்டிப்பாய் இருக்கும்.

அவ்வறிக்கையின் ஓரிடத்தில், பெருமன்றம் 'இந்திய மற்றும் தமிழ் மரபுகளைச் சுவீகரித்துக் கொண்ட '
ஒரு அமைப்பாகச் செழுமைப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய மரபு என்பது ஆரிய வைதீக மரபாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழ் மரபுகளுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்திய மரபு என்பதற்குப் பதிலாக, தமிழ் மரபுகளைப் போல ஆரியத்திற்கும் வைதீகத்திற்கும் எதிரான இந்திய மரபுகள் என்பதாகத் திருத்தம் செய்தலே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இது குறித்துக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் மீளாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.

கலை இலக்கியப் பெருமன்றத்திற்குப் புரட்சிகர வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
01.11.2018

சனி, 10 நவம்பர், 2018

இலக்கணம் கற்றல்: வேர் அறியும் தடம்.

எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது.

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை.

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது.

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது.

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

ஒளிப்படம்:
Palani Nithiyan

சனி, 15 செப்டம்பர், 2018

விடுதலைக் கருத்தியலும் எதிர் மரபும்:- கார்த்திகேயன்

"தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" என்ற மகாராசனின் கட்டுரைத் தொகுப்பு நூலை (தோழமை வெளியீடு) வாசித்தேன். நூல் பல்வேறு தருணங்களில் எழுதப்பட்ட 10 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

விளிம்புநிலை மக்களின் கலகக் குரல் தாங்கிய விடுதலைக் கருத்தியலை எதிர்மரபாகக் கொண்டு வாசிப்பை நிகழ்த்துகிறது. வன்குடியாதிக்க முதலாளித்துவமும் இந்தியத் தரகு முதலாளித்துவமும் இந்திய தமிழக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது கட்டுரைகளின் உட்கிடக்கை.

இந்திய தேசியம் என்பது ஒரு பெருங்கதையாடல் என்பதனையும் அது எப்படி மொழிவாரித் தேசியங்களை தேக்கநிலைக்கு உட்படுத்தி மீளவிடாதபடி முடக்குகிறது  என்பதையும் தமிழகச் சூழலில் போதிய சன்றாதாரங்களுடன் விவரிக்கிறது.

இந்திய தேசம் என்ற கருத்தியல் இந்து தேசமாகவும் பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற கோணத்தில் அன்றைய அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து பரப்பப்பட்டு அவை புனிதப் படுத்தப்பட்டதையும் தெளிவான சான்றாதாரங்களோடு விளக்க முயல்கிறது. 

பின்னைக் காலனித்துவம் மார்க்சியப் பின்புலத்தில் எளிமையாக விளக்கம் பெற்றுள்ளது. பின்காலனியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக புது வன்குடியாதிக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முல்லைப் பெரியாரணையின் மீதான நூலாசிரியரின் வரலாற்றியல் பார்வையிலான வாசிப்பில் பொதுவுடைமைக் கட்சிகளில் தரகுமுதலாளித்தனப் பாங்கு உள்ளார்ந்து இயக்கம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

கட்டுரைகளில் பேசுபொருளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பெளத்த - இந்திய நாட்டின் கூட்டு வல்லாதிக்க நடத்தைகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிற எழுத்துகள் ஊன்றி கவனங்கொள்ளப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

ஆசிரியரின் எளிமையனான மொழிநடை வாசிப்பை இலகுவாக்குகிறது. இந்தியச் சூழலில் பின் காலனியத்தை உள்காலனியம் வெளிக்காலனியம் என ந.முத்துமோகனும் ஹெச்.ஜி. ரசூலும்  வகைப்படுத்துவர். இந்தியச் சமூகத்தின் மீதான இந்த இரட்டைக் காலனிய ஒடுக்குமுறைகளையும் பிரதி பேசுபொருளாக்கியிருந்தாலும்  பின்னைக் காலனியக் கோட்பாட்டின் விரிவான பார்வையில் கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட பொருண்மைகள் நோக்கப்படவில்லை.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஏறு தழுவுதல்: பார்ப்பனியத்தை எதிர்க்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது :- ஆசைத்தம்பி

மதுரையில் புத்தகக் கண்காட்சியில் நுழைந்த பொழுது இராமனாய் எனது சீதையைத் தேடித் போனேன். ஆனால், திரும்பி வரும்பொழுது ஏகப்பட்ட காதலிகளோடு கோபியர் கண்ணனாய்த் திரும்ப வர வேண்டியதாயிற்று. மனதின் சஞ்சலத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. கருத்துப் பட்டறை பரமன் என்னைக் கண்டவுடன் ," உங்கள் ஏர் மகராசன் புத்தகம் ஏறு தழுவுதல் புத்தகம் இருக்கிறது என்று கையில் கொடுத்தார்.

புத்தகத்தின் அட்டைப் படமே திமிறி வரும் காளையாகத் தமிழ்ப் பண்பாடும், அதை ஏறு தழுவும் தமிழ் குடியும், ஏர் மகாராசனும்தான் தெரிந்தார்கள். அணிந்துரையில் நுழைந்த பொழுது முனைவர் முரளி ," ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப்  பாதிக்காதபோது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும் " என, இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை ஒரு வரியில் கூறி ஏர் மகாராசனிடம் நம்மை ஒப்படைத்தார் .

மனிதனின் முதல் உணர்வு பசி. முதல் தேடல் உணவுக்கானது . முதல் உற்பத்தி விவசாயம் . முதல் செல்வம் மாடு . முதல் பண்பாடு உழவர் பண்பாடு  எனப் பெருமை பொங்க உழவர் மகன் ஏர் மகாராசன் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும்போது பிரமிப்புடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு நூலினுள் நுழைந்தேன் .

வரலாறு ஓரளவு அறிந்தவன் நான் . நான் அறியாதது இன்னும் நிறைய உள்ளது என்பதை எடுத்துரைத்தது இந்தப் புத்தகம் .

வேட்டையாடுதலால் கிடைத்த அதிகளவிலான விலங்குகள் உபரியாய் இருந்த சூழ்நிலையில், விலங்குகளைப் பழக்கி அவன் எடுத்த முயற்சிகள்தான் கால்நடை வளர்ப்பு . முதலில் அவன் யானை, மான்களை வளர்ப்பு விலங்குகளாக எடுத்த முயற்சிகளைச் சங்க காலப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டினார் .

இனக் குழுக்களின் அடையாளமாகக் குறிஞ்சி, முல்லை , நெய்தல் , பாலை மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட போது , மருத நிலத்தின் வேளாண் மக்கள் மட்டும்தான் உழவர், உழத்தி என்னும் பொதுப் பெயர்களில் அழைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார் .

ஏர் பூட்டி உழுவதே பாவம் என்றார்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்தல் பாவம் என்றது மனு சாஸ்திரம் . பசுவை அடையாளமாகக் காண்பார்கள் அவர்கள் . ஆனால் நாமோ காளை மாடுகளைத்தான் பண்பாட்டு அடையாளமாகக் காண்கிறோம் என்கிறார் அவர் . தமிழ் நாட்டு மரபும்  பார்ப்பனியத்தை எதிர்க்கும் , மறுக்கும் பண்பைத்தான்  உள்ளும் புறமும்  கொண்டிருந்தது என்பதை  அழுத்தந் திருத்தமாகப்  பதிவு  செய்திருக்கிறார்.

அறுவடைக் காலம் வரையில் ஓய்விலிருக்கும் காளைகள் தினவுடன் துள்ளலுடன் மிடுக்குடன்தான் இருக்கும் . அந்தத் தினவு வெளிப்பாடுகளை மிக அழகாக விவரித்துள்ள இந்த உழவுப் பேராசிரியர்  அந்தத் தினவையும் துள்ளல்களையும் மனிதர்களின் ஏறு தழுவல்கள் நிறைவு செய்கின்றன என்கிறார் . இதை அவர் மொழியிலேயே கேளுங்களேன்.

" மனிதர்களும் மாடுகளும் மாறி மாறி உழைக்கிறார்கள் .உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன . சோர்ந்து போகின்றன . இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக் கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது . அந்த ஓய்வு என்பது உணவோ உறக்கமோ அல்ல" . உள்ளம் மகிழும்படி , உற்சாகம் ஏற்படும்படியான பொழுது போக்குகள் . அந்தப் பொழுது போக்குகள்தான் மனிதக் காளைகளுக்கும் மிருகக் காளைகளுக்குமான ஏறு தழுவுதல் .

இந்த ஏறு தழுவுதல் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்திருக்கிறது என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கல் முத்திரையிலிருந்து தெரிகிறது . கி.மு. 1500 ஆம் காலத்தைச் சேர்ந்த பல்வேறு தடயங்கள் மூலம் ஏறு தழுவுதல்  3000-3500  ஆண்டுக்கான பண்பாடு என்கிறார்.

மாடுகளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் அன்பை ,பரிவை,  பாசத்தை மாட்டுப்பொங்கலில் காணலாம் என்று அதை விவரிக்கும் நிகழ்ச்சிகள் மனம் நெகிழ வைப்பன.

இறுதியாக நிலவுடைமைச் சமூகத்தில் உழவர் மக்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிக்கப்பட்ட அவலத்தையும், அவர்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இழிவு செய்யும் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார் .

இப்போதெல்லாம் கோயிலைப் பார்க்கும்போது அதன் அஸ்திவாரத்தில் புதையுண்ட உழவர் மக்களின் நிலங்களும் பண்பாடும்தான் தெரிகிறது.

மொத்தத்தில் வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் பார்ப்பனியத்தின் வஞ்சகமும் துரோகமும் தன்வசம் ஆதிக்கப்படுத்துதலுமே முன் நிற்கின்றன . அவற்றை எதிர்த்து நிற்கும் வீரனாகத் தமிழர் பண்பாடு மட்டும்தான் நிற்கிறது .

இறுதியாக, முரளியின் அணிந்துரையே இந்தப் புத்தகத்துக்கு முடிவுரையாக ஆகிறது . "ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப் பாதிக்காத போது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும்” . இதை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

 உழவருக்காகவும் விவசாயத்திற்காகவும் குரல்கள் அதிகம் ஒலிக்கின்ற இந்த சமயத்தில், தமிழ்ப் பண்பாட்டுக்காகக் குரல் கொடுப்போர் அதை முற்றிலும் அறிந்து குரல் கொடுக்க இந்தப் புத்தகம் உதவும் . ஏனெனில், ஏதும் அறியாமல் ஒன்றுக்குக் குரல் கொடுத்தால்  அது நிலைக்காது என்பதை வரலாறு காட்டி இருக்கிறது .

வாழ்த்துக்கள் மகாராசன்.

திரு ஆசைத்தம்பி அய்யாவின் மதிப்புரை.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்

பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் விரிந்து கிடக்கின்றன.

கவிதைக்கேற்ற எடுப்பான பக்கங்களோ, மிடுக்கான காட்சிகளோ ஏதும் இல்லாமல், வெள்ளைக் காகிதத்தைக் கருப்பு எழுத்துகளால் அலங்கரித்து நிற்கிறது ஒவ்வொரு பக்கங்களும்.

நூலில் உள்ள எல்லா கவிதைகளும் சமகாலத்து உண்மையைச் சிறந்த சொற்களால் கவிதையாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொய் புனைவு சிறிதுமில்லை.

தாகம் இல்லாதோரும், தெளிந்த நீரைக் கண்டால் பருக நினைப்பது போல, பாமரனும் பருகும் வண்ணம் சொல் நிலத்துக் கவிதை தெளிந்து கிடக்கிறது.

பல முறை படித்தாலும் விளங்காத கவிதை நூல் பலவிருக்க, ஒரு முறை படித்தாலே இதயத்தில் குடி கொண்டு விடுகிறது சொல் நிலத்து வார்த்தைகள்.

நூலை அறிமுகம் செய்யும் விதமே படிப்பவர் மனதைக் கிறங்கச் செய்துவிடுகிறது.
                 தளுகை!
         நிலத்தால் மேனியில்
               உழவெழுதிய
         முன்னோர்களுக்கும்
      முன்னத்தி ஏர்களுக்கும்....
மேற்கண்ட அறிமுக வரியே என் அப்பன்,  அம்மா, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி அனைவரையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது பலவித உணர்வுகள் எனக்குள் எழுவதை உணர முடிந்தது.

'வாசிப்பு அளவு படிப்பு உள்ளவனும்' சொல் நிலத்தைப் புகழ்வதால்,
"கவிதை எழுதவும்,வாசிக்கவும் கவிதை மனம் வேண்டும் என்ற கருத்து, சொல் நிலத்தால் உடைபட்டது."
"கவிதை சாதாரண அறிவுக்குப் புலப்படாத அற்புதச் சக்தியால் விழைவது என்ற கருத்தும் பொய்யாய்ப் போனது."

பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறி வார்
என்னும் பாரதியின் வாக்கிற்கேற்ப எளிமையாக, பேச்சு வழக்கிலேயே கவிதைகள் நடைபோடுகின்றன.

சமுதாயச் சீர்கேடுகளையும்,
அவலங்களையும், கீழ்மைகளையும் சாடுகிற விதமாகக் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

வளர்ந்த கவிஞர்களும் ,வளரும் கவிஞர்களும், கவிஞராக வேண்டும் என்னும் துடிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டிய நூல்.

தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் ஒவ்வொருவரும் படித்துப் பெருமை கொள்ள வேண்டிய நூல் "சொல் நிலம்"

 உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்... (சொல் நிலம் )


மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மகாராசனின் மொழியில் நிமிரும் வரலாறு: மொழியால் நிமிர்ந்தது உணர்வு :- திரு ஆசைத்தம்பி

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை என
ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து
பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட  பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது தாய்க் கோழியின் தவிப்பாக மகராசனின் மனநிலையை இந்நூல் பேசுகிறது என்று கவிதை பட்டறை பதிப்பகம் எழுதியதை பார்க்கும் பொது மனசுக்குள் சோகம் இழையோடுகிறது.

அடுத்து " அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனும்டா "  என அப்பாவும் " "ஒழைக்காம உட்க்கார்ந்து சாப்புட்டா ஒடம்புல ஒட்டாது " என அம்மா சொன்னதையும் ஆசிரியர் நினைவு கூறும் போது யாரவது ஒரு பையன் வீட்டில் இருக்கலாம்ல ஏன் கஷ்டப்படுறீங்க என்று கேட்ட என்னிடம் என் ஐயாம்மா சொன்னது என் காதுகளில் ஒலித்தது ," "உண்ணப் பார்த்துக்கிட்டு இருந்தாலும் உழைக்க பார்த்துகிட்டு இருக்க கூடாது "

தனது எழுத்துக்களைப்  பற்றி  ஏர் மகராசன் ( ஏர் என்பது எங்கும் இல்லாத நிலையிலும் தனது பெயரில் அதை சேர்த்து நமக்கெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ) கூறுகிறார் இப்படி .  "பகட்டும் பூடகங்களும் புனைவுகளும் இல்லாத எளிய மக்களின் வாழ்வியல் கோலங்கள் போலத்தான் எமது எழுத்துக்களும் அழகியல் , கோபம் , திடம் , மானுட வாசிப்பு போன்றே எனது எழுத்துக்களும் எளிமையானவை . எளிய மக்களுக்கானவை " . ஆனால் கருத்துப் பட்டறையோ ," நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான் , நிலம் பற்றிய தவிப்பை ஏர் மகராசனால் புலப்படுத்த முடிகிறது அவருடைய பதிவுகளை வாசிக்கும்போது ஒட்டு மொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன " என்று கூறும் போது இந்நூல் வாசிப்பின் அவசியத்தை உணர்த்திக் செல்கிறது

தனது முதல் கட்டுரையில் ( பெண் ஆண் உடல்கள் சொல்லாடல்களும் பொருள் கோடல்களும் ) பெண்ணைக் குறித்த அறங்கள்  ஆண்களால் உருவாக்கப்பட்டவை ஆண் நோக்கிலானவை ஆண்களின் நலனுக்கானவை என்பதை அழகாக கூறுகிறார் . இறுதியில் ஆணுடன் வேறு பெண்ணுடல் வேறு . இந்த வேறுபாட்டை இயல்பாய் இயற்கையாய் அமைந்த ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையை இருக்க முடியும் . இந்த வேறுபாடுகளின் மீது ஏற்றது தாழ்வு காண்பிக்கும் போதுதான் செயற்கையாகவும் பொய்யாகவும் மாறி போகின்றன . பொய்யானவை நிலைப்பதுமில்லை வென்றதும் இல்லை என்கிறார்

பண்டைத் தமிழர்களுக்கான பண்பாடுகளை , இலக்கண மரபுகளை அறிய முடியாமல் நாம் தவிக்கும்போது தொல்காப்பியம் தான் தன்னை தாய் தந்தையாய் நம்மை தோளில் ஏற்றி வேடிக்கை பார்க்க வைக்கிறது என்று கூறும் ஆசிரியர் ஆனால் தொல்காப்பியர் பார்த்தது வேறு ( நம் மரபு ) . அவர்களின் மீதேறி  நாம் பார்ப்பது வேறு ( எதையும் மீளாய்வு செய்து பார்க்கிற புதுப் பார்வைகள் ) என்கிறார் . தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றைய வரையில் பெண்ணாடக்கல் என்பது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது .  எல்லா மதங்களும் பெண்ணுக்கு எதிராக பெண்ணுடலைப் சிறுமைப்படுத்துவதிலும் அடிமைப்படுத்துவதிலும் ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன  என்று ஆதங்கப்படும் ஆசிரியர்  ,   தொல்காப்பியம் , மனு சாஸ்திரம் , பைபிள் , திருக்குரான் , பௌத்தம் , சமணம் , டார்வின் ,புருத்தோன், சிக்மண்ட் பிராய்டு  ஆகியோர் அமைத்த கட்டுமானங்கள் உண்மையானதுமில்லை : உறுதியானதுமில்லை என்பதை சமூக மாற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன . வலுவானவை வாழும் .வலுவற்றவை வீழும் என்பதை மேற்குறித்த கட்டுமானத்திற்கு பொருத்திப் பார்க்கலாம் என்கிறார்

இரண்டாவது கட்டுரை பெண் கவிஞர் கனிமொழியின் கவிதை பற்றியது
" என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதை தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு "

தேநீர்க்கடை மேசையில்
ஒடுங்கியபடிக் கிடந்த
உன் கைகளை பற்றி
உன்னிடம் ஏதாவது பேசி இருக்கலாம்
ஒரு பிறழ்ந்த தருணத்தின்
தவறிய கணங்களில்
சிதறுண்டு போனது நம் உலகம்
தொலைந்து போன சில கணங்களைத்
தேடிக் கொண்டு இருக்கிறேன்
கறந்து போன நம் காதலை நியாயப்படுத்த "

இருவர் தலைகளும் சிதைக்கப்பட்டன
தலைகள் இருந்த இடத்தில்
கிரீடங்கள் வைக்கப்பட்டன
பீடத்தில் இருந்தவன் அட்சதை தூவினான்

இது போன்ற கவிதைகள்  இன்னும் சில

மூன்றாவது கட்டுரை சல்மாவின் கவிதைகளைப் பற்றி

"என்னை மீறித்
தீர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
தீரவே தீராத
தனிமையுடன் நான்
இங்கேதான் இருந்து வருகிறேன்"

" என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை

பனி படர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்

என்னை எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த எதையுமே "

குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்று தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் அருவருப்பூட்டுவதாய்
சொல்கிறாய்
இன்றும் இனியும் எப்போதும்
மாறுவதில்லை

இது போன்ற கவிதைகள்  இன்னும் சில

அடுத்தது நான்காவது கட்டுரை லதாவின் கவிதைகளைப் பற்றி

"வலி ருசிக்கும் அற்புதத்தை
அறிவாயோ என் பூவே
அணுவைத் துளைக்க
தாங்குமா என் சிறு பூ"

"தீயில் விறைத்து
நின்ற காலம்
நீர் தூவலில் வெடித்துச் சிதற
விழிகள் உயிர்பெற்று
விடை பெற்றன"

அடுத்து ஐந்தாவது கட்டுரை உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து

" நான் யார் ? பெரியவளா , சிறியவளா நீயே சொல்
அனு கேட்கையில் மரப்பாச்சி விழிக்கும்
எனக்குன்னு யார் இருக்கா ? நான் தனிதான ?
அனுவின் முறையாடல்களை
அது அக்கறையோடு கேட்கும் "

ஒரேயொரு முறை புரண்டு
விழித்துக் கொள்ளுங்களேன்
உடம்புக்கென்ன என்று
ஒரு வார்த்தை கேளுங்களேன்

ஏகப்பட்ட கவிதைகள் ஆசிரியரின் உரையாடல்களோடு

ஆறாவது பண்பாட்டு மார்க்சிய உரையாடல்

மார்க்சியத்தைப் பற்றி நடந்த ஒரு உரையாடலைப் பற்றி ஒரு உரையாடல்

அடுத்து ஏழாவது தினை மொழி எடுத்துரைப்புகள்

குறுந்தொகை கவிதையுடன் காதலர்களின் சங்கமங்கள் பற்றியது

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை  கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

நிகழ் காலத்திய வாழ்க்கையின் வூடே நகர்ந்து செல்வதை பற்றிய ஒரு உரையாடல்

எட்டாவது முல்லைப் பாட்டு பற்றியது

உரையாடல் முல்லைப்பாட்டு  கவிதைகளைப் பற்றி

ஒன்பது தற்கொலை செய்து கொண்ட உழவுக்குடிகள்

ஈராக் நாட்டின் பாக்தாத் அருங்காட்சியகம் அமெரிக்க படைகளால் அழிக்கப் பட்டபொழுது
மனிதத்தை நேசிக்கக் கூடிய கலைஞர்களிடையே  பெரும் கொதிப்பு இருந்தது . அந்த நாளின் இரவு முழுவதும் தனது அம்மா அக்கா தங்கை  உடுத்திய பழைய சேலை தாவணி பாவாடைத் துணிகளைக் கொண்டு நிறைய பொம்மைகளைச் செய்தவர் முருகபூபதி என்னும் கலைஞர் .அவரின் பெரும்பாலான நாடகங்கள் மக்களையும் மண்ணையும் கலைகளையும் நேசித்ததால் வந்ததாகும் .

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை
எனப் பாடியபடி  ஒருவர்
 முன்  செல்ல  மற்றவர்கள்  அவரைப்  பின்தொடர்கிறார்கள் . வேளாண்மைத்தொழிலால் மோசமாக்கப்பட்ட உழவர்களின் அழுகையும் ஒப்பாரியும் தான் நாடகத்தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரி பாடல் உணர்த்தியது

நிலத்தை நினைத்தும் மனைவி மக்களை நினைத்தும் செத்துப் போன சம்சாரிகளின் ஆன்மாக்கள்  அழுது புலம்புகின்றன . உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள்

பத்தாவது கோமாளிக்கூத்து

ஈழம் பற்றிய உணர்வுபூர்வமான உரையாடல்

போர் என்றால் வன்முறை . அழிக்கப்படுவது அநேகமாக பெண் உடல்களாக தான் இருக்கும். அதிக விதவைகள் வாழும் இடமாக ஈழம் போனது ஏன் ? விதைகளை விருட்சங்கள்  ஆக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது மிகப் பெரிய சோகம் . எம் தொப்பூள்க் கொடி உறவுகள் எம்மைக் காப்பாற்றுவார்கள் என மரண விளிம்பிலும் நம்பிக்கை வைத்திருந்த அவர்களின் நம்பிக்கையை மண்ணோடு மண்ணாய் ஆக்கியது நாமல்லவா ? நம்மை ஆண்ட அரசுகள் அல்லவா?  ஈழத் தமிழினத்தின் துயர் நிறைந்த கதையாடல்களை மிருக விதூஷகம் நடக்கமாய் ஆக்கியிருக்கிறார் முருக பூபதி .

எங்கள் வூரில் மலர்கள் இல்லை . பறவைகள் இல்லை வண்ணத்துப் பூச்சிகள் இல்லை . வண்டினங்களின் பாடல்கள் இல்லை பாதைகள் குழம்பிய பிரதேசத்திலிருந்து அவை திரும்பவே இல்லை . வூர் வூராய் தேடி வருகிறோம் . என அழுகிறார்கள் . மரணித்தவர்களுக்காகவும் மரணித்தவைகளுக்காகவும் அழுகிறார்கள் .

நாடற்ற மனித வாழ்வை நிலமிழந்த உயினங்களின் வாழ்வை, காடிழந்த மரங்களின் வாழ்வை ,வீடிழந்த மக்கள் வாழ்வை, கூடிழந்த பறவைகள் வாழ்வை, புதர் இழந்த பூச்சிகள் வாழ்வை ,கடல் இழந்த நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை ஆமை உருக்கோலம் பூண்ட கோமாளிகள்  அரங்கேற்றுகின்றார்கள்

11 ஆவது கட்டுரை புதைகுழி மேட்டிலிருந்து வேளாண்குடிகளின் ஒப்பாரி

அறமும் அதிகாரமும் ஆதிக்க சக்திகளின் உடைமை  அன்றும் .இன்றும் என்றும் . தலைப்புக்கேற்ப வேளாண்குடிகளின் பாதிப்புகளை விரிவாக பேசுகிறார் ஆசிரியர் . சிந்திக்க வேண்டியவை . வேளாண்குடிகளுக்கான கோரிக்கையையும் வைக்கிறார் . எல்லோரும் இணைந்து போராட வேண்டிய விஷயம்
உரைக்க வேண்டிய விஷயம் , உறைக்கும்மா நமக்கு ?
இறுதிக்கு கட்டுரை 12 ஆவது

புதைக்காட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்

பழங்கால பண்பாட்டு அடையாளப் பதிவுகளை மக்கள் தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகராசன் கண்டறிந்து விளக்கி இருக்கிறார் . எல்லோரும் அறிய வேண்டிய விஷயங்கள் இவை

"மொழியில் நிமிரும் வரலாறு" படித்தேன். இவர் மொழியால் நிமிர்ந்தது
 என் உணர்வு . வாழ்த்துக்கள்..... மகாராசனுக்கு..  இல்லை இல்லை ஏர் மகாராசனுக்கு .

வியாழன், 6 செப்டம்பர், 2018

சொல் நிலம் : மண்வாசனை நிறைந்த எழுத்துகள்:- பிரபு தனராஜ்.

மகாராசனின் சொல்நிலம் முழுதும் மண்வாசனை நிறைந்த எழுத்துக்கள். அனைத்து விசயங்களையும் விவசாயியாக / உழவனாக இருந்தே எழுதியுள்ளார்.

ஒரு விவசாயியாகவே கோபப்பட்டிருக்கார்.
ஒரு விவசாயியாகவே ரசிக்கிறார்
ஒரு விவசாயியாகவே காதலித்திருக்கார்.
ஒரு விவசாயியாகவே நொறுங்குகிறார்.
அத்தனை பக்கங்களும் நித்திலங்கள்.

சில முத்துக்கள்……

நகரம் பற்றி…
"கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ்வெளியாய்ச்
சுருங்கிப் போனது" என
ரத்தினச் சுருக்கமாய்ச் சொல்கிறார்.

மர நிழல் பற்றி…
மரநிழலில் இருக்கும்
செடிகளை வனமாக பாவிக்கிறார்.

"மனித நிழல்
போர்த்திய நாடு தான்
வெயிலில் வெந்து சாகிறது" என சபிக்கிறார்.

கள்ளிச்செடியைக் கூட
வேறு ஒரு கோணத்தில்
ரசனையாய் பார்க்க முடிகிறது இவரால்.

"வெம்பாலைச் சுமந்து
பசுந்தோல் மேனியில்
பச்சை உடுத்திச்
சிரிக்கிறாள், கள்ளி"
என்கிறார்.

வாழ்த்துக்கள் ஆசிரியரே…!

நண்பர் யாழ் தண்விகா கொடுத்த புத்தகம் ஒரு வழியாக வாசித்தாயிற்று.


திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புமாய் விரிந்திருக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வியலே நெய்தல் திணை. இது, மலை, காடு, வயல் போன்ற மற்ற நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது.

இத்தகையக் கடல்புறத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலை ஓரளவு பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியிருப்பினும், அப்பேச்சின் நீட்சி தொடரவில்லை. இப்போதுதான் கடல் நிலத்துக் கவுச்சி மணக்கும் வாழ்க்கை எழுத்துகளில் பரவத் தொடங்கியிருக்கிறது.

கடல் நிலத்துத் தமிழர்களின் தற்சார்பு, கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு, மீன்பிடித் தொழில் முறை, கடல் பயணங்கள், வானியல் அறிவு, கூட்டுழைப்பு, மாந்தநேயம், குடும்ப உறவுகள், மீன்பிடிப் படகுகள், கடல் சீற்றங்கள், தற்காலிகப் பிரிவுகள், இதற்கிடையிலான மகிழ்ச்சியும் துன்பமுமான பாடுகள் எனப் பேச வேண்டியவை ஏராளம்.

ஆனாலும், கடல்சார் தமிழர்களின் வலி தோய்ந்த வாழ்வியல் பாடுகள் சமவெளித் தமிழர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுவதில்லை. குறிப்பாகச் சொல்வதானால், கடல்புறத்து மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய புரிதல், சமவெளி மனிதர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்நிலையில்தான், கடல் நிலத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலைச் சமவெளி மற்றும் மலைவெளித் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தோழர் டி.அருள் எழிலன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும்  வெளிவந்திருக்கிறது 'பெருங்கடல் வேட்டத்து' எனும் ஆவணப்படம்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, ஒக்கிப் புயலால் 194 மீனவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தை அண்டி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மேற்குக் கடலோரத் தமிழர்கள்)  இறந்து போனதாக அரசு அறிவித்தது. பல நூறு மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பேர் மீட்கப்பட்டார்கள்.

கடலே வாழ்வெனக் கிடக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வில் இழப்பும் அழுகையும் தவிப்பும் வலியும் பிரிவும் மாறி மாறி வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டும் கடந்தும்தான் அவர்கள் இன்னும் அந்தக் கடல் மண்ணோடும் கடல் நீரோடும் ஒட்டி உறவாடிக் கிடக்கிறார்கள். இயற்கை தரும் காயங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பியிருக்கும் இந்த அரசு நிர்வாகங்கள் செய்த துரோகத்தின் காயங்களைத்தான் அவர்களால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தவகையில்தான், மீனவத் தமிழர்களுக்கு ஒக்கிப் புயலும் அரசு நிர்வாகங்களின் அலட்சியமும் தந்திருக்கிற காயங்களின் வலியை ஆவணப்படுத்தி இருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

இந்தப் படம், ஒக்கிப் புயலுக்குப் பின்பான மீனவத் தமிழர்களின் மிக முக்கியமான வாழ்வியல் களங்களைப் பதிவு செய்திருக்கிறது.

கடலுக்குள் சென்ற ஆண்களை இழந்து தனிமைப்பட்டிருக்கும் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அனாதைகளாக்கப்பட்டிருப்பதும், அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக்கப்பட்டிருப்பதுமான அவலங்கள் அவர்களது வாக்குமூலங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்குள் போய் வருகிற ஓர் ஆணை இழந்து, ஒரு பெண் அல்லல் படுகிற வலியே இந்தப் படத்தின் உயிர்.

மீனவக் கிராமங்கள் பெரும்பாலும் கிறித்துவ ஆலயங்களின் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், அருட்தந்தைகளும் ஆலயங்களும் விதிக்கிற கட்டுப்பாட்டு அறங்களை மீற முடியாதவர்களாய் மீனவர்கள் இருப்பதையும், பங்குத்தந்தைகளும் ஆன்மீகத் தலைவர்களும் அரசு நிர்வாகங்களை மீறியும் எதிர்த்தும் மீனவ மக்களுக்காகச் செயல்பட முடியாத கையறு நிலையில் இருப்பதால், அதனை அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்கின்றன என்பதையும் ஒளிச் சாட்சியம் செய்திக்கிறது இப்படம். அருட்தந்தை சர்ச்சில் அவர்களது பேச்சில் உண்மையும் அக்கறையும் கோபமும் நிறைந்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.

கடலுக்குள் சென்ற மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிக் கொண்டதற்கு, இங்குள்ள மத்திய மாநில அரசு நிர்வாகங்களே காரணம். முறையான தெளிவான வானிலை அறிக்கை மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் அரசு நிர்வாகங்களால் எடுக்கப்படவில்லை. கடல் புயலில் சிக்கியவர்களை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. அரசு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் கண்துடைப்பு நாடகங்களே. அரசு நிர்வாகங்களால் புயலில் சிக்கியவர்களை மீட்க முழு மனதுடன் இறங்கவில்லை. மாறாக, அவர்களை மீட்பதில் அலட்சியப் போக்கையே கடைபிடித்தது என்பன போன்றவற்றை மீனவர்களின் வாக்குமூலங்கள் அம்பலப்படுத்துவதை ஆவணப்படுத்தியிருப்பது இப்படத்தின் அரசியல் பலம்.

கடல்சார் மனிதர்களின் கடலியல் மற்றும் வானியல் அறிவை அரசு நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்துகின்றன என்கிற மீனவர்களின் வேதனையையும் ஆற்றாமையோடு படம் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரசு நிர்வாகங்கள் தம்மை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாகவே மீனவர்கள் உணர்வதைக் காட்சி மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

ஒக்கிப் புயலில் சிக்குண்டவர்களை மீட்பதில் அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தைக் காட்டியதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.

இன்றைய உலகமயச் சூழலில் காடுகள், வயல்கள், மலைகள், கடல் என அத்தனை நிலப்பரப்பும் வளங்களும் பெரு வணிக நிறுவனங்களாலும் நாடுகளாலும் சுரண்டலுக்கு உள்ளாக்கும் வகையில் இங்குள்ள அரசுகளால் தாரை வார்க்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் சாகர் மாலா என்கிற திட்டம்.

அதாவது, கடல்சார் தொல்குடி மீனவத் தமிழர்களைக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றவும் அந்நியப்படுத்தவுமான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்கிப் புயல் போன்ற கடல் சீற்றப் பாதிப்புகளுக்கு மீனவர்கள் உள்ளாகும் போது, அவர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமும் பாராமுகமும் காட்டப்படும் போது, அவர்களாகவே கடல் புறத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.   மீனவர்கள் மீதான இந்த அலட்சியம் என்பது, அவர்களுக்கான அச்சுறுத்தல்தான். மீனவத் தமிழர்களைப் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் அரசு நிர்வாகங்கள் வஞ்சித்து வருகின்றன; இரண்டாம் தரக் குடிமக்களைப் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள்; அரசுகள் அவர்களை முழுமையாகக் கை கழுவி விட்டன என்பதைக் காட்சி மொழியால் விவரித்துச் சொல்வதே இப்படத்தின் உள்ளீடான அரசியல்.

இழப்பும் இரங்கலும் நிறைந்திருக்கும் மீனவ வாழ்க்கைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே தான் இருக்கின்றன.

ஒக்கிப் புயலில் தனது கணவரை இழந்த இராசி அவர்களைக் குறித்த ஆவணப் பகுதிகள் வேறொன்றைப் பதிவு செய்கிறது. ஆண்களை இழந்த பெண்களின் கண்ணீரும் கவலைகளுமே நிரம்பி இருந்தாலும், ஆண்களை இழந்து அனாதை ஆகி இருப்பதைப் பேசினாலும், இராசியின் பேச்சும் கவலை மறைத்த வெள்ளந்தியான முகமும் பெண்ணின் நம்பிக்கைப் பாடுகளைப் பேசுகின்றன. கணவரை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழுதலின் நம்பிக்கையைப் பெண் பிள்ளைகள் தருவதாகப் பெண் பகிர்ந்திருப்பது வாழ்க்கையின் மீதான மீனவத் தமிழர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்படி, மீனவத் தமிழர்களின் வாழ்வியலைப் பேச நிறைய இருக்கிறது. உங்களது காதுகளையும் கண்களையும் கொஞ்சம் திறவுங்கள் என்பதான வேண்டுகோளோடு மீனவத் தமிழர்களின் வலியைப் பேசி படம் நிறைவடைகிறது.

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்

மீனவத் தமிழர்களின் வலி மொழியைக் காட்சி மொழியாக்கியுள்ள தோழர்கள்  அருள் எழிலன், ஜெயக்கொடி மற்றும் குழுவினருக்குப் பாராட்டும் அன்பும் வாழ்த்தும். இது போன்று நிறைய படைப்புகள் வெளிவரட்டும்.

பெருங்கடல் வேட்டத்து:
கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்.

தேனியில் திரையிடல் நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் நன்றி.

ஏர் மகாராசன்

புதன், 22 ஆகஸ்ட், 2018

எம்மூர் நிலத்தாள்

மழை நீர்
கோதிக் கசிந்திருந்த
ஈரப்பால் சப்பி,
வேர்க்கால் ஊன்றி
முளைகட்டித் தவழ்ந்து
முகம் காட்டிய
பசுந்தளிர்களுக்கெல்லாம்
தாயாய் இருந்தவள்,
கருப்பம்
கலைந்து கிடக்கிறாள்
வெஞ்சூட்டில்.

தூமையாய்க் கசிந்த
அரத்தப் பிசுபிசுப்பை
முகத்தில் பூசியபடி
மழைக் கஞ்சி
ஏங்கித் தவிக்கிறாள்
நிலத்தாள்.

ஆத்தாளின் வலியை
இப்போது
நிலத்தாளும்
சுமந்து கிடக்கிறாள்.


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்தது. கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்.

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.