புதன், 13 ஜூன், 2018

கவிதை மொழியின் அழகியலும் அறமும் அரசியலும். :- மகாராசன்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகளோடும் கவிதைகள் குறித்தும் நிறையப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன் . ஆனாலும், ஆற்று மணலில் சின்னதாய் வீடு செய்து மகிழ்ந்து பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்போதுதான் சின்னதாய் ஒரு கவிதைத் தொகுப்பைச் சொல் நிலம் வழியாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது . 

தமிழ்ச் சமுகம் , பண்பாடு , அரசியல் , மொழி , இலக்கியம் , வரலாறு போன்றவை குறித்தெல்லாம் மிக காத்திரமான எழுத்துகளையே புலப்படுத்திக் கொண்டிருந்த நான் , இளைப்பாறிக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும் சொற்களோடு பயணிக்கவும், கவிதை மொழிதான் எனக்கு வசமாய் வந்து நிற்கிறது . 

வாழ்க்கையின் இயங்கு தளத்தின் ஊடாகக் கடந்து செல்லும் போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதை விட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்தும் வெளிவந்தும் மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது தான் கவிதைத்தளம். சுருக்கமாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள் உணர்வுகளைக்
கிளர்த்துவதுதான் கவிதை .

தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள் , உள்ளக்கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணைசேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாய்ப் பிறக்கிறது . இத்தகையக் கவிதைகள் தமக்கான வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை . மரபுக் கவிதை , புதுக்கவிதை , நவீனக் கவிதை என்றெல்லாம் கவிதையின் வடிவங்கள் பலவாறாக இருந்தாலும் , எல்லாக் காலத்தியக் கவிதைக்குள்ளும் அந்தந்த காலத்திய மனித சமூக வாழ்வியலின் பாடுகளையும் அழகியலையும் அரசியலையும் ஏதோ ஒரு வகையில் புலப்படுத்துவதாகத்தான் திகழ்கின்றன . 

மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல, இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும் , அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழும்பும் கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து , அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தத்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன . அதுமட்டும் இல்லாமல், புதிய உணர்வு ஓட்டங்களையும் , நிகழ்காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன. 

ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் என்னும் வாசனையைத் தாண்டி, ஒரு கவிதைப் பனுவலுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது இன்றைய கவிதை மொழி. 

ஒரு கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது. கவிதை என்பது மனித மொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டடோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல்காப்பியம் . ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் அரசியல் மறைந்து கிடக்கிறது என்கிறது மார்க்சியம் . ஆக, எத்தகையக் கவிதை மொழியாக இருந்தாலும், யாருடைய கவிதை மொழியாக இருந்தாலும், அவை வெறும் அழகியல் மொழி என்பதாக மட்டுமல்ல; தெரிந்தோ தெரியாமலோ அரசியலையும் உள்ளீடாக அவை கொண்டிருக்கக் கூடும். இந்நிலையில், யாருக்கான அரசியலை அழகியலோடு வெளிப்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. எதன் பக்கம் நிற்கிறோம்; யாரின் பக்கம் நிற்கிறோம் என்பதும் முக்கியமானது. ஏனெனில், கவிதை மொழி என்பது மனித இருப்பின் சாட்சிக் கிடங்காய்க் காலம் காலமாக நிலைத்திருக்கக்கூடியது. ஆகவே, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்தச் சமூகத்தை மொழிவழி சாட்சியங்களாய்ப் பதிவு செய்ய வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் இருக்கின்றன. அந்தப் பொறுப்பும் கடமையும் எனக்கும் இருக்கிறது என்பதன் சாட்சி மொழியாய் வெளிவந்திருப்பதுதான் சொல் நிலம் .

புளுதித் தூசுகள் தோய்ந்த எனது பாடுகளையும் , உருமாறிக் கிடக்கும் எனது நிலத்தின் பாடுகளையும் , வாழ்வு இழந்து தவிக்கும் சம்சாரிகளின் துயரப் படலங்களையும், ஒடுக்குண்டு உரிமைகள் இழந்து தவிக்கும் இனத்தின் அழுகுரலையும்தான் எனது கவிதைகளின் பாடுபொருளாய் ஆக்கி இருக்கிறேன்.

நிலத்தைப் பாடுதல் என்னும் பெரு மரபு தமிழில் நிறைய உண்டு . நிலத்தைப் பாடுவதே தமிழின் முதன்மைப் பொருள் எனக் குறிக்கிறது தமிழ் இலக்கண மரபு . நிலம் என்னும் முதன்மைப் பொருளே கருப்பொருள் வளர்ச்சிக்கும் உரிப்பொருள் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது . பச்சையம் போர்த்திக்கிடந்த இந்த மரபு மீட்சி பெறாமல் ஒரு கட்டத்தில் தேக்கப்பட்டது. இந்நிலையில்தான், மரபிற்கும் நவீனத்திற்குமான சொல் முடிச்சுகளை மொழி நிலத்தில் விதைக்கும் முயற்சியாகச் சொல் நிலத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். 

சிறு சிறு சுள்ளிகளைக் கவ்விக்கொண்டு கூட்டைக் கட்டும் ஒரு காக்கையைப் போல, நானும் கவிதைகள் செய்திருக்கிறேன் . 

வாழும் காலத்தின் பாடுகளையும், நினைவுகளையும் சொற்களின் வழியாக மொழியில் பதியும் எனது கவிதைகளின் ஆத்மா என்பதெல்லாம், நிலத்தின் தவிப்பை , நிலத்தின் வலியை , சிதைந்து கொண்டிருக்கும் அதன் கோலங்களைப் பேசுவது தான் . கவிதையின் இத்தகைய தொனி, பிரச்சாரத் தொனியாகக் கூட சுருக்கிப் பார்ப்பது கூட நிகழ வாய்ப்புண்டு . 

வாழும் காலத்தின் சாட்சியாய் விரியும் மொழி என்பதெல்லாம் பிரச்சாரம்தான். அந்த வகையில், எனது கவிதைகள் முழுக்க முழுக்க கவித்துவ அழகியல் நிரம்பியது எனப் பொய் உரைக்க மாட்டேன். ஏனெனில், பிரச்சாரம் செய்வதற்கென்றே எனது கவிதை மொழியை எனக்குத் தோதான தொனியில் புலப்படுத்திருக்கிறேன். ஆனால், சொல் நிலத்தைக் குறித்து வெளியான தோழர்களின் விமர்சனங்கள், சொல் நிலத்தின் அழகியலையும் அறத்தையும் அரசியலையும் இணையாகவே அடையாளப்படுத்தி வருகின்றன. நிலத்தின் தவிப்பை வாசகருக்கும் முடிந்தளவு கொண்டு சேர்த்திருக்கிறேன் . ஆனாலும், கவிதைகள் குறித்து இன்னும் பக்குவப்பட வேண்டும்; அவற்றின் நுட்பங்கள் குறித்துப் பயணிக்க வேண்டும் என்கிற தேடல் மன நிலையோடுதான் கவிதைகள் எழுத முயற்சிக்கிறேன். 

தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம், வேர்கள் இல்லாத மரம் போன்றது; கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால்தான், எனது மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கிறது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.

சொல் நிலத்தைப் பரவலாக்கும் முயற்சியில், நூல் அறிமுக மதிப்பாய்வுக் கூட்டத்தை நிகழ்த்திய கும்பகோணம் தாழ்வாரம் நிகழ்வில் நான் ஆற்றிய ஏற்புரை.

நன்றி:   தோழர்கள் பாரதிமோகன், இலக்கியன், செருகுடி செந்தில் ஆகியோருக்கும், மகள் அங்கவை யாழிசை அவர்களுக்கும்.

மகாராசன்.


சொல் நிலத்தில் விழுந்த வீரிய விதைகள் : கோ. பாரதிமோகன்.

மலை எது - நதி எது?
கடல் எது - உடல் எது? - எனும் பேதமற்று எல்லாவற்றையும்
கட்புலனாகாது உள்துளைத்து ஊடுருவி
பிரபஞ்சப் பெருவெளியினை கடந்துகொண்டேயிருக்கும் பிசாசுத்துகள்களைப் பிடிக்கப் பித்து கொண்டலையும் அந்நியப் பேய்களுக்கு அதிகார வர்க்கத்தால் ஏலம்விடப்பட்ட  நிலத்திலிருந்து தம் சீர்மைமிகு 'சொல் நில'த்தோடு வந்திக்கிருகிறார், கவிஞர் மகாராசன்.

ஆனால், 'தமிழ்ப் பாட்டன்' கம்பன் காட்டிய
'மண்மகள் அருந்தினள்' எனும் சுவடுகள் காணா சொர்க்கபுரிச் சொற்களையல்ல...

வெற்றுக்கால்கள் கழனி பாவிய நிஜத்தில், காற்குருதி சுவைத்தக் களிப்பில் இதயங்கனிந்து செந்நெல் பூத்த பூமியை, 'சொல் நிலம்' கவிதைத் தொகுப்பாய் மலர்த்தியிருக்கிறார் கவிஞர் மகாராசன்.

பழுத்துக் கனிந்த சொற்தெரிவில் உழுது
பண்படுத்தியிருக்கிற சொல்நிலம் முழுக்க உயிர்வரிகள் பூத்துக் கனிந்திருக்கின்றன.
*
பூமி எப்போதும் தாய்மனம் தரித்தது.
தன்னில் விதையென விழுந்தவைகளை  காலங்கடந்தும்  விளைவிக்கும் ஈரங்கொண்டது.
அதன் பொருட்டே, விழுகிற விதைகள் வீணாவதில்லை.

'விளைந்தால் வரம்; விளையேல் உரம்' என பண்படு நிலத்தைச் சுட்டி

      "எப்போதோ விழுந்திருந்தாலும்
        மேகத்தின்
        உயிர்த்துளி குடித்து
        மீண்டெழுகின்றன
        புதைத்திருந்த விதைகள்" என்கிறார்.

கவிஞனைப் பொருத்தவரை
விதையும் சொல்லும் வேறு வேறு அல்ல.
அதனால்தான் சொல்லை விதைத்து அவன் கவிதையை அருவடை செய்கிறான்.
*
'நீ ஒரு பூவைப் பறித்தால்
வானத்தில் நட்சத்திரம் ஒன்று
உதிர்ந்து போகிறது' என்கிறது ஜென் கவிதை.

பிரபஞ்சம் முழுக்க கட்புலனாகா கண்ணிகளால் ஆனது.
பூதங்கள் ஐந்தும் ஒன்றோடொன்று உறவுடையவை.

இதை வேறொரு வார்த்தைகளாலும் இப்படிச் சொல்கிறது ஜென்:

'சிலந்தி வலையின்
ஓர் இழையை தொட்டால்
மொத்த பிரபஞ்சமும் நடுங்குகிறது'.

அஃகுதொப்பவே கவிஞரும் நிலத்தை, பொருளை, உயிரைப் பிணைத்து
கவிதையில் படிமம், குறியீடு என விவரிக்கையில் அச்சொல்லோடு பிறப்பொக்கிய எல்லா உயிரும் இசைந்திருப்பதை இதயம் வரித்துக் கொள்கிறது:

     "கிளை பரப்பி
      நிழல் விரித்த நெடுமரம்
      சாய்ந்து போனதில்
      கூடுகள் நாசம்'
எனவும் அதைத் தொடர்ந்து -
     "பறவைகளின் ஒப்பாரி
      ஒலித்துக் கொண்டே இருக்கிறது
      கூடு தேடி' எனவும் சொல்கிறார்.

இங்கே மரமும் பறவைகளும் படிமமும் குறியீடுமாகி ஓர் அரசியலை உளவியலை உள்வாங்கச் செய்வதை உணரமுடிகிறது.

கூடு வீடாவதையும் மரம் நாடாவதையும்
நாடு உலகாவதையும் விரித்து நோக்கவேண்டியிருக்கிறது.

மரம் வெட்டியக் கோடரி யார் கையில் எதன் பொருட்டு என்பதே கவிதை பேசும் அரசியல்.
*

எல்லாவற்றையும் கழுவிக் களையும் நீர்,
மனித மூளையில் படிந்த அழுக்கை மட்டும் கழுவாமல் போகுமா?

இங்கே அலைகழுவிய சொல்லில்
கடற்கர்ப்பத்துக் கோபமாய் கவிஞர் வழி பொங்குகின்றன, பேரலைகள்..

    " ஒதுங்கிக் கிடந்த இடுகாட்டையும்
       அகலப் பரப்பிச்
       சேரிக்குள் இழுத்து வந்தன"
என்கிற சொல்லில் பேரலை புரிந்தது மட்டுமல்ல, புறந்தள்ளபட்ட நாமும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இயற்செயல் வழி சுட்டுகிறார் கவிஞர்.


ஒடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வாழ்வும் மனமும் ஆற்றாமையில் வெம்முவதை
பயனறுத்து ஒதுக்கப்பட்ட உழவுக்கருவி வழி,

     "பாழ் நிலம் நினைத்து
      தவித்துக் கிடக்கும்
      கலப்பை போல்
      தனித்துப் போனது யாவும்"
என துயர் பேசும் வரிகள் சொல்ல விழைவது இதுதான்..
நிலம் பாழ் பட்டதா? பாழாக்கப் பட்டதா?

அரசியல் புரிந்தோர்க்கு பொருள் பாதகமில்லை.

இதயவறல் பாலை வெளியில் ஒற்றைத்துளி ஈரமாய் மனித மனங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன.
அத்தகையோரின் முகம் பார்க்க முடியாவிடினும் அந்த இதயங்களின் ஈரச் செவிகளில் இசை வார்க்கும் காட்சியற்ற கண்களின் வேய்ங்குழல் வழி கசிகிற நன்றி,

     "விரித்திருக்கும் துணியில்
      விழுந்த காசுகள்
      சிதறிய கோலங்களா"கையில்,

     "குழல் தடவிய விரல்கள்
      காசு முகங்களைத்
      தடவுகையில் தெரிந்தன
      மனிதர்களின் நிறங்கள்" என்கிறபோது
வேரற்ற குழல் கனிந்த வாழ்வு இதயத்தில் இனிப்பதை தவிற்பதற்கில்லை.
*
ஒரே ஒரு சொல், கல்லை கனி'த்துவிடும்.
ஒரே ஒரு சொல் கடலை சுண்டி'த்துவிடும்.
மகிழ்விக்கவோ துயர்விக்கவோ சொல்லொன்று போதும்.
கவிஞரும் கண்ட காட்சியொன்றைக்
சொற்களாக்குகிறார்
அவ்வளவுதான்..
செஞ்சு பதறி உயிர்க் கூடு நழுவ நடுங்குகிறது.

காட்சி இதுதான்..

     "நாகமெனப் படமெடுத்த
      வனப்பின் அடியில்
      முளைத்த கிளையில்
      சருகுகள் வேய்ந்திருந்தது
       கூடு" என்கிறார்.
கூடுதானே..?
அது கிளையிருப்பதில் என்ன அச்சமிருக்கிறது?

நியாயம்தான்... ஆனால், இந்த சுட்டிக்காட்டுதலில்தான்'வலி மிகு'வாகிறது, மொழி.

ஏனேனில் இது நிகழ் காட்சியன்று, கடந்த காட்சி.
வேய்ந்திருந்தது என்பதை வேய்ந்திருக்கிறது என வாசித்தால், பொய்த்த இந்தியத்தின் கீழிருக்கும் தமிழ்நிலக்காட்சியைக் கண்ணுறக்கூடும்.

மேலும் 'உயிர்க்கூடு' கவிதையை இப்படி முடிக்கிறார், கவிஞர்:

     "இப்போதும்
      கூடு அதேதான்
      அடைகாக்கும் பறவை மட்டும் வேறு"

'கூடு அதேதான்' என்பதில் பெரும்பாதகம் ஒன்றுமில்லை. ஆனால், 'பறவை வேறு' என்பதில்தான் கவிதை கனம் பொருந்துகிறது.

வேறு பறவை யார் - எது அல்லது,
யார் யார் - எது எது என்பதை மொழிவிரிப்போர் பொருள்படுவர்.

எழுதி மேற்செல்லும் பணிமட்டுமே தம்முடயது என வலியுணர்தலை சொற்களில் கசியவிடுகிறார் கவிஞர். ஆனால்,  அச்சொற்களோ உறங்கவிடாமல் உள்ளம் உறுத்துவதை, வேறு வேறு வடிவெடுத்து வதைப்பதை, உண்மையின் நிழலாகி இதயம் சுடுவதை புறக்கணிப்பதற்கில்லை.

'மனங்கொத்தி' வரிகளில் கவிஞர் ஒன்று சொல்ல , சொற்களில் தற்கால அனலடிப்பதைத் தவிற்பதக்கும் இல்லை.

   "வண்ணங்களைத் தொலைத்த
    கனவுகளாய் கரைகின்றன இரவுகள்"
உண்மை தான் இரவெனில் வண்ணம் தொலையத்தான் வேண்டும். ஆனால் விடியல், ஓராயிரம் வண்ணங்களை ஒளிர்த்தவேண்டும் அல்லவா?

நம்பிக்கைகளை மடித்து தலையணைத்து உறங்கி எழுகையில் கண்களையும் குருடாக்கி விடும் ஓர் ஊமை விடியல் ஊர்வலம் வந்தால் என்ன செய்வது?

     "கண்களைக் கேட்காமலும்
      கால்களைத் தேடாமலும்
      ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு
      தலை கவிழத் திரும்புகிறது மனம்"
என்கிற போது ஓர் அரசியல் ஏமாற்றத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது மனம்.

வேறு என்னதான் செய்வது இக்கையறு நிலையில்..?

     "கவித்தனம் காட்டவே
      எழுதி  எழுதித் தீர்க்கின்றன சொற்கள்" -
எழுதிய சொற்களில் ஏமாற்றத் தீ ஆத்திரங்கொள்கிறது.

இங்கே எல்லாம் நிகழ்கிறது; எவருக்கும் நிகழ்கிறது. சாமானியத் தன்மை இருந்தால் சற்றென்ன..முற்றுமே மோசமாய் நிகழ்ந்துவிடுகிறது. கொலைப் பாதகத்திற்கும் தீ வல்லமை அஞ்சுவதில்லை. அப்போக்கை விளிக்கும்
கவிஞர் எச்சரிக்கைத் தொனியில்,

     "ஆணவப் படுகொலைகளுக்கு
      காரணங்கள் தேவையில்லை.
      சாமானியராய் இருத்தலே போதுமானது

     "அந்தப் படுகளத்திற்கு
      நாளை நாமும் அழைத்துவரப் படலாம்"
என்கிறபோது நம் 'இருத்தல்' நிமித்தம் பல ஐய வினாக்களை எழுப்புகிறது. மேலும்,
      "செத்ததற்குப் பிறகு
        நீதி வழங்கப்படலாம்
        அது
       அநீதியைக் காட்டிலும்
       கோரமாய்க்கூட இருக்கலாம்" என்கையில்
இந்தச் சீழ்ப்பிடித்த அரசியல் அமைப்பின் கீழ்
ஒரு சாமானிய வாழ்வின் கதியின் விதியை
நெஞ்சு நடுங்க வரித்துச் செல்கிறார், கவிஞர்.

மொழியும் நிலமும் உயிர் போன்றது.
இவைதான் உயிர்த்திருத்தலின் தணல் தகிக்கும் அடையாளம்.
இவ்வடையாளம் அற்றிருப்பதென்பது நீர்த்துப்போன உயிர்த்திரவத்தில் நெளியும் செத்தப் புழுக்களுக்கு ஒப்பானது.

இந்த உயிர்த்திருத்தலின் அடையாளத்தை மெய்ப்பித்திருக்க எத்தனை எத்தனை ஈகைகள் இங்கே அரங்கேறியிருக்கின்றன!

ஆனால் அந்த 'தியாக வேளைகளில்' நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்?:

     "உசுப்பேத்தி உணர்வேத்தி
      தட்டேத்தி பாடையிலேற்றியதாய்
      சொற்புணற்சிப் பகர்வோரெல்லாம்
      வாய்ப்பொத்தி நிற்காமல்
      பெருங்களம் கண்டிருந்தால்
      நீங்கள் செத்திருக்க மாட்டீர்கள்தான்" -
     
கவிஞரின் இந்தக் கூற்று அனைவருக்குமான, அனைத்துக்குமான ஒரு குறியீடு.

கவிஞர் இப்படிக் கூறிமுடித்ததும்  வாய்ச்சவடாலிகளான நம்மை ஒரு குற்ற உணர்வு வந்து  குறுக்கிச் செல்வதை அத்தனை எளிதில் கடந்துவிட இயலவில்லை.

நாளை நம்மவர் சாக வேடிக்கை பார்த்து நிற்போம் நாம் என்பதும் நிஜம்தானே..


ஒரு மொழி கருவாகி உருவானபோதே
அறத்தை தன் இதயத்துடிப்பானதாகவும் இயல்பானதாகவும் வைத்திருக்கிற நிலம் நாசமாய்ப் போனதன் வரலாறு ஒன்று உண்டு.

இருக்கும் எல்லாவற்றையும் ஈந்துவிட்டபின்
சுரண்டப்பட வலியை நெஞ்சில் நிறுத்திய வரலாறு விளிக்கும் இனத்தை அடையாளப் படுத்தும் கவிஞர், இப்படிச் சொல்கிறார்.

     "ஆற்றின் அளவறிந்து
      ஈக மறந்து
      ஆறுகளையெல்லாம் ஈந்து
      கையேந்தி வாய்ப்பொத்தி நிற்கிறது
      தென்கோடியில் தொங்கிக் கிடக்கும்
      ஓர் இனம்"
அந்த இனம் எந்த இனம்...
சொல்லவும் வேண்டுமோ...?


சொல்லித் தீருமோ செம்மொழிச் சொல்லும்
சொல் ஊறும் நிலமும்..?!

கவிஞன் முக்காலமறிந்த தீர்க்கதரிசி.
அவன் குரல் ஓர் அறிவிப்புப் பலகை.
அலட்சியம் செய்தல் பின்விளைவில் மாளா வலி மிகும்

உயிர் வார்த்த நிலம் காக்க
ஆக்கிரமிப்பை வெளியேறச் சொல்லிச் சொல் விதைத்த நெஞ்சுக்கு தோட்டாக்களை பரிசளிக்கும் இவ்வதிகாரப் பொழுதில்
கவிஞர் மகாராசனின் 'சொல் நிலம்' பற்றிச் சொல்வதற்கு நிறைய உண்டு.

ஆனால் மனம் அழுகிற கண்ணீரை முற்றாய் சொல்லாய்த் திரித்துவிடுகிற திராணிச்சொற்கள் எட்டுத்திக்கு எங்கினும் இல்லை.

ஆனால் சொல்வதற்கு சொல் ஒன்று உண்டு;

கவிஞர் மகாராசனின்
'சொல் நிலம்' இதய வரி!
*
'சொல் நிலம்'
(கவிதைகள்)
ஆசிரியர்: மகாராசன்
தொடர்புக்கு: 94436 76082
maharasan1978@gmail.com
பக்கம்: 88
வெளியீடு: ஏர்
28, காந்தி நகர்,
செயமங்களம், பெரியகுளம்.
தேனி மாவட்டம் - 625603
பேச: 94436 76082

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஏறு தழுவுதல்: தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் :- இரா.முத்துநாகு.

ஏறு தழுவுதல், மாடுதழுவுதல், மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு திராவிட மரபில் உள்ள தமிழ் குடிகளிடம் எப்படி ஊடுருவி இருந்தது என்பதற்குத் தமிழ் இலக்கியங்களில் பல நூறு சான்றுகள் இருந்தாலும், மஞ்சுவிரட்டைப் பன்னாட்டு முதலாளித்துவ முகம் கொண்ட பானுமதி என்ற நீதிபதி தடை போட்ட பின்பே இது குறித்துத் தமிழ் அறிஞர்களிடம் தனிக்கவனம் போனது. அதுவரை மஞ்சுவிரட்டு என்ற வேளாண்குடிகளின் தொன்மம் சிறுகதைகளில், புதினங்களில், பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாகவே இருந்தவை தனித்த நூலுக்கான அடித்தளத்தை இட்டது.

(மஞ்சுவிரட்டு வழக்கில் ப்பிரேம் ஆப் பேஸ் இல்லை என்று தெரிந்தும் வழக்கை நீதி மன்றம் ஏற்றதிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் இயங்கும் நீதி மன்றங்களுக்குப் பன்னாட்டு முதலாளித்துவத்தின் தாக்கம் நீதிமன்ற முதலாளிகளாகவே நீதிபதிகள் மூளைக்குள் முளைத்திருப்பதை பாண்பாட்டு அசைவுத் தளத்தில் இயங்குப்வர்களுக்கு புரிந்தது.)

மஞ்சுவிரட்டு தொடர்பாக வந்த தனிநூல்களில் ஏறுதழுவுதல் என்ற தலைப்பில் வந்த முனைவர் ஏர் மகாராசனின் நூல் சிறந்த நூலுக்கான இடத்தைப் பிடிக்கிறது. (ஏர் மகாராசன், வேர்ச் சொல்லகராதி கண்ட பெரும் தமிழ்ப் புலமான அறிஞர் அருளியின் வார்ப்பு).

மானுட சமூகம் உணவுத் தேடுதலுக்காக வனத்திற்குள் செல்லும் போது விலங்குகளை எளிதில் வேட்டையாட கூட்டு தேவைப்படுகிறது. இங்கிருந்து தான் கூட்டு வாழ்க்கை துவங்குகிறது. இது தான் மனிதனை வேளாண்மை உற்பத்திச் சமூகமாக மாற்றியது . குறிஞ்சி நிலத்தின் விலங்கான மாடு எப்படி மருத, முல்லை நிலத்திற்குரியதானது எனத் துவங்கும் ஆய்வு, பல நூறு தரவுகளை அடுக்கடுக்காகக் கொடுத்துப் படிப்பவர்கள் மூளை வேறு சிந்தனைக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

மருத நிலத்தில் மாடுகள் வேளாண்மைக்குப் பயன்பட்டாலும், கடந்த தலைமுறைவரை குறிஞ்சி நில மக்கள் மாடுகளை வளர்த்து அதை மருத,குறிஞ்சி நில மக்களுக்கு வழங்கினார்கள். தமிழ்ச் சமூகத்தில் திணைகளாகப் பிரிந்து இருந்தாலும், எப்படி ஒருவருக்கொருவர் தொடர்புடைதாக இருந்தது? முதல் தொடர்பே மாடுதான் என்பதற்குப் பல்வேறு சான்றுகளை நெருக்கமாகக் கொடுத்துப் பிரமிக்க வைத்துள்ளார் நூலாசிரியர்.

16ம் நூற்றாண்டின் இறுதியில் வந்த பள்ளு இலக்கியத்தில் மாடுகளின் வகைகள் குறித்து அளித்துள்ள தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
மஞ்சுவிரட்டு மனிதனை விட வலிய விலங்கான மாட்டை அடக்குவது அல்லது கேளிக்கை அல்ல. மானுட சமூகத்தின் தனி மனிதங்கள் குழுக்கள் சேர்த்து வைத்துள்ள நினைவுகளைத் தனது சந்ததிக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுகளே விழாக்கள். அந்த விழாக்களில் மய்யமானது மஞ்சுவிரட்டு.இதன் தொன்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என அறிஞர்களின் வாதத்தை எடுத்து வைத்து நூலினைச் செழுமைப்படுத்தியுள்ளார்.

 மருத, முல்லை நிலமே அரசர்களுக்கான கருவூல கேந்திரமாக இருந்தது. இந்தக் கேந்திரத்தின் நிலமும் மாடுகள் மட்டுமே உற்பத்தி செய்திடும் எந்திரம். இந்த எந்திரத்தை எப்படியெல்லாம் ஆண்ட அரசுகள் வேளாண்மை செய்தால் பாவம் என்று தங்களது மநு நூலினைத் தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களுக்கும், வேளாண்மை உற்பத்தியை வியாபாரம் செய்திடும் வணிகர்களும் உழு குடி மக்களிடமிருந்து பிடிங்கிக் கொடுத்தனர். வேளாண்மைக் குடிகள் மீது ஏவப்பட்ட வன்முறையால் இவர்கள் வெகுண்டு எழாமல் இருக்க, மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் திசைதிருப்பவே அரசர்கள் பெருங்கோயில்களை உருவாக்கினார்கள். அகரம் மருத நிலத்தின் ஊரின் பெயர். இது எப்படி பார்ப்பனர்களின் அக்ராகாரமானது என்ற நுண்ணிய பார்வையைச் சான்றுகளோடு நிறுவியுள்ளார்.   
         
  தமிழகத்தில் துல்லிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர, நாயக்கர் ஆட்சியில் மஞ்சுவிரட்டு நடத்திய தமிழ்க் குடிகளின் நிலம் எப்படிப் பறிபோனது என்பதைப் போகிற போக்கில் சுட்டிக்காட்டும் இந்த நூலில், நாயக்கர் ஆட்சியில் வந்து குடியேறிய வடுக கன்னடம் பேசும் குலத்தினரிடம் மஞ்சுவிரட்டு, எருதுக்கட்டு,  சலகெருது என்ற பெயரில்  கொண்டாடப்படுகிறது. இவைகளுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதேபோல் தமிழ் நிலத்தில் விலங்குகள் குறிப்புப் பண்டுவம் (மருத்துவம்) அறிய 'வாகடம்' நூல் இருப்பது போல், தெலுங்கு மக்களிடம் காடமராசா, ஆவுலராசா கதைகள் வாகட நூலுக்கு ஒப்பாக உள்ளது. இந்த நூலைக் காமராசர் பல்கலைக் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அது குறித்த குறிப்புகள் கொடுத்திருக்கலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உழுகுடிகள் கையிலிருந்த மஞ்சுவிரட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் போனதைச் சான்று உரைக்கும் நூல்.

 மஞ்சுவிரட்டுக்கு நீதிமன்றம் தடையைத் தற்காலியமாக நீக்கினாலும் மேலாதிக்கத்தை அரசு எந்திரம் மூலம் ஆழமாகச் செழுத்தி வருவதைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்குப் புரியும்.

''எதிர்க் குரலும் கலகமும் புரட்சியும் உழுகுடிகளிலிருந்தே துவங்கும். அதனால் தான் தமிழகத்தை ஆண்ட தமிழ அரசர்கள் நிலங்களைக் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி உழு குடிகளை அடிப்படை நம்பிக்கையில் வீழ்த்தியது.

இந்த உழுகுடிகள் மஞ்சுவிரட்டில் மாட்டுடன் நேருக்கு நேராக மோதும் திறன் படைத்தவர்கள். தமது உயிரை மாய்த்துகொள்ள தமக்குத்தானே துறவறம் கொண்டவர்கள். இவர்கள் அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டால்,காவல் துறையும் ராணுவத்தையும் தமது துறவறத்தால் உயிர்த்தியாகம் செய்து புரட்சியைக் கொண்டு செழுத்துவார்கள். இதை ஆழமாகப் புரிந்து வைத்துள்ள முதலாளிகள் நீதிமன்றங்கள் மூலமாக மஞ்சுவிரட்டுக்குத் தடை, நெருக்கடிகளைக் கொடுக்கிறார்கள். அதிகாரத்திற்கு ஆகம விதிகள் அடங்கி, பெருமாள் கோயிலும் சிவனும், சிவ ஆலயத்தில் பெருமாளும் இருப்பார். ஆனால் உழுகுடிகளை அதிகாரம் அடக்கியே வைத்திட முடியாது? என மானுடவியலர் ஆய்வில் சொல்லி வருவதை அறுபது பக்கங்களே கொண்ட இச்சிறுநூல், ஏங்கல்ஸின் பொதுவுடமைப் பண்பாட்டு  நூலான குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல் அளவுக்குத் தரவுகளாகக் குவித்து வைத்துள்ளது. தமிழ்ப் புலத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் என்று அறுதியிட்டு நான் சொல்லுகிறேன்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குடியானச்சி காவியம்.



எப்போதாவது வந்து போகும் அயலான் எனத் தெரிந்திருந்த
ஊர் நாய்கள்
நாலைந்து கூடிக்கொண்டு
ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்ததில்,
நெடுந்தூக்கத்திலிருந்த இரவு குலைந்து போயிருந்தது.

ஊரடங்கிய யாமத்தில் வழிந்தோடிய
குடுகுடுப்பையின் மிடுக்கொலி,
வெள்ளாமை நினைப்பில்
தூங்கிப் போனவளின்
காதுகளில் நுழைந்து
உசுப்பி விட்டுக் கரைந்து போனது.

சீ நாயே தூரப் போவென
அதட்டிக் கொண்டே
வந்தவனை விட்டு
நாய்களும் விலகிப் போவதாய்த் தெரியவில்லை.
தெரு முகனைக்கு வந்துவிட்ட
யாமத்துக் குறிகாரன்
குடுகுடுப்பையை ஊரதிர
உலுக்கி உலுக்கி அடித்தான்.

திறந்தே கிடந்த கதவை
மெதுவாய்ச் சாத்தி வைத்து
கதவிடுக்கின் ஓரத்தில்
தலை சாய்த்துக் காது கொடுத்து
குறிகாரன் மொழி கேட்க
செவக்கி உட்கார்ந்திருந்தாள் குடியானச்சி.

காடு வெளஞ்சிருக்கு;
வீடு நெறஞ்சிருக்கு.
மக்களப் பெத்த மகராசிக்கு
மனசுல கொறயில்ல.
சாமி காக்காட்டியும்
பூமி காப்பாத்தும்.
செத்துப் போன பெண்புள்ள
சாமியாட்டம் துணையிருக்கா;
மவராசனா ஓம்புள்ள இருந்தாலும்
ஒன்னோட மருவாதய
விட்டுத் தர மாட்ட.
ஆக்கித்தான் போடுவ
அடுத்த வசுறு பசியாத்த.
ஒன்னோட கை நனைக்க
ஒரு வாசலும் மிதிக்க மாட்ட.
ஒக்காந்து சோறு திங்க
ஓம்புள்ள அழைச்சாலும்
ஒரு போதும் போக மாட்ட.

காடு கழனி வெள்ளாமைன்னு
ஆடு மாடு கோழியின்னு
மனுச மக்க புள்ளைகன்னு
ஒன்னோட சீவனெல்லாம்
ஒழச்சுத்தான் வாழுமம்மா.
மழ தண்ணி கொறஞ்சாலும்
மனச மட்டும் விட்றாத;
நெலத்த சும்மா போட்றாத.

சொன்னதுல்ல பொய்யிருந்தா
நாளைக்கி வருகையில
நாலு சொல்லு நீ கேளு.
குறியளந்து சொன்னதெல்லாம்
மனச நெறச்சிருந்தா
மறக்காம நெல்லளந்து போடுதாயி.

வாசல் தெளிக்கும்
சாணித் தண்ணியைப் போல,
வாசலெங்கும்
ஈரம் கோதிக் கிடந்தன
குடுகுடுப்பைக்காரனின்
யாமத்துச் சொற்கள்.

குடியானச்சியின் மனக்குறியை அச்சு பிசகாமல் இந்த முறையும்
அப்படியே
சொல்லிப் போனான்.

மறுநாள் காலையில்
வீடு வீடாய்க்
குறிக்கூலி வாங்கியாந்தவன்
தோள் பை கனக்காது
கிடந்ததைப் பார்த்துப் பதைபதைத்தவள்,
மரக்கால் நிறைய நிறைய
நெல்லளந்து போட்டாள்.

சுருக்குப் பைக்குள்ளிருந்து
எருச் சாம்பல் துண்ணூறை
வெறும் மரக்காலில்
கை நிறைய அள்ளிப் போட்டவன்,
ஒனக்கு மட்டும்
எப்புடி தாயி இந்த மனசு என்று
கண்களில் நீர் கசியக்
கேட்டே விட்டான்.

சொல்லளந்து போட்டவனுக்கும் நெல்லளந்து போடுறது தானப்பா
சம்சாரிக வாழ்க்க.
குடியானச்சியின் சொற்கள்
குடுகுடுப்பைக்குள்
தாயொலியாய்
இசைத்துக் கிடந்தன.

நெல்லுக்குள்ளும் சொல்லுக்குள்ளும் நிறைந்திருந்து
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
குடியானச்சி,
தரிசாய்க் கிடக்கும்
நிலத்தை நினைத்தழுது
மனதை விட்டிருப்பாள்.

ஏர் மகாராசன்

சனி, 14 ஏப்ரல், 2018

சொல் நிலம்: முற்போக்கும் நவீனத்துவத்தில் தன்னியல்பான நில மொழியழகும் :- பாரதி நிவேதன்(பா.செல்வ குமார்).

'வெயில் பொழியும்
ஒரு முகத்தைச்
சிதைக்க நினைத்துத்
தனித் தனியாகவே விழுகிறது
மழை முகம்' (ப.78)

 மகாராசன் - களமும் தர்க்கமும் நிரம்பக்கூடியவர். அரசியல் ஆய்வுகளில் அதிக அக்கறைச்  செலுத்தியவர். கவிதை ஆய்வினில் நுழைந்தபின்னர் அவரின் இலக்கிய முகமும் அவருக்கு தெரிந்தது. இதை அவரின் அருகில்  இருந்து கவனித்தவன் நான். ஆனால் அதனை எழுத்தாக முன் வைக்காமல் பேசிக்கொண்டே இருந்த மகாராசன் எழுத்தாக சிச்சிறிதாக எழுதியதும் உண்டு. தொகுப்பாகக் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. அனுபவங்கள் - அனுபவத்தையொட்டி எதிர்பார்க்கப்படும் கனவுகள் என்னும் யதார்த்த வாழ்வியலை எழுதுபவரிடம்  கச்சிதமான புனைவின் தந்திரங்களையும் இத்தொகுப்பில் அடையாளம் காணுகின்றேன்.

 தமிழிய  மார்க்சியம் என்பது இவ்வெழுத்தின் மணம். வானம்பாடியின் தொடர்ச்சியை நா.காமராசனுடனும் தேனரசனுடனும் தன் எழுத்தோட்டத்தில் எண்ணச் செய்பவர் மகாராசன். 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்' ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டாலே - பெயர்ச்சொற்கள் மூலமாகவே கவிதை என்பதை உணர்வு லயங்களின் குறியீடாக நா.காமராசனை இனம் காணமுடியும். காதலும் சமூகமும் மார்கிசியமும் காந்தியமும் கூட அதனொழுங்கில் வந்து விழும். தேனரசனோ பாறையில் பனி வழுக்கிப்போகும் உணர்வுகளைத் தரக்கூடியவர். இதற்கு எடுத்துக்காட்டு 'வெள்ளைரோஜா'.

 மகாராசன், உழைப்பாளிகளின் குரலாக யதார்த்தப் பிரச்சினைகளிலிருந்து அன்றாடம் தப்பிக்க முடியாத அபலைத்தனத்தைக் காட்சிகளில் விரித்தும் அதற்காக மொழியை வரித்தும் எழுதுகிறார். மனிதத் துயருக்கான இயற்கையின் மொழியும் கனம் பெற்றிருக்கிறது. தன் சின்னஞ்சிறிய கிராமத்தின் பாதையை உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதற்குப் படிப்பினைகளை அவரின் பயணங்களும் களங்களும் வாசிப்புகளும் சொல்லக்கூடியது எழுத்தாகியிருக்கிறது. அடர்த்தியான மொழியில் கூக்குரலை தனியழகுப்படுத்துகிறார். இந்த அடர்த்தி என்பதற்கு கவிதைகளைக் குறித்த அவரது ஆய்வும் வாசிப்பும் உதவியிருக்கிறது. தனது ஆக்கங்களுக்குள் சுற்றுச்சூழல் கவனத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறார். நிலம் வெடித்துப்போய் வெப்பத்தைக் கொள்கலனாக்கிவிட்ட இருப்பிலும் வாழ்வின் மீதான பற்றே அவரை முற்போக்கு எழுத்தாளராக அழைத்துச் செல்கிறது. நிலத்தைச் சார்ந்தே காமத்தையும் காதலையும் சொல்ல முடிகிறது. மொழியின் வனப்பு இங்கு இன்றைய கவிதையின் இயங்கு தளத்தின் மீதான சந்தேகம் கொண்ட தன்னியல்பான மொழி ஒன்றைக் கட்டமைக்கிறது. வானம்பாடிகளை மீறுவதும் நவீனத்துவத்தை உரசிச் செல்வதும் இதனால் ஆகிறது. நாட்டுப் புற வாழ்வியலின் மொழியை இயல்பு மொழிக்குள் பூட்டப்படுவதும் நடக்கிறது.

'நீங்கள்

சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளொடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம்' (39)

 யதார்த்தச் சிக்கல்களை நேரடியாகச் சொற்களை அடுக்கி, கவிதையின் குணாதிசயத்தில் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவமளிக்கும் பட்டவர்த்தனத் தன்மையிலிருந்து விலக முயற்சிச் செய்வது கவிதைத் தனத்திற்கு ஒப்புவிக்கக் கூடிய பயணம் என்று எடுத்துக் கொள்ளலாம். சொற்களால் ஆவது என்? என்ற கவனக் குவிப்பிற்கும் 'சொல் நிலம்' தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தமிழ் நில வாழ்வியலை அதன் மையத்திலிருந்து வரித்துக் கொள்வதையும் முதன்மையாக்குகிறது. நிலமிங்கு எழுந்து காலத்தைக் காட்டும் கண்ணாடியாகிறது. சொற்கள் போகும் திசைக்குத் தன்னைக் கரையவிடாமல் தன் அனுபவம் கொண்ட உழல்வையே வரித்துக் கொள்கிறது இத்தொகுப்பு. இது தொழில் முறை மற்றும் பயில் முறைக் கனவுகளைத் தவிர்த்து மனப் பிராந்தியங்களின் ஊடுருவல்களைக் கண்காணித்து  நிலம், மொழி, வாழ்வியல் என்பது பிரக்ஞைக்குரியதாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்துகிறது. இதனால் முற்போக்குக் கலைப்படைப்பின்  முத்திரையாக இருப்பதில் நம்பிக்கையும் அது அப்படித்தானா என்ற சந்தேகத்தையும் உடைக்கும் விதமாக நவீனத்துவ பாய்ச்சலையும் உள்ள கவிதைகளின் சாட்சியமாக இத்தொகுப்பு இருக்கின்றது.

 கண்கள் வாசித்து மனதில் உழன்று அசைபோட வைக்கும் நவீனத்துவமும் , உதடுகள் வழி காதுகள் வழி மனதிற்குள் சென்று சட்டென உணர்ச்சியைத் தூக்கலாக்கும் அரங்குத் தன்மை வாய்ந்த கவிதைகளுமாக இத்தொகுப்பு முதன்மையாக அடையாளப்படுகிறது. இதை இன்னும் விளக்கினால் அகக் கவிதைகள் நவீனத்துவ சாயலையும் புறக் கவிதைகள் வானம்பாடிகளின் மொழியை இன்னும் மேலதிகமாக சமைத்த ஒன்றாகவும் பார்க்கலாம்.

'கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு' (77)

 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்' என்னும் சங்க மரபை 'செம்புலம்' கவிதையில் நிறைந்து கிடக்கிறது. அசலான தமிழ் வாசிப்பை மிகக் கச்சிதமாகக் கொடுத்துவிடும் இக்கவிதையில்தான் மகாராசன் தனக்கான அடையாளத்தை நுழைந்து தேடி வந்தடைய முடியும் என நம்புகிறேன். காதலை - காமத்தை - ஈன்றலை முதல்,கரு,உரிப்பொருளென நவீன கவிதையில் இனம் பிரிக்க முடியாமல் இழைத்துத் தந்து விடுகிறது இக்கவிதை.

 துளிகள், பயணங்கள், ஆலங்கள், வன்மங்கள், உடல்கள், கண்கள், முகங்கள், விதைகள், செடிகள், கொடிகள், புற்கள், வண்டுகள், பறவைகள், வேர்கள், விரிசல்கள், கூடுகள், சொற்கள், அலைகள், மகரந்தங்கள், சீவன்கள், மனிதர்கள் என்று இக்கள் விகுதிகள் நவீனத்துவத்தின் ஒவ்வாமை வானம்பாடிகளின் தவிர்க்க முடியாமை என்பதை இத்தொகுப்பை வைத்துச் சொல்லக்கூடியதும் ஆகிறது. உடனடி வினைகளுக்கப்பால் இக்கள் விகுதிகள் கடும்பாறையாகச் சமைந்துவிடுவது இன்றைய இழப்பு  நேற்றைய விருப்பு என்பதை மகா அறிந்தவர் என்றாலும் அதனிலிருந்து அவர் விலகுவது கவிதைக்குத் தேவையானது.

 கவிதையில் சொல்லவரும் ஓர் ஓர்மைப்புள்ளியை மீண்டும் மீண்டும் விளக்கிச் செல்லும் மரபான பாண்டியத்தத்தை தாண்டுவதும் தேவையானது. இத்தொகுப்பில் மகாராசனின் தன் தந்தை தாய் உறவுகளை அதனதன் வலியுடன் மகரந்த நினைவுகளுடன் பதிவாக்கியுள்ளார். இங்கு நிறைந்திருக்கும் ஈரம் ஈழமாக இன்றைய அரசியல் பிரச்சினையாக, சமூகப்பார்வைகளாக மாறும்பொழுது அதற்கே உரிய எரிமலையாக வெடித்தெழுகிறது. அன்றாட பிரச்சினைகள், இயற்கையின் வஞ்சனை, இழப்புகள் என அவரின் சமகாலப் பார்வையை அதே உரத்த குரலாய் நாம் கடந்து போய்விடுவது நல்லது. காரணம் அது களம். அவரின் மெல்லிய மனதில் உள்ள கவிதை குணங்களைக் கடந்து போகாமல் அதோடு விடாமல் அசை போடலாம்.

'ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்' (76)

 மழைநேரத்து வ.உ.சி விடுதியின் வாசலில் மகாராசன் உட்கார்ந்தால்,   ஈசலைப் பற்றிய அருமையான பேச்சின் அடவுக்கு யாரும் சொக்கிப்போகலாம். நம்மால் இன்னொருவருக்கு அதை விளக்க முடியாது. சில அனுபவங்கள் அடவுகளின் சுவையிலேயே மினுங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறுவழியில்லை. 'ஈசப்பால்' எழுத்தின் அடவு.

'காற்றில் கரைந்து போகும்
அணுத் திரள்கள்
குழல்களில் வழிந்தோடிக்
கசிந்து கசிந்து
உயிர் மூச்சென
உள் நுழைந்து கொள்கின்றன' (28)

 எங்கோ சிக்க வைத்திடும் கவிதைகளைக் குறித்து அச்சப்படுதல் இக்கண மட்டிலோ இன்று மட்டிலோ கழிந்துவிட வேண்டும். நாளை யாரையாவது கொண்டாடும் முகமாக அல்லது தாண்டும் முகமாக அல்லது பாய்ந்து சென்று விடும் முகமாக அமைந்து விட வேண்டும். தாளாத சுமைக்கும் தஞ்சமடைந்து தூங்கிப்போவதற்கும் சிலர் இருக்கிறார்கள். இது ரகசியமில்லை..அவை புத்திசாலித்தனமில்லாதவை. வாழ்வை ஊடறுப்பதை உணர்த்துபவை. இதையெல்லாம் அமிழ்ந்ததால் எழுத வாய்த்தது. எதையும் தூக்கி நிறுத்தல்ல..வலியின் கொண்டாட்டங்களாக. உண்மையில் அதுவே ஆகக்கூடியது. இத்தகைய என்னுடைய போக்கில் இக்கவிதைகளும் உடனிருப்பதில் மகிழ்ச்சி.

புதன், 4 ஏப்ரல், 2018

நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி - நூல் மதிப்புரை :- இரா.முத்துநாகு, இதழியலாளர்.



         தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம் வளர்ந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் சுத்தமாக 'இல்லை' என்ற சொல்லை நீக்கியதே பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் மன்னனை பாடவில்லை. மக்களுக்கு உணவு கொடுத்த உழுகுடி வேளாண் பெருமக்களை கதை மாந்தர்களாக்கி பாடியுள்ளது.

             பள்ளு இலக்கியத்தை ஆய்வு செய்து பேரா.கேசவன் உள்பட பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் பேராசிரியர் அல்லாத சமூக ஆசிரியரான பொதுவுடமை சித்தாந்ததை தமிழ் மண்ணில் இலக்கிய வடிவமாக கொடுத்த வானமாமலை அவர்கள் ''சரஸ்வதி'' என்ற சிற்றிதழில் பள்ளுப்பாடலை பத்துக்கும் மேல் பட்ட தலைப்புகளில் நுண்மான் நுலைபுலமாக ஆய்வு செய்து வடித்துள்ளார். இந்த கட்டுரைகள் இதழிலே முடங்கிக் கிடந்ததை நூல் வடிவமாக்கி வானமாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை விட தமிழுக்கும் அதன் நிலத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பள்ளிப் பள்ளி ஆசிரியர் முனைவர் ஏர். மகாராசன். இவர் பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்குடன், பத்துக்கு மேல்பட்ட நூல்களை எழுதி நம் போன்ற 'சமூக' மாணவர்களை உருவாக்கி வலம் வருகிறார்.

             ''சங்க இலக்கியமான புறாநானூறு, சிலப்பதிகாரம், சமற்கிருத தழுவல் இலக்கியமான அறியப்படும் கம்பன் எழுதிய ராமாயாணம் தவிரத்து உழவனை பாடிய தமிழ் இலக்கியம் முக்கூடல் பள்ளு மட்டுமே. பள்ளுப் பாடல் முழுக்க முழுக்க உழு குடிகளான வேளாண்மை சமூகத்தை மையமாக வைத்து பாடப்பட்ட இலக்கியம். பாண்டிய மண்டலமாக அறியப்படும் மதுரை நாயக்கர் எல்லையில் உள்ள திருநெல்வேலி சீமையே இதன் களம். வேளாண்குடிகளான உழைக்கும் குலமாக இன்றுவரை அறியப்படும் பள்ளர் குலத்தினரே இந்த பள்ளு இலக்கியத்தின் கதாநாயகர்கள்.''                         'பள்ளு இலக்கியம் உருவாக காரணம், 'நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் ஆட்சியில் பார்ப்பன ஆதிகம் அதிகமானதாலும் மன்னனை பாடிய புலவர்கள் மக்களை தேடிப் பாடினார்கள். அதிலும் பண்ணை முதலாளியை பாடவில்லை பண்ணையில் வேலை பார்த்த பள்ளனையும், பள்ளியும் பெருமையாக பாடியுள்ளது இலக்கியம். இந்த இலக்கியம் கூத்து வடிவமாக மக்களிடம் செல்வாக்கு அடைந்தது. அதனை எதிர்த்துள்ளது நாயக்கர் அரசு. ஆனாலும் மக்களிடம் இந்த கூத்து வடித்தின் செல்வக்கை குறைக்க முடியாமல் போனதால் இதை வைணவ தளங்களான சீரங்கம், திருகோட்டியூர், சீவிலிபுத்தூரில் பாடி ஆடிட ஆட்சியாளர் மனம்   போன போக்கில் கம்பன் எழுதிய ராமாயாணம் போல் பள்ளுப் பாடலை தழுவி குருகூர் பள்ளு கோயில் ஒழுகு என மாற்றி எழுதியுள்ளனர்' என வானமாமலை குறிப்பிடுவத அச்சுப் பிசுகாமல் தந்துள்ளார் ஏர். மகாராசான்.

                'பள்ளுப்பாட்டின் வளர்ச்சி என்ற கட்டுரையில் பட்டியல் குலத்தினர் கோயில் நுழைவுக்கான கருவே இந்த பள்ளுப்பாடல் தான். சீரங்கத்தில் பள்ளுப்பாடலுக்கு எதிர்பு கிளம்ப சீரங்க பெருமானே அரயர் (நடன மாதர்) என்பவதை பள்ளனிடமும் பள்ளியிடமும் பாடல் கற்றுவரச் சொன்னதாகவும் அதை கற்று வந்த அரயர் சீரங்க பெருமாள் முன் ஆடியதாகவும் கோயில் ஒழுகு சொல்லுகிறது. இதை தனது ஆய்வில் கோயில் நுழைவு போராட்டம் என்பது பிரிட்டீஷ் இந்தியாவுக்கு முன்பே நடந்திருக்கிறது அது தான் பள்ளுப்பாடல்' என விவரிக்கிறார்.

              சோழர் ஆட்சி திராவிட நாடுகள் தாண்டி வளர்ந்த போது இடங்கலை வலங்கலை பிரச்சனை நீடித்தது. இதன் நீட்சியாக விஜயநகர ஆட்சியில் தொடர்ந்தது. இது இருக்க வைணவ சைவ மார்க்க சண்டையும் சோழர் கால ஆட்சியில் போல் நடந்தது. வைணவ சைவ சண்டைகளில் உழு குடிகள் எப்படியெல்லாம் சீப்பாட்டார்கள் என்பதை நூல் விவரிக்கிறது.

                 'பள்ளு இலக்கியத்தில் அரசின் பண்ணையாள் (முதலாளி) ஏச்சு பேச்சாக ஏளமாக உள்ளதை அருமையாக சுட்டிக்காட்டி படிப்பவர்களை பொதுவுடமை சித்தாந்த சிந்தனையை நம் மூளைக்குள் முனைப்பு காட்டுக்கிறார் ஆசிரியர் . முதலாளிகளை நகையாடுவதை   கிராமங்களில் இன்றும் கோயில் விழாக்களில் போடப்படும் ராசா ராணி ஆட்டத்தில் 'ராசா வேடமிட்டவர் தோட்ட முதலாளியாகவும், உழவனாக கோமாளி வேசமிட்டவரும் சிறுகதையாடல் வைத்து பாடலோடு வசனம் இருக்கும் அதில் முதலாளியைப்பார்த்து ''ஏ மாப்பிள்ளை, ஏலே தோட்டகார வெண்ணை உனக்கென்ன பிறங்கையை கட்டிக்கிட்டு வரப்பில போவ ... குனிஞ்சு வேலை செய்தாத்தாண்டா விளையும்' என்றும் நாட்டாமையை 'ஏ மாப்பிள நாட்டாமை லூசு நாட்டாமை செவுட்டு பயலே' இப்படியான வசனங்களை கோமாளி பேசுவார். இந்த வசனங்கள் பள்ளுப்பாட்டின் நீட்சியாகவே கிராமிய கலைகளை ஆய்வு செய்த மறைந்த நாட்டுப்புறவியல் பாடகர் பேரா.குணசேகரன் குறிப்பிடுவார்.

                     அறுபத்தி ஐந்து பக்கத்தில் சமூகத்தின் தேவையை அறிந்து பள்ளுப் பாடலின் ஆழத்தை வழங்கி தமிழை தமிழ் சமூகத்தை செழுமைப் படுத்தியுள்ளது இந்த நூல். நல் பணியை செய்த திரு. ஏர். மகாராசனை எனது ஆசான் தமிழ்குடிமகன் சொல்லில் வாழ்த்துவதென்றால் பெரும்பேராசியர் வாழ்க எம்மான் வையகத்தே என வாழ்த்துவோம்.   

பதிப்பகம் ; ஆதி , 9994880005, விலை உரூபா - 60

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

நீர்முலைத் தாய்ச்சி.

மணல் உடுத்திய பாதைகள்
வெறும் ஆறுகள் மட்டுமல்ல;
கருந்தோல் மேனிகளில்
உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்
அரத்த நாளங்களைப் போல,
நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்
நீர் நாளங்கள்.

கடைமடை நிலத்தாளின்
மானம் போர்த்திய
நீர்ச் சேலைத் துணிகள்.

மழையாள் வகுந்தெடுத்த
உச்சந்தலை நீர்க்கோடுகள்.

பசுந்தாள்
வேர் நாவுகளை நனைக்கும்
உமிழ் நீர்ச் சுரப்பிகள்.

தொடை விரித்து ஈனும்
தாயவள் போல்,
உழவும் குடியும்
நெல்லும் சொல்லும் ஈன்ற
நீர்முலைத் தாய்ச்சிகள்.

பச்சிளம் பிள்ளையைப் பறிகொடுத்து
எச்சிலும் விழுங்காது ஏங்கி அழுது
நெறி கட்டிய முலை வலியில்
துடித்துச் சாகும் தாயவளைப்
புணரத் துடிக்கும்
இனப் பகைக் குறிகளின்
விதைகளை அறுத்தெறிந்து
அரற்றுகிறாள் காவிரித் தாய்ச்சி.

நீதி மறைத்த அதிகாரத்தை
ஒற்றைச் சிலம்பால் எறிந்து
ஒரு முலை திருகி எரிந்தாள்
திருமாவுண்ணி.

அதிகாரம் மறுத்த நீதியை
நீர்ச் சிலம்பால்
உடைத்தெறிந்தாள்
நிலத் தாய்ச்சி.

காவிரி!
நீர்முலைத் தாய்ச்சியவள்
தீயும் மூட்டுவாள்.

சனி, 17 மார்ச், 2018

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள் :- ஜமாலன்.

இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.

ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களது
Related image
”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100

செவ்வாய், 13 மார்ச், 2018

சொல் நிலம் : நிலமும் சொற்களும் ஊடுபாவாய் நெய்து கொண்டிருக்கிறது. :- பீமராசா ஆனந்தி.


மஞ்சள் வெளியில் இலைகளோடு கிளையில் அமர்ந்திருந்த குருவியின் கண்கள், சிவப்பு எழுத்துகள் என்னை வாசியேன் என்று சொல்வதைப் போல இருந்தது. கட்டுரைகளோ என்று நினைத்து தான் வாங்கினேன். மெல்லப் பிரித்தேன். ஆகா, கவிதைகள் ! அப்படியொரு சந்தோசம்.

நிதானமாக வாசிக்க வாசிக்க, மிரண்டு போய் விட்டேன். ஒரு கவிதை வாசிப்பேன்; நூலை அப்படியே மூடி வைத்துவிட்டு ஒன்றுமே தோன்றாமல்  தலையைப் பிடித்துக் கொள்வேன். எதைச் சொல்வேன்? எதை விடுவேன் ? தவிக்கிறேன்.

"உழைப்புச் சொற்களால் நிலத்தை எழுதிப் போன அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே தவித்துக் கிடப்பார்கள் மண்ணுக்குள் "
இந்தக் கவிதை போதும் சொல் நிலத்திற்கு.

நிலமும் சொற்களும்
ஊடுபாவாய் நெய்து
கொண்டிருக்கிறது மனசை !
ஈரம் கோதிய சொற்கள்
தணிக்கின்றன
வாழ்வின் தாகத்தை.
நிலத்தின் மீதுள்ள காதலால்
சொற்களின் மீதுள்ள
காதலால்
கவிதைகளை
ஆட்சி செய்கிறாய்.
கசிந்துருக கவிதைகள்
சொல்லிப் பகிர (பருக)
வார்த்தைகள்
இன்னும் வேண்டுகிறது மனசு.
காலத்தே மழை;
பருவத்தே விளைச்சல்.


முதலில் அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் பெயரில் விருது வழங்க உங்கள் நூல் தேர்வு செய்யப்பட்டு, நீங்கள் அறிமுகம் ஆனதால் தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

செம்மாந்து நிற்க. மனிதம் வெல்க.
வாழ்க.

செம்பாதங்கள்.



இந்தப் பாதங்கள்
வெறும் பாதங்கள் அல்ல;
நிலத்தோடு தோய்ந்து கிடந்த
உழவுக் குடிகளின்
உழைப்புத் தடங்கள்.

இந்தப் பாதங்களின் கொப்புளங்கள்
நடந்த வலிகள் அல்ல;
நிலத்தின் ஆத்மாக்களின்
அழுகைத் துளிகள்.

கால்கள் நோகவும்
கொப்புளங்கள் பூக்கவும்
அரத்தம் கசியவும்
நடந்த பாதங்கள்
நிலத்தின்  ஒளிகள்.

உயிர்போகும் நிலத்தின் அழுகையை
நிலம் தோய நடந்து நடந்து
நைந்து போயிருக்கும்
உயிர்ச் சாமிகள்.

கன்னச் சுருக்கங்களும்
ஒட்டிக் கிடக்கும் வயிறும்
விரிப்போடிய நிலத்தின் சாட்சியங்களாய்
இந்தப் பாதக் கோடுகள்.

ஊருக்குச் சோறிடும்
இந்தப் பாதங்கள்,
ஏந்திய கொடியின்
நிறம் கசியக் கசிய
ஒரு பாதைக்கு வந்திருக்கின்றன.

இப்போது
இந்தப் பாதங்களை
வணங்க மறுத்தால்,
நிலத்தில் நாளை
இறங்க மறுக்கும்
இதே பாதங்கள்.

வனத்தாளின் கொலைத் தீ.


வனத்தாளின் கொடுந்தீயில்
கதறித் துடித்து
மாய்ந்தவர்களின் உயிரோசை,
கருகிச் சாம்பலாகி
வனத்தோடே கலந்திருக்கிறது.

பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுங்க நடந்தாள் கண்ணகி.
அவள் நடந்த பெருங்காடு
காலத் தடங்களின்
கங்குகளைச் சுமந்து கிடந்தாலும்,
கானுயிர்க்கெல்லாம் உயிர்த்தடமாய்த்தான் கிடந்தது.

கண்ணகியின் கோபத் தீயைக்
கண்களில் வழிந்த சுடு நீரும் அணைத்திருக்கவில்லை.

குன்றக் குரவர்களின்
குல தெய்வமாய்
வனத்தாள் மடி விரித்துக்
கிடந்த போதெல்லாம்
பெருந்தீ பற்றிடவில்லை.

நெடுமரங்கள் நின்ற போதும்
செடி கொடிகள் படர்ந்த போதும்
சருகு சுள்ளி மண்டியபோதும்
மூங்கில் கழைகள் உரசிய போதும்
தீ விளையாடிப் பார்க்கும் தான்;
தீயணைக்கும் வித்தைகளை
அது அதுவாய்க்
கற்றிருந்தன தான்.

வனத் தீ
கொலைத் தீயாய் மாறியதெல்லாம்,

வனத்தாளின்
மனிதப் பிள்ளைகளை
மெல்ல மெல்லக் கீழிறக்கி,
வனத்தையெல்லாம்
நிலத்திற்கும் இனத்திற்கும் சொந்தமில்லாதவர்க்குத்
தாரை வார்த்த பின்புதான்.

இயற்கையின்
எச்சம் நாமென்பதைத்
துச்சமாய்த் தூர வீசி,
நுகர்வெறியின்
உச்சம் தொடுகிற
மிச்சச் சமூகத்தைத்
தீயால் காரி உமிழ்ந்திருக்கிறாள் வனத்தாள்.

வனத்தாளின் கொலைத் தீ
படர்ந்திருக்க வேண்டியது
சுரண்டல் வர்க்கத்தின்
எச்சை அதிகாரத்தின் மீது தான்;
இந்தப் பிஞ்சுகளிடத்திலில்லை.

ஞாயிறு, 11 மார்ச், 2018

பெண் விடுதலை அரசியல் :- ஏர் மகாராசன் நேர்காணல்.

மார்ச் 8 - உலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு நியூசு 7 தமிழ் சமூக வலைத்தளத்துக்கு நான் அளித்துள்ள நேர்காணல். நேர்காணலில் பங்கேற்ற தோழி சண்முகப் பிரியா அவர்களுக்கும், ஆற்றுப்படுத்திய தோழர் பிரின்சு அவர்களுக்கும், நியூசு 7 தமிழ் ஊடக நிர்வாகத்திற்கும் எனது நன்றி.


 சண்முகப்பிரியா : 
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? 
இது கொண்டாடப்பட வேண்டியநாள்தானா?

ஏர் மகாராசன்: 
மனித குலத்தினுடைய சரி பாதி அங்கமாகத் திகழக்கூடிய பெண்கள், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் எனப் போராடி, வெற்றி பெற்ற நாள் தான் மார்ச் 8-ஆம் நாள். இது, பெண்கள் செய்த புரட்சியின் குறியீட்டு நாளாகவே கருதப்படுகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது 1789-ஆம் ஆண்டு, ஜூன் 14-ஆம் நாள் பெண்களுக்கான சுதந்திரம், சமத்துவம், பெண் பிரதிநிதித்துவம், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை என அனைத்துவகைப் பெண்ணடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போர்க்கொடி உயர்த்திப் புரட்சியில் ஈடுபட்டனர். 
இந்தக் கிளர்ச்சி உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. போராட்டக் கிளர்ச்சி தீவிரமடைந்த சூழலில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு இடமளிக்கவும் முன் வருகிறார் பிரான்ஸ் நாட்டின் புருஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க். அவ்வாறு அரசாங்க உத்தரவு 1848-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 1910 இல், பணிக்குச்செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான், பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு உலகம் முழுவதும் ஒரு நாளை மகளிர் நாளாகக் கொண்டாடுவதன் அவசியத்தை, ஜெர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான கிளாரா ஜெட்கின் என்பவர் முன்வைத்தார். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8-ஆம் நாளையே, உலகப் பெண்கள் நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கருத்து பெரும்பாலான பெண்கள் இயக்கங்களின் விருப்பமாக இருந்தது. இதனால், 1921-ஆம் ஆண்டு முதல் மார்ச்  8-ஆம் நாள், உலகப் பெண்கள் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்,இது கொண்டாடப்பட வேண்டிய நாள்தான்.


சண்முகப்பிரியா: 
பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணி மற்றும் காரணிகள் என்ன?

ஏர் மகாராசன்: 
வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது, பெண் பாலை, ஆண் பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்கிறார் ஏங்கல்ஸ். மனித சமூகத்தின் இயங்குதலுக்கு அடிப்படையாக இருப்பது, பொருள் உற்பத்தியும், உயிரின மறு உற்பத்தியும்தான். உற்பத்தியிலும், மறு உற்பத்தியிலும் கட்டுப்பாடு இல்லாது, பெண்கள் ஈடுபட்டிருந்த நிலைமைகள் தாய்வழிச் சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன. இதற்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட ஆண்வழிச்சமூக முறைமையில்தான், பெண்களின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செயல்பாடுகள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு, சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டதால், அவ்வுற்பத்தி நடவடிக்கையின் மூலம் கொணரப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள், பொருட்கள், உடைமைகளுக்கு ஆண்களே உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால், பெண்கள், ஆண்வழிச் சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாமல், இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆணின் உடலின்ப  வேட்கைக்குப் பலியான பெண்கள், கேவலம், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கருவிகளாக மட்டும் ஆக்கப்பட்டனர். மேலும், பொருள் உற்பத்தித்தளம் ஆண்கள் வசம் இருந்ததால், ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கொண்டாடும் வகையில் சொத்துடைய ஆணின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பணிக்குப் பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இக்குடும்ப அமைப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஆக, ஆணாதிக்கத்தின் பொருளியல் அடிப்படை என்பது, பெண்களின் உழைப்பு, சக்தி ஆகியவற்றின் மீது ஆண்கள் கொண்டுள்ள அதிகாரமே ஆகும். இதுதான், பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியாக நாம் கருதமுடியும்.

சண்முகப்பிரியா: 
பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் எது?

ஏர் மகாராசன்: 
தனிச்சொத்துடைமையும் உரிமையும்தான் ஆண்களுக்கான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வழங்கியிருக்கின்றன. இத்தகைய உடைமை வர்க்கச் சமூக அமைப்பை மாற்றக்கூடிய பாட்டாளி வர்க்க விடுதலைப் புரட்சியே பெண்களுக்கான முழு விடுதலையை அளிக்கக்கூடியது. அதாவது, உழைக்கும் வர்க்கத்துப் பெண்களின் விடுதலையில்தான் அனைத்து வகையான பெண்களின் முழு விடுதலையும் உள்ளடங்கியிருக்கிறது. 

சண்முகப்பிரியா: 
பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதா?

ஏர் மகாராசன்: 
ஒரு விடுதலைக் கோரிக்கையை, அதற்கான உரையாடலைக் கொண்டிருக்கும் எந்த ஒரு கோட்பாடும், ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும். பெண்ணியம் என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் பெண்களுடய விடுதலைக் குரலாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால், பெண்ணியம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணாதிக்கத்திற்கும், ஆண் அதிகார முறைகளுக்கும்தான் எதிரானது. 

சண்முகப்பிரியா: 
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்ளலாம் என்பதை இதுபோன்ற கருத்தியல்கள் கூறுகின்றனவா?

ஏர் மகாராசன் : 
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்வதைத்தான் பெண்ணியம் உள்ளீடாகக் கொண்டிருப்பதாகப் பெண்ணியத்தைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்துகொள்வதே பெண்ணியம் என்பதாக முதலாளித்துவச் சமூக அமைப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு கருத்துப் பரவல். இது, முதலாளித்துவ மேட்டிமைச் சமூகத்தின் பெண்களது கோரிக்கைகள் அவ்வளவுதான். இதுபோன்ற வாதங்கள், பெண்ணை நுகர்வுப் பண்டமாக ஆக்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ நுகர்வுப் பண்பாட்டு நடைமுறைகளுக்குத்தான் சார்பாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவச் சந்தை உற்பத்தியில், பொருட்களை ருசித்துவிட்டு எறிந்துவிட்டுச் செல்வதுபோல, பெண்ணின் உடலையும் ருசிப்புக்கான நுகர்வுப் பண்டமாக ஆக்குவதில் முதலாளித்துவச் சந்தைக் கூறுகள் அனைத்தும் தீவிரம் காட்டுகின்றன. இந்தத் தீவிரத்தின் வெளிப்பாடுகள்தான் கட்டற்ற பாலியல் சுதந்திரம், வரையரையற்ற பாலியல் புணர்ச்சி, கூட்டுக்கலவி போன்றவை முற்போக்கானவை எனக்காட்டும் வாதங்களும் நடவடிக்கைகளும் ஆகும். இதுவே கலாச்சாரப் புரட்சியாக மதிப்பிடப்பட்டாலும், இது முதலாளித்துவ நுகர்வுவெறிக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

சண்முகப்பிரியா: 
பெண் சுதந்திரம், பெண்ணியத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யார் யார்?

ஏர் மகாராசன்: 
பெண்ணுரிமை, பெண்ணியம், பெண் எழுத்து தொடர்பான ஆய்வுகளையும் உரையாடல்களையும் மேற்கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. எனினும், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக மேரி எல்மான், சிமோன் தி பொவாயர், எலைன் ஷோவால்டர், டோலிமர், ஆனிட் கோலோட்னி, மீரா ஜெலன், கேட் மில்லட், ராபின் லாக்கோப், ஜூலியா கிறிஸ்தவா, ஹெலன் சீக்சஸ், மேரி டாலி, வெர்ஜினியா ஊல்ப், கோரா கப்லான்,சுலாமித் பயர்ஸ்டோன் , அஸிஸா அல் ஹிப்ரி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், பெண் விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியல் இயக்கங்களாக வடிவமைத்து நடைமுறைப்படுத்தியவர்களுள் லெனின், கிளாரா ஜெட்கின், ஷீலா ரெளபாத்தம் போன்றோரைக் குறிப்பிடலாம். இந்தியச் சூழலில் பூலே, அம்பேத்கர் பெண்ணுரிமைச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியவர்களாவர். தமிழ்ச் சூழலில், பெண்ணுரிமைச் செயல்பாட்டை அரசியலாக முன்னெடுத்தவர் பெரியார்.பெண் விடுதலைச் செயல்பாட்டை மண் விடுதலையோடும் இன விடுதலையோடும் இணைவுபடுத்திப் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்து அவர்களைப் போராட்ட சக்தியாக ஈழத்தில் வார்த்தெடுத்தவர் தேசியத் தலைவர் திரு.பிரபாகரனார் அவர்கள் தான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சண்முகப்பிரியா: 
1871-இல் தான் பெண்ணியம் என்ற விடுதலை கருத்தியல் உருப்பெறுகிறது எனில், அதற்கு முன்பாகப் பெண்கள் அவ்வளவு காத்திரமாகப் போராடவில்லையா?

ஏர் மகாராசன்: 
அப்படி இல்லை. பெண்களின் விடுதலைக்குரல் எல்லாக் காலத்திலும், எல்லா தேசத்திலும் ஒலித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறது. பெண்களுடைய விடுதலைக் குரலானது, எழுச்சியாகக் கிளம்பியதும், புரட்சியாக வெடித்ததும், இயக்கங்களாகப் பரவியதும் இந்தக் காலகட்டத்தில்தான். ஆகையால், இந்தக் காலகட்டத்திற்கு முன்பு, பெண்கள் குரல் எழுப்பவே இல்லையா என்றெல்லாம் பார்த்திட முடியாது. பெண்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கான தடயங்களும் இருக்கின்றன. கண்ணகி, தன்னுடைய கணவனான கோவலன் கொல்லப்பட்டதை அடுத்து, பாண்டிய மன்னனை எதிர்த்துக் குரலிட்டு, மதுரையை எரித்துவிட்டுச் சென்றது பெண்ணினுடைய தனிநபர் நிகழ்ச்சியாக மட்டும் பார்த்துவிட முடியாது. ஒரு அதிகார அமைப்பை, பெண் எதிர்த்திருக்கிறாள். அவள், தன் உரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். அதேபோல, பெண்ணினுடைய தன்னிலை உரிமைக்குரல் தமிழ் மரபில் வெளிப்பட்டிருப்பதை நிறையப் பார்க்க முடியும். வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோருடைய கவிதைகளில், மிகப்பெரிய பெண் உரிமைக்கான குரல் பொதிந்திருப்பதைப்  பார்க்க முடியும். இதேபோல, எல்லாக் காலகட்டத்திலும் எல்லா நாடுகளிலும் பெண்கள் தம்முடைய உணர்வுகளையும், தங்களுக்கான உரிமைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வரலாற்றில் அதற்கான சான்றுகள் இருக்கின்றன. இது எப்பொழுது தீவிர அரசியலாக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அந்தப் பெண்ணுரிமைக் குரல், ஓர் அரசியலாகவும் இயக்கமாகவும் மாறியது 1871 காலகட்டங்களில்தான்.

சண்முகப்பிரியா: 
பெண்ணியத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

ஏர் மகாராசன்: 
பெண்ணியத்தில் நிறைய வகைகள் உள்ளன.ஆனால்,  அதனை மூன்று அடிப்படையான வகைக்குள்ளேஅடையாளப்படுத்துவர்.
மிதவாதப்பெண்ணியம் – சீர்திருத்தங்கள் மற்றும் சலுகைகளைக் கோருவது.
தீவிரவாதப் பெண்ணியம் – பெண்கள் ஒடுகப்படுவது ஆண்களால்தான். அதனால், ஆண்களுக்கு எதிராகத் தீவிரத் தன்மையுடன் இருப்பது. 
சமத்துவப் பெண்ணியம் – பெண் விடுதலையைப் புரட்சியின் அங்கமாக முன் வைப்பது. 

சண்முகப்பிரியா: 
இத்தனை வகைகளில், எந்த வகை பெண்ணியம் சரியான விடுதலைக்கான பாதையை முன்வைப்பதாக கருதுகிறீர்கள்?

ஏர் மகாராசன்: 
சமத்துவப் பெண்ணியம் என்று சொல்லக்கூடிய மார்க்சியப் பெண்ணியமே தெளிவான நோக்கத்தையும் பெண் விடுதலைக்கான வழிமுறைகளையும் செயல் திட்டங்களையும் கொண்டிருக்கிறது. ஆண்வழிச் சமூக உடைமை முறைமைகளில் இருந்தும், ஆதிக்கவெறி ஆண்களிடம் இருந்தும், இன்னும் எல்லா விதமான சுரண்டல் ஒடுக்குமுறைகளில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறுவதற்கான திட்டங்களையும், அரசியல் வழிமுறைகளையும், அதற்கான போராட்டங்களையும் மார்க்சியப் பெண்ணியமே எடுத்துரைக்கிறது. ஆகவே, மார்க்சியத்தின் வழிப்பட்ட சோசலிசம் எனப்படுகிற சமத்துவப் பெண்ணியமே சரியானது என்று நான் கருதுகிறேன்.

சண்முகப்பிரியா: 
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் சார்ந்த எழுத்துகள் எப்படி உள்ளன?

ஏர் மகாராசன்: 
1990-களுக்குப் பிறகு, தமிழ்ச் சூழலில் பெண் சார்ந்த பதிவுகள் நிறைய வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆண்களின் எழுத்து முறைகளில் இருந்தும் அனுபவப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டதான ஒரு புதிய எழுத்து முயற்சிகள் பெண்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கவிதை, கட்டுரை, நாடகம், புனைகதை, கலை உள்ளிட்ட தமிழ் மரபின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளும், அறிவுப் புலப்பாடுகளும் பதியப்பட்டு வருகின்றன. எழுதுவதில் பெண்களுக்கு இருந்த தயக்கம் முற்றாக மறையத்தொடங்கி உள்ளது. அதேபோல, பெண் எழுத்துகளுக்கு இருந்த ஆண்களின் எதிர்ப்புகளும் கைவிடப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துச்சூழலில், பெண்களுக்கான இடத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டு இருப்பதும், தமிழை வளப்படுத்தக்கூடிய ஒன்றாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சண்முகப்பிரியா: 
ஒரு எழுத்தாளராக இந்தப் புலத்தில் உங்கள் படைப்புகள் குறித்துக் கூறுங்கள்.

ஏர் மகாராசன்: 
தமிழ்  மரபில் பெண் எழுத்துகளில் காணப்படக்கூடிய இயங்கியலை அடையளப்படுத்தும் வகையில், நான் மேற்கொண்ட பெண் மொழி பற்றிய ஆய்வு மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். தமிழில் பெண் மொழி மரபு  குறித்த எனது ஆய்வு  “பெண் மொழி இயங்கியல்” என்ற பெரு நூலாக வெளிவந்திருக்கிறது. அதற்கடுத்து, பெண் விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்களைத் தொகுத்து, “ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்” என்னும் நூலாக எனது தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. இரண்டு நூல்களையும் தோழமைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும், பெண் எழுத்துகள் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எழுத்துகள் யாவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் மக்களின் பக்கம்தான். அவ்வகையில், எனது எழுத்துகள் யாவும் பெண்ணின் பக்கம்தான்.

சண்முகப்பிரியா: 
தலித் பெண்ணியம் என்ற ஒன்று பொதுவாகப் புழக்கத்தில் இருக்கின்றது. சாதியம் சார்ந்த பெண்ணியத்தின் தேவைகள் என்ன?

ஏர் மகாராசன்: 
இந்தியச் சமூகத்தில், சாதியப் பாகுபாடுகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் வெகுகாலமாகவே நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நோய். சாதியத்தைப் பேசுபொருளாக்காமல், எவ்வகைப் புரட்சியும் இங்கு சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கே வெகுகாலமாகிப் போயிருக்கிறது. இங்குள்ள உயர்த்திக் கொண்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு; ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு. இருவேறு தரப்பினரின் நிலைமைகள் ஒரே மாதிரியாக அமைந்திருக்கவில்லை. இதில், அதிகமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடப்பது ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள்தான். ஆகவே, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் குரலை ஆதரித்துதான் ஆகவேண்டும். அவ்வாறான குரலை வரவேற்பதில் தவறில்லை. 

சண்முகப்பிரியா: 
லிபரல் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஏர் மகாராசன் : 
நிலவுடைமைச் சமூகத்தில் பெண்களுடைய உழைப்புச் சக்தி என்பது மறுக்கப்பட்டது. முதலாளித்துவச் சமூக அமைப்பிலே, பெண்களின் உழைப்புச் சக்தி பறிக்கப்படுகிறது. இதைத்தான் உழைப்புச் சுரண்டல் என்று கூறுகின்றனர். முதலாளித்துவச் சமூக அமைப்பு, நிலவுடைமைச் சமூக அமைப்பில் இருந்து முற்போக்கானதாக கொண்டு போனாலும்கூட, அதன் உள்ளீடான நோக்கம், சுரண்டல் தன்மையைத்தான் கொண்டுள்ளது. ஆகவே, முதலாளித்துவப் பெண்ணியமோ, குட்டி முதலாளித்துவத்தின் சீர்திருத்தவாதப் பெண்ணியமோ பெண்களுக்கான முழு விடுதலையையும் கொண்டிருப்பதில்லை. மார்க்சிய வழிப்பட்ட சோசலிசப் பெண்ணியமே உழைக்கும் பெண்களது விடுதலையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது. 

சண்முகப்பிரியா: 
லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் இடையிலான பெண்ணியம் சார்ந்த விவாதத்தின் முக்கிய சாரம் என்ன?

ஏர் மகாராசன்: 
லெனின், ரசியப் புரட்சியின் பிதாமகனாகக் கருதப்படுகிறவர். கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர். லெனினுடன் புரட்சியில் பங்கெடுத்துக்கொண்டவர். லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் 1920 காலகட்டங்களில் நிகழ்த்திய உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் உடல் அரசியல் பற்றி நிறைய உரையாடியுள்ளனர். கட்டற்று இருக்கக்கூடிய பாலியல் சுதந்திரம் குறித்துக் கூறுமிடத்தில், முதலாளித்துவச் சமுதாயத்தின் குப்பை மேட்டில் அத்தனைச் செழிப்புடன் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தியானம் புரியும் இந்திய ஆண்டியைப் போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சினைகளிலேயே முழு நாட்டம் கொண்டிருக்கும் இவர்களை நான் நம்புவது இல்லை. பெரும்பாலும், வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தாந்தோன்றித் தனமான ஊகங்களேயான இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகி உள்ளதற்குச் சொந்தத் தேவைகளே காரணம். முறைகேடான அல்லது மட்டு மீறிய தமது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னால் நியாயம் கற்பிக்க வேண்டும்; தாம் கண்டிக்கப்படல் ஆகாது என வாதாட வேண்டும் என்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும். இதனைக் கலகத் தன்மை கொண்டதாகவும், புரட்சிகரமானதாகவும் தோன்றச் செய்யும் பொருட்டு எவ்வளவுதான் முயன்ற போதிலும், முடிவில் எப்படியும் இது முற்றிலும் முதலாளித்துவத் தன்மையாகவே இருக்கிறது . இது உழைக்கும் பெண்களது கோரிக்கையல்ல. மாறாக, முதலாளித்துவச் சமூக அமைப்பில் இருக்ககூடிய மேட்டிமை வர்க்கத்துப் பெண்களுடைய கோரிக்கைதான் என்று அவ்வுரையாடலில் சொல்லி இருக்கின்றனர். ஒரு கடையில் ஒரு கோப்பையில் தேனீரை வாங்கி, தேனீரைக் குடித்து முடித்தவுடன், அந்தக் குவளையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவது மாதிரியானது கட்டற்ற பாலியல் செயல்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், பாலியல் என்பதும் காதல் என்பதும் முழுவதுமாக அன்பு மற்றும் உறவு வயப்பட்டது. காதலற்ற முத்தங்கள் ஒரு கோப்பைத் தண்ணீர் போன்றது என விவரிக்கும்  அந்த உரையாடல்  பகுதிகள் முக்கியமானது. இவ்வாறு, பெண் விடுதலை பற்றிய மார்க்சியப் பார்வைகள் குறித்துதான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் எனும் நூல் உணர்த்துகிறது.

சண்முகப்பிரியா: 
தமிழ்நாட்டில், பெண்ணியம் எப்பொழுது முதல் தீவிரமாக பேசப்படுகிறது?  தமிழ்ச்சூழலில் முக்கியமான பெண்ணியவாதிகள் என யாரையெல்லாம் சொல்லலாம்? 

ஏர் மகாராசன் : 
தமிழ்ச் சூழலில் பெண் விடுதலைக்கான குரலை அரசியலாய் முன்னெடுத்தவர்கள் தந்தை பெரியாரும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் தான். பெண் சார்ந்த உரையாடல்களைத் தமிழ்ச் சூழலில் வளப்படுத்தியும், வளப்படுத்திக் கொண்டும் இருப்பவர்களாக சிவகாமி, வ.கீதா, ஓவியா, அருள்மொழி, சரசுவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, அம்பை, கனிமொழி, எம்.ஏ.சுசீலா, அ.மங்கை, ஜூவ சுந்தரி, பாலபாரதி, அஜிதா,  செல்வி, குட்டி ரேவதி, தேவதத்தா, வாசுகி,  நந்தினி, கவின்மலர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையச் செயல்பாட்டாளர்கள் பெண் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சண்முகப்பிரியா: 
பெரியாரின் பெண்ணியம் தீவிரமானதாகக் கருதப்படுகிறதே அது ஏன்?

ஏர் மகாராசன்: 
பெண்கள் ஆண்களிடம் அடிமைகளாக இருப்பதற்குக் குழந்தைப்பேறுக்குக் காரணமான அவர்களின் கர்ப்பப்பையே காரணம் என்கிறார் பெரியார். குழந்தையைப் பெற்றுப்போடக்கூடிய கர்ப்பப்பை இருப்பதனால்தான் பெண்களை ஆண்கள் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஆகவே, பெண்கள் தங்கள் கர்ப்பப் பையை அறுத்தெறியுங்கள் என்கிறார் பெரியார். அதனால்தான், பெரியாரின் இந்தக் குரல், தீவிரமானதாகப் பார்க்கப்படுகிறது.

சண்முகப்பிரியா: 
பெரியாரின் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்குமான முக்கிய வித்தியாசம் என்ன?

ஏர் மகாராசன்: 
பெரியாருடைய பெண்ணுரிமைக் கருத்தியல்கள் தீவிரமானதாகக் கருதப்படுகிறது என்றாலும்கூட, உழைப்புச் சுரண்டலிற்கும், பாலியல் சுரண்டலிற்கும் உள்ளாகும் பெண்களின் சமூக அமைப்பை மாற்றுவது குறித்து அவை பேசவில்லை. நிலவுகிற சமூக அமைப்பில், பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மறுமணம், சொத்துரிமை போன்ற சீர்திருத்த வடிவங்களையே வெளிப்படுத்தின. சோசலிசப் பெண்ணிய அரசியலானது, நிலவுகிற சமூக அமைப்பையே புரட்டிப்போடக்கூடிய புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ளது. எனினும், சீர்திருத்த நடவடிக்கை என்பது, புரட்சியின் முதல் கட்ட தொடக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சோசலிச பெண்ணுரிமையின், ஒரு தொடக்கப் புள்ளியாகவே பெரியாரின் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சண்முகப்பிரியா: 
நவீன பெண்ணியம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? பெண்ணியம் எனும் கருத்தியலில் எதிர்காலத்தேவை, வீச்சு எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஏர் மகாராசன் : 
கட்டற்று இருப்பதுதான் பெண்களின் சுதந்திரம் என்கிற கருத்து, இந்தச் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. மேட்டிமைப் பெண்களின் முன்னெடுப்புகளே நவீனப் பெண்ணியமாக முன்மொழியப்படுகிறது. பெண்ணியம் என்பது பெண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு விடுதலைப் புரட்சி  கிடையாது. அதேபோல, ஒரு வர்க்க விடுதலை என்பது, பெண்களை நிராகரித்து விட்டு அல்லது தவிர்த்துவிட்டு நடக்கக்ககூடிய ஒரு புரட்சியும் கிடையாது. உழைக்கும் பெண்களும், உழைக்கும் ஆண்களும் அணிதிரள்வதுதான் இங்குள்ள எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் ஒரே தீர்வு. அந்தப் புரட்சிதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்று அழைக்கப்படும். அந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அணி சேர்வதன் மூலமாகத்தான் பெண் விடுதலையும் சாத்தியப்படும் என்கிற ஒரு புரிதலை நவீன பெண்ணியம் உள்வாங்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

இன்றைய நவீனப் பெண்ணியவாதிகள், மார்சியத்தைப் புரிந்து கொள்வதிலும், மார்க்சியவாதிகள் பெண்ணியத்தைப் புரிந்து கொள்வதிலும் போதாமைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மார்க்சியரும் பெண்ணியத்தை புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணியவாதியும் மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  இதுவே நவீனப் பெண்ணியமாக உருக்கொள்ள வேண்டும். இதுவே இப்போதையத் தேவையும்கூட. 
 
சண்முகப்பிரியா: 
கம்யூனிசத்திற்கும் பெண் விடுதலைக்கும் அப்படி என்ன நெருக்கமான தொடர்பு இருக்கிறது?

ஏர் மகாராசன்: 
கம்யூனிசம் என்பது மனிதகுல விடுதலையை பற்றிப் பேசுகிறது. பெண்கள் மனித குலத்தின் சரிபாதி அங்கம். அதனால், கம்யூனிசம் பெண் விடுதலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது

திங்கள், 5 மார்ச், 2018

மீன் பேறு.


செங்குளத்துள்
நீந்தித் திரிந்து,
அலை வளையங்களோடு
கரை ஒதுங்கி,
செலவுகளில் பொதிந்த நண்டுகளின் வழித்தடம் தேடித் தனித்தலைந்து,
சுள்ளென்ற வெயில் பொழுதில் பளிச்சென்று துள்ளிக் குதித்து கரையின் மேலே
வந்து விழுந்தன மீன்கள்.

மூடித் திறந்த செவுள்களில்
நுழைந்த காற்று
உயிர் தரப் பார்த்துத்
தவித்துப் போனது.

நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து
ஈர வாழ்வைத் துடுப்பசைத்து
மிதந்த மீன்கள்,
கரை மணலில் புரண்டு புரண்டு
நிலத்தைப் பூசிக் கொண்டு
மீத வாழ்வின் பேறு பெற்று
வாய் திறந்து மாண்டு போயின.

உயிர்க்கொலைப் பழியிலிருந்து தப்பிப் பிழைத்த நினைப்பில் தக்கையில் தொங்கிக் கிடந்தது
மண்புழு கோர்த்த தூண்டில் முள்.

ஒளிப்படம் :
Palani Nithiyan

ஞாயிறு, 4 மார்ச், 2018

சொல்நிலம் : வஞ்சிக்கப்பட்ட, வாழ்வு தந்த நிலங்களின் அவலக் குரல்களாகச் சொற்கள் :- பிரபாகரன்

மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் “அம்மா” தவறிவிட்டதால், அவரைக் காண மார்த்தாண்டம் வரை சென்றிருந்தோம். அவரது வீட்டுக்கு போன பின், அவரது குடும்பத்தார்களை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக தோன்றியது. அவர்கள் “அம்மா” இல்லாமல் அனைவரும் ஒரு கையை இழந்தது போல, மிகவும் ஒடிந்து போய் காணப்பட்டனர். அவர்களை பார்க்கும் போது இரண்டு நாட்கள் அழுது விட்டு மூன்றாம் நாள் இயல்பாக அவரவர் வேலைகளை பார்க்கப் போய் விடுவர் என்று தோன்றவில்லை. அவரது “அம்மா” விட்டு விட்டு போன நினைவுகள் அவ்வளவு வலிமையானது.
சரியாக அன்றுதான், சொல்நிலத்தின் முதல் கவிதையை வாசிக்கத் தொடங்கிருந்தேன். அவரது அம்மாவின் இறப்புச் செய்தியை கேட்டதும் நினைவில் வந்தது, “கருச்சொல்” கவிதைதான்.

தமிழ்ச்சமூகத்தில், எந்தவொரு நிகழ்வைத் தொடங்கினாலும் மங்களகரமாக, தெய்வங்களையோ இயற்கையையோ தொழுது ஆரம்பிக்கும் வழக்கம் நீண்ட காலமாக உண்டு. அது போலத்தான், “சொல்நிலம்” கவிதை தொகுப்பும். இங்கும் மகாராசன் அவர்கள் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு நிலத்தை குறித்து, அதன் வலிகளை குறித்து எழுதி விடுவதோ, அல்லது பாடிவிடுவதோ அவ்வளவு எளிதானது அல்ல. அது அந்த நிலத்தின் வலிகளை முழுதும் இயல்பாகவே உணர்ந்தாலொழிய, அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது. நாம் விழுந்த இடமாகிய ஈழத்தில், நடந்த இன அழிப்பிற்கு மௌன சாட்சிகளாக இருந்த நம்மை நோக்கி கேள்விகேட்கும் “இனம் அழுத நிலம்”மும், இங்கிருந்து பறந்து போன குருவிகள் மீண்டு மீண்டும் வரும் என ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை முன்வைக்கும் “ஈழப்பனையும் குருவிகளும்” ஆகிய கவிதைகள் புத்தன் பெயரால், அங்கு நடந்த படுகொலைகளின் பெரும்துயரை நினைவுபடுத்தி செல்கையில், நம்மை ஒரு நிமிடம் இருத்தி சிந்திக்க வைக்கிறது.

அதே போன்ற படுகொலைகள் நெய்தல் நிலத்திலும் நடந்தேறியது. ஆனால் இந்த முறை மனித மிருகங்களால் அல்லாமல், ஒப்பிட முடியாத இயற்கையின் கரங்களால். நம்மால் படைக்கப்பட்ட இவர்களே இப்படி ஒருவருக்கொருவரை அழித்தொழிக்கும் போது, நாமும் ஏன் அமைதியாக இருக்க வேண்டும், என்று இயற்கை நினைத்ததோ என்னவோ, ஆழியால், அது சூழ் உலகை அழித்து குதியாட்டம் போட்டது. “ஆழி முகம்” கவிதையும் “அலை நிலத்து அழுகை” கவிதையும் அதையே கூறிச் செல்கின்றன.

இப்போது மருத நிலத்து துயரம். இன்று கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சை போன்ற நிலங்களில் அரசின் அராஜகத்தால் அழுது புலம்பும் மக்களின் வலியை “நிலப்படுகொலை” வழியும், நீங்கள் பசியால் அழுது கொண்டிருந்தாலும் என்னை உழுது கொண்டு இருங்கள் என நம் காலில் விழுந்து கெஞ்சும் நிலத்தின் அவலத்தை “துயர் படலம்” வழியும், ஆறுகளெல்லாம் வற்றிப்போய், குலங்களெல்லாம் சீமைகருவேலமரங்கள் முளைத்து, கலப்பையெல்லாம் கழுமரமாய், வயிரெல்லாம் பத்திக்கிட்டு எறுஞ்சாலும் மண்ணை வாரி தூத்தி போகவும் மனசில்லேயே என அவர்கள் கெஞ்சுவது நமது காதிலும் விழத்தான் செய்கிறது “கழு நிலம்” வழியாக.

தம் இனத்திற்காக சமீபத்தில் தீக்கிரையான விக்னேசு போன்றோர்களை, உசுப்பேற்றி, உணரவேற்றி செய்ய வைத்தார்கள் என எள்ளி நகையாடும் வாய்கள், களம் கண்டு குரல் கொடுத்திருந்தால் அவர்கள் தீக்கிரையாகாமல் இருந்திருப்பார்கள் என “அறத்தீ மனிதர்கள்” கூறும் அரசியல் நூற்றுக்கு நூறு உண்மையே.

சுவாதி கொலை வழக்கில் மறைந்திருக்கும் சாதி, அதிகார, பூநூல் அரசியலை பேசி…..
இறுதியாக இராம்குமாரை கொலை செய்ததும், ஆம், “இதுவும் ஒரு ஆணவப் படுகொலை” தான்.

மிகப்பெரிய கேலிக்கூத்தான, கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், எளியவர்கள் படும் பாட்டை அவர்களின் நிலத்தின் வழியாகவே சொல்லுகிறது, “செல்லாக் காசுகளின் ஒப்பாரி”.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தும் வலி நிறைந்த நிலத்தின் வலியை, அந்த நிலத்தில், பால்ய கால வாழ்வின் நினைவுகளை அசைபோட்டு, அந்த வாழ்வே வாழ்வு என, இப்போது நாம் வாழும் நகர வாழ்க்கையை கண்டு நம்மை எள்ளி நகையாடுவதாய் அமைந்துள்ளது.

“நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில் தானே
செழித்து நிற்கின்றன.” போன்ற வரிகளும்,

“கார்காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தே தான் கிடக்கின்றன.” போன்ற வரிகளுமே அதற்கு சான்று.

என்னய்யா இது? கவிதை நூல் என்று கூறிவிட்டு வெறும் வன்முறைகளையும் இழந்த காலங்களையும், கொலைகளையும் மட்டுமே சொல்லி இருக்கின்றீர்களே? உங்கள் கவிதையில் சிரிப்பே இல்லையா? மகிழ்ச்சியான நிலமே பாடப்படவில்லையா?

ஏன் இல்லை? இருக்கே. மகிழ்ச்சியான, பச்சை பசேலென இருக்கும், எப்போதும், சிரித்துக் கொண்டிருக்கும் நிலமும் இங்கு உண்டு. அந்த நிலம்தான் “மனிதனின் காலடி படாத நிலம்.” மேலும் இங்கு காதல் கவிதைகளும் உண்டு. அவையும் நிலத்தோடு தொடர்புடையவைகளாகவே இங்கு பாடப்பட்டுள்ளன.

வெறும் அழகியலை மட்டும் பாடுவதோ, எழுதுவதோ மிக எளிதாக, யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். அவை அழகானவை மட்டுமே. ஆனால் இது போன்ற, நிலத்தின் அரசியல் கலந்த கவிதைகள், படைப்புகள் மட்டும்தான் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஆரோகியமானவை.

இந்த நூல் இன்னும் சிறிது நாள் கழித்து வெளி வந்திருந்தால், அதில் கேரள படுகொலையும், விழுப்புரம் படுகொலையும், சிரிய படுகொலைகளும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஏனென்றால், தமிழர்களாகிய எங்கள் ஓலங்கள் மற்றவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, மற்றவர்களின் அவலக் குரல்கள் தமிழர்களாகிய எங்கள் காதுகளில்  விழுந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் எப்போதும் அதற்காக செவி கொடுப்போம்…

#மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

அன்புடன் பிரபாகரன்.

வெள்ளி, 2 மார்ச், 2018

பசிக் கண்கள்.


கையூண்டு பிடிமண்கூட
அவனுக்குச் சொந்தமில்லாமல்,
காடுகள் மேவிய நிலத்தையெல்லாம்
பறித்துக் கொண்டு காட்டுமிராண்டியென
விரட்டி அடித்தார்கள்.

திருடியதாய்க்
குற்றம் சுமத்தியும்
கட்டி வைத்தும்
அடித்து வதைத்தும்
தோலோடு தோலாய்
ஒட்டிக் கிடந்த உயிரை
மனித வெறியர்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சாகடித்த போதும்,

அவனது கண்கள்
உயிர்ப் பிச்சை
ஏதும் கேட்கவில்லை.
அரண்டு மிரண்டு
அழவுமில்லை.
அவமானத்தால் வெட்கித்
தலை குனியவுமில்லை.

அவனது கண்களில்
நிரம்பி வழிந்ததெல்லாம்
பசி வலி தான்.

வலிக்க வலிக்கச்
சாவைத் தந்த போதும்,
பசி நிரப்பிய
அவனது கண்கள்
மனித வெறியின் மீது
அன்பொளியைத்தான் பாய்ச்சியது.

உயிர் இரக்கம் காணாது
தவித்தலைகின்றன
அவனது கண்கள்.

குற்றவுணர்வில் 
சாகடிக்கின்றன,
மனம் பூராவும் நெம்பியிருக்கும் மதுவின் கண்கள்.

மல்லன் மல்லியின்
பைத்தியக்காரப் பிள்ளையாய்
பசியோடும் பட்டினியோடும்
உலவித் திரிந்த மது,
நினைவில் வாழ்கிற
மனிதத்தின் உருவாய்
ஆகி நிற்கிறான்.

இனவெறிப்
பலி பீடத்தின் மீதமர்ந்து,
உயிர்போகும் எனத் தெரிந்தும் வெள்ளந்திப் பார்வை கொண்டிருந்த
பாலச்சந்திரக் கண்களும்,
நுகர்வெறி பீடித்த
சமூகப் பீடத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மதுவின் கண்களும்தான்
பயமறியாது நிலைகுத்தி நிற்கின்றன.

அவனது கண்களில்
இனத்தின் வலியும்,
இவனது கண்களில்
பசியின் வலியும்
நிலமெல்லாம் விதைக்கப்பட்டிருக்கிறது.

பசித்த கண்கள்
பழி தீர்க்கும்.

ஒரு நாள்
பசி ஆறும்.

வியாழன், 1 மார்ச், 2018

சொல் நிலம் : சமரசமற்ற நேரடித் தாக்குதல் : - கதிர் மாயா கண்ணன்


சொல் நிலம்: சமரசமற்ற நேரடித் தாக்குதல்; தாக்கப்பட்டது நானும் தான். முனைவர் ஏர் மகாராசன் தனது 'சொல் நிலம்' கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். மஞ்சள் நிற முன் பக்க அட்டையில், சின்னப் பறவை ஓர் கிளையில் அமர்ந்திருக்கும் முகப்பு பக்கத்தை மேலோட்டமாய் பார்த்தபோது, நிலத்தைப் பற்றி சொல்லி இருக்கலாம் என்ற எண்ணத்தில் உட்புகுந்தேன். இந்த மண்ணில் என்ன நடந்தது? என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது? என்பதை நியாயத்தின் பக்கம் நின்று அநியாயத்தை போட்டுத் தாக்கி உள்ளார்.
பத்திரப்படுத்த வேண்டிய கவிதைகளை, வரிகளை, வார்த்தைகளை கொடுத்துள்ளார். சொல்வதை துணிந்து சொல்வதோடு, சமரசமற்ற சொற்களை பயன்படுத்தி இருப்பது கவிதையின் வலி(மை)யை கூட்டுகிறது. சமூக அவலங்களை, அநீதிகளுக்கு எதிராய் சமரசமற்ற நேரடித் தாக்குதல் தொடுக்கின்றன கவிதைகள்.

''எப்போதோ
வீழ்ந்திருந்தாலும்
மேகத்தின்
உயிர்த் துளி குடித்து
மீண்டெழுகின்றன
புதைந்திருந்த விதைகள்''

-என ஆயுட்காலம் சொல்வதாகட்டும்

''நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித நிழல் போர்த்திய
நாடு தான்
வெயிலில்
வெந்து சாகிறது''

-என நிழல் வனம் பேசுவதாகட்டும்

''அழுது கொண்டிருந்தாலும்
உழுதுகொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்''

-என நிலத்தின் துயர்ப் படலம் பாடுவதாகட்டும், நிலத்தின் மீதான காதலும், மண் மீதான வன்முறைக்கு எதிரான சினமும் அப்பட்டமாய் வெளிப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி சுருட்டிச் சென்ற சுனாமி, சாதிய ஆதிக்கத்தால் வெண்மணியில் சாம்பலாகிப் போன செந்நெல் மனிதர்கள், பணம் மதிப்பிழப்பால் நேர்ந்த துயரங்கள், ஆணவப்படுகொலை, ஈழப் படுகொலை, போராளிகளை ஒடுக்க பயன்படுத்தப்படும் குண்டர் சட்டம் என சமரசமற்ற தாக்குதலை தொடுக்கிறார். ஒத்த கருத்து, ஒத்த சிந்தனையாளர்களிடையே இக்கவிதைகள் மனக் கிளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
இராம்குமார் என்ற ஏழை இளைஞனை இந்த அரசு எப்படி படுகொலை செய்தது என்பதை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலையென உரைக்கிறது கவிதை. சுவாதி படுகொலை, இராம்குமார் மரணத்தை சிலம்பதிகாரத்தோடு ஒப்பிட்டு வரையப்பட்ட கவிதை அது.

''ஆணவப் படுகொலைகளுக்குக்
காரணங்கள் தேவையில்லை.
சாமானியராய் இருந்தாலே
போதுமானது.
...............
...............
இராம்குமார்கள் சாகடிக்கப்படும்
நாடுதானே இது!''

-என்று சொல்லும் போது நீதி யாருக்கு கிடைக்கும்? யாருக்கெல்லாம் மறுக்கப்படும்? என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

''பல்லக்குத் தூக்கியும்
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம்''

-என அறத்தீ மனிதர்களில், அறமற்ற மங்குனிகளையும் வசைபாடியுள்ளார். "பூநூலால் கோர்க்கப்பட்ட இந்திய வரைபடச் சாயங்களை அவ்வப்போது ஆறுகள் தான் அழிக்கின்றன" என நுட்பமான அரசியலை ஆழமாய், அழுத்தமாய் பதிவு செய்கிறார்.
மண்ணையும், மக்களையும் நேசிக்காமல் வடிக்கும் கவிதைகள் இனிமையை கொடுக்கலாம். ஆனால், வஞ்சிக்கப்படும் மனிதர்களையும், இனத்தின் அடையாளங்களையும் பதிவிடும்போது இனிமையை தேட முடியாது. பூந்தோட்டத்தில் வேண்டும் என்றால், மனம் குளிரும் காட்சிகள் கிடைக்கும். போர்க்களத்தில் இரத்தமும், சதைப் பிண்டங்களுமாய் இருதயம் பிளக்கும் காட்சிகளே விழிஎட்டும் வரை விரிந்து கிடக்கும். இந்நூல் போர்க்களத்தைக் விவரிப்பது. மண்ணோடும், மனிதர்களோடும், சமூக அவலங்களோடும் நிகழும் போரைப் பற்றியது. நமக்கு எதிராய் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரைப் பற்றிய நூல்.
நூலை வாசித்து முடித்தபின்பு, மீண்டும் அட்டையைப் பார்க்கும் போது, பறவை முகத்தின் படிந்த சோக ரேகைகள் மட்டுமே நேரடியாய் புலப்படுகிறது. இந்த சோகம் நமக்கும் சொந்தமானது. நூலும் அப்படியே!

87 கவிதைகளை கொண்ட இந்த நூலின் முதல் கவிதையின் முதல் வரி, 'அன்பின் உயிர் முடிச்சை'. கடைசி வார்த்தை 'மண்ணுக்குள்'. அன்பில் தொடங்கி மண்ணுக்குள் விதைத்துள்ளார். விதைகள் விருட்சமாகும். மேகத்தின் உயிர்த்துளி குடிக்காத விதைகளும், நம் இன மக்களின் இரத்தத் துளிகளில் குளித்து மீண்டெழும். அதன் வேர்களுக்கு இதுபோன்ற கவிதை நூல்கள் இரத்தம் பாய்ச்சிக் கொண்டே இருக்கும்.

பேரன்புடன்
கதிர்மாயா கண்ணன்

01-03-2018