ஞாயிறு, 22 அக்டோபர், 2017

செம்புலம்.


மெய்யும் பொய்யுமாய்ப்
பேசிச் சிரித்து,
பூவிதழ் வாசத்தை
நாசிகள் குடித்து,
எச்சில் சொற்களை
நாவுகள் எழுதி,
மெய்கள் நெய்த நரம்புகள்
இசைத்துக் கிடந்ததில்
செவ்வரி வரைந்தன
கண்கள்.

கண்மாய்த் தலவில் மறுகும்
செவல்காட்டு ஓடைத் தண்ணீராய்
அய்ம்புலமும் செம்புலமாகி
ஊடல் முறித்த பொழுதுகளில்
சிலிர்த்துச் சிரித்தது
வாழ்க்கை.

பெயல்நீர் சுவைத்துப்
பசப்பை ஈன்றது
செவல் காடு.

குறுக்குச் சால் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலும்.


அனிதாவைத் தமிழச்சியாக நெஞ்சில் பதித்துக் கொண்டு தான் மாணவர்கள் போராடுகிறார்கள். 
அனிதாவின் கனவைத் தமிழ்த் தேசிய இனத்தின் கனவாகத்தான் பார்க்கிறார்கள்.
உயர்த்திக் கொண்ட சாதிப் பிள்ளைகளும், ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிள்ளைகளும் தமிழ்ப் பிள்ளைகளாய்க் கைகள் கோர்த்திருக்கும் களமாய்த் தமிழ் நிலம் மாறிக் கொண்டிருக்கிறது.
கூடங்குளம், தமுக்கம், மெரினா, நெடுவாசல், கதிராமங்கலம் என்று பரந்து விரிகிறது தமிழ்த் தேசிய அரசியல் உணர்வு.
இப்படி, சாதியைக் கடந்து தமிழர் என்ற பேருணர்ச்சி உருவாகும் போது தான் தலித்திய அடையாள அரசியல் பேசுவோர் தமிழ்த் தேசிய வெறுப்பு அரசியலை உமிழ்ந்து குறுக்குச் சால் ஓட்டுவார்கள்.
அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களை உள்வாங்கி சுயவிமர்சனம் செய்து கொள்வது தமிழ்த் தேசியத்தின் முன் நிபந்தனை தான். இந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தமிழ்த் தேசியம் நகர முடியாது தான். ஆனால், தமிழ்த் தேசியத்தின் மீதான வெறுப்பும் காழ்ப்பும் மட்டுமே விமர்சனங்களாக ஆகிவிடுமா?
சாதியம் தமிழ்த் தேசியத்தின் தீர்க்க வேண்டிய பிரச்சினை தான். இது ஒரு தரப்பினரால் மட்டும் தீர்க்கும் அல்லது தீர்ந்து போகும் பிரச்சினையும் அல்ல. இரு தரப்பினரும் தீர்க்கும் பிரச்சினைகள் தமிழ்த் தேசியத்தில் உண்டு. இந்நிலையில், இரு தரப்பும் அய்க்கியப்பட்டுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தும் போக்குகள் சாதியவாதிகளிடம் இருப்பதைப் போலவே, தலித்திய அடையாள அரசியல் பேசுவோரிடமும் இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பேர்தான் குறுக்குச் சால் அரசியல் என்பது.
இது போன்ற குறுக்குச்சால் வாதங்கள் இருக்கும் வரை தமிழ்த் தேசியம் எட்டாக்கனி தான்.
ஆயினும்,
உயர் சாதித் திமிரை ஒழித்துக்கட்டுவதும் உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவதும் நடந்தே தீரும்.
இது நடக்கக் கூடாது என சாதியவாதிகள் நினைப்பதுபோலத்தான், தலித்தியம் பேசுவோரும் நினைக்கின்றனர்.
ஆயினும்,
தமிழ்த் தேசியத்தை இவர்களது கைகளால் மறைத்து விட முடியாது. அது, வெறும் கற்பனையானதும் கிடையாது.

ஈசப்பால்.


தட்டான்கள் தாழப் பறந்து
தப்பாமல் மழை பெய்து
நிலமெல்லாம் குளிர்ந்து கிடக்கும்
வெயில் பொழுதுகளின்
புழுதிக் காட்டில்
குறுக்கும் நெடுக்குமாய்ப் பறந்தன
கரிச்சான் குருவிகள்.

ஈச ஈசானே
ஈசக் கரையானே
ஙொப்பனும் ஙோத்தாளும்
தண்ணிக் கரையீல
செத்துக் கெடக்காக..
சில்லானக் கூட்டிக்கிட்டு
சிலுக்கு சிலுக்குனு ஓடியாவென்ற
உதடுகள் குவித்த
ஊதலிசை கேட்டு
மொது மொதுவெனப்
புற்றுவாயில் பூத்தன
ஈசல்கள்.

மண்ணின் அருவிபோல்
முன்டியடித்துப் பூத்து
சட்டென மேலே பறந்து
இறக்கை உதிரக்
கீழே விழுந்து
அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன.
ஈசல் வயிற்றுப்
பால் கவுச்சியில்
கசிந்து கிடந்தது
நிலத்தாளின் முலைப்பால்.

தவிப்பு.


முன்னத்தி ஏராய்
சால் பிடித்த
அப்பாவின் உழவுகள்,
நிலத்தில் வரைந்த
கோட்டோவியங்கள்.

வியர்வை கோதிய
தளர் மண்ணில்
ஈரம் பருகிய விதைப்புகள்,
அம்மா வரைந்த
வெள் முளைக் கோலங்கள்.

உழைப்புச் சொற்களால்
நிலத்தை எழுதிப் போன
அப்பனும் ஆத்தாளும்
நெடும்பனைக்
காடு நினைத்தே
தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்.

மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்

இளம் எழுத்தாளராய்ப் பயணிக்கத் தொடங்கிய காலத்திலேயே விருது பெற்றிருக்கும் மனுசியைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பை மனுசியின் ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் நூலே தந்திருக்கிறது.

காதலை, காமத்தை, நட்பை, ஆண் துணை இன்மைமையை, நண்பர் பிரிவை, நண்பர் மரணத்தை, நட்பின் ஊடலை என பெண் ஆண் உறவுகளின் உணர்வோட்டத்தைக் கவிதைகளில் புலப்படுத்தியிருக்கும் மனுசியின் கவிதை மொழியானது தமிழின் பெண் மொழி மரபைக் கட்டமைத்த வெள்ளி வீதியார், அவ்வை, புனிதவதியார், நாச்சியார், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோரின் கவிதை மரபைப் பின்பற்றி நவீனப் பெண் மொழியாய் வடிவம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மனுசியின் மிகப் பெரும் பலமாய் அமைந்திருப்பது மிக இலகுவானதும் எளிமையானதுமான நேர்த்தியானதுமான மொழிப் புலப்பாடு தான். அதே போல, கவிதைப் பாடுபொருளுக்குத் தேர்ந்து கொண்ட களங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. பெண்ணின் தன்னிலைப் பாடுகளை மட்டுமே கவிதையாக்காமல், சமூகத்தின் இதரப் பாடுகளையும் கவிதையின் பாடுபொருளாகக் கட்டமைத்திருப்பது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

காவிமய எதிர்ப்பு, உணவுப் பண்பாட்டு உரிமை ஆதரவு, ஈழ விடுதலை ஆதரவு, மரண தண்டனை எதிர்ப்பு, சாதிய ஆணவப் படுகொலை எதிர்ப்பு, இயற்கை வளச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய மற்றும் பெண் ஒடுக்குமுறை எதிர்ப்பு எனப் பல வகை எதிர் மரபுக் கதையாடல்களையும் மாற்று மரபுக் கதையாடல்களையும் முன்வைத்திருப்பது மனுசியைப் பெண் கவிஞராக மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வு மிக்க கவிஞராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறது.

உயிர்த்தறுப்புகள்


நிலமே கதியென்று
உழைத்துக் கிடந்தவர்களின்
கையளவுக் காணிகளை
அதிகாரக் களவாணிகள்
களவாடிய பின்பும்,
குத்தகை வாரத்துக்கும்
கொத்துக்கும் கூலிக்குமாய்
உழைத்து மாய்ந்திடத்
தஞ்சமடைந்த ஆவிகளின்
தொப்பூள்க் கொடிகள் யாவும்
அந்த நிலத்தையே தான்
சுற்றிக் கிடந்தன.

கருதறுப்பு
களம் மாறிப் போனாலும்,
கழுத்தறுப்பு இழவுகள்
பல சுமந்தாலும்,
நிலத்தறுப்பு பொறுக்காது
மாங்கு மாங்கென்று
உழைத்த மேழியரின்
உயிர்த்தறுத்துக் கொன்ற
அதிகாரப் பயங்கரவாதம்,
கீழ்வெண்மணித் தீயாக
எரிந்து கொண்டிருக்கிறது;
தாமிரபரணி ஆறாக
ஓடிக் கொண்டிருக்கிறது
இன்னும்.
*
ஏர் மகாராசன்

காலடித் தடம்.


ஒத்தையடிப் பாதையில்
முன்னத்திலும் பின்னத்திலுமாய்
நிழல் கோதிப் பயணித்த
கால் தடங்களில்
புற்கள் முளைக்கத்
தயங்கிக் கிடக்கின்றன
மண் அப்பிய
பாதங்களை நினைத்து.

அகலப் பரப்பியிருக்கும்
நெடும் பாதைகளில்
தனித்தலையும் பயணிகள்
தேடும் பாதையைத்
தொலைத்துத் தவிக்கிறார்கள்.

காலம்
மனிதத் தடங்களை
அழித்துக் கொண்டே வந்தாலும்,
தொட்டில்களுக்குள் உதைத்துக் கொண்டு
கதைகள் பேசுகின்றன
இளம் பாதங்கள்.

நிலப் படுகொலை.


குடிக்கத் தண்ணீரும்
வடிக்கச் சோறும்
ஈன்று புறம் தரும்
நிலத்தாளின் நெஞ்சாங்குழியில்
துளைகள் பல போட்டு
உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும்
கொத்துக் குழிகள்
நிலப் படுகொலையின்
படு களங்கள்.

நிலம் காக்க
இங்குமோர் இனம்
அழுது கொண்டிருக்கிறது
இப்போது.

உப்பளக் காணி.


கூடுகள் கட்டிக் கொள்ள
ஈந்த கிளைகளின் நிழலைச்
சேதாரப்படுத்திப் போயின
வன் பருந்துகள்.
இறுகிய வன்றெக்கை முகத்திலிருந்து
தெறித்த பார்வைக் கங்குகள்
மனக் கூட்டின் ஆவியைச்
சுட்டுப் போட்டது.

இறக்கை முளைக்காத
இளங் குஞ்சுகள்
பிய்ந்த கூட்டுக்குள்
ஒடுங்கிக் கிடக்கின்றன.

கொத்தப்பட்ட காயத்தைச்
சொல்லிச் சொல்லி
மடி நனைக்க
தேக்கி வைத்த
அழுகை ஈரம்,
வெறுங் காற்றில்
உலர்ந்து போனது
உப்பளக் காணியில்
உழுது போட்ட தொளி போல.

வாழ்க்கைப் பாடு.


மாடுகள் இழுத்து
சக்கரங்கள் உருளும்
கட்டை வண்டிகளின் பின்னே கால்கள் உராயப்
பாரம் தொங்கிப் பயணிக்கையில்
வாழ்வின் பாரம்
இறங்கிக் கொண்டது.

கோடையில் வற்றிய கண்மாய்க் களிமண் பிசைந்து
காளைகள் வனைந்து
குண்டு மணிகளால்
கண்கள் ஒட்டுகையில்
உயிர் பெற்ற காளைகள் தழுவிக் கொண்டன.

கருவேல முள்ளில்
பனையோலை துளைத்து
ஓடிச் சுழற்றி
கன்னங்களை வருடும் காற்று
மூச்சில் நுழைந்து
வெக்கை தணித்தது.

ஈக்கிகள் சொறுகப்
பனைகள் ஏறி
குழை நொங்குக் கண்களை நோண்டித் தின்று,
நொங்கு வண்டியை
கவ்வையில் உருட்டியதில்
பாதைகள் தெரிந்தன நிறைய.

ஈச்ச மர இலைகள் கிள்ளி
உள்ளங் கைகளில்
சுருட்டி ஊதிய பீப்பிகள்
இசை கற்றுத் தந்து போயின.

அலைந்து திரிந்த வெய்யிலில்
நிழல் அள்ளிப் பருகியபோது
இனித்துக் கிடந்தது
வாழ்க்கை.

மண்ணோடு மண்ணாய்
புழுதி படிந்த காலமே
வாழ்வெனத் தெரிகிறது இப்போது.

அதுவே வாழ்க்கை

இதுவே பிறந்த நாளாகட்டும்.


அஞ்சாவது படிச்சு முடிக்கிற வரைக்கும் எனது பிறந்த நாள் இதுவெனத் தெரியாது. உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துல அஞ்சாவதுக்கு மேலப் படிப்பு கெடயாதுங்குறதுனால, ஆறாவது மேக் கொண்டு படிக்கத் தோதாக ரெக்காடு சீட்டுங்கிறது தரப்போறதாச் சொல்லி வீட்லருந்து அப்பனையோ ஆத்தாவையோ கூட்டி வரச் சொன்னாரு பெரிய வாத்தியாரு.
வயக்காட்டுக்குக் கெளம்பிக்கிட்டுருந்த அம்மாகிட்ட போயி நெலவரத்தச் சொன்னப்போ, கஞ்சித் தூக்கு வாளியோடயே பள்ளிக்கூடத்துக்கு வந்தா அம்மா. பெரிய வாத்தியாரப் பாத்த ஒடனே வணக்கமுங்கய்யான்னு சொன்னதோடேயே ரெண்டு கையெடுத்தும் கும்பிட்டா.
ஒங்க பய்யன மேக் கொண்டு படிக்க வையுங்கம்மான்னு சொல்லிக் கொண்டே அம்மாவோட எடது கைப் பெருவிரலப் பாத்து இங்க கொண்டாங்கன்னு சொல்லி ரெண்டு எடத்துல ரேக வச்சு எடுத்தாரு. அந்தப் பொத்தகத்துலருந்து ஒரு பாகத்த கிழிச்சு எங் கையில கொடுத்து நல்லா படிக்கனுமுடா மகராசான்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, அம்மா கண்ணுல பொல பொலன்ன்னு கண்ணீரு வந்துருச்சு.
நாங்க தாய்யா கை நாட்டா இருந்து கருமாயப்படுறோம். எம் புள்ளயாவது படிச்சு ஆளாகனுமுங்கய்யா, நீங்க தான் இவன எங்கயாச்சும் சேத்து விடுனும்னு சொல்லி முடிச்சா. பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் போயி இதக் குடுத்துச் சேருங்கன்னு சொல்லி அனுப்பி வச்சாரு.
வாடா தம்பின்னு கையப் புடிச்சி அழைச்சா அம்மா. ஒங்க அப்பங்கிட்ட போயி இந்த நெலவரத்த ஒழுங்கா சொல்லனுமுடா தம்பி, வீட்டுக்குப் போயி கஞ்சியக் குடுச்சுப்புட்டு வயக்காட்டுக்கு வந்துருப்பான்னு சொல்லிப்புட்டு குறுக்குப் பாத யில நடந்து போயிட்டா.
வீட்டுக்கு வந்ததுமே மஞ்சப்பய்யில கொண்டாந்தத எடுத்துப் பாத்தேன். பதிவுத் தாள்னு பெருசா அச்சாகி இருந்துச்சு. எம் பேரு அவ்ளோ அழகா எழுதி இருந்துச்சு. பிறந்த நாள்ங்கிறதுக்கு நேரா 26.05.1978 ன்னு எழுதி இருந்தது. வீட்டுச் சொவுத்துல தொங்கிக்கிட்டு இருந்த நாக் காட்டித் தாளுலயும் 26.05.88 என்று இருந்தது. அன்னிக்குத் தான் என்னோட பிறந்த நாள் இதுவென்றே தெரிந்தது. மனசுக்குள்ள அவ்ளோ உற்சாகம்.
நம்மளோட பொறந்த நாள் இன்னிக்குத் தான்டான்னு நெனச்சு மனசு அப்டி ஒரு குதி குதிச்சுக்கிட்டே இருந்துச்சு. அஞ்சு காசு பத்து காசுமா மண்ணு உண்டியலுல சேத்து வச்ச காச வெளக்க மாத்துக்குச்சிய வச்சு நோண்டி எடுத்ததுல கொஞ்ச காசு சேந்துச்சு. நேராப் பொட்டிக் கடயில போயி ரெண்டு கை நெறயா ஆரஞ்சு மிட்டாய்கள வாங்கிக்கிட்டு நடயக் கட்டுனேன்.
கோட்டப் புஞ்சப் பாதயில நடந்து போயிக்கிட்டே ஒவ்வொரு மிட்டாயா வாயில போட்டு சப்பிக்கிட்டே போனதுல முக்கா மிட்டாய்களும் தீர்ந்து போச்சு. வயக்காட்டுத் தலவு வந்ததுக்கப்புறந்தான் அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் கொடுக்கனும்னு தோணுச்சு. போறப்பவே, கடலச் செடிக்குத் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்தாரு அப்பா.
வாய்க்கால்ல தண்ணி வரத்துக் கொறஞ்சு போனதப் பாத்தவரு, அங்கிட்டு வா மட எதுவும் ஒடஞ்சிருந்தா அடச்சுப்புட்டு வாடான்னு சொன்னாரு அப்பா. ரெண்டாவது பாத்தியில வாமட ஒடஞ்சி தான் இருந்துச்சு. கையில மிட்டாயி இருந்ததுனால, காலால மண்ணள்ளி அடச்சுக்கிட்டே இருந்தேன். வாய்க்காத் தண்ணி பொருமி வந்ததால கால் மண்ணு கரைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.
இதப் பாத்த அப்பனுக்குக் கடுப்பு வந்து, கையில மண்ணெடுத்து அடடா பேப்பயலேன்னு கத்துனாரு. கொண்டாந்த மிட்டாய வாயில போடவும் மனசில்ல, வரப்புல வைக்கோவும் மனசில்ல.
வாய்க்காத் தண்ணியிலேயே தளக் பொளக்னு ஓடிப்போயி அப்பாக்கிட்ட நாளஞ்சு ஆரஞ்சு மிட்டாய நீட்டி, அப்பா இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்பானு சொன்னேன். எதாவது நமக்கு வாழ்த்துச் சொல்வாருனு பாத்தா, ஒடஞ்ச வா மடய அடைக்கிறத விட்டுப் புட்டு வந்ததுமில்லாமப் பொறந்த நாளு பொடலங்கா நாளுன்னு சொல்லிக்கிட்டு ஓடியார. ஒன்னயலாம் ஒதைக்கனும்டான்னு சொல்லி மம்பட்டியத் தூக்குனாரு. பயந்து போயி வாய்க்கா தண்ணிக்குள்ளேயே விழுந்துட்டேன். அப்பாவும் பதறியடிச்சுத் தூக்கி விட்டு சேறெல்லாத்தையும் அலசி விட்டாரு.
உள்ளங்கையில இருந்த மிட்டாயி பூராம் நனஞ்சே போச்சு. முட்டி முட்டி அழுகையா வந்துச்சு. அழுதே விட்டேன். கண்ணீரத் தொடச்சு விட்டு அப்பா கேட்டாரு, வைகாசி மாசத்துல போயி இன்னிக்குப் பொறந்த நாள்னு யாருப்பா சொன்னதுன்னு. பள்ளிக் கோடத்து ரெக்காடு சீட்டுல இருக்குன்னு சொன்னேன். இன்னிக்கி இல்லப்பா ஒன்னோட பிறந்த நாள்னு சொல்லி ஒட வாமடய அடைக்கப் போயிட்டாரு. நானும் மனசுக்குள்ள அழுதுக்கிட்டே கெணத்துக் குடிசைக்குப் போனேன்.
பழுத்து விழுந்திருந்த தென்னங்கீத்தைக் கிழித்துக் கொண்டிருந்தாள் அம்மா. மொகம் கொறாவிப் போயிருந்த என்னைப் பாத்து அவளும் கலங்கிப் போனாள். நான் என்னிக்கிமா பொறந்தேன்னு கேட்டேன்.
காத்திக மாசம் வெளக்குப் போட்ட அன்னிக்கி வெள்ளிக் கெழம பொறந்தே. அன்னிக்குச் சரியான மழ. நம்ம வீட்டுப் பசு மாடு ரெண்டு கன்னு ஈனுச்சு தம்பின்னு பெரும பொங்கப் பேசுனா. அது என்னிக்கினு தெரியுமான்னு கேக்கவும், அதாந்தம்பி திருக்கார்த்திகையன்னிக்கினு திரும்பவும் சொன்னா.
என்னோட பொறந்த நாள எழுதியே வக்கிலியா? இன்னிக்கி பொறந்ததா ரெக்காடு சீட்டுல இருக்குன்னு சொன்னப்ப, இந்த மாசத்துல நீ பொறக்கலாப்பான்னு பட்டுனு சொல்லிப்புட்டா. எனக்கு அழுகை அழுகையா வந்தது. வாயில் தின்றிருந்த மிட்டாய்கள் கசப்பது போலவே இருந்தது.
பிறந்த நாள் இதுவென்று தெரிந்த அந்த நாளே இது பிறந்த நாள் அல்ல என்று தெரிந்த நாளும் அது தான். ஒரு நாளுக்காக நான் அதிகமாய் அழுததும் காயம் பட்டதும் அது தான்.
பிறந்த நாள் என்று எழுதியிருக்கிற அந்த நாளின் மீது எந்தப் பற்றுதலும் பிடிப்பும் ஈர்ப்பும் ஒட்டுதலும் இல்லாமல் போயிற்று. என்றாலும் என் பிற்காலத்திய ஆவணப் பதிவுகள் அனைத்திலும் இன்றைய நாளே பிறந்த நாளாகப் பதியப்பட்டிருக்கிறது. பிறந்த நாள் இதுவல்ல என்றான பிறகு இந்த நாளை மனதார ஏற்றுக் கொள்ளாமலே தான் இதுவரையிலும் இருந்தேன். அன்றிலிருந்து இன்று வரையிலுமே எனது பிறந்த நாள் இதுவென்று நான் கருதியதுமில்லை, கொண்டாடியதும் இல்லை. நண்பர்கள், உறவுகள், மனைவி, பிள்ளைகள் என எவருக்குமே இந்நாள் பிறந்த நாள் என்று தெரியாது. நானும் இதுவரை சொல்லியதில்லை.
வாழுகிற வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்குகிற ஒவ்வொரு நாளும் கூட நமக்குப் பிறந்த நாள் தான் என்றேதான் இதுவரையில் நினைத்திருந்தேன். இனிமேலும் அப்படித்தான். எனினும், தாய் கொடையளித்த நாள் எதுவென்றே தெரியாமல் போயிற்று.
ஆனாலும், பிறந்த நாள் இதுவென்று பதிந்திருக்கும் இந்நாளில் முகநூல், புலனம், குறுஞ்செய்தி, செல்பேசி அழைப்புகள் வாயிலாகப் பிறந்த நாள் வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருக்கும் தோழமை உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என உள்மனம் சொல்கிறது. ஆகையால், இன்றிலிருந்து இந்த நாளையே பிறந்த நாளாக மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
இந்த நாளில் எனக்கு வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருக்கும் அனைவருக்குமே எனது அன்பும் நன்றியுமே கைமாறு.
இந்த நாளை, பொருளுடையதாக்கும் வகையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைக் கொடையளிக்கும் வகையில் உறுதி மொழிப் படிவம் வாங்கி வந்திருக்கிறேன்.
உங்களது வாழ்த்தோடு இந்த நாளைப் பொருளுடைய நாளாக ஆக்கி இருக்கிறேன்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி.





நான் பிறந்து வளர்ந்ததும் கல்வி பயின்றதும் மதுரையைச் சுற்றியது என்றாலும் கூட, பணி நிமித்தமாகத் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியும் இடம் பெயர்ந்தும் குடும்பச் சூழலைத் தகவமைத்துக் கொண்டேதான் வந்திருக்கிறேன். அதனால்தான் புதிய புதிய நிலச் சூழலையும் வாழ்வியலையும் மனிதர்களையும் பண்பாடுகளையும் உள்வாங்கிக் கற்றுக் கொள்ளவும் பகிரவுமான வாய்ப்புகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. பெரும்பாலும் சிற்றூர்ப்புறங்களைச் சார்ந்தே எனது வெளியை நெருக்கப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த முனைப்புதான் பண்பாட்டுப் பன்மை வெளிகளை இன்னும் நெருக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ் நிலம் பன்மைப்பட்ட சூழல் வெளிகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்மை வெளிதான் பல்வேறுபட்ட மனிதக்குழுக்களை, இனக்குழுக்களை, சாதிகளைத் தகவமைத்துத் தகவமைத்து இனம் என்கிற வளர்ச்சிக்கட்டம் உருவாகக் களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.  தமிழர் என்கிற தேசிய இனத்தின் அடையாளம் என்பது பன்மை அடையாளங்களின் கூட்டுத் தொகுப்பு தான். இந்தப் பன்மை அடையாளங்களின் கூட்டுறவும் உயிர்ப்பும்தான் தேசிய அடையாளத்திற்கு வலுவையும் வாழ்வையும் அளித்துக் கொண்டிருக்கின்றன. 

இன்றைக்கு நாம் அடையாளப்படுத்துகிற தேசிய இனத்தின் அடையாளங்கள் பன்மை வெளியின் ஏதாவதோர் அடையாளங்கள்தான். அதிலும் குறிப்பாக, ஒன்றின் அடையாளத்தை மற்றவையும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் மட்டுமே அது தேசிய இனத்தின் அடையாளமாய் ஏற்பிசைவு பெற்றிருக்க முடியும். அந்த வகையில், பன்மை வெளியில் செழித்து வளர்ந்து வந்த – வளர்ந்து வருகிற தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் நிறைய உண்டு. அவற்றுள், ஏறு தழுவல் என்கிற மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடும் உள்ளடங்கும்.

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் எனும் கலித்தொகைச் சொல்லாடல் உயிர்ப்பாய் எழுச்சி பெற்றதைத் தனித்த ஒரு பண்பாட்டின் எழுச்சியாக மட்டுமே பார்க்க முடியாது. தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிற  பன்மைப் பண்பாடுகளின் கூட்டு எழுச்சியாகவும் பார்க்கப்பட வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற திணை மரபுகளும் நிலச் சூழலும் பொழுதுகளும் கருப்பொருட்களும் உரிப்பொருட்களுமேகூட பன்மையின் கூட்டுத் தொகுப்பாகத்தான் தமிழ் மரபில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

விலங்கினங்களில் மாடுகள் மட்டும்தான் மனிதர்களோடு நெருக்கமாய் உறவாடும் குணவியல்புகளைப் பெற்றிருக்கின்றன. அதனால்தான், அவை குறிஞ்சி முல்லை மருதம் பாலை என்கிற நால் நிலத்து மனிதர்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பண்பாட்டுப் புலப்பாடுகளோடும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. (இதைக் குறித்த விரிவான தரவுகள் நான் எழுதியிருக்கும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூலில் உள்ளன.) அதனால்தான், மாடு தழுவல் குறித்த நிகழ்த்துப் பண்பாட்டிற்கான மீட்பெழுச்சி தமிழ் நிலம் முழுமையிலும் மட்டுமல்லாமல் தமிழர் வாழ்கிற அயலக மண்ணிலும்கூட எழுந்து முடிந்திருக்கிறது.

மாடு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதில் உலக வல்லாதிக்கப் பொருளியல் நிறுவனங்கள் குறியாய் இருந்தன. இந்திய அதிகார நிறுவனங்களும் இதற்குத் துணை நின்றன. மாடு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதற்குப் பின்னால் அவற்றுக்குத் திட்டவட்டமான பொருளியல் சுரண்டலும் பண்பாட்டு மேலாதிக்க நோக்கமும் இருந்தன. அதே வேளையில், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் தலித்தியவாதிகள், பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள், நவீனத்துவ மற்றும் பின்னை நவீனத்துவ ஆய்வாளர்கள், பெண்ணியவாதிகள் எனப் பல தரப்பட்ட வகையினரும் இயக்கங்களுமேகூட மாடு தழுவல் பண்பாடு தடை செய்யப்பட்டதை ஆதரிக்கவே செய்தனர். 

ஒரு பண்பாடு முற்போக்கானதாகவோ பிற்போக்கானதாகவோ இருந்தாலும்கூட, உலக வல்லாதிக்க நிறுவனங்களும் பார்ப்பனிய சக்திகள் உள்ளிட்ட இந்திய அதிகார நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தடை செய்திருந்த ஒரு பண்பாட்டு அடையாளத்தை, அதிகாரத்தையும் பார்ப்பனியத்தையும் உலக வல்லாதிக்கத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தரப்பினரும்கூட ஆதரித்து வந்தனர். கூடவே, மாடு தழுவல் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தியும் இழிவுபடுத்தியும் வந்தனர். அந்தத் தரப்பெல்லாம் அவமானப்படும்படியாகவும், அவர்களது நினைப்பும் கருத்தெல்லாம் தவறானது என்பதையும் முகத்தில் ஓங்கி அறைந்து சொல்லிக் காட்டியது மாடு தழுவல் பண்பாட்டு மீட்டெழுச்சிப் போராட்டம். தமிழ்நாடெங்கிலும் நடைபெற்று முடிந்த இப் போராட்ட எழுச்சி குறித்துப் பல்வேறுபட்ட தரவுகளும் உரையாடல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போராட்டக் களமும் பன்முகப்பட்ட படிப்பினைகளைத் தந்துள்ளன. 

தமிழ் வளர்த்த மதுரை எனச் சொல்வதெல்லாம் வெற்றுச் சொற்களல்ல என்பதை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறது இப்போதைய மதுரையும். தமிழ் என்பது வெறும் மொழியை  மட்டும் குறிப்பதல்ல. இனத்தையும் நிலத்தையும் வாழ்வையும் பண்பாட்டையும் உற்பத்தியையும் குறிக்கிற குறியீட்டுச் சொல்லாய் விரிந்தளவில் பொருள் கொள்ளும்படியான புரிதலை வளர்த்தெடுப்பதன் தேவையை மதுரை மண் அடையாளப்படுத்தியிருக்கிறது எனச் சொல்வதில் தவறேதுமில்லை. மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலங்களில் நடைபெற்று வந்திருந்தாலும்கூட, அந் நிகழ்த்து வெளியை இக்காலம் வரையிலும் தக்கவைத்துக் கொண்டிருந்தது மதுரை மண்தான்.

சிற்றூர்ப்புறங்களில் நேர்த்திக் கடனாகவும் வழிபாட்டு வளமைச் சடங்காகவும் அந்தந்த ஊர்களில் நிகழ்த்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகளும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடத்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துப் பெருவிழாக் கொண்டாட்டங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் போயின. 

இந்திய ஒன்றிய அதிகார மய்யங்களையும், அரசமைப்பின் அரசியல்வாதிகளையும், அவர்களது வாக்குறுதிகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் வெறுமனே நம்பி ஏமாந்தது போல் இந்த ஆண்டும் அப்படிப் போய்விடக் கூடாது என்பதில் மதுரை மட்டுமல்ல, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சமூக அக்கறை மிக்க மாணவர்களும் இளைஞர்களும் மிகக் கவனமாய் இருந்தனர். இதைக் குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாக மிகத் தீவிரமாகப் பரப்புரைகள் செய்யப்பட்டன. 

மாடு தழுவுதல் நிகழ்வு இந்தாண்டு நடக்கிறதோ இல்லையோ அல்லது நடத்திவிட முடியுமோ முடியாதோ என்றெல்லாம் உறுதியிட்டுச் சொல்ல முடியாத மனநிலைதான் எம்மைப் போன்றவர்களுக்கு இருந்தது. ஆனாலும், மாடு தழுவல் பண்பாட்டின் வரலாற்றை, அதன் தேவையை எடுத்துரைத்ததோடு, மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்குப் பின்னாலிருக்கும் அதிகாரப் பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்ப்பதான பதிவுகளையும் வெளியிட்டுக் கொண்டு, மாடு தழுவல் பண்பாடு மீதான அவதூறுகளுக்கெல்லாம் மறுப்பும் பதிலும் சொல்லிக் கொண்டு, மாடு தழுவல் பண்பாட்டுக் கோரிக்கைக்கான போராட்டக் களத்திலும் பங்கெடுத்து வந்த போதெல்லாம் இப்பண்பாட்டு நிகழ்வை மீட்டெடுத்து விட முடியும் என்கிற நம்பிக்கை முழுமை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும், எமக்கான சமூகக் கடமையாகவே இதைச் செய்து கொண்டிருந்தோம். 

நான், இரபீக் ராசா, பெரியசாமி ராசா, சிறீதர் நெடுஞ்செழியன், அன்பரசு, சுனில், குமரன், அன்பே செல்வா, கல்லணை இளங்கோ, இளஞ்சென்னியன், வினோத் மலைச்சாமி, அன்பு தவமணி உள்ளிட்ட இன்னும் பல தரப்பினரும் மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவுப் பரப்புரையைத் தத்தமது வேலை முறைகளோடு செய்து வந்தோம். மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவுப் பரப்புரைகளைச் செய்து கொண்டிருந்த எம்மைப் போன்றோரைச் சாதியவாதிகள், சமூக ஊடகக் கொள்ளையர்கள், பண்பாட்டுப் பயில்வான்கள், வட்டாரத் திமிராளிகள், இனவாதிகள், இன வெறியர்கள், காட்டுமிராண்டிகள் என்றெல்லாம் பகடி செய்தார்கள். ஆனாலும், மதுரை மண் மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவான உணர்வலைகளையே பெரும்பான்மையாய்க் கொண்டிருந்தது. இருந்தாலும், அப் பண்பாட்டை  நிகழ்த்திட முடியுமா என்பதில் அய்யம் பெரும்பாலோருக்கும் இருந்து கொண்டேதான் இருந்தது.

வறட்சியும் பஞ்சமும் வந்து போன காலங்களிலும்கூட வறப் பொங்கல் (வறட்சிப் பொங்கல்) எனும் பேரிலான பண்பாட்டு உயிர்ப்பைச் சாகவிடாமல் காத்து வருகிறவர்கள் சிற்றூர்ப்புறத்துச் சாமானியர்கள்தான். இந்த ஆண்டும் மழை பொய்த்துப் போனது. பாவிய நாற்றாங்கால்களும் நடவு வயல்களும் காய்ந்து போயின. நிலத்தை நம்பிக் கிடந்த சம்சாரி வாழ்க்கை நொடிந்து போனது. மனமும் நிலமும் காய்ந்து கிடக்கையில் பொங்கலும் வந்து சேர்ந்தது. ஆனாலும், கண்ணீரும் கம்பலையுமாக வறப் பொங்கல் வைத்து மனதையும் பண்பாட்டையும் தேற்றிக் கொண்டனர். பஞ்சம் வரினும் வஞ்சம் சூழினும் பண்பாட்டை இழந்திடக்கூடாது என்கிற உள்ளுணர்வு எப்போதும் போலவே இப்போதும் கசிந்துகொண்டேதான் இருந்தது.  
  
இந்தப் பஞ்சமும் வறுமையும், சூழல் மாற்றத்தாலும் அயலார் வஞ்சகத்தாலும் அதிகாரச் சுரண்டல் முறைகளின் சீரழிப்புகளாலும் வந்ததுதான் என்றாலும்,  மழை வள நேர்த்திக்கடனாய்ப் பொங்கலை ஒட்டி நிகழ்த்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்படாமல் போனதால்தான் இந்தப் பஞ்சமும் வறுமையும் வரக் காரணம் எனச் சிற்றூர்ப்புறத்துச் சாமானியர்கள் கருதத் தொடங்கியிருந்தனர். இப்படியான உரையாடல்கள் சாமானியர்களின் நம்பிக்கையாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆழ்மனதின் இதுபோன்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறபோது  மண்ணை வாரித் தூத்தும் சாமானியரின் கோபமாய் மாறி விடுகிறது. இந்த நம்பிக்கைதான் மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிரான பெருங்கோபமாக மாறிக் கிடந்தது.

மதுரையில் மாடு தழுவல் பெருநிகழ்வு பொங்கலன்று முதலில்  அவனியாபுரத்தில்தான் தொடங்கும். அடுத்தநாள்       மாட்டுப் பொங்கலன்று   பாலமேடு, அதற்கடுத்த நாளே அலங்காநல்லூர். மதுரையைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும், அண்டை மாவட்டங்களிலும் அடுத்தடுத்து மாடு தழுவல் நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. பொதுவாக, மாட்டுப் பொங்கலன்றுதான் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாடு தழுவலை ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுவது உண்டு. இந்த ஆண்டும் இப்பண்பாட்டுத் தடைக்கு எதிராக ஒரு காளையையாவது அவிழ்த்துவிட வேண்டும் என்கிற கங்கணம் பெரும் பகுதி மக்களிடம் இருந்தது.

2017 சனவரி 14 பொங்கல் நாளில் மதுரை அவனியாபுரத்தில் மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிராகப் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் திரளத் தொடங்கினர். இவர்களோடு வெகுவான பொதுமக்களும் அணிதிரண்டனர். சாதிய மோதல்களும், பழிக்குப் பழிக் கொலைகளும் அடிக்கடி நிகழ்ந்த அதே அவனியாபுரம் மண்ணில், தமிழர் பண்பாட்டு உரிமை மீட்புக்காய் அணி திரண்டு வருவார்கள் என யாருமே நினைத்திருக்கவில்லை. அதேவேளையில், பண்பாட்டு மீட்புக்கான களப் போராட்டத் தொடக்கப் புள்ளியாக அவனியாபுரமே இருந்தது. பண்பாட்டு மீட்புக்கான அந்தப் போராட்டத்தின் குரல் இந்திய ஒன்றியத்தின் நடுவண் மற்றும்  மாநில அரசுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிரான குரலாகவும் அது இருந்தது. இந்த எதிர்ப்புக் குரலை எதிர்பார்க்காத அதிகாரத்தின் ஏவல்துறையினர் அடக்கி ஒடுக்க முனைகின்றனர். 

ஒரு கட்டத்தில், போராட்டத் தரப்பினருக்கும் ஏவல் தரப்பினருக்கும் மோதல் முற்றுகிறது. தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க முற்படுகிறது. ஆனாலும், அடக்கு முறைக்கு எதிராகவும் தடைக்கு எதிராகவும் குரல் கொடுத்துப் போராடியவர்கள் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. தோழர்கள் இரபீக் ராசா, கணேசன், தமிழ்தாசன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படுகின்றனர். இந்தப் போராட்ட உணர்வுத் தீ வெகு வேகமாகவே படரத் தொடங்கியது. 

அடுத்தநாள் சனவரி 15 மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டில் பெருந்திரளே கூடி இருந்தது. எப்படியாவது மாடுகளை அவிழ்த்துவிட வேண்டும் என்பதில் அனைவரும் குறியாய் இருந்தனர். அதே வேளையில், வாடிவாசல் வழியாய் எந்த மாடும் அவிழ்க்க முடியாத வகையில் அரசு எந்திரங்களால் தடுக்கப்பட்டன. அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் வாடிவாசல் வழியாய் மாடுகள் அவிழ்க்க முடியாமல் இருப்பது பண்பாட்டு அடக்குமுறை என்பதை மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் உணரத் தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க, மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் மதுரையைச் சுற்றியுள்ள பல சிற்றூர்ப்புறங்களில் எருதுக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல், மாடு விடுதல், மாடு அணைதல், சல்லிக்கட்டு போன்ற பல பெயர்களில் மாடு தழுவல் நிகழ்வுகள் அந்தந்தப் பகுதி மக்களால் தன்னெழுச்சியாக நிகழ்த்திக் காட்டப்பட்டன.

மறுநாள் சனவரி 16 அலங்காநல்லூர். மதுரையைச் சுற்றியிலிருந்து மட்டுமல்ல, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் சாரை சாரையாய் வந்து குவியத் தொடங்கினர். இங்கும் இவர்கள் கேட்டது வாடிவாசல் வழியாக அய்ந்து மாடுகளையாவது அவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான். இந்தியாவின் மற்ற பகுதிகளில் சட்டத்தை நிலைநாட்டுவதைக் குறித்தெல்லாம் கவலைப்படுகிறதோ இல்லையோ, இது போன்ற பண்பாட்டுத் தடைகளைச் சட்டப்படியாக நிலைநாட்டுவதில் குறியாய் இருந்தன அரசு எந்திரங்கள் அனைத்தும்.

மாலைப் பொழுது ஆனதும் கலைந்து போவார்கள் என்று பலரும் நினைத்திருக்க, கொட்டும் பனியிலும் அலங்கை மண்ணின் வெட்ட வெளியில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கூடவே அப்பகுதிப் பொதுமக்கள் என முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இரவு முழுக்க அதே இடத்தில் குழுமியிருந்தனர். வாடிவாசல் திறக்காமல் வீடு வாசல் போக மாட்டோம் என்ற முழக்கம் உறுதிபட ஒலிக்கத் தொடங்கியது இங்குதான். 

பசியிலும் பனியிலும் கிடந்தாலும், பண்பாட்டு மீட்டெடுப்புக்கான உணர்வுத் தீ அனையாமல் கண் விழித்துக் கிடந்த அந்த உணர்வுக் கோலங்கள்தான் தமிழர்களிடத்தில் எழுச்சிக் கோலத்தை உருவாக்கிய விதைகள். சனவரி 17 விடியற்காலையில் அரசு எந்திரம் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்த முனைகிறது. கைது செய்யப்பட்டோர் அனைவரையும் வாடிப்பட்டியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கிறது அரசு எந்திரம். இதுதான் பண்பாட்டு மீட்புக்கான எழுச்சிப் போராட்டமாக உருமாறத் தொடங்குவதற்கான உணர்வலைகளைத் தட்டி எழுப்பிய களம். இங்கு களத்தில் நின்று போராடியவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், கைது செய்தோரை விடுவிக்கவுமான குரல் அதேநாள் காலையில் மெரினாவிலும் ஒலிக்கத் தொடங்கியது. மெரினாவில் கூடிய தமிழர் எழுச்சி தமிழ் நாடெங்கும் பற்றிப் படர்ந்து உலகம் முழுமைக்கும் பரவியது.

அறப்போராட்டம் என்பதைச் சொல்லாக மட்டுமே கேட்டிருந்த தமிழ்ச் சமூகம், அச்சொல்லை உண்மையாகவே உயிர்ப்புடன் உலகுக்கே நிகழ்த்திக் காட்டியது இப்போதுதான். அறத்தாலும் மறத்தாலும் போராடி ஒன்றைப் பெற்று விட முடியும் என்பதற்குச் சான்றாய், தானே எடுத்துக் காட்டாய் உருமாற்றி நடத்திக் காட்டியது தமிழ்ச் சமூகம். தமிழ் நாடெங்கிலும் தமிழர்களின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் பல்வேறு வகையான படிப்பினைகளைக் கற்றுத் தந்திருக்கிறது.
பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி என வேறு வேறு பகுதிகளிலும் ஊர்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து வந்திருந்தாலும், மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவே உள்ளுணர்வு துடித்தது. போராட்ட எழுச்சி மிகத் தீவிரம் பெற்றிருந்த ஒரு நாளில் சனவரி 21 சனிக்கிழமை விடிகாலையில் மதுரைக்குப் பயணமாகக் கிளம்பினேன். பணி நிமித்தமாய் இப்போது குடியிருக்கும் செயமங்கலம் ஊரானது ஆண்டிபட்டிக்கும் பெரியகுளத்திற்கும் இடைக்காட்டில் இருக்கிறது. இந்த ஊரும், இதன் அருகாமையில் இருக்கும் வடுகபட்டி, மேல்மங்கலம் போன்ற ஊர்களும் சாதிய மோதல்கள் அடிக்கடி அதிகளவில் நடைபெறும் ஊர்கள். இந்த ஊர்களிலுமேகூட மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் அந்தந்தப் பகுதி மக்களால் நடத்தப்பட்டு வந்தன. அதனால், இந்த வழித்தடத்தில்  பேருந்துகள் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. அந்த வழியாகத் துள்ளுந்தில் வந்தவரைக் கைகாட்டி மறித்து அவர் பின்னால் ஏறிக் கொண்டு ஆண்டிபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். 

பாதித் தொலைவு போன பிறகுதான் மதுரைக்கும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என்பதைச் சொன்னார். ஆண்டிபட்டியிலிருந்தும் மதுரை செல்வதற்கான எந்தப் பேருந்தையும் காணவில்லை. இந்த வழித்தடத்திலும் பேருந்து போகவில்லை என்பதைக் கடைக்காரர் சொன்னார். ஏனென்று கேட்ட போதுதான், தேனியிலிருந்து மதுரை வரைக்குமான வழித்தடங்களில் இருக்கும் எல்லா ஊர்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு குட்டி யானை வண்டி வருவது தெரிந்தது. கை காட்டியவுடன் நின்றது. உசிலம்பட்டி வரைக்கும் போவதாகக் கூறி ஏற்றிக் கொண்டார் ஓட்டுநர். மதுரைப் போராட்டக் களத்திற்குச் செல்வதாகக் கூறியவுடன், வண்டி மாடு வச்சிருந்தாலாவது செத்த நிம்மதியா இருந்துருக்கலாம்ணே. இந்த வண்டிய வச்சுக்கிட்டு கருமாயப் படுறோம்ணே எனத் தமது வாழ்க்கைப் பாடுகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். 

உசிலம்பட்டியில் இறங்குகையில் இருபது ரூபாயை எடுத்து நீட்டினேன். நம்ம மாட்டுக்குத் தானணே போராடுறீங்க, சூதானமாப் பாத்துப் போயி வாங்கண்ணே எனக் கூறி வாங்க மறுத்துவிட்டார். அங்கும் எந்தப் பேருந்துப் போக்குவரத்தும் இல்லை. அங்கிருந்து செக்கானூரனி வரை செல்லக் கூடிய ஒரு பங்குத் தானியில் நானும் ஒருவனாகத் தொத்திக் கொண்டு சென்று, அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் என மதுரை வந்தடைந்த பின்புதான் தவிப்பெல்லாம் குறைந்து ஓரளவு நிம்மதி. 

ஆண்டிபட்டியிலிருந்து மதுரை வரைக்குமான வழித்தடங்களில் இருந்த ஊர்களின் முகப்பில் மக்கள் தங்களது உணர்வைக் காட்டும் வகையில் குழுமி இருந்ததைப் பார்க்க முடிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நேரலைகளைக் கவனித்துக் கொண்டே மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவு உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தொடர் வண்டி நிலையப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் அடியில் இளைஞர் கூட்டத்தினர் தெற்கிலிருந்து வந்த ஒரு தொடர்வண்டியை மறித்துப் படுத்துக் கிடந்தனர்.  துணிப் பதாகைகளால் கூடாரம் அமைத்து அதற்குள்ளிருந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

பெரியார் பேருந்து நிலைய நுழைவாயில் முகப்புச் சாலையில் திரண்டிருந்த  பெருங்கூட்டம் பீட்டாவுக்கு எதிராகவும் மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவாகவும் முழங்கிக் கொண்டிருந்தது. நட்ட நடு வெயிலில் தார்ச்சாலையில் நெகிழிப் பதாகைகளை விரித்துக் கடுஞ்சூட்டிலும் உட்கார்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்து தமுக்கம் திடலுக்குக் கிளம்பிப் போகையில், சிம்மக்கல்லையும் கோரிப்பாளையத்தையும் இணைக்கிற வைகை ஆற்றுப்பாலத்தின் மேலிருந்து மக்கள் கூட்டம் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா எனும் தண்ணீர்ப் பீய்ச்சுத் திருவிழாவிற்கு வந்து செல்லும் கூட்டம் போல மக்கள் கூட்டம் நிரம்பத் தெரிந்தது. அப்பாலத்திலிருந்து பார்த்தால் தத்தனேரித் தொடர்வண்டிப் பாலத்தில் மறிக்கப்பட்ட தொடர்வண்டி நின்று கொண்டிருந்தது. ஓடிய தொடர்வண்டியைத் தண்டவாளப் பாலத்தில் நிறுத்தி மறியல் செய்து பல நாட்களாக நகர விடாமல் செய்த பண்பாட்டுப் போராட்டத்தின் திமிலை வியப்பாய்ப் பார்த்த வண்ணம் இருந்தனர்.பாலத்தைக் கடந்து கோரிப்பாளையம் முத்துராமலிங்கம் சிலையருகே வந்தபோது சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய கூட்டம் ஆர்ப்பரித்து முழங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

பண்பாட்டு மீட்டெடுப்புக்கான மாணவர் இளைஞர்களின் போராட்டம் பொது மக்களின் போராட்டமாக மாறத் தொடங்கி இருந்ததைக் கண்கூடாகக் காண முடிந்தது. அய்ம்பதாண்டுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு எழுச்சி இப்போது நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டதில் எந்த மிகை உணர்ச்சியும் இல்லை என்பதை நேரில் காணும்போதே உணர முடிந்தது. 1967 மொழிக்காக, 2017 இனத்திற்காக என்கிற முழக்கம் சாலையின் ஓரங்களில் பெரிதளவில் எழுதப்பட்டுக் கிடந்தது. இதில் எவருடைய காலடித் தடங்களும் பட்டிருக்கவில்லை.   இதில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், நகரத்தினர், சாமானியர் எனப் பல வகைப்பட்ட பன்மை வெளிகள் சார்ந்த மனிதர்களும் தமிழர் என்பதாகவே ஒன்று கூடிப் போராடிக் கொண்டிருப்பது கண் முன் தெரிந்தது. சாதிய அதிகாரப் பண்பாட்டின் குறியீட்டு வெளியாய்ப் புனைவாக்கப்பட்ட மதுரையின் அவ் வெளி முழுமையும் தமிழரின் பண்பாட்டு மீட்புக்கான போராட்ட வெளியாய் உயிர்ப்படைந்து கிடந்தது. 

கோரிப்பாளையத்திலிருந்து புதூர் செல்லும் சாலையிலிருக்கும் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலை வரைக்கும், காந்தி அருங்காட்சியம் வரைக்கும் எனத் தமுக்கம் திடலைச் சுற்றியுள்ள மதுரையின் மய்ய வெளிகள் யாவும் தமிழர் பண்பாட்டு உரிமை மீட்புக்கான போராட்ட வெளியாகவே மாறிக் கிடந்தது. இப்பெருந்திரள் எழுச்சிப் போராட்டக் களத்தில் மாடு தழுவல் பண்பாட்டுக்கு மட்டுமான ஆதரவையும் குரலையும் மட்டும் பார்க்கவில்லை. தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் தொடர்பான  அனைத்துப் பிரச்சினைப்பாடுகளைக் குறித்துமாகப் பேசும் களமாகவும் மாறிப் போயிருந்தது. 

தமிழ் மொழி உரிமை, முல்லைப் பெரியாறு, காவிரி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, புதிய கல்விக் கொள்கை, உழவுக்குடிகளின் தற்கொலைச் சாவுகள், மீத்தேன் – நியூட்ரினோ திட்ட அபாயங்கள், தனியார் மயம், உலகமயம், பீட்டா போன்ற தொண்டு நிறுவனங்களின் தலையீடுகள், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் அக்கறையின்மை, தேர்தல் கட்சிகள், இந்துத்துவம், ஏகாதிபத்தியம், தமிழ்த்தேசியம், இயற்கை வேளாண்மை என இன்னும் எத்தனையோ பிரச்சினைப்பாடுகளைக் குறித்தும், அவற்றிலிருந்து மீண்டெழுவதைக் குறித்தும், மீட்டெடுக்க வேண்டியதைக் குறித்தும் மிகத் தீவிரமாகப் பேசப்பட்ட வெளியாகவே மதுரையின் போராட்டக் களம் அமைந்திருந்தது. அங்கு முழங்கியவையும் கைகளில் தூக்கிப் பிடித்த முழக்க அட்டைகளும் அதையே உணர்த்தின. சாதி கடந்து, சமயம் கடந்து, பாலினம் கடந்து, வர்க்கம் கடந்து, வட்டாரம் கடந்து திரண்டிருந்த அப் பெருங்கூட்ட எழுச்சியானது தமிழ் இனத்தின் எழுச்சியாகவே திகழ்ந்தது. 

தமிழ்க் கலை, இலக்கண, இலக்கிய மரபுகளாகட்டும், தமிழ் நிலத்தின் இயற்கை, வளங்கள், சூழல், தொழில் மரபுகளாகட்டும், தமிழ் மக்களின் வாழ்வியல், நாகரிகம், பண்பாடு போன்ற மரபுகளாகட்டும் அவை யாவுமே பன்மையின் கூட்டு மரபாகவே திகழ்கின்றன. இவை போலவே, மாடு தழுவல் மீட்புக்கான இந்தப் போராட்டமும் பல்வேறு வகையிலான கலை மற்றும் பண்பாட்டுப் பன்மைகளைத் தோள் சேர்த்து அரவணைக்கும் வெளியை வழங்கி இருக்கிறது. ஒரு பண்பாட்டு நிகழ்த்து வெளி மற்ற பண்பாட்டு நிகழ்த்தல்களுக்கும் இடமளிப்பதாக இருக்கும் போதே அது அனைவருக்குமான பண்பாட்டு வெளியாய் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புண்டு. மாடு தழுவல் பண்பாடு மற்ற பண்பாட்டையும் நிகழ்த்துவதற்கான களத்தைக் கொண்டிருந்தது என்பதற்கு அதற்கான போராட்டக் களமே சான்று.

மாடு தழுவல் பண்பாட்டு மீட்புக்கான இந்தப் போராட்டத்தைத் தம்மை வருத்திக் கொண்டு யாரும் முன்னெடுக்கவில்லை. ஒரு பண்பாடு நிகழ்வது என்பதே மனிதர்களை உந்தி எழச் செய்வதற்குத்தான். மாடு தழுவலுக்கான இந்தப் போராட்டத்தை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவதற்கான மற்ற பண்பாட்டு நிகழ்த்தல்கள் களத்தில் அரங்கேறின. திடீரென ஓர் அவசர ஊர்தி வருகிறது. அதிலிருந்து இரண்டு மூன்று பாடைகள் பெயர் எழுதி இறக்கப்படுகின்றன. ஓவென்று மாறி மாறி ஒப்பாரி வைக்கப்படுகிறது. நீர் மாலை எடுக்கிறார்கள். சங்கு ஊதப்படுகிறது. பறைகொட்டப்படுகிறது. 

அதிகாரம் சார்ந்த அத்தனை பேரின் படங்களும் அட்டையில் ஒட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. சாலையின் ஒரு சில இடங்களில் சுண்ணம்புத் துகள்களால் மாடுகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. ஒரு பக்கம் காரசாரமாக அரசியல் பேசுகின்றது ஒரு கூட்டம். இன்னொரு பக்கம் பெண்கள் கூட்டம். அந்தப் பகுதிக்குள்ளிருந்தும் பெண்கள் ஒருவர் ஒருவராக எழுந்து பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரி மாணவிகள் அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்களும் மாணவர்களும் நெரிசலை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே உணவுப் பொட்டலங்கள், தண்ணீர்க் குடுவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த மக்கள் வெள்ளத்தில் பசி யாருக்குமே இருந்திடாத அளவுக்கு உணவு வந்து கொண்டே இருந்தது. குப்பைகளையும் கழிவுகளையும் மாணவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தங்களைத் தாங்களே பல வகைகளில் ஒழுங்குபடுத்திக் கொண்ட பண்பாட்டுத் தகவமைப்பு செம்மையாய் உருக்கொண்டிருந்தது. 

உடம்பில் காளை உருவங்களை வரைந்து கொண்டு இளைஞர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். பறையாட்டம் ஒரு பக்கம், தவில் ஒரு பக்கம், சென்டை மேளம் ஒரு பக்கம். மாடாட்டமும் மயிலாட்டமும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டே இருந்தன. சிலம்பமும் களரியும் பல இளைஞர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். குறவன் குறத்தி ஆட்டமும், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் எனப் பல வகை ஆட்டங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தன. பெண்கள் கூட்டத்திலிருந்து கோலாட்டமும் கும்மியும் கொட்டி ஆடுவது நிகழ்ந்தது. 

சாலையின் ஓரத்தில் பல இளைஞர்கள் பச்சை குத்திக் கொண்டிருந்தனர்.  இன்னும் வேறு சில இடங்களில் ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளும், சேவல் சண்டைகளும் நடந்து கொண்டிருந்தன. இன்னும் நிறைய நிறையப் பண்பாட்டுப் புலப்பாடுகள் இந்தப் போராட்டக் களத்தில் வெளிப்பட்டன.

ஒரு பண்பாடு மற்ற இதரப் பண்பாடுகளையும் அனுமதிக்கிற சனநாயகப் பண்பு எதற்கிருக்கிறதோ அதுதான் அவ்வினத்தின் தேசியப் பண்பாடாய்த் தகவமையும் அடையாளத்தைப் பெற முடியும் என்பதற்கு இதுதான் சான்று. ஒரு பண்பாடு தமக்காய்ப் போராடுகிற போது, மற்றதின் வாழ்தலுக்கான போராட்டத்தையும் அனுமதிக்க வேண்டும். மாடு தழுவல் பண்பாட்டுப் போராட்ட வெளியானது மற்ற பண்பாட்டுப் பன்மையை நிகழ்த்துவதற்கான வெளியை நெகிழ்ந்து தந்ததையே கேளிக்கை வெளியாகக் கட்டமைக்க முயன்றனர் அறிவு சீவிகள்.

இந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஒற்றைப் பண்பாட்டு அதிகாரத்தை மாடு தழுவல் பண்பாடு மட்டுமல்ல, தமிழ் நிலத்தின் அத்தனை வகைப்பட்ட பன்மைப் பண்பாடுகளும் நிகழ்த்தி நிகழ்த்தியே தம் எதிர்ப்பைக் காட்டின. 

ஒன்றைத் தடை செய்யவோ ஒடுக்கவோ அழிக்கவோ முனையும்போது, அதன் தோழமைப் பண்பாடுகளும் எதிர்த்துக் களம் காணும் என்பதற்கு  இக்களமே சான்று. அவ்வகையில்,ஒற்றைப் பண்பாட்டுக்கு எதிரான பன்மைப் பண்பாட்டு வெளியின் போர்க்கள நிகழ்த்து வெளியாகவே மதுரை மண்ணின் போராட்டக் களம் வடிவமைந்திருந்தது. இரவானதும் ஊருக்குத் திரும்பப் புறப்படுகையில், சாலையின் ஓரத்தில் ஒரு பெரியவரும் பாட்டியும் தாங்கள் கொண்டு வந்திருந்த தூக்கு வாளியிலிருந்து புளியோதரைச் சோற்றை வாடிய முகங்கள் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். எதுக்குங்கய்யா வயசான காலத்துல இப்படி எனக் கேட்டேன். மனசு கேக்கல தம்பி, இதுவும் ஒரு நேர்த்திக் கடந்தான் என்றார். பண்பாடு இன்னும் உயிர் வாழும் தான். மாவோ சொன்னது போல் நூறு பூக்கள் பூத்தன. பன்மைப் பண்பாட்டு வெளிகள் எழுச்சி பெற்றன என்றே சொல்லலாம்.

மகாராசன், மக்கள்தமிழ் ஆய்வரண்
மதுரை.










சனி, 7 அக்டோபர், 2017

மகாராசன் : தமிழில் ஆடைகள்

மகாராசன் : தமிழில் ஆடைகள்

தமிழில் ஆடைகள்

தமிழால் இணைவோம் என்னும் எண்ணத்தை வணிக முழக்கமாய்க் கொண்டு ஆடைகளின் வழியாகவும் தமிழ் பரப்பும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர் சமூக அக்கறை மிக்க சில இளைஞர்கள். இலவம் எனும் பேரில் இணையத்தளத்தின் வாயிலாக தமிழ் ஆடைகளை வணிகப்படுத்தி வருகின்றனர். சென்னை நகரில் தமக்கான வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே, பகுதி நேரமாக இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் இவர்களின் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு உரியது.

நானும் இலவம் நண்பர் வினோத் அவர்களிடம் தொடர்பு கொண்டு சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை , யாதும் ஊரே யாவரும் கேளிர் , தமிழ் விதைப்போம் , பல வேடிக்கை மனிதரைப் போல வீழ்வேன் என்று நினைத்தாயோ போன்ற வரிகள் அச்சிடப்பட்ட ஆடைகளைக் கேட்டிருந்தேன். இலவத்திடமிருந்து நேற்று கிடைத்தது.

அனுப்பி வைத்த முறையும் , உள்ளே பிரித்துப் பார்க்கும் போது அவை தனித்தனிச் சுருக்குப் பைக்குள் வைக்கப்பட்டிருந்த விதமும், ஒவ்வொரு சுருக்குப் பையிலும் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்ததும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. கூடவே சிகப்புத் தண்டுக் கீரை விதைகள் ஒரு கை நிறையும் அளவுக்கு இணைத்து அனுப்பப்பட்டு இருந்தது. கிடைக்கப்பெற்ற ஆடைகளும் நேர்த்தியாக இருந்தது.

ஆடைகள் கிடைத்த பிறகு இலவம் வினோத் அவர்களிடம் கிடைக்கப்பெற்றதையும் அனுப்பி வைக்கப்பட்டதற்கு நன்றி சொல்லியும் பேசியபோது, இதை விட்டு விடாமல் செய்யுங்கள், உங்களது தமிழ்ப்பணி கண்டிப்பாக நினைக்கப்படும் என்று சொன்னபோது, உங்களது இந்த வார்த்தைகளே எங்களது ஆத்மாவ சந்தோசப்படுத்துதுங்க. வயிறு நிறைய சாப்பிட்ட ஒரு திருப்தி இருக்கு. நிச்சயம் இத விடாம செய்வோமுங்க என்று பதில் அளித்த அந்தச் சொற்களில் நிறைய நம்பிக்கை தென்பட்டது.

தமிழ் வாழும் இவர்களைப் போன்றவர்களால்.
வாழ்த்துக்கள்.

தமிழ் ஆடைகள் உங்கள் வீடு தேடி வர கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இலவம் வினோத்
8681994411


வியாழன், 8 ஜூன், 2017

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் : தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி.


தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்போ, மக்களோ, மொழியோ, பண்பாடோ, தொழிலோ, வாழ்வியலோ ஒரே தன்மை கொண்டவை அல்ல. தமிழக நிலப்பரப்பும் தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பரப்பும் கூட பன்மையின் இருப்பிடமாகவே இருக்கின்றது. இங்கே இருக்கிற ஒவ்வொரு சமூகக் குழுவினருக்கும் ஒரு தனித்த பண்பாட்டு அடையாளமும் இருக்கத்தான் செய்கின்றது.

பசி என்கிற உயிரியல் தேவை தான் அனைத்து உயிரினங்களின் இருப்பை உறுதி செய்கின்றது. ஒவ்வோர் உயிரினமும் தத்தமது புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தான் தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. மனித வாழ்வும் அவ்வாறு தான்.

வட்டாரம், தொழில், பொருளாதாரம், உடலியல், உளவியல், பண்பாடு, வாழ்நிலை சார்ந்து ஒவ்வொருவரும் ஒரு வகையான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாகி இருப்பது இயற்கை. அந்த வகையில், அந்த உணவுப் பழக்கம் சைவம் எனும் காய்கறி உணவாக இருக்கலாம் அல்லது அசைவம் என்கிற புலால் கறி உணவாக இருக்கலாம். புலால் கறியிலேயே கோழியாகவோ ஆடாகவோ மாடாகவோ மீனாகவோ கூட இருக்கலாம்.

ஒருவரின் உணவுப் பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்று. மனிதரில் மேல் கீழ் உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு உயர்த்திக் கொண்ட சாதிகள், மதங்கள் மேலானதாகவும், அச்சாதிய, மத  வட்டத்திற்கு வெளியிலிருக்கிற அனைத்தும் கீழான சாதிகளாகவும் மதங்களாகவும் கருதப்படுகிற பொதுப்புத்தி எனும் மேலாதிக்கச் சிந்தனை தான் வெகுகாலமாகத் தம் அதிகாரத்தைப் பரப்பிக் கொண்டு வந்திருக்கிறது. அத்தகைய காவி பயங்கரவாதம் தான் பார்ப்பனியப் பண்பாட்டு மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் விலங்கு வதைத் தடுப்பு குறித்த இந்திய அரசின் அறிவிப்பு.

விலங்கு வதை இருக்கிறது எனச் சொல்லித்தான் ஏறு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதற்குப் பல வகைகளில் முயன்று பார்த்துத் தோற்றுப் போனவர்கள் தான், அதே விலங்கு வதை எனும் பேரில் மாடு உள்ளிட்ட சில விலங்குகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார்கள்.

ஏறு தழுவுதல் தமிழ் இனத்தின் பண்பாட்டு உரிமைகளுள் ஒன்று. அதே போல கோழி ஆடு மீன் போன்ற இறைச்சி உணவும் தமிழ் இனத்தின் உணவுப் பண்பாட்டு உரிமைகளுள் ஒன்று என்பதைப் போலவே, மாட்டிறைச்சியும் தமிழர் உணவுப் பண்பாடுகளுள் ஒன்றே.

தமிழர் பண்பாட்டு மரபு பன்மைப் பண்பாடுகளின் தொகுப்பு தான்.இதில் உயர்ந்தவை எதுவுமில்லை, தாழ்ந்தவை எதுவுமில்லை.

மாடு தழுவுதல் அவரவர் உரிமை. உணவைத் தெரிவு செய்வதும் அவரவர் உரிமை.  மாட்டுக்கறி உண்பதும் அவரவர் உரிமை. இந்த உரிமை பறிக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் மேலாதிக்கமன்றி வேறில்லை.

தமிழர்களாய் அணி திரளத் தடையாய் இருக்கும் சாதிய முரண்களைக் கூர் தீட்டிப் பிரித்தாளுவதைப் போலவே, தமிழர்களிடம் பண்பாட்டுப் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராகத் தமிழர்களாய் இணைய வேண்டியது கட்டாயம்.

ஏறு தழுவல் பண்பாட்டைத் தடை செய்த போது அது பண்பாட்டு மேலாதிக்கமே. இன்று மாட்டிறைச்சிக்கான தடையும் பண்பாட்டு மேலாதிக்கமே.

மாட்டுக்கறி விலக்கு உடையவர்களும், மாட்டுக்கறிப் பழக்கம் உடையவர்களும் இணைய வேண்டும்.

மாடு தழுவல் பண்பாட்டு மீட்புக்குப் போராடியபோது மாட்டுக்கும் எனக்கும் தொடர்பில்லை என ஒதுங்கி இருந்தவர்களைப் போல, மாட்டுக்கறி உணவுப் பழக்கத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என எவரும் ஒதுங்கி இருப்பதும் கூட பண்பாட்டு மேலாதிக்கத்திற்குத் துணை போவதற்குச் சமம்.

மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் மீதும் பாய்ந்தாலும் அதற்கு எதிராக நிற்பதே நேர்மையான மனிதராக இருக்க முடியும்.

மாட்டுக்கறி உணவுப் பழக்கத்தை ஆதரிப்பதற்காக மாட்டுக்கறி உண்டாக வேண்டும் என்பதில்லை. எனக்கு மாட்டுக்கறி உணவுப் பழக்கமில்லை. அதே வேளையில், மாட்டுக்கறி உண்போரின் உணவுப் பண்பாட்டை நான் ஆதரிக்கவே செய்கிறேன். இது பண்பாட்டை மதிப்பது மட்டுமல்ல, மனிதர்களை மதிப்பதும் அவர்களது உரிமைகளை மதிப்பதும் ஆகும்.

பண்பாட்டுப் பிளவுகளுக்கான சூழ்ச்சி வலைகளை முறியடிக்கப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சியாய் அணி திரள்வோம்.

மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று சான்று தருவது குறிப்பிடத்தக்கது.

"வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை...."
அகநானூறு - 309

பண்பாட்டு எடுத்துரைப்புகள் : புரிதலும் போதாமைகளும்


உழவு மாடுகளோடும் மஞ்சு விரட்டுக் காளைகளோடும் பசு மாடுகளோடும்தான் என் இளவயதுக் காலங்கள். மாடுகளின் கவுச்சி வாசமும் மண்வாசமும் வாழ்வோடும் நினைவின் ஈரத்தோடும் பிணைந்து கிடக்கின்றவை. அதனால் தான் ஏறு தழுவுதல் நூலைக் கூட என்னால் எழுத முடிந்தது.

மாடுகள் சார்ந்த பண்பாட்டு உணர்வெழுச்சிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு சாதியினருக்கும், வட்டாரத்தினருக்கும் சமயத்தினருக்கும் ஒவ்வொரு தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்கள் நிரம்ப உண்டு.

இன்னும் சொல்லப் போனால், சரியோ தவறோ, நிறையோ குறையோ, இங்குள்ள சமூகக் குடிகள் குறித்த பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை முன்வைத்திருக்கவில்லை. இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும் புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும் தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன.

இந்நிலையில், ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களைக் குறித்து வெறுமனே மொன்னையாகவே புரிந்து கொள்ளும் நிலையே இப்போதும் வரையில் நீடிக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பண்பாடு என்பதை ஒற்றைத் தன்மையதாகப் புரிந்து கொள்ளும் போக்கே நிலவுகின்றது.

பன்மை வட்டாரம், சாதி, சமயம், தொழில், வாழ்க்கை, பாடுகள், பழக்கங்கள் நிறைந்த ஒரு நிலப்பரப்பில் பன்மைப் பண்பாடுகளே முகம் காட்டும். இதில் தனித்த பண்பாடுகள், தோழமைப் பண்பாடுகள், பொதுப் பண்பாடுகள், எதிர்ப் பண்பாடுகள், மாற்றுப் பண்பாடுகள், ஆதிக்கப் பண்பாடுகள் எனப் பல தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. பண்பாடு என்பதற்குள் உள்ளிருக்கிற இத்தகையத் தன்மைகளைக் கண்டறிவதிலும் வரையறுப்பதிலும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையிலான புரிதலும் எடுத்துரைப்புகளும் மிக மிகக் குறைவு.

ஒரு சமூகத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களையும் அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக் கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் நட்பையும் முரணையும், அப் பண்பாடு கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அப்பண்பாடு நிலவக் கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அப்பண்பாட்டு வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள் என நீளுகிற ஒரு பண்பாடு சார்ந்த அத்தனை விவரிப்புகளையும் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கப் படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.

சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள் கூட மக்களின் பண்பாட்டுத் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியே தான் இருக்கின்றன. இப்படிக் கூறுவதால், மக்களிடம் காணக்கூடிய அத்துணை வகையான பண்பாட்டுக் கூறுகளையும் அச்சு அசலாக அப்படியே ஏற்றுக் கொண்டு உச்சி முகர்ந்து பார்த்தும் பாதுகாத்தும் வர வேண்டும் என்பது பொருளல்ல.

மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும் இன்னொரு வகையில் சமூகக் கல்வி தான். ஒரு சமூகத்தில் அரசியல் பொருளியல் அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு உருவாக்கத்திற்கு முன்பாக, அச்சமூகத்தின் பண்பாட்டுக் கட்டமைப்புகளைக் குறித்த புரிதல் அடிப்படைத் தேவை.

தமிழ் நிலத்தில் காலூன்றி இருந்த வேற்றின அதிகாரப் பிரிவினர் இதை நன்கு உணர்ந்திருந்தனர். குறிப்பாக ஆங்கிலேயர்கள் இங்குள்ள பண்பாட்டுக் கோலங்கள் வழியாகவே இங்குள்ள சமூகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இன்றைக்கும் கூட தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் கல்விப் புலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான ஆய்வுகள் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்குப் பண்பாட்டுத் திறவுகளை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சமூகத்தைப் பற்றியப் பண்பாட்டு ஆய்வுகள் இந்தச் சமூகத்தின் பார்வைக்கு வராமலே கமுக்கமாய் மேற்கொள்ளப்படுகின்றன இன்றளவிலும்.

ஆனால், இந்தியப் புரட்சியோ தமிழ்த் தேசப் புரட்சியோ, ஆயுதப் புரட்சியோ அறப் புரட்சியோ, வர்க்கப் புரட்சியோ தேர்தல் புரட்சியோ, சாதியொழிப்போ பெண் விடுதலையோ எத்தகைய சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும் அச்சமூகத்தின் நிலவுகிற பண்பாட்டுக் கோலங்கள் என்ன? சமூக மாற்றத்திற்குப் பின்பான பண்பாட்டுத் தகவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் எந்த வரைவுகளையும் இதுவரை முன்வைக்க வில்லை. அமைப்புகளின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்குப் பண்பாட்டு வரைவுகள் உருவாக்கப்படவில்லை.

இதற்கு அண்மைய சான்று மாடுகளைக் குறித்த இரண்டு நிகழ்வுப் போக்குகள். முதலாவதாக, ஏறு தழுவுதல். இரண்டாவது மாட்டுக்கறி உணவுப் பழக்கம்.

மாடு சார்ந்த இவ்விரு பண்பாடுகளைக் குறித்தும் இரண்டு விதமான போக்கைக் காண முடியும். அதாவது, இது நம்முடையது என்கிற நிலையிலிருந்து மொட்டையாய் ஆதரிப்பது. அதே போல, இது நமக்குத் தொடர்பில்லை என்பதால் முற்றாக எதிர்ப்பது. இந்த இரண்டையும் சாராமல் விமர்சனம் எனும் பேரில் கொச்சைப் பொருள் முதல்வாத அடிப்படையில் நிராகரிக்கும் தொனியில் எதிர்த்து நிற்பது.

இத்தகைய ஆதரவுப் போக்கும் எதிர்ப்புப் போக்கும் விமர்சனப் போக்கும் பண்பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடுகள் தான்.

ஏறு தழுவல் பண்பாட்டை விமர்ச்சித்த அல்லது எதிர்த்தவை அனைத்தும் கொச்சைப் பொருள் முதல்வாத எடுத்துரைப்பு தான்.

இப்போதும் மாட்டுக் கறி ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கொச்சைப்படுத்தும் பாணியிலேயே வெளிப்படுகின்றன.

ஒரு மாடு சார்ந்த பண்பாடு தமிழர்களாய் இணைத்தது. அதே மாடு சார்ந்த உணவுப் பழக்கப்பண்பாடு தமிழர்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி உருவாக்கப்படுகிறது.

மாட்டிறைச்சி உண்போர் இழிவானவர்கள், மாட்டுக்கறி உண்ணாதவர்கள் புனிதர்கள் என்பதைப் போலவும் ஒரு சாரார் எடுத்துரைப்பதும், அதே போல மாட்டிறைச்சி உண்போரே சமூக அக்கறையுடையோர் போலவும், மாட்டுக்கறி உண்ணாதவர்கள் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவதும் இன்னொரு சாரார் முன்னெடுக்கின்றனர்.

பண்பாட்டுத் தனித்தன்மைகளை வேறுபாடுகளாகவும் முரண்பாடுகளாகவும் பிளவுகளாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளே தீவிரம் பெற்று வருகின்றன. இது போன்ற போக்குகள் சமூகத்தில் இணக்கத்தையோ ஒற்றுமையையோ ஏற்படுத்தப் போவதில்லை.

சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டுள்ள யாவரும் பண்பாட்டுப் பன்மை வெளிகளைக் குறித்த உரையாடல்களை முன்னெடுத்தாக வேண்டிய காலமும் இதுதான்.

ஏறு தழுவுதல் நூலை எழுதிக் கொண்டிருந்த போது கள ஆய்வுக்கொன்று சென்றிருந்த போது பெறப்பட்ட சேதியொன்றைப் பகிரலாம் என நினைக்கிறேன்.

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆண்டிபட்டிக் கணவாய் அருகே மலையடிவாரத்தை ஒட்டி இருக்கிறது மேல் கிழார் பட்டி எனும் சிற்றூர். அந்த ஊரிலிருந்து ஒரு கல் தொலைவில் இருக்கும் மலைச்சரிவுப் பரப்பில் மலை வெள்ளாமை செய்து கொண்டு ஒரு பெரிய தொழுவத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் பழனியாண்டி எனும் பெரியவர். அவருக்கு ஊரோடு எந்த ஒட்டுறவும் இல்லை. அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டுமே ஊருக்குள் வந்து போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே இந்த மலையும் இந்தத் தொழுவமும் இந்த மண்ணுமே கிடையாய்க் கிடக்கிறார்.

இதற்குப் பின்னால் அவர் சொன்ன காரணம்,

மலையில மேயப் போன மாடுக எப்ப கீழ எறங்கி வருமுனு தெரியாது. அதுக கீழ எறங்கி வாரது அதுக தோதப் பொறுத்து. ஒரு மாசமாகலாம். மூணு நாலு மாசமாக்கூட ஆகலாம். அந்த மலயில எங்க வேணாலும் மேஞ்சு திரிஞ்சாலும் கீழ எறங்குச்சுனா அது நேரா இந்தத் தொழுவத்துக்குத்தான் வரும். கன்னு ஈனப் போற பசு மாடுக அதுகளா தனியா வந்துரும். அதே மாதிரி கன்னுகுட்டிய மலையிலேயே ஈன்ட பசுகளும் கன்னுகள கூட்டியாந்திரும். சில பசு மாடுக அதுக கன்னுகள மலையிலேயே ஒளிச்சு வச்சிட்டும் வரும். அதுக பாட்டுக்கு வரும். அதுக பாட்டுக்குப் போகும். இந்த வரவும் போக்கும் அன்றாடங் கெடயாது. இதுகள யாரும் மேய்க்கிறதும் இல்ல. இதுக கெட மாடுகளுமில்ல. மல மாடுகளுமில்ல.  ரெண்டுமில்லாத நாட்டு மாடுக. கிட்டத்தட்ட நூறிலிருந்து இருநூறு வரைக்குமான  இந்த மாடுக எனக்கு ஒரு ஆளுக்கு மட்டுந்தான் அகப்படும். இப்ப என்னோட மூத்த மகன் வேலுமணி கொஞ்சமாப் பழகிக்கிட்டு வரான் என மாடுகளைக் குறித்தும் தம் வாழ்வைக் குறித்தும் விவரித்துக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.

அது குறவர் வாழ்வாகவும் இல்லை. இடையர் வாழ்வாகவும் இல்லை. எனக்கு அந்த விவரிப்பும் வாழ்வும் புதுமாதிரியாகவே தெரிந்தது.

இந்த மாடுகள வச்சு என்னத்தப் பண்ணப் போறீங்கய்யான்னு கேட்டப்போ, ஒரு மாசத்துக்கு  ஒன்னோட சம்பாத்தியம் எவ்வளவு இருக்குமோ அதக் காட்டியும் கூடத்தான் வருமானந் தம்பி என்று பொட்டென்று சொன்னது பிடித்திருந்தது.

இந்த வட்டாரமில்லாம பல வட்டாரத்திலிருந்தும் உழவு மாடுகளுக்கும், மஞ்சு விரட்டுக் காளைகளுக்கும், மாட்டுக்கறிக்கும் தோலுக்கும் இங்க வந்து தான் வாங்கிட்டுப் போவாக என்றவரிடம், மாட்டுக்கறிக்காக மாடுகளக் கொடுக்கிற நீங்க மாட்டுக்கறி சாப்புடுவீங்களா எனக் கேட்டபோது, மாடுகள நாங்க சாப்புட மாட்டோம்யா. இது எங்க வழக்கம். மாடுகளச் சாப்புடறது அவுக வழக்கம். எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி என்று பண்பாட்டு அதிகாரத்தைப் போட்டுடைத்தார்.

ஒரு பண்பாட்டைக் குறித்து இவர் வைத்திருக்கும் புரிதல் சரியாகவே இருக்கிறது.

நாம் அவரிடமிருந்து இப்போதைக்கு வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது.

புதன், 29 மார்ச், 2017

துயர் மொழிப் படலத்து வாழ்த்து.


பஞ்சம் வரினும்
வஞ்சகம் சூழினும்
நிமிர்ந்தெழுவோம் எனும்
நம்பிக்கை மட்டும்
இன்னும்
பொய்த்துப் போகவில்லை.

அழுதுக்கிட்டு இருந்தாலும்
உழுதுக்கிட்டு இருப்போம்.
உண்மையான மகிழ்ச்சி என்பது
போராட்டத்தில் தான்.

எமது போராட்டம்
இனி
நிலத்தோடு மட்டுமல்ல.
எம்மை வஞ்சிக்கும் அத்தனையையும்
தொளி உரமாய் ஆக்கும் செங்களத்தில்
ஏர் பூட்டி உழுவோம்.

இன்றல்ல நேற்றல்ல. இதைவிடக்
கொடும் பஞ்சமும் வஞ்சகமும் சூழ்ந்த போதும்
சோர்ந்து விடவில்லைதான்.
விளைந்தால் தான்
உழவுக்கும் நிலத்துக்கும்
வாழ்த்துச் சொல்வதென்பது தன்னலம் .
விளையாவிட்டாலும்
நிலத்தில் வடித்த உழைப்புக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்வதே எம் தமிழ் மரபு.
பொங்கி வழியும் துயரங்கள் நிரம்பி வழிந்தாலும், உழவர்களின்
துயரில் கசியும்
ஈர மொழியாய்
பொங்கல் வாழ்த்துக்கள்.
நிலமே போற்றி
நீரே போற்றி.
கதிரே போற்றி
உழைப்பே போற்றி.
உழவரே போற்றி
நெல்லே போற்றி.
எம் சொல்லே போற்றி.
வாழ்வை நிமிர்த்தும் நிலத்தையும்
அறத்தைப் பொழியும் பண்பாட்டையும்
மீட்டெடுத்தே தீருவோம்.
சனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு .
சித்திரை 1 சமக்கிருதப் புத்தாண்டு .
தையல் சுறவம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

வடு

மனமும் உடலும்
வலிக்கிறது தான்.

இந்தக் காயத்தையும்
இந்த அதிகாரம்
தருமென்று தெரிந்துதானே
அதிகாரத்தை
எதிர்த்து நின்றோம்.

நாம் போராடியது
நமது உரிமைக்காக.
காயங்கள் இன்றிக்
கிடைக்கும் யாவும்
பிச்சை தான்.

களத்தில் நின்றோம்.
சொல்லடியும் கல்லடியும்
தடியடியும் பெற்றோம்.
அதனாலே
நிறைய பாடங்கள் கற்றோம்.
கொஞ்சமேனும்
உரிமையை மீட்டெடுத்தோம்.

கொம்புகள் தரும்
காயங்களுக்காகத்தானே
கம்புகள் தந்த
காயங்கள் சுமந்தோம்.

இந்த உரிமை
நம்மால் தான் வந்தது.
இதுவே தான்
தொடக்கம்.
கண்ணீரும் செந்நீருமாய்
சிந்திய துளிகள் யாவும்
விதையெனப் புதைந்து
விடுதலைப் பயிராய்
முளை கட்டும்.

தமிழுக்காக
நிலத்துக்காக
இனத்துக்காக
சாதிய ஒழிப்புக்காக
பாலின சமத்துவத்துக்காகப்
பேசுவதும் எழுதுவதும்
கைகள் கோர்ப்பதும்
களத்தில் நிற்பதும்
தீவிரவாதம் என்றால்,
நானும் தீவிரவாதி தான்.
நானும் தோழர் தான்.

இதே குரல்
உனதென்றால்,
நீயும் தோழரே.

அணில் கூட்டம் : குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான கலகக் குறும்படம்.



வெள்ளந்தியாய் வாழ்ந்து திரியும் மனிதர்களைப் பிள்ளைமைக் குணம் மாறாத மனிதர்களாகத்தான் இந்தச் சமூகம் புரிந்து வைத்திருக்கிறது.
விலங்கினங்களிலும் வெள்ளந்திகள் நிரம்ப உண்டு. அவற்றுள், கீச் கீச்செனத் துள்ளித் திரியும் அணிலும் உண்டு. அதன் வெள்ளந்திக் குணத்தினால் தான் அதனை அணில் பிள்ளை என்றழைப்பது மரபாய்ப் பயிலப்பட்டு வந்திருக்கிறது.
மனித வெளியில் அணில் பிள்ளைகளைப் போலத் துள்ளி விளையாடும் குழந்தைகளைக் குறித்தான கலை இலக்கியப் படைப்புகள் மற்ற சமூகங்களில் நிரம்ப வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சமூகத்தின் கட்டாயமான பேசுபொருளாகக் குழந்தைகள் எல்லாக் காலகட்டத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களைக் குறித்துப் பேசுகிற சமூகம் தம்மை இன்னொரு வகையில் வளப்படுத்திக் கொண்டே அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறது.
அதே சமயத்தில், எதிர்காலச் சமூகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாக மாறப் போகிற குழந்தைகளைக் குறித்து நிகழ்காலத்திலும் கூடக் கவலைப்படாது கண்டு கொள்ளாமல் நகர்ந்து போகும் சமூகங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் தமிழ்ச் சமூகமும் உள்ளடங்கும்.
இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பரவியிருக்கிற மனிதவளம் மிகப் பெரியது என்றாலும் கூட, ஒரே வகைப்பட்ட அல்லது ஒரு தரப்பட்ட மனித வளத்தைக் காண்பது அரிது. மொழி, இன வகைப்பட்ட வேறுபாடுகளோடு சாதிய, சமய, பொருளிய, பாலின வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் அதிகமுண்டு. குறிப்பாக, சாதிய வேறுபாடும் பாலின வேறுபாடும் வெகுகாலமாய் அதிகாரமாகவே தொழிற்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.
ஒடுக்கும் சமூகங்களும் ஒடுக்கப்படுகிற சமூகங்களும் இந்தச் சமூகத்தில் இரு வேறு முரண்நிலையில் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய இரு வேறு சமூக நிலைமைகளிலும் அடுக்குகளிலும் ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிற ஒரு மனிதக் கூட்டம் தான் குழந்தைகள்.
மனித சமூகத்தின் குடும்ப வெளிகளிலும் பொதுவெளிகளிலும் குழந்தைகளுக்கான ஒரு வெளியை இந்தச் சமூகம் உருவாக்கித் தருவதில்லை. சாதியத் தீண்டாமை, ஏழ்மை, ஆதரவற்ற நிலைமை, குடும்பச் சீரழிவுச் சூழ்நிலை, இடப்பெயர்வு போன்ற பல காரணிகள் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளைப் பறித்துக் கொள்கின்றன. உதிரி மனிதர்களின் உருவாக்கம் குழந்தைப் பருவங்களிலேயே உருவாகும் சூழலை இச் சமூகம் உருவாக்கி விடுகிறது.
குழந்தைகள் எனும் இந்த உதிரி மனிதர்களிடம் உள்ள வெள்ளந்திக் குணத்தைப் பயன்படுத்தி உழைப்புச் சுரண்டல் அதிகளவு நடைபெற்று வருகின்றது. குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் இருந்து கொண்டிருப்பது அதைத்தான் காட்டுகிறது.
அதே நிலையில், பெண் குழந்தைகளோ உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதோடு, பாலியல் வன்முறைக்கும் பலியாகிக் கிடக்கும் அவலமும் இந்தச் சமூகத்தில் தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, சாதியமும் ஆணாதிக்கமும் அதிகாரத்தின் அத்தனை வன்முறைக் குணாம்சங்களையும் உள்ளடக்கி வைத்திருக்கும் கோர முகமும் கூட.
அண்மையில்,
சாதியத்தாலும் ஆணாதிக்கத்தாலும்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட நந்தினி, காசினி போன்றோரின் கொலைகள் இதனையே உணர்த்துகின்றன.
இந்நிலையில் தான், குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும் காட்சி மொழியாய்க் களம் செதுக்கியிருக்கும் குறும்படமாய் வடிவமைந்திருக்கிறது வினோத் மிசுராவின் உருவாக்கத்தில் வந்திருக்கிற அணில் கூட்டம் எனும் படம்.
வினோத் மிசுராவின் எலைட் எனும் ஆவணப்படமானது ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மற்றும் இரட்டை வாக்குரிமை பற்றிய உரையாடலை மய்யப்படுத்தியது.
இன்னொரு படமான குறியீடு குறும் படமே என்றாலும் கூட, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான திருப்பிச் செய்யும் படமாகவே அமைந்திருந்தது.
இந்த வரிசையில்,
அணில் கூட்டம் எனும் இக் குறும் படமும் குழந்தைகள் மீதான உழைப்புச் சுரண்டலையும் பாலியல் வன்முறைகளையும் அம்பலப்படுத்திக் காட்டும் விழிப்புணர்வுப் படமாக உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
சுரண்டல்களாலும் ஒடுக்குமுறைகளாலும் வன்முறைகளாலும் சூழப்பட்டிருக்கும் குழந்தைகளைக் காக்கும் பொறுப்பையும், அதன் பயணத்தையும் கவனப்படுத்தியிருக்கும் அணில் கூட்டம் படமானது பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.
வினோத் மிசுராவுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இவை போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் அவரிடமிருந்து நிறைய வரட்டும்.

உலர்நிலச் சிறுக்கி.


வெம்பாலைச் சுரந்து
தாய்மையை வடித்து
உயிர்ப்பைக் கொப்பளிக்கும்
உலர் நிலத்துச் சிறுக்கியின்
பசுந்தோல் மேனியில்,
காக்கா முள்ளின்
கூர் நுனியால்
நம் பெயர் எழுத எழுத,
பால் ஈரம் சுரந்த
அம்மாவின் மனசு போலவே
பச்சை உடுத்திச்
சிரித்து நிற்கிறாள்
கள்ளி.

கார் காலச் சொற்கள்.


எங்கோ மழை பெய்ததைக்
காற்றில் கரைத்துச் சொன்னது
மண் வாசம்.

எத்தனை நாள் தாகமோ
விழ விழக் குடித்தது
மானாவாரிக் காடு.

மழை ஓய்வெடுப்புக்குப் பின்
செந்நிலத் தாய்மையில்
தூங்கின புற்கள்.

மழையைத் தேக்கிய
அணைக்கட்டுகளாய்
இலைகளில் துளிகள்.

மழை பனி ஊடறுத்த
கிளைகளின் பேச்சில்
பூத்துப் பூத்து
நீண்டன பயணங்கள்.

மண் கவ்வி ஆட்டுவிக்க
மயிர்கள் விரித்து நின்றன
ஆலங்கள்.

கார்காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தே தான் கிடக்கின்றன.

களவு நிலம்.


உழுது போட்ட தொளியில்
நெளிந்து திரிந்த
மண் புழுவாட்டம்
நேயம் நெப்பிய
பொழுதுகள் தொடங்கி
தொலைந்திடத் துணிந்தேன்
உன் வயல்மனக் காட்டில்.

பொய்த்துப் போன
மழை நினைத்தே
தவித்துக் கிடக்கும்
நெல்வயல் போல்
அழுகைக்காக
உன் மடியும்
உன் மடிக்காக
மற்றுமோர் அழுகையும்
சாவிப் பயிராகவே போனது.

போராட்ட வாசல்.


வாடிவாசல்
மறித்துக் கிடந்த அதிகாரத்தை
வீடு வாசல் போகாமல்
உடைத்தெறிந்தோம்.

நெடுவாசல்
நுழைந்திருக்கும் அதிகாரத்தை
இடுகாட்டில் புதைத்தெறிவோம்.

செந்நீர் வழியவும்
தீநீர் ஒழுகவும்
அறத்தையும்
மறத்தையும் சுமந்து
நிலத்தையும் இனத்தையும் காப்போம்.

ஊரார் வரைந்த ஓவியம்.


ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்குமான எதிர்வினைகளை எழுத்துகளில் புலப்படுத்தும் படைப்பாளிகள் அச்சத்தோடும் பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டிய சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.
சாதியம் புரையோடிப் போயிருக்கும் தமிழ்ச் சூழலில், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் வாழ்வியலையும், ஒடுக்குமுறைக்கு எதிரான குரலையும், விடுதலை வேட்கையையும் எழுத்துகளில் வெளிப்படுத்துகிறபோது, அது சாதியக் கட்டுமானத்தை அசைத்துப் பார்ப்பதாகவே உயர்த்திக் கொண்ட சாதியவாதிகள் புரிந்து கொள்கின்றனர். சாதியப் பெருமிதங்கள் பேசிக் கொள்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் தமதாக்கிக் கொண்டிருக்கும் சாதிய நிறுவனங்கள், அதே சாதியத்தைக் குறித்துக் கேள்விகள் கேட்கிற போது பதறிப் போகிறது. சாதியத்தை அம்பலப்படுத்துகிற முயற்சிகளின் குரல்வளையை நெறிக்கவே முற்படுகிறது. அதன் ஒரு முயற்சி தான் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், துரை குணா ஆகியோர் மீதான தாக்குதல்கள். இவ்வகைப்பட்ட ஒடுக்குதல்களைக் கண்டு துவண்டு விடாமல், எழுத்துப் புலப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கான சூழல்களை உருவாக்கித் தருவது சமூக சனநாயக சக்திகளின் கடமை.
இந்தக் கடமையைத் தம்மளவில் செயலாற்ற முனைந்திருக்கிறது தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை.
ஊரார் வரைந்த ஓவியம் எனும் ஒரு பெருங்கதையை எழுத்தில் வரைந்த ஒரு காரணத்திற்காகவே பொய் வழக்கு, வன்முறைத் தாக்குதல், கொலை மிரட்டல், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் எனப் பல வகைப்பட்ட ஒடுக்குமுறைகளையும் இன்றளவிலும் எதிர்கொண்டு வந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் படைப்பின் வழி் குரல் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளாத களப் படைப்பாளியாகத் திகழ்பவர் துரை குணா அவர்கள்.
துரை குணா அவர்களின் படைப்பின் ஊடான வாழ்க்கையைக் காட்சி மொழி வாயிலாகப் புலப்படுத்தி இருக்கிறது ஊரார் வரைந்த ஓவியம்.
எத்தனை ஒடுக்குமுறை வந்தாலும் படைப்பின் குரலை ஓங்கி ஒலிப்பதில் உறுதியாய் இருக்கும் துரை குணாவைப் பற்றிய இந்தப் படம், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் படைப்பின் வழி குரல் கொடுக்கும் அனைத்துப் படைப்பாளிகளின் குரலாயும் வெளிப்பட்டிருக்கிறது.
தோழர் விசாகன் நெறியாளுகையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் உயிர்மொழியை இராம்போ குமார் மிக நேர்த்தியாகப் புலப்படுத்தி இருக்கிறார். தோழர்கள் திருமலைக்குமார், இலட்சுமி, நறுமுகைதேவி தங்களின் பங்கேற்பைப் படத்தில் காட்டியுள்ளனர். சமூக மாற்றத்திற்கானப் பன்முகக் குரல்களை உயர்த்திப் பிடிக்க வேண்டியதன் தேவையை உணர்த்துவதோடு படம் முடிகிறது.
ஊரார் வரைந்த ஓவியம் கதை நிகழ்வைப் படத்தில் கொண்டு வந்திருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். எனினும், வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய ஓர் படைப்பு தான். படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

குறுணி மழை.


வெம்மையில்
வதங்கிப் போன
கோடை காலத்துச் சொற்களையெல்லாம் நனைத்திருக்கிறது
உழவு மழை.

விரிப்போடிய நிலத்திலிருந்து
சுரட்டைப் பாம்புகளும் பூரான்களும்
கிடு கிடுவென
ஊர்ந்து திரிந்தன.

ஈரம் குளித்த வெங்காத்து
பழுப்பேறிய இலைகளைக்
கிச்சுக் கிச்சுக் காட்டியது.

காலத்து மழை களம் சேர்க்கும்;
கோடை மழை குறுணி தான்.
நிலம் குளிரப் பெய்திடாத
குறுணி மழையால்
கரந்தையும் கொளுஞ்சியும் ஊமத்தையும் தான்
பூப்பெய்திச் சிரிக்கும்.

இதனுகளின் சிரிப்பு பார்த்து
நமட்டுச் சிரிப்பாய்ச்
சிரித்துக் கொள்ளும்
வெள்ளந்தி மனிதர்கள்,
காலத்து மழை நினைத்துத் தவித்தேதான் கிடக்கிறார்கள்.

எதிர் அதிகார மரபும் அப்பாவும்.


பஞ்சமும் வறுமையும் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு முன்பாகப் பிறந்திருந்த அண்ணன்களையும் அக்காக்களையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழலில், என் அம்மாவுக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன்.
மூன்று பெண் பிள்ளைகள் எஞ்சியிருந்தாலும், ஆணொன்று வேண்டுமென வரமிருந்தும் தவமிருந்தும் என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வார். இந்தப் பிள்ளையாவது உசுரோட நெலைச்சு நிக்கனும்னா, மூக்குத்தி குத்தி பிச்சைன்னு பேரு வைங்கன்னு ஊரே சொல்லுச்சாம்.
பேருக்கும் உசுருக்கும் என்ன தொடுப்பு இருக்கு? பேருக்கும் மானத்துக்கும் தானே தொடுப்பு இருக்குன்னு நெனச்சிருக்காரு அப்பா. பெயரில் என்ன இருக்குன்னு சாதி சனமே கேட்டப்போ, ஒரு மனுசரோட அவமானத்துக்கும் மரியாதைக்கும் அந்த மனுசரோட பேருங்கூடத்தான் காரணமா இருக்கும்னு சொல்லி, எனக்கு மகாராசன் என்றே பெயர் வைத்தவர் என் அப்பா தான்.
வீரக்குடும்பன் என்கிற என் தாத்தாவின் பெயரை மறக்கடித்து, பம்பையன் என்றே பட்டப்பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறது சாதியச் சமூகம். தன்னோட பெயரை இந்தச் சமூகம் உச்சரிக்க மறுத்ததால், வேறொரு பெயராலேயே வாழ்ந்து மடிந்து போன தாத்தாவின் சோகங்கள் அப்பாவுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ, பிச்சை என்ற பெயரை மறுத்து மகாராசன் எனப் பெயர் வைத்திருக்கிறார் அப்பா.
உயர்த்திக் கொண்ட மேட்டிமைச் சமூகப் பெயர் வழக்குகள் சமூக மதிப்பையும், உழைக்கும் எளிய மக்களின் பெயர் வழக்குகள் சமூக இழிவையும் தரும்படியாக இருந்த ஒரு சமூக அமைப்பில், எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு மகாராசன் எனப் பெயர் வைத்திருப்பதை எதிர் அதிகார மரபின் தன்மான அடையாளமாகத் தான் பார்க்கிறேன்.
இது போன்ற எதிர் அதிகார மரபின் விதைகளை என்னுள் விதைத்திருக்கிறார் என் அப்பா. என் வாழ்விலும் எழுத்திலும் புலப்படுகிற எதிர் அதிகார மரபை முதலில் என் அப்பாவிடமிருந்தே பெற்றிருக்கிறேன்.
என்னுள் விரிந்திருக்கும் ஆளுமைகளுக்குத் தன்மான நீர் பாய்ச்சி வளப்படுத்திய என் அப்பா தான் என் முதல் ஆசானாய், முன் மாதிரி நாயகராய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்.
நினைவுகளில் வாழ்கிற அவரது வாழ்க்கைப் பாடுகளே எனது முதல் பாடங்கள்.


பெருங்காட்டுச் சுனை: பல்லுயிர் வனத்தையும் மனித மனத்தையும் மொழியில் காட்சிப்படுத்துகின்ற கவிதைகள்.


ஒரு கவிதைப் பனுவல்,படைப்பாளியின் மொழி வலைக்குள் சிக்கிச் கொள்ளும் பறவை போல் அல்லாமல், விரும்பிய திசையில் பயணிக்கும் சிறகுகளைத் தர வேண்டும். வாசகரைத் தம் போக்கில் பயணிக்கத் தோதான மன வெளியை விரித்திருக்கும் மொழியே கவிதைக்கு இசைவானது.
வாசகர் மனதோடு உறவாடும் ஒரு கவிதை அதனளவில் தன் வேர்பாய்ச்சலை உறுதி செய்து கொள்கிறது.அதிலும் பகட்டில்லாத கவிதைமொழியே கருப்பொருளோடும் உணர்வுகளோடும் பாடுகளோடும் நெருக்கமாய் உலாவித் திரிய உதவுகின்றது. அந்த வகையில், பகட்டில்லாத வாழ்வையும் கவிதை மொழியையும் வாஞ்சையோடு புலப்படுத்தும் மிகச் சில தமிழ்ப் படைப்பாளிகளுள் அண்ணன் கூடல் தாரிக்கும் ஒருவர்.
கல்லூரியில் பயில்கிற காலங்களில் எனக்கு முன்னவர் தான் என்றாலும், தம்பி என்றழைக்கும் வாஞ்சைக் குணம் கொண்டவர். மன இறுக்கத்தோடும் தனிமை வெளிகளோடும் தான் அவரைப் பார்த்த காலங்கள் நிழலாடுகின்றன. காலம் ஒரு மனிதரை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி வளர்த்தெடுத்திருக்கிறது.
தாரிக் அவர்களுக்குள் கவிதைக்கான எந்தச் சாயலையும் நான் பார்த்தது இல்லை. ஆனால், இப்போது இரு கவிதை நூல்களை எழுதியிருக்கிற கவிப் படைப்பாளி. வாழும் உலகமும் வாழ்க்கையும் மனிதர்களுமான இந்த வெளியே அவரை எழுத வைத்திருக்கிறது.
கவிஞரென ஒளிவட்ட மகுடங்களைச் சுமந்து திரியும் படைப்பாளிகள் கவிதை மொழியை இருள் சூழ் குகையாய்ப் போர்த்துவார்கள். தாரிக்கின் கவிதை மொழியோ வெளிச்சங்களைச் சுமந்தபடியே தான் முகம் காட்டுகிறது.
தனக்குத் தெரிந்த கவிதை மொழி இது வெனத் தேர்ந்து கொண்ட கவிதைத் தொனி மிக எளிமையாய் அவரோடும் நம்மோடும் உறவாடுகிறது. பெருங்காட்டுச் சுனை எனும் தலைப்பிலான இக்கவிதை நூல், வனத்தில் நிகழும் பல்லுயிர் வாழ்வையும் மாற்றத்தையும் பல கவிதைகளின் வாயிலாக எடுத்துரைக்கின்றது.
கானகச் சூழலை அழகியல் சார்ந்தே புலப்படுத்தும் பெரும் போக்கு ஒரு புறம் இருந்தாலும், சூழலியல் அக்கறையோடு பல்லுயிர்ச் சூழலைக் கவிதைக்குள் கொண்டு வருகிற போது அழகியலோடு அரசியல் தன்மையையும் பெற்று விடுகின்றது. இதனைப் பெரும்பாலான கவிதைகள் புலப்படுத்துகின்றன.
அந்தி நேரத்தில் தோன்றிய செவ் வானத்தால்
மலை தன்
நிர்வாணம் மறைத்ததை அறிவித்துச் சென்றது வினோதமான புள்ளினமொன்று.
மாண்டு போன மலையின் மரணச் செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன காய்ந்த சருகுகள்
என்பதாக முடியும் ஒரு கவிதை, வனத்தின் அழிவைப் பேசிச் செல்கிறது என்றாலும், நவீன வாழ்க்கையின் சுரண்டல் முகத்தை அம்பலப்படுத்தும் அரசியல் வேலையைச் செய்திருக்கிறது.
அதே போல,
பழமையான வீடொன்றில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள
மானின் கொம்புகளில் இன்னமும் படிந்திருக்கும் உயிர்ப் பயமும் அதிர்ச்சியும் தப்பியோட முயன்றதன் களைப்பும்
கானகம் பிரிந்த சோகமும் நீங்கள் குறிப்பிடும் தாத்தாவின் வீரமும்
என்கிற கவிதை, பல்லுயிர் வளத்தைப் படுகொலை செய்யும் மனிதர் வாழ்வைப் பகடி செய்கிறது. இங்கே மான் என்பது பல்லுயிர் வளத்தின் குறியீடாகவே புனைந்து கொள்கிறது.
தொட்டி மீனுக்கு ஆறுதல் சொன்னது குழம்பு மீன்.
பயப்படாதே
மனிதர்களுக்குப் பிணங்களைத் தான் பிடிக்கும் என மனித வாழ்வைக் குறித்து எள்ளி நகையாடுகிறது இன்னொரு கவிதை.
இயற்கை வளங்களின் மீதான அப்பட்டமான சுரண்டலை ஆறுகள் ஓடிய தடங்களே தடயங்களாய்க் கண் முன் வற்றிப் போய் செத்துக் கிடக்கின்றன. ஆறுகளைக் கொன்று போட்டதன் விளைவாய் நிகழப் போகும் மாற்றங்களை உரத்துப் பேசுகிறது நதியென்னும் கவிதை.
நதியின் மரணத்தால் பெரிதாக என்ன நிகழும்.
மகிழ்வாய் நீராட நினைக்கும் சிறார்களின் கனவுகள் வற்றிப் போகும்.
வரைபட உள்ளங்கையின் ரேகைகளில் ஒன்று அழியும். காலிக்குடங்களுக்குள்
காற்று குடியேறும்.
பச்சிளங் குழந்தை நாவறட்சியால் கதறியழும். பண முதலைகளின் நாவுகள் மணல் ருசிக்கும். பொருளாதாரத்தின் குறியீடாக பிஸ்லெரிகள் மாறிப் போகும். ஆற்றங்கரை நாகரிகமொன்று அடியோடு அற்றுப் போகும். உலகின் நிலையாமை மற்றுமொரு முறை உணர்த்தப்படும்
என ஆறுகளின் அரசியலைப் பேசுகிறது கவிதை.
வனமும் பல்லுயிர் வளமும் உலகத்தை மட்டுமல்ல, கவிதையையும் அழகுபடுத்தக் கூடியவை. பச்சையம் தோய்ந்த ஒரு கவிதை வனத்தின் அழகைக் கவிதை அழகியலாய்ப் புலப்படுத்திய கவிதையொன்று இப்படிப் போகிறது.
தேனெடுத்துக் கிழங்கெடுத்த முப்பாட்டன் கரம் புகும் காந்தள் மென் படுக்கை கண்டலறும் கானகத்துப் பைங்கிளி.
அகவல் கூந்தல் அருவிப் பூ நுகர்வு அதிர்ந்தாடும் தொண்டகம் பொன்னிறத்துச் சிறுகுடி.
யாழ் நரம்பில் ஊர்ந்தேறும் சிற்றெரும்பு இடையறாது உலவும் பிளிறல் சங்கீதம் . அலையென எழும்பும் மைனாக்கள் அகில் மணக்கும் ஆலாபனை .
தடாகம் தன்னில் தவறி விழும் முழு மதி முத்தமிடும்
உறுமீன் உதடு.
கூதிரும் யாமமும் போர்த்திய போர்வை கதகதப்பூட்டும் பெருங்காட்டுச் சுனை
என இயற்கையின் அத்தனை உணர்வுகளையும் ஈரம் கசியப் பேசுகிறது அக் கவிதை.
ஒரு கவிதை, மேலோட்ட நிலை வாசிப்பில் ஒரு பொருளையும், உள்ளீடான நிலையில் வேறொரு பொருளையும் தரக்கூடும். பெருங்காட்டுச் சுனை என்கிற இக்கவிதை நூலின் தலைப்பே இரு வேறு நிலையில் பொருள் கொள்ளும் படியாக அமைந்திருப்பதோடு, அவ்விரு நிலையிலான கவிதைகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது.
வனத்தையும் பல்லுயிர் வளத்தையும் பேசுகிற கவிதைகள் இத் தொகுப்பில் நிரம்ப உண்டு. அதே போல, மனித வாழ்வையும் நேயம் கசியச் செய்கிற மனத்தையும் பேசுகிற கவிதை களும் நிரம்ப உண்டு. அதாவது, வாழ்வென்னும் பெருங்காட்டில் சுனையென்னும் நேயம் கசிகிற மனதைப் புலப்படுத்துகிற வகையில் அமைந்த கவிதைகள் இத் தொகுப்பை இன்னும் வலுப்படுத்தியிருக்கின்றன.
குற்றவுணர்வு எதுவுமில்லாமல் பாலோடு சேர்ந்து பருகப்படும் பூனையொன்றின்
பசியும்
என்கிற கவிதை, குற்றவுணர்வை மனதுக்குள் ஏற்படுத்தி விடுகிறது.
சமூகக் குற்றங்களைக் கண்டும் காணாமலும் கடந்து செல்லும் மனிதர்களைப் போலப் பொழுதுகளும் பழகிவிட்டதாய்
முன் பனி இரவொன்றில் புணரப்பட்டுப் பிரேதமாகக் கிடந்தவளைக் கடந்து செல்லப் பழகி இருந்தது
பகல் .
இப்படிக் கடக்கும் மனிதர்கள் மனிதர் எனும் பெயர் தாங்கிகள் தான் என்பதை,
கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைப் பிணத்தின் மீது வலிக்காமல் ஏறி இறங்கும் சிற்றெரும்பொன்று .
நீண்ட நேரம் நுகர்ந்து விட்டு மெதுவாய்க்குரைக்கும்
ஒற்றை நாய் .
மூடப்படாத முகம் மறைக்கும் எங்கிருந்தோ வரும் ஈக்கள். யாருமற்ற நேரத்தில் இடைவிடாமல் முத்தமிடத் துவங்கும் கழுகுகளின் கூட்டம். நாசி மூடி இலாவகமாய்
இடம் கடக்கிறார்கள்
மனிதப் பெயர் தாங்கிகள் எனக் கவிதை முடிகிறது.
இத் தொகுப்பின் கடைசிக் கவிதையான பைத்தியக்காரன் பற்றிய கவிதை, மனித முகத்தை இதுவென அம்பலப்படுத்திவிட்டுச் செல்கிறது.
கடனால் தூக்கிட்டு மாண்ட அப்பாவின் கால்களை இன்னமும் பற்றிக் கொண்டு அழுது கொண்டிருக்கலாம். பெயர் தெரியாத நோயினால் மரணித்த அம்மாவின் ஆன்மாவோடு பேசிக் கொண்டிருக்கலாம். காமுகர்களால் சிதைக்கப்பட்ட ஆசை மகளின் கதறலை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கலாம். காவியமாய் உருமாறவிருந்த தனக்கான காதலை
கவுரவக் கொலைக்குப் பலியாக்கி இருக்கலாம். நீங்கள் அவனைப் பைத்தியம் என்று கடந்து போகின்றீர்கள். அவனது பார்வையில் நீங்கள் எதுவுமில்லை.
இப்படி, நிறையக் கவிதைகள் மனித மனத்தைக் கேள்விக்குட்படுத்தி நேயம் கசியச் செய்வதான உணர்வை ஏற்படுத்துகின்றன.
கூடல் தாரிக், சமூகப் பொறுப்புணர்வு மிக்க படைப்பாளி என்பதை அவருடைய கவிதைகளே பகர்கின்றன.
கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கும், நூலைச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கும் ஓவியா பதிப்பகம் வதிலை பிரபா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கருப்பின் நுண் அரசியல்.


நாடக நிலமே வாழ்வெனக் கொண்டு, நாடகப் படைப்புகளின் ஊடாகவும் நவீன நிகழ்கலைப் படிமங்களையும் சமூக மாற்றத்திற்கான கருத்தாடல்களையும் புலப்படுத்தி வருகிற பேராசிரியர் மு.இராமசாமி அவர்களோடும், நிஜ நாடக இயக்கத்தோடும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து பாரத தர்மம், இன்னும் சொல்வதெனில், தலித், கட்டுண்ட பிராமிதியசு, கலகக்காரர் தோழர் பெரியார், வலி அறுப்பு, தோழர்கள் போன்ற நாடகங்களில் பங்கேற்று நடித்திருக்கிறேன்.
தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையில் அவரோடு மூன்று ஆண்டுகள் பணி செய்திருக்கிறேன். அவரோடு மிக நெருக்கமாய் இருந்த காலங்களில் எங்களது பேச்சுக்கள் அனைத்தும் நிகழ்கலைகளைப் பற்றியதாக இருக்கும் அல்லது பெரியார் அம்பேத்கர் மார்க்சியம் பற்றியதாக இருக்கும்.
கலைகளை மக்கள் விடுதலைக்கான பரப்புரை வடிவங்களாகக் கைக்கொண்டு, தாம் உருவாக்குகிற அத்தனை நாடகங்களுக்குள்ளும் பெரியாரையும் மார்க்சையும் அம்பேத்கரையும் ஏதாவது ஒரு வடிவத்துக்குள்ளும் உணர்வுக்குள்ளும் புலப்படுத்தி விடுவார். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்க, பாலின, இனத்தின் குரலையே நாடகப் படைப்பின் குரலாய் வெளிப்படுத்துவார்.
அந்த வகையில், நிலவுகிற காவி பயங்கரவாத, உலகமயச் சீரழிவுவாதச் சூழலில், கருப்பு என்கிற அடையாளமும் அதன் அரசியலும் அதன் போராட்டமுமே காவி மய அதிகார நுண் அரசியலை வீழ்த்தக்கூடியது என்பதை விளக்கப்படுத்தும் வகையில் கருப்பின் நுண் அரசியலை நாடக அழகியலோடு அரசியலாய்ப் பேசியிருக்கிறது மு.இராமசாமியின் விடாது கருப்பு எனும் நாடகம்.
நிகழ்காலச் சமூகத்தின் அதிகார அமைப்புகளால் திணிக்கப்படுகிற மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தைக் குறித்துமான பகடியும் வசையும் நாடகத்துள் அதிகம் தெளிக்கப்பட்டிருக்கிறது.
கருப்பு என்பது நிறமல்ல;
அது ஒடுக்கப்பட்டோருக்கான அடையாளம்.
சிவப்பு என்பது நிறமல்ல;
அது ஒடுக்கப்பட்டோரின் கோபம்.
கருப்பும் சிவப்பும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைத் திரட்சி.
காவிக்கு எதிரானது சிவப்பும் கருப்பும்.
பூணூல் வெள்ளைக்கு எதிரானது கருப்பும் சிவப்பும் என்கிற நுண் அரசியலை நாடக அழகியலோடு வெளிப்படுத்தி இருக்கிறார் மு.ரா.
மதுரை யாதவர் கல்லூரி மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டிருக்கும் விடாது கருப்பு நாடகத்தை விடாது பற்றிக் கொள்ள வேண்டியது சமூக மாற்ற இயக்கங்களின் கடமை.
பேராசிரியர் செண்பகம் ராமசாமி அவர்களின் நினைவு நாளில், நாடக நினைவேந்தலாய் நிகழ்த்திய விடாது கருப்பு நாடகத்தை உயிர்த்தெழச் செய்திருக்கும் மு.இராமசாமி அய்யாவுக்கு வாழ்த்தும் அன்பும்.