புதன், 15 ஏப்ரல், 2020

சித்திரையும் ஆடியும் தையும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே! : மகாராசன்




தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை முதல் நாள் எனவும்,
தை முதல்நாள் எனவும்
இருவகைக் கதையாடல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில்,
சித்திரை முதல் நாளையும், தை முதல் நாளையும் கொண்டாடும் சடங்கு மரபு தமிழர் வழக்காற்றில் இன்றும் நிலவிக்கொண்டிருக்கிறது.

தமிழர் நாட்டுப்புற வழக்காற்றில் சித்திரை முதல் நாளையும் தை முதல் நாளையும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுவதைக் காட்டிலும், மாதப் பிறப்பு என்பதாகவே கொண்டாடும் மரபு இன்றளவிலும் இருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களின் முதல் நாள்களைக் கொண்டாடுகிற அல்லது உவப்பாய் வரவேற்கிற நாள்களாகக் கருதப்பட்டதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் சடங்கு மரபுகளும் வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் வளமைக் குறியீடுகளாகவே பயிலப்பட்டு வந்துள்ளன. உழவுத்தொழில் மரபின் அங்கமாய் எவையெல்லாம் இருந்ததோ, அவையெல்லாம் குறியீடுகளாகவும், போலச் செய்தலாகவும், வழிபடு வாழ்த்துச் சடங்குகளாகவும் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

'உழந்தும் உழவே தலை'யாக இருந்த அல்லது தலையாக இருக்கிற ஒரு சமூக அமைப்பில், உழவுத்தொழில் உற்பத்திச் செயல்பாடுகளின் பண்பாட்டுப் புலப்பாடுகளும் தலையாய இடத்தைப் பெற்றிருப்பதும் அல்லது பெறுவதும், பெருவாரி மக்களின் பண்பாட்டு நடத்தைகளில் அது செல்வாக்கு செலுத்துவதும் இயல்பு. தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் உழவுத்தொழில் மரபினர் மற்றும் உழவுத்தொழில் துணை மரபினர் பின்பற்றி வந்த புலப்பாடுகளே ஆகும். உழவுக்குடிகள் உள்ளிட்ட பதினெட்டு குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுதான் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பதும்.

அந்தவகையில், சித்திரை, ஆடி, தை போன்ற மாதங்கள் தமிழர்களின் பண்பாட்டுப் புழங்கலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதும் உழவுத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சடங்கு வடிவங்கள்தான்.

ஆடி மாதப் பெருக்கு என்பது, ஆற்றுநீர்ப் பெருக்கை பதினெண் குடிகளும் ஒன்றாகச் சேர்ந்து வரவேற்கும் நீரியல் சடங்கு ஆகும். உழவுக்கும் வேளாண்மைக்கும் பெரும்பங்காற்றும் நீர்த் தடங்களைத் தூர்வாரி ஆற்றுநீரை மேலாண்மை செய்யும் இன்னொரு சடங்கு வடிவம்தான் அது. அதனால்தான், ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் நிகழ்வு அந்த மாதத்தில் நடந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் சொல்லாடல், உழவுக்கு அடிப்படையான நீரை அடிப்படையாகக் கொண்டது.

இதேபோல, தை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. உழவர்களுக்கும் கால்நடைகள், சூரியன் போன்றவற்றுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடை தான். இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான்.

சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடை காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கி காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடை காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைகாலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது.

இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர்.
கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும் ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்துசேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி,வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். இத்தகைய கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நாளேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகையக் கோடை உழவுச் சடங்கை சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் பொன்னேர் பூட்டுதல், ஏர் மங்கலம் எனும் பெயர்களால் குறிக்கின்றன. ஆக, கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும் நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீக பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். ஆரிய வைதீக மரபு தன்வயப்படுத்திக் கொண்ட சித்திரை முதல்நாள் விழாவை அதனிடமிருந்து மீட்டெடுத்து கோடை உழவுத் திருநாளாக / நாளேர் பூட்டுத் திருநாளாக/பொன்னேர் பூட்டுத் திருநாளாக/ ஏர்பூட்டுத் திருநாளாக முன்னெடுத்து உழவுப்பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது தமிழரின் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

சித்திரையும் தையும் ஆடியும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே.
இதற்கும் ஆரிய வைதீக மரபுகளுக்கும் துளியும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஏர் மகாராசன்
14.04.2020.

திங்கள், 6 ஏப்ரல், 2020

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: முக்கியமானதோர் ஆய்வு நூல் :- அறிவியலாளர் பிரபாகரன்.




முனைவர் மகாராசன் அவர்களுடைய தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்ற முக்கியமானதொரு ஆய்வு நூலை நேற்று தான் முழுவதுமாக வாசிக்க நேர்ந்தது. இதை முக்கியமான புத்தகம் என்று சொல்வதற்கு என்னிடம் நான்கு காரணங்கள் உள்ளன. 1) பேச்சும் எழுத்தும் சேர்ந்த மொழியின் அடிப்படைக் கூறான பேச்சு தோன்றிய விதத்தை, அதன் தேவையை டார்வினின் பரிணாமக் கொள்கையின் வழி நின்று விளக்கிய விதம். “முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தியதாலும், குரல் வளையை பேசுவதற்கு உபயோகப்படுத்தியதாலுமே” குரங்கிலிருந்து மனிதன் வேறுபடுகிறான் எனவும் இந்த இரண்டிற்கும் அடிப்படை, உழைப்பு மட்டுமே என்ற அறிவியலை மிகத் தெளிவாக, பேச்சின் தோற்றம் குறித்த விளக்கத்திற்கு பயன்படுத்தியதற்கு. 2) “தமிழி” எழுத்துகளின் காலம் (தோராயமாக கி.மு 5-6 ஆம் நூற்றாண்டு) பிராமி எழுத்துகளுக்கும் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) முந்தியது என்பதை “கொற்கை, ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகங்குளம்” போன்ற இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் முடிவுகளுடன் ஒப்பிட்டு வாதிட்டிருப்பது. மேலும் “தமிழி” எழுத்து அரசதிகார எழுத்தாகவோ, கடவுளின் எழுத்தாகவோ இல்லாமல் அது மக்களின் எழுத்தாக இருந்ததை ஆதாரத்துடன் குறிப்பிட்டதற்கு. 3) ‘பாட்டியல்’ உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்கள் “தமிழ்” எழுத்துக்களின் மீது சாதிய- மத- வர்க்க- பாலின பாகுபாட்டை ஏற்றிருந்ததையும் அப்படி அத்தகைய அடையாளங்கள் இருந்தாலும் அதனால் “தமிழ்” எழுத்துகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பல இலக்கண நூல்களின் வழி கொடுத்த விரிவான விளக்கத்திற்கு. 4) இதுதான் மிக மிக முக்கியமானது. நீண்ட நெடும் வருடங்களாக தமிழ் எழுத்து முறையில் இருந்து வரும் “உ” என்ற எழுத்துக் குறியீட்டுடன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை மறு ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சித்ததற்கும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பரந்த ஆய்வும். தமிழ் எழுத்து மரபில் “உ” என்ற எழுத்தைக் கொண்டு ஒரு விஷயத்தை எழுத ஆரம்பிக்கும் பழக்கத்திற்கு உண்மையான காரணம் பிள்ளையார் சுழிக்காக அல்ல. மாறாக “உலகம்” என்ற ஒரு பொதுமைப்படுத்தலைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்பதை இலக்கியம், மக்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் மற்றும் குல தெய்வ பெயர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டிருப்பது. இந்த நான்கு முக்கிய விளக்கத்திற்கும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட ஆய்விற்கும் வாழ்த்துகள். தமிழின் மீதான உங்களின் ஆய்வு மேலும் தொடரட்டும்.

பகடி மனப்போக்கும் மடைமாற்ற நுண் அரசியலும்: மகாராசன்.




பெரும்பாலான பெருந்திரள் மக்கள் கூட்டம், அதிகாரத்தின் கோரப்பசிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி அரசு எனப் படர்ந்திருக்கும் அதிகாரத்தின் துணையோடு மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இன்னும் பலவற்றின் பெயராலும் நடக்கிற அத்தனை நடவடிக்கையாலும் உடலும் உள்ளமும் நொந்துபோய் வெந்து சாகிறார்கள்.

புரட்சியும் போராட்டமும் கசிந்து பெருகாதா? என ஏங்கிக் கிடக்கிறார்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கூட்டத்தினர். புரட்சிகர உணர்வும், அதிகாரத்திற்கு எதிரான கோபமும், போராட்டங்களோடு பங்கேற்பும் என்பதெல்லாம் அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டியிருக்கும் இயல்பு.

அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் தேவை. புரட்சிக்கும் போராட்டத்திற்குமான அரசியல் சூழலை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். இதைச் செய்யவேண்டிய மக்கள் திரள் இயக்கங்களின் வாக்கு அரசியல் பங்கேற்பாலும், அதைச் சார்ந்த தொழிற்சங்கங்களின் பலவீனங்களாலும் புரட்சிகர அரசியல் சூழல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. புரட்சிகர இயக்கங்களின் போதாமைகளும் பலவீனங்களும் கூட இதற்குக் காரணம்.

தமிழகச் சூழலில், ஆரியத்துக்கும் தமிழுக்குமான நெடும்பகையும் முரணும் எல்லாத் தளங்களிலும் பரவிக் கிடக்கின்றன. மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், பண்பாட்டியல், அறிவியல், கலைகள், அறிவு, நடத்தை, வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், வாழ்வியல், தொழில், சமூக உறவுகள், கல்வி என அனைத்திலும் ஆரியத்திற்கு எதிரான அடையாளமும் மரபும் ஏகத்துக்கும் இருக்கின்றன.

இவற்றின் ஒவ்வொரு இண்டு இனுக்கிலும் காணப்படுகிற ஆரியத்திற்கு எதிரான அடையாளங்களை இனம் காண்பதை விட்டுவிட்டு, அதன் வேர்களையும் வரலாற்றையும் மீட்டெடுப்பதை விட்டுவிட்டு, ஆரியத்திற்கு எதிரான தமிழர் மரபுகளை முன்னெடுப்பதை விட்டுவிட்டு, வெறுமனே ஆரியத்தைப் பகடி செய்யும் கேளிக்கை மனிதர்களாக மட்டுமே இருக்கும் சூழலைப் புறந்தள்ள வேண்டியதைக் குறித்துத் தமிழர்கள் பரிசீலிக்கவேண்டியது அவசியம் ஆகும்.

அரசதிகாரத்தின் அறிவிப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், அட்டூழியங்கள், அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள், பயங்கரவாதப் போக்குகள், மத அடையாளங்கள், சாதியக்கூறுகள், அரசதிகாரத்தின் முகங்கள், அதன் அடிவருடிகள் பற்றியெல்லாம் வெறுமனே கேலியும் கிண்டலுமான பகடி செய்வதால் மட்டுமே அவற்றை வீழ்த்திவிட முடியும்; அவை வீழ்ந்திடும் என நினைப்பதும், அத்தகைய பகடிகளே அரசதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாகப் பாவிப்பதும் இன்னொரு வகையில் மூடநம்பிக்கைதான்.

அண்டா திருடர்கள், பிரியாணித் திருடர்கள், டவுசர் சங்கிகள் எனப் பகடி செய்துகொண்டிருந்த காலத்தில்தான், யாரைப் பகடி செய்தார்களோ, அவர்களேதான் அரசதிகாரத்தை இன்னொருமுறையும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

கொரானா தீநுண்மி நோய்த்தொற்று பரவலாகப் பரவி வரும் சூழலில், அரசதிகாரம் முன்மொழிந்த ஊரடங்கு, தனித்திருத்தல், கைதட்டுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றையெல்லாம் பகடி செய்யும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் பரவி வருகின்றன.

வெறுமனே பகடி செய்துவிட்டுக் கடந்துபோய் விடுவதே அரசதிகாரத்தினை எதிர்ப்பதாகக் கொள்ள முடியாது. அரசதிகாரத்தின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிரான கோப உணர்வுகளுக்குப் பதிலாக, பகடி செய்து மகிழும் இந்த மனப்போக்கையே அரசதிகாரமும் விரும்புகின்றது.

கோப உணர்வும் புரட்சிகர உணர்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவேதான் பகடியான-கேளிக்கையான பதிவுகளை அரசதிகாரத்தின் ஊடக நிறுவனங்களே உருவாக்கிக் கொடுக்கின்றன. இந்தப் பகடிச் செய்திகளை, காட்சிகளை, பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலமே அரசதிகாரத்தை எதிர்த்து நின்றவர்கள் என்கிற தகுதிப்பாட்டை அடைந்துவிடச் செய்து விடுகிறார்கள்.

அதிகாரத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தி, அதன் அட்டூழியங்களுக்கு எதிரான மக்களின் எழுச்சியை உருவாக்கும் கலைப் படைப்புகளையும், காட்சிப் படங்களையும், கட்டுரைகளையும் அதிகமாக உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உழைக்கும் மக்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. அந்த வேலைகளையெல்லாம் நாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மறந்துவிட்டு, அரசதிகாரத்தைப் பகடி செய்வதில் மட்டுமே நிறைவடையும் மனப்போக்கானது, அரசதிகாரத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, நம்மை மடைமாற்றம் செய்து, அரசதிகாரத்திற்குத் துணையாகவே இருக்கும் என்பதை உணரும் காலமும் இதுதான்.

ஆயினும், மிகச் சில ஓவியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், தோழர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களது படைப்புகள், பதிவுகளின் வாயிலாக அரசதிகாரத்தின் மீதான எதிர்ப்பைப் புலப்படுத்தியும் வருகின்றனர். இதுவே இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.

இறுதியாக ஒன்று,
அதிகாரத்தின் நிழலில் அண்டி வாழப் பழகிவிட்ட ஒரு சமூகம்தான், பகடியால் மட்டுமே தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கும்.

ஏர் மகாராசன்
06.04.2020

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தமிழின் தொன்மையான வரலாற்றுக்காலம் பற்றி அறிய உதவும் நூல்: செல்வா தமிழ், சமூகச் செயல்பாட்டாளர்.






முனைவர் மகாராசன் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' என்னும் ஆய்வு நூலானது, ஒரு மொழி என்பது எவ்வாறு தோன்றியது? எப்போது எழுத்து வடிவம் எடுத்தது? மொழியைச் செழுமைப்படுத்த இலக்கண நூல்கள் எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அது எவ்வாறு ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாய் உள்ளது? என்பன பற்றி விரிவாக ஆய்வு செய்து தரவுகளுடன் தரப்பட்டுள்ளது.

மொழியைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நூலை நான் படிப்பது இதுதான் முதல் முறை. தோழர் மகாராசனின் எழுத்துநடை ஒரு ஆய்வு நூலைப் படிப்பதற்குச் சிரமமின்றி எளிமையாக இருந்தது.

இந்நூலில் உள்ள சில கருத்துக்கள்...

மனித சமூகத்தின் உழைப்பில் விளைந்ததே மொழி. எனவே, சமூகம் இல்லாமல் மொழி இல்லை; மொழி இல்லாமல் சமூகத்தின் வளர்ச்சி இல்லை. எனவே, இரண்டும் இணைந்தே இயங்குகிறது.

மொழிக்கு நிலைபேறு என்கிற தகுதிநிலை அளிப்பது எழுத்தாகும். மொழியின் ஒலி வடிவத்திற்கு வரி வடிவம் கொடுப்பதே எழுத்துதான். எழுத்து என்னும் சொல்லை நோக்கும் போது உண்மையில் எழு என்னும் சொல்லே வேர்ச் சொல்லாக இருப்பது புலனாகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவமான பிராமி என்னும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும் தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகும் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் இதனை மறுத்து, கி.மு .15 ஆம் நூற்றாண்டு வரை வழமையான எழுத்து வடிவத்தைக் கொண்டதாகத் தமிழ்மொழி உள்ளதாக நிறுவுகின்றன. தமிழில் உள்ள எழுத்து வடிவத்திற்குத் தமிழி எனக் குறிக்கலாம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

எ.கா. 1970ம் ஆண்டு கொற்கைத் துறைமுகக் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த பானை ஓடு ஒன்றில் தமிழ் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதனைக் கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதன் காலம் கி.மு. 550 முதல் கி.மு. 660 இருக்கலாம் என்பதை நிறுவுகிறது.

அதேமாதிரி, தற்போது கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்து வடிவத்தின் பழமையை நிறுவுகிறது. எனவே, பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து தமிழ் எழுத்து உருவாகவில்லை. மாறாக, அதற்கு முன்பே தமிழ் எழுத்து வடிவம் இருந்திருக்கின்றது; அது தமிழி எழுத்து வடிவம் ஆகும். அதற்கென தனி வரலாறும் உண்டு.

தமிழி எழுத்து வடிவம் கிடைக்கப்பெற்ற பொருட்களில் எல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்தியவை ஆகும். மற்றும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்திய பொருள்களில் எழுதப்பட்டுள்ளது. இது சமூகத்தில் அடித்தட்டு மக்கள் வரை கல்வி அறிவு பெற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துள்ளதை நிறுவியுள்ளது.
ஏனென்றால், பெரும்பாலும் வட இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் செப்பேடுகள் போன்றவற்றில்தான் முதன்முதலாகப் பிராமி எழுத்து வடிவத்தில் பிராகிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது . ஆனால், அதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு சாதாரண மக்கள் பயன்படுத்திய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே ஒரு மொழியின் வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால் மொழி எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பாகப் பல நூறு வருடங்கள் பேச்சு மொழியாக இருக்கும். எனவே, தமிழ்மொழியின் வரலாறு என்பது கிடைக்கப்பட்ட தரவுகள் ஆதாரங்கள் அடிப்படையில் தோராயமாக கி.மு. 2000ஆம் ஆண்டுகள் என மதிப்பிடலாம்.
இது போன்ற பல தகவல்கள் இந்நூலில் உள்ளன.

தமிழ்மொழியின் தொன்மையான வரலாற்றுக் காலம் பற்றியும், சிறப்பைப் பற்றியும் அதை பயன்படுத்திய மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இவ்வாய்வு நூலைத் தோழர்கள் அவசியம் வாசிக்கவும்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம்: திராவிடமயமாக்கலின் தோல்வியும் வெற்றியும்:- மகாராசன்.



தமிழ்மொழியைத்
'திராவிட மொழி'என்றும்,
தமிழ் இனத்தைத்
'திராவிடர்' என்றும்,
தமிழ்நாட்டைத்
'திராவிட நாடு' என்றும்,
தமிழ்ப் பண்பாட்டு நாகரிகத்தைத்
'திராவிடப்
பண்பாட்டு நாகரிகம்' என்றும்,
தமிழர் திருநாளைத்
'திராவிடத் திருநாள்' என்றும்
தெரிந்தோ தெரியாமலோ 'திராவிடமயமாக்கம்' நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன.

இச்சூழலில், தமிழர் மரபு அறிவின் நீட்சியாக - அனுபவ அறிவின் பயனாக - இயற்கை உறவின் கொடையாக - தமிழர் நிலத்திற்கே உரித்தான இயற்கை மருத்துவமாக- பயில்முறைக் கல்வியாகப் பரிணமித்த மருத்துவ முறையாகச் 'சித்த மருத்துவம்' தோன்றி வளர்ந்திருக்கிறது. தமிழ்மொழிக்கும் சித்த மருத்துவத்திற்குமான பிணைப்பு இணைபிரியாதது. சித்த மருத்துவம் என்பது, 'தமிழ் மருத்துவம்' என்று சொல்லுமளவிற்குத் தமிழின் மருத்துவ அடையாளமாகத் திகழக்கூடிய ஒன்று.

தமிழின் அடையாளங்கள் அனைத்தையும் திராவிடமயமாக்கி வந்த சூழலில், தமிழ் அடையாளங்களுள் ஒன்றான சித்த மருத்துவத்தை - தமிழ் மருத்துவத்தை மட்டும் திராவிடமயமாக ஆக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தைத் 'திராவிட மருத்துவம்' என்பதாகத் திராவிட மயமாக்கவில்லை. திராவிட மருத்துவம் என்பதாகக்கூட, சித்த மருத்துவத்தை முன்னிறுத்தவோ அல்லது முன்மொழியவோ செய்திடவில்லை.

தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ சித்த மருத்துவம் எந்த வகையிலும் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சதியும், ஏமாற்றும், மாயத்தோற்றமும், அச்சுறுத்தலும், கட்டுப்பாடும், சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்கள் அழிப்பும், குல நீக்கமும், அதிகாரத் துணைகொண்ட ஒடுக்குமுறையும், படுகொலையும் 16ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து இன்றுவரையிலும் நீடிக்கின்றன. ஏனெனில், அறிவியல் தொழில்நுட்பத் தோற்றத்தில் - வணிகமயக் கண்ணோட்டத்தில் உள்நுழைக்கப் பார்த்த அலோபதி மருத்துவ நுழைவுக்குப் பெருந்தடையாக இருந்தது சித்த மருத்துவ முறைதான்.

இன்றும் கூட அலோபதியின் வணிக நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் அதுதான். அதனால்தான், சித்த மருத்துவத்தைத் திராவிட மருத்துவமாகவோ அல்லது தமிழ் மருத்துவமாகவோ பரவலாக்கம் செய்திடவில்லை அதிகாரத் தரப்பினர்.

அலோபதி மருத்துவக் கட்டமைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவங்கள், உள்கட்டமைப்புகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை போல, சித்த மருத்துவத்தையும் நவீனப்படுத்தவும் பரவலாக்கவும் செய்கின்ற முயற்சிகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவுதான். இந்த மண்ணில்-இந்த மக்களால்-இந்த மரபில் தோன்றி பன்னெடுங்காலமாக மக்கள் மருத்துவமாகத் திகழ்ந்துவந்த சித்த மருத்துவமானது, அலோபதி மருத்துவ நுழைவுக்காகவே இரண்டாம்தர மருத்துவமாகத் திட்டமிட்டுத் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இது அறிவியல் அற்றது; நவீனப்படாதது; நிரூபிக்கப்படாதது; அனைத்து நோய்க்கும் மருந்தில்லாதது என்கிற புனைவுகள் அக்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் முன்வைக்கப்படுகிற கொச்சை வாதங்கள்தான்.

இவர்களது நோக்கமெல்லாம், சித்த மருத்துவமானது தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ நவீனமாக மாறிவிடக்கூடாது என்கிற எண்ணம்தான். கூடவே, அலோபதியின் வணிக நோக்கில் கைகோர்ப்பதும்தான்.

சித்த மருத்துவம் என்பதைப் பொருத்தளவில், அதனைத் திராவிட மருத்துவம் என்று சொல்லும்படியாகவும் அதை ஆக்க முடியவில்லை; அப்படியாக அதை ஆக்கவும் விரும்பவில்லை. இதில்தான் திராவிடமயமாக்கலின் தோல்வி அடங்கி இருக்கிறது; கூடவே வெற்றியும் மிதமிஞ்சி இருக்கின்றது.

பிற்குறிப்புகள்:

1. சித்த மருத்துவத்திற்கும் தமிழகத்தில் இருந்த மடங்களுக்கும் நிறையத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, தமிழக மடங்கள் சமயக் கல்வியை வலுப்படுத்தும் விதமாக கட்டடக் கலை, ஓவியம், இசை, நாட்டியம், மருத்துவம், மெய்ப்பொருள் அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், அடிப்படையான மொழி, மொழியைச் செம்மைப்படுத்தும் இலக்கணம், கோவில் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தோத்திர நூல்கள் போன்றவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தன.

தமிழர்களின் பொது அறமாக வழிவகுக்கப்பட்ட 32 பொது அறங்களில் பசிக்கு உணவளித்தல், ஆதுலர்க்குச் சாலை அமைத்தல், கல்விச் சாலை அமைத்தல் மூன்றும் தலையாயன. ஆன்மா எனும் மனதைச் சுத்தப்படுத்த யோக ஞானப் பயிற்சியும், உடம்பை வலுவாக்க அன்னம் அளித்தும், உடம்பை நோயில் இருந்து பாதுகாக்க மருத்துவப் பயிற்சியும் மடங்கள் மூலமாக அளிக்கப்பட்டு வந்தன.

அனைத்துத் தமிழக மடங்களும் சமய நூல்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான தமிழ் அனுபவச் சித்த மருத்துவச் சுவடிகளைப் பாதுகாத்தும் வந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதிகைச் சித்தர் மரபு, திருமூலர் மரபு, வள்ளலார் மரபு போன்ற பல்வேறு அமைப்புகள் மடங்கள் மூலமாக வந்த வழித் தோன்றல்கள்தான். இவர்கள் தொண்டை மண்டலம் முழுமையும் ஞானக்கல்வியும், சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து வந்தனர். மேலும், இலவச அன்னம் அளித்து, சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து, இலவச தர்ம வைத்திய சாலைகளை நடத்தி வந்துள்ளனர். இதில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் அன்றைய காலத்தில் கைவிடப்பட்ட ஏழைப் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மடங்கள் யாவும் கோயிலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன. இந்த மடங்களுக்குக் கோயில்கள் மூலமாகவே மானியம் அளிக்கப்பட்டு வந்தன. இந்த மானியங்களைக் கொண்டுதான் பல்வேறு வகையில் அறப்பணிகளைச் செய்துவந்தன. பொதுவாக, கோயில்கள் அனைத்தும் அதிகார அமைப்புகளின் மிக முக்கியமான நிறுவனமாகச் செயலாற்றி வந்த நிலையில், பிற்காலத்தில் நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டன் அரசாங்கம்கூட கோயில்களுக்குள்ளும் மடங்களுக்குள்ளும் அதிகப்படியாகத் தலையிட்டுக்கொள்ளவில்லை.

பிரிட்டன் அரசுக்கு முன்பான காலங்களில் அரசுகளின் நிர்வாகத் தளங்களாக இருந்தவை
கோயில்களும்அதன் துணை அமைப்பான மடங்களுமே ஆகும். இங்குதான் வானியல், சிற்பம், ஓவியம், கட்டிடம், பண்டுவம், கூவகம், நாடகம், பாடல், நடனம், இசை, கல்வி போன்ற சாத்திரத் துறைகளும் அதன் கலைஞர்களும் இயங்கினார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் அரசு சார்ந்து மட்டும் இருந்தன. இதனால் மக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளி அதிகமாக இருந்தது. இந்தக் காலத்தில் ஆட்சிக்கு வந்த பிரிட்டன் அரசு 'கோயிலில் ஊழல்; எளிய சூத்திர மக்கள் நுழையத் தடை' இருப்பதாக் கணக்கில் கொண்டு முடக்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, கோயில் மற்றும் மடங்களின் மானியத்தால் மட்டும் பிழைத்துக்கொண்டிருந்த இக்கலைஞர்கள் தெருக்கூத்தாடிகளாக மாறினர் என்பதே வரலாறு.

பண்டுவர்கள் கிராமங்களை நோக்கி வேளாண்குடிகளைச் சார்ந்து தனித்தனியாகப் பிரிந்து போயினர். இதனால், அவர்களிடையே பண்டுவம் தொடர்பாக இருந்து வந்த விவாதக் கருத்துப் பரிமாற்றங்களும் செத்துப்போயின. இதையும் தாண்டி "இவர்களால் நமக்குப் பெரும் தொல்லை இல்லை" என சில வேதாந்த மடங்களைப் பிரிட்டன் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டதால், தொண்டை மண்டலத்திலும் தென்தமிழகத்திலும் சித்தமருத்துவப் பண்டுவம் சாமனிய மக்களைக் காக்கவும் செய்தது.

கோவில் நிறுவனங்கள் அனைத்தும் நீதிக்கட்சி ஆட்சியில் (Endowment Bord) அறநிலையத்துறை என்ற துறையின்கீழ் கொண்டுவரப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, 1947 காலத்திற்குப் பிந்தைய எல்லா வகைப்பட்ட ஆட்சிக் காலங்களிலும் கோயில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதோடு, கோயில்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்பட்டன. மானியங்களை நம்பியே செயல்பட்டு வந்த மடங்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. மடங்களில் செயலாற்றி வந்த சித்த மருத்துவப் பண்டுவமும் பண்டுவர்களும் அரசின் ஆதரவின்றிப் போனதாலும், அரசின் நெருக்கடி மிகுதியாலும் மடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், மடங்களில் இருந்த பல லட்சக்கணக்கான மருத்துவச் சுவடிகள்/ ஆவணங்கள் மறைந்தும் அழிந்தும் போயின.

இத்தகைய அறமடங்களை வெறும் ஆன்மீக மடங்களாகவே பார்த்துக் கருதியதும், அதைச் சமய அடையாளங்களாக ஒதுக்கியதும் நீதிக்கட்சி தொடங்கி திராவிட ஆட்சிக்காலங்கள் வரையிலும் அதிகம் நடந்தேறியுள்ளன.

2. ஆந்திரம் கர்நாடகம் கேரளத்தில் ஆயுர்வேதமே அம்மக்களின் மருத்துவமாக உள்ளதற்குக் காரணம், அங்கு சமற்கிருதக் கலப்பு என்பதைவிடவும் சமற்கிருதத்தில் அது அரசு மாயமானதே. இங்கு சமற்கிருதத்திற்குள் போகாதது திராவிடக் கட்டமைப்பு என்பதும் பொய். திராவிடக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே சித்த மருத்துவப் பண்டுவமானது கொரோனா தனிமைப்படுதல் போல் தன்னைச் சுற்றித் தானே வளப்படுத்தி வந்திருக்கிறது. இதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் என்பதே ஆய்வுப்பூர்வமானது.

3. பிரிட்டன் அரசு இந்திய ஒன்றியப் பகுதிகளில் மருத்துவங்களுக்காகப் பள்ளி / கல்லூரி தொடங்கியபோது சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பொருட்படுத்தவில்லை. இதைப் பிரிட்டன் அரசுக்கு எடுத்து வைக்க வேண்டிய நீதிக்கட்சியும் முனைப்பு காட்டவில்லை. அதேவேளை, மக்களிடம் சித்த மருத்துவப் பண்படுவம் பரவலாக இருந்தது. இதை நிராகரித்தால் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். இதே சூழலில், தமிழகத்தில் ஆயுர்வேதப் பள்ளியைத் தெலுங்கு பிராமணர்கள் துவக்கியபோதும், நீதிக்கட்சிக்காரர்கள் சித்த மருத்துவப் பண்டுவப் பள்ளி தொடங்க உதவவில்லை என்பதே வரலாறு.

4. உடல் உள்ளுறுப்பு அறுவை சிகிச்சை தொடங்கிய காலத்தில், ஆங்கில மற்றும் உலகளவில் உள்ள மருத்துவக் கூட்டுக் குழுவே செய்திடத் தொடங்கியது என்பதைப் பிரிட்டன் குறிப்புகளே சொல்கின்றன (குரோத் ஆப் மெடிக்கல் இன் இராஜ் நூலில்).

இதைத்தொடர்ந்தே, ஆட்சி அதிகாரத்திலிருந்த கிழக்கு இந்தியப் பிரிட்டன் கம்பெனியானது, அரசைத் தனக்குரியதாக்கியதுடன் தான் ஆண்ட நாடுகளில் எல்லாம் அதைப் பரப்பிப் பணம் ஈட்டியது.


5. சித்த மருத்துவப் பண்டுவத்தில் 4446 நோய்கள் மட்டுமே உள்ளது. புதிய நோய்களுக்கு மருந்தில்லை என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பூமிப்பந்தில் மரபணு திடீர்மாற்றம் (Genetical change and mutation) அடைவது பல கோடி ஆண்டுகள் என ஆய்வு அறிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொண்டது விஞ்ஞானம். இதன்படி எந்த உருமாற்றமும் மனித குலத்தில் நிகழாதபோது, எப்படி புதிய கண்டுபிடிப்பு மருந்துகள் உருவாகி இருக்கும்?

உடற் கூறுகளில் உள்ள (body mechanism and metabolism) உட்கூறுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதேபோல் நுண் கிருமிகள் மூட்டேசன் நடக்கவில்லை. நடந்தது என நாம் நம்புவது கலப்பு; ஒட்டு. இதனாலும் பெரும் மாற்றம் நிகழவில்லை.

எச்அய்வி, காலரா, பிளேக் போன்ற நோய்களுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை புதிய நோய்கள் இல்லை. எச்அய்வி தீநுண்மி கண்டறியப்பட்டதால் அன்று முதலே அந்நோய் உருவானதல்ல. அதற்கு முன்பே மேக வெட்டை என்ற பெயரில் முன்பே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

6. உள் உறுப்புகள் தொடர்பான கணிப்புக் கருவிகள் எக்ஸ்ரேயில் தொடங்கி இன்றுவரையிலும் பலவகையான நுண் நுட்பமான கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இதற்கு ஏற்றால்போல் சித்த மருத்துவப் பண்டுவத்தில் இல்லையென்பதால் சமற்கிருதம் போல் அழிந்து விடும் என எழுதுவது, சித்த மருத்துவப் பண்டுவ அறிவை நாம் இழக்க வைத்தன் விளைவாகும்.

நாடி பார்ப்பதற்கு இன்று அரசுக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியப் பெருமக்களே குறைவு என்பதைவிட, அதன் அடி நாளத்தைத் தொடவில்லை. காரணம், அரசு நிறுவனமாக்கிய கல்வியைக் கொடுத்தவுடன் இவர்கள் சித்த மருத்துவப் பண்டுவர்களைப் போலியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரத்தில், சித்த மருத்துவப் பண்டுவர்களிடமிருந்த அறிவைப் பெற மறுத்ததுடன், அந்தப் பட்டறிவைத் தள்ளுபடியும் செய்தனர்.

நாடி பார்ப்பது நூலில் இருந்தாலும், நாடி பார்ப்பது என்பது அனுபவத்தின் நுட்பமான அறிவாகும். இதைப் படிப்பதால் மட்டுமே பயன்படுத்திட இயலாது என்பதை அவர்கள் அறிந்ததால்தான், டெத்தஸ்கோப் வேண்டும் எனப் போராடிப் பெற்று ஆங்கில மருத்துவர்களைப்போல் கல்வி நிறுவனங்களில் பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் வலம் வருகிறார்கள். அதேபோல், சித்த மருத்துவப் பண்டுவத்தில் உள்ள செந்தூரம், அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடமாகவே உள்ளது. இதில் அனுபவ அறிவைப் (practical) பெற்றவர்கள் மிகக்குறைவு என்பதே உண்மை.

7. பிரிட்டன் அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரியாவே எடுத்தது. இதை இன்று வரை சாதிவாரிக் கணக்கெடுப்பு எனச் சொல்லுவதற்குப் பதிலாக, மக்கள் தொகைக் கணக்கு எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். இதைப்போலவே, அன்றைய காலத்தில் இறப்பு விகிதம் அதிகம் என்றும், குறைந்த வயதில் மட்டுமே இறந்தார்கள் என்றும் சொல்வது, தமிழ் மொழியின் சித்த மருத்துவப் பண்டுவ அறிவை எதிர்க்கும் இலக்கை நோக்கியதாகும்.

'ஆங்கில மருத்துவக் கண்டுபிடிப்பால் மட்டுமே ஆயுள் கூடியது' என்ற பரப்புரையும் முன்வைக்கப்படுகிறது. அதேவேளையில்,
இன்றும் எவ்விதமான மருந்து மாத்திரை மட்டுமல்ல; மருத்துவப் பண்டுவமே பார்க்காத கிழடு கட்டைகளை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மறுக்கப்படுகிறது.

1730 முதல் கிழக்கு இந்தியன் கம்பெனியான இங்கிலாந்தோடு மன்னர் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் போட்ட காலமான 1857 வரை எத்தனையோ போர்கள்; எத்தனையோ கலவரங்கள். இந்தக் காலகட்டத்தில் அரசு என்பது எங்கு இருந்தது?. இக்காலகட்டத்தில் என்ன விதமான மருத்துவம் இருந்திருக்கும்?. மக்கள் பட்டினியால் செத்ததைவிட, பண்டுவம் இல்லாமலே செத்தார்கள்.

நோயால் சாகக்கிடந்த மக்களுக்குப் பிரிட்டன் அரசு என்ன செய்தது? உள்ளூரில் சித்த மருத்துவப் பண்டுவம் பார்த்தவர்களைப் போலி மருத்துவர்கள் என்றும், புட்லெக் கன்ரி மெடிசனிஸ்ட் என்றும் சொல்லி, கைது செய்து உள்ளே தள்ளியது. இதனால், போர்க் கலவரங்களில் செத்தவர்களைவிட, பண்டுவம் இல்லாமல் செத்தவர்களே அதிகம் என்ற வரலாற்றை மறைப்பது உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல; நேர்மையற்றதுமாகும்.

8. பிரிட்டன் அரசு ஆங்கில மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுவரவில்லை. அவர்களது மிலிட்டரி கண்டோமெண்ட்டில் மட்டுமே மருத்துவம் செய்தனர் என்ற வரலாற்றை மறைப்பதன் நோக்கம் என்ன?

பேராயக் கட்சியில் ( Indian National Congress party) தீவிரவாதப் பிரிவு தொடங்கிய பின்னர், இந்திய ஒன்றிய மொழிகளில் அவர்களின் மருத்துவத்தைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர். அதன் பின்னரே இந்த மருத்துவம் மக்களுக்கு லேசுவாசாக, அதுவும் 36 நகராட்சிகளில் பெயரளவிற்குக் கொண்டு வந்தனர். இந்தக் காலகட்டத்தில் சித்த மருத்துவப் பண்டுவர்கள் கொத்துக்கொத்தாகக் கைது செய்த வரலாறு உள்ளதையும் பார்க்க மறுப்பதேன்?

இதே காலகட்டத்தில், ஆங்கில மருத்துவம் பார்க்க மக்கள் வர மறுத்தனர். இதற்குக் காரணம், உயிர் பயம் மட்டுமல்ல; அந்த மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கையின்மையைப் பிரிட்டன் பரப்பிய ''இந்திய ஒன்றிய மக்கள் கடவுள் சொல்படி நடப்பவர்கள்' என்ற பிரச்சாரத்தை இன்றும் இங்குள்ளவர்கள் பரப்பி வருகிறார்கள்.

சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பிரிட்டன் அரசு 1921 படிப்பாகத் தொடங்கினாலும், 1932 வரை பதிவு செய்திடாமல் வைத்து, போலி மருத்துவர் என அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அன்றும் சரி இன்றும் சரி, சித்த மருத்துவப் பண்டுவம் பார்க்கும் மருத்துவர்களிடம் மக்கள் நம்பிக்கையோடு செல்லக் காரணம், சித்த மருத்துவப் பண்டுவ அறிவு மக்களுக்கு இருப்பதாலும், ஏற்கனவே நம் மக்களிடம் சித்த மருத்துவப் பண்டுவர்கள் இருப்பதாலும்தான்.

மருத்துவர்கள் மீதும், சித்த மருத்துவப் பண்டுவத்தின் மீதும் உள்ள நம்பிக்கை இன்னும் சாகாமல் இருக்கிறது என்பது படித்துப் பட்டம் பெற்ற பெரும்பாலான சித்த மருத்துவப் பண்டுவ மருத்துவர்கள் உணர மறுக்கிறார்கள்.

இந்த சித்த மருத்துவப் பண்டுவர்களிடம் இருக்கும் அறிவைப் பெற மறுப்பதும், மருத்துவ செடி கொடிகளை அடையாளப்படுத்தவும் அவர்களைப் பயன்படுத்தவும் மறுப்பதும் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களின் பெரும் போக்காக மாறி இருப்பதற்குக் காரணம், ஆங்கில மருத்துவர்களைப்போல் இவர்களும் உந்தப்பட்டிருப்பதே ஆகும்.

9. பிரிட்டன் அரசுக் காலத்தில் அமைக்கப்பட்ட கோமான் மற்றும் உஸ்மான் விசாரணைக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் ஆங்கில மருத்துவத்துடனே சித்த மருத்துவமும் பிற இந்திய ஒன்றிய மருத்துவமும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால் இவர்கள் ஆங்கில மருத்துவர்களாகவே மேல்நிலையாக்க உணர்வை அடைந்து, மரபு அறிவுக்கான சித்த மருத்துவப் பண்டுவப் பாட நூல்களைத் தயாரிக்கவும் முன்வரவில்லை. இதன் நீட்சியாகவே பெரும்பாலான பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

10. மருந்து மட்டுமே உள்ள சித்த மருத்துவப் பண்டுவத்தில், மய்ய மருந்தான செந்தூரம், கந்தகம் பூதம் (பாதரசம்), வெடிப்புத் துத்தம், துருசு போன்றவை இன்றும் சீனத்தில் கிடப்பவை. சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பில்லாமல் அவை இங்கு வந்திருக்காது.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்துகள் சுத்தி செய்திடும் முறை வேறு. அதேவேளை, சித்த மருத்துவப் பண்டுவத்தில் இங்கு உள்ள மூலிகைகளில் மட்டுமே சுத்தி செய்தனர். பாதரசம் போன்ற திரவ உலோகத்தைத் திடமாக்கி குண்டுமணியாகவும் செந்தூரமாகவும் செய்த அறிவியல் முறை, சித்த மருத்துவப் பண்டுவத்திற்குரியது.

சித்த மருத்துவத்தில் குல்லைப் பூ, அபினி பாசனங்கள், வெடிமருந்தாகப் பயன்படும் இதர மருத்துவப் பொருள்கள் பிரிட்டன் காலம் முதல் இன்று வரையிலும் தடை செய்யப்பட்டிருப்பதும், சித்த மருத்துவத்தில் உள்ள பெரும்பகுதி மருந்துகள், ஆங்கில மருந்துக் கலவையாக எப்படி மாறியது? என்ற வரலாற்றைத் தேடினால், ஆதிக்க அதிகார இருப்பால் அதனைத் தன்வயப்படுத்தியிருப்பதும் புலப்படும்.

ஏர் மகாராசன்
02. 04. 2020.

பிற்குறிப்புத் தரவுகள்:
சுளுந்தீ நூலாசிரியர்
இரா. முத்துநாகு,
ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.

நூல் சான்றுகள்:
1. Evolution of medical education in India.
2. Physicians of colonial India (1757–1900).
3. நவீன சித்த மருத்துவச் சிற்பிகள்.
4. காலனி ஆட்சியில் நம் வாழ்வும் நலவாழ்வும்.
5. Understanding of Human Genetic study and Variation.
6. Human Evolution.
7. வியக்க வைக்கும் தமிழர் அறிவு.
8. காலனி ஆட்சியில் வேளாண்குடிகள்.
9. Growth of medical in Raj.
10. Social economic history (1500 to 1960).
11. சுளுந்தீ - தமிழ்ப்புதினம்.

எழுத்தோவியம்
ஓவியர் நித்யன்.

சனி, 28 மார்ச், 2020

தமிழர் மரபின் அறிவையும் அறத்தையும் மீட்டெடுப்போம்: மகாராசன்




தமிழரின் மரபு மருத்துவமான
'சித்த மருத்துவம்',
தமிழரின் உலகு தழுவிய வாழ்வொழுக்கமான 'அற இயல்' ஆகிய இரண்டு அறிவுப்புலங்களும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் 1983 காலகட்டம் வரையிலும் இருந்துள்ளன.
தமிழரின் மரபு அறிவும்,
தமிழரின் மரபு ஒழுக்கமும் தமிழ்நாட்டுக் கல்விப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.
மரபறிவை விட்டொழிக்கச் செய்தல் அல்லது மறக்கச் செய்தல், மரபொழுக்கத்தை மழுங்கடிக்கச் செய்தல் அல்லது நுகர் வெறிச் சீரழிவில் பயணிக்கச் செய்தல் என்பதாகவே நவீனக் கல்விமுறையும் அதன் பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
மரபின் அறிவைப் புறந்தள்ளிவிட்டும், மரபொழுக்கத்தின் அறத்தை அறுத்தெரிந்துவிட்டும் உருவாகிற அல்லது உருவாக்கப்படுகிற அறிவு என்பதெல்லாம், இன்னபிறவற்றின் இரவலாகவும், கடன் வாங்கலாகவும், கையேந்தலாகத்தான்இருக்கும்.
எந்தவொரு சமூகம் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறதோ, அந்த சமூகம் தமது மரபறிவை ஆழமாகப் பெற்றிருக்கிறது என்று பொருள். தமிழ்ச் சமூகமும் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் தகவமைத்துக் கொள்வதற்கும் இழந்துவிட்ட அல்லது கைவிட்ட மரபறிவுப் புலங்களை மீட்டெடுத்து நவீனப்படுத்த முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் ஏற்கெனவே இருந்த சித்த மருத்துவம், அற இயல் போன்ற பாடப்பிரிவுகளை வருகின்ற கல்வி ஆண்டில் மீண்டும் கொண்டுவர தமிழ்நாடு அரசாங்கமும் பள்ளிக்கல்வித் துறையும் முன்வர வேண்டும்.
ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் தமிழ்நாடு அரசாங்கமானது, தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் புதிய சித்த மருத்துவக் கல்லூரிகளையும், ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்குவதற்கு முன்வரவேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழர்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.
சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்த்தொற்றுகளுக்கு தமிழர் மரபு மருத்துவமான நிலவேம்புக் குடிநீர் மருத்துவப் பயனை அளித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மரபு மருத்துவத்தின் முக்கியத்துவம் கருதுவதால், ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தை முற்றிலும் புறக்கணித்தல் என்பது பொருள் அல்ல. நமக்கான மருத்துவத்தை நமது மரபிலும் தேடலாம் என்பதே பொருள்.
பழமை என்கிற ஒன்றுக்காகவே மரபு அறிவைப் புறந்தள்ளுகிற ஒரு சமூகம், ஒருபோதும் எழுந்திருக்கப் போவதில்லை.
அறிவைத் தமிழர் மரபிலும் தேடுவோம்.
ஏர் மகாராசன்
28.03.2020.

வெள்ளி, 27 மார்ச், 2020

வேம்பு மரத்தாய்ச்சி: மகாராசன்.

வேனில் காலத்து வெயில் சுட்டெரித்த பொழுதுகளில்
தகித்துக் கொதிக்கிறது பொட்டல்காடு.

காற்றின் வற்றிய மார்புகளில் முட்டிமோதி ஏமாந்தலைந்து
பசியில் நா வறண்டு கிடக்கிறது ஒற்றையடிப் பாதை.

அரவமற்று வெறிச்சோடும்
மறுகால் தலவில்
நிறை சூலியாய் மாண்டுபோன மறத்தியாளின் புதைமேட்டில்
நிழல்பால் கசிந்தபடி
பசுந்தளிர் வெம்பூக்களாய்
மடி விரித்து,
பிள்ளைத் தாய்ச்சித் தவிப்போடு ஒண்டியாய் நின்றசைந்து
உயிர்ப் பாதங்கள் நீவிட
ஈரத் தாலாட்டை இசைக்கிறது
வேம்பு மரத்தாய்ச்சி.

வெம்மையென உயிர் நோகும் கொப்புள வலிகளை
அம்மையாய் வந்திறங்கி மஞ்சளோடு முந்நாள் நீராடி
கூடவே அழைத்துப் போகும் மருத்துவத் தாய்ச்சி.

இப்போதெல்லாம்,
தீண்டுவதற்கும் தொடுவதற்கும் பயந்து நெளிந்து
அடைபட்டு முடங்கி
முக்கி முனங்கி
கண்ணீரும் இன்றி அழுது கிடக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது தாய்ச்சிகளை மறந்துபோன
மனிதப் பேரினம்.

ஏர் மகாராசன்
27.03.2020

ஞாயிறு, 8 மார்ச், 2020

அப்பாவைக் குறித்து அம்மா வரைந்த சித்திரம்: மகாராசன்.

ஒரு தகப்பன் தருகிற எந்தக் கதகதப்பையும் அனுபவிக்காமலேயே, என் தகப்பனிடமிருந்து வெகுதூரம் விலகியே இருந்தது எனது குழந்தைப் பருவம். ஒரு தகப்பனைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள் அப்போது வெகுவாகக் கூடியிருந்தது. அம்மாவின் ஒற்றை அரவணைப்போடு இருந்திருந்தாலும், பெரும்பாலும் தனித்தலையும் சிறுவனாகவே அந்தக் காலம் இருந்தது. யாருமற்றுத் தனித்து விடப்பட்டதைப் போன்ற உணர்வுகள் அவ்வப்போது என்னை அழச் செய்துவிடும்.

வீட்டுக்கும் காட்டுக்கும் தனியாக அலைந்து திரியும் போதெல்லாம் என் அப்பாவைப் பற்றிய கோபங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. அப்பாவை எந்த வகையிலாவது பழிவாங்க வேண்டும் என்கிற உணர்வு கனன்று கொண்டே இருந்தது அந்த வயதுகளில்.

பல பிள்ளைகள் பிறந்திருந்தாலும், நான் பிறந்ததற்குப் பிறகு, ஒரு கணவராய் என் அம்மாவோடு துணையிருக்காமல் போனது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், என் அப்பாவைக் குறித்து எந்த வருத்தங்களையும் ஒருநாளும் என்னிடம் பேசியதில்லை என் அம்மா.

அம்மாவின் ஆகப் பெரும்பகுதி நினைப்பெல்லாம் கொஞ்சம் நிலமும், அதில் வெள்ளாமைப் பாடுகளும், எம்மை ஆளாக்குவதுமாகத்தான் இருந்தது. பெற்ற தகப்பனின் அரவணைப்புக்கு ஏங்கியிருந்த என்னைக் குறித்து, எதுவும் வெளியில் சொல்லாமலேயே பல நாட்கள் அழுது கொண்டே இருப்பார் அம்மா. 'ஏம்மா அழுகிற?' என்கிறபோதெல்லாம், 'ஒன்னும் இல்லப்பா' என்றபடியே கண்களைத் துடைத்துக் கொள்வார்.

வயக்காட்டுக் குடிசையிலேயே சின்னம்மாவோடு குடித்தனம் நடத்திய அப்பாவோடு எந்தச் சண்டையும் சச்சரவும் போட்டதில்லை அம்மா. அப்பாவோடும் சின்னம்மாவோடும் அம்மா பேசிக்கொள்ளவே மாட்டார். எதுவாக இருந்தாலும் சாடை மாடையாகவே மூவரும் பேசிக்கொள்வார்கள். ஆனாலும், அம்மாவும் அப்பாவும் சின்னம்மாவும் ஒரே வயக்காட்டில் ஒன்றாகத்தான் சம்சாரி வேலைகளைப் பார்த்து வந்தார்கள்.

மூவரையும் ஒருசேரப் பார்க்கும்போதெல்லாம் கோபம் கோபமாய் வரும். ஒருநாள், வெள்ளாமை வேலை வெட்டிகளைக் குறித்து அவர்கள் சாடை மாடையாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது, வெறி கொண்டவனாய் எழுந்து போய், மேய்ந்து கொண்டிருந்த உழவு மாடுகளைச் சாட்டைக் குச்சியால் மாற்றி மாற்றி அடித்துவிட்டு, அவற்றின் தலைகளை நீவி விட்டுக் கொண்டிருந்தேன். விறுவிறுவென்று என்னிடம் வந்தார் அப்பா. 'வாயில்லா சீவனப் போட்டு ஏண்டா அடிக்கிற? ஒனக்கு யாரு மேல கோவமா இருக்கோ அவனப் போட்டு அடி' என்று, கீழே கிடந்த தார்க்குச்சியை எடுத்துக் கையில் திணித்துவிட்டு அங்கேயே நின்றிருந்தார். அழுகையும் கோபமுமாகத் தார்க்குச்சியை வீசியெறிந்துவிட்டு விருட்டென அங்கிருந்து வந்துவிட்டேன்.

அன்றிலிருந்து எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது என்றுதான் வெகுநாட்களாக நினைத்திருந்தேன். ஒரு நாள், நான் வெறுத்து ஒதுக்கும் முதல் ஆளாகவே இருந்த அப்பாவைக் குறித்த பேச்சை எடுத்தார் அம்மா.

'ஏண்டா தம்பி, ஙொப்பன எதிரியாவே பாக்குற? பாவம்டா அந்தாளு. ஒன்னயவே நெனச்சு உக்கிப்போய்க் கிடக்கான். நீ பள்ளிக்கோடத்துக்குப் போனதுக்குப் பின்னால நெதமும் வீட்டுக்கு வந்து, தம்பி போய்ட்டானா? சாப்டுப் போனானான்னு கேட்டுட்டுப் போறான் மனுசன். காசுகீசுனு கேட்டான்னா கொடுளான்னு அப்பப்ப காசு பணத்த கொடுத்துட்டுப் போறான். நீ நெனைக்கிற மாதிரி, ஙொப்பன் கெட்டவனில்ல. ஏதோ ஒரு விதி வசத்தால கெட்டுப் போனான் அம்புட்டுத்தேன்' என்று குரல் கம்மியபடி சொல்லி முடித்தார்.

'ஒன்னயவும் என்னயவும் தனியா விட்டுப்புட்டுப் போன அந்த மனுசனப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தாக்கா, ஒன்னால நிம்மதியாவே இருக்க முடியாது தம்பி. ஙொப்பன் மேல இருந்த கோபத்த மட்டுமே நாளெல்லாம் சுமந்துக்கிட்டு இருந்திருந்தா, ஒன்னயவும் அக்காமார்களயும் வளத்து ஆளாக்கி இருக்க முடியுமா தம்பி?

ஙொப்பன் மேல இருக்குற கோவத்தையெல்லாம் ஒம் படிப்புல காட்டு. ஙொப்பன மாதிரி ஆகாம, வைராக்கியமா படிச்சு பெரிய ஆளா வந்து காட்டு. ஒன்னயப் படிக்க வச்சு, பெரிய ஆளா ஆக்கணும்னுதான் அந்தாளும் காடு கழனின்னு ஒழச்சு சாகுறான். ஒன்னய, இந்தச் சுத்து வட்டத்துலயே எவனும் படிக்காத பெரிய படிப்ப படிக்க வச்சுப் பாக்கணும்னு கங்கணம் கட்டியிருக்கான். என்னிக்கி, படிப்பு வரல, படிக்க மாட்டேன்னு சொல்றியோ, அன்னிக்கே செத்துப்போவான்டா அந்த மனுசன். நீயும் படிக்கலாட்டி, நானும் உசுர வச்சுக்க மாட்டேன் ஆமா. ஒன்னோட படிப்புக்காகத் தானப்பா, வாழ்ந்து முடிச்ச நாங்க ஒழச்சு வேகுறோம். ஒன்னோட கோவமெல்லாம் உண்மயா இருந்தா, நாஞ் சொன்னது பூராவும் உண்மதான். இதப் புரிஞ்சுக்கிறவன்தான்டா எம் புள்ள.

மறுவாட்டியும் சொல்றேன், ஙொப்பன் தப்பு பண்ணிட்டான்தான். ஆனா, தப்பான மனுசன் கெடயாது பாத்துக்கோ' எங்கிட்ட சொல்லனும்னு நெனச்சிருந்த அத்தனயவும் ஒரே பேச்சுல சொல்லி முடிச்சிட்டா அம்மா.

பதின்மப் பருவ வயதில், அப்பாவைக் குறித்து என் மனச் சுவரில் கிறுக்கி வைத்திருந்த அத்தனை அசிங்கங்களையும் அழித்துவிட்டு, என் அப்பாவைப் பற்றிய அழகிய சித்திரம் ஒன்றை வரைந்து விட்டார் அம்மா.

எத்தனை கோப தாபங்கள், ஏமாற்றங்கள், அழுகைகள், இழப்புகள், தவிப்புகள் என அத்தனையும் இருந்தாலும், எதை விதைக்க வேண்டுமோ அதை மட்டுமே என்னிடம் விதைத்திருக்கிறார்.

என்னில் கலந்திருக்கும் அம்மாவைப் போலவே, அப்பாவும் கலந்தே இருக்கிறார் இப்போதும்.

அப்பாவைக் குறித்து அம்மா வரைந்த அழகிய சித்திரத்தைப் போலவே, நானும் அப்பாவைப் பற்றிய நிறைய அழகிய சித்திரங்களை வரைந்து கொண்டு தான் இருக்கிறேன்.

அம்மாவைப் போலவே
அப்பாவும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

நினைவுகளுடன்
ஏர் மகாராசன்
08.03.2020.

நன்றி:
எழுத்தோவியம்
ஓவியர் Palani Nithiyan

திங்கள், 2 மார்ச், 2020

தமிழ்க் கழனி: அரசுப் பள்ளியிலிருந்து அட்டகாசமான இதழ்.


அரசுப் பள்ளியிலிருந்து
அட்டகாசமான இதழ்.

எமது பள்ளி மாணவர் ஆசிரியர் முயற்சியில் வெளிவந்திருக்கும் தமிழ்க் கழனி இதழைக் குறித்து தி ஃபெடரல் ஆங்கில இதழில் வந்திருக்கும் சிறப்புக்கட்டுரை.

Govt school teacher’s initiative to bring out their own student magazine

The magazine is the first of its kind since this kind of activity hasn't been taken up by any other government school in Tamil Nadu before.

N Vinoth Kumar

Chennai, 7:15 AM, 2 March, 2020.

The 170-year-old Victoria Memorial Government Boys Higher Secondary School, a school located on the banks of the Varaga river in Theni district, has taken up an interesting initiative to encourage students to use their creativity.

In an effort to have another feather in its cap, the school has started to bring out a magazine titled ‘Tamil Kazhani‘ (Tamil Land) from February this year. This magazine is the first of its kind since this kind of activity hasn’t been taken up by any other government school in Tamil Nadu before.

“During our college days, we brought out many issues of college magazines. Those magazines have articles from both students and staff. But such a magazine culture is not followed by most of the colleges in the state now,” said Maharasan, a Tamil teacher at the school and the man behind the initiative.

Maharasan, being a writer himself, has written more than 10 books on Tamil culture, polity, and nature. When he was a student, he ran a magazine titled ‘Yer‘ (Plough), which gave a platform for many of his friends to unleash their creativity.

“The people who worked in those magazines have now become well-known poets and writers,” he said.
Maharasan didn’t want to end the legacy of running a magazine and started to bring out ‘Tamil Kazhani‘, but this time with the help of his students.
Notably, the school’s library has more than 18,000 books in four languages to enhance students’ vocabulary.

Maharasan working with the students on the magazine
“Apart from studies, most students do not get the opportunity to show their innate creativity in writing poems or painting, etc. I thought about giving them a platform and that’s how the idea of starting a magazine took shape,” said Maharasan.

Students from classes six to 12 would contribute to the magazine. Being a quarterly magazine, the editorial team, which consisted of a few teachers and student coordinators, planned to bring out each issue well before the quarterly, half-yearly, and annual examinations.

“The students write, collect, type, design, paint, and proof-read the articles. We teachers provide guidance whenever they need it,” he added.
The magazine contains 24 pages filled with poems, paintings, essays, and short stories both in Tamil and English languages.

Around 100 copies of the first edition of the magazine were printed and distributed to nearby schools, libraries, and district educational offices. The PDF of the magazine was shared widely on many WhatsApp groups.

“In general, people think government schools house only slow learners and children from socially and economically weaker sections. In order to change that perception, we have embarked on this journey. Hope this little initiative will develop the students’ confidence,” said Maharasan.

Thanks To:
THE FEDERAL.COM
Vinod Kumar.

https://thefederal.com/states/south/tamil-nadu/govt-school-teachers-initiative-to-bring-out-their-own-student-magazine/

சனி, 15 பிப்ரவரி, 2020

மகாராசனின் சொல் நிலம்: வேளாண் நிலத்தின் வலி மொழியான சொல்லாக்கம்:- ம.கருணாநிதி



“தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம் வேர்கள் இல்லாத மரம் போன்றது, கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால் தான், மகாராசனின் மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கின்றது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.” என சொல் நிலத்தின் முன்னத்தி ஏராக அமைந்துள்ளது.

மகாராசனின் ‘சொல் நிலம்’ கவிதைப் படைப்புலகில் ஆதிப்புள்ளி. கீழிருந்த எழுகின்ற வரலாறு, பெண் மொழி இயங்கியல், ஏறு தழுவுதல், தமிழ் நிலமும் வன்குடியாதிக்க எதிர்ப்பும், மொழியில் நிமிரும் வரலாறு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு, பண்பாட்டு அழகியலும் அரசியலும் எனும் நூலாக்கங்களின் வழியாக கருத்துலகில் சஞ்சரித்த இவர், சொல் நிலத்தின் மூலமாக படைப்புவெளியில் உலாவ அடியெடுத்து வைத்துள்ளார்.

ஏர் வெளியீடாக இந்நூல் வந்துள்ளது. 52 பொருண்மைகளில் அமைந்துள்ள கவிதைகள் யாவும் வேளாண் சமூகப் பண்பாட்டு அரசியலை முன்வைக்கின்றன. ஆற்றுப்படை நூல்களில் ஏர்க்களம் பாடும் பொருநன், போர்க்களம் பாடும் பொருநன், பரணி பாடும் பொருநன் எனும் வகைப்பாட்டில் பாடிய கவிமரபின் நீட்சியாகவே ஏர்க்களம் பாடும் பொருநனாக மகாராசன் ‘சொல் நிலம்’ வழியாக அடையாளப்படுகிறார். கவிதைகள் முழுக்க விவசாய வாழ்வியலைப் படைப்பாளரின் சிறுவயதிலிருந்தே பெற்ற அனுபவத்தை சமகாலப் பின்னணியில் வேளாண் சமூகத்தின் இருப்பையும் இயலாமையையும் கவிதைகள் பதிவு செய்துள்ளன.
கூதிர் கால நிலம் பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும் / வயல் நீர் பாய்ச்சும் / பின்னிரவுப் பொழுதில் / வரப்பில் நடக்கையில் / சில்லிடுகின்றன கால்கள் (2017:ப. 30) உணர்தலின் வழியாக மெய் சிலிர்க்கும் உடல் பசுமையான பொழுதுகளும் வாழ்வுகளும் நினைவில் மட்டும் வாழ்கின்றன. கனவிலும் நனவிலும் கூதிர்காலத்து நினைவுகள் பாடாய்ப் படுத்துகின்றன. இப்போதெல்லாம் கவிதைகளில் மட்டுமே செழுமை நிற்கின்றன என இயற்கையின் மாறுபாட்டை அதன் வழியான கவிமனம் கனவிலும் நனவிலும் உழல்கின்ற சூழலை அகவெளியில் மனம் உழல்வதும் புறவெளியில் மெய்சிலிர்ப்பதும் பசுமை மனம் கொள்வதுமான தன்மையில் கூதிர்காலம் கவிதை எடுத்தியம்புகிறது .

எரிமலைக் குழம்பின் தாக்கத்தை முதலாளி வர்க்கத்தின் எச்சிலோடு பொருத்திப் பார்த்திருப்பது, முதலாளி வர்க்கத்தின் வன்மத்தை எரிமலைக் குழம்போடு உவமைப் படுத்தியிருப்பது, அதிகார வர்க்கத்தைத் தோலுரிக்கின்றது. செம்புலம் கவிதை சிறுவயதில் செம்மண் புழுதி படர்ந்த மேனியாக குளத்தில் குளிப்பதும் சிறு விளையாட்டுத்தனம் சண்டையில் முரண் நீக்கி சிரித்து மகிழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறது. பெயல் நீர் சுவைத்துப் / பசப்பை ஈன்றது / செவல் காடு (மேலது. ப. 77) எனும் சூழலியல் சார்ந்த கவிதை, சங்க மரபுக் கவிதையான ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ எனும் கவிதை மரபை மறுவாசிப்பு செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இக்கவிதையில் நீரில் இருந்து நிலத்தைப் பார்ப்பது ஒரு வகை; நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பது இன்னொரு வகை. மேலே குறிப்பிட்டுள்ள சங்கக் கவிதை நீரின் வழியாக நிலத்தை பார்ப்பதுமாகவும், மேலிருந்து நோக்குவதாகவும் அமைந்துள்ளது. இக்கவிதையோ நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பதுமான கீழிருந்து பார்க்கப்பட்டிருப்பது சங்க மரபிலிருந்து மாற்றுத்தளத்தில் செம்புலப் பெயல் நீர் கருத்தாடல் அமைந்துள்ளது.

உழைப்பின் சுரண்டலை பேசும்பொழுது உரத்த சொல்லாடலாக வெளிப்பட்டுள்ளது. விவசாயத்தின் மீதான பற்று கவிதையில் உயிர்பெற்று இருப்பதைப் போல தாய்மை, காதல், மொழி இவைகளின் மீதான பற்றுக்கோடுகள் கவிதையின் சொல்லுருக்களாக வெளிப்பட்டுள்ளன. நிலம் உற்பத்தியின் விளைவால் மகசூல் கிடைப்பதைப் போல வேளாண் வளமைக்கான மொழி தவிப்பின் விளிம்பில் ஈரம் சுரக்கும் தாய்நிலத்தின் மொழியின் குவிமையத்தைத் தாங்கி நிற்கின்றன சொல்நிலம் கவிதைகள். அன்பின் உயிர் முடிச்சை மொழியின் வழி விதைத்தவள் என்று கூறுவது, அன்பு வயப்பட்ட தாய்மையும் அன்பு வயப்பட்ட மொழியையும் ஒப்புநோக்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது.
“உழைப்புச் சொற்களால் / நிலத்தை எழுதிப்போன / அப்பனும் ஆத்தாவும் / நெடும்பனைக் காடு நினைத்தே / தவித்துக் கிடப்பார்கள் / மண்ணுக்குள். ” ;(மேலது, ப. 87) எனக்கூறுவது, சங்கக்கவி மரபில் உள்ள கையறுநிலைப் பாடலின் தொனிப்பொருளைப் பெற்றுள்ளது இக்கவிதை. பொற்றோரும் நிலமும் இல்லாத தவிப்பின் இருத்தலைக் காட்டுகிறது. விளைநிலத்தை நம்பியே தம் வாழ்நாளின் முழுவதும் காலம்கழித்த விவசாயப் பூர்வீகத்தை தன்னிலைசார்ந்த படைப்பாக்கத் தன்மையை சொல்நிலத்தின் வழியாக அவதானிக்க முடிகிறது.
வேளாண் நிலத்தின் வலி மொழி :
  வடுக்களோடும் வலிகளோடும் / வயிற்றுப்பாட்டோடும் / நெருப்பையும் சுமந்து / சாம்பலாகிப் போனார்கள் / வெண்மணி வயலின் / செந்நெல் மனிதர்கள் (மேலது, ப. 25) விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வியல் இன்றைய சூழலில் பல்வேறு நிலைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றன. கூலி உயர்விற்குக்காகப் போராடிய கீழவெண்மணி தொழிலாளர்களைக் காவு வாங்கிய அதிகார மையத்தை ‘உயிர் அறுப்புகள்’கவிதை, கடுமையாகச் சாடுகிறது. நிலமே கதியென்று / உழைத்துக் கிடந்தவர்களின் / கையளவுக் காணிகளை / அதிகாரக் களவாணிகள் / களவாடிய பின்பும் / குத்தகை வாரத்துக்கும் / கொத்துக்கும் கூலிக்குமாய் / உழைத்துமாய்ந்திடத் / தஞ்சமடைந்த ஆவிகள் / தொப்பூள்க்கொடிகள் / வியர்வை வழிந்த நிலத்தையே தான் / சுற்றிக் கிடந்தன. (மேலது, ப. 79) நிலம் வைத்திருந்த உழைப்பாளிகள் இடத்தில் கையளவு காணிகளையும் கூட இழந்து அடிமைகளாய் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்புச் சுரண்டலை உயிர் அறுப்புகள் கவிதை எடுத்தியம்புகிறது. தொப்பூள்க் கொடி உறவுதேடும் தன்மை, பஞ்சமி நிலமீட்பு தேடுகின்ற கவிதையாக முடிகிறது. ஈரம் கோதிய சொற்கள், பாழ்மனம், இனம் அழுத நிலம் எனும் கவிதைகள் தமிழ்நிலத்தின் வலிமொழியின் சொல்லாக்கங்களாகும். திணைமயக்கம் கவிதை வேளாண்நிலத்தின் தொன்மத்தைத் தேடிச் செல்கிறது.
குலைகள் பூத்து / உதிர்ந்த விதைகள் / வரலாறு படித்தன / வடுக்களே / விதைகளாகும் காலம் முளைக்கிறது / கூடுகள் இழந்து / காயங்கள் சுமந்த / தூக்கணாங்குருவிகள் / மீண்டு மீண்டும் வரும். (மேலது, பக். 56-57)

அழுது கொண்டே இருந்தாலும் / உழுது கொண்டே இருவென்று / காலில் விழுந்து கிடக்கிறது / நிலம் (மேலது, ப. 19)
சாதிய வெறியும் / நிலவுடைமைச் சதியும் / சகதி மனிதர்களைச் / சாவடிக்கக் காத்துக் கிடக்கின்றன. (மேலது, ப. 24)
ஆத்தாளின் வலியை / இப்போது / நிலத்தாயும் / சுமந்து கிடக்கின்றன. (மேலது. ப. 62) எனும் கவிதைகள் உழைப்பாளிகளின் வலியினையும் இழிவுகளும் மனிதர்களை இறப்பின் விளிம்பில் அமிழ்த்துகின்றன. கழுநிலம் எனும் கவிதை கையறுநிலை ஒப்பாரிப்பாடலைப் போன்று வலிமிகுந்ததாய் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளைப் கொலை செய்யும் ஆம்குழாய் கிணறுகளை, உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும் / கொத்துக் குழிகள் / நிலப் படுகொலையின் / படு களங்கள் (மேலது, ப. 64) என நிலப் படுகொலை கவிதை காட்டுகிறது. நிலத்தடிநீரை உறிஞ்சும் அதிகாரத்திமிரின் படுகளமாக நிலமாகிவிடுகின்றதை எண்ணி கவிமனம் கலங்குகின்றது.
கவிதையின் உவமையாக்கம் :
சொல்நிலம் கவிதைகளனைத்தும் வாழ்வின் வலியை உணர்வுப்பூர்வமாக ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகின்றன. இந்த ஒப்புமையாக்கமனைத்தும் வேளாண்மை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. உலகைப் போர்த்தும் / கதிர் போல / ஒளியாய் / நுழைந்தவள்(மேலது, ப. 11) தன்னிருப்பை வளமையாய் அணுகுவதும் வாழ்வினைச் செழுமை சேர்ப்பதற்கும் தாய்நிலத்தின் பரிசத்தை இன்பம்கொள்ளும் மனநிலை கவிதையில் வெளிப்பட்டுள்ளது. நிலத்தின் வளர்ச்சிபோல கைத்தளம் பற்றிக்கொள்கிறது கவிமனசு. சொல் நிலக் கவிதையாக்கம் மகிழ்வில் விளிம்பிலும், துன்பத்தின் விளிம்பிலும் உலவும் இருவேறு நிலையைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.
வயல் நீர் வற்றி / பசுந்தாளெல்லாம் / பறித்து நின்ற / நெற்கதிர் அடுத்து / களம் சேர்த்த / கருத்த மனிதர்களின் கவலைகள் / ஊமணி எழுப்பிய ஓசை போல் / ஊருக்கு கேட்காமலே / ஒட்டிக் கிடந்தன வாழ்வில். (மேலது, ப. 23) உழைப்பாளிகளின் உடலை கருத்த மனிதர்கள் கூறியதோடு அவர்களின் கவலை வாய் பேசாதார் எழுப்பும் ஓசை போல கேட்காமலே போனதாகக் கூறுகிறத இக்கவிதை.

பாழ் நிலம் நினைத்துத் / தவிர்த்து கிடைக்கும் / கலப்பை போல் / தனித்து போனது யாவும். (மேலது, ப. 27) காதலின் பால் ஆட்பட்டுத் தனிமையில் தவிக்கும் மனத்தினை பாழ்நிலத்தோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது.
விழுகின்ற மழைநீரில் / கலந்து விட்ட கண்ணீர் / காணாது போலவே / அவர்களின் கனவும் / கலைந்து போனது / பல காலமாய் (மேலது, ப. 31) உழைப்பாளிகளின் கனவும் களைந்து போகின்றன. வாழ்வில் கண்ணீர் மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
தன்னை அழித்து / முளைக்கும் விதை போல் / உயிர்த்தீ விதைத்து, / தம்மை கொளுத்தி / இனத்தின் விழிப்பை / சாவுகளில் உயிர்ப்பித்து / முளைக்க செய்த / அறத்தீ மனிதர்களின் / தாகம் தணியும் ஒரு நாள். (மேலது, ப. 42) இயற்கைச் சீற்றத்தாலும், கைட்ரோ கார்பன் திட்டத்தாலும், உயர்மின் கோபுரம் உருவாக்கத்தாலும், பன்னாட்டுத் தொழிலின் விரிவாக்கத்தாலும் விளைநிலம் அழிக்கப்படுவதை எண்ணி வேளாண் தொழிலாளிகள் தன்னுடலில் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை மண்ணில் அறத்திற்காக விதைக்கப் படுகிறார்கள் எனக் கவிதையின் அர்த்தம் வெளிப்படுகிறது. எல்லாக் கவிதைகளும் எவ்வித பூடகமற்ற அர்த்தத்தளத்தில் பயணிக்கின்றன.
இயற்கையின் வளமையைக் கொண்டாடுதல் :
வேளாண் சமூக வளமைசார் வாழ்வில் மகிழ்ச்சி சார்ந்ததாக இருப்பதோடு வளமைசார் சடங்கினை மையப்படுத்துவதோடு இயற்கையை நேசிப்பின் தன்மை கவிதைகளில் தொனிப்படுகின்றது. மழைநீர் வேளாண்மைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அம்மழை வெள்ளமாகப் பெருக்கெடுக்கும்போது அழிவையும் தருகிறது. மழை வளக்கானதாகவும் வளமை அழிப்பிற்கானதாகவும் இருமை எதிர்வுத்தன்மை கொண்ட மழையை, கண்ணீரோடு ஒப்புமையாக்கம் செய்துள்ளார் மகாராசன். குறுணி மழை, ஈரம் கோதிய சொற்கள், மழைக்காலம், ஈசப்பால், செம்புலம், உயிர்க்கொடி, பன்முகம், ஈழப் பனையும் குருவிகளும் எனும் கவிதைகள் இயற்கையையும் வேளாண் வளமையையும் கொண்டுதலைக் காட்சிப்படுத்துகின்றன.
இரவில் ஒழுகும் / மழை நீர் போல / மனம் அழுது அழுகின்றது இன்னும் / உசிரப்பிடுச்சி வச்சிருந்த / உனை நினைத்து (மேலது, ப. 47)
பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும். (மேலது, ப. 30)
பன்னீர் பூக்கள் / முகம் சிரித்துச் / செந்தரையில் / கிடப்பதைப் போல / கூட்டமாய் சலசலத்து / குரல் சிந்திய கூட்டிசை / காற்றில் கரைந்து / செவியில் நுழைந்து / செல்லத் துள்ளலாய்க் / கண்ணில் மணக்கின்றன / பூனை குருவிகள். (மேலது, ப. 61)

வானத்தில் உழுது விதைத்த / ஒற்றை விதையைப் போல, / வெறிச்சோடி கிடந்தாலும் ஒளியாய் துளிர்விடுகிறது / நிலா. (மேலது, ப. 72)
ஒரு மழைக்காலத்தில் / மண் தளர்த்தி / முளை விடுவதைப் போல / பச்சையம் பூக்கிறது / மனம். (மேலது)
மண்ணில் அருவிபோல் / முன்டியடித்துப் பூத்து / சட்டென மேலே பறந்து / இறக்கை உதிரக்/ கீழே விழுந்து / அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன (மேலது, ப. 76)
ஈரக்காற்றில் மஞ்சள் மஞ்சள் இதழ் படுக்கை பீர்க்கம்பூ,
மூக்குத்தி பூத்தேடி / பயணித்த பாதங்களைக் / குத்திகுத்திச் சிரிக்கிறது / நெருஞ்சி. (ப. 84)
பால்வடியும் மரங்களில் / பொட்டலங்களுக்குள் / உறங்கிக் கிடக்கின்றன / ஈத்துக் கொடிகள். (மேலது, ப. 80)
ஈச்ச மர இலைகள் கிள்ளி / உள்ளங்கைகளில் / சுருட்டி ஊதிய பீப்பிகள் / இசை கற்றுத் தந்து போயின. / அலைந்து திரிந்த வெயிலில் / நிழல் அள்ளி பருகிய போது / இனித்து கிடந்தது / வாழ்க்கை. (மேலது, ப. 67)
ஈசல் வயிற்றுப் / பால் சவுச்சியில் / கசிந்து கிடந்தது / நிலத்தாளின் முலைப்பால். (மேலது, ப. 76)
நெல்லை விதைத்தவர்கள் / சொல்லை விதைத்தார்கள் / கூடவே தன்மானத்தையும் (மேலது, ப. 24) எனும் கவிவரியின் வழியாக, நெல்-சொல் இரண்டினையும் ஓர்மைப்படுத்தப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. மேற்காணும் சொல் நிலக் கவிதைகள் யாவும் இயற்கைப் புனைவினை மையப்படுத்திய சொல்லாக்கங்கள் சங்க இலக்கிய இயற்கைப் புனைவினைப் போன்று அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
இருண்மை எனும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு கவிதையின் பாடுபொருள் திறந்த மனதுடன் வாசிப்பிற்குள் உள்நுழையும்போது சொல் நிலக்கவிதைகள், இயற்கையைப் பிரதியாக்கம் செய்வதாகவும் இயற்கையின் ஊடாக மனித வாழ்வைப் பொருத்திப் பார்ப்பதும், உலகமயச் சுழலால் இழந்து வரும் வாழ்வாதாரத்தையும், வேளாண் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்வையும் கவிதைகள் தாங்கி நிற்கின்றன. கவிதை உருவாக்கத்தில் இயற்கைப் பருப்பொருட்கள் ஆளுமை செலுத்துகின்றது. படைப்பாளுமைக்கும் இயற்கைக்குமான உறவுநிலை கவிதையாக்கத்திற்குத் துணையாக நிற்கின்றது. படைப்பு மனம் இயற்கை, இயற்கை மாற்றம், ஒவ்வொரு இயற்கைப் பொருளையும் தன் கவிதைவெளிக்குள் கொண்டு வருவது என்பது இயல்பான படைப்பு மனத்தின் செயலாக்கம் சொல் நிலத்தில் வெளிப்பட்டுள்ளது. சொல் நிலத்தில் இயற்கையைப் புனைவாக்கத்தோடு வேளாண் நிலத்தின் வலி மிகுந்த வாழ்வினை உணர்ந்து படைப்பாக்கம் செய்தல் தன்னிலை சார்ந்து நிகழ்ந்திருக்கின்றது. நவீனக் கவிதைகள் உருவாக்கச் சூழலில் வேளாண் பண்பாடு சார்ந்த தளத்தில் பல பொருண்மையை நோக்கி நகர்கிறது ‘சொல் நிலம்'.

- ம.கருணாநிதி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் - 625514.

நன்றி:
கீற்று மின்னிதழ்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஓர் அரசுப் பள்ளியின் படைப்பு விளைச்சல்: "தமிழ்க் கழனி" இதழ் :- மகாராசன்.



எளிய மக்களின் வெள்ளந்தியான சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலில், இளைய தலைமுறையின் கல்வித் தாகத்தைத் தணித்து, அதன் எதிர்காலச் சமூக வாழ்வுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருப்பது அரசுப் பள்ளிகள் மட்டுமேதான். வசதிகள் இன்றித் தவிக்கும் எளியோரின் குழந்தைகளுக்குக் கல்விக்கான புற வாய்ப்புகளை அரசாங்கம் உள்ளிட்ட இந்தச் சமூகம் ஏற்படுத்திக் கொடுத்தாலும், மாணவர்களின் அகத்தெழுச்சி சார்ந்த படைப்புத் திறன்களை அடையாளப்படுத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் பள்ளிக் கூடங்களுக்குப் பெரும் பங்கு  இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, மாணவர் சார்ந்த கல்விச் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், வகுப்பறைக்கு வெளியேயும், பாடப் புத்தகங்களுக்கு அப்பாலுமாக மாணவர்களின் படைப்புத் திறன்களை உயிரோட்டமாக வெளிக்கொண்டு வருவதில் ஓர் ஆசிரியரின் பங்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒரு தலைமுறையானது பள்ளிக்குள் உயிரோட்டமாய் உருவுடன் உலவிக்கொண்டிருக்கும் சூழலில், அந்தந்தத் தலைமுறையை வெறுமனே பாடங்களைக் கற்கும் எந்திரங்களாக முழுவதுமாகப் பாவிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஒரு தலைமுறையைச் சார்ந்த மாணவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்தந்தத் தலைமுறை மாணவர்கள் நிறைய நிறையப் படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் கவிஞர்களாக, கதை சொல்லிகளாக, கட்டுரை எழுதுபவர்களாக, பேச்சாளர்களாக, ஓவியர்களாக, ஆடல், பாடல், நடிப்பு உள்ளிட்ட நிகழ்த்துக் கலைஞர்களாக, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வகைக்குள் தென்படும் இன்னும் பல கலை இலக்கியத் திறமையாளர்களாகவும் ஆவதற்குரிய அறிகுறிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படுத்தும் முதல் பெருங்களம் பள்ளிக்கூடம்தான் என்பதை இந்தச் சமூகம் முழுவதுமாய் உணரும்போதுதான் பாடத்துறை சார்ந்த அறிவாற்றலோடு படைப்பாளுமை மிக்க நல் மாணவத் தலைமுறையை உருவாக்க முடியும். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் தமிழ்க் கழனி எனும் இந்த இதழாய் உருக்கொண்டு வெளிவருகின்றது. தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியாகத் திகழ்ந்துவரும் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தமிழ் மன்றமானது, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகத் தமிழ்க் கழனி இதழைக் கொண்டு வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பு முயற்சிகளுக்கு வடிவம் கொடுக்கும்  வகையில், அரசுப் பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியத் தரப்பின் எளிய முயற்சியும் கூட்டுப் பயிற்சியும்தான் தமிழ்க் கழனி இதழாய் விளைந்திருக்கிறது.   தமிழ்க் கழனிக்கு அறத்துணையாய் வழிநடத்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கோபிநாத் அவர்களுக்கு மிகுந்த நன்றி. இதழுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் கனிவான நன்றி. தமிழ் மரபின் அடையாளத்தோடு புதுமைப் பாய்ச்சலைத் தொடங்கும் தமிழ்க் கழனி இதழில் தங்கள் ஓவியங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய ஓவியர்கள் இரவி பேலட், நித்யன் ஆகியோருக்கு அன்பு நன்றி. ஓர் அரசுப் பள்ளியிலிருந்து வெளிவரும் இதழாகத் "தமிழ்க் கழனி" பெருமிதம் கொள்கிறது.

தோழமையுடன்
முனைவர் மகாராசன்,
தமிழ்க் கழனி இதழ் ஆசிரியர்.
04.02.2020.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மழைக்கோலம்: மகாராசன்

ஏறுவெயிலின்
வெக்கைப் பொழுது
அவரை துவரையின்
நிழல் கோதியபடி
பூஞ்சிரிப்புச் சிந்தல்களை
எண்ணிக் கொண்டிருக்கிறது.

ஓலைகளில் முளைகட்டிய
வெண்பாக்கள் பரவிய
கழனி வரப்பில் வேர்பிடித்த
அருகம்புல் நுனிகளில்
நுரைப் பூக்களை
யாமத்தில் சொருகிப்போகிறது
வெம்பா.

கொடாப்புத் தொழுவில்
தாய்மடு ஏங்கும்
இளங்குட்டிகளை நினைத்தபடியே
மேய்ச்சல் முடித்துப்
பொழுதுசாயத் திரும்பும் வெள்ளாடுகளின்
புழுக்கை விதைகளில்
தரைக் காட்டின் தான்தோன்றிப் புற்களின் வாசம்
கம்மென்று மணத்துக் கிடக்கிறது.

தொளி வயலின்
சனிமூலையில் குலவையிட்டு
பிள்ளைமுடி வணங்கிய
குடும்பச்சிகளின் நடுகையில்
தூர்கட்டிப் பொதியாடும்
கரும்பச்சைத் தாள்களுக்குள்
வயிற்றுப் பிள்ளையாய் உள்ளிருக்கும் வெங்கதிர்களைப்
பரியச் செய்து ஈன்று கொண்டிருக்கும் நெற்பயிர் வாசம்
சம்சாரிகளின் பாடுகளாய்
மணத்துக் கிடக்கிறது.

தெப்பென்று நிரம்பியிருக்கும்
கண்மாய் மடைத்தூம்புக் கண்களின் நீர்ப்பாய்ச்சலில் தாவி
வெயிலில் மினுமினுத்து நீந்திப்போய்
வாய்க்கால் வாமடையில் நுழைகின்றன கெண்டைகள்.

பூப்பெய்திக் கிடக்கின்றன துரவுகளெல்லாம்.

நெடுநாள் ஊடல் முடித்துக் கொஞ்சும் கிளிகள் போல
நிலத்தாள் உடம்பில்
பசப்பேறிய கோலங்களை வரைந்திருக்கிறது கார்காலத்தில் பெய்த பெருமழை.

வெள்ளந்தி மக்களின்
வயிற்றுப்பாட்டுக்கும்
வாழும் பாட்டுக்கும்
கசிந்துருகும் இந்த மழை
இந்திரர் அமிழ்தமே தான்;
தெய்வமும் இதுவேதான்.

ஏர் மகாராசன்
10.01.2020

ஒளிப்படம்
ஓவியர் நித்யன்

திங்கள், 2 செப்டம்பர், 2019

பிள்ளையார் வழிபாடு: ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது :- மகாராசன்



உ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில்  அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில்  சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே,  பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.

சமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.

ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

அதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக  நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.

தமிழக  நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.

அரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.

மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே

என, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

தமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என  இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது.  நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டிருக்கிறது.

சிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.

மேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

என்கிறது தொல்காப்பியம்.

உயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.

இந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.

வடக்கே தெற்கே ஒட்டி

வலதுபுறம் மூரிவச்சு

மூரி ஒழவிலே

முச்சாணி புழுதி பண்ணி

சப்பாணிப் பிள்ளையாருக்கு

என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே

முளைச்சாராம் பிள்ளையாரு.

ஒடு முத்தும் தேங்காயை

ஒடைக்கறமாம் பிள்ளையாருக்கு,

குலை நிறைஞ்ச வாழைப்பழம்

கொடுக்கறமாம் பிள்ளையாருக்கு,

இத்தனையும் ஒப்பதமாம்

எங்கள் சப்பாணிப் பிள்ளையாருக்கு!

என, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனும் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.

தாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும்,  வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன.  ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.

தமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான்,  எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

பிள்ளையார் சுழி எனும் எழுத்துக் குறியும் தமிழரின் உலகக் கண்ணோட்ட மரபும் : மகாராசன்


எழுத்து என்பது மனித அறிவின் புலப்பாடாகப் பரிணமித்த ஒன்றாகும். தமிழ் எழுத்தும் தமிழர் அறிவு மரபைப் புலப்படுத்தும் மொழி வெளிப்பாட்டுக் கருவியாய்ச் செயலாற்றி வந்திருக்கிறது. இத்தகையக் கலை, இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட எழுத்துச் செயல்பாடுகளை ‘உலகம்’ எனும் சொல்லால் குறித்துவிட்டுத் தொடங்குதல், தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபாகவே கருதப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான், தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் ‘உலகம்’ என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.

உலகச் சொல்லுடன் நூலைத் தொடங்குதல் தமிழ் மரபாய் இருந்திருக்கிறது. இதைக் குறித்து உ.வே.சாமிநாதர் கூறுகையில், நூல்களின் முதலில் மங்கல மொழிகளுள் உலகம் என்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும், அதன் பரியாய மொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு என்கிறார்.

பலர் புகழும் சூரியனைக் கடலில் இருந்து எழும் போது கண்டவர்களைப் போல, உலகம் மகிழ்ச்சி அடையும்படியாக இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில்
சுடர்விடுகிறது ஒளி எனும் பொருள்தரும்படி,
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பத்துப் பாட்டுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை.

உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது மணிமேகலைக் காப்பியம்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது கம்பராமாயணக் காப்பியம்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பெரியபுராணக் காப்பியம்.
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்
திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது வளையாபதிக் காப்பியம்.
உலகம் மூன்று மொருங்குணர் கேவலத்து
அலகிலாத அநந்த குணக் கடல்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது யசோதர காவியம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என, உலகு எனும் சொல்லைக் கொண்டுதான் திருக்குறளின் முதல் குறளும் முடிகிறது.

உலகம், உலகு என்பதைத் தலைச்சொல்லாக - முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களைப் போலவே, உலகம் என்பதை அடைமொழியாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களும் தமிழில் இருக்கின்றன.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக் காஞ்சி.

மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது சீவக சிந்தாமணிக் காப்பியம்.

மலர்தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியின் ஒருதான் ஆகி
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நன்னூல் சிறப்புப் பாயிரம்.

மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நம்பி அகப்பொருள் இலக்கண நூல்.

 உலகம் என்பதைக் குறிக்கும் வேறு சொற்களைக் கொண்டும் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லில் தொடங்குகிற பாரதம் பாடிய பெருந்தேவனாரின் வாழ்த்துப் பாடலோடுதான் எட்டுத்தொகையின் நற்றிணைப் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி
புலம் பெயர் புலம்பொடு கலங்கி
என, உலகத்தைக் குறிக்கும் வையகம் என்கிற சொல்லில் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை.

மணி மலைப் பணைத் தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லாலும் அடைமொழியாலும் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை.

இவ்வாறாக, உலகம் அல்லது உலகைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு எழுத்துச் செயல்பாட்டை மேற்கொண்ட தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபைக் காண முடிகிறது.

இலக்கியம் உலகப் பொதுவானது; எனவே, தனிப்பட்டவற்றைக் கருத்தில் கொள்ளும் வரலாற்றைவிட இது தத்துவரீதியானது எனக் குறிக்கிறார் அரிசுடாட்டில். இலக்கியம் என்பது உலகளாவியது என்பதே தமிழ்ப் படைப்பாளிகளின் கருத்தும் நோக்கமுமாக இருந்து வந்திருக்கிறது எனத் தமிழண்ணல் கூறுகிறார். ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான இப்போலைட் தெயின் கூறும்போது, ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்ல வேண்டும் என்கிறார். அவ்வகையில், இலக்கியத்தின் உலகப் பொதுமையை நிலை நிறுத்தும் மரபு அடிப்படையிலேயே தமிழ் இலக்கியமும் கால்கொண்டிருப்பதாக அறிஞர்கள் சுட்டுவர்.

இலக்கியத்தை மனித இனப் பண்புடையதாக ஆக்க வேண்டும் அல்லது மனித இனத்திற்குப் பயன்படச் செய்ய வேண்டும். காலத்தை வென்று வாழும் இலக்கியமனைத்தும் என்றும் இன்பம் தருகின்றன. தம் இனத்தது, பிற இனத்தது என்ற வேறுபாடின்றி, இவை மக்கள் அனைவரின் இலக்கியமாய்த் திகழ்கின்றன. மனித இனத்தார் அனைவராலும் படைக்கப்பட்ட எல்லா இலக்கியமும் மனித இனம் அனைத்திற்கும் பொது உரிமையாகும். அம் மனித இனப் பொதுமையைக் கண்டறிய உதவும் முதன்மை வாய்ந்த கருவியும் இலக்கியங்களே ஆகும்.

இலக்கிய வெளிப்பாடு உலக மனித இனம் அனைத்தினது பொதுவியல்புகளின் வெளிப்பாடு. காலக்கோட்பாடும் நாட்டெல்லையும் மொழித்தடையும் கடந்து இலக்கியம் ஒருமையுடையதாய்க் காட்சி அளிப்பதற்கு, மனித இன ஒருமைப்பாடே காரணமாகும் என இலக்கிய ஒருமைப்பாடு குறித்துக் கருத்துரைக்கிறார் தமிழண்ணல். அவ்வகையில், உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் ‘உ’ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர்.

உலகைக் குறித்துப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு மட்டுமல்ல; தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் இன்றளவிலும் நிலவி வருகின்றன.

உலகம், உலகம்மை, உலக மணி,  உலகமா தேவி, உலக மாமணி, உலக மாமதி, உலக மாமயில், உலக மாலை, உலகமுடையாள், உலக முத்து, உலக வாணி, உலகத் தாய், உலக நங்கை, உலக நதி, உலக நாயகி, உலக மங்கை, உலக மதி, உலக முதல்வி, உலகோவியம்.. முதலிய பெண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகக்கடல், உலகக்கதிர், உலகக்கனல், உலகக்காவலன், உலகக்கிழான், உலகக் கிள்ளி, உலகக்கிளி, உலகக்கீரன், உலகக்குடிமகன், உலகக்குமரன், உலகக் குரிசில், உலகக் குளத்தன், உலகக்குன்றன், உலகக்கூத்தன், உலகக் கேள்வன், உலகக் கொடி, உலகக்கோ, உலகக் கோமான், உலகக் கோவன், உலகக்கோன், உலகச் சான்றோன், உலகச்சீரன், உலகச்சுடர், உலகச் சுடரோன், உலகச் செம்மல், உலகச் செல்வன், உலகச் செழியன், உலகச்சென்னி, உலகச் சேந்தன், உலகச்சேய், உலகச் சேரன், உலகச் சோலை, உலகச் சோழன்..

உலகண்ணல், உலகத்தம்பி, உலகத்தலைவன், உலகத் தனையன், உலகத் தானையன், உலகத்திண்ணன், உலகத்திருவன், உலகத் தோன்றல், உலக நம்பி, உலக நல்லன், உலக நல்லோன், உலக நன்னன், உலக நாகன், உலக நாடன், உலக நிலவன், உலக நிலவு, உலக நெஞ்சன், உலக நெறியன், உலக நேயன், உலக நேரியன், உலகப் பரிதி, உலகப்பன், உலகப்பாண்டியன், உலகப்பாரி, உலகப்பாவலன், உலகப்பிள்ளை, உலகப்பிறை, உலகப்புகழன், உலகப் புலவன், உலகப்பூவன், உலகப் பெரியன், உலகப்பேகன்..

உலகப்பொருநன், உலகப்பொருப்பன், உலகப்பொழில், உலகப் பொழிலன், உலகப் பொறை, உலகப் பொறையன், உலகம், உலக மகன், உலகமணி, உலகமதி, உலக மருதன், உலக மல்லன், உலகமலை, உலக மலையன், உலக மழவன், உலக மள்ளன், உலக மறவன், உலக மாண்பன், உலக மாறன், உலக முகன், உலக முகிலன், உலக முத்தன், உலக முத்து, உலக முதல்வன், உலகமுதன், உலக முரசு, உலக மெய்யன், உலக மேழி, உலக மைந்தன், உலக மௌவல், உலகரசன், உலகரசு, உலகருவி, உலக வண்ணன், உலக வரம்பன், உலக வலவன், உலக வழுதி, உலக வள்ளல், உலக முடி, உலக வளத்தன், உலக வளவன், உலக வாணன், உலக வாரி, உலக வீரன், உலக வெற்பன்,  உலகவேள், உலக வைகை, உலகழகன், உலகவெற்றி, உலகவேங்கை, உலக வேல், உலக வேலன்,  உலகவேலோன், உலகழகு, உலகறவோன், உலகறிஞன், உலகறிவன், உலகறிவு,  உலகுழவன், உலகூரன், உலகூரான், உலகெரியன், உலகெழிலன், உலகெழிலோன், உலகெழினி,   உலகேந்தல், உலகேந்தி, உலகையன், உலகொலி, உலகன், உலகொளி, உலகொளியன்,  உகோவியன்..    முதலிய ஆண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

இவை மட்டுமல்லாது, தமிழர்களின் வாழ்விட ஊர்ப் பெயர்களும் உலகம் எனும் சொல்லில் அமைந்திருக்கின்றன. கிருசுணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்தில் உலகம் எனும் பெயரிலேயே ஒரு சிற்றூர் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் உலகாணி, உலகநேரி, உலகுப்பிச்சன் பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டி எனும் ஊர் இருக்கிறது. இதே பெயரில் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் ஓர் ஊர் இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உலகம் காத்தான்,  உலகிய நல்லூர் (உலகில் வலிய நல்லூர்), உலகானத்தம், உலகுடையாம்பட்டு, உலகலப்பாடி எனும் ஊர்கள் உள்ளன. அதே மாவட்டத்தில் உலகலாம் பூண்டி எனும் சிற்றூரும் உண்டு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உலகம்பட்டு எனும் ஊர் உண்டு. அதே மாவட்டத்தில் உலகமாபுரம், உலகஞ்சேரி எனும் ஊர்களும் உள்ளன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் உலகபுரம் எனும் ஊர் இருக்கிறது. திருச்செங்கோடு அருகில் ஓர் ஊரின் பெயர் உலகப்பம்பாளையம். விருதுநகர் மாவட்டம் கமுதி அருகில் உலகநடை  எனும் ஊர் உண்டு. திருவள்ளூர் மாவட்டம் மரக்காணம் அருகே உலகாபுரம் எனும் ஊர் இருக்கிறது. பரமக்குடியில் ஒரு பெருந்தெருப் பெயரொன்று உலக நாதபுரம் எனும் பெயரில் உள்ளது. மேற்குறித்த ஊர்களைப் போன்று உலகம் என்கிற சொல்லோடு தொடர்புடைய பல ஊர்ப் பெயர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடும்.

உலகம் எனும் சொல்லோடு தொடர்புடைய வாழ்விட ஊர்ப்பெயர்களைப் போலவே, தமிழர்களின் வழிபாட்டு வழக்காறுகளோடு தொடர்புடைய குலசாமிகள், வழிபடு தெய்வங்கள், கோவில்கள் போன்றவையும் உலகம் என்கிற சொல்லோடு தொடர்பு கொண்டதாயும் இருக்கின்றன.

 சான்றாக, தாமிரபரணி ஆறு தோன்றும் பாபநாசத்தில் உள்ள கோயிலில் வழிபடு தெய்வத்தின் பெயர் உலகம்மை ஆகும். திருநெல்வேலி வண்ணாரப் பேட்டைக்கு முன்பாகவும் உலகம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள உலகம்பட்டியில் உலகம்மன் கோவில் உள்ளது. அதேபோல, காரைக்குடிக்கு அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் உலகநாயகி அம்மன் கோயில் இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகம்மன் கோவில் உள்ளது. இராமனாதபுரத்தில் உள்ள ஒரு தெருவில் உலகம்மா கோவில் சிறியதளவில் இருக்கின்றது.  அதேபோல, திருவாடானை அருகாமையில் கடம்பாகுடியில் உலகம்மா கோவில் உள்ளது. தேவிபட்டினத்திலும் உலகமாதேவி கோவில் உள்ளது. மேலும், திருக்கோயிலூரில்  உலகளந்த பெருமாள் கோயில் இருக்கின்றது. மதுரை மாவட்டம் கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் கோயிலில் உள்ள காவல் தெய்வத்தின் பெயர் உலகநாதன் ஆகும்.

இவ்வாறாக, தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபிலும் வாழ்வியல் வழக்காற்று மரபிலும் உலகம் என்கிற சொல் இரண்டறக் கலந்திருக்கிறது. உலகம் மதிக்கத்தக்கது; வணக்கத்திற்குரியது; போற்றுதலுக்கு உரியது. மனித வாழ்க்கை உலகு தழுவியது; மனித அறிவும் உலகத்திற்கானது என்கிற உலகப் பொதுமை அறம் தமிழர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. இதன் வெளிப்பாடே உலகைச் சுருக்கமாகக் குறிக்கும் ‘உ’ எனும் எழுத்துக் குறியை எழுத்துச் செயல்பாடுகளின் தொடக்கத்தில் பண்பாட்டு அடையாள மரபாகக் குறித்து வந்துள்ளனர்.

இது, சமயக் குறியாகவோ அதிகாரக் குறியாகவோ பாகுபாட்டுக் குறியாகவோ அல்லாமல், உலகப் பொதுமையைக் குறிக்கும் பொதுமைப் பண்பாட்டுக் குறியாகவும் பயிலப்பட்டு வந்திருக்கிறது. அவ்வகையில், தமிழின் ‘உ’ எனும் எழுத்துக் குறிக்கு இவ்வகைப்பட்ட எழுத்துப் பண்பாட்டு விளக்கமே பொருத்தமுடையதாய் இருக்கும் எனக் கருதலாம்.

ஆக, ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் குறிக்கப்படும் பிள்ளையாரும் பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் கிரந்த எழுத்துக் குறியும் வேறு; தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும், தமிழ் எழுத்துச் செயல்பாட்டில் குறிக்கப்படும்  பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியும் வேறு ஆகும் எனலாம்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005