ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மேல்சாதி - உயர்சாதி - ஆதிக்க சாதி : சொல்லாடல்களும் பொருண்மைப் பிழைகளும் :- மகாராசன்


தமிழ்ச் சமூகத்தில் சாதி பற்றிய பேச்சுகளும் உரையாடல்களும் விவாதங்களும் வரும்போதெல்லாம், முரண்பட்ட சாதி நிலைமைகளைச் சுட்டும்போது மேல்சாதி என்றும், உயர்சாதி என்றும், ஆதிக்க சாதி என்றும் குறிப்பிடுகிற பெருவழக்கம் பொதுப் புத்தியாகப் படிந்திருக்கிறது. இவ்வாறு சுட்டுவதும் எழுதுவதும் பேசுவதும் பிற்போக்கான கருத்தியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகும்.

சாதி என்பதில், தாழ்ந்த சாதி அல்லது ஒடுங்கிய சாதி எனக் குறிப்பதும் சுட்டுவதும் மிகப் பிழையானதும் பிற்போக்கானதுமாகும். ஏனெனில், பிறப்பில் தாழ்வான அல்லது தாழ்ந்த அல்லது ஒடுங்கிய சாதி என எதுவுமில்லை. அதேவேளை, இன்ன இன்ன சாதியில் பிறந்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காகவே, மற்றபிற சாதியினரால் தாழ்த்தி நடத்தப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர். அதனால், தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் எனும் சொல்லாடல்கள் புழக்கத்தில் பரவின.

அதேவேளை, பிறப்பிலேயே உயர்சாதியாக யாரும் பிறப்பதும் இல்லை. பிறப்பில் தம்மை உயர்சாதியாக / மேல்சாதியாகப் பாவித்துக் கொண்டவர்களும், உயர்சாதியாக / மேல்சாதியாக நினைத்துக் கொண்டவர்களும்தான் உண்டே தவிர, உயர்சாதியாகவே / மேல்சாதியாகவே யாரும் பிறந்ததில்லை; பிறக்கப்போவதுமில்லை. 

இந்நிலையில், சாதி முரண்களையும், மோதல்களையும், பாகுபாடுகளையும் பேசும்போதும் எழுதும்போதெல்லாம் பல தரப்பினரும் மேல் சாதி / உயர்சாதி / ஆதிக்க சாதி எனும் சொல்லாடல்களைத்தான் பயன்படுத்துகின்றனர். 

மேல் சாதியினர் / உயர்சாதியினர்/ ஆதிக்க சாதியினர் எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போது, பிறப்பிலேயே ஒரு தரப்பினர் மேல் சாதியாக / உயர்சாதியாக / ஆதிக்க சாதியாகப் பிறந்திருக்கிறார்கள் எனும் கற்பிதம் உண்மையானது என நம்புவதும்; அதுவே இயல்பானது என்பது போன்ற சமூகத் தோற்றத்தைக் கருத்தியல் ரீதியாக மனித சமூக மூளைக்குள்ளும் சமூகப் படிமங்களுக்குள்ளும் பதிய வைக்கின்றன; அவ்வாறுதான் பதிந்தும் இருக்கின்றன.

மேல் சாதி / உயர்சாதி / ஆதிக்க சாதி எனும் சொல்லாடல்கள் கட்டமைத்திருக்கும் கற்பிதம் உண்மையானது; இயல்பானது என்பதான பொதுப் புத்திச் சட்டகத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. மற்ற பிற சாதியினரை ஒடுக்குவதில் குறியாய் இருக்கும் ஒருசில சாதியினர் தம்மை உயர்சாதி / மேல்சாதி / ஆதிக்க சாதி எனப் பகட்டாய்ப் பீற்றிக் கொள்வதும், தாட்டியம் செய்வதும், அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதிலும் இதுபோன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. 

சாதி ஆதிக்கவாதிகள் அவ்வாறுதான் பயன்படுத்துவார்கள். அவர்களது நோக்கில் அவ்வாறான சொல்லாடல்கள் அவர்களுக்கு ஏற்புடையதாகக் கருதப்படுகின்றன. மேலும், இதே சொல்லாடல்களைத்தான் சமூகத்தின் பொதுவாக்கப்பட்ட சொல்லாடல்களாகப் பொது சமூகத்தினர் மட்டுமின்றி ஏகத்துக்கும் எல்லோரும் பயன்படுத்தும் சொல்லாடல்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. 

இத்தகையச் சொல்லாடல்கள் ஏற்படுத்துகிற உளவியல், பண்பாடு, அறிவுத் தாக்கத்தின் காரணமாகத்தான் மேல்சாதி / உயர்சாதி/ ஆதிக்க சாதி எனும் சொல்லாடல்களைச் சமூக மாற்றம் குறித்தும் சாதிய எதிர்ப்பும் பேசுகிற சனநாயகச் சக்திகள்கூட தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வருகின்றனர். இத்தகையச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதும் புழங்குவதும் ஆதிக்க மனநிலையும் அதிகாரமும் நிரம்பிய சாதியினரின் கற்பிதங்களை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்வதாகும்.

தாழ்ந்த சாதி எனும் சொல் வழக்கு தவறானது என்பதைப் போலவே, மேல்சாதி / உயர்சாதி / ஆதிக்க சாதி எனும் சொல் வழக்குகளும் தவறானவை; பிழையானவை; பிற்போக்கானவையாகும். 

தாழ்ந்த சாதி எனத் தொடக்கத்தில் குறிக்கப்பட்டாலும், அதில் உள்ள சமூகப் பொருண்மைப் பிழை உணர்த்தப்பட்ட பிறகு 'தாழ்த்தப்பட்ட சாதி அல்லது ஒடுக்கப்பட்ட சாதி' எனச் சொல்லாடல் சரிசெய்யப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட சாதியினர் அவர்களாகத் தாழ்த்திக் கொள்ளவில்லை; அவர்களாக ஒடுங்கிக்கொள்ளவில்லை. மாறாக, மற்றவர்களால் தாழ்த்தப்பட்டனர்; மற்றவர்களால் ஒடுக்கப்பட்டனர். ஆகையால்தான், தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் எனக் குறிப்பது சரியான சொல்லாடல்களாகக் கருதப்பட்டன. 

இதே நோக்கில் பார்க்கும்போது, குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் செய்வதை, உயர்வடைவதை மற்ற சாதியினரின் துணையால் நடந்திருக்க முடியாது; அப்படி நடக்கவும் கிடையாது. 

இந்நிலையில், குறிப்பிட்ட சாதியினர் தம்மை சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தரநிலைகளிலும், சாதி பற்றிய கற்பிதங்களிலும் உயர்த்திக் கொண்டனர். உயர்த்திக் கொள்வதற்கான பல்வேறு வேலைகளை, தந்திரங்களை, சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். இத்தகையச் சாதிய உயர்வாக்கம் அல்லது மேல்நிலையாக்கம்தான் ஆதிக்க மனநிலையையும் அதிகாரத்தையும் பெறுவதற்குத் துணை நின்றிருக்கிறது. 

இவ்வாறான ஆதிக்க மனநிலையும் அதிகாரமும்தான் பிற சாதியினரைத் தாழ்த்தவும் ஒடுக்கவும் முனைப்பு காட்டியுள்ளன. அதாவது, சாதிய மேட்டிமைப் பகட்டும் சாதித் தாட்டியத் திமிரும் பிற சாதியினரைத் தாழ்த்துவதிலும் ஒடுக்குவதிலும் குறியாய் இருந்து வந்திருக்கின்றன. 

மற்றபடி, அந்தந்தச் சாதியினர் எவரும் பிறப்பிலேயே உயர்ந்த சாதியும் கிடையாது; ஆதிக்க சாதியும் கிடையாது; மேல் சாதியும் கிடையாது. 

பிறகெப்படி, அவர்களைக் குறிப்பது? 

உயர்த்திக்கொண்ட சாதி வெறியினர் / உயர்த்திக் கொண்ட சாதியினர் / ஒடுக்கும் சாதியினர் /ஆதிக்கம் செய்யும் சாதிகள் என்பதுதான் இப்போதைய சூழலில் சரியான சொல்லாடல்களாக இருக்கும். பிற்காலங்களில் அல்லது இப்போதேகூட சரியான பொருண்மை கொண்ட சொல்லாடல்கள் முன்மொழியக் கூடும்.

உயர்த்திக் கொண்ட சாதிகள் / ஆதிக்கம் செய்யும் சாதிகள் / ஒடுக்கும் சாதிகள் எனக் குறிக்கும்போதுதான், செயற்கையாய் உயர்த்திக்கொண்ட சாதிதான் அது; பிறப்பிலேயே அது உயர்வான சாதி கிடையாது; பிற சாதியினர் மீது ஆதிக்கம் செய்வதும் ஒடுக்குவதும் செயற்கையானது; ஆதிக்கத்தாலும் அதிகாரத்தாலும் அது நடக்கிறது எனும் பொருள்படுகிறது. 

இங்கு, தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகள்தான் உண்டே ஒழிய, தாழ்ந்த சாதிகள் கிடையாது; ஒடுங்கிய சாதிகள் என எதுவும் கிடையாது. அதேபோல, உயர்த்திக்கொண்ட சாதிகள்தான் / ஆதிக்கம் செய்யும் சாதிகள்தான் உண்டே தவிர, பிறப்பிலேயே உயர்சாதிகளோ ஆதிக்க சாதிகளோ மேல்சாதிகளோ எதுவும் கிடையாது. 

அதேபோலத்தான், இடைநிலைச் சாதிகள் எனும் சொல்லாடலும் புழங்கப்படுகிறது. மேல் சாதிகள் என்பதான பகுப்பும், கீழ் சாதிகள் என்பதான பகுப்பும் உண்மையானது; இயல்பானது என்பதாக ஒத்துக் கொள்ளும் நிலையில்தான், அதற்கிடைப்பட்ட நிலையில் உள்ள சாதிகள் இடைநிலைச் சாதிகள் என்பதாக ஒத்துக்கொள்ளும் வெளிப்பாடே இடைநிலைச் சாதிகள் எனக் குறிப்பதுமாகும். மேல்சாதிகள் என்பதும், உயர்சாதிகள் என்பதும், கீழ்சாதிகள் என்பதும் உண்மையில்லை; சரியானதுமில்லை. அவ்வாறு சுட்டுவதும் பிழையானது. அதுபோலத்தான் இடைநிலைச் சாதிகள் எனச் சுட்டுவதும் பிழையானதுமாகும்.

ஏனெனில், பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் தமிழர் மரபு. அதுதான் உண்மையும் கூட. 

ஆகையால், உயர்சாதி / மேல்சாதி / ஆதிக்க சாதி / இடைநிலைச் சாதி எனும் சொல்லாடல்களைப் புறக்கணிப்பதும், அவ்வாறான சொல்லாடல்கள் புழங்குவதைத் தவிர்த்தலும்தான் சமூக சமத்துவக் கண்ணோட்டமாகும்.

இந்தக் கட்டுரையில் முன்மொழியப்பட்டிருக்கும் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் முடிந்த முடிபுகள் கிடையாது. சமூக சமத்துவத்துக்கான உரையாடல் முன்னெடுப்பு அவ்வளவே. இதுபோன்ற உரையாடல்கள் நிரம்ப வரும்போதுதான் சரியான சொல்லாடல்களையும் கருத்தாடல்களையும் பெறமுடியும்.


கட்டுரையாளர்:

முனைவர் ஏர் மகாராசன்,

சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.

மக்கள் தமிழ் ஆய்வரண்,

தமிழ்நாடு.

தொடர்புக்கு:

maharasan1978@gmail.com




ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கலைப் புலப்பாடு: எதிர்ப்பும் எதிர் மரபும் - மகாராசன்



மாமன்னன் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்.

தமிழ்ச் சமூகத்தில் சில பல கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த அரசியலைக் காட்டிலும், அத்திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், பாதிப்புகள், மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் குறித்துப் பல்வேறு கோணங்களில் கவனிக்கத்தக்கவை; விவாதிக்கத்தக்கவை. 

சாதிப் பின்புலங்களை முன்வைத்து வெளிவந்த கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த உள்ளீடான அரசியல் ஒருபுறமிருந்தாலும், அந்த மாதிரியான படங்களை முன்வைத்து அல்லது அந்த மாதிரியான படங்களால் மேலெழுப்பப்பட்ட புறவயமான சமூக மற்றும் அரசியல் விளைவுகள் வேறுவேறாக வார்ப்பாக்கப்பட்டிருக்கின்றன. 

அதாவது, ஏதேனும் ஒரு சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டு, அந்தச் சமூகத்திற்குள்ளான நிகழ்வுகளையோ நடத்தைகளையோ விமர்சனப்பூர்வமாக ஒரு திரைப்படமோ அல்லது வேறு ஒரு கலைப்படைப்போ பேசியிருந்தாலும்கூட, அது பேசியிருக்கும் அல்லது முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் என்பதையெல்லாம் தாண்டி, குறிப்பிட்ட அந்தத் திரைப்படம் அல்லது அந்தக் கலைப் படைப்பு, தங்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவாய் - அடையாளப்படுத்துவதாய் - பெருமைப்படுத்துவதாய்த்தான் அந்தந்த சமூகங்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, தங்கள் சமூகத்தின் மேட்டிமையையும் பகட்டையும் தாட்டியத்தையும் பகிரங்கப்படுத்திக் கொள்வதற்காகப் பெருந்தீணியாக அது போன்ற படங்கள் அல்லது படைப்புகள் தெரிந்தோ தெரியாமலோ செயலாற்றியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, சாதியப் பகட்டும் மேட்டிமையும் தாட்டியமும் கொம்புசீவி விடப்பட்டதில் அத்தகையத் திரைப்படங்களைத் தமதாக்கிக் கொண்டனர் உயர்த்திக்கொண்ட பல தரப்பினரும். 

உண்மையிலேயே, அந்தத் திரைப்படங்கள் தங்கள் மீதான விமர்சனத்தை முன்வைத்திருப்பதாக அந்தத் தரப்பினர் உணர்ந்திருந்தாலோ அல்லது உள்வாங்கியிருந்தாலோ, அந்தத் திரைப்படங்களைப் பகட்டாகவும் தாட்டியமாகவும் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதையெல்லாம் - அந்த விமர்சனங்களையெல்லாம் விளங்கிக்கொள்ளாமல்தான் இன்னும்கூட அதைப் போன்ற படங்களைத் தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அடையாளப் படங்களாகத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

மேட்டிமைப் பகட்டும் தாட்டியத் திமிரோடும் அந்தந்தத் திரைப்படங்களைத் தூக்கிக்கொண்டாடியபோது ஏற்பட்ட சமூகப் பதற்றங்கள், பாதிப்புகள் யாவும் சமூக - பொருளாதார - அரசியல் மற்றும் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மற்ற சமூகங்களுக்குத்தான் ஏற்பட்டன. அந்த மாதிரியான திரைப்படங்களைப் பெருமைப்படத் தூக்கிக்கொண்டாடிய சமூகங்களைக் காட்டிலும், அவற்றுக்கு அப்பாற்பட்ட மற்ற சமூகங்கள் அடைந்த சமூகத் துயரங்களும் அனுபவங்களும் வேறுவேறானவை; முற்றிலும் தலைகீழானவையாகவே இருந்திருக்கின்றன.

இந்நிலையில், அகவயமாகவும் புறவயமாகவும், நல்லபடியாகவும் கெட்டபடியாகவும் ஒரு படம் தமக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து, படைப்பாளி எனும் நிலையிலிருந்தும், பாதிக்கப்பட்டதான தரப்பிலிருந்துமாய் ஒருவர் பேசுகிறார் எனில், அதில் உள்ள நியாயமான சமூக உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள முற்படாமல், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசியதாகப் புரிந்து கொண்டு, அதை எதிர்ப்பதும் மறுப்பதுமான விவாதங்கள்தான் மிக அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்பிலும் மறுப்பிலும் சாதிய மேட்டிமைக் காழ்ப்பும் வன்மங்களும்தான் அதே தாட்டியத்தோடு தாண்டவமாடுகின்றன. 

நாம் விவாதிக்க வேண்டியதும், மறு பரிசீலனை செய்ய வேண்டியதும், சுயவிமர்சனமாய்ப் பார்க்க வேண்டியதும் யாதெனில், ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்துதான். ஆனால், அந்தக் கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. 

ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தும் சமூக விளைவுகளை நேர்மையோடும் சுய விமர்சனத்தோடும் அணுகுவதே சமூக சனநாயக மாண்பு. மாறாக, சாதிய மேட்டிமையின் மீதும் பகட்டின் மீதும் தாட்டியத்தின் மீதும் அடுத்தவர் அல்லது மற்றவர் கைவைத்துவிட்டதாய்ப் பதற்றமடைவதும், தங்கள் சமூகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகவும் எதிர்ப்பாகவும் புரிந்துகொண்டு, அதே மேட்டிமைத்தனத்தோடும் தாட்டியத்தோடும் சமூக ஊடகங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். சமூக மாற்றம் குறித்துப் பேசக்கூடிய பெரும்பாலோர், தத்தமது சமூகப் பற்றுதலை உள்ளுக்குள் வைத்து மறைத்துக்கொண்டுதான் பொத்தாம் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுயசாதி விமர்சனத்தோடு இது குறித்துப் பேசுபவர்கள் அரிதாகிப் போனார்கள். 

இது ஒருபுறமிருக்க, மற்றவர்களின் மேட்டிமையாலும் தாட்டியத்தாலும் பாதிக்கப்பட்டவர்களும், அந்த மேட்டிமையையும் தாட்டியத்தையும் எதிர்கொண்டு எதிர்ப்பவர்களும், கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகளின் அனுபவங்களைத்தான் பேசமுடியும்; பேசுவார்கள். சமத்துவ வேண்டலுக்கான இத்தகையப் பேச்சுகள் யாவும், சமூக அனுபவங்களின் துயரையும் கசப்பான காயங்களையும் காலம் பல கடந்தாலும் சுமந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் பேச்சுகளில் நிறைகுறை பல இருக்கலாம். சரி தவறுகள் இருக்கலாம். ஆயினும், சமூகப் பகையுணர்ச்சியோ அல்லது சமூகப் பழிவாங்கலோ ஏதுமற்றவை. அதேவேளை, அத்தகையப் பேச்சுகளை மறுப்பதும் எதிர்ப்பதும் நிராகரிப்பதும்தான் சமூக மேட்டிமையும் தாட்டியமும் கொண்டதாகும். கூடவே, பெரும்பாலான கலைப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் தன்வயப்படுத்தியிருப்பதும்கூட இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தை முன்வைத்து, அதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள் முன்வைத்த பேச்சுகள், தமிழ்ச் சமூகத்தில் கொதிநிலைப் பேசு பொருளாகச் சமூக ஊடகங்களிலும் அரசியல் சமூக வெளிகளிலும் மிகத் தீவிரமாகப் பரவலாகியதுடன், கடுமையான எதிர்ப்புணர்வையும் எதிர்கொள்ள நேரிட்டது. மாமன்னன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே, அந்தப் படம் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. அந்த எதிர்ப்புகள் யாவும் பெரும்பாலும் காழ்ப்புணர்வின் அடிப்படையிலான ஊகங்களின் அடிப்படையிலேதான் இருந்தன என்பதுதான் அவற்றின் பலவீனமாகவும் அமைத்து போயின.

பாதிக்கப்பட்டவர்களின் அனுபவக் குரலைக் காதுகொடுத்துக் கேளாமல், வெறுமனே கலைப் படைப்புகளின் புனிதப் பூச்சுகளைச் சமூகப் பூச்சாக முன்வைக்கும் பலரின் பேச்சுகளில் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் எச்சமாய் இன்னும் ஒட்டிக்கிடப்பதுதான் சமூகத்தின் பேரவலம். இந்த அவலம், மாமன்னன் படத்தை முன்வைத்தும் நடந்து முடிந்திருக்கிறது.

இன்னும் சாதியம் குறித்துப் புரிந்துகொள்ளாமல்தான், சமூகம் குறித்த விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன.

***

தோழர் மாரி செல்வராசு அவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும் முன்பாகவே, அவரது எழுத்துகளும் பேச்சுகளும் எமக்கு அறிமுகம் ஆகியிருந்தன. தமது படைப்புகளின் வழியும் பேச்சுகளின் வழியும் மானுட சமத்துவத்துக்கான வேட்கையை உள்ளீடாகப் புலப்படுத்திக்கொண்டிருக்கும் மாரி செல்வராசு அவர்களின் பேச்சுக்கும் படைப்புக்கும் எதிரான சாதிய வன்மங்களையெல்லாம் எதிர்கொண்டு, தமது குரலை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் மூலம் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சமூக வலியையும், ஒடுக்குதலுக்கு எதிரான சமூக உணர்வையும் கலைப்படைப்பின் பேசுபொருள் உள்ளீடாகப் படைப்பாக்கியிருந்தார் மாரி செல்வராசு. இந்த வரிசையில் மாமன்னன் திரைப்படத்தையும் அதேவகைப்பட்ட சமூக உரையாடலுக்கு உகந்த வகையில் படைப்பாக்கியிருக்கிறார் அவர்.

உயர்த்திக் கொண்ட சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும் அதன் கோரத்தையும், அவற்றைக் காலங்காலமாக எதிர்கொண்டு வருகிற ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களின் வலியையும், பொது சமூகப் பார்வைக்கும் உரையாடலுக்கும் ஒரு திரைப்படத்தின் வாயிலாகக் கடத்தியிருக்கிறது மாமன்னன். 

சாதிய மேட்டிமையின் அதிகாரம் நோக்கிய நகர்வுகளும், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள சாதிய மேட்டிமையின் நகர்வுகளும் பல சமூகங்களைக் காவு வாங்கியிருக்கின்றன. அந்த வகையில், அதிகாரத்தாலும் சாதியத்தாலும் காவு வாங்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மனதின் அனுபவப்பாடுகளின் சிற்சில பகுதிகளைப் பொது சமூக மனதின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் கொண்டு வந்திருக்கிறது மாமன்னன். 

சாதிய மேட்டிமைக்கு எதிரான ஓர் எதிர் மரபின் கலை வெளிப்பாடுதான் மாமன்னன் படமும்கூட.

தமிழ்த் திரைப்படங்களில் தோற்றத்தாலும் பண்பாலும் நடத்தையாலும் தம்மைத் தரவிறக்கம் செய்துகொண்டு, கோமாளி வேடமேற்று நடித்திருந்த திரு வடிவேலு அவர்களை, மாமன்னன் திரைப்படத்தில் கோமான் எனும் மாமன்னனாக வேடமேற்று நடிக்க வைத்திருப்பதும்கூட, அதிகார மரபுகளின் கலை வடிவங்கள் கட்டமைத்திருந்த அதிகாரப் போக்கிற்கான எதிர்ச்செயல்பாடுதான். 

தமிழ் நாடக மரபில் கோமாளிக் கூத்தென அழைக்கப்பட்ட நாடக நிகழ்த்துக்கலை வடிவமும், அக்கலை வடிவத்தை நிகழ்த்திக் காட்டும் கோமாளி நாடகா்களும் பொழுது போக்கிலான கேளிக்கைச் செயன்மைகளை, செய்கைகளை மேற்கொள்ளும் அல்லது வெளிக்காட்டும் அதேவேளையில், அந்தந்தக் காலகட்டங்களில் நிலவிய, நிலவுகிற சமூக அமைப்பில் காணலாகும் அதிகார வழிப்பட்ட செயன்மைகளை - கற்பிதங்களை - கட்டமைப்புகளை - புனிதங்களை - மனிதா்களை - மனித நடத்தைகளை - மனித மனக்கோலத்தைப் பகடி செய்து எள்ளலுக்கு உள்ளாக்குவதன் வாயிலாக அதிகாரக் கட்டமைப்பிற்கு எதிரான கருத்தியல் கூறுகளை உள்ளீடாக வெளிப்படுத்தவும் செய்திருக்கின்றனா்.

அதிகார வெளிக்கு அப்பாற்பட்ட வெளியிலிருக்கும் அதிகாரமற்றவா்களின் - எளிய மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் - விளிம்பு நிலை மக்களின் குரலையே கோமாளிகளின் பகடிக்குரல், வசைக்குரல், கேலிக்குரல் வெளிப்படுத்தியிருக்கின்றன.

அதிகாரவெளி சார்ந்த புனைவுகள் அனைத்தையும் போகிற போக்கில் மிக இலகுவாகக் கட்டவிழ்ப்புச் செய்யும் போக்கு கோமாளிகளின் செய்கைகளுக்குள்ளும் குரலுக்குள்ளும் அடங்கியிருக்கிறது. இந்தப் போக்கானது வெவ்வேறு காலகட்டங்களின் வெவ்வேறு நிகழ்த்துக் கலை வடிவங்களில் பங்கெடுக்கும் பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த கோமாளி நாடகா்களிடம் வெளிப்பட்டே வந்திருப்பதும், அதிகாரம் இழந்திட்ட தரப்பினரின் மனசாட்சியாய் - அதிகாரத்திற்கு எதிரான மரபாய் ”கோமாளிகள்” எல்லாக் காலத்திலும் உருவெடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில், வெள்ளந்தியாய், ஒன்னும் தெரியாத அல்லது விவரம் தெரியாத அப்பாவியாய் இருக்க நேர்ந்த ஒரு சமூக மனதை, சுய மரியாதைக்கான வேட்கையோடு வெளிக் கிளம்பும் வீரியம் மிக்க எதிர்ப்புணவு விதையாய் மாமன்னனை உருப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராசு. அதாவது, காலங்காலமாக நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்து வந்த ஒரு திரைக் கோமாளியை, அசுரத்தனமான கோமாளியாய்க் காண்பிக்கிறது மாமன்னன். 

இங்கிருக்கும் அரசியலமைப்புச் சட்டங்களின் குறைந்தபட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற - சட்டமன்ற - உள்ளாட்சி அதிகாரங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் ஒடுக்கப்பட்ட தரப்பினர் பெறுவதற்கு நேர்ந்தாலும், அந்த அதிகாரத்தின் வழியான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கோ, பொது சமூக அங்கீகரிப்போ, சுய மரியாதைக்கான மதிப்பளிப்போ எதுவாயினும், அது சாதி பார்த்தே கிடைக்கப்பெறுகின்றன. உயர்த்திக்கொண்ட மேட்டிமைச் சாதியினருக்கு ஒருவகையான சமூக மரியாதையும் பிரதிநிதித்துவப் பங்கேற்புக் குவிப்பும் ஏராளம் வழங்கப்படுகின்றன. அதேவேளை, பொது சமூக மனதின் பொதுப் புத்தியில் கற்பிதமாகிப் படிந்து கிடக்கும் சாதியச் சமூகக் கண்ணோட்டங்கள் சில பல சமூகத்தினரைக் கீழ்ச்சாதிகளாகவே இன்னும் பாவித்துக்கொண்டிருக்கின்றன. கீழ்ச்சாதியென ஒதுக்குதலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவோ அல்லது பிரதிநிதித்துவம் கோருவதோ அல்லது சுய மரியாதை வேண்டுதலோ கூடாது என்பதைத்தான் அதிகாரத்தோடு உறவாடிக்கிடக்கும் உயர்த்திக்கொண்ட சாதிய மனதின் உள்ளீடாக இருந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உயர்த்திக்கொண்ட சாதியினரிடமும் அதிகாரத் தரப்பினரிடமும் சுய மரியாதை ஏதுமற்று நிற்கும் அவலம்தான் இந்தியச் சமூகம் முழுமையிலும் இன்னும் பரவிக் கிடக்கிறது. அதிகாரத்தோடு பிணைந்திருக்கிற சாதியத்தால் இந்த அவலம் எப்படி நடக்கிறது? இதன் சமூக வலி என்ன? இந்த அவலம் ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? மாறினால் என்னவாகும்? என்பதைத்தான் ஒரு கலைப்படைப்புக்கு உண்டான தொனியில் மாமன்னனில் சொல்ல முற்பட்டிருக்றார் இயக்குநர். இதுவுமே, உயர்த்திக்கொண்ட சாதிய அதிகாரத்திற்கு எதிரான ஓர் எதிர் மரபின் குறியீட்டு வெளிப்பாடுதான்.

அந்தவகையில், மானுட சமத்துவத்திற்கான வேட்கையையும், அதை அடைவதற்கான தேடலையும் விதைத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம். இப்படம் முன்வைத்திருக்கும் வழிமுறைகளிலும் தீர்வுகளிலும் முடிவுகளிலும் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஓர் கலைப் படைப்பாக முழுமை அடைந்திருக்க வேண்டிய இப்படம், அது முழுமை பெறுவதற்குள்ளாகவே வழக்கமான தமிழ்த் திரைப்படங்களின் சாயல்களைப் போர்த்திக் கொண்டிருப்பதில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆயினும், அதிகாரத்தோடு பிணைந்திருக்கிற சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நூற்றாண்டுகால வலியையும் வேட்கையையும் பொது சமூகத்தின் சுய பரிசீலனைக்கு உட்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க கலைப் படைப்பாகவும் உருப்பெற்றிருக்கிறது மாமன்னன் திரைப்படம். 

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சுய மரியாதைக் குரலுக்கான நியாயங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் வலியுறுத்தியிருக்கிறது. படம் குறித்தான நிறை குறைகள் நிறையவே இருப்பினும், மனித சமத்துவக் குரலை உரக்கப் பேசியிருக்கும் இந்தப் படத்தை வரவேற்பதும் ஆதரிப்பதும் நமது சமூகக் கடமையாகும். மாரி செல்வராசு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

***

மாமன்னன், மண்ணுவாக ஆக்கப்பட்டதன் - இருந்துவிட்டதன் பின்புலத்தைப் படம் ஓரிடத்தில் பதிவு செய்திருக்கும். மண்ணுகள் மாமன்னன்களாக ஆக வேண்டியதன் அவசியத்தைப் படம் வலியுறுத்தும். மாமன்னன், அதிவீரா, லீலா போன்ற பெயர்கள் கதை மாந்தர்களின் பெயர்களாக வருகின்றன. இந்தப் பெயர்கள் எல்லாம் எதிர் அதிகார மரபின் கலைப் படைப்பில் புழங்குவன. மாரி செல்வராசுவும் எதிர் அதிகார மரபைச் சார்ந்தவர்தான்.

மகாராசன் என்பதற்கு மாமன்னன் என்பது பொருள். மகாராசன் எனும் எனது பெயரும் மாமன்னன் என்பதே.

சாதிய மேட்டிமையின் தாட்டியத்திற்கு, கலை வடிவிலான எதிர் அதிகார மரபைக் காண்பித்திருக்கும் மாமன்னன் படத்தைப் போலவே, நான் பிறந்த போதே எதிர் அதிகார மரபை எமக்குள் விதைத்திருக்கிறார் எனது அப்பா நாராயணன். 

மாமன்னன் படம் பார்த்த பிறகு, எனது அப்பாவின் எதிர் அதிகாரச் செயல்பாடுகள்தான் எனது நினைவுகளில் வந்து வந்து போயின. எனது அப்பாவைக் குறித்து நான் எழுதியிருந்த நினைவுக் குறிப்பை இவ்விடத்தில் பகிர்வதும்கூடப் பொருத்தமாய்த்தான் இருக்கும் எனக் கருதுகிறேன்.அது வருமாறு:

பஞ்சமும் வறுமையும் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு முன்பாகப் பிறந்திருந்த அண்ணன்களையும் அக்காக்களையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழலில், என் அம்மாவுக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன்.

மூன்று பெண் பிள்ளைகள் எஞ்சியிருந்தாலும், ஆணொன்று வேண்டுமென வரமிருந்தும் தவமிருந்தும் என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வார். இந்தப் பிள்ளையாவது உசுரோட நெலைச்சு நிக்கனும்னா, மூக்குத்தி குத்தி பிச்சைன்னு பேரு வைங்கன்னு ஊரே சொல்லுச்சாம்.

பேருக்கும் உசுருக்கும் என்ன தொடுப்பு இருக்கு? பேருக்கும் மானத்துக்கும் தானே தொடுப்பு இருக்குன்னு நெனச்சிருக்காரு அப்பா. பெயரில் என்ன இருக்குன்னு சாதி சனமே கேட்டப்போ, ஒரு மனுசரோட அவமானத்துக்கும் மரியாதைக்கும் அந்த மனுசரோட பேருங்கூடத்தான் காரணமா இருக்கும்னு சொல்லி, எனக்கு மகாராசன் என்றே பெயர் வைத்தவர் என் அப்பா தான்.

வீரக்குடும்பன் என்கிற என் தாத்தாவின் பெயரை மறக்கடித்து, பம்பையன் என்றே பட்டப்பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறது சாதியச் சமூகம். தன்னோட பெயரை இந்தச் சமூகம் உச்சரிக்க மறுத்ததால், வேறொரு பெயராலேயே வாழ்ந்து மடிந்து போன தாத்தாவின் சோகங்கள் அப்பாவுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ, பிச்சை என்ற பெயரை மறுத்து, மகாராசன் எனப் பெயர் வைத்திருக்கிறார் அப்பா.

உயர்த்திக் கொண்ட மேட்டிமைச் சமூகப் பெயர் வழக்குகள் சமூக மதிப்பையும், உழைக்கும் எளிய மக்களின் பெயர் வழக்குகள் சமூக இழிவையும் தரும்படியாக இருந்த ஒரு சமூக அமைப்பில், எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு மகாராசன் எனப் பெயர் வைத்திருப்பதை எதிர் அதிகார மரபின் தன்மான அடையாளமாகத் தான் பார்க்கிறேன்.

இது போன்ற எதிர் அதிகார மரபின் விதைகளை என்னுள் விதைத்திருக்கிறார் என் அப்பா. என் வாழ்விலும் எழுத்திலும் புலப்படுகிற எதிர் அதிகார மரபை முதலில் என் அப்பாவிடமிருந்தே பெற்றிருக்கிறேன்.

என்னுள் விரிந்திருக்கும் ஆளுமைகளுக்குத் தன்மான நீர் பாய்ச்சி வளப்படுத்திய என் அப்பா தான் என் முதல் ஆசானாய், முன் மாதிரி நாயகராய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்.

நினைவுகளில் வாழ்கிற அவரது வாழ்க்கைப் பாடுகளே எனது முதல் பாடங்கள்.

மகாராசன் எனும் மாமன்னனாகிய எமது எழுத்துச் செயல்பாடுகளும் எதிர் அதிகார மரபின் விளைச்சல்கள்தான். மானுட சமத்துவத்துக்கான இந்த மரபு இன்னும் நீளும்; இன்னும் ஆழ உழுதிடும்.

**

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.

தொடர்புக்கு: maharasan1978@gmail.com


வெள்ளி, 28 ஜூலை, 2023

கழுவேற்றப்படும் நிலமும் விவசாயிகளும் - மகாராசன்


உழந்தும் உழவே 
தலையெனப் பாடியும்,
வாடிய பயிரைக் 
கண்டபோதெல்லாம் வாடியும்
அறமும் உயிர் நேயமும்
பெருகப் பெருக விளைந்திருந்த
தமிழ் நிலம்
கூனிக் குறுகிக் கிடக்கிறது.

உடல் நோகவும்
உயிர் கரையவுமான 
உழைப்பின் பெரும்பாட்டு
உணர்வுப் பெருக்கில்
தளைத்து வளர்ந்த
பிள்ளைப் பயிர்களை,
ஆளாக்கிக் கிடந்த
உழவு மேனி ஆன்மாக்களின்
வேரறுத்தும் கழுத்தறுத்தும் தளையறுத்தும் 
கழுவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் 
ஏகப் பெருமுதலைகளின்
வைப்பாள்கள்.

கரி தோண்டவும்
எரிநெய் உறிஞ்சவும்
விளை நிலத்தை
துடிதுடிக்கக் கொல்லும்
துயர்க் காலத்தில்,
நிலத்தை நம்பிக் கிடந்த
சம்சாரிகளின் வாழ்வை
பெருங்களவாணிகள் சூறையாடி சுரண்டல் தீயில் வீசியெறிகிறார்கள்.

பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப் பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்திப் பாழ்படுத்தும்
படுபாதகப் பாவங்கள் 
நாளொரு நாளும்
நீர் பாயும் ஊரிலும்
திமிர்க் கோலத்தில்
தலைவிரித்தாடுகின்றன.

வக்கிரமும் வன்மமும் காழ்ப்பும்
பழிவாங்கும் பகையுணர்ச்சியும்
திமிரும் ஆணவமும் கூடிய கொலைவெறியில்
நிலத்தை அம்மணமாக்கும் 
இழி வேலை அழிச்சாட்டியத்தைத்
தீவிரப்படுத்துகிறது அதிகாரம்.

அதிகாரத்தின் எந்திரக் கைகளால்
பயிர்களையெல்லாம்
வாரிச்சுருட்டிச் சாகடித்து 
நிலத்தைக் கையகப்படுத்துவது,
உழவரையும் நிலத்தையும் மட்டுமல்ல;
எதிர்காலத் தலைமுறையையும்
பசித் துயரில் சாகடிக்கத்தான்.

உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே 
நிலத்தை இழந்து 
பயிர்கள் சாகும் 
வலியும் வேதனையும் புரியும்.

நிலமும் அற்று
வெள்ளாமை பார்க்க 
ஆளரவம் அற்றுப்போன பின்னே,
பசியெடுத்து அம்மணமாகும்போது
இந்த வலியும் வேதனையும் மற்றவருக்கும் வரும்.
அந்தக் காலம் 
விரைவில் தெரியும்.

வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்.

அழிச்சாட்டிய அதிகாரம் 
நாசமாய்ப் போகட்டும்.
இந்த அதிகாரத்தின் ஆணவம் அழிந்து போகட்டும்.

ஏர் மகாராசன் ,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
28.07.2023

வியாழன், 27 ஜூலை, 2023

அதிகாரத்தின் அட்டூழியம் - மகாராசன்

உழவைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இதன் வலியும் வேதனையும் புரியும்...!

இந்த வலியும் வேதனையும் உண்ணக்கூடியவர்களுக்கும் வரும் காலம் விரைவில் தெரியும்..

பயிர்களையெல்லாம் சாகடித்து நிலத்தைக் கையகப்படுத்துகிறோமே என்கிற, 
குறைந்தபட்ச அறிவும் அறமும் 
குற்ற உணர்வும் அற்றுப்போய்
நிலத்தை அம்மணப்படுத்துவதுதான் அதிகாரத் திமிரின் அட்டூழியம்.

இந்த அதிகாரத்தின் ஆணவம் 
அழிந்து போகட்டும்.

ஏர் மகாராசன்.

அதிகாரத்தின் அழிச்சாட்டியம் - மகாராசன்


உழந்தும் உழவே தலையென,
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதான அறமும் உயிர் நேயமும்
பெருகப் பெருக விளைந்த 
தமிழ் நிலத்தில்,
உழவர் உழைப்பின் 
உடல் நோகவும் உயிர் கரையவும்
உணர்வுப் பெருக்கில் 
தளைத்து வளர்ந்து,
பொதியாடிப் பரிந்து நின்ற
பச்சைப் பசும் பயிர்களையெல்லாம்
சாகடித்து நாசப்படுத்திப் பாழ்படுத்தும்
படுபாதகப் பாவத்தை,
வக்கிரமும் வன்மமும் காழ்ப்பும்
பழிவாங்கும் பகையுணர்ச்சியும்
திமிரும் ஆணவமும் கூடிய கொலைவெறியர்களால் மட்டும்தான் செய்ய முடியும்.

அந்தப் படுபாதகக் கொலைவெறியர்கள்தான்
அதிகாரத்தைப் போர்த்திக் கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள்.

வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும் 
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்.

அழிச்சாட்டிய அதிகாரம் 
நாசமாய்ப் போகட்டும்.

ஏர் மகாராசன்
27.07.2023

நன்றி:
ஓவியம்: ம.இராமமூர்த்தி

செவ்வாய், 11 ஜூலை, 2023

காலத்தில் கரைதல் - மகாராசன்


வெளிரிய வானத்தில் 
வலி நோகச் சிறகடித்துப் பறந்து திரிந்து 
இளைப்பாறவும் களைப்பாறவும்
உச்சிக் கிளை தேடியபடி
இறகுகள் துவள
வட்டமடித்துக் கொண்டிருந்தது
வனப் பறவை.

வெறுமை ததும்பிய 

வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில் 

ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தது

யாருமற்ற தனிமை.


வலசைத் தடங்களின் கதைகளில்

கண்ணீர் மேவி

தூர்ந்து கிடந்தன

திக்குகளின் பாதைகள்.


உதிர்ந்து விழும் சருகின்

காம்பைக் கவ்வியபடி 

சிறகைத் துறந்து

மிதந்தலைந்து வந்த இறகாய்

மண்ணை நீவி

தன்னைத் தொலைத்துக் கொண்டது 

மனப் பறவை.


மிச்சமிருந்த கனவையும்

மெல்லக் கவ்விக் கொண்டு

உயரப் பறந்தது வாழ்க்கை.


காலத்தில் கரைதலும்

வாழ்வின் நிமித்தம் ஆனது.

*

ஏர் மகாராசன்

10 .07.2023

ஞாயிறு, 2 ஜூலை, 2023

மாமன்னனும் மகாராசனும் : மகாராசன்


தோழர் மாரி செல்வராசு அவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும் முன்பாகவே, அவரது எழுத்துகளும் பேச்சுகளும் எமக்கு அறிமுகம் ஆகியிருந்தன. தமது படைப்புகளின் வழியும் பேச்சுகளின் வழியும் மானுட சமத்துவத்துக்கான வேட்கையை உள்ளீடாகப் புலப்படுத்திக்கொண்டிருக்கும் மாரி செல்வராசு அவர்களின் பேச்சுக்கும் படைப்புக்கும் எதிரான சாதிய வன்மங்களையெல்லாம் எதிர்கொண்டு, தமது குரலை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

உயர்த்திக் கொண்ட சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும் அதன் கோரத்தையும், அவற்றைக் காலங்காலமாக எதிர்கொண்டு வருகிற ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களின் வலியையும், பொது சமூகப் பார்வைக்கும் உரையாடலுக்கும் திரைப்படத்தின் வாயிலாகக் கடத்தியிருக்கிறது மாமன்னன். 

மானுட சமத்துவத்திற்கான வேட்கையையும், அதை அடைவதற்கான தேடலையும் விதைத்திருக்கிறது மாமன்னன்  திரைப்படம். இப்படம் முன்வைத்திருக்கும் வழிமுறைகளிலும் தீர்வுகளிலும் முடிவுகளிலும் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஓர் கலைப் படைப்பாக முழுமை அடைந்திருக்க வேண்டிய இப்படம், அது முழுமை பெறுவதற்குள்ளாகவே வழக்கமான தமிழ்த் திரைப்படங்களின் சாயல்களைப் போர்த்திக் கொண்டிருப்பதில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆயினும், அதிகாரத்தோடு பிணைந்திருக்கிற சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நூற்றாண்டுகால வலியையும் வேட்கையையும் பொது சமூகத்தின் சுய பரிசீலனைக்கு உட்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க கலைப் படைப்பாகவும் உருப்பெற்றிருக்கிறது மாமன்னன் திரைப்படம். 

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சுய மரியாதைக் குரலுக்கான நியாயங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் வலியுறுத்தியிருக்கிறது. படம் குறித்தான நிறை குறைகள் நிறையவே இருப்பினும், மனித சமத்துவக் குரலை உரக்கப் பேசியிருக்கும் இந்தப் படத்தை வரவேற்பதும் ஆதரிப்பதும் நமது சமூகக் கடமையாகும். மாரி செல்வராசு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

*

மாமன்னன், மண்ணுவாக ஆக்கப்பட்டதன் - இருந்துவிட்டதன் பின்புலத்தைப் படம் ஓரிடத்தில் பதிவு செய்திருக்கும். மண்ணுகள் மாமன்னன்களாக ஆக வேண்டியதன் அவசியத்தைப் படம் வலியுறுத்தும். மாமன்னன், அதிவீரா, லீலா போன்ற பெயர்கள் கதை மாந்தர்களின் பெயர்களாக வருகின்றன. இந்தப் பெயர்கள் எல்லாம் எதிர் அதிகார மரபின் கலைப் படைப்பில் புழங்குவன. மாரி செல்வராசுவும் எதிர் அதிகார மரபைச் சார்ந்தவர்தான்.

மகாராசன் என்பதற்கு மாமன்னன் என்பது பொருள். மகாராசன் எனும் எனது பெயரும் மாமன்னன் என்பதே.

சாதிய மேட்டிமையின் தாட்டியத்திற்கு, கலை வடிவிலான எதிர் அதிகார மரபைக் காண்பித்திருக்கும் மாமன்னன் படத்தைப் போலவே, நான் பிறந்த போதே எதிர் அதிகார மரபை  எமக்குள் விதைத்திருக்கிறார் எனது அப்பா நாராயணன். 

மாமன்னன் படம் பார்த்த பிறகு, எனது அப்பாவின் எதிர் அதிகாரச் செயல்பாடுகள்தான் எனது நினைவுகளில் வந்து வந்து போயின. எனது அப்பாவைக் குறித்து நான் எழுதியிருந்த நினைவுக் குறிப்பை இவ்விடத்தில் பகிர்வதும்கூடப் பொருத்தமாய்த்தான் இருக்கும் எனக் கருதுகிறேன்.அது வருமாறு:

பஞ்சமும் வறுமையும் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு முன்பாகப் பிறந்திருந்த அண்ணன்களையும் அக்காக்களையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழலில், என் அம்மாவுக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன்.

மூன்று பெண் பிள்ளைகள் எஞ்சியிருந்தாலும், ஆணொன்று வேண்டுமென வரமிருந்தும் தவமிருந்தும் என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வார். இந்தப் பிள்ளையாவது உசுரோட நெலைச்சு நிக்கனும்னா, மூக்குத்தி குத்தி பிச்சைன்னு பேரு வைங்கன்னு ஊரே சொல்லுச்சாம்.

பேருக்கும் உசுருக்கும் என்ன தொடுப்பு இருக்கு? பேருக்கும் மானத்துக்கும் தானே தொடுப்பு இருக்குன்னு நெனச்சிருக்காரு அப்பா. பெயரில் என்ன இருக்குன்னு சாதி சனமே கேட்டப்போ, ஒரு மனுசரோட அவமானத்துக்கும் மரியாதைக்கும் அந்த மனுசரோட பேருங்கூடத்தான் காரணமா இருக்கும்னு சொல்லி, எனக்கு மகாராசன் என்றே பெயர் வைத்தவர் என் அப்பா தான்.

வீரக்குடும்பன் என்கிற என் தாத்தாவின் பெயரை மறக்கடித்து, பம்பையன் என்றே பட்டப்பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறது சாதியச் சமூகம். தன்னோட பெயரை இந்தச் சமூகம் உச்சரிக்க மறுத்ததால், வேறொரு பெயராலேயே வாழ்ந்து மடிந்து போன தாத்தாவின் சோகங்கள் அப்பாவுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ, பிச்சை என்ற பெயரை மறுத்து, மகாராசன் எனப் பெயர் வைத்திருக்கிறார் அப்பா.

உயர்த்திக் கொண்ட மேட்டிமைச் சமூகப் பெயர் வழக்குகள் சமூக மதிப்பையும், உழைக்கும் எளிய மக்களின் பெயர் வழக்குகள் சமூக இழிவையும் தரும்படியாக இருந்த ஒரு சமூக அமைப்பில், எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு மகாராசன் எனப் பெயர் வைத்திருப்பதை எதிர் அதிகார மரபின் தன்மான அடையாளமாகத் தான் பார்க்கிறேன்.

இது போன்ற எதிர் அதிகார மரபின் விதைகளை என்னுள் விதைத்திருக்கிறார் என் அப்பா. என் வாழ்விலும் எழுத்திலும் புலப்படுகிற எதிர் அதிகார மரபை முதலில் என் அப்பாவிடமிருந்தே பெற்றிருக்கிறேன்.

என்னுள் விரிந்திருக்கும் ஆளுமைகளுக்குத் தன்மான நீர் பாய்ச்சி வளப்படுத்திய என் அப்பா தான் என் முதல் ஆசானாய், முன் மாதிரி நாயகராய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்.

நினைவுகளில் வாழ்கிற அவரது வாழ்க்கைப் பாடுகளே எனது முதல் பாடங்கள்.

மகாராசன் எனும் மாமன்னனாகிய எமது எழுத்துச் செயல்பாடுகளும் எதிர் அதிகார மரபின் விளைச்சல்கள்தான்.  மானுட சமத்துவத்துக்கான இந்த மரபு இன்னும் நீளும்; இன்னும் ஆழ உழுதிடும்.

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

02.07.2023



திங்கள், 26 ஜூன், 2023

சாதிய மேட்டிமையும் தாட்டியமும்: கலைப் படைப்புகளைத் தன்வயப்படுத்தியதின் சமூக விளைவுகள் - மகாராசன்


தமிழ்ச் சமூகத்தில் சில பல கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த அரசியலைக் காட்டிலும், அத்திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், பாதிப்புகள், மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் குறித்துப் பல்வேறு கோணங்களில் கவனிக்கத்தக்கவை; விவாதிக்கத்தக்கவை. 

சாதிப் பின்புலங்களை முன்வைத்து வெளிவந்த கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த உள்ளீடான அரசியல் ஒருபுறமிருந்தாலும், அந்த மாதிரியான படங்களை முன்வைத்து அல்லது அந்த மாதிரியான படங்களால் மேலெழுப்பப்பட்ட புறவயமான அரசியல் வேறுவேறாக வார்ப்பாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ஒரு சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டு, அந்தச் சமூகத்திற்குள்ளான நிகழ்வுகளையோ நடத்தைகளையோ விமர்சனப்பூர்வமாக ஒரு திரைப்படமோ அல்லது வேறு ஒரு கலைப்படைப்போ பேசியிருந்தாலும்கூட, அது பேசியிருக்கும் அல்லது முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் என்பதையெல்லாம் தாண்டி, குறிப்பிட்ட அந்தத் திரைப்படம் அல்லது அந்தக் கலைப் படைப்பு, தங்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவாய் - அடையாளப்படுத்துவதாய் - பெருமைப்படுத்துவதாய்த்தான் அந்தந்த சமூகங்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, தங்கள் சமூகத்தின் மேட்டிமையையும் பகட்டையும் தாட்டியத்தையும் பகிரங்கப்படுத்திக் கொள்வதற்காகப் பெருந்தீணியாக அது போன்ற படங்கள் அல்லது படைப்புகள் தெரிந்தோ தெரியாமலோ செயலாற்றியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, சாதியப் பகட்டும் மேட்டிமையும் தாட்டியமும் கொம்புசீவி விடப்பட்டதில் அத்தகையத் திரைப்படங்களைத் தமதாக்கிக் கொண்டனர் உயர்த்திக்கொண்ட பல தரப்பினரும். 

உண்மையிலேயே, அந்தத் திரைப்படங்கள் தங்கள் மீதான விமர்சனத்தை முன்வைத்திருப்பதாக அந்தத் தரப்பினர் உணர்ந்திருந்தாலோ அல்லது உள்வாங்கியிருந்தாலோ, அந்தத் திரைப்படங்களைப் பகட்டாகவும் தாட்டியமாகவும் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதையெல்லாம் - அந்த விமர்சனங்களையெல்லாம் விளங்கிக்கொள்ளாமல்தான் இன்னும்கூட அதைப் போன்ற படங்களைத் தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அடையாளப் படமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

மேட்டிமைப் பகட்டும் தாட்டியத் திமிரோடும் அந்தந்தத் திரைப்படங்களைத் தூக்கிக்கொண்டாடியபோது ஏற்பட்ட சமூகப் பதற்றங்கள், பாதிப்புகள் யாவும் மற்ற சமூகங்களுக்குத்தான் ஏற்பட்டன. அந்தத் திரைப்படங்களைப் பெருமைப்படத் தூக்கிக்கொண்டாடிய சமூகங்களைக் காட்டிலும், மற்ற சமூகங்கள் அடைந்த சமூகத் துயரங்களும் அனுபவங்களும் வேறுவேறானவை; முற்றிலும் தலைகீழானவை. 

இந்நிலையில், அகவயமாகவும் புறவயமாகவும், நல்லபடியாகவும் கெட்டபடியாகவும் ஒரு படம் தமக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து, படைப்பாளி எனும் நிலையிலிருந்தும், பாதிக்கப்பட்டதான தரப்பிலிருந்துமாய் ஒருவர் பேசுகிறார் எனில், அதில் உள்ள நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசியதாகப் புரிந்து கொண்டு, அதை எதிர்ப்பதும் மறுப்பதுமான விவாதங்கள்தான் மிக அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்பிலும் மறுப்பிலும் சாதிய மேட்டிமைக் காழ்ப்பும் வன்மங்களும்தான் அதே தாட்டியத்தோடு தாண்டவமாடுகின்றன.

நாம் விவாதிக்க வேண்டியதும், மறு பரிசீலனை செய்ய வேண்டியதும், சுயவிமர்சனமாய்ப் பார்க்க வேண்டியதும் யாதெனில், ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்துதான். ஆனால், அந்தக் கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தும் சமூக விளைவுகளை நேர்மையோடும் சுய விமர்சனத்தோடும் அணுகுவதே சமூக சனநாயக மாண்பு. மாறாக, சாதிய மேட்டிமையின் மீதும் பகட்டின் மீதும் தாட்டியத்தின் மீதும் அடுத்தவர் அல்லது மற்றவர் கைவைத்துவிட்டதாய்ப் பதற்றமடைவதும், தங்கள் சமூகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகப் புரிந்துகொண்டும், அதே மேட்டிமைத்தனத்தோடும் தாட்டியத்தோடும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். சுயசாதி விமர்சனத்தோடு இது குறித்துப் பேசுபவர்கள் அரிதாகிப் போனார்கள். 

மற்றவர்களின் மேட்டிமையாலும் தாட்டியத்தாலும் பாதிக்கப்பட்டவர்களும், அந்த மேட்டிமையையும் தாட்டியத்தையும் எதிர்கொண்டு எதிர்ப்பவர்களும் கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகளின் அனுபவங்களைத்தான் பேசமுடியும்; பேசுவார்கள். சமத்துவ வேண்டலுக்கான பேச்சுகள் யாவும் அனுபவங்களின் துயரையும் கசப்பான காயங்களையும் காலம் பல கடந்தாலும் சுமந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் பேச்சுகளில் நிறைகுறை பல இருக்கலாம். சரி தவறுகள் இருக்கலாம். ஆயினும், பகையுணர்ச்சியோ அல்லது பழிவாங்கலோ ஏதுமற்றவை. அதேவேளை, அத்தகையப் பேச்சுகளை மறுப்பதும் எதிர்ப்பதும் நிராகரிப்பதும் மேட்டிமையும் தாட்டியமும் கொண்டதாகும். பெரும்பாலான கலைப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் தன்வயப்படுத்திக்கொண்டன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவக் குரலைக் காதுகொடுத்துக் கேளாமல், வெறுமனே கலைப் படைப்புகளின் புனிதப் பூச்சுகளைச் சமூகப் பூச்சாக முன்வைக்கும் பலரின் பேச்சுகளில் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் எச்சமாய் இன்னும் ஒட்டிக்கிடப்பதுதான் சமூகத்தின் பேரவலம். 

இன்னும் சாதியம் குறித்துப் புரிந்துகொள்ளாமல் தான் சமூகம் குறித்த விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. 

ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்,
26.06.2023.




செவ்வாய், 20 ஜூன், 2023

பாவாணரியல்: நூல்கள் வெளியீடும் பாராட்டும்.



மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீள் பதிப்பாக்கம் செய்து, பாவாணரியல் எனும் கோட்பாடாய் முன்வைக்கும் பெருமுயற்சியை உலகத் தமிழ்க் கழகம் முன்னெடுத்தது. பாவாணரியல் நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டத்தையும் அறிவித்திருந்தது. 

தமிழ்ச் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு, பாவாணரியமே கோட்பாட்டு அறிவாயுதம் என்பதை உணர்ந்திருந்த யாம், அத்திட்டத்திற்குப் பலரின் பங்களிப்பைப் பெற்று, உரூ மூன்று இலட்சம் தொகையை நூல் பதிப்பாக்கத்திற்கு வழங்கினேன். கிட்டத்தட்ட 50 பேர் வரையிலும் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைத்திருந்தேன். பதிப்பாக்கத்தின் போது சில பல காரணங்களால் நூல்கள் வெளிவருவது காலத்தாழ்வானது. எனினும், காலத்தாழ்வைப் பொறுத்துக்கொண்டனர் அன்பர்கள். கடந்த ஒரு மாதமாக, முன்வெளியீட்டுத் திட்டத்தில் தொகை செலுத்தியவர்கள் அனைவருக்கும் நூல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

உலகத் தமிழ்க் கழகம் பதிப்பித்த பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா, மதுரையில் பாவாணர் மணிமண்டபத்தில் 18.06.2023இல் நடைபெற்றது. நிகழ்வில், நூல் பதிப்பாக்கத்தில் பெருந்துணை புரிந்தமைக்காக எம்மைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்கியது உலகத் தமிழ்க் கழகம். சூலூர் பாவேந்தர் பேரவைத் தலைவர், புலவர் செந்தலை கவுதமன் அய்யா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.  பாவாணரியல் நூல்களை அறிஞர் பெருமக்களுடன் சேர்ந்து வெளியிடும் வாய்ப்பையும் உலகத் தமிழ்க் கழகம் தந்தது. 

இவ்வாய்ப்பை வழங்கிய உலகத் தமிழ்க் கழகத் தலைவர் அய்யா நிலவழகன், பொதுச்செயலர் அய்யா இளந்திரையன் மற்றும் உதக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். பாவாணரியல் நூலாக்கப் பணியில் துணை நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. பாவாணரியல் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பேரன்பு நன்றி.

பாவாணரியல் கற்போம்.

ஏர் மகாராசன்

*

இணைப்பு: நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ்


வியாழன், 18 மே, 2023

இனம் அழுத நிலம் : மகாராசன்


ஒரு நிலத்தில்
வாழ்ந்த இனத்தின்
இலைகளும் தளிர்களும் 
கிளைகளும் வேர்களும்கூட கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்டபோது 
கதறித்துடித்தன 
அழுகைக்கூக்குரல்கள்.
கையேந்திக் கிடந்த கண்ணீர்த்துளிகளும் உயிர்கொப்பளித்த அரத்தமும்
கசிந்து நசிந்து
மண்ணெல்லாம் சேர்ந்தழுதன.
அந்த நிலமும் இனமும் 
நீட்டிய கைகள்
எட்டாமல் போயிருக்கலாம்.
கடல் தாண்ட முடியாமல்
கால்கள் தவித்திருக்கலாம்.
புத்தன் பெயரால்
பெருங்கொலையில் துடித்திட்ட 
ஓர் இனத்தின் அழுகுரல்
உலகின் காதில் விழுந்தாலும் 
புரியாமல் போயிருக்கலாம்.
ஆனாலும்,
நம் காதில் விழுந்தது;
நமக்குப் புரிந்தது.
அதன் அழுகைமொழி புரிந்த
எட்டுக் கோடிப் பேர்களும்
உயிர் சாட்சிகளாய் நின்றது
அதனிலும் பெருந்துயரம்.

ஏர் மகாராசன்

ஈழப்பனையும் குருவிகளும் : மகாராசன்


கண்ணீர் சுமக்கும் 
தொன்மங்கள் பரவிய
தொல் நிலத்தில்
சிதறிக் கிடக்கின்றன
விதைகள்.
கொத்துக் குண்டுகள் 
புத்தன் பெயரால் ஏவியதில்
காயம்பட்டு நிற்கிறது
நெடிய பனை.
குலைகள் பூத்து
உதிர்ந்த விதைகள்
வரலாறு படித்தன
தாய்ப்பனையின் 
எச்சம் உறிஞ்சி.
பாட்டன் பாட்டிமார்
அரத்தம் தோய்ந்த
காலடித் தடங்கள்
காயும் முன்னே
வேர்கள் பிடுங்குவதைப்
பார்த்துக் கொண்டிருக்குமா
விதைகள்.
ஓங்கிய உயரமும் 
அடர் கருப்புமென
அடையாளம்.
அரத்த வெள்ளம்
வடிந்த ஈரத்தில்
முளை கட்டுகின்றன
விதைகள்.
வடுக்களே
விதைகளாகும் காலம் முளைக்கிறது.
பனைகளும் முளைத்தன
நாடு முழுதும்.
கொஞ்ச காலத்தில்
பொடிப் பனைகள்
ஈனும் பருவத்தில்
குலையாய்க் தொங்கும்
ஈழம்.
கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு
மீண்டும் வரும்.

ஏர் மகாராசன்

புதன், 10 மே, 2023

ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கம் செய்திருக்கும் மலக்குழிக் கதையாடல் : மகாராசன்.


ஒரு காலகட்டத்தியச் சமூக அமைப்பில் கட்டமைக்கப்படுகிற ஒரு பெருங்கதையாடல், அச்சமூக அமைப்பில் உள்ள எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை; எல்லோருக்கும் உகந்ததாக அல்லது சமமாகப் பாவிப்பதும் இல்லை.

பன்மைத்துவம் நிரம்பிய ஒரு சமூக அமைப்பில் ஏதோ ஒரு தரப்பையோ அல்லது ஒரு சில தரப்பினரையோ தான் அடையாளப்படுத்தும்; கண்டுகொள்ளப்படாத தரப்புகள் ஏராளமாகவும் இருக்கும். ஆயினும், அந்தப் பெருங்கதையாடல் சமூகத்தில் எப்பொழுதெல்லாம் புழங்கப்படுகிறதோ அல்லது முன்னெடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பெருங்கதையாடலுக்கு நிகரான/இணையான/எதிரான/மாற்றான கதையாடல்கள் எழுப்பப்படுவதும்; கட்டமைக்கப்படுவதும் நேர்வதுண்டு.

அதாவது, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் கதையாடல்களும், எதிர்க் கதையாடல்களும், மாற்றுக் கதையாடல்களும் பன்மைத்துவச் சமூக அமைப்பில் எல்லாக் காலங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இராமாயணப் பெருங்கதையாடலுக்கு நிகரான/எதிரான/மாற்றான/ தலைகீழ்க் கதையாடல்களும் இந்திய நிலப்பரப்பெங்கும் பல்வேறு வடிவங்களில் இன்னும்கூட வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. அதேபோலத்தான், மகாபாரதக் கதையாடல்களும், சிலப்பதிகாரக் கதையாடல்களும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன.

பன்மைத்துவச் சமூக அமைப்பில் இவ்வாறுதான் பல பெருங்கதையாடல்கள் பல்வேறு வடிவங்களில் உருவாகி வந்திருக்கின்றன. 

விடுதலை சிகப்பியின் மலக்குழிக் கவிதைகூட, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் இன்னோர் எதிர்க் கதையாடலின் நீட்சிதான். பகடியால் ஒரு பெருங்கதையாடலைக் கவிதையால் எதிர்க் கதையாடலை முன்வைத்திருக்கிறார் அவர். 

ஒரு பெருங்கதையாடலை வெளிப்படுத்துவதற்கு உள்ள அத்தனை உரிமைகளும், எதிர்/மாற்றுக் கதையாடல்களை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அந்தவகையில், ஒரு கதையாடலை வெளிப்படுத்துவதற்கு யாவருக்கும் உரிமை உண்டு. சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அடிப்படை உரிமையும்கூட. அதேபோல, ஒரு கதையாடலை சட்டரீதியாக எதிர்ப்பதும்கூட சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும்  உரிமையும்கூட. அதாவது, கருத்துச் சுதந்திரம் இருப்பதைப்போல, அந்தக் கருத்தை எதிர்ப்பதற்கும் சட்ட வாய்ப்புகளே அதற்கான உரிமைகளை வழங்கி இருக்கின்றன. 

விடுதலை சிகப்பியின் மலக்குழி பற்றிய கதையாடல் ஓர் எதிர்க்கதையாடலாக இருப்பதைப் போலவே, கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பதியப்பட்டிருக்கும் அவதூறு வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். 

மேட்டிமையும் அதிகாரமும் சாதிய ஏற்றத்தாழ்வும் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலை எதிர்க்கத் துணிந்திருக்கும் மலக்குழிக் கதையாடல், உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலாகும். உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலை வெளியிடுவதற்கான குறைந்தபட்ச கருத்து சுதந்திரத்தைக்கூடப் பறிப்பது சனநாயக விரோதமானதுமாகும்; கண்டிக்கத்தக்கதுமாகும்.

இந்நிலையில், அதிகாரம் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலைப் பகடியாக்கம் செய்து தலைகீழாக்கம் செய்திருக்கும் விடுதலை சிகப்பியின் கதையாடலை ஆதரிக்கிறோமோ இல்லையோ அல்லது உடன்படுகிறோமோ இல்லையோ, விடுதலை சிகப்பி போன்றோரின் அனைவரின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாக நிற்பதே சனநாயக அறமாகும். 

விடுதலை சிகப்பிக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசிய இனத்தின் - உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட தரப்பின் அனைவரது கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாகவே நாம் நிற்போம்.

ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
10.05.2023.

செவ்வாய், 9 மே, 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகக் குறுக்கிப் பார்த்தல் கூடாது :மகாராசன்



தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 


தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.


தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 


இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும்.  இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.


ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.


தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.


தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 


ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

09.05.2023

வியாழன், 4 மே, 2023

யாத்திசை - திரைப்புனைவும் வரலாற்று நுண் உணர்வும் : மகாராசன்


தமிழர் வரலாற்றைக் கலைப் படைப்பாக்கும் பெருமுயற்சியில் யாத்திசை திரைப்படமானது முன்களத்திற்கு வந்திருக்கிறது.

யா எனில் தெற்கு என்பது பொருள். யாத்திசை எனில், தென்திசை என்பது பொருள். தமிழ் நிலத்தின் தென்திசையில் நிகழ்ந்த அதிகார முரண்களைப் பேச வந்திருக்கிறது யாத்திசை எனும் திரைப்படம். 

அதிகாரத்தை நுகரத் துடிக்கும் ஒரு தரப்புக்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் இன்னொரு தரப்புக்குமான பகையும் போரும் வெற்றியும் தோல்வியும்தான் யாத்திசை படத்தின் திரைகதைக்கருவும் களமும் ஆகும்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் நிகழ்வதாகக் காட்சி மொழியில் விரியும் கதையானது, பாண்டிய மரபின் இரணதீர பாண்டியருக்கும், சோழ நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதான எயினக் குடிக்குமான அதிகாரச் சண்டையை வரலாற்றுப் புனைவாக விவரித்திருக்கிறது.

பாண்டியர்கள் சோழநாட்டைக் கைப்பற்றியபோது, சோழ நிலத்திலிருந்த எயினக் குடிகள் பாலைநிலத்திற்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். பாலை நிலத்தில் வேட்டைச் சமூக வாழ்வியல் நெருக்கடிக்குள் உழன்று தவிக்கும் எயினர்கள், மீளவும் தங்கள் நிலத்தையும் அதிகாரத்தையும் அடையத் துடிக்கிறார்கள். தமது வருங்காலத் தலைமுறை இந்த வாழ்வை அனுபவிக்கக் கூடாது எனக் கருதும் எயினக் குடியின் கொதி என்பான், தமது குடிகளை இரணதீரப் பாண்டியனுக்கு எதிராகப் போர் செய்திடத் தயார்படுத்துகிறான். அந்தவாறே, சோழ நிலத்திலிருக்கும் பாண்டியரின் கோட்டையைக் கைப்பற்றுகின்றன எயினப் படைகள். இந்நிலையில், பதுங்கியிருக்கும் சோழர்களின் படை உதவியைப் பெறமுடியாத நிலையில், பெரும்பள்ளிகளின் பெருந் துணையோடு பாண்டியப் படைகளின் சுற்றிவளைப்பில் சிக்குண்டு போகிறது கொதியும் எயினப் படைகளும். 

இரு தரப்பும் போர்க்கள உயிர்ப்பலியை விரும்பாத நிலையில், இரணதீரப் பாண்டியனும் கொதியும் தனியர்களாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். தனியர்களாகச் சண்டையிடுவோரில் எவர் வெல்கிறார் என்பதே திரைப்படத்தின் உச்சமும் முடிவும். களத்தில் எயினக் குடியின் கொதியைத் தோற்கடித்துக் கொன்று விடுகிறான்; பாண்டிய அதிகாரத்தை நிலைநிறுத்துகிறான் இரணதீரப் பாண்டியன் என்பதாகப் படம் நிறைவடைகிறது.

படத்தில் வரும் கதைமாந்தர்கள், நடிப்புப் புலப்பாடுகள், போர்க்களக் காட்சிகள், களப்பலிகள், போர்ச் சடங்குகள், அதிகாரக் கட்டுமானங்கள், காட்சிப்படுத்திய விதங்கள், பின்னணி இசை, நடனங்கள், கதைக் களங்கள், கதைத் தொடர்ச்சி, உரையாடல்கள் யாவும் திரைமொழியில் ஒருவகையான புதிய புதிய அனுபவங்களைத் தந்திருக்கின்றன. வழக்கமான வணிகத் திரைப்படப் பாணியிலிருந்து விலகிய ஒரு புதிய திரைப்பாணியை யாத்திசை காட்டியிருக்கிறது. இதுபோன்ற கலைப்படைப்பாக்க முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை; பாராட்டப்படவேண்டியவை.

வரலாற்று நிகழ்வைப் பேசியிருப்பதில் நிறைய திரிபுகளும் விடுபடல்களும் குறைகளும் இருப்பினும், பாண்டிய நிலப்பரப்பையும், பாண்டியர்களின் வரலாற்றையும், சிறு சிறு குடிகளின் வரலாற்று இருப்பையும் திரைக்கலைக்குள் கொண்டுவந்திருக்கும் யாத்திசை திரைப்படத்தைத் தமிழர்கள் வரவேற்றுப் போற்றிட வேண்டும்; துணை நிற்க வேண்டும். 

ஏனெனில், தமிழர் மரபின் பாண்டிய வரலாற்றை உள்ளபடித் தேடிப்பார்க்கும் தூண்டலை இப்படம் தந்திருக்கிறது என்பது மட்டுமல்ல; தமிழர் வரலாற்று நுண் உணர்வுகளையும் இப்படம் தந்திருக்கிறது. ஆகையாலே, யாத்திசை தமிழர் மரபின் ஆகச் சிறந்த கலைப் படைப்பாகவே மிளிர்கிறது. அதேவேளை, இந்தப் படத்தை முன்வைத்த வரலாற்றுத் தரவுகள் குறித்த விமர்சனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

வரலாற்று நிகழ்வுகளைப் புனைவாக்கும்போது, குறிப்பாகக் காட்சி மொழியில் புனைவாக்கும்போது வரலாற்றுத் திரிபுகள் நேர்ந்திடக்கூடாது. மொழி, நாகரிகம், வாழ்வியல், கலையறிவு, நாகரிகம், போர்நிகழ்வுகள், பண்பாடு போன்ற தனித்துவங்களைத் தரவிறக்கம் செய்திடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது கலைப்படைப்பாளர்கள் கவனிக்க வேண்டிய கூறுகள்.

கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தமிழர் வாழ்வியலும், உடல், உடைத் தோற்றப் புலப்பாடுகளும், போர்நெறிகளும் மிக வளர்ச்சி அடைந்த நாகரிக அடையாளங்களைக் கொண்டிருப்பவை. கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகான காலத்திலேயே நாகரிக வாழ்வியலும் தமிழர் அடையாளத் தோற்றப்பாடுகளும் பண்பட்ட நாகரிகத் தோற்றத்தைக் கொண்டிருந்தவை என இலக்கிய இலக்கணச் சான்றுகள் நிறையக் காட்டுகின்றன. ஆகையால், தமிழரின் உடலியல், உடை, முகத் தோற்றப்பாடுகள் குறித்து இனிவரும் கலைப்படைப்புகளில் கவனம் கொள்ள வேண்டும்.

படத்தில் வரும் பழந்தமிழ் வழக்குகள் திரைமொழியில் தனித்துவ முயற்சி. பழந்தமிழ் வழக்குகளைத் திரை உரையாடலுக்குள் கொண்டுவந்தமைக்குப் பாராட்டுகள். அதேவேளை, இது வலிந்து புனைந்ததாகவே படுகிறது. தமிழரின் மொழி வழக்கு இரண்டு தன்மைகளைக் கொண்டிருப்பதாகும். அன்றாட வாழ்வியலின் பேச்சு வழக்கு ஒன்று. பேச்சு மொழிவழக்கு என்பதும் மொழியின் ஒரு தனித்த அடையாளம். அதேபோல, எழுத்து வழக்கு என்பதும் இன்னொரு வகை. 

பேச்சின் கூறுகளை எழுத்தாக்கும்போது அது எழுத்து வழக்கு எனும் தனித்த வழக்கைப் பெற்று விடுகிறது. பேசும்போது எழுத்து வழக்காகவோ, எழுதும்போது பேச்சு வழக்காகவோ புழங்குவது தமிழர் வழக்கல்ல. இதைத்தான் நாடக வழக்கு(எழுத்து மரபு) எனவும், உலகியல் வழக்கு(பேச்சு மரபு) எனவும் இலக்கண நூல்கள் வேறுபடுத்திச் சுட்டுகின்றன. அதாவது, பேச்சு வழக்கை இயல்பு வழக்கு எனவும், எழுத்து வழக்கைச் செய்யுள் வழக்கு எனவும் சுட்டுவர். 

படத்தில் இயல்பு வழக்கான பேச்சு வழக்கையே பயன்படுத்தியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டுக் காலத்திலேயே புழங்கிய திருந்திய பேச்சு வழக்குகள் இப்போதும்கூட புரியக்கூடியவைதான். படத்தில் வரும் பழங்காலப் பேச்சுகளுக்கு சங்ககாலத்தில் நிலவிய எழுத்து வழக்குகளைப் பயன்படுத்தியிருப்பதில் நிறையக் கால இடைவெளியும், புரிந்துகொள்வதில் இடைவெளியும் ஏற்படுகின்றன.

படத்தில், பாலைநிலக் குடியாக எயினர்கள் காட்டப்படுகிறார்கள். பெரும்பள்ளிகள் பாண்டியர்களின் துணைப்படையினராகக் காட்டப்படுகிறார்கள். பாண்டிய மரபின் இரணதீரப் பாண்டியனுக்கு மட்டும் குடி அடையாளம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும், பாண்டியர்கள், பெரும்பள்ளிகள், எயினர்கள் போன்றோரின் அடையாள நுண் அரசியலை உள்பொதிந்தே வைத்திருக்கிறது யாத்திசை. அதாவது, தமிழரின் மூன்று பெரும் சமூகங்களைக் குறியீடுகளாக அடையாளப்படுத்தியிருக்கிறது.

தமிழர் வரலாற்றைக் குறித்தும், யாத்திசை குறித்தும் நிறைப் பேச இருக்கிறது. அதேவேளை, நிறையவும் பேசவைத்திருக்கிறது யாத்திசை.

பழங்கால வரலாற்று நிகழ்வுக்குள் திரைப் புனைவின் வழியாக அழைத்துச் சென்றிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது யாத்திசை. யாத்திசைப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அன்பு நண்பர் இயக்குநர் தரணி ராசேந்திரன் அவர்களுக்கும், படக் குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்.

ஏர் மகாராசன், 
மக்கள் தமிழ் ஆய்வரண்.
04.05.2023


 

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

உழைப்பும் ஓய்வும் உறக்கமும் - மகாராசன்


உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் 8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் தேவைப்படுகிறது. இதில், ஓய்வு என்பதும், உறக்கம் என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வேறுவேறானது.

8 மணிநேரம் உழைப்பில் ஈடுபடும் ஒரு மனிதருக்கு 8 மணிநேர ஓய்வும், 8 மணிநேர உறக்கமும் இருந்தால் மட்டுமே, உற்பத்தியிலும் உழைப்பிலும் நிறைவாகவும் நீடித்தும் ஈடுபட முடியும்.

12 மணிநேர வேலை என்பது, உழைப்புச் சுரண்டல் மட்டுமல்ல; உழைப்பில் ஈடுபடும் மனிதர்களின் ஓய்வையும் உறக்கத்தையும் பறிக்கின்ற கொத்தடிமை முறைக்கு வழிவகுக்கும். அந்தக் கொத்தடிமை உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்ததுதான் மேநாள் புரட்சி.

உலகப் பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்றுத்தந்த 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் படுபாதகச் செயலை மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்தச் சட்ட மசோதாவை, தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

அறிஞர் அண்ணாவின் ஓய்வு எனும் கட்டுரையை, அண்ணாவின் வாரிசுகள் படித்திருந்தால், 12 மணிநேர வேலைக்கான சட்ட மசோதாவை இயற்றியிருக்க மாட்டார்கள்.

ஏர் மகாராசன்
21.04.2023.
*
பிற்சேர்க்கை:

அறிஞர் அண்ணா எழுதிய 'ஓய்வு' எனும் கட்டுரை.

"ஓய்வு நேரம்' கிடைத்தால்தான் உழைத்து அலுத்தவன், தனது அலுப்பைப் போக்கிக் கொள்ள முடியும்; மறுபடியும் பாடுபட, அலுப்புப் போக வேண்டும்.

வேலையே இல்லை, நாளெல்லாம் வாளாயிருக்கிறான், ஓய்வு அல்ல அது - பயன்படுத்தப்படவில்லை; கொடுமை! வேலை இருக்கிறது - வேலை செய்யாமல் வாளாயிருக்கிறான் - ஓய்வு அல்ல - சோம்பல்!

வேலை இருக்கிறது - வேலை செய்த அலுப்பினால் வேலை நேரம் முடிந்ததும், கட்டை போலக் கீழே விழுகிறான் - தூங்கி விடுகிறான் - ஓய்வு அல்ல இதுவும்: சோர்வு.

ஒரு வேலையும் செய்ய வேண்டிய நிலையில் இல்லை, எப்போதும் சும்மா இருக்கிறான்; இதுவும் ஓய்வு அல்ல, இது ஒய்யாரம்!

ஓய்வு என்பது ஒரு உரிமை; வேலை செய்தவன், தன் அலுப்பைப் போக்கிக் கொண்டு, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்று, மறுபடியும் வேலையிலே ஈடுபடுவதற்கான மாமருந்து.

ஓய்வு நேரம் என்பது வேலை செய்யாதிருக்கும் வேளை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடியதல்ல. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வசதியைக் கொள்வதிலே ஈடுபடுவதே வேலை. அந்த வேலை முடிந்த பிறகு அவன் மனம் ஒரு நிம்மதி பெற்று, தெம்பு பெற வேண்டும். அந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதே ஓய்வு. காலை முதல் மாலை வரை பாடுபட்ட தொழிலாளி, இரவு பிறந்ததும் அயர்ந்து தூங்குகிறான், அதனால் அவனுடைய உடல் அலுப்பு நிச்சயம் குறையும்; ஆனால் உள்ளத்திலே ஏறிவிட்டுள்ள பாரம், சோர்வு - குறையுமா? குறைந்திட வழி இல்லை; ஏனெனில், அதற்கான வழி தேடிடவில்லை அவன், செயலற்றுக் கிடக்கிறான்; தூக்கம். ஆனால், ஒய்வு என்பது தூக்கத்தால் உடல் அலுப்பைப் போக்கிக் கொள்வது மட்டுமல்ல; உள்ளத்திலே உள்ள சோர்வினைப் போக்கிக் கொள்ள அவன் உலவுவது, உரையாடுவது, பாடுவது, ஆடுவது, ஆடல் காண்பது, பாடல் கேட்பது, குழந்தைகளுடன் கொஞ்சுவது, இவ்விதமான ஏதாவதோர் செயலில் ஈடுபாடு கொண்டாக வேண்டும்.

வேலை செய்த அலுப்புப் போக அவன் தூங்கி எழுந்திருப்பது பல மணி நேரம் ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தைச் சில மணி நேரம் நிறுத்திவைப்பது போன்றதே.

இயந்திரத்துக்குக் கூடத் தூக்க நேரம் இருக்கிறது. வேலை செய்யாத நேரம் மனிதன் உழைத்த அலுப்பினால் தூங்குவது, இயந்திரம் சில நேரம் வேலை செய்யாமல் இருப்பது போன்றதே.

தூக்கத்தால் மட்டும் பாட்டாளியின் மனத்திலே உள்ள சோர்வு போய்விடுவதில்லை.

சிறிது நேரம் உறங்கிக் கிடப்பதால் மட்டும் இயந்திரம் வேலை செய்ததால் ஏற்பட்ட "தேய்வு' இருக்கிறதே, அது போய்விடாது, புது வலிவு வந்திடாது.

உழைப்பினால் ஏற்பட்டுவிடும் உள்ளத்துத் தேய்வு இருக்கிறதே, அதனைத் தூக்கத்தினால் மட்டும் போக்கிட முடியாது - மனத்துக்குத் தெம்பு தரத்தக்க விதமாக அவன் சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும்; ஓய்வாக!!

உழைத்த அலுப்பினால் வீடு வந்ததும் படுத்து உறங்கி விடும் பாட்டாளி விடிந்ததும் மீண்டும் இயந்திரமாகிறான் - மனத்திலே "தேய்வு' வளர்ந்தபடி இருக்கிறது; குறைந்திட வழி இல்லை. அங்ஙனமின்றி உழைத்தலுத்தவன், உடனடியாக உறக்கத்தை மட்டுமே தேடிக் கொள்ளாமல், நண்பர்களுடன் பேசி மகிழ்வது, குழந்தைகளுடன் விளையாடுவது என்ற ஏதேனும் ஓர் பொழுதுபோக்கிலே ஈடுபட்டால், உடல் அலுப்பு மட்டுமல்ல, உள்ளத்திலே மூண்டுவிட்ட அலுப்பும் குறையும், அப்போது அவன் புதிய உற்சாகம் பெறுகிறான்.

மாலை ஆறு மணி வரையில் மாடாக உழைத்தாச்சே, பேசாம போய்ப் படுத்துத் தூங்குவதை விட்டுவிட்டு, விடிய விடியக் கண் விழித்துக் கொண்டு தெருக்கூத்துப் பார்த்துவிட்டு வந்தா, உடம்பு என்னத்துக்கு ஆகும்?

என்று கனிவுடன்தான் கேட்கிறாள் மனைவி. ஆனால் பகலெல்லாம் பாடுபட்டவன், இரவு கண்விழிப்பது உடலுக்குச் சிறிதளவு கெடுதலைக் கூடத் தரக்கூடும் என்றாலும், கூத்துப் பார்த்ததில், கண்ணுக்கும் காதுக்கும் விருந்து பெற்றான், மகிழ்ச்சி பெற்றான், மற்றவர்கள் மகிழ்ந்திருக்கக் காண்கிறான்; சிரித்தான், மற்றவர்கள் சிரித்திடக் கண்டான், இதிலே அவனுக்குக் கிடைத்த களிப்பு இருக்கிறதே, அது அவனுடைய மனத்திலே மூண்டு கிடந்த சோர்வுச் சுமையைக் குறைத்துவிட்டது. மனம் துள்ளிடுகிறது.

இதுதான் தம்பி! ஓய்வு. இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்துத் தூங்குவது மட்டும் அல்ல,

கூத்துப் பார்ப்பதிலேதான் இந்த விருந்து கிடைத்திடும் என்பதில்லை. இரைச்சல் மிகுந்த தொழிற்சாலையையும் அதிலே பரபரப்புடன் சுழன்று கொண்டிருக்கும் ஆட்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன கண்களுக்கு, ஒரு சிங்கார ஓடை, அதிலே பூத்துக் கிடக்கும் மலர், கரையினிலே ஓங்கி வளர்ந்த மரம், அதிலே குலுங்கிடும் கனி, அந்தக் கனியைக் கொத்திடும் கிளி, அதனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அணில், இத்தகைய காட்சியைக் கண்டால், கண்ணும் கருத்தும் விருந்து பெறும், சோர்வு பெருமளவு நீங்கிடும்.

கவலை தோய்ந்த முகத்துடன், தொழிற் கூடத்தில் தன்னோடு இருந்திடும் பாட்டாளிகளைக் கண்டு கண்டு அவன் மனத்திலே குடிகொண்டு விடுகிறதே ஒரு கவலை, அது அவன் வெண்ணிலவு ஒரு மேகத்திலிருந்து மற்றொன்றுக்கு ஊர்ந்து செல்வது போன்ற காட்சியைக் கண்டால் சிறிதளவேனும் கலையத்தான் செய்யும். காது குடைந்திடும் ஒலியைப் பொறிகளிலிருந்து அதனைக் கேட்டதால், உள்ளத்துக்கு ஓர் அலுப்பு; அந்த அலுப்பு, ஒரு தெம்மாங்கு கேட்டிடப் பெருமளவு குறைந்து போகும்! இந்தவிதமான வாய்ப்புகளைப் பெற்றிடுவதே ஓய்வு - வேலை செய்யாமலிருப்பது, அல்லது தூங்கிக் கொண்டிருப்பது அல்ல.

வயிற்றுக்காகப் பாடுபடுவதைவிடக் கடினமானதுதான், மலை உச்சி ஏறுவது, ஆற்றிலே நீந்துவது போன்றவை; ஆனால், அவை மனத்திலே உள்ள சோர்வைப் போக்கிடும் மாமருந்து; மிக மிகத் தேவை.

வேறு வேலையே செய்யாமல், பொழுதினை ஓட்டிட வேட்டையாடுவது ஓய்வு அல்ல; வேலை செய்தான பிறகு, மனத்துக்குத் தெம்பு பெற, புறாவினைப் பறக்கவிட்டுப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறானே அது ஓய்வு!

உழைத்துத்தான் வாழ வேண்டும் - வாழ்வு, உரிமை; உழைப்பு, கடமை! ஆனால் உழைத்தும் வாழ முடியவில்லை என்றால், அது சமூகத்தில் உள்ள கொடுமையைக் காட்டுகிறது. வாழ்வதற்கு உழைக்கிறான், பிறருக்கு வாழ்வு அளிக்கவும் உழைக்கிறான். ஆனால், அந்த உழைப்பே அவனை உருக்குலையச் செய்து, வாழ்வை நுகரவே முடியாதபடி ஆக்கிவிடுமானால், அவன் உழைத்து என்ன பயன்?

தண்டவாளத்தின் மீது சென்றிடும் இரயில், போகும் போதே தண்டவாளத்தையே தேய்த்துவிடுமானால், பிறகு பயணம் எப்படி நடந்திடும்? அதுபோலவே, உழைத்து உருக்குலைந்து போனால், வாழ்க்கையிலே இன்பம் பெற முடியாத நிலையினனானால், உழைப்பு அவனைப் பொறுத்த மட்டில், உயிர் குடிக்கும் நஞ்சாகியது, உழைத்த பிறகு அவன் வாழ்வை அனுபவிக்கும் நிலையினனாகவும் இருந்திட வேண்டும்.

ஓவியத்தைத் தீட்டி முடித்ததும், அவன் கண்கள் அவிந்து போய்விடும் என்றோர் விபரீத முறை இருப்பின் ஓவியக் கலையிலே எவர் ஈடுவடுவர்?

உழைத்தோம், பிழைத்தோம், உறுதிப்பாடும் இல்லை யெனில், உழைத்திடும் உள்ளம் எங்ஙனம் ஏற்பட முடியும்?

உழைப்பு, தம்பி! உள்ளத்தையும் உடலையும் ஒரே அடியாக முறித்துவிடக் கூடியதாக இருந்துவிடின், உலகப் பெருங்கதை சோகச் சிறுகதையாகிப் போகும் அல்லது பயங்கரப் படுகொலைக் கதையாக முடிந்திடும்.

உழைத்ததால் ஏற்பட்ட உடற் சோர்வு போக, உண்டி, உறையுள், உறக்கம் தேவை; உழைத்ததால் ஏற்பட்ட உள்ளச் சோர்வு போக ஓய்வு, பொழுதுபோக்குத் தேவை.

உழைத்ததால் செலவானது போக, ஓய்வினை அனுப விக்கத்தக்க அளவுக்கு வலிவு மிச்சம் கைவசம் இருக்க வேண்டும். வாழ வழி தேடுவதிலேயே கால முழுவதும், வலிவு முழுவதும் செலவாகிப் போய்விடுமானால், உருக்குலைவு ஏற்பட்டு விடுமானால், தோகை விரித்ததும் செத்துவிடும் மயிலாவான்; அரும்பு மலர்ந்ததும் அறுந்துபடும் கொடியாவான்; பயன் காணான், பயனளித்திடவும் மாட்டான்.

ஆகவே பாட்டாளி ஓய்வு பெறுவது, சமூக நீதியில் ஒன்று; அடிப்படை நீதி.

ஆகவே அண்ணா! ஓய்வுபெற அங்கெல்லாம் போகின்றாய், அப்படித்தானே! என்று கேட்கிறாய் தம்பி; உணருகிறேன். ஆனால், நான் என் மனத்துக்கு மகிழ்ச்சி தேடிக் கொள்ள அல்ல, உழைத்திட வாய்ப்புப் பெற்று, வாழ்ந்திட உரிமை பெற்று ஓய்வும் சமூக நீதியும் பெற்று எங்கெங்கு உள்ளவர்கள் இன்புற்று வாழ்கின்றார்கள் என்பதனைக் கண்டறிந்து வந்து உன்னிடம் கூறிடும் நோக்குடனேயே பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.

ஓய்வு நேரம் - ஒய்வின் தன்மை ஆகியவற்றினைக் கொண்டு, ஒரு சமூகத்தின் நிலையை மதிப்பிடுகிறார்கள், அறிவாளர். பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்கும் "ஓய்வு' இருக்கிறதே, அதனை நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள், நல்லறிவாளர்.

ஒய்வு நேரம் ஒவ்வோர் நாட்டில் ஒவ்வோர் காலத்தில் ஆங்கு அமைந்திருந்த இயல்புக்கு ஏற்றவிதமான வடிவமெடுத்திருந்தது.

வெற்றிமேல் வெற்றி பெற்றிட வீரப்போர் புரிந்து வந்த ரோம் நாட்டவர் உடற்கட்டுள்ளவர்கள். ஒருவருடன் ஒருவர் மறப்போர், வாட்போர் செய்து, ஆற்றலைக் காட்டிடும் வீர விளையாட்டுகளைக் காண்பதிலே மட்டுமல்ல, வீரர்கள் மிருகங்களுடன் போரிட்டு அவைகளைக் கொல்வது அல்லது அவைகளால் கொல்லப்படுவது என்ற "இரக்கமற்ற' விளையாட்டுக்களைக் காண்பதனை உல்லாசமளித்திடும் ஓய்வாகக் கருதினர்.

அறிவுச் செல்வத்தைப் பெற்றுத் திகழ்ந்த கிரேக்கர்கள், ஓய்வு நேரத்தைக் காப்பியம் என்ற தரம்பெற்ற புதிய நாடகங்களைக் காண்பதிலே, களிப்பதிலே, கருத்துப் பெறுவதிலே ஓய்வு நேரத்தைச் செலவிட்டனர்.

முரட்டுக் காளையுடன் போரிடுவது, ஸ்பெயின் நாட்டவர்க்கு வீரவிளையாட்டு; ஓய்வு நேரம் அதற்கே பெரும் பகுதி செலவிடப்பட்டது.

பழந்தமிழகத்தார் தமது ஓய்வு நேரத்தில், ஏறு தழுவுதல், மற்போர் போன்ற வீர விளையாட்டிலே செலவிட்டனர் என்று அறிகிறோம்.

கோழிச் சண்டை, கரடிச் சண்டை இவைகளை நடத்தி ஓய்வு நேரத்தில் பொழுது போக்கினர் இங்கிலாந்து நாட்டவர், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில்.

ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவதில், ஒரு நல்ல முறை அமைக்காவிட்டால், களியாட்டம், வெறியாட்டம், வீணாட்டமாகி, புதிய தெம்பு பிறப்பதற்குப் பதிலாக மனத்திலே போதையும், காட்டுணர்ச்சியும் கொந்தளிக்கச் செய்துவிடும்.

மேனாடுகள் பலவற்றிலே ஓய்வு நேரத்துக்காக என்று அமைக்கப்பட்டுள்ள நாட்டியக் கூடங்களும், சூதாட்டச் சாலைகளும், நல்லியல்பை வளர்ப்பனவாக உள்ளன என்ற உணர்வு இப்போது வலுபெற்று வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இவைகளிலே ஈடுபடுவோர் பெரும்பாலும் உல்லாசம் தேடிடும் பணம் படைத்தோரே - பெரும்பாலான நடுத்தர நிலையினர், காற்பந்து, கிரிக்கட், ஆக்கி போன்ற வீர விளையாட்டுக்களைக் காண்பதிலேயே பெரு விருப்பம் கொண்டுள்ளனர்.

குத்துச்சண்டை கண்டு களிப்பதனை, எழுச்சி தரத்தக்க பொழுது போக்காகக் கொண்டுள்ள அமெரிக்காவில் இதற்கெனப் பெரும்பணம் செலவிடப்பட்டு வருகிறது.

சென்ற திங்கள் க்ளே எனும் குத்துச்சண்டை வீரன், தன்னுடன் போட்டிக்கு நின்ற லிஸ்டன் என்பானை, ஒரே ஒரு குத்து கொடுத்துக் கீழே வீழ்த்தினான், விழுந்தவன் குறிப்பிடப் பட்ட நேரத்திற்குள் எழுந்திருக்கவில்லை. எனவே க்ளே வெற்றி வீரன் என்ற விருது அளிக்கப் பெற்றான். இலட்சக்கணக்கான டாலர்கள் குவிந்தன இந்தக் குத்துச்சண்டையின்போது. ஒரே விநாடி! ஒரே குத்து! குத்துச்சண்டை முடிந்தது! க்ளே பெரும்பொருள் பெற்றான் பரிசுத் தொகையாக.

க்ளே - லிஸ்டன் இருவருமே நீக்ரோக்கள்.

இவை போன்ற விளையாட்டுக்கள், காண்போருக்குக் களிப்பூட்டும்; வீர உணர்ச்சி தரும், அய்யமில்லை. ஆனால், புதிய கருத்துத் தந்திடுமா, கருத்துக்கு விருந்தாக அமையுமா என்ற கேள்வி பலமாக எழுந்து விட்டிருக்கிறது.

மற்ற நாடுகளிலே, ஓய்வு நேரத்தை எந்த வகையிலே செலவிட்டால், கருத்துக்கு இன்பம் கிடைக்கும் என்பது பற்றிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இங்கோ, தம்பி! ஓய்வு நேரம் என்பது, வாழ்வின் இயல்பை, தொழிலின் இயல்பைத் தரமுள்ளதாக்கிடும் என்ற உணர்வே பெறவில்லை. ஓய்வு என்பது வேலை செய்யாத நேரம் என்ற அளவிலேதான் அதற்கான இலக்கணம் இருந்து வருகிறது. ஓய்வு என்பது கருத்துக்கு விருந்து பெறும் ஓர் வாய்ப்பு என்ற நிலை அமையவில்லை; அமைத்திடுதல் வேண்டும்.

வறுமை மிகுந்த நாட்டிலே ஓய்வு நேரம் கிடைப்பதும் அதனை உள்ளத்துக்கு மகிழ்ச்சி தரத்தக்க விதமாகச் செலவிடுவதும் எங்ஙனம் முடியும் - வீண் பேச்சு - என்று கூறுவர், பலர்.

நீர்வீழ்ச்சி - சித்திரச் சோலை - ஆறு உற்பத்தியாகும் இடம் - மலை உச்சி - சிற்றாறு - புள்ளினம் எழுப்பிடும் பண் - மானினம் துள்ளிடும் எழில் - இவை பற்றிக் கூறிப் பொழுதுபோக்குக்காக இவைகளைக் கண்டு களித்திடுவது உண்டா என்று கேட்டால், கோபித்துக்
கொண்டு, தமது இயலாமையைக் காரணம் காட்டும் அதே அன்பர்களை, தம்பி! காஞ்சியில் காணலாம் கருடோற் சவத்தின்போது, தில்லை. திருவரங்கம், திருப்பதி. காளத்தி இங்கெல்லாம், காணலாம். பணம் கிடைக்கிறது செலவிட, கடனாகப் பெற்றதாகக் கூட இருக்கக் கூடும் அந்தப் பணம். இஃது ஓய்வுக்காக மேற்கொள்ளப்படுவது அல்ல, "புண்ணியம்' தேடிட!

இராமர் பல்லாங்குழி ஆடிய இடமும், சீதை மஞ்சள் அரைத்த இடமும், ஜடாயு வீழ்ந்த பள்ளமும், பீமன் சமையல் செய்த இடமும், காண்டீபம் பெற்ற இடமும், கல்லானை உயிர் பெற்ற இடமும் கருங்குருவிக்கு மோட்சமளித்த இடமும் இப்படிப்பட்டவைகளைக் காண்கின்றனர்.

இவைகளிலே இருந்துவந்த நம்பிக்கையின் அழுத்தம் போய்விட்டதாலும் இவைகள் என்ன அற்புதங்கள்! சந்திர மண்டலமே செல்லப் போகிறார்களாமே என்று அவர்களையு மறியாமல் வியப்பு அவர்களைக் குலுக்கி விடுவதாலும், இந்தப் புண்ணியம் தந்திடும் இடங்களைப் பார்ப்பதனால் முந்தைய சந்ததியினர் பெற்றதுபோன்ற உணர்ச்சியையும் இவர்களால் இன்று பெற முடிவதில்லை.

புண்ணியம் தேடிடும் பயணம் என்ற கருத்து இவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பதால், இயற்கையின் எழிலைக் கண்டு களித்திடவும் இவர்களால் முடிவதில்லை. தில்லையையும், திருப்பதியையும் கண்டுவிட்டு, சாத்தனூர் அணையையும் நெய்வேலியையும் பார்த்துவிட்டு, மாமல்ல புரத்தையும், மந்திரி வீட்டையும் கண்டுவிட்டு, "கதம்ப' உணர்ச்சி பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.

மிகச் சிலரால் மட்டுமே, தம்பி! இந்த விதமான பயணத்தையாகிலும் மேற்கொள்ள முடிகிறது. மிகப் பெரும்பாலோர் ஓய்வு நேரத்தின் அருமையினை உணர்ந்திடவும் வாய்ப்பின்றி, உழைத்து உருக்குலைந்து போகின்றனர், இங்கு.

பிற இடங்களில் உழைப்பு எந்த அளவு உருப்படியான வடிவம் கொள்ளுகிறது, வாழ்வை எந்த முறையில் செம்மைப் படுத்துகிறது, உள்ளத்திற்கு ஏற்படும் சோர்வு போக்கிக் கொள்ள ஓய்வு நேரத்தை எம்முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு மிகுதியாக. என் பயணம், எனது இந்த விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.

கண்டறிந்து கொள்பவைகளில் கருத்துக்கு விருந்தாகத் தக்கவைகளைப் பிறகு கூறிட முற்படுவேன்.

எனவே, தம்பி! நான் ஓய்வாகச் சென்றிருக்கிறேன் என்று கூடச் சொல்வதற்கில்லை, உனக்குக் கூறிடத்தக்க சுவையான சேதிகளைத் தேடிப்பெற்றிடவே சென்றிருக்கிறேன்.

நெடுந்தொலைவு என்கிறாயோ தம்பி! எத்தனை தொலைவானால் என்ன, என் கண்களில் உன் உருவம் தெரிந்த படிதான் இருக்கிறது.

அண்ணன்,
அண்ணாதுரை
8-8-65.

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

விடுதலை: கலை நுகர்வும் அரசியல் நுகர்வும் - மகாராசன்


தமிழ்த் தேசிய விடுதலைக்கான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்த - முன்னெடுக்கும் சமூக இயங்கியலைக் கற்பித்த வாத்தியார்களான தோழர்களுடன் கடந்த கால் நூற்றாண்டு காலமாய்ப் பயணித்து வந்திருக்கிறேன்.

விடுதலை வேட்கையோடும், அதிகார நிறுவனங்களின் கொடிய சித்திரவதைகளை எதிர்கொண்டும், பொதுவாழ்வுக்கென தம் வாழ்வை ஈகம் செய்தும் தமது சமூகப் பங்களிப்பைக் கொடுத்த 'தோழர்கள்' என்போரின் பொதுவாழ்வை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

சமூக அறிவை மக்களிடமிருந்து கற்றுக்கொடுத்தும்/கற்றுக்கொள்ளவும் வழிகாட்டிய ஆசான்களாகப் பல தோழர்கள் எம்மை வளப்படுத்தியிருக்கிறார்கள்.

அப்பேற்பட்ட தோழர்களின் பொதுவாழ்வுப் பங்களிப்பையும் வரலாற்றையும் இன்றைய இளைய தலைமுறைக்குக் கடத்துவதிலும் பரவலாக்குவதிலும் வெறும் வரலாற்று நூல்களும் ஆவணங்களும் பேச்சுகளும் மட்டும் போதாது. வெகுசனக் கலை ஊடகங்களின் வழியாகவும் அத்தகைய வரலாற்றுத் தேடலையும் சமூகப் பங்களிப்பையும் ஓரளவு விதைத்திட முடியும். 

அண்மையில் வெளிவந்திருக்கும் வெற்றிமாறனின் விடுதலை எனும் வணிகத் திரைப்படம், தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்த தோழர்களைப் பற்றிய வரலாற்றுத் தேடலை இன்றைய இளைய தலைமுறையிடம் உருவாக்கி இருக்கிறது. காட்சிமொழி எனும் கலை மற்றும் வணிகத் திரை ஊடகத்தின்வழி அரசதிகாரத்தின் அத்துமீறலும், அப்பாவி மக்களின் அல்லல் வாழ்வும், மக்களுக்காகப் போராடிய போராளிகளின் அரசியல் செயல்பாடுகளையும் பொதுவெளி உரையாடலுக்குள் பேசுபொருளாக்கி இருக்கின்றது விடுதலை எனும் படம்.

 ஒரு சமூக அமைப்பின் அரசியல் போக்கு எதுவாக முன்னெழும்புகிறதோ, அதையொட்டியே அச்சமூகத்தின் கலை வடிவங்களும், கலை வணிகமும் பேசுபொருளாகும் அல்லது பேசுபொருளாக்கும். அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்களும் செயல்பாடுகளும் தீவிரம் பெறும் இவ்வேளையில், அத்தகைய தமிழ்த் தேசிய அரசியலுக்கான சார்புக் குரலை விடுதலை திரைப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது. விடுதலை படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த ஆதரவும் அதைத்தான் உணர்த்தியிருக்கிறது. 

கலை நுகர்விலும் அரசியல் நுகர்வைக் கடத்த முடியும் என்பதற்கு விடுதலை திரைப்படமும் சான்றாகும். குறிப்பாக, தமிழ்த் தேசியப் போராளிகள் பற்றிய வரலாற்றுத் தேடலைக் குறியீடுகள் மூலம் விதைத்திருக்கிறது படம். 

விடுதலை திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள்.

அசுரன், கர்ணன் போன்ற படங்களின் வரிசையில் விடுதலை திரைப்படமும் தமிழ்ச் சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டும்.


ஏர் மகாராசன்

04.04.2023.